Monday 22 December 2014

கண்டு தாழிட்டேன் - 1

அவள் திட்டிக்கொண்டே இருந்தாள். எனக்கு கோபம் கோபமாக வந்தது. ஏன்டீ உனக்கு அவனைப் பிடிச்சா காதலி, என்னை எதுக்கு காதலிக்க வேணாம்னு சொல்ற என கொஞ்சம் அதிகமாகவே சத்தம் போட்டுவிட்டேன். அந்த மூஞ்சிய எவன் லவ் பண்ணுவான், அவன் சரியில்லை அதனால்தான் சொல்றேன். சும்மா கத்தாதே என்றாள். உன் மூஞ்சிய விட அவன் நல்லா மூக்கு முழியுமாத்தான் இருக்கான், உனக்கு பொறாமை அவன் உன்னை கண்டுக்கலைனு என நான் சொன்னதும் உன்னைத் திருத்த முடியாதுடி என என்னைத் திட்டிவிட்டுப் போனாள். என் பெயர் காயத்ரி. வயது 23. மென்பொருள் வேலை. அதோ போகிறாளே அவள் காவ்யா வயது 23. அதே வேலை.

ஒரே கல்லூரியில் படித்தோம் என்பதுதான் எங்களுக்கான நட்பு. நான் பேரழகி, அவள் கொஞ்சம் பேரழகி. எனக்கு திமிர் அதிகம். அவளுக்கு கொஞ்சம் திமிர். கல்லூரியில் அவள் ரகுராமை காதலித்தாள். முதல் வருடத்திலேயே காதல். ஆனால் கடைசி வருடத்தில் காதல் கைகூடவில்லை. என்னையும் சிலர் காதலித்தார்கள் அந்த ரகுராம் என்னை காதலிப்பதாக மூன்றாம் வருட இறுதியில் சொன்னதை நான் காவ்யாவிடம் சொன்னதால் அதற்குப்பின் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது  நான் ரகுராமை உடனடியாக நிராகரித்தேன். என்னை முதலில் காதலிக்க வக்கில்லாதவன் எதற்கு என்னை இரண்டாவதாக காதலிக்க வேண்டும். காவ்யா கசந்தாளோ?

காவ்யா அவனோடு சண்டை போடாத நாளே கிடையாது. அதிலிருந்து இந்த காதல் பையன் எல்லாம் வெறுக்கத் தொடங்கி இருந்தாள். நான் முதன் முதலில் காதல் என மனதில் உணர்ந்தது இதோ இந்த கௌதமன் தான். என்னை விட ஒரு வயது மூத்தவன். இங்குதான் வேலை. பார்த்தவுடன் என் மனம் பற்றிக்கொண்டது. இந்த காவ்யாவை அவன் காதலிக்கக்கூடாது என நான்தான் வலியப் போய் கைகொடுத்து என் காதலை கண்களால் வெளிப்படுத்தினேன். அட்டகாசமான முகம் கட்டான உடல். வசீகரித்தான். காவ்யா காதலித்து விடக்கூடாது என அவளிடம் கௌதமனை நான் காதலிப்பதாக முதலில் சொன்னபோது சிரித்தாள். இருவரும் வேலைக்கு வந்து ஆறு மாதங்கள் ஆகிறது

கௌதமன் இரண்டு வருடங்களாக இங்கே வேலை செய்கிறான். ஆறு மாதங்கள் சும்மா இருந்தவள் என்னை காதலிக்கக்கூடாது என சொல்ல என்ன காரணம் என யோசித்தேன். ஆனால் அவளை பொறாமைப் பிடித்தவள் என திட்டிவிட்டேன் கோபமாகப் போய்விட்டாள். அன்று கௌதமனை சந்தித்தேன். கௌதம் டிட் யூ ஸ்பீக் டூ காவ்யா? என்றேன். நோ என்றான். எனக்கும் அவனுக்குமான காதல் வேலை இடத்துக்குத் தெரியாது. வேலையில் இருப்பவர்கள் யாரும் கௌதமனை குறை சொன்னது இல்லை. இந்த காவ்யா!

என்ன வார்த்தை சொல்லிவிட்டாள். அன்று இரவு எனக்குத் தூக்கம் வரவே இல்லை கௌதமன் என்னை மட்டுமே காதலிக்கிறானா என எப்படி உறுதி செய்வது? குழப்பம் கண்களைச் சுற்றியது. அடுத்தநாள் கௌதமனிடம் எதேச்சையாகத்தான் கேட்டேன். ஆர் யூ சஸ்பிசியஸ்? என்றான் வேறு கேட்க மனமே இல்லை நோ ஜஸ்ட் என சொன்னேன். அன்று இரவு கௌதமன் எனது மொபைலுக்கு அழைத்தான். ஒய் டிட் யூ ஆஸ்க் மீ தெட் என்றான். ஒண்ணுமில்லை என சொன்னாலும் அவன் விடுவதாக இல்லை, காவ்யா நீ நல்லவன் இல்லை என சொன்னதாக சொன்னாள் என்றேன். அசிங்கமாக காவ்யாவைத் திட்டிவிட்டு டோன்ட் லிஸன் டூ கெர் என வைத்துவிட்டான். காவ்யாவை அவன் தகாத வார்த்தை சொன்னது எனக்கு வலித்தது. காவ்யாவிற்கு போன் செய்தேன் என்னடி கௌதமன் பத்தி உனக்கு ஏதாவது தெரியுமா என்றேன். நீ அவனை காதலிக்காதே என்றாள். ஏன்டீ இப்படி மொட்டையா சொல்ற, ரகுராமன் மாதிரி நடந்துகிட்டானா என்றேன். அவன் பேச்சையே பேசாத, நீ காதலிக்காத, அவனை விட்டு விலகிருடி என அவள் சொன்னதும் எரிச்சலை உண்டுபண்ணியது அவன் நல்லவனில்லையெனில் என்ன காரணம் சொல்லித்தொலைத்தால் என்ன என மனதில் எண்ணிக்கொண்டு போனை வைத்தேன்

அடுத்தநாள் கௌதமன் என்னோடு பேசவில்லை. என்னைத் தவிர்த்தான், நான் தவித்தேன். சொல்லுடி எதுக்கு காதலிக்க வேணாம்னு சொல்ற என மதியம் கேட்டேன். விளக்கம் சொல்ல முடியாதுடி, அவன் நல்லவனில்லை என்றாள். இனி காவ்யாவிடம் கேட்கவே கூடாது என முடிவு செய்தேன். கௌதமன் அன்று மாலையில் என்னிடம் காவ்யாவைப் பற்றி படு கேவலமாக பேசினான். அவனை செருப்பால் அடிக்க வேண்டும் போலிருந்தது ஆனாலும் உள்ளுக்குள் சந்தோசமாக இருந்தது. அவளது நட்பு பற்றிய அக்கறை எனக்கு பெரிதில்லை. கௌதமன் எனக்கு மட்டும் எனும் என் திமிர் தாண்டவம் ஆடியது. அவளது ரகுராமன் பற்றிய காதலை சொன்னதும் காவ்யாவை சகட்டுமேனிக்குத் திட்ட ஒய் ஆர் யூ சோ ஆங்கிரி  ஆன் கெர் என்றேன். சீ இஸ் எ யூசர் லெட் அஸ் நாட் டாக் அபவுட் தெட் எனத் திட்டினான். அவன் கரம் பற்றினேன். சீ இஸ் மை க்ளோஸ் ப்ரண்ட் என்றேன். சட் அப் நவ் என்றான். அதிர்ந்தேன். அவளைப் பற்றி பேசினாலே எரிந்து விழுந்தான். அன்றோடு காவ்யா பற்றி பேசுவதை நிறுத்தி இருந்தேன். காவ்யாவிடம் கௌதமனைப் பற்றி பேசுவதும் இல்லை. சில மாதங்கள் போனது. காவ்யா வேறு வேலை தேடிச் சென்றாள். என்னடி என்னாச்சு எனக் கேட்டபோது சிலமாதங்கள் முன்னரே கௌதமன் தன்னிடம் தவறாக பலமுறை நடக்க முயன்றான் நான் மறுத்துவிட்டேன் உன்னை எச்சரித்தேன். நீதான் அவனது காதல் வலையில் வீழ்ந்து என்மீது பொறாமை கொண்டாய். நான் எங்கே உண்மையை சொல்லி விடுவேனோ என மிரட்டினான். பயந்து வேலையை விட்டுப்போவது போல அவனிடம் சொல்லிவிட்டு வேறு வேலைக்குச் செல்கிறேன். நீ ஒரு ஓட்டவாய், அன்று சொல்லி இருந்தால் அவனது சட்டையைப் பிடிப்பாய்.

என் நிலை என்ன ஆவது? நீ ஆண்களிடத்தில் எச்சரிக்கையாகவே இரு. அந்த ரகுராமன் நான் காதலிப்பதை சாதகமாக்கிக் கொண்டு என்னை அடைய முயற்சித்தான், முட்டாள், நான் மறுத்ததும் உன்னிடம் காதலை சொல்லி இருக்கிறான், நீ என்னிடம் உளறிவிட்டாய். அவனோடு தினமும் சண்டையிட்டேன். என் காதலை அவன் ஏற்கவில்லை. அவனைப் பற்றி அன்று உன்னிடம் சொல்ல மனமில்லை. ஒரே கல்லூரி. இங்கு வந்தால் இந்த கௌதமனின் பார்வை என் மீதே இருந்தது. காமுகப் பார்வைடி அது. நீயோ முந்திக்கொண்டு காதலிப்பதாக சொன்னபோது சிரித்தேன். உன்னை அடைய நினைத்தானாடி? என்றாள். கண்களில் நீர்்நிறைய ஆம் கேட்டான்டி முடியாதுன்னேன்

அதான் என்கிட்ட கேட்டு இருக்கான். நம்மைப் பார்த்தா எப்படிடீ இந்த பசங்களுக்கு இருக்கும்? என பொரிந்து தள்ளிவிட்டாள். சில விசயங்களை பேசாது போனது எத்தனை தவறு என காவ்யாவிடம் சொன்னேன். இல்லடி நீ என்னை நம்பற சூழலில் இல்லை. என் மேல உனக்கு நட்பு இருந்தாலும் நமக்கே உரித்தான பொறாமை உன்னோட திமிர் உனக்குத் தந்தது. நீயும் வேற வேலை தேடு, இனி நாம பிரிஞ்சிரலாம் என்றாள். அவனை நம்பாதே. அவள் கண்களில் கண்ணீர் இருந்தது. எனக்கு அவனை நம்பாதே. எனக்கு கை கால்கள் உதறல் எடுத்தது அன்று என் அப்பாவிடம் நேரடியாகவே கேட்டேன். ஏன்ப்பா பையனுங்க எல்லாம் இப்படித்தானா? என ரகுராமன் கௌதமன் கதையை சொன்ன மறுகணம் சில லூசுக அப்படித்தான்மா என்றார் நாமதான் கவனமாக இருக்கணும் என்றவரிடம் சரிப்பா என அம்மாவிடம் போய் அதே கதையை சொன்னேன் எடுபட்ட பயல்க பொட்டபிள்ளைக வாழ்க்கையோட விளையாடறதே பொழப்பா வைச்சிட்டுத் திரியறாணுங்க எனத் திட்டினார். ஆண்கள் மோசமானவர்களா? ஒரு ரகு ஒரு கௌதமன். வேறு யார் என யோசிக்கையில் வாழ்வில் கண்ட ஆண்கள் சிலரின் நடவடிக்கைகள்   அபத்தமாகத் தெரிந்தது. புரியாமல் இருந்து இருக்கிறேன். வெட்கமே இல்லாத சீவன்கள்.

கௌதமனிடம் ஒன்றும் சொல்லாமல் இருக்க இயலவில்லை. அங்கிருந்த பெண்கள் சிலரிடம் கௌதமனைக் குறித்து கேட்டபோது டோன்ட் டாக் நான்சென்ஸ் எனத் திட்டி  விட்டதோடு என்னைப் பற்றி அவனிடம் சொல்லிவிட்டார்கள்்எனக்கு தாங்க முடியாத எரிச்சல் எல்லாம் அவனிடம் சொல்ல வெலவெலத்துப் போனான் ஐ ஆம் நாட் தெம் என அவனை ஓங்கி அனைவர் முன்னிலையில் அறைந்தேன். திஸ் இஸ் பார் காவ்யா எனச் சொன்னதும் யூ என கையை ஓங்கினான். அங்கிருந்த பெண்கள் சிலரது முகம் மகிழ்ச்சி களை கொண்டது. இப் யூ டச் மீ, யூ வில் பி டெட் என்றேன். அவமானத்தில் வெளியே ஓடினான். எனக்கு ஏமாற்றப்பட்ட ஆங்காரம். (தொடரும்)




No comments: