Wednesday 2 October 2019

பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 14

14. தாய்மையின் மனம்

பூங்கோதை பட்டாம்பூச்சி பற்றி சொன்னதும் பாமாவின் இடது தோளில் இருந்து பறந்து போனது பட்டாம்பூச்சி. பாமாவுக்கு பெருமாள்பட்டி மிகவும் பிடித்துப் போனது. தேர்வு முடிந்ததும் பெருமாள்பட்டிக்கே வந்துவிடுவதாகச் சொல்லிவிட்டுக் கிளம்பினாள் பாமா. நாச்சியார் பாமாவை எண்ணி பெருமிதம் கொண்டார்.

சில முடிவுகள் சூழலுக்கு ஏற்ப எடுக்கப்படுபவைகள். அச்சூழலுக்கு அவை சரியெனப்படும். சூழல் மாறிட எடுத்த முடிவுகள் தவறாகத் தோன்றும். எல்லாச் சூழலுக்கும் அதே முடிவு என்பது அறிவுடைமை ஆகாது, ஆனால் அதைத்தான் நேர்மை, கொள்கைப்பிடிப்பு என்றெல்லாம் சொல்லிக் கொள்கின்றனர்.

பூங்கோதையை மிகவும் கவனமாக இருக்கச் சொன்னார் நாச்சியார். பிள்ளை பெறுதல் என்பது ஒரு பெண்ணுக்கு மறுபிறப்பு என்றெல்லாம் இச்சமூகத்தில் சொல் வழக்கு உண்டு. உயிரில் உயிர் தோன்றி உயிர் பிரித்தல் என்பது பாலூட்டிகளில் மட்டுமல்ல பெரும்பாலான உயிரினங்களில் நடக்கும் ஒன்று.

இதுபோன்ற முதல் கர்ப்பம் தரித்தச் சூழலில் தானும், குழந்தையும் நலமாக இருக்க வேண்டும் என பெண்ணின் மனம் நிறையவே அல்லாடும். இந்த தருணங்களை அழகுற நேசித்தல் பெண்ணுக்குரிய பெருமிதம். இக்கால கட்டங்களை வாழ்நாள் எல்லாம் அசைபோடும் நினைவுகளை சுமக்கும் பெண்ணின் மனம். அதோடு மட்டுமல்ல இனம் புரியாத ஒரு அச்சமும் வந்து சேரும். பூங்கோதைக்கும் அந்த அச்சம் ஏற்பட்டது.

''குழந்தைப் பிறக்கறப்ப நான் செத்துப் போனா என் பிள்ளையை நீங்க கவனிச்சிக்கோங்கம்மா''

பதறிப்போனார் நாச்சியார்.

''கோதை, இப்படி எல்லாம் பேசாத, உனக்கு ஒன்னும் ஆகாது. நல்லபடியா குழந்தையைப் பெத்து பெரிய ஆளா வளர்க்கிற வழியப் பாரு''

''மனசுல என்னமோ தோணிச்சிம்மா'' பூங்கோதையின் மனதில் ஒரு வித வலி.

நாச்சியார், பூங்கோதையின் தலையை வருடியபடி சொன்னார்.

''எதுக்கும் கவலைப்படாத கோதை, உன்னை பெருமாள் கைவிடமாட்டார்''

மனிதர்கள் தரும் நம்பிக்கைகள் எல்லாம் எவ்வித உறுதிப்பாடும் இல்லாதவை. ஆனாலும் இந்த நம்பிக்கைகள் ஒருவித மன நிம்மதியைத் தந்து போகிறது.

''இத்தனை வருசமா என்னை பெருமாள் இந்தக் குழந்தைக்காக காத்திருக்க வைச்சிட்டாரும்மா''

மனதில் ஏற்படும் இரணங்களை சுமந்தபடியே தமக்கு ஒரு விடிவுகாலம் வராதா என ஏங்கியபடியே நாட்களை கடத்துகின்றனர். அவர்களை இச்சூழலுக்கு உண்டாக்கும் எல்லாக் காரணிகளை விட இறைவனே எல்லாவித பொறுப்பும் பெரும்பாலானவருக்கு ஏற்றுக்கொள்ள வேண்டும் என நினைக்கின்றனர். இயக்கம் என்ற ஒன்றைத் தோற்றுவித்து இயங்காமல் இருப்பது என்பது எத்தனை கடினமான செயல்.

பூங்கோதையின் வேதனையை நாச்சியாரால் புரிந்து கொள்ள முடிந்தது.

''இருக்கிற நிலைமைக்கு மகிழ்ச்சியா இருக்கப் பழகிக்கிரனும் கோதை, இப்போவாவது தாயாகும் வாய்ப்பு கிடைச்சதுனு நிம்மதியா இரு''

''இல்லைம்மா, திடீருனு இப்படி தோனுது, அதை மனசில வைச்சிக்க முடியாம உங்ககிட்ட கொட்டிட்டேன்''

''ம்ம், கவலைப்படாத எல்லாம் நல்லா நடக்கும்''

பூங்கோதைக்கு ஆறுதல் சொல்லிவிட்டு நாச்சியார் பாமாவுக்கென ஒரு வீடுதனை உள்ளூரில் வாடகைக்குப் பார்த்து வைத்தார். நகரங்களில்தான் வாடகைக்கு என விடப்படும் வீடுகள் உண்டு எனில் கிராமங்களில் கூட வாடகைக்கு வீடு விடப்படுவது உண்டு.

வசுதேவனிடம் பள்ளிக்கூடம் குறித்தும், ஆழ்வார் திருநகரி செல்ல வேண்டியது குறித்தும் விரிவாகப் பேசினார் நாச்சியார். வயதான பிறகு இது எல்லாம் தேவை இல்லை என வசுதேவன் மறுத்துவிட்டார். நாச்சியாருக்கு ஏமாற்றமாக இருந்தாலும் பாமா நினைவுக்கு வந்து போனாள். பாமா வந்த பிறகு அவளை அழைத்துக் கொண்டு ஆழ்வார் திருநகரி செல்லத் திட்டமிட்டார்.

''அண்ணா, இதை எனக்காக பாமா செய்வா, அவளே வழி நடத்துவா, நான் பக்கபலமா இருப்பேன், கோவிலுக்குப் பக்கத்தில சின்ன இடம் கிடைச்சா போதும்ண்ணா''

''ஊர்ல இருக்கிறவங்ககிட்ட பேசி செய்ய வேண்டிய காரியம், நான் கலந்து பேசிட்டு சொல்றேன்மா''

''அண்ணா அப்புறம் ஒரு முக்கியமான விசயம். யசோதை, சுந்தரவேலனை கல்யாணம் பண்ணுவேனு இருக்கா, மாணிக்கவாசகர் பையன்''

இதைக் கேட்ட மறுகணம் வசுதேவன் மிகவும் கோபம் கொண்டார்.

''நான் இதை கொஞ்சமும் எதிர்பார்க்கலை, என்ன மனசில நினைச்சிட்டு இருக்கா. எல்லாம் நீ கொடுத்த செல்லம்தான்''

''பதட்டப்படாம அவளோட விருப்பப்படி செய்ற வழியப் பாருங்கண்ணா''

வசுதேவன் இனிமேல் எதுவும் அதிகம் சொல்லக்கூடாது என அமைதி ஆனார்.

''யோசிக்கிறேன்மா''

நாச்சியார், வசுதேவனின் மனநிலையைப் புரிந்து கொள்ள முடியாதவராக இருந்தார். தான் திருமணம் பண்ணமாட்டேன் என்றபோது சரி, உன் விருப்பம் ஆனா உன் மனசு மாறும்னு நினைக்கிறேன் என பல வருடங்கள் காத்து இருந்தார், அதன்பின் தன் மனம் மாறவில்லை என அறிந்ததும் தன் வழி என போய் விட்டார். தான் பெற்ற பிள்ளை என்றதும் நிறைய உரிமை எடுத்துக் கொள்வது போல் நாச்சியாருக்குப் பட்டது.

யசோதையின் ஆசையை நிறைவேற்றுவது நாச்சியாருக்கு மிகவும் முக்கியமாகப் பட்டது. துளசி இலைகளை தினமும் உண்டு தன்னை வளர்த்துக் கொண்டு இருந்தது பட்டாம்பூச்சியாக உருமாற்றம் கொள்ள இருக்கும் அச்சிறு கம்பளிப்பூச்சி.

(தொடரும்) 

No comments: