Sunday 7 November 2010

நுனிப்புல் (பாகம் 2) 24


 24. உருவமில்லா உருவம்
பெரியவரும், வாசனும் குளத்தூர் வருமுன்னர் நடந்தவைகள்... 


பூங்கோதையிடம் வாசன் எவ்வாறு செடியைப் பறித்தாள் என்று அன்று இரவே கேட்டான். பூங்கோதை பெரியவர் சொன்ன குறிப்பை அறிந்து கொண்டு தான் பறித்ததாக கூறினாள். வாசன் அது எவ்வாறு சாத்தியம் என கேட்டபொழுது பூங்கோதை சாத்தியமாகிவிட்டது அல்லவா என சொல்லிவிட்டு அமைதியானாள். இந்த செடிகளை ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள ஒரு தாவர ஆராய்ச்சி மையத்தில் நாளை சென்று தந்து சோதித்துப் பாதித்துவிடலாம் என பூங்கோதை சொன்னாள். வாசன் பெரியவரிடம் இதுகுறித்து கேட்கவேண்டும் என சொன்னான்.


பூங்கோதை தான் பெரியவரிடம் அனுமதி பெற்றுவிட்டதாக கூறியதும் வாசனுக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்த செடிகளை நாம் ஊருக்கு எடுத்துச் சென்று வளர்ப்பதுதானே திட்டம். அதற்குள் இந்த செடிகளை ஆராய்ச்சிக்கூடத்தில் கொடுத்து அதுபற்றிய அனைத்து விபரங்களையும் அறிவது என்பது எதற்கு என வாசன் யோசித்தான். பூங்கோதையிடம் விபரங்களைக் கேட்டான் வாசன். 


அனைத்துச் செடிகளையும் காய வைத்து இலைகள், வேர், தண்டு என பிரித்து அதனை இரசாயனத்தில் மூழ்க வைத்து அதில் இருந்து மூலக்கூறுகளைப் பிரித்தெடுத்துச் செய்வார்கள் என பூங்கோதை கூறியதும் வாசன் தலையை ஆட்டினான். 


''இல்லைங்க பூங்கோதை, நம்மகிட்ட இருக்கறதோ கொஞ்சம்தான் இதைப் போய் நாமக் கொடுத்துட்டா நாங்க வளர்க்கறதுக்குனு எதுவும் இல்லாம போயிரும், நாங்க இந்த செடிகளைப் போய் வளர்த்துட்டு காய், கனினு எல்லாம் கொண்டு வறோம் அப்புறமா சோதனையெல்லாம் பண்ணிக்கிரலாம், தயவு செய்து இந்த விசயத்தை இப்படியே விட்டுருங்க''


''சரி அண்ணா, நான் ஆராய்ச்சிக்கூடத்துல போய்க் கொடுக்கலை''


''இந்த செடிகள் கிடைக்கிறதே அபூர்வமா இருக்குங்க பூங்கோதை, நீங்க பறிச்ச இடத்துக்கு மேலே ஏறிப் போனீங்களா''


''இல்லை அண்ணா''


''இன்னும் கொஞ்ச தூரம் ஏறிப்போனா கொஞ்ச செடிகள் கிடைக்கலாம்னு தோணுது''


''அண்ணா இந்த செடிகளை திசு வளர்ப்பு முறையில வளர்த்தா நிறைய செடிகளை உருவாக்கலாம் அண்ணா, நீங்க கொஞ்ச செடிகளை நான் சொல்ற மாதிரி வெட்டி வெட்டி ஒன்னா இருக்கற செடியை பல செடிகளாக மாத்திரலாம்''


''ஓ எப்படி செய்றது''


''நான் அந்த விபரத்தை நான் நாளைக்குத் தரேன் அண்ணா''


வாசன் பூங்கோதையிடம் பேசிவிட்டு பெரியவரைச் சந்தித்தான். வந்து சில மாதங்கள் ஆகியிருந்தது. பெரியவரிடம் நாளை ஒரே ஒரு இடத்தினை மட்டும் பார்த்துவிட்டு ஊருக்குக் கிளம்ப வேண்டும் என கூறினான். பூங்கோதை கூறியதை பெரியவரிடம் கேட்டான் வாசன். தனக்கு ஆராய்ச்சிக்கூடத்தில் தர விருப்பமில்லை எனக் கூறியதை பெரியவர் சரியெனக் கேட்டுக்கொண்டார். மேலும் பூங்கோதையின் ஆலோசனையைக் கூறினான். பெரியவர் சம்மதம் சொன்னார்.


அடுத்த நாள் பூங்கோதையிடம் திசு வளர்ப்பு முறை விபரங்களைப் பெற்றுக்கொண்டான் வாசன். பெரியவரும் வாசனும் மலைப்பகுதியை அடைந்தனர். பூங்கோதை செடி பறிக்கச் சென்ற வழியைக் காட்டினார். வாசன் மலை மீது ஏறினான். அதிக தொலைவு சென்றதும் செடிக்கூட்டம் அங்கு இருந்தது. செடிகளை எண்ணினான். சரியாக 64 செடிகள் இருந்தது. மொத்தம் 108 செடிகள் என கணக்கிட்டுக் கொண்டான். இந்த 108 செடிகளை ஆறு கூறுகளாக வெட்டினால் 648 செடிகள் வந்து சேரும் என அங்கேயே குறிப்பு எழுதினான். எந்த ஒரு காரணத்திற்காகவும் ஒரு செடியைக் கூட விட்டுச் செல்லக்கூடாது என முடிவெடுத்தான். தானே அனைத்துச் செடிகளையும் ஆறு கூறுகளாக வெட்டி நட்டுவிடுவது என முடிவு செய்தான். மேலும் தேடினால் செடிகள் கிடைக்கும் என யோசித்தான். ஆனால் இனிமேலும் தாமதிப்பதில்லை எனவும் ஊருக்குச் செல்வதுதான் சிறந்தது என யோசித்து மலையிலிருந்து கீழிறங்கினான். 


பெரியவர் வாசன் தனது திட்டம்தனை சொன்னான். பெரியவர் சிரித்துக்கொண்டே சரியென சொன்னார். அன்று இரவு அமைதியாக கழிந்தது. பெரியவரும் வாசனும் செடிகளுடன் குளத்தூர் செல்ல தயாரானார்கள். கேசவனும், பூங்கோதையும் சில வாரங்களில் குளத்தூருக்கு வருவதாக கூறினார்கள். 


பூங்கோதைக்கு பரிசோதனை செய்ய வேண்டும் என சுபா அன்றே வந்து அழைத்தார். ஆனால் பூங்கோதை தான் கல்லூரிக்குச் செல்வதாலும் தேர்வுகள் முடித்தபின்னர் வருவதாகவும் கூறிவிட்டாள். பார்த்தசாரதி முன்னர் சோதனைகள் வேண்டாம் என சொன்னவர் தற்போது உரிய பரிசோதனைகள் செய்து கொள்வது சரியென சம்மதம் தந்து இருந்தார்.


பெரியவரும் வாசனும் திருமலையை விட்டு கிளம்பினார்கள். பெரியவர் மனதில் எல்லையில்லா சந்தோசம் அடைந்தார். வாசன் பெரியவரிடம் கனவில் நாராயணன் ஒளியாய் தோன்றியது உண்மையா? என்றான். பெரியவர் புன்னகையுடன் இதோ செடிக்கு உருவமிருக்கிறது கண்டுகொண்டாய் செடியும் கனவில்தானே சொல்லப்பட்டது என்றார். இருளில் கூட ஒளி இருக்கும் அது ஒளிந்து இருக்கும், ஒளி இல்லாத இடம் என்று எதுவுமே இல்லை அப்படித்தான் அந்த நாராயணன் என்றார் பெரியவர் மேலும். வாசன் கண்களில் கண்ணீர் நிரம்பியது. 


உடலில் நிறுத்தமுடியாதா? எங்கும் நிரம்பியிருப்பவன், உருவமில்லாதவன் அந்த அந்த உருவம் எடுத்துக் கொள்பவன். 


உயிரற்றதில் உயிரற்றதாய்
உயிருள்ளதில் உயிராய்
இருப்பதில் இல்லாததாய்
இல்லாததில் இருப்பதாய்
எங்குமிருக்கும் உன்னை
பங்குபோடவும் கூடுமோ!

இருவரும் குளத்தூர் வந்ததும் நடந்தவைகள். 


குளத்தூரில் அன்று இரவு அவர்கள் இறங்கியதும் ஊர் மக்கள் எல்லாம் ஓடி வந்தார்கள். எங்கே செடி எங்கே செடி என கேட்டு வந்தவர்கள் செடியைப் பார்த்ததும் அட இது என்ன வித்தியாசமா இருக்கு, நம்ம தோடத்துல காட்டுல இப்படி ஒரு செடி வந்ததில்லையே, எப்படி இந்த மண்ணுல முளைக்கும்! என அவர்கள் வருத்தமாகப் பார்க்கையில் வாசன் மனதில் பெரும் நம்பிக்கையை வளர்த்துக் கொண்டான். 


''இந்த செடி நம்ம ஊரு கரிசலுல கட்டாயம் வளரும்'' 


வாசன் சத்தமாக சொன்னது பெரியவருக்கு ஸ்ரீமன் நாராயணா என கேட்டது!

அனைத்துச் செடிகளையும் அன்றேத் தோட்டத்தில் கொண்டுச் சேர்த்தார்கள். பெற்றோர்களுடன் திருமலை மற்றும் திருவில்லிபுத்தூர் பற்றி விபரமாகக் கூறினான் வாசன். பெற்றோர்களுக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. அருளப்பன் அன்றே அனைத்து கணக்கு விபரங்களையும் வாசனிடம் கொண்டு கொடுத்துவிட்டுப் போனார். எந்த ஒரு பிரச்சினையுமின்றி ஊர் கட்டுப்பாட்டிலே இருந்தது என மகிழ்வுடன் சொல்லிவிட்டுச் சென்றார். வாசனுக்கு சந்தோசமாக இருந்தது. முத்துராசு தோட்டத்தில் செடிகளுடன் படுத்து உறங்கினார். 


இரவில் வாசனுக்கு யோசனைத் தோன்றியது. இந்த செடிகளை வெட்டி நடுவதைவிட அப்படியே வேருடன் நட்டு வைத்தால் என்ன என எண்ணம் வந்தது. வெட்டி நடுவதைப் பற்றி எங்குமே நோட்டில் குறிப்பிடவில்லை. இந்த வேளையில் செடிகளை வெட்டி நடப்போய் ஏதாவது தவறு நடந்துவிட்டால் மீண்டும் செடிகளைத் தேடச் செல்ல வேண்டும். வாசன் பூங்கோதையின் யோசனையை இறுதியாக நிராகரித்துக்கொண்டான். 


அடுத்தநாள் அதிகாலையிலே தோடத்துக்குச் சென்று செடிகளை வேருடன் நட்டு வைத்தான். கட்டப்பட்ட பாத்தியில் ஆறு செடிகள் வீதம் நட்டு வைத்தான். முத்துராசு வாசனுக்கு உதவியாக செயல்பட்டார். அனைத்து செடிகளையும் வைத்தபோது மணி ஒன்பது ஆகியிருந்தது. பெரியவர் தோட்டத்துக்கு வந்துப் பார்த்தபொழுது செடிகள் நடப்பட்டு தண்ணீர் பாய்ச்சப்பட்டு கொண்டிருப்பதை பார்த்து மனதுக்குள் சிரித்துக் கொண்டார். 


வாசன் பெரியவரிடம் தான் செய்த செயல் குறித்து எந்தவித விளக்கமும் தரவில்லை. பெரியவர் அதுகுறித்து எதுவும் கேட்கவும் இல்லை. 


''எல்லா செடிகளும் நல்லபடியா நட்டு வைச்சாச்சா''


''ஆமாம், தம்பி காலையிலே நாலு மணிக்கு வந்து என்னை எழுப்பி விட்டுருச்சு''


''ரொம்ப சந்தோசம், நல்லபடியா செடி வளரட்டும்''


''நல்லா வரும்யா, அங்கிருந்து கொண்டு வந்த கொஞ்ச மண்ணை இங்கே போட்டுருக்கோம்''


''வாசா, முத்துராசு பாத்துக்கிரட்டும் நீ உன் தோட்ட வேலையைப் போய் பாரு''


''இருக்கட்டும் ஐயா, முத்துராசு அண்ணே இப்போ போயிருவாரு நானே எல்லாத்துக்கும் தண்ணீ பாய்ச்சிட்டு போயிருரேன்''


''செடியை கொண்டு வந்து நட்டாச்சு, எப்போ ஆஸ்ரமம் தொடங்கப் போற''


''கொஞ்ச நாள் ஆகட்டும்யா''


''இந்த செடி எத்தனை மாசம் ஆகி இருக்கும்''


''தெரியலைய்யா, பூ எல்லாம் வந்தா ஒரு கணக்கு சொல்லலாம்''


''பாதுகாப்பா வளர்க்க வேண்டியது நம்ம பொறுப்பு, யாரும் பறிச்சிட்டுப் போயிராம''


''சுத்தி கல்லு நட்டுருக்கோம், எதுவும் பிரச்சினை வராதுய்யா''


வாசன் தண்ணீர் பாய்ச்சிக்கொண்டே பேசினான். முத்துராசு கிளம்பிச் சென்றார். பெரியவர் வாசனிடம் ஊர் மக்களின் எண்ணம் குறித்துக் கேட்டார். ஊர் மக்கள் இந்த செடியை விநோதமாக பார்ப்பதாக தனக்குப் படுவதாக கூறினான். ஆனால் இதனால் எந்தவித பிரச்சினையும் இருக்காது என்றான். 


நாட்கள் நகரத்தொடங்கின. செடிக்கு எந்த பிரச்சினையும் வரவில்லை. நன்றாகவே இருந்தது. எப்பொழுது பூக்கள் வரும் என ஒவ்வொரு நாளும் பார்த்துக்கொண்டிருந்தார்கள் வாசனும் பெரியவரும். ஒருநாள் காலையில் வாசன் பெரியவரின் தோட்டத்துக்குச் சென்றுப் பார்க்கையில் அனைத்துச் செடிகளிலும் ஒரு சேர மொட்டுகள் வந்திருந்தன. வாசன் அளவில்லா ஆனந்தம் கொண்டான். பெரியவரிடம் ஓடிச்சென்று விசயம் கூறினான். பெரியவரும் ஆர்வத்துடன் வந்துப் பார்த்தார். மொட்டுகள் உடனே மலராமல் மொட்டுகளாகவே இருந்தது. ஒருவரை ஒருவர் மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டார்கள். மாலை நேரத்திலும் சென்று பார்த்தான் வாசன். மொட்டுகளாகவே இருந்தது. மந்தைக்குச் சென்றான் வாசன். அப்பொழுது மாலை நேர பேருந்து ஊருக்குள் வந்தது. பேருந்தில் இருந்து பூங்கோதையும் கேசவனும் பூங்கோதையின் பெற்றோர்களும் வந்திறங்கினார்கள். அவர்களுக்குப் பின்னால் வாசனின் சித்தப்பா, சித்தியும் ரோஹினியும் இறங்கினார்கள். இவர்களைப் பார்த்ததும் வாசன் அளவில்லா மகிழ்ச்சி கொண்டான். 


அவர்களை அன்புடன் வரவேற்றான். கேசவனை பின்னர் சந்திப்பதாக கூறிவிட்டு சித்தப்பா சித்தி மற்றும் ரோஹினியை அழைத்துக்கொண்டு தனது வீட்டிற்குச் சென்றான். அனைவரும் சந்தோசமாக காணப்பட்டார்கள். வேலன் சித்தப்பாவும் சித்தி, பொன்னுராஜ் மாமா , அத்தை என அனைவரும் வந்துவிட்டார்கள். வாசன் அவர்களை அழைத்துக்கொண்டு புதிய வீட்டினைக் காட்டினான். அனைத்து ஏற்பாடுகளும் முன்னரே செய்யப்பட்டு இருந்தது. மிகவும் மகிழ்ச்சியாக சொந்த ஊருக்கே வந்து சேர்ந்தார்கள்.


பின்னர் கேசவனை சந்திக்கச் சென்றான் வாசன். பூங்கோதை வாசனிடம் செடிகளைப் பற்றிக் கேட்டாள். வாசன் தான் செய்த விபரத்தை கூறினான். பூங்கோதை ஏன் தான் சொன்னவாறு செய்யவில்லை என கேட்கவில்லை. நீங்கள் செய்தது சரியாகவே இருக்கும் என சொன்னாள். வாசன் பூங்கோதையை ஆச்சரியமாகப் பார்த்தான். கேசவனிடம் பேசியபொழுது பரிசோதனைகள் மூலம் பூங்கோதை தாய்மை அடைந்த நிலையை ஊர்ஜிதம் செய்ததாக கூறினான். ஆனால் ஸ்கேன் என எதுவும் செய்யவில்லை எனவும் இரட்டை குழந்தைதானா என தெரியாது என கூறினான். வாசன், தாய்மை அடைந்ததை பரிசோதித்து தெரிந்து கொள்ளாமலே வயிற்றைப் பார்த்தாலே தெரியுமல்லவா என்றான். கேசவன் புன்முறுவலிட்டான். ஸ்கேன் எதுவும் எடுக்க வேண்டாம் என பூங்கோதை சொல்லிவிட்டதாக கூறினான் கேசவன். இரட்டை குழந்தையா என பிறந்தபின்னரே தெரியும் என கேசவன் சொன்னபோது வாசன் எதுவும் பேசாமல் அமர்ந்து இருந்தான். 


அடுத்த நாள் காலையில் ரோஹிணியும் பூங்கோதையும் பெரியவரின் தோட்டத்தில் சந்தித்துக் கொண்டார்கள். ஒருவருக்கொருவர் பரிச்சயமானார்கள். தாவரத்தைப் பற்றி பேச ஆரம்பித்தாள் பூங்கோதை. தாவரத்தில் உள்ளிருக்கும் மூலக்கூறுகளைப் பற்றிச் சொன்னாள் ரோஹிணி. 


''வாசு அண்ணாகிட்ட சொல்லி நமக்கு இங்கேயே ஒரு ஆய்வகம் பண்ணித்தரச் சொல்லிரலாம், நாம உழைச்ச மாதிரி இருக்கும், உலகத்துக்கு உதவின மாதிரி இருக்கும், என்ன சொல்ற பூங்கோதை''


''ம்ம் நல்ல யோசனைதான், ஆனா ஆஸ்ரமம் கட்டப்போறதா சொன்னாரே''


''ஆஸ்ரமத்தோட ஆய்வகமும் கட்டித்தரட்டும், கிராமத்துல ஆய்வகம் இருக்கக்கூடாதுனு எதுவும் இருக்கா''


பெரியவர் அந்த நேரம் பார்த்து அங்கே வந்தார். ரோஹிணி தனது யோசனையை சற்றும் யோசிக்காமல் பெரியவரிடம் சொன்னாள். பெரியவரும் சம்மதம் சொன்னார். நிலத்தில் ஒரு சிறுபகுதியானது ஆய்வகத்துக்கு ஒதுக்குவதாக அப்போதே அவர்களிடம் உறுதி அளித்தார். பூங்கோதைக்கும் ரோஹிணிக்கும் மிகவும் ஆச்சரியமாக இருந்தது. ரோஹிணி யோசித்தவள் தான் அவசரப்பட்டு கேட்டதாக கூறினாள். ஆனால் பெரியவர் தான் நிதானமாகவே உறுதி அளித்ததாக கூறினார். 

(தொடரும்)

2 comments:

Chitra said...

ரோஹிணி யோசித்தவள் தான் அவசரப்பட்டு கேட்டதாக கூறினாள். ஆனால் பெரியவர் தான் நிதானமாகவே உறுதி அளித்ததாக கூறினார்.

.....இரண்டு contrast கதாபாத்திரங்கள் ஒன்று பட்டு வரும் விதம் நல்லா இருக்குதுங்க. பாராட்டுக்கள்!

Radhakrishnan said...

மிக்க நன்றி சித்ரா.