Friday 5 June 2015

தமிழ் மின்னிதழ் -2 கடும் கண்டனங்கள்

தமிழ் மின்னிதழ் -2  தரவு இறக்கிக் கொள்ள இங்கே அழுத்தவும்

20. சான்டல்வுட்டின் டாரன்டீனோ  - அதிஷா

இவர் நன்றாக எழுதக்கூடியவர், விமர்சனம் பண்ணக்கூடியவர் என்பது அறிந்து இருக்கிறேன். சில வலைப்பதிவுகள் படித்து இருக்கிறேன். எனது புத்தக வெளியீட்டுக்கு நன்றியுரை சொன்னவர். இம்முறை கூட இவரை சந்திக்க இயலாமல் போனது.

சற்றும் எதிர்பாராத கட்டுரை எனலாம். கன்னட திரையுலகப் பார்வை குறித்து எழுதி இருக்கிறார். சான்டல்வுட் என்றால் கன்னட திரையுலகம் என்று இந்த தமிழ் மின்னிதழ் படித்துதான் அறிந்து கொண்டேன். தமிழ், தெலுங்கு, மலையாளம் திரையுலகம் போல கன்னட திரையுலகம் அத்தனை பிரசித்தி பெற்றது இல்லை என்றே பலரும் அறிவார்கள். இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். மலையாளம், தெலுங்கு என ஓரிரு படங்களே பார்த்து இருக்கிறேன். இதுவரை கன்னடம் பார்த்தது கிடையாது. அந்த திரையுலகில் நடக்கும் அதிசயங்களை விவரிக்கிறார் கட்டுரையாளர். லூசியா ஒரு என்ற படம் கன்னடப்படம் என்று கூடத் தெரியாமலே இருந்து இருக்கிறேன். இவர் விவரிக்கும் படங்களைப் பார்த்தால் கன்னட திரையுலகம் ஒரு கதை நிறைந்த மலையாள திரையுலகம் போல இருக்கும் என எண்ணலாம். 'உளிடவரு கண்டன்டே' சிம்பிள் ஆகி ஒந்த் லவ் ஸ்டோரி' படங்கள் குறித்த பார்வை சிறப்பு. டாரன்டீனோ போல உளிடவரு கண்டன்டே அமைக்கப்பட்டு எனும் ஒப்பீடல் அவரது படங்கள் பார்த்தவருக்கு மட்டும் புரியும்.

21. கொஞ்சம் மெய் நிறைய பொய் - யுவகிருஷ்ணா

இவரையும் ஓரளவுக்கு  இவரது எழுத்துகள் எனக்கு அறிமுகப்படுத்தி இருக்கின்றன. இவரது எழுத்துகள் மட்டுமின்றி சமூக அக்கறை கொண்டவர் என்றே அறிந்து இருக்கிறேன்.

சற்றும் எதிர்பாராத எழுத்துதான். இவர்கள் இருவரும் வேறு ஏதோ  எழுதி இருப்பார்கள் என எதிர்பார்த்தது எனது தவறுதான். ஆனால் எழுதிய விஷயங்கள்  மிகவும் நன்மைத் தரக்கூடியவை. மெய் நிகரி எனும் ஒரு புத்தக விமர்சனம் இது. முதல் சில பகுதிகளை வாசித்தபோது எதுவும் தொடர்பற்ற ஒன்றாக இருக்கிறதே என எண்ண  கதைக்குள் கொண்டு செல்கிறார். ஒரு கதைக்கான களம் இருந்தால் போதும், அது இப்படித்தான் எழுத வேண்டும் எனும் அமைப்பை இன்றைய எழுத்தாளர்கள் உடைத்து வருகிறார்கள் என்பதற்கு இந்த நூல் உதாரணமாக இருக்கும் என்றே தோன்றுகிறது. இப்படித்தான் எழுத வேண்டும் என்றில்லை. நாவல் ஒன்று எழுதியபோது இந்தப் போக்கினை மட்டுமே கடைப்பிடிக்கிறேன். எவருக்கு உறவுகள் பற்றிய விசயங்கள் அவசியம், தொழில் சார்ந்த விஷயங்களை  கதை மூலம் சொல்ல வேண்டும். எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் குறிப்பிட்டது போல மிகவும் துணிச்சலாக உண்மை எழுதும் நபர்கள் வேண்டும். மெய்நிகரி நிச்சயம் அனைவரும் படிக்க வேண்டிய ஒரு நாவல் என்றே அறிய முடிகிறது.

22. அபயம் - ஹரன் பிரசன்னா

இவரும் நூல் மூலம் சிறிது பழக்கம். நிறைய விளம்பரங்கள் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். ஆனால் எனக்குத்தான் புத்தகங்கள் குறித்த அக்கறை இல்லாமல் போய்விட்டது. அப்படியே இவரது தொடர்பும் இப்போது இல்லை.

வித்தியாசமான கதைக்களம். கண்கள் குறித்து விவரிக்கப்பட்டு ஒரு குற்ற உணர்வுடன் தகிக்கும் கதைநாயகன் குறித்த கதை இது. மிகவும் சுவராஸ்யமாக இருந்தது.

23. மோடி முட்டிகள் - அராத்து

இந்த கட்டுரை அதிர்ச்சித் தரக்கூடிய வகையில் இருந்தது. கற்பழிப்பு குறித்து இந்த கட்டுரை விளக்குகிறது. ஒரு சமூகத்தில் நடக்கும் இழிநிலைகள், பெண்களுக்கு ஏற்படும் அநீதிகள் என விவரித்துக் கொண்டே போக அடுத்து என்ன படிக்கிறோம் என்றே எனக்குத் தெரியவில்லை. இதுபோன்ற வார்த்தைப் பிரயோகங்கள் அவசியமா என்று கேட்டால் அது அப்படித்தான் என்று சொல்லக்கூடிய மனநிலையில்தான் இருக்கிறார்கள். வழக்கத்தில் சொல்லப்படும் விஷயங்கள் என அப்படியே எழுத்தில் வைக்கிறார். இது வாசிப்பவர்களுக்கு எத்தகைய எண்ணத்தைத்  தரும் என அறுதியிட்டு சொல்ல இயலாது. எனக்கோ இப்படித்தான் தமிழில் எழுதி ஆக வேண்டுமா என்றே இருந்தது. எழுதியவரை அல்லது இந்த இதழின் ஆசிரியரை குறைபடுவதில் பிரயோசனமில்லை. ஆனால் இப்படித்தான் பேசுகிறார்கள் என சொல்லும்போது முட்டாள்கள் குறித்து முட்டாள்தனமாக எழுதித்தான் ஆக வேண்டும் என்றால் எழுத வேண்டியது  இல்லை. ஆனால் அப்படித்தான் எழுதுவேன் என்பவர்களை ஒன்றும் சொல்ல இயலாது. இது ஒரு கலாச்சார சீர்கேடு என குறைப்பட்டு  கொள்ள வேண்டியது இல்லை. குடிகார எழுத்தாளர்கள் அதிகரித்து விட்டார்கள். குடிகார சிந்தனையாளர்கள் தமிழில் பெருகிக் கொண்டு இருக்கிறார்கள். இலக்கியம் என இதை எல்லாம் இனி வரும் சமூகம் ஏற்றுக்கொள்ளும் போல. அதற்காக கடும் கண்டனங்களை இந்த கட்டுரைக்குத் தெரிவித்துக் கொள்ளலாம். எவரேனும் இந்த கட்டுரையை வாசித்துப் பார்த்தால் ஒழுக்கமற்றவன் ஒழுக்கம் சொல்வது போல தென்படும். இது தமிழ் எழுத்துக்கான விமர்சனம் மற்றும் எனது எழுத்து நிலை வேறு எனும் பார்வையில் வைக்கப்படும் விமர்சனம். அவ்வளவுதான்.

24. சாலையோரம் - பிரபாகரன்

பிரமாதம். ஒரு கவிஞரின் பார்வையில் எல்லாம் கவித்துவமாகத் தெரியும் என்பதற்கு இந்த கவிதை சாட்சி. மிகவும் அழகாக பல நிகழ்வுகளை படம் பிடித்து நமக்குத் தந்து இருக்கிறார்.

25. ஆம் ஆத்மி - கொடுங்கனவாகும் கற்பனை - தமிழில் சைபர் சிம்மன்

ஒரு கடிதம் மூலம் ஆம் ஆத்மி குறித்து பல விசயங்கள் அறிய நேர்ந்தது. சற்று அயர்ச்சியாகவும் இருந்தது.

நன்றி மற்றும் வணக்கம்.

இந்த தமிழ் மின்னிதழ் மிகவும் சிறப்பாக இருந்தது என்றால் மிகையாகாது. திருஷ்டி பொட்டு  மீது ஆசிரியருக்கு அக்கறை கிடையாதுதான். ஆனால் எப்படியேனும் ஒரு கட்டுரை அப்படி வந்து அமைந்து விடுகிறது.

முற்றும்

Wednesday 3 June 2015

தமிழ் மின்னிதழ் - 2 லீனா மணிமேகலை ஆண்டாளின் தோழிகள்

கவிதை என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று கேட்டால் எனக்குத் தெரியாது. எதற்கும் நீங்கள் இங்கே கவிதை என எழுதப்பட்டு இருக்கும் பகுதியில் சென்று பார்த்தால் நான் சொல்வதன் உண்மை என்னவென அறிந்து கொள்வீர்கள். கவிதை எனக்கு எழுதத் தெரியாது என தமிழ் இலக்கியம் அறிந்த ஒருவர் சொன்னதால் வெறும் வார்த்தைகள் என தலைப்பிட்டே கவிதைத் தொகுப்பு வெளியிட்டேன். அப்படி இருக்கும்பட்சத்தில் கவிதைகளைப் படித்து உள்வாங்கிக் கொள்ளும் சக்தி இருக்கிறதா என்றுத் தெரியாமல் பல கவிதைகளைப் போற்றி பாராட்டி வருகிறேன். இந்த தமிழ் மின்னிதழில் லீனா மணிமேகலை கவிதைகள் என சில வாசித்தேன். இவரைப் பற்றி நிறைய கேள்விப்பட்டு இருக்கிறேன். கேள்விப்பட்டதோடு அப்படியே இருக்கட்டும். சர்ச்ச்சைக்குரியவர்கள் இவ்வுலகில் அதிகம் கவனம் ஈர்த்துவிடுகிறார்கள். பிறர் சொல்லத் தயங்குவதை சொல்பவர்கள் மக்களால் கவனிக்கப்படுகிறார்கள்.

10. லீனா மணிமேகலை கவிதைகள்

நட்சத்திர தூசி.

நீ எனக்கு யாரடா! இந்த கவிதையை எப்படி வேண்டுமெனினும் சிலாகித்துக் கொள்ளுங்கள். ஒரு அன்னியோன்யமான அன்பை சொல்லிக்கொண்டு இருக்கிறது. திரைச்சீலை அன்பை விலக்குவதில்லை. கவிதைத்துவம் என்பது இதுதான். வார்த்தைகளில் காட்சி அமைப்பு ஏற்படுத்தி விடுவது.

அடுத்து இதுவும் ஒரு நிலை சொல்லிச் செல்கிறது. இடைவெளி குறித்தும் ஆயுள் ஒரு இரண்டக  நிலை. திரையரங்கு இருளில் இருந்து காட்சிப்படுத்தபடுகிறது. பூச்சியின் ரீங்காரம் என திரை இரைச்சல் என நிறைய யோசித்தோ யோசிக்காமலோ கவிதை வரிகள் வந்து விடுகின்றன.

11. குவியொளி - மகி

ஒரு விஷயத்தை ஒரு வார்த்தையில் சொல்ல இயலும். ஒரு வாக்கியமாக சொல்ல இயலும். ஒரு கதையாக சொல்ல இயலும். ஆத்திசூடி எழுதப்பட்ட வரலாறு சுவாரஸ்யம். அதுபோல ஒரு வாக்கியமாக பல குவிந்து இங்கே ஆயிரம் கதைகள் சொல்லிக்கொண்டு இருக்கிறது. உடன்பாடு, உடன்படு.

12. ச. முத்துவேல் கவிதைகள்

இங்கே குறிப்பிடப்பட்டு இருக்கும் கவிதைகள் மிகவும் ஆழ்ந்த விசயங்களைச் சொல்லிச் செல்கின்றன. இரும்புக்கரம் என்பது ஒரு ஆதிக்க சக்தியின் வெறியாட்டத்தை கவிதை விளக்கம் சொல்கிறது. சில வரிகள் அதன் வீரியத்தை உணர்த்தும் வண்ணம் எழுதி இருப்பது சிறப்பு. காதலிப்பது சற்று வித்தியாச கோணம். கலவி உரையாடல்கள் சற்று வித்தியாசம்தான். தலைப்புக்கும் கவிதைக்கும் சம்பந்தம் இல்லாதது போன்று இருப்பினும் நல்ல கவிதைதான்.

13. மணிவண்ணன் - சமூகப் புரட்சியின் கலைஞன்  முரளிகண்ணன்

ஒருவரைப் பற்றி எப்படி எழுத வேண்டும் எனக்கேட்டால் இப்படித்தான் எழுத வேண்டும் என இந்த கட்டுரையை தைரியமாகக் குறிப்பிடலாம். இத்தனை விரிவாக இத்தனைத் தெளிவாக சொல்லப்பட்டு இருப்பதற்கு நன்றிகள். எனக்கு மணிவண்ணன் அவர்களை மிகவும் பிடிக்கும். அமைதிப்படை படம் பார்த்தபோது வியந்தது உண்டு. எனக்கு ஒரு படைப்பாளியாக அவர் இருந்து இருக்க வேண்டும் என்றே எண்ணியது உண்டு. அவரின் அரசியல் நிலைப்பாடு, எண்ணம் என பல விசயங்கள் அறிய முடிந்தது.

14. நிழலோவியம் - புதியவன்

ரசித்து மகிழலாம். தெளிவாக இருக்கிறது.

15. அப்பா - செந்தில்சிபி

அப்பாவுக்கு நான் எதுவுமே செய்யலை. கொள்ளி  மட்டும் தான் வைச்சேன். அப்பா பற்றி எழுதிக் கொண்டே இருந்தால் எழுதிக்கொண்டே இருக்கலாம். அழகிய உணர்வுகளை அற்புதமாக படம் பிடித்து இருக்கிறார். அவரது வாழ்க்கையை சொன்னதில் இருந்து செந்தில் சார் வாழ்வும் அறிய முடிகிறது. மிகவும் நேசித்த பதிவு.

16. ராஜா சந்திரசேகர் கவிதைகள்.

கவிதை என்றால் இவரது கவிதைதான் அதி அற்புதம் என சொல்லலாம். எழுத்தாளர் நர்சிம் அவர்கள் குறிப்பிட்ட கவிஞர் இவர்தான் என்றே நினைக்கிறேன். இவரது கவிதைகள் பல வாசித்து இருக்கிறேன். தீட்டப்பட்ட வைரம் போல ஜொலி ஜொலிக்கும். முதல் கவிதை ஒரு நிமிடம் நம்மை அப்படியே நிலைகுத்தி இருக்கச் செய்யும். ஏம்மா இப்படி செஞ்சிட்ட? பிரமாதம் குறுங்கவிதைகள்.

17. நா ராஜூ கவிதைகள்

வார்த்தைகளுடன் பயணித்துக் கொண்டே இருக்கலாம். இந்த விளையாட்டு எனக்குப் பிடித்து இருந்தது. சில வார்த்தைகள் இலக்கியத்தன்மையைத் தந்துவிடும் வல்லமை கொண்டவை. தமிழுக்கு உண்டான சிறப்பு. இவரது கவிதைகளில் ஆழமான சிந்தனைகளை கண்டு கொண்டது போல் இருந்தது.

18. ஆண்டாளின் தோழிகள் - சங்கர் கிருஷ்ணன்.

பிரமாதம். திருப்பாவை குறித்து எத்தனை அனுபவித்து எழுதி இருக்கிறார். ஏதோ  பாடல் என்று நான் இருக்க ஒவ்வொரு பாடலுக்கும் இருக்கும் ஒரு கதையை அழகாக சொல்லி இருக்கிறார். நாலாயிர திவ்விய பிரபந்தம் பற்றிய பார்வை வெகு சிறப்பு. நிறைய ரசித்து மீண்டும் மீண்டும் வாசித்த பதிவு இது.

(தொடரும்)

நுனிப்புல் பாகம் 3 - 5

பகுதி - 4

5. வாசனின் விவசாயம் 

வாசன் பெரியவரை சந்திக்கச்  சென்றான். அவரிடம் சாத்திரம்பட்டி பற்றி கேட்டுக்கொள்ள அதிக ஆர்வம் இருந்தது. இருப்பினும் அதை கேட்க வேண்டாம் என முடிவு செய்தான். பெரியவரின் வீட்டில் வேறு இருவர் அமர்ந்து இருந்தார்கள். உள்ளே செல்வதா, வேண்டாமா என முடிவு செய்வதற்குள் பெரியவர் வாசனை அழைத்தார். 

''வாசா உள்ளே வாப்பா''

அழைத்தபின்னர் செல்லாமல் இருப்பது சரியில்லை என உள்ளே சென்றான் வாசன். அங்கிருந்த அந்த வேறு இரண்டு  நபர்கள் வாசன் அப்படிங்கிறது நீதானா என்பது போல பார்த்தார்கள். அனைவருக்கும் வணக்கம் தெரிவித்துக் கொண்டு அங்கிருந்த ஒரு நாற்காலியில் வாசன் அமர்ந்தான். 

''தம்பி, என்ன வேலை பார்க்கிறீங்க''

நல்ல முறுக்கலான மீசை வைத்து பார்ப்பதற்கு முரட்டுத்தோற்றம் கொண்ட நடுத்தர வயது மிக்க ஒருவர் கேட்டார். 

''விவசாயம் பார்க்கிறேன்''

''விவசாயமா, தம்பிக்கு படிப்பு ஏறலையோ?''

அந்த கேள்வியை வாசன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. புன்முறுவல் செய்தான். அதற்குள் பெரியவர் குறுக்கிட்டார். 

''ரொம்ப நல்லா படிக்கிற பையன், பன்னிரண்டாவதுல கூட ஆயிரத்து நூறு மார்க்கு. விவசாயம் மட்டுமே பார்ப்பேன் அப்படின்னு முடிவு பண்ணிட்டார்''

''யாருயா இவனுக்கு பொண்ணு கொடுப்பா''

மெல்லிய தேகம் கொண்ட சற்றே வயதான மற்றொரு நபர் சொன்னதைக் கேட்டு வாசன் மேலும் சிரித்துக் கொண்டான். 

''பொண்ணு எல்லாம் நிச்சயம் பண்ற அளவுல இருக்கு. அதுவும் டாக்டர் படிக்கிற பொண்ணு'' 

பெரியவர் சொன்னதும்தான் தாமதம் இருவரும் கலகலவென சிரித்தார்கள். 

''பொருந்தாத மாட்டைப் பூட்டினா வெள்ளாமை வீடு வந்து சேராது. படிக்காத இவனுக்கு டாக்டர் பொண்ணு, அந்த பொண்ணு கொடுக்கிற இளிச்சவாயன் யாருன்னு பார்க்கணுமே''

சிரிப்பை நிறுத்தி இப்படி உதிர்த்த வார்த்தைகள் அவரைப்போலவே சற்று முரட்டுத்தனமாக இருந்தது. 

''இந்த ஊரில ஒரு டிராக்டர் காணோம், எல்லாம் மாட்டு உழவுதானா, மாட்டுப்பயக  இருக்கிற ஊருல மாடுதான் உழவு போல''

அவர்கள் நிறுத்தாமல் பேசிக்கொண்டு இருந்தார்கள். வாசனுக்கு அங்கு இருக்கப் பிடிக்கவில்லை. 

''ஐயா, நான் கிளம்புறேன், பிறகு பேசலாம்''

வாசன் சொல்லிக்கொண்டு கிளம்பும் முன்னர் பெரியவர் அந்த இருவரையும் வீட்டைவிட்டு வெளியேப் போகச் சொன்னார். 

''தராதரம் தெரியாம உங்களை இங்க உட்கார வைச்சிப் பேசினேனே அது என்னோட தப்பு. இந்த வாசன் தான் ஊர்த்தலைவர். நீங்க என்ன வியாபாரம் பார்க்க நினைச்சாலும் இவரோட அனுமதி இல்லாம பண்ணக்கூடாது. உங்க புத்தி எல்லாம் சரியில்லை. கிளம்புங்க''

பெரியவரின் சற்று கோபமான குரல் கண்டு அவர்கள் ஏதும் திடுக்கிடவில்லை. 

''அப்படி யாரு இருக்கானு கேட்கத்தான் கேட்டோம். இவர் இப்படியே விவசாயம் பண்ணினா டாக்டர் பொண்ணு விவசாயம் பார்க்குமா, இல்லை இவரோட பிள்ளைகதான்  விவசாயம் பாக்குமா. டாக்டர் பிள்ளைக மாடு மேய்க்கிறத உங்க ஊருல ஏத்துக்குவாங்கள. ரொம்ப கோபபட்டு பேசுறீரு. ஏன்டா வாசு நீ இத்தனை மார்க்கு வாங்கி ஒரு டாக்டர், எஞ்சின்னீர் படிக்காம இப்படி வேகாத  வெயிலுல விவசாயம் பாக்கற, உனக்கு புத்தி ஏதும் கழண்டு கீழ விழுந்துருச்சா, ஒரு அம்பது ஏக்கர் நிலத்தை இந்த ஊருல வளைச்சி போட்டுரலாம்னு தான் வந்தோம். நீ அனுமதி கொடுக்கலன்னா என்ன ஊருல இருக்கவங்ககிட்ட பேசி வாங்கிக்கிறோம்''

பெரியவர் எழுந்தார். 

''இங்க யாரும் உங்களுக்கு நிலம் தர மாட்டாங்க, நீங்க கிளம்பிப் போகலாம்''

''உங்களைப் பார்க்கச் சொன்னாங்கனு வந்தா, மரியாதை இல்லாமல் நடந்துக்கிறீரு. இதே ஊருக்குள்ள  நாங்க வரத்தான் போறோம். உங்களை என்ன பண்றோம்னு பாரு. வாடா போலாம்''

அவர்கள் இருவரும் எதுவும் சொல்லாமல் வெளியேறினார்கள். வாசன் அவர்களை பின்தொடர்ந்து சென்றான். 

''உங்களுக்கு என்னப்  பிரச்சினை''

''ஒரு பிரச்சினையும் இல்லை. உன்னப் போல முட்டாப்பயக எல்லாம் விவசாயம் பாக்கத்தான் லாயக்கு. நீ எல்லாம் எப்படிடா ஊர்த்தலைவர் ஆன. உனக்குப் படிப்பு வரலைதானே. ஆயிரம் இரண்டாயிரம் மார்க்குன்னு பொய் சொல்றியா''

அந்த நேரம் பார்த்து முத்துராசு அங்கே வர அவர்கள் பேசியது அவர் காதில் விழ சரியாக இருந்தது. என்ன நினைத்தார் எனத் தெரியவில்லை. அங்கிருந்த ஒரு கட்டையை எடுத்து அவர்கள் இருவரையும் சரமாரியாக அடி அடித்தார். வாசன் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதற்குள் அங்கே கூட்டம் கூடியது. என்ன ஏது  என விசாரிக்காமல் அவர்கள் இருவரையும் பலமாகத் தாக்கினார்கள். வாசன் எவ்வளவோ முயற்சித்தும் முடியவில்லை. 

''இவனுங்க ஊர் ஊராப் போய்  ஆளை ஏமாத்துற கூட்டம், திருட்டுப் பயல்க''

''என்ன அண்ணே சொல்றீங்க''

''டேய் அவனுகளை அந்த மரத்தில கட்டிப்போடு, தோலை உரிச்சிருறேன். இவனுக பத்தி உனக்குத் தெரியாது. இவனுக கூட்டம் பெரிசு''

சத்தம் கேட்டு பெரியவர் வெளியே வந்துப் பார்த்தார். 

''என்ன காரியம் பண்ணி இருக்கீங்க, யார் இப்படி இவங்களை அடிச்சது. முத்துராசு எதுக்கு இப்படி எல்லாம் பண்ணி வைச்சிருக்க''

''ஐயா, இவனுக பொல்லாதவனுக. ஊருக்குள்ள குடியேறி அந்த ஊரையே உலையில் போட்டுருவானுக''

''அப்படி எங்க நடந்திச்சி. உனக்கு எப்படி விபரம் தெரியும்''

''நீங்க சாரங்கன் கிட்ட பேசிப் பாருங்க ஐயா''

''அவன்கிட்டயா?''

''ஆமாயா, சாரங்கனை கூப்பிட்டு பேசுங்க''

முத்துராசு சொன்னது கேட்டு பெரியவர் குழப்பம் கொண்டார். அதற்குள் வாசன் அவர்கள் இருவரிடம் பேசி மன்னிப்புக் கேட்டுக் கொண்டு இருந்தான். 

''எங்களை அடிச்ச இந்த ஊரை கொளுத்தாம விடமாட்டோம்'' என வலியின் ஊடே அவர்கள் பேசியது முத்துராசுவிற்கு பெரும் எரிச்சல் உண்டாக்கியது. அங்கிருந்த கல் ஒன்றை எடுத்து முரட்டுத்தோற்றம் கொண்டவரின் வாயில் சரியாக எறிந்தார். வாசன் அதிர்ச்சி அடைந்தான். 

''அண்ணே, போலிஸ் கேஸ் ஆகிரப்போதுண்ணே, விடுண்ணே''

''ராசு, என்ன பழக்கம் இது. கொஞ்சம் கூட மரியாதை இல்லாம. நாங்க எல்லாம் இங்க நிக்கிறது கண்ணுக்குத் தெரியலையா'' பெரியவர் சற்று கோபமாகவே கண்டித்தார். 

''ஐயா, நீங்க இப்படி வரவங்க எல்லாரையும் மன்னிச்சி அனுப்புங்க, அவனுக இப்படியே வந்து வந்து போகட்டும். அன்னைக்கு அப்படித்தான் திருட வந்தவங்களை மன்னிச்சி அனுப்பினீங்க''

''ராசு''

பெரியவர் சப்தம் இட்டதும் முத்துராசு அமைதி ஆனார். 

''இங்க நடந்தது எல்லாம் உங்களை எச்சரிக்கத்தான். மற்றபடி உங்க மேல எங்களுக்கு எந்த கோபமும் இல்லை. ராசு, இவங்களை கூப்பிட்டு ஆஸ்பத்திரிக்குப் போ''

அவர்கள் இருவரும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தனர். வாசன் தான் அவர்களை அழைத்துச் செல்வதாக அவர்களை அழைத்தான். அவர்கள் தாங்களாகவே செல்வதாக தடுமாறிச் சென்றார்கள். கூட்டம் அங்கிருந்து கலைந்தது. 

முத்துராசு தோட்டம் செல்வதாக கூறிக்கொண்டு அவர்களை வேறு வழி சென்று மடக்கினார். 

''பழி வாங்கணும்னு  இந்தப் பக்கம் இனிமே வந்த, நான் என்ன பண்ணுவேன்னு இப்ப காட்டினது விட பலமடங்கு இருக்கும். நீ நாராயணபுரத்தில பண்ணினது எனக்குத் தெரியாதுன்னு நினைச்சியா. சாரங்கன்கிட்ட சொல்லி வை. உன் கூட்டத்து ஆளுக எவனாச்சும் இந்த ஊருல குடி இருக்க வந்து குடி கெடுக்க நினைச்சான், நான் மனுசனா இருக்கமாட்டேன்''

எதுவும் சொல்லாமல் அவர்கள் நடக்க ஆரம்பித்தார்கள். 

வாசன் தன்  தோட்ட  வேலைகள் முடித்துவிட்டு வீடு வந்து சேர்ந்தான். வாசனுக்கு விவசாயம் பார்ப்பது அத்தனை தவறான காரியமா என யோசிக்க வேண்டும் போல் இருந்தது. என் பிள்ளைகள் விவசாயம் பார்ப்பார்களா? இந்த சுந்தரன் விவசாயம் பார்க்காமல் வெளியூர் போய் விட்டானே. மாதவி எதற்கு மருத்துவம் படிக்கச் செல்ல வேண்டும். 

ஊரில் விவசாயம் பார்த்த கொஞ்சம் சிலரில் பள்ளிப்படிப்பை பாதியில் விட்டவர்களாகவே  அவனுக்குத் தெரிந்து கொண்டு இருந்தது. கிராமங்கள் விவசாயம் நம்பி இருக்கிறது. விவசாயம் மழையை நம்பி இருக்கிறது. ஆனால் இந்த நிலத்தை எல்லாம் விலைக்கு வாங்கி அதில் தொழிற்சாலை எழுப்ப, வீடுகள் கட்டி விற்க ஒரு கூட்டம் இன்று அடி வாங்கியவர்களைப் போல அலைந்து கொண்டு இருக்கிறது. 

முத்தையா தனது நிலங்களை எல்லாம் விற்றுவிட்டு தனது பிள்ளைகளிடம் சென்று இருக்கப்போவதாக நேற்றுதான் மந்தையில் கூறிக்கொண்டு இருந்தார். இவரிடம் அதிகம் பணம் கொடுத்து அந்த நிலத்தை இவர்கள் கையகப்படுத்திக் கொண்டால் என்ன ஆவது என வாசன் யோசித்தான். அடிபட்டு போனவர்கள் நிச்சயம் திரும்புவார்கள். 

''என்ன யோசனை, மந்தையில் இன்னைக்கு என்ன பெரிய கலாட்டாவா. அந்த முத்துராசு கையை வைச்சிட்டு சும்மா இருக்கமாட்டானா''

தனது அப்பாவின் குரல் கேட்டு எழுந்தான் வாசன். 

''கிராமத்து நிலத்தை வாங்கி, அதில வீடு கட்டுற கூட்டம் பிரச்சினைப்பா''

''நானும் இப்பதான் கேள்விபடறேன். நீ அதை நினைச்சி வருத்தப்படாதே''

அப்பாவின் ஆறுதல் வார்த்தைகள் வாசனுக்கு இதமாக இருந்தன. அப்போது முத்துராசு வாசனை அழைக்க வந்தார். 

''வாசா, வா நாம போய்  அந்த சாரங்கனை என்ன ஏதுனு  விசாரிச்சிட்டு வருவோம்''

''இப்ப வேணாம்ணே, அவர்தானு  நமக்கு எப்படி தெரியும்''

''சொன்னாக் கேளு, பெரியவர்தான் உன்னை கூப்பிட்டு வரச்சொன்னார்''

வாசனுக்கு சாரங்கனை சந்திக்கப் போவதா வேண்டாமா என யோசனையாக இருந்தது. 

(தொடரும்)