Friday 4 June 2010

வேடிக்கை மட்டுமே பாருங்கள்

முதன் முதலில் 1998 நவம்பர் மாதம் இலண்டனில் வந்து இறங்கிய நாள். விமான பயணம் ஒத்துக்கொள்ளவில்லை. காது இரண்டும் அடைத்துக் கொண்டது. நன்றாக காய்ச்சல் வந்து சேர்ந்தது. உடல்நிலை சரியாக மூன்று நாட்கள் மேலாகிவிட்டது.

நான் வந்து இறங்கிய இடத்துக்கும், நான் நமது ஊரில் வாழ்ந்த இடத்துக்கும் எந்தவிதமான வித்தியாசமும் தெரியவில்லை. சுற்றுலா பயணிகள் போலவே வெள்ளைக்காரர்கள் தெரிந்தார்கள். எங்கு பார்த்தாலும் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் மற்றும் இலங்கை தமிழர்கள். 

கோவில்கள்  தென்பட்டன. மசூதிகள் தென்பட்டன. அங்கே மனிதர்கள் மிக மிக அதிகமாகவே தென்பட்டார்கள். தேவாலாயங்கள் 'தேமே' என பள்ளிக் கூடங்களாகவும், கராத்தே பயிலும் இடங்களாகவும் தம்மை மாற்றிக் கொண்டிருந்தன. 

எனது சொந்த சகோதரிகள், சகோதரர்கள் அதே இடத்தில் தான் வசித்து வந்தார்கள். சில நாட்கள் பின்னர் சாலையில் நடந்து செல்கிறேன். வழியில் சொந்த சகோதரி வருகிறார். அவரிடமிருந்து ஒரு புன்னகை. பேசுவதற்காக அருகில் செல்கிறேன். எதுவும் பேசாமல் செல்கிறார். எனக்கு மனது வலிக்கிறது. 

ஊரில் நான் தெருவில் நடந்து வீட்டுக்கு சென்றடையும் முன்னர் என்னைப் பார்த்து இப்போது தான் வருகிறாயா என ஒவ்வொரு வீட்டு வாசலில் அமர்ந்திருக்கும் பெண்மணிகள், ஆண்கள் என அனைவரின் அன்பான உபசரிப்புகள் மனதில் அந்த வலியின் ஊடே வந்து போகிறது. எப்படி இப்படி பேசாமல் செல்லலாம் என அன்று இரவே என் சகோதரி வீட்டுக்கு சென்று சண்டையிடுகிறேன். அதற்குப்பின்னர் என்னை சாலைகளிலோ எங்கோ பார்ப்பவர்கள் ஓரிரு வார்த்தை பேசித்தான் செல்கிறார்கள். நான் திட்டிவிடுவேன் எனும் அச்சம் கூட இருக்கலாம். அன்பை பிச்சையாகவாது  போடு என்பதுதான் நான் கண்கள் கலங்கி கற்றுக் கொண்ட வாசகம். 

நாற்பது வருடங்கள் முன்னர் ஒரே ஒரு தமிழ் பலசரக்கு கடை தான் இருந்தது என நினைக்கும் போது பிரமிப்பாக இருக்கிறது. அந்த இடத்தில் எங்கு பார்த்தாலும் இன்று தமிழ் கடைகள். சரவண பவன், வசந்த பவன் என பெயர் தாங்கிய உணவு கடைகள். பழக்கமில்லாதவர்கள் எதிரெதிர் பார்த்துக் கொண்டால் நமது ஊரைப் போலவே இங்கே சிரிப்பது இல்லை, பேசுவது இல்லை. 

மெல்ல மெல்ல வருடங்கள் செல்கிறது. ஒரு முறை ஆய்வகத்தில் இருந்து வீடு நோக்கி வருகிறேன். இரவு எட்டு மணி இருக்கும். சாலையில் ஒரு வாகனம் முன்னால் நின்று இருக்க அதை விலகி போகச் சொல்லி பின்னால் இருக்கும் வாகனத்தில் இருந்தவர் எச்சரிக்கை ஒலி எழுப்புகிறார். இங்கே வாகனங்களில் ஒலி எழுப்பவது மிகவும் அபூர்வம். முன்னால் இருப்பவர் நகர மறுக்கிறார். பின்னால் இருப்பவர் வாகனத்தை நிறுத்தி முன்னால் இருப்பவருடன் சண்டை போடுகிறார். வழியில் செல்பவர்கள் எல்லாம் அதை வேடிக்கை பார்த்தவண்ணம் நிற்கிறார்கள். அந்த சண்டையை விலக்கிவிடுவதற்காக நான் செல்கிறேன். ஒரு சின்ன பிரச்சினை. முன்னவர் விட்டு கொடுத்தால் பின்னவர் சென்று விடலாம். அங்கே இருந்த எனக்கு தெரிந்த நபரிடம் சொல்கிறேன். 'பேசாம வீட்டுக்கு போ' என்கிறார். 

வீட்டில் வந்து விபரங்கள் சொல்கிறேன். உயிர் தப்பி வந்தாய் என்றார்கள். விலக்கிவிட சென்று இருந்தால் அவர்கள் இருவரில் எவரிடமாவது கத்தி இருந்தால் என்ன செய்வாய் என்கிறார்கள். மனதில் என் மரணம் பற்றிய பயம் இல்லை ஆனால் மூர்க்கத்தனமான எண்ணங்கள் உடைய மனிதர்கள் பற்றிய பயம் வந்தது. காவல் அதிகாரிகள் கடமையை செய்யட்டும் என்றே நினைத்தேன். அதன் காரணமாக  சமூகத்தின் மீதான அக்கறை தொலைந்து போனது. அவரவர் அவரவரை காத்து கொள்ளும் தைரியம் வரட்டும் என்றே ஒரு எண்ணம் வந்து சேர்கிறது. 

சில வருடங்கள் கடந்து செல்கிறது. வீட்டுக்குள் திருட வந்தவனை தாக்கியதற்காக அந்த வீட்டுக்காரர் மீது வழக்கு தொடரப்பட்ட செய்தி படிக்கிறேன்.  திகைத்தேன். அதை காரணம் காட்டி என்னால் ஒரு கதை எழுத முடிந்தது. இந்த நாட்டில் இருக்கும் மனித உரிமை அமைப்புகள் மீது வெறுப்பு வந்து சேர்கிறது. இப்பொழுது சட்டம்தனை கொஞ்சம் மாற்றி இருக்கிறார்கள். அளவுக்கு அதிகமாக திருடனை தாக்க கூடாது என்பதாக. திருடன் உருவாவதில் அரசுக்கும் பங்குண்டு என்பதால் கூட இருக்கலாம். 

சமூக நல அமைப்புகளை பார்வையிடுகிறேன். அங்கே நடக்கும் அரசியல் என்னை விலகி போ என சொல்கிறது. உதவும் மனப்பானமையைவிட பெயர் வாங்கும் மனப்பான்மை பெரிதாகத் தெரிகிறது. கொடுக்கப்படும் பணம் பற்றிய அக்கறை எல்லாம் இல்லை. சமூக நல அமைப்புகள் மீது எரிச்சல் அடைகிறேன். ஏதோ ஓரளவுக்கு என எதையாவது செய்கிறார்களே என என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. உண்டு கொழிக்கும் கூடராமாகவே தென்படுகிறது. எவருக்கு இருக்கிறது சமூக அக்கறை என்றே தோன்றுகிறது. 

வருடங்கள் செல்கிறது. சாலையில் நடந்த பிரச்சினை ஒன்றினை விலக்கிவிட முனைந்த ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு இறந்து போகிறார் எனும் செய்தி படிக்கிறேன். மனதில் கோபம் கோபமாக வருகிறது. அந்த இருவரும் முறைகேடான மனிதர்கள் என்பதை மறந்து அவர்களை விலக்கி விட முனைந்த அந்த உயிர் பரிதாபமாக போனதில் அனைவரும் 'உச்' கொட்டுகிறார்கள். இறந்து போன மனிதரின் வீரத்திற்கு பாராட்டு என்கிறார் உயர் அதிகாரி. பேசாமல் போகவேண்டியதுதானே என்கிறார்கள், வேடிக்கை பார்க்கும் மனிதர்கள்.

வேடிக்கை பார்க்கும் மனிதர்களால் இவ்வுலகம் புரட்சி என எதுவும் கண்டதில்லை. வெறும் அறிக்கைகள் மூலம் புரட்சியாளர்கள் ஒருபோதும் விளம்பரம் தேடிக் கொண்டதில்லை. மக்களுக்கு எதிராக நடக்கும் விபரீதங்களை தெருக்களில் இறங்கி எதிர்த்து போராடிய மனிதர்களால் மட்டுமே புரட்சி செய்ய முடிந்தது.  அந்த மனிதர்களால் மட்டுமே வேடிக்கை பார்க்கும் மனிதர்கள் சந்தோசமாக வாழ முடிகிறது. இதற்காக உயிர் துறந்த பல புரட்சி வீரர்களுக்கு வீர வணக்கங்கள். 

மொத்த மனிதர்களின் நலனுக்காக மனதில் உறுதியும், உண்மையும், சத்தியமும் நிறைந்த புரட்சி செய்யும் மனிதர்கள் என அவ்வப்போது தோன்றி கொண்டேதான் இருப்பார்கள். எனவே சந்தோசமாக வேடிக்கை மட்டுமே பாருங்கள். விளம்பரம் தேடும் மனிதர்களிடம் இருந்து விலகி நில்லுங்கள். 

Thursday 3 June 2010

அடியார்க்கெல்லாம் அடியார் - 15


மறுதினம் கல்லூரியில் ஆண்டுவிழா அறிவித்து இருந்தார்கள். மதிய வேளையில் வைஷ்ணவி கதிரேசனைத் தேடி வந்தாள். வைஷ்ணவியைக் கண்ட கதிரேசன் முதலில் புரியாமல் விழித்தான். இத்தனை மாதங்களாய் தன்னுடன் ஒரு வார்த்தைக்கூட பேசாதவள் தன்னைத் தேடி வந்தது அவனுக்கு ஆச்சரியம் அளித்தது. வைஷ்ணவியிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான் கதிரேசன். அவளும் அவளை அறிமுகப்படுத்திக் கொண்டாள். 


''என்ன விசயமா திடீருனுப் பார்க்க வந்திருக்கீங்க'' என்றான் கதிரேசன். அதற்கு வைஷ்ணவி ''மதுசூதனன் எங்க காதலை உங்ககிட்ட சொன்னதா சொன்னான், அதான் இதை காலேஜ்ல எல்லாம் சொல்லிட்டு இருக்க வேணாம்னு உங்ககிட்ட நானே நேரா சொல்லிட்டுப் போக வந்தேன்'' என்றாள் வைஷ்ணவி. ''நீங்க இரண்டு பேரும் நடந்துக்கிறதுலதான் இருக்கு, நான் சொன்னாலும் சொல்லாட்டாலும் காலேஜ்க்குத் தெரிஞ்சி போயிரும்'' என்றான் கதிரேசன். ''எனக்கும் தெரியும், எங்க சீனியர் இரண்டு பேருக்கு பிரின்சிபால் கடுமையா வார்னிங் கொடுத்திருக்காரு, அதான் நீ மதுசூதனன் மாதிரி எல்லார்கிட்டயும் சொல்லிட்டு இருக்காதே'' என்றவள், ''நீ சமண சமயம் பத்தி ரொம்பப் படுத்துறியாமே'' என்றாள் மேலும். ''ஓ அதையும் சொல்லிட்டானா அவன்'' என்றான் கதிரேசன். ''இன்னைக்குதான் சொன்னான், நான் பேச்சுப் போட்டியில கலந்துக்கப் போறேன், தலைப்பு கேட்காதே'' என்றாள். ''ஓ அப்படியா நானும் கலந்துக்கனும், இனிமே அவனை தொந்தரவு செய்யலை என்கிட்டயும் தலைப்பு கேட்காதே'' என்றான் கதிரேசன். 


''அவன்கிட்ட இனிமே சமண சமயம் பத்தி கேட்காதே, சமண சமயம் பத்தி எதுவும் தெரியனும்னா என்கிட்ட வந்து கேளு நான் உனக்கு சொல்றேன்'' என்றாள் வைஷ்ணவி. கதிரேசன் அதிர்ச்சியுடன் பார்த்தான். ''எங்க தங்கி இருக்கீங்க?'' என்றான் கதிரேசன். ''உங்க மாதிரி வெளியிலே வீடு எடுத்தா எங்களால தங்க முடியும், ஹாஸ்டலுலதான் தங்கி இருக்கோம், வீடு எடுத்து தங்கினா வீட்டுல, ஊருல நாலுவிதமா பேசித் தள்ளிரமாட்டாங்க'' என்றவள் ''சரி நேரமாகுது நான் சொன்னதை ஞாபகம் வைச்சிக்கோ, சாயந்திரம் பேசலாம்'' என்று கிளம்பினாள். கதிரேசனுக்கு தான் நேற்று பாடிய பாடல் மனதில் தாளமிட்டது.


''காலம் தொடங்கும் முன்னரே மங்கையும் மனதில்
கோலம் போட்டதன்காரணம் சொல்சிவனே''


சமண சமயத்தைப் பற்றி கேள் எனச் சொல்லி செல்கிறாளே. இவளை நம்பி இந்த விசயத்தைப் பற்றி பேசலாமா? பேச்சுப் போட்டியில் இதே விசயத்தைப் பேசினால் தன்னிடம் இருந்து திருடியதாக சொல்லிவிடக்கூடும் என நினைத்தான்.


அவ்வாறு எண்ணியவன் மனதில் கல்லூரியில் காதல் புரியக்கூடாதா? என்ன கொடுமை? தனி மனித சுதந்திரத்தில் அதிகம் தலையிடுகிறாரே இந்த சிவநாதன் என யோசித்தான் கதிரேசன். ஒழுக்கம் என்பது தானாக வரக்கூடியது. எதையெல்லாம் ஒழுக்கம் கெட்ட செயல் என நினைக்கிறார் அவர் என கதிரேசன் தனக்குள் பலமாக சிந்திக்க ஆரம்பித்தான். முதல் வேலையாக சமண சமயத்தைப் பற்றி விரைவில் நடக்க இருக்கும் கல்லூரி விழா பேச்சுப்போட்டியில் பேசுவது என தனது பெயரை பதிவு செய்ய சென்றான் கதிரேசன். 


தலைப்பு கேட்டார்கள். 'சமண சமயமும் அன்பே சிவமும்' என்றான். பெயரை பதிந்தவர் ''நீ போய் பிரின்சிபாலைப் பார்த்துட்டு வா'' என்றார். ''யார் யாரை பிரின்சிபாலைப் பார்க்கச் சொல்லி இருக்கீங்க'' எனக் கேட்டான் கதிரேசன். ''ம் இப்படி ஏடாகூடாம தலைப்பு வைக்கிறவங்களை'' என முறைத்தார் அவர். ''நல்ல தலைப்பு வைச்சி ஏடாகூடாம பேசினா என்ன பண்ணுவீங்க'' என திரும்பவும் கேட்டான் கதிரேசன். ''நீ விதிமுறையெல்லாம் படிக்கலையா, இந்தா நோட்டீசு'' என நீட்டியவர் ''இந்தா இந்த தலைப்பு சொன்னவனையும் தான் நான் போய் பிரின்சிபாலைப் பார்க்கச் சொல்லி இருக்கேன்'' என ஒரு தலைப்புக் காட்டினார். 'காதலும் கடவுளும் கத்தரிக்காயும்' என இருந்தது.


தலைப்பைப் பார்த்த கதிரேசன் சத்தம்போட்டு சிரிக்கத் தொடங்கிவிட்டான். ''ஒழுங்கா அவர் வீட்டுக்குப் போறதுக்குள்ள போய் பார்த்துட்டு சம்மதம் கேட்டுட்டு வா'' என சொன்னார் அவர். ''வேற தலைப்பைச் சொல்றேன்' என்றான் கதிரேசன். ''வேறு தலைப்புனாலும் பேசறது ஒன்னுதானே, போ. சும்மா போய்ட்டு பார்த்தேனு வராதே, அவரோட கையெழுத்துப் போட்டுத் தருவாரு'' என்றார் அவர். ''பேசறதுக்குக் கூடவா'' என்றான் கதிரேசன். ''தேவையில்லாம பேசிப் பேசியே இந்த தேசம் உலகம் சுக்கு நூறாக் கிடக்கு, அடுத்தவங்களுக்கு வழியை விடு'' என கதிரேசனை தள்ளினார். 


கதிரேசன் சிவநாதனைப் பார்க்கச் சென்றான். அங்கே ஐந்து பேர் வரிசையாக நின்று கொண்டிருந்தார்கள். வரிசையின் முதலில் வைஷ்ணவி நின்று கொண்டிருந்தாள். அவளிடம் சென்ற கதிரேசன் ''என்ன தலைப்பு இப்போ சொல்லு'' எனக் கேட்டான். ''வரிசைக்குப் போ மச்சான்'' என்றான் பின்னாலிருந்தவன். ''வந்து இருபது நிமிசம் ஆச்சு, 'நாமமும் திருநீரும், தலையைச் சுத்திப் போடு இதுதான் தலைப்பு' என்றாள் வைஷ்ணவி. ''வேற தலைப்பேக் கிடைக்கலையா' என தலையில் அடித்துக் கொண்டு பின்வரிசைக்கு சென்றான் கதிரேசன். முதல் வருடத்தில் சேர்ந்தவர்கள்தான் அனைவரும் எனபதை அறிந்து கொண்டான்.


சிவநாதன் அறையைவிட்டு அவரது உதவியாளர் வெளியே வந்தார். இந்த தலைப்பு வைச்சவங்க நான் சொல்ற வரிசைப்படி ஒவ்வொருத்தரா உள்ளே போங்க என வாசித்தார்.


நாமமும் திருநீரும் தலையைச் சுத்திப் போடு
காதலும் கடவுளும் கத்தரிக்காயும்
நம்ம கல்லூரி ரொம்ப மோசம்
காசுக்கு கல்வியா, லகரம் தட்டுது
சமண சமயமும் அன்பே சிவமும்


வைஷ்ணவி சிவநாதனின் அறைக்குள்ளே சென்றாள். அங்கு தைரியமாக நிற்பவர்களைக் கண்டு கதிரேசனும் தைரியம் கொண்டான். 


(தொடரும்)

நிலை கொள்ளாமல்

இறந்துவிடுவோம் என்ற எண்ணமும் அந்த இறப்பிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ளக் கூடிய வேட்கையும் தீபக்கின் மனதில் ஓடிக் கொண்டு இருந்தது. எங்கு பார்த்தாலும் தண்ணீர்.

தண்ணீரில் மூழ்கிக் கொண்டு இருந்த அந்த வானம் தொடும் கட்டிடத்தின் உச்சியில் தண்ணீர் முட்டிச் சென்று கொண்டு இருந்தது. கடலின் தண்ணீர் அளவானது இப்படி உயரும் என்று ஒருவரும் கனவில் கூட நினைத்துப் பார்த்து இருக்கமாட்டார்கள்.

'என்னடா இங்கேயெ உட்கார்ந்துட்டு இருக்க, கிளம்புடா' சக நண்பன் சதீஸ் தீபக்கை அவசரப்படுத்தினான். தீபக் வாய்மூடி எதுவும் சொல்ல முடியாதவனாய் இருந்தான். தண்ணீரில் மீன்களாக மனிதர்கள்.

எவரும் இந்த தண்ணீருக்கு தப்பி இருப்பார்களாக தெரியவில்லை.  நிலமாக இருந்த இந்த பூமி இப்போது ஒரே தண்ணீராய். எந்த கரையை எப்படி காண்பது? தண்ணீரில் நீந்த ஆரம்பித்தான் தீபக்.

எந்த திசை நோக்கிச் செல்வது? நீச்சல் தெரியாதவர்கள் நீச்சல் அடிக்காமலே மிதந்து கொண்டு இருந்தார்கள். எப்படி இவ்வளவு பெரிய நிலப்பரப்பினை தண்ணீர் தனக்குள் அடக்கிக் கொண்டது.

நீர்வாழ் உயிரினங்கள் என்ன நடந்தது என அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தன. தண்ணீரில் நாம் உபயோகித்த நச்சுப்பொருட்கள் கலந்ததால் மிச்ச மீதி எதுவும் இன்றி எல்லாம் தண்ணீருக்கு இரையாகி இருந்தன.

'கடவுளே எப்படியாவது காப்பாற்று, எங்காவது ஒரு நிலப்பரப்பினை கண்களுக்கு காட்டு' என வேண்டிக் கொண்டே தொடர்ந்து நீந்தினான். அனைவரும் அடங்கிப் போய்விட்டார்கள் என்று மட்டும் தெரிந்தது, எங்கே சதீஸ்? எங்கே தீபா? எங்கே சுற்றமும் குலமும்? சதீஸும் அடுத்த பத்து நிமிடத்தில் தண்ணீரினால் ஆட்கொள்ளப்பட்டான்.

எதிர்பட்ட உயிரற்ற சடப்பொருள்களை விளக்கிக் கொண்டு இலக்கின்றி நீந்தினான், எஞ்சிய உயிர் என்னது மட்டும்தானா? தீபக்கின் கைகள் கால்கள் அலுப்பைத் தந்தன. வயிர் பசிக்க ஆரம்பித்தது. இந்த தண்ணீரைக் குடிப்பதா?

கரைகள் இல்லா நீர்பரப்பு! இனி இங்கு வாழ முடியாது. பிற கிரகங்களில் வாயுக்கள் ஆக்கிரமித்து இருப்பதை போல் இங்கு தண்ணீர் ஆக்கிரமித்து விட்டது. இனி இந்த தண்ணீர் என்று வற்ற? மனித இனம் மட்டுமின்றி எல்லாம் முடிந்து போனதோ?

படித்தவைகள் மனதில் அழுத்தியது! வறண்ட பகுதிகள் என இருக்கையில், வறுமை கொடுமைப் பண்ணி கழிக்கையில் எல்லாம் எரித்து எரித்து வெப்பம் அதிகரிக்கிறது என சொல்லியும் கேட்காமல் பனி உருகுகிறது என புரியாமல் அடுத்த கிரகம் என நினைத்து இருக்கிறதை காக்காமல் கைவிட்டுப் போனதே என நினைத்துக் கொண்டபோது  தீபக் நீந்த முடியாமல் மிதக்கத் தொடங்கினான்.