Wednesday 26 November 2014

திருமணத்தை வெறுக்கும் பெண்கள் - 3

சனிக்கிழமை வந்தது. எனக்கு எழவேப் பிடிக்கவில்லை. என்னவொரு கொடுமை.  கல்யாண வீடு போல அம்மா மாற்றிக்கொண்டு இருந்தார். புது சேலை  உடுத்த செய்து முடித்த பலகாரங்கள் என அன்று ஒரு பொம்மையாக செயல்பட்டேன். மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் வந்தார்கள் அதிர்ச்சியாக இருந்தது. இத்தனை படித்து என்ன பிரயோசனம்? என்று எனக்குள் உண்டான மனநிகழ்வு என்னை அவ்வப்போது தின்று கொண்டிருந்தது. வந்து அமர்ந்தார்கள். அப்போது அவனைப் பார்த்தேன். இவனா எனக்கு கணவன் என்று எனக்குள் எழுந்த கேள்வி இன்னும் அதிர்ச்சியை தந்தது.

 பொண்ணை வரச்சொல்லுங்க என்ற சம்பிரதாயம் எல்லாம் இல்லை. நானும் பலகாரங்களுடன் சென்று அமர்ந்தேன். உன் அப்பா எல்லா விபரமும் சொன்னார். உன்னை எங்களுக்கு ரொம்ப பிடிச்சி போச்சு அதான் உன்னை பொண்ணு பார்க்க வந்தோம் என்றார். என் பையன் கூட கல்யாணம் பிடிக்காதுனு உன் அப்பாகிட்ட சொல்லி இருந்தேன். உன்னோட போட்டோ பார்த்ததும் மனசு மாறிட்டான் என்றவரிடம் எனக்கு கல்யாணம் பிடிக்கலை என்றேன். அப்பா  முகம் பார்க்க எனக்கு தெம்பில்லை எனக்கு அவனைப் பிடிக்கவே இல்லை. அவன் நான் சொன்னதும் ஹேய் என துள்ளி எழுந்தான் மகிழ்ச்சியுடன். 

வாங்க போகலாம் என்றே அழைத்தான். இருப்பா என அதட்டினார் அவனின் அப்பா அப்படியே அமர்ந்தான் இங்க பாரும்மா இப்படி பேசாத என தொடங்கி எனக்கு தரப்பட்ட அறிவுரையில் எனக்கு வெறுப்பு அதிகமாகியது எப்போ கல்யாண தேதி என்றார் அப்பா. அதிர்ந்தேன். வர்ற 4ம் தேதி என்றார் அவனின் அப்பா. அவன் ஏதும் பேசாமல் இருந்தான். எனக்கு பையனைப் பிடிக்கலை என நேரடியாகவே சொல்ல இயலாமல் தவித்தேன். ஏன் அப்பா?! என் பார்வைக்கு வலிமை இல்லை. அப்பா சொன்னார் பிடிச்சி கல்யாணம் பண்றவங்க எல்லாம் கடைசி வரைக்கும் சேர்ந்தா இருக்காங்க? என்ற கேள்வி என்னை பலவீனமாக்கியது. இதோ இவ கூட என்னைப் பிடிக்கலைனு சொன்னா, கூட சேர்ந்து வாழலை என அம்மாவை காட்டினார். எனக்கு என்ன சொல்வதெனத் தெரியவில்லை. நானும்தான் இதோ இவ பண்ணாத அழிச்சாட்டியமா? என்று அவன் அப்பா சொன்னதும் எனக்கு குமட்டிக்கொண்டு வந்தது. 

அப்பா நீங்களா இப்படி? அம்மாவை அடிமைப்படுத்தியதோடு அடுத்தவர் முன் அவமானப்படுத்துவது என்றே கேட்க துடித்தேன். அம்மாவும் முதல பிடிக்கலை அப்புறம் இவரே உலகம்னு ஆகிருச்சி என்றதும் அவனின் அம்மாவும் அதே பல்லவி பாடினார். எனக்கு இந்த திருமணம் பிடிக்காமல் போனது இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம், வேறு வழியின்றி எதனையும் ஏற்றுக்கொள்வது. இப்படி கூட மனிதர்கள் இருக்க இயலுமா? என்ற எனது கேள்விக்கு அப்போதே பதில் சொன்னேன். என்னால் கல்யாணம் பண்ண இயலாது என்று தீர்மானமாக எழுந்தேன். அவனும் திருமணம் பண்ண இயலாது என எழுந்தான். அப்படியே வெளியே சென்றான். இந்த கல்யாணம் நடக்கும் என அவனின் அப்பா சொல்லி சென்றார். என்னை அவமானப்படுத்திட்டல்ல என அப்பா என்னை அடிக்க வந்தார் ஏன்டீ இப்படி கேவலப்படுத்தற என அம்மா பங்குக்கு சத்தம் போட்டார் எனக்கு கல்யாணமே வேண்டாம் என சொல்லி பார்த்தேன் நீ கேட்கலை என அழுதேன். அப்புறம் ஏன்டீ சம்மதிச்ச என்றார் அம்மா. திட்டம்போட்டு கேவலப்படுத்திட்ட என்ற அப்பா குரலில் வேதனை தெரிந்தது. எனக்கு அவனைப் பிடிக்கலை என்றேன். வேற யாராச்சும் பாருங்க, அவனுக்கே என்னைப் பிடிக்கலை என்றேன். நீ கல்யாணம் பண்ணு, இல்லைன்னா எக்கேடு கெட்டுப் போ என அப்பா சொன்னது எனக்கு நிறைய வலித்தது. 

அப்பா என்னால உங்களை மாதிரி வாழ முடியல என்ற எனது நிலையை எப்படி சொல்வது, அம்மா என்னால் எப்படி உன் வாழ்க்கை வாழ இயலும். அம்மாவிடம் நிறைய அழுது எல்லாம் புலம்பினேன் எக்கேடு கெட்டுப் போ என்றார் அம்மா. வீட்டில் அன்றிலிருந்து திருமணப்பேச்சு எடுக்கவே இல்லை. என் தோழி என்னிடம் போன் பண்ணி சொன்ன விசயம் எனக்கு ஆச்சரியம் தந்தது சில நாட்களில் ஊருக்கு வந்தவள் இதோ இவனே என் காதலன் என ரமணனை காட்டினாள் என்னால் நம்ப இயலவில்லை. ரமணன் என்னைப் பார்த்து சிரித்தான். அவளது வீட்டில் ஏற்றுக்கொண்டது இன்னும் அதிர்ச்சியாக இருந்தது. எப்படி இப்படி வாழ இயலும்?

எனக்கு இந்த திருமணம் என்பதெல்லாம் பிடிக்கவே இல்லை. எல்லோரும் திட்டினார்கள். கல்யாணமற்ற வாழ்வு முழுமை பெறாது என்றே சொன்னார்கள். தோழியின் திருமணம் வந்தது. உலகில் திருமணம் என்பது என்னவென எனக்குப் புரியவே இல்லை. வாழ்த்து சொல்லி வீடு வந்தேன். நல்ல வரன் வந்து இருப்பதாக அப்பா சில மாதங்கள் கழித்து சொன்னார். வீடு வந்து பெண் பார்க்கும் படலம் முடிந்தது. இரு வீட்டார் சம்மதம் சொன்னார்கள். எனக்கு சம்மதமே இல்லை. கல்யாணம் முடிந்து ஒரே வருடத்தில் ஒரு பெண் குழந்தை. என் கதையை அவள் செய்ய மறுத்த திருமணத்திற்கு சொல்லிக்கொண்டு இருக்கிறேன்.

திருமணத்தை வெறுக்கும் பெண்களே நீங்கள் எப்படி என சொல்லிவிட்டுப் போங்கள். (முற்றும்)

No comments: