Sunday 29 September 2019

பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 13

13 மன்னுபுகழ் பட்டாம்பூச்சி

பெருமாள்பட்டிக்குள் சென்றாள் பாமா. அதிகம் மக்கள் நடமாட்டம் இல்லாத ஊர். கோழிகள் சேவல்கள் தரையைக் கொத்திக் கொண்டு இருந்தன. நாய்கள் ஒவ்வொரு வீதியிலும் நிழல் பார்த்து படுத்து இருந்தன. எவரேனும் அதன் வழி கடந்தால் தலையைத் தூக்கிப் பார்ப்பதோடு சரி. ஆடுகள், மாடுகள் சில வீடுகளோடு ஒட்டி கட்டப்பட்டு இருந்த தொழுவங்களில் படுத்தவாறு அசைபோட்டு கொண்டு இருந்தன. உழவுக்கு என மாடுகள்தான் இன்னும் புழக்கத்தில் இருக்கிறது. வீதிகளில் இருபுறமும் கழிவுநீர் வாய்க்கால் கல்லினால் மூடப்பட்டு சுகாதாரம் மிக்க இடமாகவே வீதிகள் காட்சி அளித்தன.

கிணற்றில் நீர் இறைத்துச் சென்றவர்களின் உரையாடல் வெள்ளேந்தி மனிதர்களை அடையாளம் காட்டிக் கொண்டு இருந்தது. தேநீர்க்கடையோ, உணவுக்கடையோ இல்லாமல்தான் அங்கே இருந்தது. ஊருக்கென்று ஒரு மந்தை, அந்த மந்தையை ஒட்டிய ஒரு பலசரக்கு கடை. விவசாயத்தில் விளைந்து வரும் எந்த ஒரு பொருளையும் இங்கே வந்து தந்துவிட்டால் போதும், விருதுநகருக்கோ, கல்லுப்பட்டிக்கோ மொத்த வியாபாரத்திற்கு கடையின் சொந்தக்காரர் மாறன் விற்று பணம் தந்து விடுவார். தனக்கென ஒரு சதவிகிதம் பணத்தை இலாபத்தில் எடுத்துக் கொள்வது அவரது வழக்கம்.

வியாபாரம் என்றாலே நேர்மையற்ற தொழில் என்பதைவிட இந்த உலகில் பிறந்த உயிரினங்கள் தாம் உயிர் பிழைக்க வேண்டி என்னவெல்லாம் செய்யுமோ அதுபோல வியாபாரம் செழித்தோங்க பல்வேறு வழிகளை கடைபிடிப்பது உண்டு, ஆனால் மாறன் அப்படி எல்லாம் செய்வது இல்லை. ஊருக்குள் இருப்பவர்களுக்கு தேவையானப் பொருள்களை தனது கடையில் வாங்கி வைத்து வியாபாரம் செய்வது வழக்கம்.

மந்தையை வந்து அடைந்தாள் பாமா. அப்போதுதான் தான் எதுவுமே வாங்கி வராமல் வந்து இருப்பது அவளுக்கு உரைத்தது. குண்டத்தூரில் ஏதாவது வாங்கி இருந்து இருக்கலாம் அப்போதும் அதை மறந்து இருந்தாள். மாறனிடம் சென்று சேவு, சீரணி என வாங்கினாள்.

''ஊருக்குப் புதுசா இருக்கம்மா, யாரைப் பார்க்கனும்''

தானே வீடு விபரம் கேட்கும் முன்னர் மாறன் கேட்டது பாமாவுக்கு எளிதாகப் போனது.

''நாச்சியார் அம்மா''

''இப்படியே நேராப் போய் வடக்கத் திரும்பினா அந்த வீதியோட கடைசி வீடு, பெரிய வீடு, இரண்டு திண்ணைக வைச்சது இருக்கும், வீட்டுலதான் இருப்பாக''

நன்றி சொல்லிவிட்டு நடந்தாள். மந்தைக்கு அந்தப்பகுதியில் எப்படி வீதிகள் இருந்தனவோ அதேபோலவே இந்தப்பகுதியிலும் மிகவும் அகலமான வீதிகள். நாச்சியார் வீட்டை அடைந்தாள் பாமா. வீட்டின் கதவுகள் திறந்தே இருந்தன. எந்த ஒரு ஊரில் வீட்டின் கதவுகள் திறந்து போடப்பட்ட போதும் திருடுப் போகாதோ அந்த ஒரு ஊரில் உள்ள மனிதர்கள் நேர்மையும், சத்தியமும் நிறைந்தவர்களாவே இருப்பார்கள்.

பாமாவைக் கண்டதும் வியப்பு அடைந்தார் நாச்சியார்.

''என்னைப் பார்க்க வந்ததா அம்மா சொன்னாங்க, அதான் உங்களைப் பாத்துட்டுப் போகனும்னு மனசுக்குப் பட்டுச்சு, கிளம்பி வந்துட்டேன், உங்க ஊர்ல வாங்கின பலகாரம்'' எனச் சொல்லியவாறு நாச்சியார் கைகளில் தந்தார். பாமாவை கட்டிப்பிடித்துக் கொண்டார் நாச்சியார்.

''பெருமாள் கோவிலுக்குப் போயிட்டு வரியாம்மா, உட்காரும்மா''

தான் பெருமாள் கோவில் சென்று வந்தது இவருக்கு அதற்குள் எவர் தகவல் தந்து இருப்பார்கள் என யோசித்தாள் பாமா.

''நான் உன்னைப் பார்க்க வந்ததே நீ படிப்பை முடிச்சிட்டு எங்க ஊருல வந்து விவசாயம் சம்பந்தமா வேலை செய்யச் சொல்லி கேட்கனும்னுதான்'' நாச்சியார் சொன்ன மறுகணம் பாமா எவ்வித மறுப்பு சொல்லாமல் சரி என சம்மதம் சொன்னாள்.

''இந்த ஊர் பெருமாள் எனக்கு ரொம்பப் பிடிச்சி இருக்கு''

''எல்லா ஊர்லயும் ஒரே பெருமாள்தானே பாமா''

''இல்ல இந்தக் கோவில் அமைப்பு எல்லாம் மனசுக்கு இதமா இருக்கு''

''கோவிலுக்கு வரவங்க இதைச் சொல்லாமப் போனது இல்ல''

புன்னகை புரிந்தாள் பாமா. தண்ணீர் கொண்டு வந்து தந்தார் நாச்சியார்.

''நான் கேட்டதும் மறுப்பு சொல்லாம சம்மதம் சொன்னதே எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு, கொஞ்ச நேரம் இருந்தா சமையல் முடிச்சிருவேன், அண்ணாவும், அண்ணியும் விருதுநகர் வரை ஒரு கல்யாணத்துக்குப் போய் இருக்காங்க, வர எப்படியும் சாயந்திரம் ஆகிரும்''

''பசி எல்லாம் இல்லைம்மா''

''ஒரு வாய் சாப்பிடனும், அங்க வந்து நில்லு பாமா, இல்லைன்னா கொஞ்ச நேரம் இங்கு உட்கார்ந்து இரு''

சமையல் அறைக்குள் சென்று மீதம் இருந்த வேலைகளை பார்க்கச் சென்றார் நாச்சியார். பாமா வீட்டினை கண்களால் அளந்தார். வீடு தேக்கு மரங்களால் தாங்கப்பட்டு கொண்டு இருந்தது. சுவரில் பெருமாள் தாயார் படம் தவிர வேறு எந்த ஒரு படங்களும் தென்படவில்லை.

சமையல் முடித்து இருவரும் சாப்பிட்டுவிட்டு பூங்கோதையைப் பார்க்கச் சென்றார்கள். செல்லும் வழியில் வீடுகளில் இருந்த சிலர் இது யாரு என பாமாவை கேட்க எல்லோரிடமும் என் மக என பெருமை பொங்கச் சொல்லிக் கொண்டார் நாச்சியார். அதில் ஒரு வயதான மூதாட்டி கல்யாணம் பண்ணாம பிள்ளை பெத்தாளாம் பொன் நிறமா என கேலி பண்ணிச் சிரித்தவர் அன்னைக்கே என் பையன கட்டி இருந்தா இன்னைக்கு இப்படியான பிள்ளைக நாலஞ்சு பெத்து போட்டு இருப்ப என்றார்.

''அம்மா'' நாச்சியார் கைகளைப் பிடித்துக் கொண்டாள் பாமா.

''எனக்கு அந்த பெருமாளே போதும் அத்தை'' நாச்சியார் புன்முறுவலோடு சொன்ன பதில் பாமாவுக்கு அதிசயமாக இருந்தது. பூங்கோதையின் வீட்டை அடைந்தார்கள். பூங்கோதை இவர்களைப் பார்த்து எழுந்து வந்தாள்.

''பாமா, நம்ம ஊர்ல விவசாயம் சம்பந்தமா வேலைப் பார்க்க இன்னும் மூனு வாரத்தில வரப்போறா''

நிறைய பட்டாம்பூச்சிகள் பாமாவைச் சுற்றி வட்டம் அடித்தன. அதில் ஒரு பட்டாம்பூச்சி அவளது இடது தோளில் அமர்ந்தது.

''அம்மா, என் தோள் மேல உட்கார்ந்தது போல இவங்க தோள் மேல உட்காருதும்மா'' என பெருமகிழ்வோடு சொன்னாள் பூங்கோதை.

துளசி இலைகளில் பல ஓட்டைகளோடு காணப்பட்டதை கண்டாள் பாமா.

ஒரு தாவரம் தன்னில் உள்ள எல்லாப் பாகங்களையும் பிற உயிரினங்களின் உணவாக மாற்றிக் கொள்கிறது. துளசிச் செடிகளின் அருகில் சென்ற பாமா தன் அழகிய கண்கள் மிளிர கம்பளிப் பூச்சி போன்று ஊர்வதைக் கண்டு பெரு மகிழ்வு கொண்டாள். அப்படியே பூங்கோதையின் கர்ப்பம் தரித்த வயிறு கண்டாள்.

''மன்னுபுகழ் கோசலை தன் மணிவயிறு வாய்த்தவனே'' என பாமா பாட சிலுசிலுவென தென்றல் வீசியது. நாச்சியார் பாமாவின் குரல் கேட்டு அகம் மகிழ்ந்தார். குழந்தை தன் வயிறுதனை முட்டுவதை முதன் முதலாக உணர்ந்தாள் பூங்கோதை.

(தொடரும்)


பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 12

12. கண்ணி நுண் சிறுத்தாம்பு

பாமா சனிக்கிழமை காலையிலேயே பெருமாள்பட்டி நோக்கி பயணம் ஆனாள். மனிதர்கள் மீது வைக்கப்படும் நம்பிக்கை அபாயகரமானது என இந்த உலகம் நிறைய அவநம்பிக்கைகளை விதைத்துக் கொண்டே இருந்தாலும் மனிதர்கள் மீது வைக்கப்படும் நம்பிக்கை பொய்க்காது எனச் சொல்லவும் சில மனிதர்கள் எடுத்துக்காட்டாக இருந்து கொள்கின்றனர். செங்கோட்டை செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தாள் பாமா.

இந்த பயணம் தனது வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமையும் என பாமா நினைத்துக்கூடப் பார்த்தது இல்லை. நாச்சியார் தன்மீது கொண்ட பிரியம் ஒன்றே அவளது இந்த திடீர் பயணத்துக்கு முக்கிய காரணமாக அமைந்து இருந்தது. இதற்கு முன்னர் குற்றாலம் சென்று இருக்கிறாள் மற்றபடி இந்த பெருமாள்பட்டி எல்லாம் அவள் கேள்விப்படாத ஊர். பேருந்தின் வேகத்தை அவளது பறக்கும் தலைமுடி காட்டிக்கொண்டு இருந்தது, அதோடு கூடிய சிறு தூறல்.

திருமங்கலம் தாண்டியதும் மனதில் நாச்சியாரிடம் என்ன சொல்வது என்றெல்லாம் யோசிக்கத் தொடங்கி இருந்தாள். செங்கோட்டை செல்லும் வழியில் திரும்பிய பேருந்து குண்டத்தூர் வந்ததும் இறங்கிக் கொண்டாள். அங்கே இருந்து பெருமாள்பட்டிக்கு நடக்கத்  தொடங்கினாள்.

முன்பின் அறியாத ஊர், அறியாத மக்கள் வழி கேட்டதும் சரியாகத் திசையை காண்பித்தார்கள். சிறு தூறல் விழுந்து கொண்டே இருந்தது. சட்டென யோசனை செய்து உடனே செய்யும் மனிதர்கள் ஒருவகை. யோசித்துக் கொண்டே எந்த ஒரு முடிவும் எடுக்காமல் காலம் கடத்தும் மனிதர்கள் மற்றொரு வகை.

பெருமாள்பட்டி என காட்டிய வழிகாட்டி அவள் சரியான பாதைக்குச் செல்ல வழிவகுத்தது. அவள் செல்லும் வழியில் தோட்டத்தில் வேலை பார்க்கும் மனிதர்கள் தென்பட்டார்கள். வழியில் கண்ட ஒருவயதான பெண்மணி பாமாவை வழி மறித்து விசாரணை செய்தார்.

''யாரு நீ, யாரைப் பார்க்கப் போற, ஊருக்குப் புதுசா இருக்க''

எவர் எனத் தெரியாத ஒருவர் தன்னிடம் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்வதா என யோசிக்காமல் பாமா தெளிவாகவே சொன்னாள்.

''பெருமாள்பட்டியில நாச்சியார் அம்மாவை பார்க்கப் போயிட்டு இருக்கேன், என் பேரு பாமா, ஊர் மதுரை, அவங்க மதுரைக்கு வந்தப்ப பார்த்தேன்''

''சொந்தமா''

''இல்லை''

''சரி சரி போய்ப் பாரு, நானும் அந்த ஊருதான், ஆனா இன்னைக்கு வர நான் ஸ்ரீரங்கம் போயிட்டு அடுத்த வருசம் இதே நாளில வருவேன், கொஞ்ச நேரத்தில வந்து பெருமாளைக் கும்பிட்டுட்டு கிளம்பிருவேன்'' எனக் கூறிக்கொண்டே நிற்காமல் நடந்து போனார்.

ஆச்சரியமாக அவர் போகும் பாதையைப் பார்த்தவள் சிறிது தூரம் நடந்ததும் பெருமாள் கோவிலின் கோபுரம் தென்பட்டது. நேராக பெருமாள் கோவிலுக்குச் சென்றாள். அவளுக்குள் ஒருவித இனம் புரியாத உணர்வு ஊறிக்கொண்டு இருந்தது. தான் நெற்றியில் வைத்து இருந்த ஒரு கோடு போன்ற நீண்ட சிவப்பு பொட்டும் அதன் கீழ் வைத்து இருந்த பிறை வடிவ வெள்ளைப் பொட்டும்  என அவள் பெருமாள் மீது கொண்டு இருந்த பிரியம் வெளிப்பட்டுத் தெரிந்தது.

கருவறை முன் நின்று தாயாரோடு இருந்த பெருமாளை பார்த்த வண்ணம் நின்றாள். அவளது கண்களில் இருந்து கண்ணீர்த்துளிகள் நிறைந்தது. பல்லாண்டு பல்லாண்டு பாடியபடியே பரந்தாமன் தீபாராதனை காட்டினான். அந்தப் பாடலே பாமாவுக்குள் இக்கண்ணீர் வரவழைக்கப் போதுமானதாக இருந்தது. துளசி நீர் கொடுத்தான் பரந்தாமன். எவரேனும் புதிதாக வந்தால் யார் எவர் என விசாரிப்பது பரந்தாமன் வழக்கம். பாமாவிடமும் அப்படியே விசாரித்தான்.

''எந்த ஊர்ல இருந்து வரீங்க, உங்களை இதுக்கு முன்னம் பார்த்தது இல்லையே''

''மதுரை''

துளசிச் செடியின் இலைகள் என சில பாமாவுக்குத் தந்தான்.

''இந்தக் கோவில் மனசுக்கு நிறையப் பிடிச்சி இருக்கு, ஆளுக வரமாட்டாங்களா''

''வரப்போ வருவாங்க''

கோவிலைச் சுற்றி வந்து ஓரிடத்தில் அமர்ந்தாள் பாமா.

அவள் வழியில் கண்ட வயதான பெண்மணி கோவிலுக்குள் வந்தவர் பாமா அமர்ந்து இருப்பதைக் கண்டு நேரடியாக அவளிடம் வந்தார்.

''நாச்சியாரைப் பார்க்க வந்தேனு சொன்ன, இந்த நாச்சியாரைத்தான் பார்க்க வந்தியா, '' எனச் சொல்லிக்கொண்டே பாமாவின் அருகில் அமர்ந்தார்.

''இல்லை, கோவில் தெரிஞ்சது அதான் சேவிச்சிட்டுப் பிறகு போய் அவங்களைப் பார்க்கலாம்னு நினைச்சேன்''

''உன்கிட்ட ஒன்னு கேட்கனும், கேட்கட்டுமா''

''ம்ம் கேளுங்க''

''செத்ததன் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும், சொல்லு'' என்றார்.

பாமா ஒரு கணம் சிலிர்த்துப் போனாள். இது மதுரகவி ஆழ்வார் நம்மாழ்வாரிடம் கேட்டது. இதை ஏன் தன்னிடம் இவர் கேட்கிறார் எனத் திகைத்தாள்.

''அத்தைத் தின்று அங்கே கிடக்கும்'' என்ற பாமாவின் குரல் எத்தனை இனிமை மிக்கது என வாக்கியங்களில் விவரிக்க இயலாது.

''ஆழ்வார் பத்தி தெரிஞ்சி வைச்சி இருக்க, பெருமாள்ன்னா அத்தனை விருப்பமோ''

''ம்ம் நிறைய''

''உனக்குப் பிடிச்ச ஆழ்வார் பாசுரம் சொல்லு''

''நிறைய இருக்கு, எதைச் சொல்றதுனு தெரியலைங்க''

''ஏதாவது ஒன்னு''

''கண்ணி நுண்சிறுத் தாம்பினால் கட்டு உண்ணப்
பண்ணிய பெரு மாயன் என் அப்பனில்
நண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால்
அண்ணிக்கும் அமுது ஊறும் என் நாவுக்கே''

''நம்மாழ்வார் உனக்கு நிறையப் பிடிக்கும் போல'' என்றவர் எழுந்து போனார். பாமாவின் இடது தோளின் மீது ஒரு பட்டாம்பூச்சி பறந்து வந்து ஒட்டிக்கொண்டது.

(தொடரும்)

Friday 27 September 2019

பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 11

11. உயிர்களின் பேரன்பு

நாச்சியார், யசோதையிடம் பெரியவர்கள் பேசி முடிக்கும்வரை மிகவும் கவனமாக இருக்கச் சொன்னார். பொதுவாகவே பெரியோர்களின் அறிவுரைகளை கேட்கும் அளவிற்கு இப்போதைய இளம் வயதுக்காரர்களுக்கு பொறுமை இல்லை, ஆனால் அறிவு நிறைய இருக்கிறதாகவே எண்ணிக் கொள்கின்றனர்.

''கவலைப்படாதீங்க அத்தை, அதெல்லாம் கவனமா இருப்பேன்''

யசோதையின் உறுதியாகத்தான் தென்பட்டாள். நாச்சியார் மீது அவளுக்கு நிறையவே நம்பிக்கை இருந்தது. உறவுகளை உடைத்து தனக்கென ஒரு வாழ்வு வாழ்வது என்பது இப்போதெல்லாம் எளிதாக நடந்தேறிக்கொண்டே இருக்கிறது.

''யசோ, பாமாவை ஒரு எட்டுப் பார்த்துட்டுச் சொல்லிட்டுப் போகலாம்னு இருக்கு, நீ என்கூட வர முடியுமா''

''அவ வீட்டில இருக்காளோ என்னவோ, என்னங்க அத்தை, பாமா மேல இத்தனை கரிசனம்''

''பேசின அந்த கொஞ்ச நேரத்தில மனசுக்கு நெருக்கமா உணர வைச்சிட்டா, விவசாயப் படிப்புதான் படிக்கிறா அவளுக்கு நம்ம ஊரு பிடிச்சி நம்ம ஊரிலேயே இருந்துட்டா விவசாயம் சம்பந்தமா நிறைய பண்ணலாம் அவ மனசுல என்ன இருக்கோ''

''அதை நீங்க கேட்கலையா அத்தை''

''உடனே எப்படி கேட்க முடியும், பட்டாம்பூச்சி பத்தி பேசவே சரியாப் போச்சு, அப்புறம் யோசிச்சிப் பார்க்கிறப்ப இப்படியெல்லாம் தோனுது''

''உங்களுக்குப் பையன் இருந்தா இந்நேரம் பாமாவே உங்க மருமகளா வந்து இருப்பா, இல்லையா அத்தை''

நாச்சியார் மிகவும் அமைதியானார். இந்த உலகில் திருமணம் பண்ணாமல் வாழ்தல் என்பது சற்று சிரமமான ஒன்றுதான். கல்யாணம் பண்ணலையா எனக் கேட்டே கல்யாணம் பண்ண வைத்து விடுவார்கள். அப்படியும் வேறு காரணங்கள் சொல்லி கல்யாணம் கட்டாமல் போனால் ஒரு கட்டத்திற்குப் பிறகு கல்யாணம் என்பது நடக்காமலே போய்விடும். கால சூழல் பலரை திருமண வாழ்வில் நுழைய விடாமல் தடுத்து விடுகிறது. நாச்சியார் போன்றோர் திருமணமே வேண்டாம் என சிறு வயதில் இருந்தே இருந்து விடுகிறார்கள். இதற்கு உடல்ரீதியான, மனரீதியான விளக்கங்கள் எனப் பல இருந்தாலும் அவரவரைப் பொருத்தே எல்லாம் அமைகிறது.

''என்னங்க அத்தை, பதில் காணோம்''

''நடக்காத கதையைப் பேசிப் பயன் இல்லைதானே யசோ, நான் மட்டும் பாமாவை பாத்துட்டு ஊருக்குப் போறேன்''

''சரிங்க அத்தை, பத்திரமா போய்ட்டு வாங்க''

நாச்சியார் பாமாவின் முகவரியை சரியாக கண்டுபிடித்து அவளது வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினார். பாமாவின் அம்மா ருக்மணிதான் வந்தார்.

''பாமா இருக்காங்களா''

''உள்ளே வாங்க, ஏன் வெளியே நின்னுட்டீங்க, அவ வர சாயந்திரம் அஞ்சு மணி ஆகிரும்''

''ஊருக்குப் போகனும், நாச்சியார் வந்தேனு பாமாகிட்ட சொல்லிருங்க''

''ம்ம், சொல்றேங்க''

நாச்சியார் பெருமாள்பட்டி வந்து சேர்ந்தபோது மாலை நான்கு மணி ஆகிவிட்டது. வீட்டிற்குச் சென்றுவிட்டு பூங்கோதையைப் பார்க்கச் சென்றார்.

''வாங்கம்மா, போன காரியம் எல்லாம் நல்லபடியா முடிஞ்சதா, பாப்பாத்தி என்னை நல்லாப் பாத்துக்கிட்டாங்க''

''ம்ம், தூத்துக்குடிக்கு போகனும், கொஞ்ச நாள் ஆகட்டும், அந்த பட்டாம்பூச்சி முட்டை எப்படி இருக்கு, வா பாக்கலாம்''

''முட்டையில் இருந்து சின்ன கம்பளிப்பூச்சி மாதிரி வந்து துளசி இலையை சாப்பிட ஆரம்பிச்சிருச்சிம்மா, அவர் செடியைப் பிடுங்கிப் போட்டுரலாம்னு சொன்னார், நான்தான் பாவம் இருக்கட்டும்னு சின்ன வேலி கூட போட்டு வைச்சிருக்கேன்மா''

பூங்கோதையை தனது இடுப்பைப் பிடித்தபடி மெதுவாக நடந்து வந்து காட்டினாள். சிறு பூச்சி ஒன்று துளசி இலைகளைத் தின்று கொண்டிருந்தது.

''கோதை, எந்த ஒரு உயிருக்கும் நீ தீங்கு பண்ணக்கூடாதுனு நினைக்கிற பாரு அந்த நல்ல மனசுக்கு என்னோட நன்றி, அந்த பட்டாம்பூச்சி எதுவும் வந்துச்சா''

''தினமும் காலையில இந்த துளசி இலை பக்கத்தில வந்து துளசி இலையை பறந்தபடியே பார்க்கும் அப்புறம் என் மேல வந்து கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டுப் போகும்''

''கோதை இந்த உலகத்துல படைக்கப்பட்ட எல்லா உயிர்களும் அன்புக்கு கட்டுப்பட்டுத்தான் இருக்கும், சில உயிர்கள் நம் மேல நிறைய நேசம் வைச்சிருக்கும், அது போல சில உயிர்கள் மேல நாம நேசம் வைச்சிருப்போம், இந்த பட்டாம்பூச்சிக்கு உன்னை நிறையவே பிடிச்சி இருக்கு''

''ஆமாம்மா அதான் அவர் சொன்னப்ப கூட எனக்கு அதை கலைச்சி விட மனசு வரலை, நம்ம குழந்தை வளருற மாதிரி அது வளர்ந்து வருது''

''பட்டாம்பூச்சியா வர இன்னும் மூணு வாரம் ஆகும், உனக்கும் குழந்தை பிறந்துரும், நீ செக்கப் பண்ணவே போகலையே கோதை, இப்ப இருக்க உலகம் மருந்து, மாத்திரை, ஸ்கேன் அப்படினு போகுது, உனக்குத் தோனலையா, பிள்ளையாவது ஆஸ்பத்திரில போய் பெத்துக்கோ, கிராமம்தானு நீபாட்டுக்கு அந்தக் காலத்தில மாதிரி வீட்டில பெத்துக்காத''

''சரிம்மா, அவரும் அதான் சொல்லிட்டு இருக்காரு, ரொம்ப வருசம் கழிச்சி உண்டானதால எதுவும் பாக்க வேணாம்னு அப்படியே இருந்துட்டேன்''

''என்ன கோதை சின்ன குடை மாதிரி மேல கட்டி இருக்க, மழை வந்து ஏதாவது பண்ணிரும்னா, தனக்கு என்ன என்ன பாதுகாப்பு பண்ணனுமோ அதை இயற்கை மூலமாவே உயிர்கள் பண்ணிக்கிரும்''

நாச்சியார் சொன்னதும் பூங்கோதை மெல்லிய புன்னகை செய்தாள். தான் தாய் ஆகப்போகிறோம் எனும் ஒரு பேராவல் இந்த உலக உயிர்கள் மீது எல்லாம் தாய்மையை காட்டத்துவங்குமோ எனத் தெரியாது. பூங்கோதை காட்டத்துவங்கி இருந்தாள்.

நாச்சியார் பெருமாள் கோவிலுக்குச் சென்று வணங்கிவிட்டு பரந்தாமனிடம் சொன்னார்.

''இந்தக் கோவில் பக்கத்திலேயே ஒரு பள்ளிக்கூடம் தொடங்கலாம்ல பரந்தாமா''

''அம்மா நல்ல யோசனை, அய்யாகிட்ட கேட்டுப் பாருங்க, வேணாம்னா சொல்லப் போறாரு''

''நிறைய யோசிக்கிறாரு''

''இன்னொருதடவை முயற்சி பண்ணிப் பாருங்கம்மா''

சரி என சொல்லிவிட்டு அங்கேயே சில மணி நேரங்கள் அமர்ந்து இருந்தார் நாச்சியார். கோவிலுக்கு வந்து செல்வோர் இவரையும் வணங்கிச் சென்றார்கள். மனிதர்கள் பிறர் போற்றும்படி வாழ்தல் பெரும் தவம்.

பாமா, நாச்சியார் வந்த விசயத்தை தனது அம்மா மூலம் அறிந்து கொண்டாள். தன்னைத் தேடி வந்தவரை சென்று பார்க்க வேண்டும் எனும் ஆர்வம் உண்டானது. வருகின்ற சனிக்கிழமை பெருமாள்பட்டிக்கு போய் வர அனுமதி கேட்டதும் அவளது அம்மா எதுவும் மறுக்காமல் அனுமதி தந்தார்.

நம்மை புரிந்து கொள்வதோடு, நமது எண்ணங்களுக்கு இடையூறுகள் தராத உறவுகள் அமைவது பேரின்பம்.

(தொடரும்)