Tuesday 28 July 2009

ஆண்டாளுக்குக் கல்யாணம் - 6 (நிறைவுப் பகுதி)





மாதங்கள் ஓடிக்கொண்டிருந்தது. ஜீன் தெரபிக்காகச் சென்று விசாரித்ததில் ஜீன் தெரபி எல்லாம் செய்ய முடியாது என சொல்லிவிட்டார்கள். இந்த விசயம் தெரிந்தபின்னர் எப்படி கல்யாணம் செய்து வைப்பது என மேலும் கவலைகொண்டனர் பெற்றவர்கள். ஆனால் இவர்கள் இருவரும் மனது மாறவில்லை.

இத்தனை விசயங்கள் நடந்தாலும் கோபாலகிருஷ்ணன் வீட்டுக்குப் பக்கமே வரவே இல்லை. அவனுக்கு அழைப்பு விடுத்தால் மட்டுமே வீட்டுக்கு வந்து செல்வான். அவனை சென்று பார்க்க அவனோ தொலைதூரத்தில் வேலையில் இருந்தான். அவனைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என பெற்றவர்கள் ஒன்றும் தகவல் சொல்லாமல் இருந்தார்கள்.

ஆண்டாள் பட்டப்படிப்பை வெற்றிகரமாக முடித்தாள். ஒருநாள் திடீரென பாலரங்கன் வீட்டிலிருந்து பெண் கேட்டு வந்தார்கள். கோதைநாச்சியாரிடம் அன்று காலையில் கனவு கண்டதாகவும் தான் மணமேடையில் அமர்ந்து இருந்து திருமணம் நடந்ததாக சொல்லி இருந்தாள் ஆண்டாள். அவர்கள் பெண் கேட்டு வந்ததும் மறுக்காமல் சரியென சொன்னார்கள்.

மருத்துவத் துறையில் முன்னேற்றம் ஏற்படும் எனவும் அப்படி ஏற்படாது போனாலும் அதனால் கவலை வேண்டாம் நாங்கள் எப்போதும் சந்தோசமாக வாழ்வோம் என இருவரும் பெற்றோருக்கு உறுதி சொல்லி சந்தோசம் தந்தார்கள். கல்யாணத் தேதி எல்லாம் குறித்தாகிவிட்டது. இனி பத்திரிக்கை எல்லாம் அடிக்க வேண்டும்.

இப்படி திடீரென நடந்தேறிய முடிவு அந்த அக்ரஹாரம் எல்லாம் தெரிய ஆரம்பித்தது. ஆண்டாள் பெரு மகிழ்வு அடைந்தாள். சின்னஞ்சிறு வயதில் தனக்கு கல்யாண விருப்பம் வந்தது கண்டு இன்று இரண்டாம் முறையாக வெட்கப்பட்டாள்.

''சாதி, இனம், மொழி என எத்தனையோ காதலுக்குத் தடையாய் இருந்து வந்ததுண்டு, ஆனால் நோய் தடையாய் ஒருபோதும் வந்தது இல்லை, நமக்கு இந்த நோயும் தடையாய் வந்து நிற்கவில்லை, ஏனெனில் காதலும் ஒரு நோய் தானே'' என்றான் பாலரங்கன். ''காதல் ஒரு நோய் இல்லை'' என சிரித்தாள் ஆண்டாள்.

''குழந்தைப் பெத்துக்கலாம்தானே'' என்றாள் ஆண்டாள். ''அதைப்பத்தி இப்போ ஏன் கவலை, முதல்ல நமக்கு நல்லா கல்யாணம் நடக்கட்டும். உனக்கு ஜோசியத்துல என்னமோ சொன்னாங்க, இந்த நோய் இருக்கிறதால நாம கல்யாணம் பண்ணக்கூடாதுனும் இருக்கு, ஆனா ஒன்னு தெரியுமா? குழந்தைப் பெத்துக்கிறதுக்கு கல்யாணம் இல்லை'' என்றான் பாலரங்கன். ''ஓ அப்படியா?'' என்றாள் ஆண்டாள். ''கவலைப்படாதே நாம குழந்தைப் பெத்துக்குவோம்'' என்றான் பாலரங்கன். ''எனக்கு கல்யாணம் நடந்தாலே போதும்'' எனச் சிரித்தாள் ஆண்டாள். எல்லாம் சந்தோசமாக இருந்தது. கோதைநாச்சியார், நாராயணன் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள். உண்மை அன்புக்கு எதுவும் தடையில்லை.

மண்டபம், பத்திரிக்கை எல்லாம் தயாராகிக்கொண்டு இருந்தது. கோபாலகிருஷ்ணனுடன் வேலைப் பார்க்கும் அவனது நண்பன் அந்த தருணத்தில் இரண்டு நாள் விடுமுறையாக ஊருக்கு வந்திருந்தான். ஆண்டாளின் கல்யாண விசயம் கேள்விபட்டான். வேலைக்குத் திரும்பிச் சென்ற அவன் அன்று இரவு கோபாலகிருஷ்ணனை சந்தித்தான்.

''டேய் ஆண்டாளுக்குக் கல்யாணமாம்டா'' என விசயத்தைச் சொன்னான் கோபாலகிருஷ்ணனின் நண்பன்.

''நமக்கு அழைப்பு வைக்காமலாப் போயிருவாங்க'' என்றான் கோபாலகிருஷ்ணன்.

முற்றும்.

எழுத்தைப் புறக்கணிக்கும் அகங்கார சொரூபம்

நிகழ்கால எழுத்தாளர்கள் எவர் எனத் தெரியாது, இறந்தகால எழுத்தாளர்களையும் ஒழுங்காக வாசித்தது கிடையாது. நானும் எதிர்காலத்தில் எழுத்தாளான் ஆனால் எனது எழுத்துக்களை எல்லோரும் வாசிக்க வேண்டும் என நான் எதிர்பார்ப்பது எப்படி நியாயமாகும்? அதனால்தான் நான் ஒரு எழுத்தாளன் ஆகும் தகுதியை எப்பொழுதோ இழந்து விட்டேன், அத்னால்தான் நான் எழுத்தாளான், இனிமேலும் அதற்குரிய தகுதியை வளர்த்துக்கொள்வது என்பது 'ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?' என கேட்பது போல் தான் இருந்துவிடும்.

முதலில் தொல்காப்பியரை எடுத்துக் கொள்கிறேன். இவரது தொல்காப்பியம் தமிழ் இலக்கணத்துக்கு ஒரு வழியாய் துணையாய் அமைந்தது. ஆனால் தொல்காப்பியம் அனைத்தையும் இதுநாள் வரையிலும் படித்தது இல்லை. எழுதப் படிக்கத் தெரியும் என்று இருந்தாலும் இன்னும் க் த் சேர்ப்பதா வேண்டாமா எனும் அவலநிலைத் தொடர்கிறது. மேலும் இப்பொழுதெல்லாம் எவருக்கும் தமிழ் எப்படி எழுதியிருக்கிறார்கள் என்பதில் இல்லை ஆர்வம், என்ன எழுதப்பட்டு உள்ளது என்பதுதான் முக்கியமாகப்படுகிறது.

நன்னூல் இப்படி ஒரு நூல் இருப்பதே எனக்கு ஒரு வருடம் முன்னர்வரைத் தெரியாது. சரி நூல் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது, வாசித்தேனா என்றால் அதுவும் கிடையாது.

எனக்கு திருவள்ளுவர், பாரதியார் மிகவும் பிடிக்கும், ஆனால் அவர்களின் அத்தனை எழுத்தையும் இதுநாள் வரை வாசித்தது இல்லை. படங்களின் மூலம், பாடல்களின் மூலம் பாரதியார் கவிதைகள் பழக்கமாகிவிட்டது. பாரதியார் கவிதைகள் புத்தகமும், திருக்குறளும் வீட்டில் இருந்தாலும் அவ்வப்போது தேவைக்கேற்றவற்றை மட்டுமேப் படிப்பது வழக்கமாகிப் போனது.

இப்படி பலருடைய எழுத்துக்களை நான் படித்ததே இல்லை. இவர்கள் எல்லாம் பெரும் புகழ் பெற்றவர்கள்தான். இப்படியிருக்க நிகழ்கால எழுத்தாளர்களை நான் படித்ததுண்டா என்றால் அதுவும் இல்லை. அமரர் கல்கியின் நாவல்கள் எல்லாம் அதி அற்புதம் எனச் சொன்னதைக் கேட்டதுண்டு, அமரர் சுஜாதா அவர்களைப் போல் விஞ்ஞான விசயத்தை வைத்து எவரும் எழுத முடியாது எனச் சொன்னதையும் அறிந்தது உண்டு. ஆனால் படித்ததே இல்லை. இப்படியே போனால் ஜெயகாந்தனின் 'சினிமாவுக்குப் போன சித்தாளு' என்கிற தலைப்பு மட்டும் எனக்கு பரிச்சியம். ரமணிசந்திரன் கதைகள் அதிகம் படித்ததுண்டு என சிலர் சிலாகித்துச் சொன்னதுண்டு. பாலகுமாரனின் ஓரிரு கதைகள் படித்ததுண்டு.

ஏன் எந்த ஒரு எழுத்தாளரையும் நான் இதுவரை முறையாகப் படித்தது இல்லை என நினைத்துப் பார்க்கும்போது எனக்கு ஆர்வம் இல்லாததும், பிறரது எழுத்துக்களில் ஈடுபாடு இல்லாததும் மட்டுமா எனத் தெரியவில்லை. பொதுவாக எனக்கு வாசிப்பு அனுபவம் இருந்ததில்லை.

'ஜெமோ'வின் கதைகள் படித்திருக்கிறாயா? எனக் கேட்டவரிடம் 'யார் அந்த ஜெமோ?' என்றே நான் கேட்டதும் 'நீயெல்லாம் கதை எழுதுகிறாய்?' என இளக்காரமாகவே அவர் என்னைப் பார்த்தார். இந்த வலைப்பூப் பக்கம் வந்திராவிட்டால் சாரு நிவேதிதா எனும் எழுத்தாளரைப் பற்றியும் அவருக்கென இருக்கும் வாசகர்கள் பற்றியும் கொஞ்சம் கூடத் தெரிந்திருக்காது. எனது பக்கத்து ஊர்க்காரரான எஸ்.ராமகிருஷ்ணன் மிகச் சிறந்த எழுத்தாளர் என்பது கூட எனக்குத் தெரிந்திருக்காது.

வைரமுத்துவின் 'தண்ணீர் தேசம்' மட்டுமேப் படித்திருக்கிறேன். 'கடை ' எனும் ஒரு நாவல் படித்திருக்கிறேன், அதை எழுதியவர் பெயர் மறந்து போய்விட்டது. அகிலனின் சிறுகதைத் தொகுப்பு படித்திருக்கிறேன். இப்படி நான் படித்த புத்தகங்கள் எல்லாம் எளிதாக கணக்கில் சொல்லிவிடலாம்,விசயம் இப்படியிருக்க நான் செய்தது எல்லாம் பாடப்புத்தகங்களைப் படித்ததுதான். ஒரு நல்ல வாசகன் மட்டுமே ஒரு நல்ல எழுத்தாளானாக முடியும். ஆனால் வாசகர்கள் பலர் எழுத்தாளாராக மாற்றம் கொள்ளவில்லை. வாசகர்கள் எல்லாம் எழுத்தாளாராக மாறிவிட்டால் பின்னர் வாசிப்பவர்களைத் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும். இப்பொழுது மட்டும் என்னவாம்?!

'நாவல் எல்லாம் சரியாகப் போவதில்லை' என என்னிடம் சொன்ன பதிப்பகத்தார் உண்டு. மேலும் எழுத்தாளர்கள் எழுதுவதை மட்டும் படித்துத்தானா ஒருவர் எழுத வர வேண்டும்? தனக்குத் தெரிந்த விசயங்களை சுவாரஸ்யமாக தொடர்ந்து சொல்வதன் மூலமே ஒருவர் எழுத்தாளர் ஆகிவிடுகிறார் என்பதை மறுக்க இயலாது. ஆனால் எழுத்தைப் புறக்கணிக்கும் ஒரு அகங்காரம் உடையவனாக, எழுதத் தொடங்கிய பின்னும் இருந்து கொண்டிருக்கிறேன் என என்னை நான் நினைத்தாலும், தமிழ் ஆர்வத்தால் எழுதிக் கொண்டிருக்கும் பலரின் எழுத்துக்களை தற்போதுப் படித்துக்கொண்டிருக்கிறேன்.

சிறந்த தமிழ் படங்களைத் தெரிவு செய்துப் பார்க்கும் வழக்கம் கொண்டிருப்பதைப் போல சிறந்த தமிழ் நாவல்களையும் படித்துவிட நினைக்கிறேன். அகங்கார சொரூபம் மறையுமெனில் அலங்கார சொரூபம் காண்பது எளிதுதான்.


நுனிப்புல் - ஆழிப்பதிப்பகம் திரு. செந்தில்நாதன் அவர்களின் விமர்சனம்

ஆழிப் பதிப்பகத்தின் நிறுவனரும் எனது நண்பர் செல்வமுரளி அவரிகளின் வழிகாட்டிகளில் ஒருவரான திரு. செ. ச. செந்தில்நாதன் அவர்களிடம் எனது நுனிப்புல் புத்தகம் கொடுத்து அவரது கருத்துக்களை கேட்டு இருந்தோம். அவரது வேலைப்பளுவிற்கு இடையில் அவரது கருத்துக்களை என்னிடம் கூறினார். அதனை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். மேலும் நூல் வெளியிட விரும்பும் எழுத்தாளர்களை ஊக்குவித்து வரும் அவரை நீங்கள் தாராளமாக தொடர்பு கொள்ளலாம். அவர் உதவி புரிவார். அவரது மின்னஞ்சல் முகவரி : zsenthil@gmail.com

----------------------------------------------------------------------------------------------------------------------------------------

நுனிப்புல்லை முழுமையாக படிக்கவில்லை என்றாலும் சில பகுதிகளைப் பார்த்தேன். நான் வாசகராக சில விஷயங்களைக் கூறவிரும்புகிறேன். தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள். தமிழ் எழுத்துலகம் உலகத் தரம் வாய்ந்த எழுத்துக்களை உருவாக்கிவருகிறது, எதிர்பார்க்கிறது. நாம் சொல்லும் விஷயம் சாதாரணமானதாகவோ அசாதாரணமானதாகவோ இருக்கலாம். ஆனால் சொல்லும் விதம் உயரிய இலக்கியத் தரம் வாய்ந்ததாக இருக்கவேண்டும்.

வாசகருக்கு புரிகிறதா புரியவில்லையா என்பதல்ல அதன் அர்த்தம். எவ்வளவு ஆழமாக, அழகாக, வாசிப்பு அனுபவத்தை மேம்படுத்துவதாக அது இருக்கிறது என்பதுதான் அதற்கு அர்த்தம். நீங்கள் ஜெயகாந்தனைப் போல எழுதலாம். ஜெயமோகனைப் போல எழுதலாம். பிரபஞ்சனைப் போலவோ, சாரு நிவேதிதாவைப் போலவோ எஸ் ராமகிருஷ்ணனைப் போலவோ எழுதலாம் வாஸந்தி, சிவசங்கரி போலவும் எழுதலாம். அவர்கள் எழுத்தில் ஒரு தெளிவும் திட்டமிட்ட கதைப் போக்கும் இருப்பதைப் பார்க்கலாம். அது ஒரு ஈர்ப்பை உருவாக்குகிறது, எதிர்பார்ப்பை உருவாக்குகிறது. உங்கள் எழுத்தைப் படிக்கும் போது, அது சட்டென்று உருவாகவில்லை. பல்வேறு பக்கங்களைப் படித்த போது, நீங்கள் இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டும் என்று பட்டது. அதற்கு சரியான வழி பத்திரிகைகளில் எழுதத் தொடங்குவதுதான்.

நீங்கள் எழுதியிருக்கிறீர்களா? அது முக்கியம். அது உங்களுக்கு நிறைய விமர்சனங்களைக் கொண்டுவந்து உங்களைச் செழுமைப்படுத்தும். எழுதுங்கள், அதற்கு முன் நிறைய வாசியுங்கள். நீங்கள் பெரும் முயற்சி எடுத்திருக்கிறீர்கள். உங்கள் ஆர்வம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. இதை ஒரு தொடக்கமாக வைத்துக்கொள்ளுங்கள். நிறைய படித்து, பத்திரிகைகளில் எழுதி அனுபவத்தோடு நீங்கள் சிறந்த எழுத்தாளராக மாறமுடியும். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது. மற்றபடி, மருத்துவம் போன்ற விஷயங்களில் எழுதுவீர்களா?

முதலில் non-fiction இல் ஆரம்பியுங்கள். அது மொழியை வளப்படுத்திக்கொள்ள உதவும். நூலெழுதல் குறித்து சில முறைகளை பின்பற்ற வேண்டும். அது குறித்து நான் உங்களுக்கு விவரமாக எழுதுகிறேன். authoring என்பது ஒரு பெரிய கலை. அதைக் கைதேர்வது முக்கியம் அது ஓரிரு நூல்களை எழுதும் போது, அதன் அனுபவத்தில் மட்டுமே முடியும்.

நன்றி.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------