Tuesday 2 September 2014

கிளி ஜோசியம்

இந்தியாவில் இனி சில நாட்கள் - 7

சென்றமுறை இந்தியா வந்தபோது கிளி ஜோசியம் பார்க்க மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சுற்றி சுற்றி வந்தும் ஒரு கிளி ஜோசியரும் தென்படவில்லை. இம்முறையாவது கிளி ஜோசியம் பார்த்திட வேண்டுமென மதுரை வந்தோம்.

அதிசயமாக ஒரு கிளி ஜோதிடர் அமர்ந்து இருந்தார். ஆள் பார்க்க தாடி வைத்து, குங்கும பொட்டு இட்டு நன்றாக இருந்தார். இருபது ரூபாய் என வணிகம் பேசினார். எனக்குத் தெரிந்து நான் கிளி ஜோதிடம் பார்தது வருடங்கள் பல உருண்டோடி விட்டது. நெல்மணி போட கிளி வந்து ஒவ்வொரு சீட்டாக எடுத்துப் போட்டுவிட்டு ஒரு சீட்டு எடுத்துத்தரும். அதை வைத்து நிறைய விசயங்கள் முன்னர் சொல்லும் வழக்கம் உண்டு. இருபது வருடங்கள் முன்னர்
 நடந்தது இப்போது அப்படியே இருக்குமென எண்ணி அமர்ந்தேன்.

பெயர் சொன்னேன். பெயர் சொன்னதும் கிளி வந்தது. ஒரே சீட்டு எடுத்துக்கொடுத்துவிட்டுப் போனது. பார்த்தால் வெங்கடாசலபதி. இரண்டே வாக்கியங்கள் சொல்லிவிட்டு ஒரு சீட்டு எடுத்துத் தாருங்கள் என என்னை கிளி ஆக்கினார். ராமர், சீதை, லட்சுமணர் பட்டாபிஷேக படம். இரு வாக்கியங்கள் சொல்லி முடித்தார். இப்படியாக ஐந்து பேர் பார்த்தோம். கிளி ஒரு சீட்டு. இரண்டு வாக்கிய பலன். அவரவர் ஒரு சீட்டு, இரண்டு வாக்கிய பலன்கள். நூறு ரூபாய் காணிக்கை வைங்க கை ரேகை பார்க்கலாம் என்றார். நான் கை காட்டி அமர்ந்தவுடன் சில வரிகள் சொன்னார். இருபது ரூபாய்
 மட்டுமே வைக்க கையை மூடுங்க, ஒரு விரல் காட்டுங்க என்றார். ஆள்காட்டி விரல் காட்டினேன். இரு வாக்கியங்கள் சொல்லி முடித்தார். கிளி ஜோதிடம் முதல் அவர் சொன்ன விசயங்களில் சில தவறுகள் இருந்தன. சுட்டிக்காட்ட மனமின்றி எனது மொபைலில் முக அட்டைப்படமாக இருந்த வெங்கடாசலபதி படத்தை காட்டி எனது விபரம் சொல்லி நகர்ந்தேன். கை எடுத்து வணங்கினார்.

அடுத்த தெருவில் ஐந்து கிளி ஜோதிடர்கள் வரிசையாக அமர்ந்து இருந்தார்கள். குறி பார்க்கும் பெண் ஒருவர். வாங்க யோகமான முகம், தெய்வாம்சம்
என்றே அந்த பெண் சொன்னார்கள். எல்லோரையும் கடந்து போகும் போது அடுத்தவர்களின் வாழ்க்கை குறித்து சொல்லும் தகுதி உள்ளவர்களாக பிறர் இவர்களை நினைக்க, தங்களை அவர்கள் நினைக்க எனக்கோ இவர்களது வாழ்க்கை குறித்து இப்படி வாழ்க்கையை முடக்கிக் கொண்டார்களே எனும் எண்ணம் மட்டும் சுற்றி சுற்றி வந்தது.

(தொடரும்)

No comments: