Thursday 10 October 2019

பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 17

17. ஊனமறு நல்லழகே

கம்பளிப்பூச்சியாக இருந்தபோது அதனில் உள்ள இந்த எதிர்ப்பு சக்தியானது இந்த இமேகோ செல்களை உருவாக விடாமல் தடுத்தாலும் அதை எல்லாம் பொருட்படுத்தாது இவை எல்லாத் தடைகளையும் தாண்டி பல செல்கள் உருவாகி பட்டாம்பூச்சியாய் உருவானது. தோலினுள் உருமாற்றம் தொடங்கி தோலினை கிழித்து தலைகீழாக வெளிவந்தபோது அவைகளுக்கு சிறகுகள் இல்லை. கால்கள் மற்றும் தலையோடு மட்டுமே வெளிவந்தது. சிறகுகள் இல்லாத இதை எப்படி பட்டாம்பூச்சி எனச் சொல்வார்கள்.

வெளிவந்த அடுத்தகணம் தலையை மேற்புறம் திருப்பி தனது தோலுக்கு நன்றி சொல்லிக்கொண்டது போல இருந்தது. அங்கிருந்து பறந்து போக சிறகுகள் இல்லை. துளசி இலையில் இருந்து கீழே பொத்தென்று விழுந்து தரையில் ஊர்ந்து சென்றது. இதைக்கண்டு பட்டாம்பூச்சி ஒன்று அதன் அருகில் சில நிமிடங்கள் நின்றுவிட்டு பரந்தாமனின் வீட்டுக்குள் சென்று ஓரிடத்தில் அமர்ந்து கொண்டது.

ஊர்ந்து கொண்டே சென்ற இந்த பட்டாம்பூச்சி ஒரு மலர் இருந்த செடியின் மீது ஏறி அந்த மலரில் தேனினை உறிஞ்சத் தொடங்கியது. இமேகோ செல்கள் தங்களது பணியை சரிவரச் செய்யாத காரணத்தால் கால்கள் தலைகளோடு சிறகுகள் அற்ற பட்டாம்பூச்சி உருவானது. தனது நிலையை எண்ணி வருத்தம் எதுவும் கொள்ளாமல் பறந்து செல்வதற்குப் பதிலாக ஊர்ந்து சென்று மலர் இருந்த செடியை அடைந்தது.

விருதுநகர் மருத்துவமனையை அடைந்தார்கள். வலி பொறுக்கமாட்டாமல் கத்தினாள் பூங்கோதை. மருத்துவமனையில் வெகுவேகமாக அனுமதித்தார்கள். குழந்தையின் தலை சரியாக இருக்கிறது. பிரச்சினை எதுவும் இல்லை என மருத்துவர்கள் சொன்னார்கள். பரந்தாமனும் மருத்துவமனையை வந்து அடைந்தான். மிகவும் பதட்டமாகக் காணப்பட்டான். நாச்சியார் ஆறுதல் சொல்லிக்கொண்டு இருந்தார்.

மழை எப்போது பெய்யும் என்றும், பிள்ளை எப்போது பிறக்கும் என்றும் மகாதேவனே அறிந்தது இல்லை எனும் சொல்வழக்கு உண்டு. நேரம் ஆகிக் கொண்டு இருந்தது. அறுவை சிகிச்சை எதுவும் செய்யாமல் குழந்தை வெளிவந்தது. குழந்தையைக் கண்ட மருத்துவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தார்கள்.  கை கால் என இல்லாமல் உடலோடும், தலையோடும் மட்டுமே பிறந்து இருந்தாள். நாச்சியார், எம்பெருமாளே என்ன சோதனை இது எனக் கூறியபடி உடல் நடுங்கினார்.

கால், கை குறைவோடு பிறக்கிறவங்க இருக்காங்க, ஆனா இப்படி கால், கை முழுவதுமே இல்லாம பிறக்கிற குழந்தைக அபூர்வம். இதை அமெலியானு சொல்வாங்க. குழந்தையின் இதயத் துடிப்பு எல்லாம் சீராக இருந்தது.

கை, கால் தோன்றும் இடத்தில் கருமை நிறத்தில் புள்ளிகள் மட்டுமே தென்பட்டன.பூங்கோதை மயக்கத்தில் இருந்து தெளியாமல் இருந்தாள். குழந்தையைப் பாதுகாப்பு பண்ணிவிட்டு பரந்தாமனிடம் விபரத்தைச் சொன்னார்கள் மருத்துவர்கள். பரந்தாமன் கண்களில் நீர் திரண்டு வழிந்தது.

உள்ளே சென்று பூங்கோதையை, பிள்ளையை பார்த்தான் பரந்தாமன்.

''நாராயணி'' தழுதழுத்த குரலோடு அழைத்தான். குழந்தை பரந்தாமன் அழைத்தது கேட்டு வாய் அசைத்தது.

பூங்கோதை விழித்தாள். பிள்ளையைக் கண்டதும் ''நான் என்ன பாவம் பண்ணினேன்'' எனக் கண்கள் கலங்கியவள் குழந்தையைத் தூக்கி மார்போடு அணைத்துக் கொண்டாள்.

''குழந்தை நல்லாதான் இருக்கா, கை கால்கள் மட்டும்தான் வளரலை, நீங்க இதை முன்னமே ஸ்கேன் எடுத்து பார்த்து இருந்தா சொல்லி இருப்பாங்க, இவ்வளவு தூரம் விட்டு இருக்க வேணாம்'' மருத்துவர் சொன்னதைக் கேட்கும் மன நிலையில் அங்கே எவரும்  இல்லை.

வசுதேவன் யசோதைக்குத் தகவல் சொன்னார். நாச்சியார் கேட்டுக் கொண்டதன் பேரில் பாமாவுக்கும் தகவல் சொன்னார் வசுதேவன்.

''ஒரு இரண்டு நாள் இங்க தங்கிட்டுப் பிறகு கூப்பிட்டுட்டுப் போங்க'' தன் பேச்சை சட்டை செய்யாமல் இருப்பது கண்டு மருத்துவர் தனியறை ஒன்று தருவதாகச் சொல்லிவிட்டுச் சென்றார்.

பத்து தலைகள் கொண்ட இராவணன். ஆறு தலைகள் கொண்ட முருகன். நான்கு தலைகள் கொண்ட பிரம்மன். ஐந்து தலைகள் கொண்ட நாகம். எட்டு கைகள் கொண்ட துர்க்கை. நான்கு கைகள் கொண்ட விஷ்ணு. யானை தலை கொண்ட விநாயகர். சிங்கம் தலை கொண்ட நரசிம்மர். இந்த பூமி இப்படி எண்ணற்ற விசயங்களை கேள்விப்பட்டது உண்டு.

''அம்மா, இப்படி ஆயிருச்சேம்மா, இனி அந்தக் குழந்தை வளர்ந்து எப்படிம்மா இந்த உலகத்தில் வாழப் போகுது'' பரந்தாமன் அழுகையை அடக்க இயலாதவனாகச் சொன்னான்.

''நீ கவலைப்படாத, எல்லாம் நல்லபடியாக நடக்கும், நான் போய் கோதை கூட இருக்கேன்''

தாலிடோமைடு எனும் மருந்துதனை காலையில் வாந்தி வருவதை தடுக்க கர்ப்பிணி பெண்கள் உட்கொண்டதால் அனைருக்கும் கை கால் குறைபாடு உள்ள குழந்தை பிறந்தது. அதன்பின் உடனடியாக அந்த மருந்து தடை செய்யப்பட்டது. பூங்கோதைக்கு எப்படி இப்படி ஆனது என மருத்துவரால் புரிந்து கொள்ள இயலவில்லை.

''துளசிச் செடியை அந்த பட்டாம்பூச்சி தின்னப்பவே எனக்கு ஒருமாதிரி இருந்துச்சும்மா'' பரந்தாமன் வருத்தம் பொங்கச் சொன்னான்.

''தேவை இல்லாம கண்டதை நினைச்சி குழப்பிக்காதே, நாங்க அந்த குழந்தையை நல்லா வளர்த்துருவோம்''

வசுதேவன் பரந்தாமனை அழைத்துக் கொண்டு மருத்துவமனையை விட்டு வெளியேறினார்.

யசோதை அவசரம் அவசரமாக மதுரையில் இருந்து கிளம்பி விருதுநகருக்கு செல்ல பேருந்து நிலையம் வந்து சேர்ந்தாள். அவள் ஏறிய பேருந்தில் ஒரு இருக்கையில் பாமா அமர்ந்து இருந்தாள்.

பேருந்தில் பாடல் ஒலித்தது.

''ஊனமறு நல்லழகே, ஊறு சுவையே கண்ணம்மா''

பாமாவின் அருகில் வந்தாள் யசோதை.

''பாமா''

பாமாவின் கண்கள் கண்ணீரை அடக்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தது.

(தொடரும்)

No comments: