Thursday 11 June 2015

நுனிப்புல் பாகம் 3 - 6

நுனிப்புல் பாகம் 3 - 5

6. இருவழிப் பாதை

பிறப்பு என்று ஒன்று இருந்தால் இறப்பு என்று ஒன்று இருக்கும். இறப்பு என்று ஒன்று இருந்தால் பிறப்பு ஒன்று இருக்கும். ஆனால் இதுவரை எவரது இறப்புமே மீண்டும் ஒரு  பிறப்பாக வந்தது என நிரூபிக்கப்படவில்லை. தனது முன் ஜென்ம வினை என்று சொல்கிறார்கள், தான் முன் ஜென்மத்தில் இது போன்று இருந்ததாக ஒரு சிலர் குறிப்பிட்டு இருப்பதை நிரூபிக்க வழி ஒன்றும் இல்லை.

பாரதி வானில் உள்ள நட்சத்திரங்களை எண்ணியவாறு யோசித்துக் கொண்டு இருந்தாள். இந்த திருமாலுக்கு எப்படி முக்காலமும் தெரிந்து இருக்க வாய்ப்பு இருக்கிறது என்ற யோசனை அவளில் ஓடிக்கொண்டு இருந்தது. கிருத்திகா உடன் வந்தால் நன்றாகவே இருக்கும் என எண்ணினாள். ஒரு முறை வாசன் கூட மாதவி முக்காலமும் அறிந்தவள் என்று சொல்லக் கேள்விப்பட்டு இருக்கிறாள். இதை எல்லாம் மாதவியிடத்து  கேட்டு ஊர்ஜிதம் பண்ணிட தோணவில்லை.

சாத்திரம்பட்டிக்குச்  சென்றபோது நாச்சியார் அம்மாள் முன்னமே வந்து இருக்கலாமே மாதவி என்று சொன்னபோது பாரதிக்குப் புரியாமல் தான் இருந்தது. அதுகுறித்து இதுவரை என்ன ஏது  என விசாரிக்கத் தோணவில்லை.

மாதவியை அழைத்துப் பேசலாம் என எண்ணினாள், அதற்குள் பாரதியின் போன்  ஒலித்தது. நாம் எவரை மனதார நினைக்கிறோமோ அவர் நமக்கு உடனடியாக ஏதேனும் ஒரு ரூபத்தில் காட்சி தருவார் என்ற நம்பிக்கை மக்களிடம் தொன்று தொட்டு இருந்து வரும் பழக்கம் தான். போனினை  எடுத்தாள்.

''என்ன பாரதி, என்னைப் பத்தி நினைச்சிட்டு இருந்தியா?, எதையும் நிறைய யோசிக்காத, சுந்தரன் எப்படி இருக்கான்''

''மாதவி, உன்னைப்பத்தி நினைச்சிட்டு இருந்தேனு எப்படி உனக்குத் தெரியும்''

''ஒரு யூகத்தில் சொன்னதுதான், உண்மையிலேயே என்னைப் பத்திதான் நினைச்சிட்டு இருந்தியா, இல்லை திருமால் பத்தி கூடவா?''

''மாதவி, உனக்கு முக்காலமும் தெரியுமா''

''எக்காலமும் எனக்குத் தெரியாது பாரதி, சும்மா வாசன் மாமாதான் எனக்கு எல்லாம் தெரியும்னு சொல்லிட்டு இருப்பாரு. அப்படித்  தெரிஞ்சி இருந்தா எதுக்கு நான் மெடிசின் படிக்கப் போறேன். பேசாம ஒரு ஜோசியம் பார்க்கிற வேலையை எடுத்து இருக்கமாட்டேன். உட்கார்ந்த இடத்திலேயே நல்ல சம்பளம். யாரோ பிரச்சினைக்கு ஏதோ  ஒரு பரிகாரம். எந்தக் கவலையும் இல்லை பாரு. அப்படியே மாதவியம்மன் அப்படின்னு ஒரு சின்ன கோவில் கட்டி ஊரு உலகம் எல்லாம் தெரிஞ்சிருக்கமாட்டேன்''

''மாதவி, நீ கிண்டல் பண்றேன்னு தெரியுது, ஆனா அவங்கவங்க வேலை அவங்கவங்களுக்கு கஷ்டம். ஒருவேளை யாருமே ஜோசியம் பார்க்க வரலைன்னா, சாமி கும்பிட வரலைன்னா உன்னோட நிலை கஷ்டம்தானே.''

''எல்லாம் எனக்குத் தெரிஞ்சி இருக்கறப்ப அப்படி ஒரு கஷ்டம் ஏன்  வரும், சொல்லு பாரதி''

''மாதவி, உனக்கு இந்த உலகத்தில் நடக்கிறது நடந்தது நடக்கப்போறது எல்லாம் தெரியுமா''

''எதுவுமே தெரியாது பாரதி. சும்மா எதேச்சையா போன்  பண்ணினேன் அதுவும் நீ சுந்தரன் விஷயம் சொன்னதில் இருந்து எனக்கு ஒரே யோசனையா இருக்கு. அவன் உன்னை கேலி கிண்டல் பண்றதுக்கு நிறைய வாய்ப்பு இருக்கு''

''பார்த்தியா, உனக்கு எல்லாம் தெரியும். அவன் என்னை கேலி கிண்டல் பண்ணினான்''

''அவன்கிட்ட நான் பேசிக்கிறேன். நீ ஒண்ணும்  அவனை  சொல்லாத''

''மாதவி, சாத்திரம்பட்டி பத்தி கொஞ்சம் சொல்றியா''

''எனக்கு என்ன தெரியும், நீயும்தான் கூட வந்த, உனக்கு விஷயம் தெரியுமா நம்ம ஊருல அதான் எங்க குளத்தூர்ல சின்னப் பிரச்சினை. ரெண்டு பேரை அடிச்சிட்டாங்க. எனக்கு என்னமோ அது பெரிய கலவரத்தில போய்  முடியும்னு தோணுது. வாசன் மாமாகிட்ட எச்சரிச்சி வைக்கணும்''

''யாரு சொன்னாங்க இதை''

''என்னோட அம்மாதான்''

''பொய் எல்லாம் பேசுவியா மாதவி''

''தாராளமா  பேசுவேன், பொய் தேவையெனில் உண்மையாகும். சுந்தரன் கிட்ட நான் பேசிக்கிறேன். நீ திருமாலைப் பார்க்கறப்போ கூட கிருத்திகா இல்லைன்னா அருண் இவங்களோட போ. அவரு இந்தவாட்டி உக்கிரமான நிலையில் இருப்பார். சாந்தரூபம்னு நினைச்சியில! அப்புறம் முக்கியமான ஒண்ணு சும்மா ஆர் என் ஏ னு  இருக்காம  ரிவர்ஸ் ட்ரான்ஸ்கிரிப்டேஸ் பத்தி நிறைய படி''

''எனக்கு உண்மை தெரிஞ்சிருச்சி. வாசன் சொன்னது மாதிரி உனக்கு எல்லாமே தெரியும். நீ தெரியாத மாதிரி நடிக்கிற. திருமால் ஐயா உக்கிரமான நிலை அப்படின்னு உனக்கு எப்படித் தெரியும். அவர் மட்டும் அப்படி இருக்கட்டும். ஆமா அது எப்படி நீ இது படினு  சொல்ற''

''மறந்துட்டியா, நீதான் ஆர் என் ஏ  உலகம் எல்லாம் சொல்லி இருக்க. நீ போய்ட்டு வந்துட்டு பேசு''

''ம்ம்''

இந்த மாதவி புரியாத புதிராக தென்பட்டாள். சாதாரணமாகவே தென்படும் இவளில் எப்படி இத்தனை ஆற்றல் இருக்க இயலும். அதுவும் ரிவர்ஸ் ட்ரான்ஸ்கிரிப்டேஸ் பத்தி சொல்கிறாள். ஆர் என் ஏ தன்னை டி என் ஏ வாக மாற்றும் வல்லமை இந்த ரிவர்ஸ் ட்ரான்ஸ்கிரிப்டேஸ்க்கு உண்டு. ஒற்றையாகவோ, இரட்டையாகவோ மாற்றி வைக்கும். இந்த வினையூக்கி மட்டும் இல்லையெனில் எய்ட்ஸ் போன்ற வியாதிகள் உருவாகி இருக்கவே இருக்காது.

வாசனின் வைரஸ் கவிதைப் போல இந்த ரிவர்ஸ் ட்ரான்ஸ்கிரிப்டேஸ் தான் உயிரின் மூலமாக இருக்கக் கூடுமோ. முதலில் ஆர் என் ஏ  உருவாகி  அதில் இருந்து டி என் ஏ உருவாகி பின்னர் டி என் ஏ  மூலம் ஆர் என் ஏ உருவாக்கி இந்த உயிரினங்கள் இருந்து இருக்குமோ.

பாரதியை நட்சத்திரங்களை எண்ண  விடாமல் யோசனை பண்ண வைத்துவிட்டாள்  மாதவி. இந்த உலகில் எதுவுமே முன்னோக்கி சென்றது பின்னோக்கி வராது என பாரதி நினைக்கும்போதே கடல் அலைகள் பற்றிய எண்ணம் வந்து சேர்ந்தது.

கிருத்திகாவிடம் மீண்டும் போன்  பண்ணி கேட்டபோது திருமாலைப் பார்க்க உடன் வருகிறேன் என்று சொன்னாள். அன்று இரவு அம்மாவிடம் அப்பாவிடம் சொன்னபோது எதுக்கும் அருண் நீயும் போயிட்டு வா என்று சொன்னார்கள். அருண் மறுபதில் சொல்லாமல் சரி என்றான். பாரதிக்கு சற்று பயமாக இருந்தது. கிருத்திகா வருகிறாள் என்று சொன்னதும்தான் அருண் நான் எதுக்கு என ஒதுங்கிக் கொண்டான்.

இந்த மாதவி பற்றி அறிய தேவகிதான் சரியான வழி என பாரதி யோசித்துக் கொண்டே அன்று உறங்கினாள். கனவில் மாதவிதான் பலமுறை வந்து போனாள். என்றுமே கனவில் வராத மாதவி இன்று மட்டும் ஏன்  என்றே உறக்கத்தின் ஊடே விழித்த வண்ணம் இருந்தாள் . திருமால் ஐயாவைப் பார்த்துதான் ஆக வேண்டுமா எனும் எண்ணம் வேறு வந்து சேர்ந்தது. என்ன நடந்தாலும் பரவாயில்லை என்றே எண்ணவும்  செய்தாள்.

ஒரு வார்த்தை கூட தன்னிடம் மாதவி கனவில் பேசவில்லை என்று எண்ணினாள்  பாரதி. கிருத்திகாவும் பாரதியும் திருமாலைச் சந்திக்கப் போனார்கள்.

முதலில் வந்தபோது என்ன நிலையோ அதே நிலை. திருமால் வருவார் என வீட்டின் வெளியில் இம்முறை காத்து இருந்தார்கள்.

(தொடரும்)




No comments: