Monday 8 November 2010

நுனிப்புல் (பாகம் 2) 25


25 குளத்தூரில் நெகாதம்


பெரியவரின் தோட்டத்தில் நெகாதம் செடியில் இருந்த மொட்டுகள் அனைத்தும் ஒருசேர அந்த இனிய மாலை வேளையில் மலர்ந்து இருந்தன. அழகிய மலர்வனம் போல காட்சி அளித்தது கண்களுக்கு இதமாகவும், அந்த இனிய மலர்களின் மணம் மனதினை மயக்க வைக்கக் கூடியதாகவும் இருந்தது. 


பாரதியும் கிருத்திகாவும் தோட்டத்துக்கு வந்தார்கள். பாரதி நெகாதம் செடியைக் கண்டு அளவிலா ஆனந்தம் கொண்டாள். கிருத்திகாவுக்கு மலர்களின் வாசம் மிகவும் பிடித்துப் போனது. தோட்டத்தினை சுற்றிக்கொண்டே வந்தாள். 


''வாசன் வீட்டுக்குப் போவோமாயா''


''நாளைக்குப் போவோம், எனக்குப் போய் தூங்கனும்போல இருக்கு''


''என்னய்யா நீ, இன்னொரு தரம் குளிக்கலாம்யா இங்கே''


''இப்போ வேணாம் கிருத்தி''


''அப்படின்னா வாசன் வீட்டுக்குப் போவோம்யா''


''வாசன் வர நேரமாகும்''


''என்னை வாசன் வீட்டுல விட்டுட்டு நீ போய்யா, நான் பார்த்துப் பேசிட்டு வரேன்யா''


''ரொம்ப அடம்பிடிக்கிற நீ, நானும் வரேன் நானும் பேசனும்''


''காதல்னு எதுவும் பேசிராதய்யா''


''உஷ்... கிருத்தி, மாதவி வந்துருக்கா நீ எதுனாலும் விளையாட்டுக்குக் கூடப் பேசிராத''


''ஓ மாதவியைத்தான் வாசன் கல்யாணம் பண்ணப்போறாரா''


''ம்ம் வாசன் சொன்னதாக உன்கிட்ட சொன்னேனே''


''சரிய்யா''


வாசன் வீட்டிற்குச் சென்றார்கள். அங்கே மாதவியும் தேவகியும் வீட்டுக்கு வெளியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். வாங்க என வரவேற்றார்கள். வீட்டுக்குள் அவர்களை அழைத்துச் சென்றாள் தேவகி. ராமம்மாள் அவர்களை வரவேற்றார். பாரதி, ராமம்மாளைக் கட்டிப்பிடித்துக்கொண்டாள். இன்னும் எத்தனை வருசம் கழிச்சி வருவியோனு இருந்தேன்மா என பாரதியிடம் சொன்னார் ராமம்மாள். எங்க அப்பாகிட்ட உடனே சொல்லிட்டு கிளம்பி வந்துட்டேன், முன்ன விடமாட்டாரு ஆனா இப்போ எல்லாம் என்னை எதுவும் சொல்றதில்ல என்றாள் பாரதி. ம் உட்காருங்க என ராமம்மாள் பலகாரங்கள் எடுத்துக்கொண்டு வைத்தார். காபி போட்டு வரட்டுமா என கேட்டதற்கு சரியென சொன்னார்கள். மாதவி எழுந்து நான் போட்டு வரேன் அத்தை என சொன்னபோது நீ பேசிட்டு இரும்மா என ராமம்மாள் சென்றார். 


கிருத்திகா வழக்கம்போல கலகலப்பாக பேச ஆரம்பித்துவிட்டாள். மாதவி, கிருத்திகா பேசுவதையேக் கேட்டுக்கொண்டிருந்தாள். வாசன் எப்போ வருவார் என கேட்டாள் கிருத்திகா. ம்ம் இப்போ வந்துருவார் என மாதவி சொன்னாள். கிருத்திகா தனக்கு கவிதைகளிலும் கதைகளிலும் அதிக ஈடுபாடு இருப்பதாகவும் வாசனின் கவிதைகள் தனக்கு மிகவும் பிடித்து இருப்பதாகவும் கூறினாள். மாதவியிடம் நீங்க கவிதை கதை எழுதுவதுண்டா எனக் கேட்டாள். மாதவி உருகும் உயிர் கதையைப் பற்றி கூறினாள். ஆனால் யாருக்கும் தெரியாது எனவும் வாசன் மட்டுமே படித்து இருக்கிறான் எனவும் சொன்னபோது பாரதிக்கும் ஆச்சரியமாக இருந்தது. பாரதி உன்னோட மரபியல் மருத்துவ ஈடுபாட்டைச் சொல்லு என சொன்னாள் கிருத்திகா. 


பாரதி தனது ஈடுபாட்டினையும் இப்போது தான் அதுகுறித்து குறிப்புகள் எழுதத் தொடங்கி இருப்பதாகவும் கூறினாள். மாதவி சந்தோசம் தெரிவித்தாள். தேவகி தனக்கு ஒரு மருத்துவராக வேண்டும் என்பது மட்டுமே ஈடுபாடு என கூறினாள். கிருத்திகா மாதவியின் ஈடுபாட்டினைக் கேட்டபொழுது மாதவி அமைதியாக இருந்தாள். பின்னர் சொன்னாள். 


''மூளை பற்றிய ஆராய்ச்சி தான் என்னுடைய ஈடுபாடுனு இருக்கு. ஆனா என்னுடைய மேடத்துக்கிட்ட நான் ஒரு கட்டுரை எழுதிக்கொடுத்தேன். அவங்க படிச்சிட்டு ஒரு வாரத்தில சொல்றேனு சொன்னாங்க, ஆனா ஒரு மாசம் மேல ஆயிருச்சி. என்னானு கேட்டப்ப இது எல்லாம் செய்ய முடியாதுனு சொல்லிட்டாங்க. நானும் பரீட்சை இருந்ததால மேற்கொண்டு எதுவும் செய்யலை அது அப்படியே இருக்கு''


''காப்பி இருக்கா மாதவி'' என்றாள் பாரதி. 


''வைச்சிருக்கேன், வீட்டுக்குப் போறப்ப எடுத்துத் தரேன்''


''ஒருத்தரு டாக்டர், ஒருத்தரு ஜெனிடிக்ஸ், ஒருத்தரு பிரெய்ன்'' என்றாள் கிருத்திகா. 


''கிருத்திகா நாங்க செய்றதையெல்லாம் நீங்க கதையா கவிதையா எழுதுங்க''


''ம்ம் நல்ல யோசனைதான்'' என சிரித்தாள் கிருத்திகா. 


ராமம்மாள் அவர்களுக்கு காப்பி போட்டு வந்துக் கொடுத்தார். அப்பொழுது வாசன் வந்தான். கிருத்திகா அறிமுகமானாள். வாசனிடம் கவிதைகளைப் பற்றி பேச ஆரம்பித்துவிட்டாள். வாசன் மகிழ்ச்சியுடன் கேட்டுக்கொண்டான். கவிதைகள் இருந்தால் தருமாறு கேட்டான். வாசன் தருகிறேன் என சொல்லிவிட்டு மாடிக்குச் சென்றான். 


''மாமா உருகும் உயிர் கதையும் எடுத்துட்டு வாங்க, கிருத்திகாவுக்கு வேணுமாம்''


''ம்ம் எடுத்துட்டு வரேன்''


''பாரதி மாமாகிட்ட பேசலையா'' என்றாள் மாதவி. 


''பேசனும் மாதவி, வரட்டும்'' என்றாள் பாரதி. 


''உன் கனவினால ரொம்பவே அன்னைக்குப் பயந்துப் போய்ட்டாரு'' என்றாள் மாதவி. 


''பயமா, அப்புறம் எதுக்கு கோவிலுக்குப் போனாரு'' என்றாள் பாரதி. 


''ம்ம் நீதான் கேட்கனும்'' என்றாள் மாதவி. 


வாசன் கீழிறங்கி வந்தான். கவிதைகளையும் கதையையும் கிருத்திகாவிடம் தந்தான். கிருத்திகா படிக்க ஆரம்பித்துவிட்டாள். 


''பாரதி, சுந்தரன் எப்படி இருக்கான்?''


''நல்லா இருக்கான்''


''வீட்டுல பிரச்சினை எதுவும் இல்லையே''


''திருமாலினால வீட்டுல இப்போ என்னை எதுவும் சொல்றதில்லை''


''வீட்டுக்கு வந்திருந்தாரா?''


''உங்களையும் பெரியப்பாவையும் பார்த்ததாக எங்க அப்பாவைப் பார்த்து சொல்லியிருக்கார் அப்படியே என்னைப் பத்தியும் இவளைப் பத்தியும் சொல்லி இருக்கார்''


''என்னையும் சென்னைக்கு வரச் சொல்லி இருக்கார், நீ எத்தனை நாள் லீவுல வந்துருக்க''


''நாலு நாளுல போகனும்''


''ஓ அவசர வேலையா வந்தியா''


''இல்லை வரனும்னு தோணியது, கிளம்பிவந்துட்டேன் துணைக்கு இவ திடீரென கிளம்பி வந்துட்டா''


''ம்ம் நீங்க பேசிட்டு இருங்க நான் இப்போ வந்துருரேன்''


''மாமா கொஞ்ச நேரம் இருங்க நாங்களும் தான் கிளம்பறோம் போலாம், பாரதி கேளுங்க''


''என்ன கேட்க மாதவி''


''கோவில்''


''என்ன மாதவி, பாரதியை என்ன கேட்க சொல்ற?''


''அதெல்லாம் ஒண்ணுமில்லை வாசன்''


வாசன் சிரித்தான். 


''மாதவி, நீ கனவு பத்திதானே கேட்கச் சொன்ன''


பாரதி ஒரு நிமிடம் வாசன் முகத்தைப் பார்த்தாள். பேச்சில் கவனம் இல்லாதவளாய் இருந்த கிருத்திகா வாசன் சொன்னதைக் கேட்டு சட்டென திரும்பினாள். 


''மாமா நான் பேசினதை கேட்டுட்டீங்களா''


''மாதவி நீ இதைப் பேசினப்ப அவர் வரலையே''


''பாரதி நான் நாளைக்கு விபரமா பேசறேன், மாதவி காப்பி குடிச்சாச்சா, போலாமா''


அனைவரும் கிளம்பினார்கள். வாசன் மந்தைக்குச் சென்றான். மாதவி தனது கட்டுரையை எடுத்து பாரதியிடம் தந்தாள். 


''பாரதி நாளைக்கு நாரயணபுரம் வரியா, நானும் தேவகியும் போறோம்''


''என்ன விசேசம் அங்கே''


''போய்ட்டு வரலாம்னு போறோம் பிரெண்டோட ஊரு''


''அப்படியே சாத்திரம்பட்டிக்குப் போய்ட்டு வரலாம்''


''வாசன் மாமாவை கூப்பிட்டு பார்க்கிறேன், வந்தா சாத்திரம்பட்டி போகலாம் இல்லைன்னா நாராயணபுரம் போய்ட்டு திரும்பிரனும், நீ பூங்கோதையப் பார்த்தியா''


''இன்னும் இல்லை, இப்போ போய் பார்க்கிறேன்''


''ம்ம் நான் வாசன் மாமாகிட்ட கேட்டுட்டு சொல்றேன், காலையில தயாரா இரு''


பாரதியுடன் கிருத்திகா பெரியவர் வீட்டிற்குச் சென்றுவிட்டு பூங்கோதையினைப் பார்க்கச் சென்றாள். 


''எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்குய்யா''


''கவிதையா கதையா''


''ம், இங்க எல்லாரையும், வாசன் அந்த ரெண்டு பொண்ணுங்க, அவங்க அம்மா''


''இன்னும் இருக்காங்க ஊரில எல்லாரையும் பார்க்கலாம்''


கேசவன் வீட்டிற்குச் சென்றார்கள். பூங்கோதைக்கும் கேசவனுக்கும் வாழ்த்துகள் சொன்னாள் பாரதி. கேசவன் பாரதியைப் பற்றி சொன்னான். பூங்கோதையிடம் பாரதி குழந்தையைப் பற்றிக் கேட்டாள். பூங்கோதை நடந்த அனைத்தையும் பாரதியிடம் விபரமாக சொன்னாள். பூங்கோதை சகஜமாக பேசுவதைக் கேட்டு பாரதி சந்தோசமானாள். இதை எல்லாம் அறிந்த கிருத்திகா வாயடைத்து நின்றாள். 


(தொடரும்)

1 comment:

Radhakrishnan said...

மிக்க நன்றி சித்ரா