Sunday 13 October 2019

பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 21

21 மரபணுக்கள்

யசோதை, சில தினங்களுக்குப் பிறகு பாமாவை மதுரைக்கு வருமாறு அழைத்தாள். தான் ஒரு மருத்துவரிடம் கலந்து ஆலோசித்ததாகவும், அவரும் பட்டாம்பூச்சிக்கு சிறகுகள் வரவைக்கலாம் எனவும் சொன்னதாக சொல்லி சனிக்கிழமை அன்று அவரைச் சந்திக்க பதிவு செய்து இருப்பதாகச் சொன்னாள்.

அது எப்படி செய்ய இருக்கிறார்கள் என பாமா கேட்டதும் மிகவும் சுருக்கமாகச் சொன்னாள் யசோதை.

''வண்ணத்துப்பூச்சிகளுக்கு இரண்டு வாழ்வு பாமா. ஒன்னு கம்பளிப்பூச்சியா இருக்கிறது, மத்தது வண்ணத்துப்பூச்சியா மாறுரது. கம்பளிப்பூச்சியில இருந்து வண்ணத்துப்பூச்சியா மாறும் சமயத்தில் முதல் இருந்த செல்கள் எல்லாம் உடலோட அழிக்கப்பட்டு புது செல்கள் தோன்றும் அப்போ அந்த செல்கள் நிறைய எதிர்ப்புகள் மேற்கொண்டு தங்களை அங்கே நிலைநிறுத்தி வண்ணத்துப்பூச்சியை உருவாக்கும். முதலில் இருந்த செல்களில் உள்ள டிஎன்ஏவும் புதுசா உருவாகுற டின்ஏவும் ஒன்னுதான் எந்த ஒரு மாற்றமும் இல்லை. ஆனா வெளிப்படுத்தும் ஜீன் இருக்கில்ல அது மாறுது''

பாமா தான் கேட்டுக் கொண்டு இருப்பது தனக்கு விளங்கிக்கொள்ள முடிகிறது என எவ்வித ஐயமும் கேட்காமல் தொடரச் சொன்னாள்.

''முதலில் இருக்கிற செல்களில் உள்ள ஜீன்கள் கம்பளிப்பூச்சி நிலைக்கு தன்னை வெளிப்படுத்துது ஜீனோடொம் கலந்த பீனோடோம். இரண்டாவது புதுசா உருவாகிற செல்களில் உள்ள ஜீன்கள் வண்ணத்துப்பூச்சியை வெளிப்படுத்திருது இதுவும் ஜீனோடொம் கலந்த பீனோடோம். டாக்டர் என்ன சொன்னாருன்னா சிறகுகள் உருவாக்குற  ஜீன்களை ஹார்மோன் மூலமா ஆக்டிவேட் பண்றது. ஈசோடின் ஹார்மோன் இதைச் செய்யும்னு சொல்றார். வண்ணத்துப்பூச்சி ஜீனோம் எல்லாம் பிரிச்சி வைச்சி இருக்காங்க, பண்ணிரலாம்னு சொல்றார். செலவு எல்லாம் ஒன்னும் ஆகாது. அந்த ஹார்மோனுக்கான செலவு மட்டும்தான். அதான் அதைச் செய்யறப்போ நீ இருக்கனும்னு நினைக்கிறேன்''

அதைக் கேட்டதும் பாமாவுக்கு அளவிலா மகிழ்ச்சி. கட்டாயம் வரேன் என்றாள்.

நம்மாழ்வார் பாசுரம் ஒன்று அவளது நினைவில் ஆடியது. எத்தனை வருடங்களாக இந்த பாசுரங்களை எல்லாம் மனனம் செய்து வருகிறாள் என்பது வியப்புக்குரிய ஒன்று. மகிழ்வான தருணங்களிலும் சரி, சோகமான தருணங்களிலும் சரி அவளுக்கு பாசுரம் பாடத் தோனும்.

நின்றனர் இருந்தனர்
கிடந்தனர் திரிந்தனர்
நின்றிலர் இருந்திலர்
கிடந்திலர் திரிந்திலர்
என்றும் ஓர் இயல்வினர்
என நினைவு அரியவர்
என்றும் ஓர் இயல்வோடு
நின்ற எம் திடரே

பாமா பாடிய அடுத்த கணம் அவளது சிந்தனையில் பொறி தட்டியது.  யசோதை சொன்ன விசயங்கள் அப்படியே பொருந்திப் போகும்படியான பாசுரம் இது என வியப்பு அடைந்தாள். இதை எல்லாம் எண்ணி எழுதப்பட்ட பாசுரம் அல்ல அது என அவள் அறிவாள் அவளது அறிவால்.

பூங்கோதையிடம் ஓடிச்சென்று நாராயணிக்கு கை கால் வந்துரும்க்கா என அளவிலா மகிழ்ச்சியோடு சொன்னாள். நாராயணி புன்னகை புரியத் தொடங்கி இருந்தாள். கைகள் இருந்தால் எப்படி நம்மைக் கண்டதும் குழந்தைகள் நீட்டுமோ கால்களை ஆட்டுமோ அதுபோல பாமாவை காணும் போதெல்லாம் நாராயணியின் கை கால் தசைகள் ஆடும். இதைக்கண்டு மிகவும் பூரிப்பு அடைந்து இருக்கிறாள் பூங்கோதை.

இந்த உலகில் எல்லா உயிர்களும் ஒருவிதத்தில் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையன. அன்போடு இருப்பதே உயரிய செயல். எப்போது ஒருவருக்கு நம்மீது வெறுப்பு தோன்றுகிறதோ அப்போது அவர்களிடம் வெறுப்பை நெருப்பென காட்டி நம்மை நாமே சுட்டெரித்து விடாமல் அமைதியாக தெளிந்த நீரோடை போல அவர்களிடம் இருந்து விலகிப் போவது சிறந்தது. ஆனால் இந்த உலகம் அப்படி விலகிப் போவோர்களை ஏளனம் பண்ணி, அடிமைப்படுத்தவே நினைக்கும். பேரன்பினால் ஆனது உலகம் என்று சொன்னாலும் உலகம் அப்படியாக உருவானது இல்லை. ஒன்றின் உணவாக மற்றோன்றின் உடல் எப்போது தேவை என்று ஆனதோ அப்போதே அன்பு என்பதன் பொருள் விலங்கு உண்ணும் உயிர்களிடத்தில் எதிர்பார்க்க இயலாது. இருந்தாலும் பேரன்பினால் ஆனது உலகம் என மனம் மகிழ்கின்றோம்.

நாச்சியாரிடம் விபரத்தைச் சொன்னாள் பாமா.

''ஒரு மாசமோ, இரண்டு மாசமோ அது உயிரோட இருந்துட்டு இறக்கப் போகுது அதுக்கு எதுக்கு இப்படி எல்லாம் பண்ணனும்''

வசுதேவன் இப்படிச் சொல்வார் என பாமா சற்றும் எதிர்பார்க்கவில்லை. நாச்சியார் தான் வசுதேவன் மனம் புரிந்தவராக அமைதியாகச் சொன்னார்.

''உசிரு, உசிருதாண்ணே, ஒருநாள் வாழ்ந்தாலும் இறக்கையோட வாழ்ந்தோம்னு இருக்கும் அதுவும் நினைச்ச இடத்துக்குப் பறக்கும். இப்போதான் எனக்கு உரைக்குது. எதுக்கு ஒரு பட்டாம்பூச்சி கோதை, யசோதை, பாமா தோளில் போய் உட்கார்ந்து இருந்துச்சுனு, என்னை வைச்சி அது ஏதோ ஒரு விளையாட்டை நடத்திட்டு இருக்கு''

வசுதேவன் சிரிப்பை அடக்க முடியாமல் சொன்னார்.

''திருவிளையாடல் புராணம், விஷ்ணுவோட பத்து அவதாரங்கள் புராணம் மாதிரி சொல்ற நாச்சியார், நம்மை எல்லாம் அந்த பட்டாம்பூச்சிக்கு உணர இயலுமா''

''உணரும், உணர்ந்துதான் இப்படி ஒரு நிகழ்வு நடந்துட்டு இருக்குண்ணா''

நாச்சியார் சொன்ன மறு நிமிடம் மன்னிப்பு கேட்டார் வசுதேவன். பாமாவுக்கு வியப்பாக இருந்தது. சட்டென மாறும் மனநிலை அவளுக்குப் புதிராக இருந்தது.

''என் அண்ணன் எப்பவுமே என்னை இப்படி சோதனை பண்ணுவார், நான் உறுதியா இருந்தா பேசாம மறுப்பு தெரிவிக்காம சம்மதம் சொல்லிருவார்'' என்றார் நாச்சியார்.

பாமாவும் புன்னகை புரிந்தார்.

சிறகுகள் முளைத்து விடும் பட்டாம்பூச்சி காண அவள் பேராவலோடு இருந்தாள். அவளது மனம் நாராயணிக்காக வேண்டிக்கொண்டது.

(தொடரும்)


No comments: