Saturday 12 October 2019

பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 19

19. நம்பிக்கைகள்

பாமாவின் தோளில் அமர்ந்த பட்டாம்பூச்சி அப்படியே குழந்தையின் மீது அமர்ந்துவிட்டு பறந்து போனது. சிறகுகள் இருப்பதால் எங்கு வேண்டும் என்றாலும் பறந்து போகும் இந்த பட்டாம்பூச்சிக்கு இலக்குகள் என்று இரண்டுதான், உயிர்ப்போடு இருப்பது, இனத்தைப் பெருக்குவது. பொதுவாகவே எல்லா உயிரினங்களும் இந்த இரண்டுக்காகத்தான் வாழ்கின்றன, இதில் அன்பை, பாசத்தை, நேசத்தை கலந்து வாழும் உயிரினங்கள் இந்த வாழ்வின் மீது ஒரு தீராத காதலை ஏற்படுத்திக் கொள்கின்றன.

முதுகெலும்பு பாதிக்கப்பட்டு நடக்கவே இயலாமல் இருப்பவர்களைத் தூக்கிச் சுமக்கும் தாய்மார்கள், செவிலியர்கள், இயக்கமற்றுப் போய் நினைவே இல்லாமல் படுக்கையிலேயே தமது வாழ்நாட்களை கடக்கும் மனிதர்கள், தான் யார் எவர் என்று அறியாமல் மனநிலையைத் தொலைத்துவிட்டு, மனநிலையைப் பாதிப்புக்கு உள்ளாக்கி நோயாளிகளாகவே வாழும் மனிதர்கள், எவற்றின் மீதாவது வெறுப்புகளை சுமந்து கொண்டே திரியும் மனிதர்கள் என இந்த உலகம் கண்டு கொண்ட, கண்டு கொண்டிருக்கும், கண்டு கொள்ளப்போகும் உயிரினங்கள் என நிறையவே உண்டு.

தலை நிறைய மல்லிகைப்பூவும், நெற்றியில் சிவந்த பொட்டும், காதில் தண்டட்டியும், கழுத்தில் நகைகளும், மூக்குத்தியும் அணிந்து பட்டாடை உடுத்திய ஒரு மூதாட்டி பூங்கோதையின் அருகில் வந்து ''மகராசி கை, கால் இல்லாம பிறந்துருச்சேன்னு வருத்தப்படாத ஆத்தா, இங்க இருக்க வெயிலுக்குகந்தம்மனுக்கு முப்பது நாளு கழிச்சி குழந்தையைத் தூக்கி வந்து அந்த ஆத்தாளுக்கு முன்னாடி கிடத்தி கை கால் வரனும் நிச்சயம் வளர்ந்துரும், உனக்கு கை கால் வெள்ளியில் செஞ்சி வைக்கிறேனு மனமுருக வேண்டிக்கோ ஆத்தா, உனக்கு எந்த குறையும் வராது, நீயும் உன் பொண்ணும், குடும்பமும் நல்லா இருப்பீங்க'' என சிரித்த முகத்தோடு சொல்லியவர் குழந்தையின் கன்னத்தைத் தடவினார்.

பூங்கோதை கைகள் எடுத்து அவரைக் கும்பிட்டாள். ''வேண்டிக்கிறேன் பாட்டி'' எனும் அவளது குரல் தழுதழுத்தது. யசோதையும், பாமாவும் அந்த மூதாட்டியை வியப்போடு பார்த்தவண்ணம் நின்றார்கள். ''நீங்க எந்த ஊரு'' என்றார் நாச்சியார். ''ஸ்ரீரங்கம், குழந்தைக்கு கை கால் வந்துட்டா என்னை வந்து பார்த்துட்டுப் போகப் போறீங்களா?'' என்றார் மூதாட்டி. ''வந்து பார்த்துட்டுப் போறதுல ஒன்னும் தப்பு இல்லையே, வீடு விபரம் தந்தீங்கனா வரோம்'' என்ற நாச்சியாரைப் பார்த்து சிரித்தார் அந்த மூதாட்டி.

அங்கே இருந்த செவிலியர் ஒருவரிடம் காகிதம் வாங்கி எழுதித்தந்தார். ஆண்டாள் என அவரது பெயர் குறிப்பிட்டு இருந்தது. நாச்சியார் அவரிடம்  ''கல்யாண வீட்டுக்குப் போறது போல இங்க வந்து இருக்கீங்க'' என்றதும் ''நான் எப்பவும் அலங்காரத்தோடதான் இருப்பேன், அலங்கரிச்சி கொண்டாடத்தான் இந்த உடம்பும், மனசும்'' என்றவர் பூங்கோதையின் தலையில் கை வைத்து பாமாவை கை காட்டி பூங்கோதையிடம் ''இவ உனக்கு உறுதுணையா இருப்பா ஆத்தா, கவலைப்படாத'' என்றபடி நடந்து போனார். பூங்கோதையின் கண்கள் பாமாவை ஆறுதலுடன் பார்த்தன. பாமாவுக்கு பட்டாம்பூச்சி தந்த மெய் சிலிர்ப்புதனைக் காட்டிலும் அந்த மூதாட்டி தந்த மன உற்சாகம் மிகவும் பிடித்து இருந்தது. யசோதை தான் மருத்துவரை சென்று பார்த்துப் பேசிவிட்டு தகவல் சொல்வதாக மதுரைக்கு கிளம்பினாள். வசுதேவன் யசோதையிடம் ''ஒரு எட்டு ஊருக்கு வந்துட்டுப் போம்மா'' என்றதும் ''அம்மாகிட்ட சொல்லுங்கப்பா அடுத்த வாரம் கட்டாயம் வரேன்'' என்றபடி அனைவரிடமும் விடைபெற்று கிளம்பினாள்.

ஒரு குறையும் இல்லை எனும் நம்பிக்கை தரும் சொற்கள் தரும் உற்சாகங்கள் பேரழகானவை. குறையை நிறையாக மாற்றிவிடவே பலரும் முனைகின்றனர். குறையை அப்படியே குறையாக ஏற்று வாழ்தல் என்பது அரிதான ஒன்றாகவே இருக்கிறது. நோய் என்று வந்தால் அதற்கு மருந்து என்ற ஒன்றை நாடிச் செல்கின்றனர். இந்த வாழ்வை செம்மையாக வாழ வேண்டும் எனும் பேராவல் பலரிடமும் உள்ளது. ஆனால் தாங்கள் செல்லும் பாதை, தாங்கள் கொள்ளும் நட்பு உறவுகள், பழக்க வழக்கங்கள் அவர்களை வழி மாற்றிவிடுகிறது. மன உறுதி உள்ளவர்கள் தடுமாற்றம் கொள்வது இல்லை.

''பாமா, அந்தம்மா சொன்னது எனக்கு நிறைய மகிழ்ச்சியா இருக்கு'' என்றார் நாச்சியார்.

''நாம வைக்கிற நம்பிக்கைகளோட பலம் நமக்கு உறுதுணையா எப்பவும் இருக்கனும்மா'' என்றாள் பாமா.

நாச்சியார் மட்டுமே அங்கே தங்க அனுமதி வாங்கி இருந்தார். பாமா இரண்டு நாட்கள் கழித்து பெருமாள் பட்டியில் வந்து பார்ப்பதாகச் சொல்லிவிட்டு கிளம்ப இருந்தாள். பூங்கோதை பாமாவின் கைகளைப் பிடித்து ''மறக்காம வந்துரும்மா'' என்றார். ''வரேன்க்கா, எதுவும் எடுத்துட்டு வரலை, போய் எல்லாம் எடுத்துட்டு ஊருக்கே வந்துருறேன்'' என்றபோது குழந்தையும் மகிழ்ச்சியால் உடல் அசைத்தது.

மனிதர்களின் நம்பிக்கைகள் அறியாமை கலந்த பேரன்பின் வெளிப்பாடுகள். ஊசி போட்ட பின்னம் திருநீறு பூசி விடுகிறேன் உன் காய்ச்சல் சரியாகும் என்பவர்கள், உன் உடைந்த கை சரியானால் வெயிலுக்குகந்தம்மனுக்கு மாவினால் ஆன கை செய்து வைக்கிறேன் என்பவர்கள். இந்த வாழ்வை பேரழகோடு இரசித்திட தனி மனம் வேண்டும்.

''அம்மா, இன்னைக்குத்தான் நானும் பிறந்தேன்'' என்றாள் பாமா.

''இது புரட்டாசி மாசம், சனிக்கிழமை. பெருமாளுக்குனு ஆனது. காலையிலேயே கருட சேவை பண்ணினேன். பிறந்தநாள் வாழ்த்துக்கள்,  நீ பல்லாண்டு காலம் நோய் நொடி இல்லாம குழந்தைச் செல்வங்களோட நல்லா வாழனும் பாமா'' என்றார் நாச்சியார். ''பிறந்தநாள் வாழ்த்துக்கள்'' என்றார் பூங்கோதை.

அவள் இந்த புரட்டாசி மாதம்தனில்தான் பிறந்தாள் என்பதைத் தவிர வேறொன்றும் இந்த மாதத்திற்குச் சிறப்பு இல்லை, அதைவிட வேறு எந்த ஒரு மாதத்திற்கும் இந்த சிறப்பும் கூட இல்லை என சென்ற வருடம் கல்லூரியில் தனது பிறந்தநாளுக்கு கிடைத்த பாராட்டை எண்ணி மகிழ்ந்தாள் பாமா.

மதுரைக்குச் சென்று தனது பெற்றோர்களிடம் சொல்லிவிட்டு பெருமாள்பட்டிக்கு வந்து சேர்ந்தாள் பாமா. ஊரில் பூங்கோதையின் குழந்தையைப் பற்றி பயத்தோடும் வியப்போடும் பேசிக் கொண்டார்கள். பூங்கோதை வீட்டுக்குச் சென்றாள் பாமா. அப்போது ஒரு பட்டாம்பூச்சி அவள் மீது அமர்ந்து பறந்து ஒரு செடியில் அமர்ந்தது. அதையே பார்த்து நின்றாள் பாமா. மறுபடியும் பறந்து வந்து அவள் மீது அமர்ந்துவிட்டு செடியில் சென்று அமர்ந்தது. என்னவென அச்செடியை நோக்கிச் சென்றாள். கால்கள் தலை கொண்ட சிறகுகள் இல்லாத பட்டாம்பூச்சி ஒன்று மலரில் தேன் அருந்திக் கொண்டு இருந்தது. கண்களில் சட்டென நீர் முட்டிக்கொண்டது. கண்கள் மூடி வணங்கியபடி பாசுரம் பாடினாள்.

வண்டுணு நறுமலரிண்டை கொண்டு பண்டை நம்வினைகெடவென்று அடிமேல்
தொண்டரும் அமரரும் பணிய நின்று அங்கு அண்டமொடு அகலிடம் அளந்தவனே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருளெனக் கருளுதியேல்
வேண்டேன்மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே

தேன் சுவையை விட இச்சுவை பெரிது என எண்ணியது போல பாடல் ஒலி கேட்டு தன் தலை உயர்த்திப் பார்த்தது சிறகுகள் இல்லாத பட்டாம்பூச்சி.

(தொடரும்)

No comments: