Sunday 6 October 2019

பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 16

16. இமேகோ செல்கள்

துளசிச் செடியில் இருந்த அச்சிறு கம்பளிப்பூச்சி தனது தோல்களையே ஒரு கூடு போல உண்டாக்கிக் கொள்ளத் தொடங்கியது. வேறு சில பூச்சிகள் வேறு சில பொருட்கள் கொண்டு புழுக்கூடு கட்டும் ஆனால் பட்டாம்பூச்சி அப்படி இல்லை. ஒரு நல்ல இலையினைப் பார்த்து தலைகீழாகத் தொங்கத் தொடங்கியது. வெகு வேகமாக காற்று அடித்தால் அடித்துச் செல்லப்படும் நிலையைப் பொருட்படுத்தாமல் இலையினை பிடிமானமாகக் கொண்டு தனக்குள் ஒரு பெரும் உருமாற்றத்திற்காக தயார்படுத்திக் கொண்டு இருந்தது.

தினம் நகர தான் சுரக்கின்ற திரவத்தை வைத்துக் கொண்டே கம்பளிப்பூச்சி தன்னை மொத்தமாக கரைக்க ஆரம்பித்து இருந்தது. கம்பளிப்பூச்சியும் இல்லை, பட்டாம்பூச்சியும் இல்லை. பச்சை வண்ண திரவமாக மாறி இருந்தது. தனது உருவத்தையே மொத்தமாக கரைத்து ஒன்றுமில்லாமல் ஆக்கி, செல்களோடு மட்டுமே இருக்கும் இந்த நிலை இந்த உயிரினத்தின் ஒரு ஒப்புயர்வற்ற நிலை.

இதையே மனித மன வாழ்வுக்கும் சொல்லலாம். எண்ணங்களில் தன்னைக் கரைத்துக் கொண்டு ஒரு முழு மனிதனாக உருவாதல். இந்த மனநிலையை நான்கு நிலைகளாகப் பிரித்துச் சொல்லப்பட்டு இருக்கிறது.

நமது அடையாளம் எதுவென அறியாமல் நம்மை நாமே தொலைத்து இருத்தல் ஒரு நிலை. இதுதான் மிகவும் அச்சம் தரக்கூடிய ஒன்றாக இருக்கும். நிகழ்காலம் புரியாமல் எதிர்காலம் மயங்குகிறது எனச் சொல்வது போன்ற ஒரு நிலை இது. எல்லாவற்றையும் தொலைத்தது போன்ற ஒரு இனம்புரியாத நிலையை சமாளித்துக் கொள்வது என்பது அறிவில், அன்பில் சாத்தியம்.

அடுத்த நிலை எப்படி மழையே இல்லாமல் இருந்த நிலத்தில் மழை பொழிந்து மண் வாசம் உண்டாக்கி அந்த ஒரு மகோத உன்னத மகிழ்ச்சியை உண்டாக்குமோ அது போல நம்மை புதுமைப்படுத்திக் கொள்வது. நமது அனுபவங்கள், பழைய விசயங்களில் இருந்து ஒரு அடையாளம், நமக்கான இலக்கு எதுவென நம்மை நாமே உணர்ந்து அறிந்து கொள்ளும் இந்த நிலை. ஒரு கற்பனை, அதில் இருந்து நமக்கான ஒரு உருவம் என நம்மை செழுமைப்படுத்திக் கொள்ள நமக்கு நிறைய மன உறுதி தேவைப்படுகிறது.

அடுத்து வரும் நிலையே நம்மை எவரென உலகம் அறிந்து கொள்ள வழி செய்யும். ஒரு உற்சாகத்தோடு நம்மை வழி நடத்திட நமது கனவுகளை எல்லாம் நனவாக்கிட நாம் செய்யும் செயல்கள். இந்த நிலையில் எண்ணற்ற எதிர்பாராத பிரச்சினைகள் வந்து சேரும். அதை எல்லாம் தகர்த்து இலக்குகள் நோக்கிய விசயத்தில் மனம் தளராது செயல்படுவது.

இறுதியான நிலையானது நாம் நினைத்த விசயங்களை சாதித்துக் காட்டி உலகம் நம்மை முழுமையாக அறிந்து கொள்ளச் செய்வது. இந்த நான்கு நிலைகளில் ஒவ்வொரு விசயங்களுக்கு நம்மை உட்படுத்திக் கொள்கிறோம். இது மனிதனின் மனமாற்றமான உருமாற்றம் என்று கொள்ளலாம்.

பச்சை திரவத்தில் இருப்பது இமேகோ செல்கள். அவை அதுவரைக்கும் ஒன்றும் செய்யாமல் அமைதியாக இருக்கிறது. அப்படியே அவைகள் அழிந்து போய் இருந்தால் ஒரு பட்டாம்பூச்சி எனும் இலக்கை அவைகள் அடைந்து இருக்காது.

தோலினுள் பச்சை திரவம் வடிவம் ஏதும் எடுக்காமல் அப்படியே இருந்தது. இமேகோ செல்கள் தங்களை ஒழுங்குபடுத்திக் கொள்ள விரைவில் துவங்கும்.

பூங்கோதை தனக்கு அவ்வப்போது வலி ஏறுபடுவதாகச் சொல்லிக் கொண்டு இருந்தாள். பாமா தேர்வுகளில் முழு கவனம் செலுத்திக் கொண்டு இருந்தாள். யசோதை மேலும் ஒரு கருத்தரங்கு சென்று உடலில் கை கால்கள் எப்படி உருவாகிறது, அதை எப்படி எல்லாம் நம் வழிக்கு மரபணு மூலம் மாற்றலாம் என அறிவை வளர்த்ததோடு சில முக்கிய நபர்களின் தொடர்பும் பெற்றுக் கொண்டாள்.

இந்த பூமியில் இருக்கும் நீர் எல்லாம் ஒரு காலத்தில் தான் ஒரு மழை என்று அறியாது. பச்சை திரவமாக இருந்த இமேகோ செல்கள் செயல்பாட்டினைத் தொடங்க ஆரம்பித்தது. இதில் ஒரு ஆச்சர்யமான விசயம் என்னவெனில் கம்பளிப்பூச்சியாக இருந்தபோது இருந்த நிகழ்வுகளை எல்லாம் அந்த செல்கள் நினைவில் சுமந்து கொண்டு இருப்பதை ஒரு ஆய்வில் கண்டுபிடித்தார்கள்.

ஒரு பட்டாம்பூச்சி உருவாக ஒவ்வொரு நிலையில் ஒரு வாரம் என குறைந்தது ஒரு மாதம் ஆகிறது. எப்படி துளசிச் செடி இலையில் தலைகீழாகத் தொங்கிக்கொண்டு தன்னில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள தயார் ஆனதோ அது போல தலைகீழாக தன தலையைத் திருப்பியபடி வெளி உலகுக்கு வருவதற்கு தயாராகிக் கொண்டு இருந்தது பூங்கோதையின் குழந்தை.

அடுத்த சில தினங்களில் வலி அதிகம் இருப்பதாகத் துடித்தாள் பூங்கோதை. பாப்பாத்திதான் உடனே நாச்சியாருக்கு தகவல் சொல்லி வசுதேவன் வாகனத்தை தயார் செய்து விருதுநகர் மருத்துவமனையை நோக்கி சென்று கொண்டு இருந்தார்கள்.

பரந்தாமன் கோவில் கதவு அடைக்கும் நேரம் வரை உருவமாக அங்கே நின்று கொண்டு மனம் எல்லாம் பூங்கோதை மீது நிலைத்து இருந்தது. பாப்பநாயக்கன்பட்டிக்குத் தகவல் சொல்லி கோவிந்தனை கோவிலை மாலை முழுதும் பார்த்துக் கொள்ள தகவல் சொன்னான் பரந்தாமன்.

துளசிச் செடியில் பட்டாம்பூச்சியின் உருமாற்றம் நிகழ்த் தொடங்கி இருந்தது.

(தொடரும்)

No comments: