Thursday 6 August 2009

சொல் எனும் சொல்

இரகசியம் ஒன்றை அறிந்த நீயும்
இரகசியம் தேடும் அவசியத்தில் நானும்
உனக்கு மட்டும் தெரிந்திருக்க அவசியமாய்
எனக்கு ஏனோ புரியாதிருக்க அதிசயமாய்

ஆவலின் உச்சத்தில் என்உள்ளம் கொதிக்க
அறிந்த அமைதியில் உள்மனம் உன்மனம்
சொல்வாய் மனதின் இரகசியம் என்றுணர்ந்தே
உனது சொல்லை கேட்கும் யாசகனாய்
சிறப்பை வாசித்திடும் நல்ல வாச(க)னாய்

தினமும் உனக்கல்லா வீடதில் வெளிர்பார்வையுடன்
சினமும் கொண்ட மனமமதை அடக்கியே
பசியில்லா உன்பசி போக்கிட அமுதமும்
தேவையில்லா உதவியெனினும் நான் புரிவதும்

அர்த்தம் அறிந்து கொண்டவனாய் நீ
என்னை அருகில் அமரச் சொன்னவுடன்
எண்ணமது இரகசியத்தில் குறிகொண்டு நிலைத்திருக்க
மெல்லியதாய் சொல்வது போல் சொன்னாய்
அடங்காத வார்த்தையது பொருள் வலிமையாய்

சொல் என சொல் அதில்
மனமது மயங்கியே சொல்லுக்கு ஆட்பட்டால்
இரகசியம் அது எக்காலத்திலும் இரகசியமாகாது
ஒருவருக்கு மட்டுமே தெரிந்திருக்க இரகசியமாவது

உண்மையதை புரிந்து கொண்டவனாய் நான்
எவர்க்கும் தெரியாத இரகசியம் கண்டவனாய்
எனக்குள் அறிந்து கொண்ட ஆச்சரியம்
எவர்க்கும் சொல்ல மாட்டேன் நிச்சயம்

என்னைத் தேடி பலரும் வருவார்
என்ன சொல்வேன் என்றே நிற்பார்
சொல் எனும் சொல்லுக்கு ஆட்படாமல்
தெரியாது எனினும் தெரிந்தது போல்
இரகசியமது தொடரும் எவரும் அறியாமல்.

2 comments:

cheena (சீனா) said...

அன்பின் ராதா

இரகசியங்கள் இரகசியங்களாகவே இருக்கட்டும்.

நல்ல கவிதை - நல்ல கருத்து நல்வாழ்த்துகள்

Radhakrishnan said...

இறைவன் பற்றிய இரகசியத்தை எவருக்கும் எவரும் சொல்லிவிட முடியாது என்கிற விதத்தில் எழுதப்பட்ட கவிதை இது. மிக்க நன்றி ஐயா.