Thursday 2 July 2009

வேத நூல் - 10 (நிறைவுப் பகுதி)

சிரகமெராவின் செயலைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மிபலோ ''ஏன் இவ்வாறு செய்தாய்?'' என்று கேட்டான். ''கொல்ல நினைத்த காரணத்திற்காக எனக் கூறிய சிரகமெரா இதில் நான் குற்றவாளி என்றால் நாளை நீங்கள் உயிர் மாய்த்திட்டால் நீங்களும் குற்றவாளி என்பதை மறுக்க வேண்டாம், மறக்க வேண்டாம்'' என கூறினாள்.

''நீ செய்தது தவறு, இதை நியாயப்படுத்திக்கொண்டிருக்க முடியாது, இதற்கானத் தண்டனையை நீயே பெற்றுக்கொள்ளத்தான் வேண்டும்'' என்றான் மிபலோ. ''நான் தண்டனையைப் பெற்றுக்கொள்கிறேன் ஆனால் உங்களுக்கு யார் தண்டனை தருவது'' என்றாள் சிரகமெரா. ''நான் உயிரை மாய்த்துக்கொள்ளமாட்டேன், அதுவாகப் போகும்'' என்றான் மிபலோ. ''இது என்ன காற்றா? தானாக உள்ளே வருவதற்கும் தானாக வெளியே செல்வதற்கும்'' என்றாள் சிரகமெரா. ''என் உயிரை நானாக மாய்த்துக்கொள்ளமாட்டேன் என உறுதி கூறுகிறேன்'' என்றான் மிபலோ.

அன்று அங்கேயே தங்கினாள் சிரகமெரா. காலையில் கிரகமெஸ்டிடம் நடந்த விபரங்களை கூறினான் மிபலோ. சூரியன் தாமதித்துக் கொண்டிருந்தது. கிரகமெஸ்ட் பரவாயில்லை திடீரென இறந்துவிட்டான் எனச் சொல்லிவிடலாம் எனச் சொன்னான். மிபலோவால் இதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. ''இவளே கொலை செய்தாள் அதனால் இவளுக்கு தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும்'' என்றான் மிபலோ. சிரகமெராவை நோக்கி ''இவனையும் சேர்த்து கொலை செய்துவிடு'' எனச் சிரித்தான் கிரகமெஸ்ட்.

''தலைமையிடத்தில் இருப்பவர்கள் தவறு செய்யக்கூடாது'' என்றான் மிபலோ. ''ஒன்று செய், நீ தலைமையிடத்தில் சில நாட்கள் இல்லாது இருந்தாய் அல்லவா அதுபோல இப்பொழுதும் இருந்துவிடு. நீ தவறு செய்வதாய் ஆகிவிடாது'' என்றான் கிரகமெஸ்ட். மிபலோவுக்குப் புரியும் மொழியில்தான் பேசி அசத்தினான் கிரகமெஸ்ட். ''நன்றாக பேசுகிறாய் என் மொழியில் நீ பேசுவதால் நான் மாறிவிடுவேன் என நினைத்தாயா'' என்றான் மிபலோ.

சிரகமெரா மிபலோவிடம் ''என்ன தண்டனை என்றாலும் ஏற்றுக்கொள்கிறேன்'' என்றாள். அதற்குள் சாங்கோ ஆதரவாளர்கள் சாங்கோ இறந்து கிடப்பதைப் பார்த்து மிபலோவின் அவையினை முற்றுகையிட்டார்கள். பலத்த சப்தம் எழுந்தது. சிலர் கற்களை கொண்டு வீசினர். மிபலோ ஒரு கொலையாளி எனக் கூச்சலிட்டனர். இதையெல்லாம் பார்த்துப் பொறுக்காத கிரகமெஸ்ட் வீரர்களை அழைத்து உடனடியாக அவர்களை ஒடுக்குமாறு ஆணையிட்டான். மிபலோ தடுத்தான்.

சூரியன் உதித்தது. கிரகமெஸ்ட் தடுத்தும் கேளாது மிபலோ அவர்கள் முன் தோன்றினான். கற்களால் அவனை அடித்தார்கள். ஒருவன் பெரிய கல்லை எடுத்து மிபலோவின் மேல் போட்டான். மிபலோ அஸ்தமனமானான். சிரகமெரா கதறினாள். மிபலோவை அடித்துக் கொன்றவர்களை அன்றே மொத்தமாக அழித்தான் கிரகமெஸ்ட்.

தானேஸ்ராவில் குவ்விலானுக்குத் திருமணம் நடந்தது. தன் மனைவியுடன் குவ்விலான் எகிப்து நோக்கி பயணம் தொடங்கினான். சிறிது நாட்கள் பின்னர் சிரகமெராவை தன் மனைவியாக்கிக் கொள்ள நினைத்தான் கிரகமெஸ்ட். ஆனால் சிரகமெரா மறுத்துவிட்டாள். சாங்கோவை பின்பற்றியவர்கள் கிரகமெஸ்டை நினைத்து கதிகலங்கினார்கள்.

மாதங்கள் நகர குவ்விலான் தன் மனைவியுடன் எகிப்து வந்தடைந்தான். நடந்த விபரங்களை அறிந்த குவ்விலான் சத்தமின்றி அழுதான். அங்கே இருக்கப் பிடிக்காமல் குவ்விலான் பெருசியா நோக்கி பயணமானான். சிரகமெரா,சாங்கோ ஆதரவாளர்கள் குவ்விலானுடன் பயணமானார்கள். நைல் நதியில் சில வாரங்கள் பின்னர் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. மிபலோ கட்டிய பிரமிடினை அந்த வெள்ளம் ஒரு அலசு அலசியது. கிரகமெஸ்ட் வெள்ளத்தின் சீற்றம் கண்டு அச்சமுற்றான். வெள்ளம் பல உயிர்களை பலிவாங்கியது. வெகு சிலரே உயிர் தப்பினர்.

பெருசியா சென்றடைந்த குவ்விலான் தனக்கு நினைவில் இருந்ததையெல்லாம் எழுதத் தொடங்கினான்.அதைப் படித்த சாங்கோ ஆதரவாளர்கள் இதுதான் உண்மையான வேதம் எனப் பின்பற்றத் தொடங்கினார்கள். சாங்கோ தங்களை ஏமாற்றிவிட்டதாகவே உணர்ந்தவர்கள் மிபலோவின் மரணத்தை நினைத்து வருத்தப்பட்டார்கள்.

சிரகமெராவையும் திருமணம் செய்துகொண்டான் குவ்விலான். அவர்களுக்கு குழந்தைகள் பிறந்தது. பெருசியாவில் பெரும் போர் நடந்தது, பலர் உயிர் இழந்தார்கள். அதைக் காண சகிக்காமல் சில காலம் அங்கே இருந்துவிட்டு தானேஸ்ரா திரும்பினான் குவ்விலான்.

அனைத்து விசயங்களையும் மீண்டும் எழுதி வைத்தான் குவ்விலான். அதை மிகவும் பாதுகாப்பான ஒரு இடத்தில் வைத்துவிட்டு அமைதியாக அமர்ந்து இருந்தபோது அவனது உயிர் பிரிந்தது.

மிபலோ சொன்ன எண்ணங்கள் அடங்கிய வேதம் குவ்விலானால் எழுதப்பட்டு அந்த பிரமிடுக்குள் தினமும் உறங்கிக் கொண்டிருக்கிறது. அதை வெளியே எடுக்க வழியில்லாது போகும்படி குவ்விலான் தான் எழுதியதை எவரிடமும் சொல்லாமல் பாதுகாப்பாக வைத்துவிட்டு திடீரென மறைந்தான்.

பல பிரமிடுகள் பின்னர் கட்டப்பட்டன. அந்த வேதம் எந்த பிரமிடுக்குள் இருக்கிறது என தெரியாமல் போனது. குவ்விலானின் சந்ததிகளுக்கும் தெரியாததாகவே இருந்தது.

தற்போது அகழ்வாராய்ச்சியில் பார்த்தபோது குவ்விலானால் இவ்வாறு தொடங்கப்பட்டு இருந்தது.

சாத்திரங்கள் செய்தாரடி அதில்
ஆத்திரங்கள் வைத்தாரடி பல
பாத்திரங்கள் பண்ணிபண்ணிப் புத்தி
பேதலிக்கச் செய்து போனாரடி.

(முற்றும்)

2 comments:

கோவி.கண்ணன் said...

எப்படி இடைவிடாமல் எழுதி முடிச்சிங்க ? வியப்பாக இருக்கு 5 பகுதிவரை நேற்றில் இருந்து வந்திருக்கு, இன்னும் அனைத்தையும் படிக்கவில்லை.

சிறப்பான தொடர் பாராட்டுகள் !

Radhakrishnan said...

மன்னிக்க வேண்டுகிறேன் கோவியாரே. நான் இந்த வலைப்பூவில் எழுதுவது எல்லாம், சிறுகதைப் போட்டிக் கதைகள் தவிர' முத்தமிழ்மன்றம் எனும் வலைத்தளத்தில் எழுதியவைகள். அனைத்தையும் ஒருங்கிணைத்து வைத்துக்கொள்வதற்காகத் தொடங்கப்பட்ட வலைப்பூவாகவே இதைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

தங்களது பாராட்டுக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.