Sunday 24 May 2015

தமிழ் மின்னிதழ் - 2 இந்துத்வா

7. இந்து அடையாளமிலி - ரோஸாவசந்த் ( கருத்து)

பல விசயங்களை அலசி ஆராய்ந்து இருக்கும் கட்டுரை என்றால் மிகையாகாது. இணைய பரபரப்பு என்று தொடங்கி நாவல், இந்து, இந்துத்வா என பயணித்தபோது எனக்கு சற்று குழப்பம் நேர்ந்தது உண்மை. எப்போது ஒருவர் தெளிவு இல்லையோ அப்போது ஒருவர் குழப்பம் அடைவார். எனக்கு இந்த கட்டுரையில் குறிப்பிட்ட விஷயங்கள் குறித்தத் தெளிவு இல்லை என்பதால் எனக்கு குழப்பம் நேர்ந்தது உண்மை. கட்டுரையை இரண்டு முறை வாசித்தபின்னர் ஓரளவுக்குத் தெளிவு பிறந்தது. மாதொரு பாகன் நாவல் குறித்தும் அதனால் ஏற்பட்ட பிரச்சினைகள், அதன் பின்னணி அலசி இருக்கிறது. சாதியம் குறித்த விசயங்களை திரைப்படம், படைப்புகள் எப்படி கையாண்டன என்பது என்னைப்போன்று  அறியாமையில் இருப்போருக்கு  வைக்கக்கூடிய ஒன்றுதான்.

ஒரு படைப்பை எப்படி எல்லாம் சாதகமானவர்கள், பாதகமானவர்கள் கையாள்வார்கள் என்பது இந்த மாதொருபாகன் நாவல் ஏற்படுத்திய தாக்கம்தனில் இருந்து அறிந்து கொள்ளலாம். ஆனால் மக்கள் காலப்போக்கில் இதை எல்லாம் மறந்து போவார்கள். அப்படி ஒரு பரபரப்பு என்பது கால காலத்திற்கும் நிலைத்து நிற்காவண்ணம் இயங்குவதுதான் ஊடகத்துறை. இந்துத்வர்கள், யார் இவர்கள், எப்படி இந்த விஷயத்தை நோக்கிச்  சென்றார்கள் எனத் தொடங்கி இந்து, காந்தி என பெரும் சுற்று சுற்று வந்து இருக்கிறது இந்த கட்டுரை.

இந்துத்வா என்றால் என்ன? எனக்கு இதுபற்றி தெரியாது என்பதால் சற்று தேட வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்துத்வா என்ற வார்த்தை 1923ம் ஆண்டு விநாயக் தாமோதர் சவார்கர் என்பவரால் அறிமுகம் செய்யப்பட்டது. இதை 1989ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி தனது கொள்கையாக எடுத்துக்கொள்ள , விஷ்வ இந்து பரிஷத், ஆர்எஸ்எஸ் அமைப்பு எல்லாம் இதை முன்னிறுத்தி செயல்பட்டன.

According to the Oxford English Dictionary, Hindutva is an ideology seeking to establish the hegemony of Hindus and the Hindu way of life. According to theEncyclopedia Britannica, "Hindutva ('Hindu-ness'), [is] an ideology that sought to define Indian culture in terms of Hindu values". (விக்கிப்பீடியா) 

மேற்குறிப்பிட்ட விஷயத்தை மொழிப்பெயர்ப்பு செய்தால் இந்து யார் எனும் கேள்வி வரும்? இந்து என்றால் என்ன? இந்துக்களின் மதிப்பு என்ன? Hindu as one who was born of Hindu parents and regarded India as his motherland as well as holy land. (விக்கிப்பீடியா) 

இப்போது எனக்கு எனது தாத்தாவிற்கு தாத்தா அதற்கு முன்னர் இருந்த தாத்தா பாட்டி எல்லாம் இந்துக்களாக இருந்தார்களா எனும் கேள்வி எழுகிறது. எனது சந்தத்தி இந்தியாவை விட்டு வெளியேறியதால் அவர்கள் தாய்நாடு வேறு என்பதால் இந்து எனும் அடையாளம் இழந்து விடுகிறார்களா? எதுவும் எனக்குத் தெரியாது. இந்துத்வா என்றால் ஒரே குலம், ஒரே நாடு, ஒரே கலாச்சாரம் அதாவது சமஸ்கிருத கலாச்சாரம். அப்படிப்  பார்த்தால் இந்தியாவின் நிலை என்ன ஆவது. இந்த கட்டுரை இந்துத்துவம் பற்றி நிறைய எழுத்தாளர்களின் நிலை, மற்றும் ஒரு நாவல் குறித்து எழும் சூழல் விவரிக்கிறது. தனிப்பட்ட மனிதனின் கருத்து சமூக கருத்தாக முடியாது. அதே வேளையில் தனிப்பட்ட மனிதனின் கருத்து அனைவராலும் ஏற்கப்பட்டு பின்பற்றப்படும் எனில் அது சமூக கருத்து ஆகும்.

எந்த ஒரு இந்துவும் தன்னை இந்துத்வா என அடையாளம் காட்டிக்கொள்ள அச்சம் கொள்வார். இதற்கு காரணம் இந்துத்வா தன்னை முன்னிறுத்தும் விசயம். ஒரு இந்து எப்படி இருப்பார் என மகாத்மா காந்தி குறித்து எழுதியதைப் படிக்கும்போது எதற்கு கோட்சே ஒரு இந்துத்வா என புரியமுடிகிறது.

மனிதர்களில் இரண்டு வகை ஒன்று மிதவாதிகள், மற்றொன்று தீவிரவாதிகள். மதவாதிகள் பெரும்பாலும் தீவிரவாதிகளாகவே வலம் வருகிறார்கள். இந்த கட்டுரையில் சொல்லப்படும் இந்துமதம் வேறு, இந்துத்துவம் வேறு எனும் கருத்து பலருக்கு ஏற்புடையதே. ஒரு இந்து என்பவர் பிறரை துன்புறுத்தமாட்டார் என்பது பொது கருத்து . ஆனால் ஒரு இந்துத்வா இந்துவை கூட துன்புறுத்த தயங்கமாட்டார். 

இந்துக் கடவுள்களை நம்பும் இவ்வளவு பெரிய  மக்கள் கூட்டம் , திைாதிராவிட அரசியலை மனத்தடையின்றி ஆதரித்து வந்ததற்கும், வருவதற்கும் கூட, இந்து அடையாள உணர்வின்மை ஓர் அடிப்படை காரணம். இது சற்று ஆச்சரியமான வாக்கியம். தான் ஒரு இந்து என்பதால் பிறரை சகித்துக்கொள்ளும் தன்மை உண்டு, மேலும் தனது மதத்தை முன்னிறுத்தி எந்த ஒரு இந்துவும் நடப்பது இல்லை. சாதியின் அடிப்படையில் செயல்படும்போது அங்கே இந்து என்பது எல்லாம் இரண்டாம்பட்சம்தான். இந்து அடையாளமிலி என இந்த கட்டுரை எழுப்பிய சிந்தனைகளுக்கு கட்டுரையாளர் ரோஸாவசந்த் அவர்களுக்கு மிக்க நன்றி. 

8. லஜ்ஜா : மதவாதத்தின் வன்முறை - லேகா இராமசுப்ரமணியன் (விமர்சனம்)

ஒரு நாவல் என்பது எப்படி இருக்க வேண்டும் என இந்த விமர்சனம் மூலம் அறிய முடிந்தது. தீவிர சிந்தனை கண்மூடித்தனத்தை எதிர்க்கும் என்பதான வாசகம் போற்றத்தக்கது. அந்த தீவிர சிந்தனை மதம் எனும் போர்வையில் நிகழும் போது  மதம் ஒரு கண்மூடித்தனம் என்ற நிலை உண்டாகிறது. பெண்களின் உரிமைக்காகப் போராடும் ஒரு எழுத்தாளர் நிச்சயம் அதன் வலியை மிகவும் திறமையாக சமூகத்திற்கு கொண்டு செல்ல முடியும் என்பதே இந்த நாவல் குறித்த விமர்சனம் மூலம் அறிய முடிகிறது.  எப்படி அரசியல் கட்சிகள், மத அமைப்புகள் சாதாரண மக்களைத் தூண்டிவிட்டு வேடிக்கைப்பார்க்கின்றன என்பது பலரும் உணர்ந்த ஒன்றுதான். நாவல் குறித்து ஆவல் எழுப்பியமைக்கு லேகா அவர்களுக்கு மிக்க நன்றி. 

9. அவ்வாறெனில் இது ஏன் இவ்வாறு நிகழ்ந்தது - தமிழில் எம். ரிஷான் ஷெரீப் (மொழிப்பெயர்ப்பு)

சினுவா ஆச்சிபி என்பவரின் சிறுகதையை மொழிபெயர்த்து சொல்லப்பட்டு இருக்கிறது. சினுவா பற்றிய குறிப்பும் பயனுள்ளதாக இருந்தது. வித்தியாசமான சிறுகதை. படித்த மனிதன் ஒருவன் இவ்வாறென ஒன்றை ஏன்  செய்தான்? இந்த கேள்விக்கு பல நிகழ்வுகளை வைத்து கேட்டுக்கொள்ளலாம். 

இப்படியாக வெகுசிறப்பாக பல விசயங்களை கொண்டுள்ள தமிழ் மின்னிதழ், தன்னை அலங்கரிக்க எடுத்துக்கொண்ட விஷயம் ஆண்டாள். அடுத்துப் பார்க்கலாம். 

(தொடரும்) 

Friday 22 May 2015

நுனிப்புல் பாகம் 3 - 4

 பகுதி - 3 

4. பாரதியின் கனவு

மறுநாள் காலை பாரதியைப் பார்த்து சுந்தரன் என்னோட காதலை உனக்குத்தான் புரியக்கூடிய சக்தி இல்லை என  சொல்லி சிரித்தான். பாரதி சுந்தரனை நோக்கி முறைத்தாள்.

''என்ன முறைக்கிற, உன்னைவிட ஒரு நல்ல பொண்ணுதான் என்னை காதலிக்கிறா, டாக்டருக்குப் படிக்கிறோம்னு உனக்கு தலைக்கனம், உன் திமிரு எல்லாம் வேற எங்காச்சும் வைச்சிக்கோ''

''சுந்தரா, நான் உன்னை எதுவும் சொன்னேனா, நீ யாரையாவது காதலி எனக்கென்ன. எனக்கு உன்னை காதலிக்க மனசு இல்லை அவ்வளவுதான். உனக்கு ஒரு பொண்ணு கிடைச்சிருக்கானுட்டு என்னை நீ இப்படி பேசறத நிறுத்து''

''சும்மா அழாத, உனக்கு அந்த வாசனும் கிடைக்க மாட்டான். அவனுக்கு மாதவியை பேசி முடிச்சிட்டாங்க''

சுந்தரன் சொல்லி முடிக்கும் முன்னர் அவனது பின்னந்தலையில் ஓங்கி ஒரு அடி விழுந்தது.

''என்ன வாய் ரொம்ப பேசுதே, எங்கப்பா உனக்கு சம்மதம் சொல்லிட்டாருன்னுட்டு நீ துள்ளுற, ஒழுங்கா இரு இல்லை வேலை இடத்தில இருந்து தூக்கிருவேன். நீ எதுக்கு பாரதி இவன்கிட்ட எல்லாம் பேசிட்டு இருக்க''

அருண் அங்கு வந்து நிற்பான் என்று சுந்தரன் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. தலையை குனிந்தவாறே அவ்விடம் விட்டு நகர்ந்தான் சுந்தரன்.

''அண்ணா, நீ அப்பா கிட்ட சொல்லி எதுவும் பிரச்சினை பண்ண வேண்டாம். பாவம் அவன்''

''சரி பாரதி''

பாரதி தனது தோழி கிருத்திகாவைச்  சந்திக்கச் சென்றாள்.

''என்னய்யா ஒருமாதிரி சோகமா இருக்க''

''ஒண்ணுமில்லை கிருத்தி''

''மறைக்காம சொல்லுய்யா''

''சுந்தரன் என்னை இன்னைக்கு வம்புக்கு இழுத்தான்''

''காதல் பண்ண ஆரம்பிசிட்டான்ல, இனி அவன் அப்படித்தான்.

''உன்னோட சொந்தக்கார பொண்ணுதான  அந்த பிரபா''

''தூரத்து சொந்தம்தான், சரிய்யா, உன்னோட ஜெனிடிக்ஸ் கனவு எல்லாம் எப்படி இருக்குய்யா, எதுவுமே நீ இதுவரைக்கும் சொன்னது இல்லையே''

''புதுசா ஒரு எண்ணம் இருக்கு கிருத்தி''

''சொல்லுய்யா''

''ஆர்என்ஏ மட்டுமே உள்ள ஒரு மனிதரை உண்டு பண்ணனும், டிஎன்ஏ இல்லாம சர்வைவ் பண்றமாதிரி செட் பண்ணனும்''

''என்னய்யா நீயும் நல்லா கதை சொல்ற, எந்த இங்க்லீஸ் படம் பார்த்த''

''கிருத்தி, நான் திருமால் அவரைப் போய் நாளைக்குப்  பார்க்கப் போறேன். அவருக்கு பல விஷயங்கள் தெரிஞ்சி இருக்கு. நீயும் வரியா''

''நான் வரலைய்யா, நீ மட்டும் போய்ட்டு வந்துரு. இன்னைக்கு ஏதாவது  படம் பார்க்கப் போகலாம்''

''இல்லை கிருத்தி, நான் இந்த ஆர் என் ஏ  பத்தி இங்க உட்காந்து எழுதலாம்னு வந்தேன், உனக்கு ஒண்ணும்  பிரச்சினை இல்லையே''

வாம்மா பாரதி என்றவாறு கிருத்திகா அம்மா வந்தார். கிருத்திகா, பாரதிக்கு குடிக்க ஏதவாது கொடுத்தியா என்றபடி உள்ளே சென்றவர் ஆரஞ்சு பழச்சாறு எடுத்து வந்தவர் எத்தனைவாட்டி சொல்லி இருக்கேன் என வைத்தார்.

''என்ன பாரதி அம்மா, அப்பா அண்ணன் எல்லாரும் நல்லா இருக்காங்களா, அடிக்கடி இந்தப் பக்கம் உன்னைக் காணோமே''

''எல்லோரும் நல்லா இருக்காங்க, கொஞ்சம் வேலை''

''சரி பேசிட்டு இருங்க''

கிருத்திகா அம்மா சென்றதும் பாரதி ஆர்என்ஏ குறித்து குறிப்பெடுக்க ஆரம்பித்தாள்.

'வினையூக்கிகள் மட்டுமே வேதிவினையில் ஈடுபடும் என அறிந்த உலகத்திற்கு இந்த ஆர் என் ஏக்கள்  வினையூக்கிகளாக செயல்படும் என்பது சமீபத்தில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. வினையூக்கிகள் புரதத்தினால் ஆனவை. புரதம் எப்படி மடங்கி உருவாகிறதோ அதைப்பொருத்தே ஒரு வினையூக்கி உண்டாகும். மேலும் இந்த வினையூக்கி குறிப்பிட்ட வேதிவினையில் மட்டுமே பங்கு கொள்ளும்.

இந்த வினையூக்கித் தன்மை கொண்ட ஆர்என்ஏக்கள் ரைம்போசைம் எனப்படும். இது நமது செல்லில் உள்ள ரைபோசோம்  அல்ல.  இப்படி புரதம் உண்டாகும் முன்னரே இந்த ஆர்என்ஏக்கள் ஒரு வேதிவினையை எதற்கு உண்டு பண்ணி இருக்கக்கூடாது எனும் சிந்தனை செய்யாத மக்கள் இல்லை. இதனால் ஆர்என்ஏ  தான் இந்த உலகில் உயிர்கள் உண்டாக காரணம் என எண்ணுபவர்கள் உண்டு'

''என்னய்யா பயங்கரமா குறிப்பு எடுத்துட்டு இருக்கப் போல''

கிருத்திகாவின் குறுக்கீடு கண்டு பாரதி நிமிர்ந்தாள்.

''நீ எழுதுய்யா, தொந்தரவு பண்ணிட்டேனோ?''

''இல்லை கிருத்தி, இந்த ஆர்என்ஏ  உலகம் அதிசய உலகம் போல தெரியுது''

''எனக்கு இந்த உலகம் போதும், என்னை அதில் இழுக்காதே''

''சரி, ஒரே ஒரு விஷயம் கேளு. இந்த ஆர் என் ஏ  தான் இந்த உலக உயிர்களுக்கு காரணம்''

''அப்படின்னா கடவுள்''

''அது வாசன் கிட்டதான் கேட்கணும்''

''வாசனுக்கு கடவுள், உனக்கு ஆர் என் ஏ''

''அப்படியே வைச்சிக்கோ, சரி கொஞ்சம் இரு''

கிருத்திகாவை பாதியில் நிறுத்திவிட்டு மேலும் சில வரிகள் பாரதி எழுத ஆரம்பித்தாள்.

'புரதம் உண்டாக்கும் வேதிவினையை இன்றளவில் இந்த ஆர் என் ஏக்கள் மட்டுமே நமது செல்லில் உள்ள ரைபோசொமில் செயல்படுத்துகின்றன. இந்த ஆர் என் ஏக்கள் ஸ்திரத்தன்மை அற்றவைகள் என்பதாலும், இவைகளால் எல்லா வேதிவினையை ஊக்குவிக்க முயலாது என்பதாலும் நாளடைவில் இந்த ஆர் என் ஏக்களை புறம் தள்ளிவிட்டு புரதம் முக்கிய வினையூக்கியாக செயல்படத் தொடங்கியது.

இந்த ஆர் என் ஏக்கள் டி என் ஏக்களில் இருந்து தற்போது உருவாகி அவை கரு உறையை விட்டு வெளியேறி இந்த புரதம்தனை உருவாக்குகிறது எனும்போது இந்த ஆர் என் ஏக்கள் தான் டி என் ஏக்கள் உருவாக காரணம் என்பதும் அறிய முடிகிறது. இந்த உலகம் ஆர் என் ஏ  உலகம் என்பதில் மறு கருத்து இல்லை'

''பாரதி, நாம வெளியில் போகலாமாய்யா?''

''கிருத்தி, இப்போதான் கொஞ்சம் எழுதி இருக்கேன், அதுக்குள்ளே வெளியில் போகணும்னு சொல்ற''

''உனக்கு இப்படி ஏதாவது கிடைச்சிருது, எனக்கு என்ன இருக்கு சொல்லுய்யா. ஜாலியா வெளியில் போய்ட்டு அப்புறம் வந்து எழுதலாம்''

''இனி நீ சொன்னால் கேட்கமாட்ட, சரி வா போகலாம்''

இருவரும் வெளியே கிளம்பி கொஞ்ச தூரம் கூட வந்து இருக்கமாட்டார்கள். அவர்கள் எதிரில் சுந்தரனும், பிரபாவும் வந்தனர். இதை பாரதி கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.

''கிருத்தி, நாம திரும்பிப் போய்ருவோம்''

''எதுக்குய்யா பயப்படற?''

''யார் வராங்க பாரு''

''நம்ம பிரபா, சுந்தரன்யா''

''சொன்னா கேளு கிருத்தி''

சொல்லிக்கொண்டு இருக்கும்போதே சுந்தரன் வெகுவேகமாக இவர்களை நோக்கி வந்தான். பிரபாவும் உடன் வந்தாள் .

''பாரதி, இதுதான் பிரபா. உன்னை விட அழகு''

''சுந்தரா, என்ன பேச்சு பேசுற'' கிருத்திகா சற்று கடுமையாகவே சொன்னாள்.

''சொன்னதுல என்ன தப்பு, பாரதிக்கு தான் ஒரு பெரிய அழகினு நினைப்பு''

பிரபா இடைமறித்து ''சுந்தரா, நீ இப்படி எல்லாம் பேசின அப்புறம் நான் உன் கூட பழகுறதை நிறுத்திறுவேன்'' என்றதும் சுந்தரன் நிலைமையை புரிந்துகொண்டு  அங்கிருந்து நகர்ந்தான். பிரபா இருவரிடமும் மன்னிப்புக் கேட்டுவிட்டு நகர்ந்தாள்.

''நீ சொன்னா கேட்டியா கிருத்தி''

''என்னய்யா அவன் இப்படி இருக்கான், அவனுக்குப் போய்  நான் உதவினேன் பாரு''

''விடு கிருத்தி, அவனுக்கு நான் அவனோட காதலை ஏத்துக்கலைன்னு மன வருத்தம். அவனுக்கு இது ஒரு காயம் மாதிரி இருக்கும். என்னோட கனவு இப்படி காதல் பண்றது இல்லை கிருத்தி. எனக்கு இந்த ஆர் என் ஏ  உலகம் தான் உலகம்''

''ஆர் என் ஏவை  கொஞ்சம் விட்டுத் தள்ளுயா''

''நாளைக்கு நிசமாவே நீ திருமால் பார்க்க வரலையா''

''ஏன்யா இப்படி உங்க கிராமத்து ஆட்கள் முக்கியம்னு இருக்க, அந்த திருமால் என்ன உனக்கு சொந்தமாய்யா. பெருமாள் தாத்தானு  சொல்ற, கொஞ்சம் யூத் மாதிரி பிகேவ் பண்ணுய்யா''

''எல்லாம் சொந்தம்தான்''

''எப்படி''

''நாளைக்கு வா சொல்றேன்''

''ம்ம் சரிய்யா''

விரைவாக வீட்டுக்குத் திரும்ப வேண்டும் என்பதில் பாரதி குறியாக இருந்தாள். கிருத்திகாவும் பாரதிக்கு ஏற்றபடி ஒரு மணி நேரத்தில் வீடு திரும்பினார்கள்.

விவசாய நிலங்களில் வீடு கட்டுவது போல இந்த பூமியில் பல மாற்றங்கள் எப்படி வெளி கண்ணுக்கு புலப்படுகிறதோ அது போல நமது உடலில் நடந்த அல்லது உடல் உருவாகும் முன்னர் உள்ளே நடந்த விஷயங்களை குறித்து வைக்காமல் போனாலும் இப்படித்தான் என ஒரு தீர்மானத்திற்கு வர முடிகிறது. அப்படித்தான் பாரதியும் ஆர் என் ஏவில் மூழ்கிக் கொண்டு இருந்தாள்.

(தொடரும்)


Friday 15 May 2015

தமிழ் மின்னிதழ் - 2 ''அந்தரத்தில் இருக்கும் தனியன் நான்''

ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்கத் தொடங்கிவிட்டால் பசி, உறக்கம் எல்லாம் போய்விடும் என்று சொல்லக் கேள்விப்பட்டு இருக்கிறேன். அப்படி உறக்கம் பசி தொலைத்து எல்லாம் நான் பாடப்புத்தகங்களைக் கூடப் படித்தது இல்லை. எத்தனை சுவாரஷ்யமாக இருந்தாலும் முழுவதும் முடித்துவிட வேண்டும் என்கிற ஆவல் எல்லாம் எப்போதும் இருந்தது இல்லை. விருப்பப்பட்டு நேரம் இருப்பின் அதன் மூலம் செய்வதுதான் வழக்கம். ஒரு புத்தகம் தந்தால் அதை வாசிக்க பல மாதங்கள் ஆகி இருக்கிறது.

இந்த தமிழ் மின்னிதழ் -2 மிகவும் சிறப்பாகவே வந்து இருக்கிறது. இத்தனை சிரமம் எடுத்து ஒரு இதழை வெளிக்கொண்டு வரும் ஆசிரியர் மற்றும் குழுவினருக்கு எனது பாராட்டுகள். அடுத்தமுறை புதிதாக ஒரு படைப்பினை எழுதி அதை அனுப்பி எனது படைப்பின் திறனை பரிசோதித்துக் கொள்ளலாமா என்றே எண்ணி இருக்கிறேன். பல எழுத்துத் திறமை உள்ளவர்களைத் தாண்டிச் செல்வது சாத்தியமா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் எழுத்து எழுதப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இப்படித்தான் முதலில் புனைவு, கவிதை என வாசித்துவிட்டு வேறு பக்கம் திரும்பலாம் என எண்ணி எல்லா புனைவுகளும், கவிதைகளும் வாசித்து முடித்தேன். அதற்குப்பின்னர் இங்கொன்று அங்கொன்று என வாசித்து இந்து இந்துத்தவா என்றெல்லாம் படித்து திரு. யுவன் சந்திரசேகர் அவர்களின் நேர்காணல் வாசிக்க ஆரம்பித்தேன்.

தமிழ் எழுத்து உலகில் நான் இழந்து கொண்டு இருப்பது நிறையவே என மனதுக்குத் தெரிகிறது. எனக்கு இவரப் பற்றி அறிந்து கொண்டதே இல்லை. இவரது குரல் ஒன்றை ஆசிரியர் ட்விட்டரில் வெளியிட அதை திரு. வைரமுத்து, திரு சரவணகார்த்திகேயன் என குழம்பியது உண்டு. அத்தனை அற்புதமான குரல். அழுத்தம் திருத்தமாக இருந்தது. ஒற்றுப்பிழை பற்றிக் குறிப்பிட்டு இருந்தார். எனக்கு இந்த பிரச்சினை உண்டு. சரிசெய்ய நன்னூல் படிக்கச் சொல்லி இருக்கிறார்கள். எனக்குத்தான் வாசிப்பு என்றால் நிறைய தூரம் என ஆகிவிட்டது.

இணையப் பழங்குடிகள் என்ற ஆசிரியரின் பார்வை மிகவும் யோசிக்க வேண்டிய ஒன்று. கிட்டத்தட்ட ஆறு ஏழு ஆண்டுகள் முன்னரே நண்பர் சுதாகர் என்ன சார் ஒரு பொண்ணு தெருவில நடமாட முடியல. போட்டோ எடுத்து எல்லோருக்கும் அனுப்பி வைக்கிறாங்க என்று சொன்னபோது எனக்கு சற்று ஆச்சர்யமாக இருந்தது. விடுமுறைக்கு மட்டுமே சென்று வருவது என்பதால் எனக்கு இது அவ்வளவாக தெரியாது. அதே ஏழு எட்டு வருடங்கள் முன்னர் எனக்கு நகைச்சுவை எஸ்எம்எஸ் என எனது அண்ணன் மகன் அனுப்பிக்கொண்டு இருந்தான். எப்படி இப்படி எல்லாம் என்றேன், சித்தப்பா வேண்டுமெனில் பல படங்கள் கூட உண்டு என சிரித்தான். எதுவும் அனுப்பாதே என்றேன். நிறுத்திவிட்டான். இன்று எனது நண்பன் ஒருவன் என்னை வாட்சாப் குழுமத்தில் இணைத்து இருக்கிறான். நிறுத்தாமல் ஏதோ  ஏதோ  பகிர்ந்து கொள்கிறார்கள். அதை எல்லாம் படிக்க கேட்க எனக்கு நேரமே இருப்பது இல்லை. நண்பன் என்பதற்காக சகித்துக் கொண்டு அந்த குழுமத்தில் இருக்கிறேன். அவ்வளவே.

நான் தமிழகத்தில் இருந்தவரை இணையம் ஒன்றும் அத்தனை பிரபலமாக ஏன் கணினி கூட அத்தனை இல்லை. நான் லண்டன் வந்தபின்னர்தான் முதன் முதல் மொபைல் போன்  வாங்கினேன். ஆனால் இந்த நாட்டிற்கு வந்தபிறகுதான் இணைய உலகமே அறிமுகம். அது எத்தனை ஆபத்தானவை என்பது குறித்து ஆசிரியர் எழுதி இருக்கிறார். எங்கள் ஊரில் ஒருவரை வஞ்சம் தீர்க்க இவன் இவளோடு இருக்கிறாள் என்பது போல பெயர்கள் இணைத்து ஊர் பொதுச் சுவற்றில் எழுதி வைப்பார்கள். அது அந்த ஊர் வழி செல்பவர்க்கு மட்டுமே தெரியும். இன்றைய காலத்தில் எள்ளி நகையாடும், வஞ்சம் தீர்க்கும் உலகம் ஒருபடி மேலே சென்று விட்டது.

1. ''அந்தரத்தில் இருக்கும் தனியன் நான்'' - யுவன் சந்திரசேகர் (நேர்காணல்)

இந்த இதழின் ஆசிரியர் நேர்காணல் எடுக்கச் செல்லும் முன்னர் அனைத்து நூல்களை வாசித்துச் சென்றார் எனச் சொல்ல இயலாது. நூல்களை வாசித்த காரணமே இவரை சந்திக்கச் சென்று இருக்கிறார் என்றே புரிய முடிகிறது. எப்படி குரல் எனக்குள் ஒரு சலனம் உண்டாக்கியதோ அதைப்போல் இவரது நேர்காணல் என்னுள் சலனம் உண்டாக்கியது. எனக்கும் ஒரு தண்டபாணி இப்போது இல்லமால் போனது குறித்து யோசிக்கிறேன். எனது முதல் நாவலுக்கு திரு ரத்தினகிரி, திருமதி பத்மஜா இருந்தார்கள். எப்படி எழுத்துகள் மட்டுமே எனக்குப் போதும் இந்த அரசியல் சினிமா எல்லாம் அவசியம் இல்லை ஒதுங்கி ஒரு படைப்பாளர் இருக்க இயலும் என்பதை இவரது நேர்காணல் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. நிறைய வாசித்து இருக்கிறார், நிறைய எழுத்தாளர்கள் மூலம் இவருக்குப் பழக்கம் இருக்கிறது. நமது நூல் குறித்து நாம் பேசுவது கூட கூச்சம் தரும்.

ஒரு படைப்பை முடித்துவிட்டு அடுத்த அடுத்த படைப்பு என ஒரு எழுத்தாளர் பயணம் அமையும். அவரது அப்பா குறித்து படித்தபோது பிரமிப்பாக இருந்தது. பலகாலங்கள் அவரது தந்தை வாழ்ந்து இருக்கக்கூடாதா என்ற ஏக்கம் எழாமல் இல்லை. இவருடைய நாவல்கள், சிறுகதை தொகுதிகள், கவிதைகள் என படித்துவிடலாம் என்றே இருக்கிறேன். ஏனோ என்னை அறியாமல் என்னுள் வாசம் செய்கிறார். எந்த ஒரு எழுத்தளாரும் என்னைப் பாதித்தது இல்லை, எல்லாம் எழுத்துதானே என்று சர்வ சாதாரணமாக கடந்து சென்று இருக்கிறேன். ஒரு எழுத்தாளரோ அல்லது எவரோ அவர்தம் நடவடிக்கைகளே என்னைப் பாதிக்கின்றன. இவர் கவிதைகள் எழுதுவேன் என்றும் கவிஞர் யுவன் என அழைக்கப்படுவேன் என்றும் சொன்னபோது என்னை நான் பார்த்துக் கொண்டேன்.

முன்னர் குறிப்பிட்டு இருந்தேனே எத்தனை சுவாரஸ்யம் இருந்தாலும் தள்ளி வைத்துவிடுவேன் என, என்னால் அப்படி தள்ளி வைக்க இயலாத ஒரு வாசிப்பு என்று சொல்லலாம். இந்த இதழின் ஆசிரியரின் கேள்விகள் இவரது மனதில் ஒரு பெரும் நீரோட்டத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. சலனமின்றி எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லி பயணித்து இருக்கிறார். மொழிப்பெயர்ப்பு நாவல்கள் கூட இருக்கும் போல. ஒரு தமிழ் எழுத்து உலகத்தில் நிச்சயம் சர்ச்சைகளில்  சிக்காத எழுத்தாளர் என்றே நினைக்கிறேன். இல்லையெனில் எங்கோ இருக்கும் எனக்கு இவரது பெயர் இன்னும் அறிமுகம் ஆகாதது ஆச்சரியம்.

ஒவ்வொருவரும் இவரது நேர்காணலைப் படித்து விடமாட்டார்களா என்றே எனக்குள் தோன்றுகிறது. சின்ன சின்ன சிந்தனைகளே ஒரு நாவல் வடிவம் எடுக்கின்றன. எனக்கு திருமதி புஷ்பலதா அவர்கள் சொன்னது இன்னும் நினைவில் இருக்கிறது. ஒரு படைப்பை எழுதி வைத்துவிட்டு அதை மூன்று அல்லது ஆறு மாதங்கள் பின்னர் படிக்கும்போது எப்படி இருக்கிறது எனப்பார்க்க வேண்டும், அப்போது அதில் ஏற்படும் மாற்றங்களை பதிவு செய்யலாம் என்று சொன்னது உண்டு. அதைப்போலவே இவரது கருத்துகளில் அந்த எண்ணம் மிளிர்கிறது. இவரது படைப்புகள் குறித்தேப் பயணம் நமக்கு சலிப்பில்லாத ஒன்று. இவரது எழுதியதைப் பற்றி எழுத நினைத்தால் ஆனந்தமாகவே இருக்கும்.

அந்தரத்தில் இருக்கும் தனியன் நான் என சொல்லி இருக்கிறார். இல்லை ஐயா, உங்களை பல தண்டபாணிகள் தாங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஒரு புத்துணர்வு தரும் உங்கள் நேர்காணல் என்று சொல்லி நன்றி சொல்லிக்கொள்கிறேன்.

1. யாத்திரை - சௌம்யா (கவிதை)

இவரது எழுத்துகளில் உள்ள எளிமை எனக்குப் பிடித்த ஒன்று. என்னைப் பொருத்தவரை ஒரு படைப்பு என்பது எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் இருக்க வேண்டும். அப்படித்தான் இந்த கவிதை அமைந்து இருக்கிறது. ஒரு மரணம் அடைந்த பின்னர் அந்த உடலில் உலவும் ஆன்மாவின் கூற்றாக அமைகிறது கவிதை. உடலை விட்டுப் பிரிந்தபின்னர் என்னவெல்லாம் செய்யத் துடிப்போம் எனும் பார்வையில் அமைந்து பாவப்பட்ட உடல் எரிக்கப்பட்டதாக அமைகிறது. மிகவும் அருமையான கவிதை.

2. அமில மழை - சொரூபா (புனைவு)

இந்த சிறுகதையைப் படித்தபோது ஒரு ஆணின் மனநிலை, ஒரு பெண்ணின் மனநிலை நமது ஊரில் எப்படி இருக்கிறது என அறிந்து கொள்ளலாம். எல்லாவற்றையும் சகித்துக் கொள்ளும் பெண், ஆனால் சகித்துக் கொள்ள இயலாத ஆண். இந்த சிறுகதையில் 'ஒரு ஆணும் பெண்ணும் சிரிச்சி பேசிக்கிறதாலெல்லாம் ஹெச் ஐ வி வராதாம்'' என முடியும். ஹரிக்கு உரைத்து இருக்கும்.

ஒரு சிறுகதை நம்மில் தாக்கத்தை ஏற்படுத்தும். அப்படி ஏற்படுத்திய சிறுகதை இது. இந்த கதையில் வரும் போதைப்பழக்கம், ஊசி ஏற்றுவது போன்ற வரிகள் எனக்கு ஆச்சரியத்தை வரவழைத்தது. இதன் மூலம் கதை நாயகன் எப்படிபட்டவன் என்று ஓரளவுக்குத்  தெரிந்து கொள்ள இயலும் என்றாலும் கடைசி வரிதான் கதைக்கான களம். ஹெச்ஐவி குறித்த ஒரு சம்பவம் உண்மையில் கண்டு இருக்கிறேன். இதன்  முழு விபரம் எழுதாமல் தவிர்க்கிறேன். ஒருவருக்கு மதுரையில் ஊசி ஏற்றியதன் மூலம் ஹெச்ஐவி வந்தது உண்டு. மிகவும் ஒழுக்கமானவர். ஹோட்டலில் சென்று சாப்பிடுவது கூட சுத்தமில்லை என்று எண்ணியவருக்கு அப்படி வந்தது தான் இன்னும் ஆச்சரியம். எத்தனை அஜாக்கிரதையாக இருக்கிறார்கள். ஒரு உயிர் என்றோ போய்  இருக்கும், நல்லவேளை மருந்துக்கு கட்டுப்பட்டு இருக்கிறது. இந்த சிறுகதையில்  CD4 பற்றி எழுதியதோடு ஒரு பெண்ணின் மனநிலை எல்லாம் விளக்கப்பட்டு  இருக்கிறது.

கதை மாந்தர்களுடன் பேச்சு, பழக்கம் என முதலில் ஆரம்பித்தே அத்தனை இயல்பாக சொல்லப்பட்டு இருக்கிறது. அட்டகாசமான சிறுகதை.

3. பூமிகாவுக்கு உதவிய பூ - என் சொக்கன், என் நங்கை என் மங்கை (புனைவு)

மிகவும் வித்தியாசமாக இருந்தது. இதில் வரையப்பட்ட ஓவியங்கள் சிறுவயதில் இங்கு குழந்தைகள் படிக்கும் புத்தகத்தில் உள்ள கதையைப் போன்று ஒரு உணர்வு தந்தது. உண்மையில் பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

கதை மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. கதைகளில் சிறுவர்கள் லாஜிக் பார்ப்பார்கள் என்பதால் கதை முடியும்போதும் ஒரு லாஜிக்குடன் முடிந்து இருந்தது. குச்சிகளால் கட்டப்பட்ட தெப்பம் என வெகு சிறப்பு.

4. அன்று - நவினன் (புனைவு)

மிகவும் அருமையான சிறுகதை. ஒரு சிறுகதையை மிகவும் சுவாரஸ்யமாக கொண்டு சென்று இருக்கிறார். இந்த கதையில் கடைசியில் முடியும் வரிகள்தான் கதைக்கான ஆதாரம் சொல்லிச் செல்லும். கதைநாயகன் எப்படிப்பட்டவன் என்று மிகவும் அருமையாகச்  சொல்லப்பட்டு இருக்கிறது. எதற்கு ஜெயிலுக்குச் சென்றான் என்பதற்கான பதில் அங்கே உண்டு. ஒரு சிறுகதையில் என்ன புரிந்து கொள்கிறோம் என்பதைப் பொருத்தே அந்த சிறுகதையின் அர்த்தம் புரியும்.

5. மொழி - செல்வராஜ் ஜெகதீசன் (புனைவு)

இந்த சிறுகதையை வாசிக்கும்போது நானும் எனது குடும்பத்தாரும் லண்டன் சரவணபவனில் அமர்ந்து உணவு உண்டு கொண்டு இருப்பது போன்ற ஒரு உணர்வைத் தந்தது. இந்த சிறுகதையில் மொழி குறித்த அதனால் ஏற்படும் மன உளைச்சல்கள் என எனக்கு மிகவும் நெருங்கிய உணர்வினை அழகாக விவரித்துச் சென்ற அருமையான கதை.

இது போன்று பல சூழலை சந்தித்து இருக்கிறேன். ஒரு நாயின் மொழியோடு கதை முடிகிறது. பல மொழிகள் கற்றுக்கொள்வது அவசியம் தான் எனினும் அதற்கான ஈடுபாடு சிறுவர்களிடம் நம்மிடம் வரும்படியாக இருக்க வேண்டும். என்ன சொல்லித்தருகிறார்கள் என தமிழ் வெறுத்த குழந்தைகள் அதிகம். மொழி நேசிப்புக்குரியது.

6. அவரன்றி யாரறிவார்? - கர்ணா சக்தி ( அனுபவம்)

இசையை இசையை கற்றவர்தான் ஆராதிக்க முடியும் என்றில்லை. ஒரு இசை நம்மில் எத்தனை சுதந்திரமாக நம்மை வசியப்படுத்துகிறது என்றே அருமையாக அனுபவித்துச் சொல்லப்பட்டு இருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்த பாடல் அது. அதைப்போல பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க என்ற பாடலும்.

இசை நம்மை வசீகரிக்கக்கூடிய தன்மை கொண்டது. இசைஞானியின் இசை குறித்து நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். கலைநயம், அபிநயம் போல இசைநயம் இந்த அனுபவத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது. ஆம், இளையராஜாவன்றி யாரறிவார்?

அடுத்து...

ஒரு குழப்பத்தைப்  படித்தேன் என்றால் மிகையாகாது, ஆனால் பல விசயங்களை அறிந்து கொள்ள முடிந்தது. இறுதியில் தெளிந்து கொண்டேனா என்பதை எப்படியும் அது குறித்து எழுதும்போது மீண்டும் வாசிப்பேன் எனவே நிச்சயம் அறிந்து கொள்வேன். அப்படி என்னதான் அப்படியொரு விஷயத்தை தமிழ் மின்னிதழில் படித்தேன்?

(தொடரும்)