Monday 31 May 2010

எழுதி சாதித்தவைகள்

ராமநாதன் வீட்டுக்குள்ள காலடி எடுத்து வைக்கிறப்பவே நினைச்சேன், எதுனாச்சும் வில்லங்கமா பேசத்தான் செய்வான்னு. என்னைப் பார்த்து 'என்ன எழுதி கிழிச்சிட்டு இருக்க' அப்படினு சொன்னதும்தான் தாமசம் எனக்கு கோவம் வந்துருச்சு.

''உன்னால எழுத முடியலன்னா அதுக்கு என்னை எதுக்கு இப்படி மட்டமா பேசற' அப்படினு சொன்னதோட நில்லாம எழுந்து ஒரு அறை விட்டேன். பதிலுக்கு அவன்  'நீ அடிக்க எல்லாம் தேவை இல்ல,  உன் கூட பழகுனேன்  பாரு, அதுவே நீ  எனக்கு  தரும் பெரிய தண்டனை' அப்படினு சொல்லிட்டு விறுவிறுன்னு போனான்.

என்ன இவன் இப்படி சொல்லிட்டு போறான்னு அவன் பின்னாடியே ஓடிப்போய் இழுத்துட்டு வந்தேன். அவனுக்கு ஒரு காபி ஆத்தி கொடுத்தேன். நான் எழுதி எவ்வளவு சாதிச்சி இருக்கேன் தெரியுமா, என்னை பாத்து என்ன எழுதி கிழிச்சிட்டு இருக்க அப்படினு சொன்னா எனக்கு எத்தனை கோவம் வரும். ''ஆமா அப்படி என்னத்தத்தான் எழுதி கிழிச்ச'' அப்படினு அடி வாங்கினப்பறமும் கேட்டான். இனி சும்மா இருந்தா அவ்வளவுதான்னு என் சாதனையை பட்டியலிட்டேன்.

அ ஆவன்னா எழுதி தமிழ் எழுத கத்துகிட்டேன். ஒவ்வொரு தடவையும் பரீட்சையில் பாஸ் பண்ணினது எக்ஸாம் எழுதித்தான். அது தெரியுமா. நான் நாலாப்பு படிக்கிறப்பவே நாகுல்சாமி அண்ணன்  ஒரு லவ் லெட்டரு எழுதித் தர சொல்லிச்சி, அதை நான் தான் எழுதினேன் அது தெரியுமா. பாம்பேல இருக்கிற பையனுக்கு கடிதாசி எழுத சொல்லி பங்கஜம் அத்தை வந்து நிக்கிறது என்கிட்டதான். ஆறாப்பு படிக்கிறப்ப அம்சமா இருந்த முத்துமாரிக்கு ஒரு லவ் லெட்டர் எழுதித்தான் என் லவ்வை சொன்னேன். உன்னால சொல்ல முடியுமா? அதுக்கும் என்கிட்டதான் வந்து நிற்ப. மரத்துல, கல்லுல, சுவத்துல எங்க ரெண்டு பேரை செதுக்கி வைச்சேன் நீயும் தான் பாத்துட்டு பல்லிளிச்ச.

ஆனந்தவிகடன், குங்குமம், குமுதம், வாரமலர்னு வாசகர் கடிதம் ஒன்னு தவறாம வருமே அது நான் எழுதி அனுப்புனதுதான். எப்படி திட்டி திட்டி எழுதி இருப்பேன், உனக்கு என்ன தெரிய போகுது. அதோட மட்டுமா முதல்வர் அண்ணாச்சிக்கு நம்ம ஊருல இருந்து மனு எழுதி போடறதே நான் எழுதித்தான். அதோடு மட்டுமா ரோடு போட கொடுத்த காசுல எவ்வளவு காசு அமுக்கினான் இசக்கிமுத்து, அவனுக்கு மொட்ட கடிதாசி போட்டது நான் எழுதித்தான். திருவிழா, அரசியலுன்னு வரப்ப நோட்டீசுக்கு எழுதி தரது நான் தான், சுவத்துல எழுதரதும் நான் தான். என்னமோ பேசற.

இப்படி நான் சொல்லிட்டே இருந்தப்ப உஷ் உஷ்னு காபிய உறிஞ்சிகிட்டே இருந்தான். நான் இடையில நிறுத்தினதும் 'ப்பூ இவ்வளவுதானா' அப்படினு சொன்னதும் அவனை அப்படியே சுவத்துல வைச்சி முட்டலாம்னு இருந்திச்சி.

இப்ப என்ன எழுதுறேன்  தெரியுமா, உன்னை மாதிரி எழுத படிக்க தெரியாத முட்டாள்கள் எல்லாம் கட்டாயம் எழுதப் படிக்கனும் அப்படி இல்லைன்னா இவனுகளை சாவடிக்கனும் அப்படினு ஆனந்த விகடனுக்கு, குமுதத்துக்கு  எழுதிட்டு இருக்கேன். போதுமா? அப்படினு நான் சொன்னதும் தான் தாமசம் 'குபுக்'னு சிரிச்சான்.  அதோட விட்டானா 'இங்கிதமே தெரியாம எழுதற உன்னை மாதிரி ஆளுக எல்லாம் எழுத படிக்க தெரிஞ்சும் முட்டாப்பையலுக' அப்படினு சொன்னான். அவனை நல்லா மொத்தினேன். இனிமேலும் இவனை விடக் கூடாதுன்னு அவனை பத்தியும் அவனோட கொழுந்தியா பத்தியும் பம்புசெட்டுல தப்பு தப்பா இன்னைக்கு நைட்டு எழுதிற வேண்டியதுதான். இப்படி என்னவெல்லாமோ எழுதி சாதிச்சிட்டு இருக்கற என்னை பாத்து அவன் இனிமே கேள்வி கேட்பானா?!

Sunday 30 May 2010

ஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 11

11. ஆராய்ச்சியில் ஏற்பட்ட ஆர்வம்

தன்னைத் தானே தாழ்த்திக் கொள்வது அடக்கம் என்றே கருதப்படுகிறது. சில பல வேளைகளில் எனக்குத் தெரியாத விசயங்களை தெரியாது என சொல்லும்போது நான் தன்னடக்கம் நிறைந்தவன் எனவும், நிறை குடம் தழும்பாது எனவும் சொல்லும்போது மனதில் சிரித்துக் கொள்கிறேன். உண்மையிலேயே எனக்கு பல விசயங்கள் தெரியவே தெரியாது, என்னால் அத்தனை எளிதாக எதையும் புரிந்து கொள்ளவும் முடியாது.

ஆப்பிள் மரத்திலிருந்து ஆப்பிள் விழுந்தால் அதை எடுத்து பல கடி கடித்துவிட்டுத்தான் நான் போயிருப்பேன். நியூட்டன் போல் அந்த ஆப்பிள் ஏன் விழுகிறது என யோசித்துக் கொண்டிருக்கமாட்டேன். எனக்குத் தெரிந்தது அந்த கால கட்டத்தில் அவ்வளவுதான்.

ஒன்றைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வமே ஆராய்ச்சிக்கு அடிப்படை. ஒரு பதிலோடு உட்கார்ந்துவிடுவதல்ல ஆராய்ச்சி. அந்த பதிலுக்கும் பதில் தேடி செல்வதுதான் ஆராய்ச்சி. அதன் காரணத்தினால் ஆராய்ச்சி எளிதாக முற்றுப் பெறுவதில்லை. இதன் காரணமாகவே பல நோய்களுக்கு வெவ்வேறு விதத்தில் மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது.

எப்பொழுது விதைத்தால் எப்பொழுது அறுவடை செய்யலாம் என கால நிலைகளை அறிந்து விவசாயம் செய்யத் தொடங்கிய விவசாயி ஒரு ஆராய்ச்சியாளர் தான். சூரிய நிழலை வைத்தே காலத்தை கணக்கிட்டவரும் ஆராய்ச்சியாளர்தான். எந்த மண்ணில் எந்த தாதுப் பொருட்கள் கிடைக்கும் என தோண்டி எடுத்தவரும் ஆராய்ச்சியாளர்தான். சமய சூழலுக்கு ஏற்ப கிடைத்த விசயங்களை வைத்து ஒரு புரட்சி ஏற்படுத்தியவரும் ஆராய்ச்சியாளார்தான். இப்படி எல்லா விசயங்களிலும் ஆராய்ச்சியின் முக்கியத்துவம் அளப்பரியது.

சிறு வயதிலிருந்து மருத்துவத் துறையில் ஆராய்ச்சி செய்ய வேண்டும் எனும் அளவிலா ஆசை வந்து சேர்ந்தது. அதற்கேற்றபடி நான் படிக்கும் துறையும் அமைந்துவிட மிகவும் வசதியாகப் போனது. ஆனால் முழு அளவில் ஈடுபாடு என்னிடம் இருந்ததா என என்னால் சொல்லத் தெரியவில்லை. எப்பொழுது பார்த்தாலும் தமிழ் மீதுதான் தனிப்பற்று இருந்தது. இப்போது கூட சில வேளைகளில் நினைத்துக் கொள்ளத் தோன்றும், தமிழ் பட்டப் படிப்பு படித்து இருந்து இருக்கலாமா என!

முதல் ஆராய்ச்சி என எடுத்துக் கொண்டது ஆஸ்பிரின் எனப்படும் மருந்து எவ்வளவு வேகத்தில் கரையும் என கண்டுபிடிப்பது. நானும் எனது இரு நண்பர்களும் சேர்ந்து செய்தோம். நாங்களே எங்களுடன் படித்த நண்பனின் மருந்து தயாரிக்கும் கம்பெனியில்தான் மாத்திரை உருவாக்கினோம். அந்த வேளையில் ஆசிரியர் சில வாரங்கள் கல்லூரிக்கு வராததால் அவர் சொன்னதற்கு மாறாக நாங்கள் செய்து முடித்து இருந்தோம். சின்ன திட்டுகளோடு முதல் ஆராய்ச்சி முடிந்து போனது.

அதற்கடுத்த ஆராய்ச்சி பாக்டீரியா பற்றியது. ஆன்டிபயாடிக் என இருந்து கொண்டிருக்கும் போது இந்த பாக்டீரியவை ஆன்டிபயாடிக் இல்லாமல் வேறு மருந்துகளாலும் கொல்ல இயலும் என நான்-ஆன்டிபயாடிக் எனும் புது பாதையையே வகுத்து வைத்திருந்தார்கள். இதில் ஆராய்ச்சி பட்டம் பெற்றவர்கள் என பலரும் இருந்தார்கள். இந்த ஆராய்ச்சிதான் நான் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் செய்தேன். கிட்டத்தட்ட 305 வகையான பாக்டீரியாவை தையோரிடஜின் எனப்படும் மனநிலை பாதிப்புக்கு உபயோகப்படுத்தும் மருந்தினை வைத்து செய்யப்பட ஆராய்ச்சி அது. இந்த மருந்து பாக்டீரியாவை கொல்லத்தான் செய்தது. ஹைட்ரோகுளோரிக் அமிலம் கூடத்தான் பாக்டீரியாவை கொல்லும் அதற்காக அதை மருந்தாக குடிக்க முடியுமா என அறிவு எழுந்த இடம் அங்குதான். இருப்பினும் மிகத் தீவிரமாகவே இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முதுநிலைப் பட்டப்படிப்பு படித்ததும், ஆராய்ச்சி பட்டம் பெற வேண்டும் என்பதே நோக்கமாக இருந்தது. 'டாக்டர்' எனப் போட்டுக்கொள்ளவா ஆராய்ச்சி செய்யப் போகிறாய் என நண்பர் ஒருவர் கேலி செய்தபோதிலும் ஆராய்ச்சி பட்டம் பெறுவதே கருத்தில் இருந்தது. இதற்காக இலண்டன் வரும் முன்னர் கொல்கத்தாவிலும், டில்லியிலும் ஆராய்ச்சி பட்டம் பெற இணைந்து பின்னர் தொடராமல் நிறுத்தி விட்டேன். ஒரு கல்லூரியில் வேலைப் பார்த்தபோது அந்த ஒரு வருடத்திலேயே செடிகொடிகளை வைத்து பாக்டீரியாவை கொல்லும் சக்தி இருக்கிறதா என சில மாணவர்களை வைத்து ஆராய்ச்சி செய்தேன். இப்படியான சின்ன சின்ன ஆராய்ச்சி வேட்கை பெரிய ஆராய்ச்சி திட்டமாகி கிட்டத்தட்ட பன்னிரண்டு வருடங்களாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. எங்கேனும் எப்படியாவது நிறுத்திவிடலாமா எனும் ஆசையும் வந்து சேர்ந்துவிட்டது.

இலண்டனில் நான் எடுத்துக் கொண்ட ஆராய்ச்சி பற்றிய விபரங்களை சற்று விபரமாகவே விரைவில் எழுதுகிறேன்.

(தொடரும்)

அடியார்க்கெல்லாம் அடியார் 14

நீலகண்டனின் வீட்டினுள் நுழைந்த மதுசூதனன் அனைவரையும் கண்டு தயங்கி நின்றான். கதிரேசன் மதுசூதனனை வா மதுசூதனா என அழைத்தான். வந்தது மதுசூதனன் என அறிந்த சிவசங்கரனும், பார்வதியும் அவனுக்கு நன்றி சொன்னார்கள். மதுசூதனன் பதில் நன்றி சொல்லிக்கொண்டான். நீலகண்டனை அவர்கள் அழைத்துச் செல்ல இருப்பதை அறிந்தான் மதுசூதனன். எல்லாம் தயாரான நிலையில் இருந்தது. 

கதிரேசனை வேறு இடம் பார்க்கச் சொல்லி இருந்தார்கள். பார்வதி மிகவும் கண்டிப்பாக இந்த வீட்டினை பரமேஸ்வரனிடம் பேசி வாடகைக்கு விடலாம் என கூறிவிட்டதால் நீலகண்டன் எதுவும் பேசவில்லை. ஈஸ்வரிக்கு கதிரேசனைப் பார்க்கையில் பாபமாக இருந்தது. கதிரேசனும் வேறு வீடு பார்த்துக் கொள்வதாக சொன்னான். 

நீலகண்டன் தனது அறைக்குச் சென்று கிளம்ப தயாரானார். அவர் பின்னாலேயே சென்ற மதுசூதனன் தாத்தா என அழைத்ததும் திரும்பிய அவர் ‘’சொல்லுப்பா’’ என்றார். ‘’உங்களுக்கு போக விருப்பமா?’’ என்றான். ‘’என் பொண்ணு பேச்சை எனக்கு மீற இப்போ விருப்பமில்லை, என் உடல்நிலையை பத்தி இப்பத்தான் ரொம்ப கவலைப்படுறா, கிளம்பிப் போறதுதான் நல்லதுனு மனசுக்குப் படுது, நான் போய் இருக்கிற இடத்திலும் சிவன் இருப்பார், பார்க்கலாம்’’ என்றவர் கிளம்பினார்.


கதிரேசனுக்கு ஈஸ்வரியைப் பார்த்ததில் சந்தோசம் இருந்தாலும் நீலகண்டன் பிரிந்து செல்வது மனதில் பெரும் துயரத்தை தந்து கொண்டிருந்தது. தாத்தா என அழுதுவிட்டான். நீலகண்டனின் கண்களும் கலங்கியது. ‘’அந்த சிவன் தான் இனிமே உனக்கு அடைக்கலம்,  பரமேஸ்வரன்கிட்ட நான் சொல்றேன், தங்க இடம் தருவார்’’ என்றார். அனைவரும் வீட்டிலிருந்து சென்றார்கள். கடைசியாய் சென்ற ஈஸ்வரி கதிரேசனிடம் ‘’தைரியமா இரு’’ என்று மட்டும் சொல்லிவிட்டு கிளம்பினாள்.  பரமேஸ்வரன் வீட்டுக்கு அனைவரும் சென்றார்கள். பரமேஸ்வரனிடம் நீலகண்டன் விபரம் சொன்னதும், நான் பாத்துக்குறேன் ஐயா என்றார்.
நீலகண்டனின் வீட்டினை பரமேஸ்வரனிடமே பேசி வாடகைக்கு விட்டு சென்றார்கள். மருத்துவரிடம் சென்று மருத்துவ முடிவுதனை சங்கரன்கோவிலுக்கு அனுப்பச் சொன்னார்கள்.  

கல்லூரியில் காலம் வேகமாக கடந்து கொண்டிருந்தது. வாரம் தவறாமல் ஊருக்குச் சென்று வந்தான் கதிரேசன். ஈஸ்வரி மனதில் நடனமிட்டுக் கொண்டிருந்தாள். மதுசூதனன் ஒருநாள் கதிரேசனிடம் வந்து தான் தன்னுடன் படித்துக் கொண்டு இருக்கும் பெண்ணை காதலிப்பதாக சொன்னான். கதிரேசன் ''அந்தப் பெண்ணுக்குத் தெரியுமா?'' எனக் கேட்டான். ''தெரியும், ஒரு பாடல் பாடினேன், அந்த பெண் காதலுக்கு சம்மதம் சொன்னாள், அவளும் வைணவம், நீ கூடப் பார்த்திருப்ப, பெயர் வைஷ்ணவி. அவள் வைணவம் என முன்னரேத் தெரியும் அதனால்தான் காதலிக்கவேத் தொடங்கினேன்'' என்றான் மதுசூதனன். கதிரேசன் சமயம் பார்த்து காதலிக்கிறியோ என சொல்லி சிரித்தவன் என்ன பாட்டு என்றான். பாடிக் காட்டினான் மதுசூதனன்.
பச்சை மாமலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரேரே ஆயர்தம் கொழுந்தே எண்ணும்
இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே

''ம்ம், அருமையான பாட்டு, நீ சமணசமய வரலாறுப் படிச்சியா?'' என்றான் கதிரேசன். ''உனக்கு என்ன பைத்தியமா எப்பப் பார்த்தாலும் சமண சமயம், சமண சமயம்னுட்டு என்னை தொந்தரவு பண்ணாதே, எனக்கு வைணவம் மட்டும் தான் தெரியும். சமண சமயம் சைவ சமயம் எல்லாம் வெறும் கற்பனை'' என்றவனிடம் ''அன்னைக்கு அன்பும் சிவமும் பாடலைக் காட்டினாய்'' என்றான் கதிரேசன். ''அது அப்போ'' என வேகமாகச் சொன்னான் மதுசூதனன். அதற்கு கதிரேசன் ''நீ எதுக்கும், நீ பாடினியே, இந்த ஆழ்வார் எழுதின பாட்டைப் போய் பாரு, சமண சமயம் கற்பனையா இல்லையானு தெரியும்'' என்றான். ''எனக்கு காதலிக்கவே நேரம் போதலை, சும்மா வெறுப்பேத்தாதே'' என்ற மதுசூதனன் உடனே கிளம்பினான். கதிரேசன் மனதில் ஈஸ்வரி கண்ணை சிமிட்டினாள். மதுசூதனன் சென்றதும் கதிரேசன் பாடினான்.

‘’
தாயாய் நீயிருக்க வேண்டிய என்னை தவிக்கும்
சேயாய் பிறர் பார்க்க விட்டுநின்றாய்
காலம் தொடங்கும் முன்னரே மங்கையும் மனதில்
கோலம் போட்டதன்காரணம் சொல்சிவனே!''

(
தொடரும்)