Wednesday 2 June 2010

எனது கவிதையை தேர்ந்தேடுக்கமாட்டீர்கள்தானே சிவராமன்

எனக்கு ஜ்யோவ்ராம் சுந்தர், சிவராமன் நடத்துகிற  உரையாடல் அமைப்பு மேல ஒரு தனி மதிப்பு உண்டு. இருவரும் தமிழுக்கு ஆற்றிவரும் தொண்டு அதுவும் முக்கியமாக  சிறுகதை பட்டறை பற்றி அறிந்தபோது சந்தோசமாக இருந்தது.

சிறுகதைப் போட்டியில், கவிதைப் போட்டியில் கலந்து கொண்டேன். வரும் ஜுன் 21ம் தேதி போட்டி முடிவுகள் வெளியாகப் போவதாக புது அறிக்கை அறிந்தேன். போட்டி முடிவுகள் எப்பொழுது வரும் என ஆர்வமுடன் எதிர்பார்ப்பவனில் நானும் ஒருவன். 
 
நான், கோவியார் மற்றும் சுரேஷ் என்பவரை மட்டுமே வலைப்பதிவு எழுத வந்ததன் மூலமாக சந்தித்து இருக்கிறேன்.  எனக்கு யாரையும் தனிப்பட்ட முறையில தெரியாது. அதனால் ஒருத்தொருக்கு ஒருத்தர் வசைபாடி எழுதுவதை படிக்கும்போது எனக்கு வேப்பங்காய் போலத்தான் இருக்கும். யாரையும் தாக்கி எழுதுவது எனக்கு சுத்தமாகப் பிடிப்பது இல்லை. இதில்  ஜாதீயம், பெண்ணீயம், ஆணாதிக்கம், பின் நவீனத்துவம், வெங்காயம் இது எல்லாம் எனக்கு சுத்தமாக  புரிவது  இல்லை. 
 
ஒரு  ஆண் தவறாக நடந்து கொண்டால் அது ஆணாதிக்கமா? ஒரு ஆணோ, பெண்ணோ தப்பு செய்தால் அது தப்பு செய்த ஆணின், பெண்ணின் தனிப்பட்ட பிரச்சினை. அதுக்கு என்ன அடைமொழி வேண்டி இருக்கிறது. எதற்கும் ஒருதரம் ஒரு பொண்ணு பேசற பேச்சா இது அப்படிங்கிற இடுகையை வாசிச்சிட்டு வாங்க. எழுதத் தோணினா எப்படி இருக்கும்னு தெரியனுமா  பெண்களை கண்டாலே எரிச்சல் அப்படிங்கிற இடுகையும் ஒரு பார்வை பாருங்க. தனக்கென போராடாத சமூகம் இருக்கும் வரை அமைப்புகள் ஒன்றும் சாதித்துவிட முடிவதில்லை.தன்னைத் தானே உயர்த்திக் கொள்ள முயற்சிக்காத மனிதன் எந்த உதவி இருப்பினும் உயரவே மாட்டான். 
 
எனக்கு சிவராமன் வினவு தளத்தில் கட்டுரை எழுதிக் கொடுத்தார் என்பதெல்லாம் பிரச்சினை இல்லை. எவரேனும் எழுதி இருந்தாலும் கூட அந்த கட்டுரையில் தனிப்பட்ட முறையில் பலரை தாக்கி இருப்பதுதான் எரிச்சலாக இருக்கிறது. இதை சிவராமன் நான் வரிக்கு வரி அப்படித்தான் எழுதி இருப்பேன் என வாக்குமூலம் தந்திருப்பது எரிச்சலை இன்னும் அதிகப்படுத்தியது. அளவுக்கு மீறிய  எரிச்சல் நர்சிம் எழுதியதை வினவு தளத்தில் படித்தபோது இருந்தது.  இருப்பினும் இவர்கள் எல்லாம் பலருக்கும் தெரிந்தவர்கள், பலராலும் வாசிக்கப்படுபவர்கள் என்பதால்தான் பிரச்சினை.  இப்படி தனிப்பட்ட முறையில் தாக்கி எழுதுபவர்களை கடைநிலை மனிதர்கள், இழிநிலை மனிதர்கள் என மொத்தமாக சொல்லிவிட்டுப் போய்விடுவதில் இருக்கும் சுதந்திரம் தனிதான். அப்படி எழுதுவதால் எனக்குள் இருக்கும் ஆதங்கம் தீரும், ஆனால் இவர்கள் மாறுவார்களா? ஒரு மாதமோ, ஒரு வருடமோ, ஒரு வாரமோ ஏதாவது பிரச்சினை வரும், அப்போதும் பாருங்கள். எவர் எவர் திருந்தினார்கள் என தெரியும்.

உரையாடல் அமைப்பின் தலைவரான சிவராமன் அவர்களே, இதோ இந்த கவிதை போட்டிக்கு அனுப்பப்பட்ட கவிதை. நிச்சயம் பரிசுக்குரிய கவிதையாக தேர்ந்தெடுக்கமாட்டீர்கள் என நம்புகிறேன். 
 
அரசியல்வாதிகள்

வெட்டிப் பேச்சு, வீண் எழுத்து
சட்டி சட்டியாய் நிறைந்திருக்கும்

அதை செய்தோம், இதை செய்தோம்
கதை சொல்லி காலம் கடத்தும்

ஆதங்கங்கள் நிறைய கொண்டு
வாதங்கள் செய்வது மட்டும் உண்டு

நாட்டின் நிலைமையை கைகாட்டுவோமே
வீட்டின் நிலைமையை பார்த்தோமா

உற்ற உறவுகளையும், பெற்ற நட்புகளையும்,
கற்ற கல்வியையும், சிற்றறிவுடன்
விற்ற பெருமையும் நம்மை சார்ந்ததாம்

கட்சியில்லை, கொடியுமில்லை
கூட்டம் கூட்டமாய் அலைந்து திரிவோம்
மாட்சியில்லா மந்தைகளாய் மாய்ந்தும் போவோம்

எத்தனை வாக்குறுதிகள், எத்தனை உறுதிமொழிகள்
பித்தனைப் போல், எத்தனைப் போல்
வருடவேஷம் கட்டி நீசமனம் கொண்டு
திருடகோஷம் போடும் நாமும் அரசியல்வாதிகளே.

Tuesday 1 June 2010

கடவுளும் சிட்டுக்குருவியும்



உன்னைப் பிடித்து
கூண்டில் அடைக்க
ஒருவரும் வரமாட்டார்

மரத்தின் இலையின் நிறமாய் உடல்
மரத்தின் கிளையாய் உன் தலை
மரத்தின் கனியாய் உன் மூக்கு

வெட்ட வெளியில் நின்று
உன்னை மறைத்துக் கொள்ளும்
உவமை கடவுளுக்கும் ஆகுமோ?

தமிழ் பதிவர்கள்

ஊரு வம்பை விலைக்கு வாங்குவது எப்படி தெரியுமா?

இரண்டு நபர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினையை உலக பிரச்சினை போல உருவகம் செய்து  அதில் உலை வைத்து குளிர் காயும் யுக்தி பற்றி அறிய வேண்டுமா?

எழுதப்படும் எழுத்துகள் எப்படியெல்லாம் பல கோணங்களில் பார்க்கப்படும் என்பதையும் எத்தனை அருமையாக ஆராய்ச்சிகள் செய்து பல விதங்களில் ஒரு விசயத்தை சிந்தித்து எழுதும் கலை பற்றி அறிய வேண்டுமா?

முக்கியமாக வெளிநாட்டில் வாழும் தமிழ் வாசகர்களே, உங்களுக்கு தமிழில் எத்தனை கேவலமான வார்த்தைகள் இருக்கின்றது என்பதை தெரிந்திட வேண்டுமா?

நகைச்சுவை பற்றி ஒரு எச்சரிக்கை பதிவை வெளியிட்டு இருக்கிறேன். அதே நகைச்சுவையால் எப்படியெல்லாம் மன உளைச்சலுக்கு உள்ளாக நேரிடும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?

எழுதுவதன் மூலம் உங்கள் மொத்த குடும்பத்தையும் துன்பத்தில் சிக்க வைத்திடும் நிலை அறிய வேண்டுமா?

இப்படி எதிர்மறை நிலைகள் மட்டுமே எழுத்தாகிப் போனதை கண்டு கண்ணீர் வடிக்க வேண்டுமா?

எதற்கெடுத்தாலும், தேசிய பார்வையை ஒழித்துவிட்டு ஜாதீய பார்வையுடன் அணுகும் முறை தெரிந்து கொள்ள விருப்பமா?

நாம் அனைவரும் ஒன்று என்று ஒற்றுமையை நிலைநாட்டுவதாய் கூறிக் கொண்டு முதுகில் அடிகள் தந்திடும் கலை அறிய விருப்பமா?

மதச்சார்பற்ற கொள்கைகளை முன்னிறுத்தி மனிதர்களை கீழ்மைபடுத்தும் நிலையை அறிய வேண்டுமா?

வாருங்கள் உலக தமிழ் வாசகர்களே.

நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் மிக மிக சின்ன காரியம் தான். தமிழ் திரட்டிகளை ஒரு முறை பார்வையிட்டால் போதும். அங்கே காணப்படும் பதிவுகளை படியுங்கள். ஆனால் அதைப் பற்றி ஒன்றும் எழுதி விடாதீர்கள். மீறி எழுதினால் நீங்கள் ஊர் வம்பை விலைக்கு வாங்கி விட்டீர்கள் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

இதெல்லாம் தேவையில்லை, பல நல்ல விசயங்கள் தெரிந்து கொள்கிறோம் என நினைத்தால் புற்களுக்கு மத்தியில் ஒரு சில நெற்கதிர்கள் தென்பட்டுத்தான் கொண்டிருக்கும். அதை தேடி கண்டு கொள்ளுங்கள்.

வாசகர்களாக இருப்பதுதான் மிகவும் சௌகரியம். பதிவர்களாகவோ, எழுத்தாளர்களாகவோ நீங்கள் மாற நினைத்தால் மனதை திடப்படுத்திக் கொள்ளுங்கள். எவரேனும் உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் திட்டிக் கொண்டிருக்கலாம், அதே வேளையில் வாழ்த்திக் கொண்டும் இருக்கலாம். திட்டுகளை புறந்தள்ளி, வாழ்த்துகளை மட்டுமே தனதாக்கிக் கொள்ளும் திறன் இருப்பின் நீங்கள் நிலைத்து நிற்கலாம்.

இந்த பதிவுலகத்துக்கென பிரத்தியோகமாக எழுதப்பட்ட பதிவுகள் சில உள்ளன. அவை

விவகாரமான எழுத்தாளர்கள் 

யாரு நல்லவங்க யாரு கெட்டவங்க 

கருத்துகளும் அதன் சுதந்திரமும் 

ஒரு வலைப்பூவில் பதிவராக இருப்பது என்பது? 

எழுத்துலகில் அரசியல் செய்பவர்களுக்கும், நட்பினை கொச்சைபடுத்துபவர்களுக்கும் எனது கண்டனங்களை தெரிவித்து கொள்கிறேன். இனிமேலும் ஏதேனும் பிரச்சினை வரும்போது நான் குரல் கொடுக்கவில்லையென கருதாதீர்கள். எனது பதிவுகள் அதற்காக பேசி முடித்துவிட்டன

தனித்தனி குழுவாக செயல்படுவதை அறவே தவிர்த்துவிடுங்கள். உங்கள் நட்புக்குரியவரோ, மற்றவர்களோ பிரச்சினையில் இருந்தால் அதை எழுதி பெரிதுபடுத்தி ஆதரவு தருகிறேன் பேர்வழி என களங்கப்படுத்த வேண்டாம். மின்னஞ்சல் உண்டு, தொலைபேசி உண்டு. பேசி தீர்த்து கொள்ளும் விசயங்களை எழுதி சிறுமைபடுத்தாதீர்கள்.  சம்பந்தப்பட்டவர்கள் அவரவர் பிரச்சினையை தீர்த்துக் கொள்வார்கள். அவர்கள் எவரும் குழந்தைகள் அல்ல.

எழுதுவதால் பிரச்சினைகளில் சிக்குண்டு தவித்து என்ன செய்வதென புரியாமல் எழுத்துலகைவிட்டு விலகும் பதிவர்களுக்கு எனது வருத்தங்களை தெரிவித்து கொள்கிறேன்.

தமிழில் எழுதி, தமிழை சிறந்திட செய்யும் அனைவருக்கும் எனது நன்றிகளும், வணக்கங்களும்.