Sunday 21 June 2015

நுனிப்புல் பாகம் 3 - 7

பகுதி - 6  

7 வஞ்சகர்கள் நிறைந்த உலகம்

பெரியவரிடம் வாசன் சாரங்கனிடம் சென்று எதுவும் விசாரிக்க வேண்டாம் என சொன்னான். பெரியவர் சிறிது நேரம் யோசித்துவிட்டு சரி வேண்டாம் என சம்மதம் சொல்லிவிட்டார். முத்துராசு தான் இந்த உலகம் வஞ்சகர்களால் நிறைந்தது என மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டு இருந்தார். பெரியவர் சற்று அதட்டியதும் அமைதி ஆனார்.

இந்த உலகம் வஞ்சகர்களால் மட்டுமே நிறைந்தது என குறிப்பிட இயலாது. ஒவ்வொரு மனிதரும் தனது வாழ்வை நிலைநிறுத்திக் கொள்ள தனது சந்ததிகள் நிலைநிறுத்த போராடிக்கொண்டு இருக்கிறார்கள். தனிப்பட்ட நலன் என்று ஒன்று இல்லாமல் இல்லை.

பெரியவர் வாசனிடம் சற்று எச்சரிக்கையாக இருக்கச் சொன்னார். வாசன் நாம் எதுவும் தவறு செய்யவில்லை என சொன்னபோது முத்துராசு அவர்களை அடித்து விரட்டியது அபாயகரமானது என்றே குறிப்பிட்டார்.

வாசன் தோட்டத்திற்கு செல்லும் வழியில் மாதவி வாசனிடம் பேசினாள்.

''மாமா நீங்க பாதுகாப்பாக இருங்க, எந்த நேரத்தில் என்ன நடக்கும்னு தெரியாது''

''என்ன சொல்ற மாதவி''

''உங்க உயிருக்கு ஆபத்து இருக்கு மாமா''

''மாதவி...''

''நீங்க வீட்டுல இருங்க, இன்னைக்கு எங்கையும் போக வேணாம்''

''ம்ம் சரி மாதவி, எந்த வீட்டில் இருந்தாலும் சரிதானே''

''ம்ம்''

முத்துராசுவிடம் எவ்வளவோ சொல்லியும் அவர் கேட்காமல் தான் தோட்டம் செல்வதாக சென்றார். வாசன் சற்று கோபமாக சொன்னதும் சரி தம்பி நான் வீடு போறேன் என போனவர் வாசன் சற்று மறைந்ததும் தோட்டம் நோக்கி சென்றார். வாசன் நேராக கேசவன் வீட்டிற்குப் போனான்.

''எப்படி இருக்க பூங்கோதை''

''நல்லா இருக்கேண்ணா''

''பையனுங்க என்ன பண்றாங்க''

''இப்போதான் தூங்கினாங்க''

''கேசவன் எங்க''

''மாரிமுத்து தோட்டம் போறேன்னு போனார்ணா, நான் போய் காபி கொண்டு வரேன்ணா''

''வேணாம் பூங்கோதை, நெகாதம் செடி வாடிப்போனது பத்திக் கேள்விப்பட்டதான''

''ஆமாணா, ரோகிணி  கூட போன் பண்ணிக் கேட்டா. எனக்கும் ஆச்சரியமா இருக்குணா''

''மேற்கொண்டு படிக்கலையா பூங்கோதை''

''இல்லைணா, இவங்களை வளர்த்துப் பெரியவங்க ஆக்கணும், பெருமாள் தாத்தா அவரோட முந்தைய நினைவுகளோட இருப்பாராண்ணா''

''உனக்கு குழந்தைகளில ஏதேனும் வித்தியாசம் தெரியுதா பூங்கோதை''

''அண்ணா ஒரு நிமிஷம் காபி போட்டு வரேன். மோராவது குடிங்க''

''ம்ம்''

வாசன் தூங்கிக்கொண்டு இருந்த குழந்தைகளைப் பார்த்தான். அதில் இரு குழந்தை விழித்துப் பார்த்தது. அதே பெருமாள் தாத்தாவின் கண்கள். இரண்டு கைகளையும் வாசனை நோக்கி நீட்டியது. வாசன் கைகளை நீட்டினான். அவனது கைகளை இறுகப் பற்றிக்கொண்டது. வாசன் விடுவிக்க முயன்றான். குழந்தை சிரித்தது. வாசன் ஆச்சரியம் அடைந்தான். பூங்கோதை அங்கே வந்து கொண்டு இருந்தாள். குழந்தை கைகளை விடுத்து கண்ணை மூடியது.

''காபி''

''பூங்கோதை, நீ இந்த குழந்தைகளில் எதுவுமே வித்தியாசம் பார்க்கலையா''

''இல்லண்ணா''

''பெருமாள் தாத்தா...''

''என்னண்ணா, நீங்க எதுவும் பார்த்தீங்களா''

''என்னோட கையை இறுகப் பிடிச்சான்''

''அண்ணா''

''பூங்கோதை, பெருமாள் தாத்தா கரு தான் இரண்டாக பிரிந்து இரட்டை குழந்தையாகப் பிறந்து இருக்கு, உனக்கும் கேசவனுக்கும் உருவான கரு எதுவும் இல்லை''

''அண்ணா, டாக்டர் விஷ்ணுப்பிரியன் அப்படி சொன்னாரா''

''மாதவிதான் சொன்னா''

வாசன் மாதவிக்கு போன்  பண்ணி அங்கு என்ன நடந்தது என சொல்லிக்கொண்டு இருந்தபோது கேசவன் வீட்டிற்குள் வந்தான்.

''மாப்பிள்ளை நீ இங்கதான் இருக்கியா''

''என்னாச்சு''

''முத்துராசுவை மூணு பேரு வெட்டிக்கொல்ல வந்தானுங்க, மாரிமுத்து நான், வீரப்பசாமி, வேல்முருகன் எல்லாம் அந்த நேரத்தில நம்ம பெரியவர் தோட்டம் வழியா வந்தோம். பெரிய கலவரம் ஆகிருச்சி. அடிச்சி அவனுகளை போலிஸ் ஸ்டேசனுக்கு கொண்டுப் போயிட்டு இருக்கோம். நீ வீட்டுக்குப் போயிட்டன்னு ராசு மாமா சொன்னார். கொஞ்சம் பணம் எடுக்கத்தான் வந்தேன், நீ இங்கேயே இரு. உன்னை கொல்லத்தான்  வந்து இருக்கானுங்க மாப்பிள்ளை''

''நானும் வரேன்''

''சொன்னா கேளு மாப்பிளை''

வாசனுக்கு வியர்த்துக் கொட்டியது. யார் இந்த மனிதர்கள். முத்துராசு சொன்னது போல வஞ்சம் நிறைந்த மனிதர்கள். முத்துராசு எதற்கு தோட்டம் போனார் என்றே வாசன் யோசித்தான். வாசன் தனது வீடு நோக்கி நடந்தான்.

கேசவனும் பிறரும் அவர்கள் மூவரையும் காவல் நிலையத்தில் கொண்டு சேர்த்தார்கள். அவர்களை விசாரித்தபோது சாரங்கன்  பெயரைச் சொன்னார்கள். பெரியவர் மிகவும் கோபம் கொண்டவர் ஆனார். சாரங்கனுக்கு அழைத்து பேசியபோது விநாயகம் நீ தேவையில்லாம பேசறதை நிறுத்து எனக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லை என்றார்.

காவல் அதிகாரிகள் சாரங்கன் வீடு சென்றார்கள். சாரங்கனிடம் விசாரித்தபோது தான் அவ்வாறு செய்ய சொல்லவில்லை என அடம்பிடித்தார். அவர்கள் தப்பிக்க தன்னை சொல்வதாக சொன்னார். காவல் அதிகாரிகள் எச்சரிக்கை செய்துவிட்டு திரும்பினார்கள்.

''சாரங்கா, என்ன இது''

''நான் நிலம் விலை பேச சொன்னேன். ஆனா கொல்ல  சொல்லலை''

அதற்கு மேல் அங்கிருக்க விருப்பம் இன்றி வீடு திரும்பினார். இரவெல்லாம் பெரியவருக்கு யோசனையாக இருந்தது.

குழந்தைப் பிடித்த தனது கைகளைப் பார்த்துக் கொண்டான் வாசன்

(தொடரும்)


No comments: