Tuesday 28 July 2009

ஆண்டாளுக்குக் கல்யாணம் - 5

பாலரங்கன் மருத்துவர்களிடம் சென்று மேல்விபரம் கேட்டான். அப்பொழுது மருத்துவர் ''ஆண்டாள் சிஸ்டிக் பிப்ரோஸிஸ் கேரியர்'' என்றார். ''நானும் தான் சிஸ்டிக் பிப்ரோஸிஸ் கேரியர்'' என்றான் பாலரங்கன். ''அப்படின்னா நீங்க இரண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிறக்கூடாது. குறைஞ்சது 50% சதவிகிதம், உங்களுக்குப் பிறக்கப் போற குழந்தை இந்த நோய் உடையதாகவேப் பிறக்க வாய்ப்பிருக்கு'' என்றார் மருத்துவர். ''தெரிஞ்சி வைச்சிருக்கேன் சார், ஆனா ஜீன் தெரபி பண்ணலாமே?'' என்றான் பாலரங்கன். ''ஜீன் தெரபி பண்ணலாம், ஆனா இன்னும் அத்தனை தூரம் முன்னேறல எதுக்கும் என்னோட பிரண்ட் கிட்ட ரெபர் பண்றேன், அவன்கிட்ட போய் ட்ரீட்மெண்ட் பண்ணமுடியுமானுப் பாருங்க'' என்றார் அவர்.

ஆண்டாள் அன்றே மருத்துவமனையிலிருந்து வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கப்பட்டாள். சில தினங்கள் கழித்து ஆண்டாளின் வீட்டிற்குச் சென்ற பாலரங்கன் ஆண்டாளிடம் பேசினான். ''இருவரும் ஜீன் தெரபி செய்தால் ஒழிய திருமணம் செய்யக்கூடாது எனவும், அப்படியே திருமணம் செய்தாலும் குழந்தையைப் பெற்றுக்கொள்ளக்கூடாது'' எனவும் கூறினான்.

''அப்படி நம்ம அப்பா அம்மா நினைச்சிருந்தா நாம இப்போ இருக்கமுடியுமா'' என்றாள் ஆண்டாள். ''நான் உன்னைத் தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ணமாட்டேன்'' என்றான் பாலரங்கன். ''நான் மட்டும் என்னவாம்?'' என்றாள் ஆண்டாள். அப்படிச் சொன்னவள் ''எப்படி இந்த நோய் உனக்கும் எனக்கும் வந்துச்சு'' என்றாள் ஆண்டாள்.

''உடல் பொருள் ஆவி மனசு சந்தோசம் துக்கம் இப்படி எல்லாத்துலயும் ஒன்னா வைச்சிக்கிறச் சொல்ற காதல் இந்த நோயிலயும் வந்து வைச்சிக்கிருச்சி'' என சிரித்தான் பாலரங்கன். ''எப்படி வந்துச்சுனு சொல்லுனு சொன்னா காதல்னு சொல்ற'' என்றாள் ஆண்டாள்.

''இது ஜெனிடிக் நோய். மிகவும் மோசமான வியாதி. இது ஜீன்ல நடக்கிற ம்யூடேஷன்னால வருது. ஆனா எப்படி ம்யூடேஷன் நடக்குது, எப்படி வருது என்னங்கிறது இன்னும் தெரியலை. இந்த வியாதி நுரையீரல், கல்லீரல், கணையம், சிறுகுடல் பெருகுடல்னு பாதிச்சிரும். நாம கேரியர்ஸ், நமக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. சாதாரண வியர்வைத்துளியை வைச்சிக்கூட இந்த நோய் இருக்கானு கண்டுபிடிச்சிரலாம்'' என்றான் பாலரங்கன்.

''ம்யூடேஷன்னா என்ன?'' என்றாள் ஆண்டாள். ''இப்போ ஜீன் இருக்குனு வைச்சிக்கோ அதுபாட்டுக்கு அது வேலையை சரியாப் பார்க்கும், அதுல ஏதாவது மாற்றம் வந்துச்சுன்னா தன்னோட வேலைய மறந்துட்டு வேற ஏதாவது செஞ்சிரும், அதுமாதிரிதான் 7 வது குரோமோசோம்ல ஒரு மாற்றம் நடக்கிறதால இப்படி வருது. சாதாரணமா இந்த ஜீன் செய்ற வேலை என்னன்னா வியர்வை, சாப்பிடும்போது சுரக்கிற திரவம், அப்புறம் சளி இதெல்லாம் கட்டுப்படுத்தும். ஏதாவது மாற்றம் வந்தா இதெல்லாம் அதிகப்படியாப் போய் பெரிய பிரச்சினை ஆயிரும். ஆம்பளைங்களுக்கு ஆண் தன்மை கூட போயிரும்''.

''ஒவ்வொரு ஜீனுக்கு இரண்டு குணம் உண்டு. ஒன்னு டாமினேட்டா இருக்கும், இன்னொன்னு அடங்கிட்டு இருக்கும். டாமினேட்டுதான் வெளிப்படும், ஆனா அடங்கிட்டு இருக்கறது வெளிப்படாது. இந்த ஜீன் அடங்கிட்டு இருக்கற வகையச் சார்ந்தது. நம்ம இரண்டுபேருகிட்ட அடங்கிட்டு இருக்கற வகை நம்ம குழந்தைக்குப் போனா அந்த குழந்தையில வெளிப்பட்டு அவ்வளவுதான். இந்த வியாதி வந்தா 20 வயசுல இருந்து 30 வயசுல செத்துருவாங்க, இப்போ 50 வயசு வரைக்கும் ஆயுட்காலம் கூட்டிட்டு இருக்காங்க'' என்றான் பாலரங்கன்.

''எப்படி இவ்வளவு விசயம் தெரிஞ்சி வைச்சிருக்க?'' என்றாள் ஆண்டாள். ''இப்போ நமக்கு ஒரு நோய்னா அதைப்பத்தி அக்குவேறு ஆணிவேறா பிரிச்சி மேய்ஞ்சிரனும். அப்படித்தான் எனக்கு இந்த நோய் இருக்குனு சொன்னதும் தேடாத புத்தகம் இல்லை, படிக்காத விசயம் இல்லை, என் வீட்டுக்கு வந்தா படமெல்லாம் காமிக்கிறேன்'' என்றான் பாலரங்கன். ''ங்கோ, றேள் போட்டு பேசவே இல்லையே'' எனச் சிரித்தாள் ஆண்டாள்.

அப்பொழுது கோதைநாச்சியார் அங்கு வந்தார். ஆண்டாள் அவரிடம் பாலரங்கன் சொன்னதை சொன்னதும் பதட்டம் கொண்டார் கோதைநாச்சியார்.

''இந்த கல்யாணம் நடக்க வேணாம்'' என்றார் கோதைநாச்சியார். ''என்ன சொல்றேள் மாமி, நாங்க ஜீன் தெரபி பண்ணிக்கிறப் போறோம். கவலைப்படாதேள், எங்களுக்கு ஷேமமா கல்யாணம் நடக்கும்'' என்றான் பாலரங்கன்.

மேலும் ''குழந்தையப் பெற முன்னாடி கூட கருவை டெஸ்ட் பண்ணி குழந்தை நல்லா இருந்தா கருவை பழையபடி வைச்சி குழந்தைய உருவாக்கலாம் மாமி, நீங்க ஏன் இப்படி பதட்டப்படறேள்'' என்றான் பாலரங்கன். ''என்ன புராணம் சொல்றீங்கோ'' என்றார் கோதைநாச்சியார்.

அப்பொழுது அங்கு வந்த நாராயணன் ''ஜோசியர்கிட்ட போய்ட்டு வந்தேன், ஏதோ சனி கொஞ்சம் வேறப்பக்கம் பார்த்துட்டு நிற்கிறானாம், குரு பலமா பார்க்கிறாராம் ஆண்டாளுக்கு ஒரு வருசம் கழிச்சி நல்லாவே கல்யாணம் பண்ணலாமாம், எந்தப் பிரச்சினையும் இல்லையாம்'' என்றார். ''ஜோசியர் பரிகாரம் சொன்னா ஏத்துப்பேள், நான் சொல்ற பரிகாரம் சொன்னா ஏத்துக்கமாட்டேளா'' என்றான் பாலரங்கன். ''வந்து எல்லோரும் சாப்பிடுங்க'' என கோதைநாச்சியார் சொல்லிவிட்டு ''பெருமாளே'' என்றார்.

இவ்வேளையில் ராஜமன்னார் விசயம் கேள்விபட்டு ஆறுதல் சொன்னதோடு சரி ஆண்டாள் காதல் புரிவதால் தனது பையனுக்கு சம்மதமில்லை என்றே சொல்லிவிட்டார். ஆண்டாள் தான் மணந்தால் பாலரங்கனையே மணப்பேன் என உறுதியாக இருக்க, பாலரங்கனும் தான் மணந்தால் ஆண்டாளை மணப்பேன் என உறுதியாக இருக்க இருவரது பெற்றோர்களும் செய்வதறியாது திகைத்தனர்.

(தொடரும்)

2 comments:

கோவி.கண்ணன் said...

இராதா கிருஷ்ணன் ஐயா,

பதிவுக்கு பிறகு பின்னூட்டமிடுகிறேன்.

பதிவுலகில் பலரால் அறியப்பட்டவரான சீனா என்கிற சிதம்பரம் ஐயா தற்பொழுது லண்டனில் தான் இருக்கிறார். அவரது மின் அஞ்சல் முகவரி
cheenakay@googlemail.com

மிகுந்த பண்புடன் பழகக் கூடியவர். முடிந்தால் மின் அஞ்சலில் தொடர்பு கொண்டு தொலைபேசி எண் பெற்று பேசிப் பாருங்கள்.

பதிவர்கள் அனைவருடனும் தொடர்பு கொள்ள முடியாவிட்டாலும் கூப்பிடும் தொலைவில் உள்ளவர்களுடன் அறிமுகமாவது பரஸ்பரம் அறிந்து கொள்ள, உரையாட பயனளிக்கும்.

Radhakrishnan said...

மிக்க நன்றி கோவியாரே. சிதம்பரம் ஐயாவுடன் கலந்துரையாடினேன், மகிழ்ச்சியாக இருந்தது.