Friday 11 October 2019

பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 18

18. உயர்வறவுயர்நலம்

தன்னை அழைப்பது எவரென திரும்பிப் பார்த்தாள் பாமா. யசோதை பாமாவின் அருகில் அமர்ந்தாள்.

யசோதையை உடனடியாக அடையாளம் கண்டு கொண்டவள்  எப்படி ஆமையானது தனது தலை, கால்களை உள்ளே இழுத்துக் கொள்ளுமோ அப்படி தனது கண்ணீரை உள்ளே இழுத்துக் கொண்டாள்.

''யசோதை, எப்படி இருக்கீங்க?''

அவளது குரல் அவளது மனதின் வருத்தம்தனை வெளிக்காட்டியது.

''நல்லா இருக்கேன், நீங்க?''

''ம்ம், கோதை அக்காவுக்கு குழந்தை பிறந்து இருக்கு, அவங்களைப் பார்க்கத்தான் நான் போயிட்டு இருக்கேன், நீங்களும் அங்கதான் போறீங்களா''

''ம்ம், அப்பா விபரத்தைச் சொன்னார். அதான் என்ன ஏதுன்னு நேரடியாய் பார்த்துட்டு ஏதாச்சும் பண்ண முடியுமானு பார்க்கனும்''

நடத்துனர் பயணச்சீட்டு கேட்டு வந்தார். இருவருக்கும் யசோதையே பயணச்சீட்டு வாங்கினாள்.

''பரீட்சை எல்லாம் நல்லா எழுதி இருக்கீங்களா, வேலை தேட ஆரம்பிச்சிட்டீங்களா'' பாமாவின் முடிவு குறித்து எதுவும் அறியாத யசோதை கேட்டாள்.

''நல்லா எழுதி இருக்கேன், பெருமாள்பட்டில விவசாயம் சம்பந்தமா வேலை, வீடு எல்லாம் நாச்சியார் அம்மா பார்த்து கொடுத்து இருக்காங்க. கை, கால் இல்லாம குழந்தை பிறக்குமா, அது உயிரோட எவ்வளவு நாள் இருக்கும்''

பாமா அவளது வேலை குறித்து சொன்னதும் யசோதை வியப்போடு நோக்கினாள்.

''என்னது, அந்த ஊரிலேயே வேலையா, அந்த ஊர்ல இருந்து எல்லாம் வெளியூர் போயிட்டு இருக்காங்க, நீங்க என்ன இப்படி ஒரு முடிவு எடுத்து இருக்கீங்க, நல்லா யோசிங்க பாமா. அப்புறம் அந்த குழந்தை பத்தி கேட்டீங்கள, பொதுவா இந்த மாதிரி பிறக்கிற குழந்தைக மூச்சு விட திணறும், நரம்பு மண்டலம் எல்லாம் ஒழுங்கா உருவாகி இருக்காது, குறைஞ்ச காலத்திலேயே இறந்துருவாங்க, சில விதி விலக்கு இருக்கு. எல்லாமே நல்லபடியா இருந்து கை கால் மட்டும் இல்லைன்னா நம்மளைப் போல உயிர் வாழ்வாங்க, ஆனா யாரையாவது துணைக்கு உடன் வைச்சிட்டே இருக்கனும். கை, கால் வரத பத்தி தான் நான் யோசிச்சிட்டு இருக்கேன்''

''கை கால் வளருமா''

''இதுபத்திதான் எனக்குத் தெரிஞ்ச ஒரு டாக்டர் நிறைய ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்காரு. நானும் வேலனும் அவர்கிட்டதான் இதுபத்தி நிறைய கத்துக்கிட்டு இருக்கோம்''

பாமா வியப்போடு யசோதையைப் பார்த்தாள். பேருந்து அதிவேகமாக போய்கொண்டு இருந்தது. இந்த உலகில் குறைகள் அற்ற ஒன்றாக அனைத்தையும் மாற்ற வேண்டும் என நிறைய முயற்சிகள் நடந்து கொண்டே இருக்கிறது.

இறந்து போன ஒருவரை தரையில் கிடத்தி வைத்த பிறகு, அவர் இறந்துவிட்டார் என மனதுக்கு தெரிந்தாலும், உயிர்த்து எழுந்து வந்து விடமாட்டாரா என நடக்காத ஒன்றை அவர் மீதான பிரியத்தினால் எண்ணும் மனம் அவரது இழப்பை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. அந்த இழப்பை மறந்து விட பல வருடங்கள் ஆகிறது. அவர்கள் வானத்தில் இருந்து பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் என சமாதானம் அடைகிறது அல்லது தங்களது குடும்பத்தில் பிறக்கும் குழந்தையை அவராக எண்ணி மனதை தேற்றிக் கொள்கிறது. உறுப்புகள் அற்று பிறந்த பிறகு இதுவரை எந்த ஒரு குழந்தைக்கும் உறுப்புகள் வளர்ச்சி அடைந்ததாக மருத்துவக் குறிப்பில் இல்லை.

பொதுவாக எல்லாமே கருவில் தீர்மானிக்கப்படும் விசயமாக இருக்கிறது. நான்காவது வாரத்திலேயே கை கால் தோன்றுவதற்கான ஆயத்தங்கள் தொடங்கிவிடுகிறது. இன்றைய மருத்துவ முன்னேற்றத்தில் ஸ்டெம் செல்கள் மூலம் பல மாற்றங்களை உண்டாக்கி வருகிறார்கள். இறந்து போன செல்களைப் புதுப்பித்தல் என்பது எல்லாம் நடைபெறுகிறது.

''எப்படியாவது இந்த குழந்தைக்கு முயற்சி பண்ணுங்க யசோதை'' பாமா தனது ஆசையை சொல்லி வைத்தாள்.

''கால் இல்லாம போன தவளைக்கு கால் வர வைச்சி இருக்காங்க, புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன்தான் இதுக்கு துணை புரிஞ்சி இருக்கு பாமா, இதையே முன்மாதிரியா வைச்சி மனுசங்களுக்கு செய்யலாம்னு சொல்லி இருக்காங்க. நிறைய பேருக்கு கை கால் வெட்டி எடுத்துட்டா திரும்பி வளர வாய்ப்பே இல்லாம இருந்ததை மனசில வைச்சி இந்த ஆராய்ச்சி நடந்துட்டு இருக்கு''

''முயற்சி பண்ணுங்க யசோதை''

கட்டாயம் பண்ணுவதாகச் சொன்னாள் யசோதை. அதன்பின்னர் அவர்கள் அமைதியாக வந்தனர். மருத்துவமனையை வந்து அடைந்தபோது மாலை ஆறு மணி ஆகி இருந்தது.  இருவரும் சென்று குழந்தையைப் பார்த்தார்கள். நாச்சியார் அங்கேதான் பூங்கோதையோடு இருந்தார். கை கால்கள் உடன் இல்லாமல் இருந்த குழந்தை பார்க்க மன உறுதி வேண்டும். தாங்கள் வாங்கி வந்த பொருட்களை அங்கே வைத்தார்கள். வைச்சி விளையாட கைக இல்லை என வருந்தினாள் பூங்கோதை. அப்போது சிறு ஒலி எழுப்பியது குழந்தை. கை, கால் முளைக்க வேண்டிய இடத்தில் இருந்த தசைகள் ஆடின.

''கவலைப்பட வேண்டாம்க்கா, உங்க குழந்தைக்கு கை கால் வந்துரும்'' யசோதை பூங்கோதைக்கு நம்பிக்கை கொடுத்தாள்.

''குழந்தை உயிரோட இருந்தாலே போதும் சின்னம்மா'' பூங்கோதையின் வலிமை இழந்த சொற்கள் பாமாவை என்னவோ செய்தது.

''நான் இருக்கேன்க்கா'' பாமா பூங்கோதையின் கைகளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள். குழந்தையைத் தூக்கினாள் பாமா. ''குழந்தை தலை பத்திரம் பாமா'' என்றார் நாச்சியார்.

தன் கன்னத்தோடு குழந்தையின் கன்னம் ஒட்டிக் கொண்டாள். அதன் செவியில் பாசுரம் ஒன்றைப் பாடினாள்.

உயர்வறவுயர்நலம் முடையவன் யவனவன்
மயர்வறமதிநலம் அருளினன் யவனவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதியவனவன்
துயரறுசுடரடி தொழுதெழன்மனனே

பாமா பாடிய பாடலைக் கேட்டு குழந்தையின் முக தசைகள் புன்னகை புரிவது போல அசைந்தன. வானில் பேரிடி ஒன்று இடித்து ஓய்ந்தது. 'பெருமாளே, இந்தக் குழந்தையை குறையில்லாத குழந்தையா மாத்து' என மனதில் வேண்டிக் கொண்டார் நாச்சியார்.

பாமாவின் தோளினைத் தொட்டாள் யசோதை. எங்கிருந்தோ ஒரு பட்டாம்பூச்சி பறந்து வந்து பூங்கோதையின் இடது தோளில் வந்து அமர்ந்தது. மெய் சிலிர்த்துப் போனாள் பாமா.

(தொடரும்)

No comments: