Thursday 14 May 2015

நுனிப்புல் பாகம் 3 -3

பகுதி -2 

3. பழியும் நிவராணமும்

''ஐயா, உங்ககிட்ட ஒரு விசயம் கேட்கலாமா''

வாசன் என்ன கேட்கபோகிறான் என்பதை யோசித்த விநாயகம் மறுப்பு எதுவும் சொல்லாமல் சரி கேள் என்றே சொன்னார்.

''உங்களுக்கும் நாச்சியார் அம்மாவுக்கும் என்ன சம்பந்தம்''

''வாசன், எனக்கு என்ன சொல்றதுனு  தெரியலை, அது ஒரு நிறைவேறாத காதல்''

''நீங்க காதலிச்சீங்களா''

''என்ன வாசன், காதல் வரக்கூடாதா?''

''இல்லை ஐயா, எனக்கு கொஞ்சம் ஆச்சரியம் அதான் கேட்டேன்''

''நீயும் மாதவியும் நேசிக்கிற மாதிரி எங்க நேசிப்பு இருந்து இருந்தால் எங்களுக்குப் பிரச்சினை வந்து இருக்காது, நான் சைவம், நாச்சியார் வைணவம். இது ஒரு தடையாக இருக்கும்னு நான் அப்ப எதிர்பார்க்கலை''

''ஐயா, ஆனா நீங்க இந்த நெகாதம் செடி, பெருமாள் கோவில் எல்லாம் ஒரு வைணவம் பின்பற்றிய முறைதானே. அதுவும் உங்கள் கனவில் நாராயணன் வந்து சொன்னதாகதானே இந்த புத்தகம் எல்லாம் சொன்னீங்க. உங்களை சைவம்னு யாருமே சொன்னது இல்லையே''

''என் பேரு மட்டும் தான் நான் மாற்றலை வாசன், மற்றபடி நான் எல்லாம் வைணவத்துக்கு முழுசா மாறிட்டேன். அதுக்கு காரணம் நாச்சியார் தான்''

பெரியவரின் கண்களில் கண்ணீர் முட்டி நின்றது. ஒரு இளமைக்கால சரித்திரத்தை ஒவ்வொரு கிராமங்களும் தாங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. நிராகரிக்கப்பட்ட கனவுகள். பழமையில் ஊறிப்போன மனிதர்கள் என இன்னும் ஆங்காங்கே கிராமங்கள் இருக்கத்தான் செய்கின்றன. இன்றைய தலைமுறைக்கு புரியாத ஒரு வாழ்க்கை ஒன்றை கிராமம் முழுவதும் இன்னும் வெறுத்து ஒதுக்கிவிடவில்லை.

''உங்க சொந்த ஊரு சாத்திரம்பட்டிதானா ஐயா''

''ஆமாம் வாசன், எங்க குடும்பம் மட்டும்தான் சைவம். மற்ற எல்லாருமே வைணவம். எங்க குடும்பம் அங்கே எப்படி போனாங்கனு  நானும் என்னோட அப்பா அம்மாகிட்ட கேட்டது இல்லை. எங்க சொந்தகாரங்க யார் எவர்னு  எனக்குத் தெரியாது. அந்த ஊர்க்காரங்க மட்டுமே சொந்தம்னு  நினைச்சப்பதான் இந்த நாச்சியார் பழக்கம் ஆனா. இப்ப இதுக்கு மேல வேண்டாமே''

குரல் தழுதழுத்தது. காதலித்தவரிடம் காதலின் வலி பற்றி கேட்டு அறிந்து கொள்ள முடியாது. காதலின் வலி என்பது என்றுமே ஆற்ற இயலாத ஒரு துயரம். வாழ்வின் அடிப்படை என்னவெனில் காதல் தோற்ற பின்னர் வேறு ஒரு பெண்ணை அல்லது ஆணினை கல்யாணம் பண்ணி வாழ்வது சகஜம். அப்படி இல்லாதபட்சத்தில் மரணம் எனும் வழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள். காதலுக்கு என கல்யாணம் பண்ணாமல் வாழ்வது மிகவும் அரிது.

''ஐயா''

''என்னை கொஞ்சம் தனியா இருக்க விடுப்பா''

வாசன் பெரியவரிடம் சரி என சொல்லிவிட்டு வீட்டுக்கு கிளம்பினான். எவருமே சொல்லாத விசயம் இது. இந்த ஊரில் எவருமே எதையும் பெரியவர் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. இறந்து போன பெருமாள் தாத்தாவுக்கும், சென்னையில் இருக்கும் திருமாலுக்கும் பெரியவர் பற்றி தெரிந்து இருக்கிறது. ஆனால் மாதவி பற்றி சாத்திரம்பட்டியில் சொன்னார்களே. அதுவும் கொஞ்ச வருஷம் முன்னால நீ வந்துருக்கக் கூடாதாம்மா என்று அந்த நாச்சியார் அம்மாள் எதற்கு மாதவியிடம் சொல்லி இருக்க வேண்டும். வாசன் நிறைய யோசிக்கலானான்.

அன்று இரவே மாதவிக்கு அழைப்பு விடுத்தான்.

''மாதவி, உனக்கு பெரியவர் விநாயகம் பற்றி தெரிஞ்சதை சொல்லு''

''என்ன மாமா, உருகும் உயிர் கதை சொல்ல சொல்றீங்களா?''

''மாதவி, நான் சீரியசா கேட்கிறேன். அவரும் நாச்சியார் அம்மாவும் காதலிச்சாங்கனு  பெரியவர் சொன்னார்''

மாதவி மறுமுனையில் எதுவும் பேசாமல் இருந்தாள். சிறிது நேரம் அமைதிக்குப் பின்னர் மாதவியே  தொடர்ந்தாள்.

''மாமா, நான் அடுத்தவாட்டி ஊருக்கு வரப்ப எல்லாம் விபரமா சொல்றேன். பெரியவரை அந்த ஊரில இருந்து விரட்டி விட்டுட்டாங்க. அவர் குளத்தூர் வந்துட்டார். அதுக்கு காரணம் பெருமாள் தாத்தா. சாரங்கன் ஐயா கொஞ்சம் உதவினார்''

''உனக்கு எப்படித் தெரியும் மாதவி, என்னைக்காச்சும் நீ இதுபத்தி என்கிட்டே பேசி இருக்கியா''

''மாமா நான் யாருகிட்டயும் எதுவும் பேசிக்கிறல, ப்ளீஸ் மாமா புரிஞ்சிக்கோங்க, உங்ககிட்ட இது எல்லாம் சொல்ல வேணாம்னு நினைக்கல. யாராச்சும் பெரியவர் பத்தி ஊருக்குள்ள எதுவும் பேசுறாங்களா, நாம எல்லாம் அவர் ஊருக்கு வந்தப்பறம் பிறந்தவங்க மாமா. நான் எழுதின கதையே இப்போதான மாமா படிச்சீங்க''

''சரி மாதவி, நீ ஊருக்கு வந்தப்பறம் சொல்லு. படிப்பு எல்லாம் எப்படி போய்க்கிட்டு இருக்கு''

''பரவாயில்லை மாமா, என்னோட ஆராய்ச்சி சம்பந்தமா ஒரு புது மேடம் கிட்ட உதவி கேட்டு இருக்கேன், சரினு  சொல்லி இருக்காங்க. இந்த பெரியவர் விஷயத்தை குழப்பிக்க வேண்டாம். பாரதி போன்  பண்ணினாள். சுந்தரன் அங்க வேலைப் பார்க்கிற இடத்தில ஒரு பொண்ணை  காதலிக்கிறானாம். ஏன்  மாமா உங்க குடும்பம் காதல் குடும்பமா?''

''மாதவி, என்ன சொல்ற நீ. அவன் திருந்தவே மாட்டான். போனவாட்டி பிரச்சினைனு  ஊருக்கு வந்தான். இப்ப மறுபடியும் என்ன இது. நான் அவனுக்கு போன்  பண்றேன்''

''ஐயோ மாமா, வேண்டாம். நான் உங்ககிட்ட தகவலாத்தான் சொன்னேன். நம்ம ஊருக்கு எதுவும் தெரியக்கூடாதுன்னு சொல்லிட்டா. அந்த குட்டிப் பையன்களைப் போய்  பார்த்தீங்களா?''

''பார்த்தேன் மாதவி''

''உங்களுக்கு வியர்த்துக் கொட்டி இருக்குமே''

''மாதவி''

''சும்மா சொன்னேன் மாமா. ஊருக்கு வரப்ப பேசறேன். எதுவும் முக்கியம்னா போன்  பண்ணுங்க''

''உனக்கு எல்லா விஷயங்களும்  முன்கூட்டியே தெரியுமா மாதவி''

''ஒண்ணுமே தெரியாது மாமா, சரி வைச்சிடுறேன்''

வாசனுக்கு மாதவி பற்றி அன்றுதான் யோசனை வந்தது. ஒருவேளை இவளுக்கு எல்லாம் தெரியுமோ. அப்படியே தெரிந்தாலும் முன்கூட்டி நடப்பதை எப்படி சொல்ல இயலும். எனக்கு வியர்த்தது அவளுக்கு எப்படித்  தெரியும். யூகித்து இருப்பாளோ?

வாசன் வீட்டின் மாடியில் மயங்கி விழுந்தான். தற்செயலாக அங்கு வந்து அவன் அம்மா தரையில் விழுந்து கிடந்த வாசனை எழுப்பிவிட்டார். வாசன் முழித்துப்  பார்த்தவன் அம்மா பெரியவர் பத்தி ஏதாவது பழைய வாழ்க்கை தெரியுமா என்றான். எதுவும் தெரியாதுப்பா என்றார். வாசன் அதுக்கு மேல் கேட்பது முறையில்லை என தவிர்த்தான்.

சாத்திரம்பட்டிக்குள் ஒரு சோகம் ஒளிந்து கொண்டு இருந்தது.

(தொடரும்)


Monday 11 May 2015

திருச்சிக்கோர் வாழ்த்து - மெகா டிவிட்டப்



ஶ்ரீரங்கத்து அரங்கனே 
உன் தரிசனம் கண்டு 
பாடுகிறேன் தமிழில் வாழ்த்துப்பா 
காவிரியாற்றின் அருகில் 
நீ கொண்ட கோலம் 
ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு 
பிடித்துப் போனது
இதோ இங்கே குழுமி இருக்கும் 
இவர்கள் கொண்ட தமிழ் கோலம்
எனக்கு மிகவும் பிடித்துப் போனது

பொன்மலை உச்சிமலைக்கோட்டை
கொள்ளிடம் என்றே இயற்கை எழில் 
கொஞ்சும் திருச்சி கொண்ட குதூகலம்

சமயபுரத்து மாரி அம்மனும் 
உறையூர் வெக்காளியம்மனும்
சுற்றி காத்திருக்கும் ஊரும் இது 
பள்ளிவாசல் தேவலாயம் கல்லூரிகள்
பள்ளிகள் என சிறந்த 
பேருவகை கொள்ளும் ஊரும் இது 

காவிரியும் கல்லணையும் 
களித்து சொன்ன பெருமை இன்று
எழுத்துக்களால் எண்ணங்களால்
மீண்டும் சங்கமித்து மகிழ்ந்தோம் நன்று

திருவானைக்கோவில் பெயர் கொண்டு
யானை புகாவண்ணம் கோவில் உண்டு 
சேவலும் சாமியாகும் பஞ்சவர்ணமாய்
எறும்பீஸ்வரர் அருளால் திருவெறும்பூர்
உலகில் உள்ள உயிர்கள் எல்லாம்
இனிய தமிழ் கொண்டு 
நேசித்து இருக்கச் சொன்ன
வள்ளுவ ஔவையும் உண்டு

மாம்பழசாலையும் வயலூர் முருகனும்
திருபட்டூர் பிரம்மனும் அமைதியே
உருவான சிவனது திருநெடுங்குளமும்
சோழப்பேரரசின் உறையூர் தலைநகரமும்
சுற்றியே அமைந்த திருச்சி சொல்லும்
மக்களின் உழைப்பின் உன்னதமும்
நமது தமிழின் வியத்தகு மேன்மையும்

முக்கொம்பு பூங்காவும் மறைகதை பேசும்
குணம் தவறினால் இருக்கிறது குணசீலம் 
இரவிலும் வெப்பக்கதிர்வீச்சு இங்கே 
தமிழால் இளங்காற்று வீசுகிறது இன்று

சரித்திரத்தில் இது திருசிபுரம் 
நாம் கூடிய கூட்டத்தால் எழுச்சிபுரம்
ஶ்ரீரங்கத்து அரங்கனே 
என்வாழ்த்து கேட்டு
சயனநிலை கலைத்து 
எம்மோடு தமிழ் பருகு.

வாழிய நண்பர்கள்
வாழிய தமிழ்ப்பற்று 

கவிதையை வடிவமைத்து தந்த Mr K K Gire அவர்களுக்கும், கவிதையை வாசித்த திரு பாண்டித்துரை அவர்களுக்கும் மிக்க  நன்றி

Tuesday 5 May 2015

நுனிப்புல் பாகம் 3 - 2

நுனிப்புல் பாகம் 3 - 1

2. சுந்தரனின் இரண்டாவது காதல்

சுந்தரன் இன்று தன்னுடன் வேலைப் பார்க்கும் பிரபாவிடம் தனது விருப்பத்தைச் சொல்லிவிடலாம் என தீர்மானம் கொண்டான். பிரபா குறித்து ஓரளவுக்குத் தகவல்கள் சேர்த்து வைத்து இருந்தான். பிரபா சம்மதம் சொல்லிவிட்டால் பிரச்சினை இருக்காது என்றே திட்டமிட்டான். பாரதியுடன் நேர்ந்தது போலத் தனக்கு மீண்டும் ஒரு ஏமாற்றம் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதில் சற்று பதட்டம் இருக்கத்தான் செய்தது. வாசனின் கவிதைப் புத்தகம்தனை தேடினான். அதில் இருக்கும் சில கவிதைகளை மனப்பாடம் செய்து கொண்டான்.

சேகர், அருண் வரும் முன்னரே வேலைக்குச்  சென்று சேர்ந்தான் சுந்தரன். பிரபாவும் கொஞ்சம் தாமதமாகவே வந்து சேர்ந்தாள். பிரபா, மாநிறம். நடுத்தர உயரம். இங்கு வேலைக்குச்  சேர்ந்து ஆறு மாதங்களே ஆகிறது. எல்லோரிடம் நன்றாக பழகும் குணம்.

எப்போது பிரபாவிடம் பேசும் தருணம் கிடைக்கும் என சுந்தரன் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தான். மனம் வேலையில் ஒட்டவில்லை. அருண் கூட இரண்டு முறை சுந்தரனை வந்து சத்தம் போட்டுச் சென்றான். மதிய வேளையில்தான் நேரமே கிடைத்தது. எப்படியும் சொல்லிவிட வேண்டும் எனும் எண்ணத்தில் பிரபாவை நோக்கிச் சென்றான் சுந்தரன்.

''பிரபா, உன்கிட்ட ஒரு முக்கிய விஷயம் பேசணும்''

''என்ன திடீருனு''

''நீ யாரையாச்சும் காதலிக்கிறியா''

''இல்லை, எதுக்கு இந்த கேள்வி. நான் இங்க வேலைக்கு சேர்ந்ததுல இருந்து பார்க்கிறேன், உன்னோட பார்வை சரியில்லையே''

''உன்னை யாரும் காதலிக்கிறாங்களா''

''எனக்கு எப்படித்  தெரியும், இதுவரைக்கும் யாருக்கும் சொல்ல தைரியம் இருந்தது இல்லை, ஆமா என்ன இன்னைக்குப் பேச்சு ஒருமாதிரியா இருக்கு''

''உன்னை எனக்குப் பிடிச்சிருக்கு, உன்னை நான் காதலிக்கலாமா?''

இதைக் கேட்டதும் பிரபா குலுங்கி குலுங்கிச் சிரித்தாள்.

''என்ன சிரிக்கிற?''

''காதலிச்சிக்கோ, யாரு வேணாம்னு சொன்னாங்க''

''உனக்காக இந்த கவிதையை யோசிச்சி வைச்சேன், நீ கேளு''

''கவிதை எழுதுவியா, சொல்லு கேட்கலாம்''

''நான் மட்டும் இருந்தேன்
உலகம் வெறுத்தது
நீ என் உடன் வந்தாய்
உலகம் இனித்தது''

''நீதான் எழுதினியா?''

''ஆமாம், இன்னொரு கவிதை கேளு''

''சொல்லு''

''பொய் உரைக்க வருவதில்லை
ஐயம் உள்ளத்தில் எழுவதில்லை
உன்னுடன் பேசுவதாலே''

''நிசமாவே நீதான் எழுதினியா''

''இதோ இதுவும்
வலி வந்ததும் உன்னை மட்டும் நினைத்தேன்
வந்த வழி நோக்கியே வலியும்  சென்றதே''

''வாசன் அப்படின்னு ஒரு கவிஞர் உனக்குத் தெரியுமா?''

''யார் வாசன்?, என்ன கவிஞர்?''

''நீ சொன்ன கவிதை எல்லாம் நான் கவிதைப் புத்தகத்தில் படிச்சி இருக்கேன். என் வீட்டுல இந்த புத்தகம் இருக்கு. கிருத்திகா என்னோட சொந்தம்தான். தமிழரசி என்னோட அத்தை. இவங்களை உனக்குத் தெரியாதுன்னு சொல்லாதே. அவங்களோட எங்களுக்கு கொஞ்சம் மனஸ்தாபம், அதான் அவங்க யாரு நாங்க யாருனு இருக்கோம், ஆனா கிருத்திகா, பாரதி எல்லாம் என்னோட பேசுவாங்க. உன்னோட பார்வையை வைச்சி நான் உன்னை தெரிஞ்சிக்க முயற்சி பண்ணினப்ப நீ யாரு, பாரதி யாரு, இந்த கம்பெனி முதலாளி யாருனு எல்லாம் எனக்குத் தெரியும். உன்னை திட்டிகிட்டே இருப்பாரே அருண் அவர் கூட யாருனு தெரியும்''

''பிரபா அது வந்து''

''பொய் உரைக்க வருவதில்லை அதை நீ சொல்லி இருக்கக்கூடாது, உனக்கு பாரதியோட லவ் பெயிலியர், இப்போ என்கிட்டே முயற்சி பண்ற. என்கிட்டே பெயிலியர் ஆயிருச்சினா அடுத்து யாரு''

''இல்லை பிரபா, உன்னை எனக்கு நிறையப் பிடிச்சி இருக்கு''

''எதுக்கு இப்படி காதலிக்கத் துடிக்கிற''

''காதலிக்காம கல்யாணம் பண்ணினா வாழ்க்கை நல்லா இருக்காது''

''யார் சொன்னா''

''எனக்குத் தெரியும், நானாத்தான் சொல்றேன்''

''சுந்தரா அங்கே என்ன பேசிட்டு இருக்க, மணி என்ன ஆகுது. பிரபா அவனோட உனக்கு என்ன பேச்சு''

அருண் அவர்களை நோக்கி கத்தியபடியே வந்தான். சுந்தரன் பிரபாவிடம் சொல்லிவிடாதே என கண்களால் கெஞ்சினான்.

''இல்லை சார், சில புரோசெசிங் எல்லாம் இன்னைக்குள்ள பண்றதைப் பத்தி சொல்லிட்டு இருந்தார்''

''சுந்தரா, ஒழுங்கா வேலையை மட்டும் பாரு. நீ எனக்கு நிறைய உதவியா இருக்கிறனுதான் இன்னும் இங்கு இருக்க. வேலை இடத்தில இப்படி வெட்டியா நின்னு பேசிட்டு இருந்த குளத்தூருக்கு பெட்டியை கட்டு''

''வேலை பத்திதான் பேசிட்டு இருந்தேன்''

''போ, எதிர்த்துப் பேசாத''

சுந்தரனை  இது போல பலமுறை அருண் அவமானபடுத்திக்கொண்டே இருந்து வருகிறான். தனது தங்கையை காதலித்தான் என்கிற ஒருவித மன எரிச்சல் அவனுடன் இருந்து கொண்டே இருந்தது. வேறு வழியின்றி இதை எல்லாம் பொறுத்துக் கொண்டே இருப்பது சுந்தரனுக்கு பழகிவிட்டது. வாசனின் கவிதைகள் இத்தனை தூரம் பிறர் தெரிந்து இருப்பார்கள் என சுந்தரன் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.

அன்று மாலை வேலையை முடித்து கிளம்பும்போது சேகர் வந்து சுந்தரனை வீட்டுக்கு தன்னுடன் வருமாறு அழைத்தார். சுந்தரன் தான் ஓரிடம் செல்ல இருப்பதாக சொல்லி பிறகு வருகிறேன் என சொல்லி அனுப்பினான். அருண் சுந்தரனை முறைத்துப் பார்த்துவிட்டு 'வேகாம வீடு வந்து சேரு' என எச்சரித்துச் சென்றான்.

வீட்டிற்கு கிளம்பிய பிரபா சுந்தரனிடம் வந்தாள். அவர்கள் இருவரும் சேர்ந்து பக்கத்தில் இருக்கும் ஒரு காபி கடைக்கு சென்றார்கள். இவர்கள் இருவரும் இப்படி சேர்ந்து செல்வது இன்றுதான் முதல்முறை.

''சுந்தரா, சொந்தமா ஒரு கவிதை எழுதி எனக்குத்  தா, இப்படி அடுத்தவங்க கவிதையைத் திருடாதே. உன்னை அருண் சார் எப்படி அவமானப்படுத்துறார், உனக்கு வேற வேலை இந்த ஊரில கிடைக்காதா?''

''இல்லை பிரபா, வேற எங்கயாச்சும் வேலைக்குப் போனா ஊருல திட்டுவாங்க, அதுக்கு இவர்கிட்ட திட்டு வாங்கிட்டுப் போயிரலாம். உன்னை நான் காதலிக்கலாமா''

''இனிமே திட்டு வாங்காம இருக்கப்பாரு. வாரத்தில மூணு நாளு திட்டு வாங்கிருற''

''என்மேல இருக்கப் பிரியத்திலதான நீ அருண் கிட்ட சொல்லலை''

''பாவமா இருந்துச்சி, அதனால்தான் சொல்லலை, சரி நீயா யோசிச்சி ஒரு கவிதை இப்போ சொல்லு''

''சூரியன் ஒளி  தொலைத்தாலும்
உனது ஒளி
ஒருபோதும் என்னுள் தொலையாதே

நிலவு சுற்றுப்பாதை
மறந்தாலும்
உன்னை பின்தொடரும்
பாதை எனக்கு மறக்காதே

கொடுங்கனவு ஒன்றில்
நீ வந்து நின்றதும்
மகிழ்கனவாக மாறுதே

என் அழகு பன்மடங்கு
கூடிவிடும்
என் உலகு சிறந்து
மலர்ந்து விடும்
நீ மட்டும் காண்பதாலே

என் மதியும் மயங்கும்
வான் மதியும் தயங்கும்
உன் அழகை காண்பதாலே''

சுந்தரன் மடமடவென சொல்லி முடித்தான். பிரபா குலுங்கி குலுங்கி மீண்டும் சிரித்தாள்.

''என்ன சிரிக்கிற பிரபா''

''மறுபடியும் வாசன் கவிதைகளா''

''உனக்கு எப்படி இத்தனை ஞாபகமா தெரியும்''

''அப்போ அப்போ எடுத்துப் படிப்பேன், இதுமாதிரி நிறைய கவிதைகள் மனசுல பதிந்து இருக்கு. எல்லோரும் சொல்றதுதானே''

''என்னை உனக்குப் பிடிச்சி இருக்கா''

''காதலில் தோத்து இருக்க, அதனோட வலி உனக்குத் தெரியும். அதனால என்னை நீ ஏமாத்தமாட்டனு நம்பலாம்''

''அப்படின்னா என்னை நீ காதலிப்பியா''

''நீதான் என்னை காதலிக்க ஆரம்பிச்சிட்டியே''

''உனக்கு கவிதைப் பிடிக்குமா''

''ஆமாம்.

சாப்பிட்டு முடித்து இருந்தேன்,
மீண்டும் பசித்தது.
அப்போதுதான் உணர்ந்தேன்
நீ இன்னும் சாப்பிட்டு இருக்கவில்லை என''

''சூப்பர் சூப்பர்''

''இதுவும் வாசன் எழுதின கவிதைதான். நான் ஒண்ணும்  எழுதலை. இந்த கவிதையை மனப்பாடம் பண்ணலையா''

''பிரபா உங்க வீட்டுல நீ ஒரே பொண்ணுதான. உனக்கு அப்பா இல்லைதானே. உங்க அம்மா கூட பள்ளிக்கூட டீச்சர்''

''நான் யாரு என்ன பண்றேன் எங்க குடும்பம் எப்படி அப்படின்னு ஊரெல்லாம் விசாரிச்சி இருக்கப்போல''

''உங்க சொந்தம் பந்தம் எல்லாம் விசாரிக்கலை. உங்க வீடு பக்கம் கூட நிறையவாட்டி வந்து இருக்கேன்''

''கள்ளத்தனம் உன்கிட்ட நிறைய இருக்கு''

''இல்லை, உன் மேல இருக்கிற அக்கறைதான்''

''பார்க்கலாம் எப்பவுமே இருக்குமான்னு''

இருவரும் வீட்டிற்கு கிளம்பினார்கள். பிரபாவுடன் அவளது வீடு வரை வந்து விட்டுவிட்டே தனது வீடு நோக்கிச் சென்றான் சுந்தரன். அன்று இரவு சாப்பிட அனைவரும் அமர்ந்து இருந்தார்கள். சேகர் சுந்தரனை நோக்கி கேட்டார்.

''பிரபாவுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்?''

''எந்த சம்பந்தமும் இல்லை''

''சுந்தரா, என்கிட்டே நீ எதையும் மறைக்க நினைக்காதே, உண்மையை சொல்லு. என்னை நம்பித்தான் உன்னை உங்க அப்பா அம்மா இங்கே அனுப்பி இருக்காங்க''

''எங்க ரெண்டு பேருக்கும் ஒருத்தர் ஒருத்தரை பிடிச்சி இருக்கு''

''அப்பா இவனை நம்ம வீட்டை விட்டு வெளியேப் போகச்  சொல்லுங்க. இவனால நமக்குப் பிரச்சினைதான்''

அருண் சற்று கோபத்துடன் சொன்னான். பாரதி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.

''இரு அருண். நீ இவனை இனிமே வேலை இடத்தில திட்டுறதை குறை. எத்தனை தடவை சொல்றது. சுந்தரா, நீ வேலை இடத்தில் வேலையில்  கவனமா இரு. நான் பிரபா அம்மாகிட்ட பேசுறேன். எதுவும் பிரச்சினை வராமல் இருக்கணும்''

''நான் எதுவும் பிரச்சினை பண்ணமாட்டேன்''

''அப்பா, என்ன நீங்க. இவனை...''

''அருண். நீ தலையிடாதே''

சுந்தரனுக்கு அன்று நிம்மதியாக இருந்தது. தன்னை சேகர் ஐயா புரிந்து இருக்கிறார் எனும்போது சற்று ஆறுதலாக இருந்தது, இல்லையெனில் இந்த அருண் பெரிய பிரச்சினை பண்ணி இருப்பான். தன்னை நிராகரித்த பாரதிக்கு இது ஒரு நல்ல பாடமாக இருக்க வேண்டும், அவளுக்குள் ஒரு வலி உண்டாகி இருக்க வேண்டும். அதனால்தானே அமைதியாக இருந்தாள்  என சுந்தரன் நினைத்தான்.

சுந்தரன் வாசனின் கவிதைப் புத்தகத்தைப் புரட்டினான்.

'எல்லாம் சொல்லிவிட்டாயா என்றாள்
ஆம் என்றேன்.
இனி நீ சொல்ல ஒன்றும் இல்லைதானே? என்றாள்.
உன்னை காதலிக்கிறேன் என்றேன்.
வெட்கித்  தலை குனிந்தாள்'

(தொடரும்)