Tuesday 9 November 2010

நுனிப்புல் (பாகம் 2) 26

25. சாத்திரம்பட்டி ஒரு சரித்திரம்

அன்று இரவே வாசனிடம் மாதவி சாத்திரம்பட்டி செல்வது குறித்துக் கேட்டாள். வாசன் ஆவலுடன் சரியென சொன்னான். மாதவி பாரதிக்கு தகவல் தெரிவித்தாள். பாரதி பெரியவரிடம் சொன்னபோது அங்கெல்லாம் எதுக்கும்மா என்றார். மாதவி அழைத்தாள் என சொன்னவள் வாசன் செல்கிறான் எனச் சொன்னதும் ம்ம் சரிம்மா, வாசன் கூடவே இருந்து, கவனமா போய்ட்டு வாம்மா என்று மட்டும் சொன்னார். அங்கே இருந்த நாற்காலியில் அமர்ந்தவர் நாராயணா உன்னோட வேலையை நான் நல்லாதானே செஞ்சேன், செடியெல்லாம் நல்லாதானே வருது என மனதில் சொல்லிக்கொண்டு கண்கள் கலங்கினார். 

பாரதியிடம், கிருத்திகா தன்னை பூங்கோதை வரச்சொன்னதாகவும் அதனால் அவளுடன் இருக்கப்போவதாக கூறிவிட்டாள். மாதவி, தேவகியை நாராயணபுரத்தில் தங்கிக்கொள்ளச் சொன்னவள் அங்கே கிருஷ்ணதேவி என்பவரைப் பார்க்குமாறு கூறினாள். தாங்கள் திரும்பி வரும்போது தேவகியை உடன் அழைத்துச் செல்வதாக சொன்னதும் தேவகி சரியென சொன்னாள்.

அடுத்தநாள் காலையில் நால்வரும் கிளம்பினார்கள். நாராயணபுரத்தில் கல்லூரி தோழி பிரேமாவின் வீட்டிற்குச் சென்றார்கள். ஏழ்மை நிலையில் இருக்கும் பிரேமா குடும்பத்தினர் சற்றும் இவர்களை எதிர்பார்க்கவில்லை. எனினும் வீட்டில் நல்ல வரவேற்பு தந்தார்கள். தேவகி மட்டும் நாராயணபுரத்தில் தங்கிக்கொண்டாள். மூவர் மட்டும் சாத்திரம்பட்டிக்குக் கிளம்பினார்கள். மாதவியிடம் பிரேமா குடும்பத்தினருக்கு உதவக்கூடாதா என வாசன் கேட்டான். கல்லூரியில் அவளுக்குப் படிக்க உதவியாக இருக்கிறோம் மாமா என்று மட்டுமே முடித்துக்கொண்டாள் மாதவி. பாரதி அமைதியாகவே வந்தாள். 

பேருந்து பிடித்து ஒரு மிகச்சிறிய நகரத்தை அடைந்தபோது மணி காலை பத்தாகி இருந்தது. அங்கே சாத்திரம்பட்டி பற்றி கேட்டபோது ஒரு பாதையை காட்டி ஐந்து கிலோமீட்டர் செல்ல வேண்டும், பேருந்து வசதி கிடையாது என சொன்னார்கள். அங்கே இருந்த மிதி வண்டிக்கடையில் மிதிவண்டி வாடகைக்குக் கேட்டபோது அந்த மிதிவண்டிக்கடைக்காரர் வாசன் மற்றும் இருவரையும் பார்த்துவிட்டு இரண்டு மிதிவண்டிகள் தந்தார். தம்பி இதுதான் என்னோட பிழைப்பு என சொல்லிக்கொண்டு பெயரை எழுதிக்கொண்டார். மிதிவண்டிகளைப் பத்திரமா கொண்டு வந்துருவோம் என வாசன் அவருக்கு நம்பிக்கை வருமாறு சொன்னான். 

நான் மாமா கூட வரேன், நீ சைக்கிள் ஓட்டிட்டு வா பாரதிஎன கண்சிமிட்டிக் கொண்டே சொன்னாள் மாதவி. மாதவி எனக்கு சைக்கிள் மறந்துப் போச்சு, ஹோண்டா வாடகைக்கு கிடைச்சா வாசன் பார்த்துட்டு வரட்டும்என்றாள் பாரதி. நீங்க இரண்டு பேரும் அந்த சைக்கிளுல வாங்கஎன்றான் வாசன். மாமா நீங்க பாரதியை உட்கார வைச்சிட்டு வாங்கஎன்ற மாதவியைப் பார்த்து நான் உன்னோட வரேன் மாதவிஎன்றாள் பாரதி. 

இல்லை இல்லை நீ மாமா கூட வா ப்ளீஸ், எனக்கும் சைக்கிள் ஓட்டி ரொம்ப நாளாகுது, பேலன்ஸ் தவறி கீழே விழுந்துட்டா பிரச்சினைஎன்றாள் மாதவி. அவர்கள் பேசிக்கொண்டே நிற்பதைப் பார்த்தவர்களில் ஒருவர் 'என்னம்மா உங்களுக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாதா' எனச் சிரித்தார். ம்ம் தெரியாது நீங்க வேணும்னா ஓட்டிட்டு வரீங்களாஎன்றாள் மாதவி. எனக்கு வேலை இருக்கும்மாஎன கேட்டவர் நிற்காமல் சென்றுவிட்டார். 

கடைசியில் பாரதி வாசனுடன் செல்வது என முடிவானது. மாதவி சைக்கிளை நன்றாகவே ஓட்டினாள். மாதவி நீ நல்லாத்தானே சைக்கிள் ஓட்டுறேஎன்றாள் பாரதி. மாமாவை நான் ஒருதரம் சைக்கிள் போட்டியிலே ஜெயிச்சிருக்கேன் பாரதி, நீதான் சைக்கிள் பழக வானு சொன்னா வீட்டுக்குள்ள ஓடிப்போயிருவ, நீச்சலாவது தெரியுமா பாரதிஎன்றாள் மாதவி. 

மாமா என்ன பேசாம வரீங்க

சாத்திரம்பட்டிக்கு போகனும்னு உனக்கு எதுக்கு தோணிச்சி?’ என்றான் வாசன். பாரதிதான் போகலாம்னு சொன்னா, அவளோட சொந்தக்காரங்களைப் பார்க்கனுமாம்' என்றாள் மாதவி. 

எங்க சொந்தக்காரங்களா?’ பாரதி புரியாமல் கேட்டாள். வெயில் அடித்ததால் அனைவருக்கும் வியர்க்க ஆரம்பித்தது. சற்று தொலைவு சென்றதும் பாரதி நீ என் சைக்கிளுல வா, மாமா கஷ்டப்படறார்என மாதவி சொன்னாள். அதெல்லாம் ஒண்ணுமில்லை, பாரதி என்கூடவே வரட்டும், பாரதி நீ மாறி உட்கார நினைச்சா உட்கார்ந்துக்கோ’ என்றான் வாசன்.  ‘பேலன்ஸ் தவறாதுல்ல மாதவிஎன்றாள் பாரதி சிரித்தவாறு. 'அதெல்லாம் தவறாது' மாதவி சொன்னதும் பாரதி மாறிக்கொண்டாள். என்னோட சொந்தக்காரங்க யாரு?’ என்றாள் பாரதி. 'அங்கே போனதும் சொல்றேன்' என மாதவி சொன்னாள். 

சாத்திரம்பட்டிக்குள் சென்றார்கள். இவர்கள் மூவரையும் அந்த ஊரில் இருந்த மந்தையில் இருந்தவர்கள் வித்தியாசமாகப் பார்த்தார்கள். ஒருவர் இவர்களை நோக்கி வந்தார். வாங்க, எங்கிருந்து வரீங்க, யாரைப் பார்க்கனும்? என்றார். பாரதியும் மாதவியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டிருக்க வாசன் அச்சுதன் அவரைப் பார்க்கனும்என்றான். ஓ ஜோசியம் பார்க்க வந்திருக்கீங்களா அவர் பார்க்கறதை நிறுத்தி பல வருசங்கள் ஆச்சு. இந்த ஊரில அவங்க அண்ணன் அனந்தன் அப்படிங்கிறவரும் இருக்கார் அவரும் ஜோசியம் பார்க்கறது இல்லை. ம்ம் நீங்க எதுக்கும் இப்படியே கொஞ்ச தூரம் போனா கடவுட்துறை அப்படிங்கிற ஊரு வரும் அங்கே நம்பெருமாள்னு ஒருத்தர் பார்ப்பார் அங்கே போங்கஎன்றதும் நாங்க ஜோசியம் பார்க்க வரலை, அச்சுதனைப் பார்க்கனும்என முடித்தான் வாசன். 

மூவரும், அச்சுதன் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அச்சுதன் ஐம்பதுக்கும் மேற்பட்ட வயதானவராக காணப்பட்டார். வீட்டில் இருந்த படங்களைப் பார்த்தபோது அவருக்கு குழந்தைகள் இருப்பது தெரிந்து கொள்ள முடிந்தது. அச்சுதன் இவர்களை அழைத்து உள்ளே அமர வைத்தார். தனது மனைவியை அழைத்து இவர்களுக்கு சாப்பாடு தயார் செய்யுமாறு கூறியவர் தானே எழுந்து சென்று மோர் ஊற்றிக்கொண்டு வந்து தந்தார். முதல்ல குடிங்க அப்புறம் பேசுவோம் என சொன்னார். 

மோர் குடித்தப் பின்னர் வாசன் பேசினான். இவதான் சோலையரசபுரம் குளத்தூர் மாதவிஎன்றான் வாசன். அச்சுதன் கைகள் எடுத்து வணங்கினார். மாதவி, அச்சுதன் வணங்கியதைக் கண்டு தானும் வணங்கினாள். 

இவளுக்குத்தான் நீங்க கடைசியா ஜாதகம் எழுதினீங்கஎன்றான் வாசன். அப்படின்னா நீ வாசன் தானேஎன்றார் அவர். வாசன் ம்என்றான். அனந்தன் என்னோட அண்ணன், அவர் கடைசியா உன்னோட ஜாதகத்தை எழுதினார்என்றார் மேலும். இப்போ அவர் எங்கே இருக்கார்?’ என்றான் வாசன். இங்கிருந்து மூணாவது வீடுஎன்றார். பாரதி அதிர்ச்சியில் அமர்ந்து இருந்தாள். 

குளத்தூர் பெருமாள் தாத்தா இறந்துட்டார், கேள்விப்பட்டீங்களாஎன்றான் வாசன். யாரும் தகவல் சொல்லலையே, அந்த விநாயகம் கூட தகவல் சொல்ல மறந்துட்டாரோ, அவர் இந்த ஊருக்கு வரட்டும், அன்னைக்குத்தான் இருக்குஎன்றார். நீங்களாவது குளத்தூர் வந்துருக்கலாமேஎன்றான் வாசன். நாங்க குளத்தூர் வரதா, அவர் இங்கே வரதா, வாசன் இந்த பொண்ணு யாரு, விநாயகத்தோட தம்பி பொண்ணாஎன்றார் அச்சுதன். பாரதி வேகமாக ஆம் என்பது போல் தலையாட்டினார். மாதவி தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தாள். 

பெரியவருக்கும் உங்களுக்கும் அப்படி என்ன சம்பந்தம்என்றான் வாசன். அச்சுதன் கோபம் கொள்வதைக் கண்டான் வாசன். மாதவி உங்க மக இப்போ எங்கே இருக்காங்கஎன்றாள். ஏம்மா எனக்கு மக இருக்கா அப்படிங்கிறது கூட தெரிஞ்சிருக்கு, எங்கே இருக்கானு தெரியாதாஎன்றார் அவர். போட்டோவுல பார்த்தேன்என சுவரில் மாட்டியிருந்த படத்தைக் காட்டி மனதுக்குள் பெருமூச்சு விட்டாள் மாதவி. அவ இப்போ குடும்பத்தோட நாராயணபுரத்துலதான் இருக்காஎனச் சொன்னவர் வாசனிடம் திரும்பினார். யார் யாருக்கு சம்பந்தம்னு நீ கேட்டியில்லஎன்றார். ம்என்றான் வாசன். எழுந்திருச்சி வா காட்டுரேன்என எழுந்தார். அலமேலு, இப்போ வந்துருரோம்என வெளியேறினார். மாதவி வாசனிடம் என்ன மாமா, பிரச்சினை புரியாம இப்படி பண்றீங்கஎன்றாள். என்ன பிரச்சினை?’ என்றான் வாசன். மாதவிஎன அச்சுதன் சற்று கோபத்துடனே மாதவியின் பெயரை சொல்லித் திரும்பினார். மாதவி தலையை குனிந்தாள். பேசாம வாஎன்றார். பயமா இருக்கு வாசன்என்றாள் பாரதி. 

அந்தத் தெருவின் கடைக்கோடிக்கு வந்தார் அச்சுதன். நாச்சியார், நாச்சியார்என ஒரு வீட்டின் வெளியில் இருந்து சத்தமிட்டார். உள்ளே இருந்து ஒரு பெண்மணி வந்தார். என்னண்ணேஎன வந்தவர் இவர்களை நோக்கி வணங்கியவாறே உள்ளே வாங்கப்பா என்றார். போங்க உள்ளேஎன்றார் அச்சுதன். 

வீட்டில் உள்ளே நுழைந்ததும் பெரியவர் விநாயகம்  இளைஞராக இருந்தபோது எடுத்த படம் சுவரில் மாட்டப்பட்டு இருந்ததைக் கண்டான் வாசன். பாரதி அந்த படத்தைக் கண்டு பெரியப்பாஎன்றாள். ம்ம் உன்னோட பெரியப்பாதான் அதுஎன்றார் கோபமாக அச்சுதன். அனந்தன் அப்போது மெதுவாக வீட்டின் உள்ளே நுழைந்தார். தம்பி, குளத்தூரில இருந்து வந்துட்டாங்களாஎன்றார் அனந்தன். விநாயகம் வரலை, வாசனும் மாதவியும் வந்திருக்காங்கஎன்றார் அச்சுதன். கூட யாருஎன்றார் அனந்தன். விநாயகத்தோட தம்பி பொண்ணு பாரதிஎன்றார் அச்சுதன். திருமால் கடிதம் போட்டிருந்தான் பாரதிஎன்றார் அனந்தன். 

அதிர்ச்சியில் நின்று கொண்டிருந்த வாசன் சென்னையில இருக்கிற திருமாலாஎன்றான். வாசன், உனக்குத் தெரியாதா? அவருக்கு எத்தனை திருமால் இருக்க முடியும்என்றார் அச்சுதன். பாரதி மாதவியின் கைகளைப் பிடித்துக்கொண்டாள். பயப்படாதே பாரதி, தைரியமா இருஎன்றாள் மாதவி. எல்லோரும் உட்காருங்கஎன போர்வையை விரித்தார் அனந்தன். 

இந்தாங்கப்பா குடிங்கஎன சர்பத் கலக்கிக் கொண்டு வந்து தந்தார் நாச்சியார். வேண்டாம் அம்மா, நாங்க இப்போதான் மாமா வீட்டில மோர் குடிச்சோம்என்றாள் மாதவி. வாசன் மாதவியை நோக்கி மாமா வீடா என்பது போல் பார்த்தான். குடிங்கனு அன்பா கொடுக்கிறாங்க, ஏன் வேணாம்னு சொல்றீங்கஎன்றார் அச்சுதன். பாரதி வேகமாக வாங்கிக்கொண்டாள். வாசனும் வாங்கிக்கொண்டான். மாதவி வேண்டாம் என மறுத்தாள். பிடிவாதம் பண்றியா மாதவிஎன்றார் அச்சுதன். இப்போதானே குடிச்சேன், திரும்பிக் குடிக்கச் சொன்னா எப்படிஎன்றாள் மாதவி. 

இதேதான் இதேதான் இருபத்தி ஐஞ்சி வருசமா சொல்றாஎன அச்சுதன் சுவரில் தனது கையை அறைந்தார். அதைப் பார்த்த பாரதி தனது கையில் இருந்த டம்ளரை நழுவவிட்டாள். சர்பத் எல்லாம் கொட்டியது. பரவாயில்லைப்பா நான் துடைச்சிருரேன், இந்தாப்பா இந்த சர்பத்தை குடிப்பாஎன நாச்சியார் பாரதியிடம் தந்தார். தம்பி என்ன இது, நம்மளைப் பார்க்க வந்தவங்ககிட்ட இப்படியா நடந்துக்குறதுஎன்றார் அனந்தன்.

வாசன், நம்பெருமாள் சொல்லிதானே இங்கே வந்துருக்கேஎன்றார் அச்சுதன் மிகவும் வேகமாய். ஆமா அவர் சொல்லிதான் தெரியும், ஆனா இவங்க தான் இன்னைக்குப் போகலாம்னு சொன்னாங்க, இல்லைண்ணா நானும் பெரியவரும் ஒருநாள் வரதா இருந்தோம்என்றான் வாசன். போ அதை முதல்லச் செய், உடனே அவரைக் கூட்டிட்டு வாஎன்றார் அச்சுதன். தம்பி, திருமால் கிட்டதான் திருமலையில வைச்சி பேசியிருக்காரே விநாயகம், பின்ன ஏன் அவர் இங்க வரனும்னு நினைக்கிறேஎன்றார் அனந்தன். திருமால் போட்ட கடிதத்த வைச்சி எல்லாம் சொல்லமுடியாது, அவர் இங்கே நேரா வரனும்என்றார் அச்சுதன். இருபத்தி அஞ்சி வருசமா வராதவர் இனிமே வந்து என்ன செய்யப் போறஎன அனந்தன் சொன்னதும் நாச்சியார் கண்கள் கலங்கியது. நாச்சியார் பக்கத்தில் நின்று கொண்டிருந்த மாதவி, அம்மா என நாச்சியார் கைகளைப் பிடித்தாள். முன்னமே வந்துருக்கக் கூடாதா மாதவிஎன நாச்சியார் மாதவியிடம் சொன்னார். மாதவிக்கு கஷ்டமாக இருந்தது. வாசனுக்கு ஒன்றுமே புரியவில்லை. பாரதி தனக்குள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டாள். பாரதியை பேசுமாறு சைகை காட்டினாள் மாதவி. 

பெரியப்பாவுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்என்றாள் பாரதி. புரியலை உனக்கு, உன் அப்பா சேகர் சொல்லலையாஎன அச்சுதன் பாரதியிடம் கோபமாக சொன்னார். அண்ணா, அந்த பொண்ணு மேல ஏன் கோபப்படறண்ணாஎன்றார் நாச்சியார். சொல்லுங்க அச்சுதன் சார், உங்களுக்கும் எங்களுக்கும் அப்படி என்னதான் சம்பந்தம்?’ என்றாள் பாரதி மிகவும் தைரியமாய். 

பாரதி உனக்கு இவ்வளவு தைரியமா?’ என்றார் அச்சுதன். பாரதி பேசாம இருஎன்றான் வாசன். இருங்க வாசன், எனக்குத் தெரிஞ்சாகனும் இவர் ஏன் இவ்வளவு கோபமா இருக்காருண்ணு, என் பெரியப்பா இவங்களுக்கு என்ன செஞ்சார்னு, சொல்லுங்க சார்என்றாள் பாரதி. குரலில் கலக்கம் தெரிந்தது. தம்பி நீ நடந்துக்கிறது முறையில்லைஎன அச்சுதனிடம் அனந்தன் சொல்லியபடி அவர்கள் மூவரையும் சாப்பிட அச்சுதன் வீட்டிற்கு வருமாறு சொல்லிவிட்டு அச்சுதனனை அழைத்துக்கொண்டு வெளியேறினார். நாச்சியார் கலங்கிய கண்களுடன் பாரதியினை வணங்கினார். அவதான் சாத்திரம்பட்டி போகலாம்னு சொன்னாம்மாஎன்றாள் மாதவி. நாச்சியார் பாரதியின் கைகளைப் பிடித்தார். பாரதி அழுதுவிட்டாள். 

(
தொடரும்)

1 comment:

Chitra said...

அருமை.