Thursday 1 July 2010

ஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு 8

இருவரும் கல்லூரி முதல்வரின் அறைக்குள் நுழைந்ததும், இருவரையும் புன்முறுவலுடன் நாகராஜன் வரவேற்றார். தனது மேசையின் முன்னால் இருந்த இருக்கையை காட்டினார்.

''உட்காருங்க''

இருவரும் தயக்கத்துடனே அமர்ந்தார்கள்.

நாற்பத்தி எட்டு வயது நிரம்பிய நாகராஜன் திடகாத்திரமான தோற்றம் கொண்டவர். முகத்தில் எப்போதும் ஒரு புன்முறுவல் இருந்து கொண்டே இருக்கும். மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரையும் மிகவும் மரியாதையாகவே பேசும் வழக்கம் கொண்டவர். இவருக்கு ஒரு மகனும், மகளும் உண்டு. இவரது தந்தை நிறுவிய இந்த கல்லூரியை தொடர்ந்து நிர்வகித்து வருகிறார். வயதாகிப் போனாலும் இவரது தந்தை அவ்வப்போது இந்த கல்லூரிக்கு வந்து செல்வது வழக்கம்.

''மக்கள் ஒற்றுமை இயக்கம், கட்சியோட பேரு ரொம்ப நல்லாருக்கு, ஆனா நம்ம கல்லூரிக்குள்ள கட்சி நடவடிக்கைகள் எல்லாம் இருக்க வேணாம். உங்க கட்சி நடவடிக்கைகள், கூட்டங்கள் எல்லாம் உங்களோட படிப்பை பாதிச்சிராம பார்த்துக்கோங்க. படிச்சி முடிச்சிட்டு இதைச் செய்யுங்கனு நான் சொல்லலை, தாராளமா கட்சி ஆரம்பியுங்க‌''

''ரொம்ப நன்றி சார், நிச்சயம் கல்லூரிக்குள்ள கட்சி நடவடிக்கைகள் எதுவும் செய்யாம பாத்துக்கிறோம் சார்'' என்றான் ரகுராமன்.

''பிரியா, சமூக நல சேவகியா வருவீங்கனு பார்த்தேன், அரசியல் தலைவியா புது குறிக்கோள் எடுத்து இருக்கீங்க, பாராட்டுகள்'' என சிரித்தார் நாகராஜன்.

''அரசியல் மூலம் சமூக சேவை சிறப்பா செய்யலாமே சார்'' என நிறுத்தினாள் சண்முகப்பிரியா.

''தாராளமா செய்யலாம், ரகுராமன் நீங்க என்னை சாயந்திரம் என் வீட்டுல வந்து பாருங்க, ம்ம்... ஒரு ஆறு மணிக்கு, நிறைய பேசனும்''

''நன்றி சார்''

இருவரும் அறையைவிட்டு வெளியே வந்ததும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

''பிரியா, நீ வீட்டுல பேசிட்டுதான் எல்லாம் செஞ்சியா''

''இல்லை, இன்னும் இதைப்பத்தி நான் வீட்டுல பேசலை. உன்கிட்ட பேசிட்டு போனதும் நேரா நான் இருக்கற‌ சமூக நல அமைப்புல விசயத்தைச் சொல்லி கொஞ்சம் பேரை காலையில இங்க வர சொன்னேன்''

''வீட்டுல சொல்லி இருக்கலாமே''

''ம்ம்... சரி ஃபிரெண்ட்ஸ்ங்க கேட்டா பிரின்சிபால் என்ன சொன்னாரோ அதை மட்டும் சொன்னாபோதும்''

மதிய உணவு வேளையில் அனைவரும் என்ன ஆனது என விபரம் தெரிந்து கொண்டார்கள்.

''இதுதான் நம்ம பிரின்சிபால்கிட்ட எனக்கு பிடிச்சது'' என்றான் ஒருவன்.

சந்தானலட்சுமி, ரகுராமனிடம் 'இனிமேலாவது காலேஜுல இதைப் பத்தி எதுவும் பேசாத' என எச்சரித்தாள். ரகுராமன் அதன் பின்னர் கட்சியைப் பற்றி மாலை முழுவதும் பேசவே இல்லை.

மாலையில் சரியாக ஆறு மணியளவில் நாகராஜனின் வீட்டுக்கு வந்து சேர்ந்தான் ரகுராமன். வீடு மிகவும் பளிச்சென இருந்தது. முன்புறத்தில் மலர்ச்செடிகள் நறுமணம் வீசிக்கொண்டிருந்தது. வீட்டு வாசலில் நாகராஜனின் கார் நிறுத்தப்பட்டிருந்தது. இவனுக்காக காத்திருந்தவர் போல நாகராஜன் ரகுராமனை வரவேற்றார்.

வீட்டின் உள்ளே சுவர்களில் இயற்கை காட்சிகள் அடங்கிய படங்கள் அலங்கரித்துக் கொண்டிருந்தது. இருக்கைகள் அழகாக இருந்தது. ஆங்காங்கே வரையப்பட்டஓவியங்களும் தென்பட்டன. வீட்டின் அழகில் பிரமித்துப் போன ரகுராமன் நின்று கொண்டிருந்தான்.

''உட்காருங்க ரகுராமன்''

ரகுராமன் அமர்ந்தான்.

''பிரியா இங்கே வாம்மா''

சண்முகப்பிரியா அங்கே வந்தாள். அவளையும் அமருமாரு சொன்னார்.

''காபி, டீ என்ன குடிக்கிறீங்க ரகுராமன்''

''காபி குடிச்சிட்டுதான் வந்தேன் சார், அதனால எதுவும் வேணாம் சார்''

''என்னோட பொண்ணு இந்த கட்சி விசயத்துல சம்பந்தபட்டு இருக்காங்கனு உங்களை கூப்பிடலை ரகுராமன், எனக்கும் உங்களை மாதிரி உங்க‌ வயசுல கனவு இருந்தது. அதெல்லாம் எதுக்கு, நம்மாள முடிஞ்ச அளவு சமூகத் தொண்டு புரிவோம் அப்படினு எங்க அப்பாவோட அறிவுரையை கேட்டதோட இல்லாம அதுதான் சரினு எனக்கு மனசுக்குப் பட்டதால அந்த கனவை அப்படியே விட்டுட்டேன். நிறைய நல்ல மாணவர்களை உருவாக்கலாம்னு மனசுல என்னோட அப்பாவோட கல்லூரி கனவுல என்னையும் இணைச்சிட்டேன். ஆனா இந்த கல்லூரி ஆரம்பிக்க நாங்க பட்ட கஷ்டம் நிறைய. நாங்க ஆரம்பிக்க நினைச்சது பொறியியல் கல்லூரியோ, மருத்துவ கல்லூரியோ இல்லை. இப்போ இருக்கிற வணிகவியல், பொருளாதாரவியல், சமூகவியல் அப்படினு ஒரு கல்லூரி ஆரம்பிக்க நினைச்சப்போ எத்தனை தடைகள், அதையெல்லாம் தாண்டி இப்போ ஒரு நல்ல சிறந்த கல்லூரியா உருவாகி இருக்கறதுக்கு காரணம் நல்ல மாணவர்கள், நல்ல ஆசிரியர்களோட ஒத்துழைப்பு''

''என் மகன் நிறைய மதிப்பெண்கள் வாங்கி பொறியியல் துறை படிக்க போறேனு சொன்னார், படிக்கட்டும்னு விட்டேன். இன்னைக்கு அவர் அமெரிக்காவில இருக்கார். பிரியாவுக்கு மருத்துவமோ, பொறியியலோ இஷ்டம் இல்லை. இவங்க என்ன படிக்க விருப்பப்படறாங்களோ படிக்கட்டும்னு இருந்துட்டேன், நீங்கதான் உங்க வாழ்க்கையை தீர்மானிக்கனும்''

பேசிக்கொண்டிருந்த போதே பலகாரங்கள், இனிப்புகள் தண்ணீர் என மேசையில் வந்து வைத்தார் நாகராஜனின் மனைவி மகேஸ்வரி.

''எடுத்துக்கோங்க ரகுராமன்''

''நன்றி சார்''

''ஒரு கட்சியோட முழு வெற்றி அந்த கட்சியில இணையற உறுப்பினர்களோட செயல்பாடுல, கட்சித் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளார்களுனு நிறையவே இருக்கு. எல்லாம் நல்லா அமையனும், அல்லது அமைச்சிக்க கடும் முயற்சி எடுத்துக்கனும். இன்னைக்கு கல்லூரி வாசலுல‌ காலையில நடந்த விசயத்தை வைச்சித்தான் எல்லா விசயமும் எனக்கு கொண்டு வந்தாங்க. கல்லூரியில இதை பேச வேணாம்னுதான் உங்களை இங்க வரச் சொன்னேன்''

''சரி மாநில கட்சி, தேசிய கட்சி எது உங்களோடது?''

''எனது நோக்கம் தேசிய கட்சிதான் சார், முதல தேவையான வாக்குகள் சேகரிச்சி மாநில கட்சி அங்கீகாரம் தேர்தல் ஆணையம் மூலமா பெறனும், அப்படியே கட்சியை பக்கத்து மாநிலங்களுக்கு விரிவடைய செஞ்சி முதல் கட்டமா ஆந்திரபிரதேசம், கர்நாடகா, கேரளா அப்படினு நம்ம தமிழ்நாட்டோட சேர்த்து நல்ல வாக்குகள் வாங்கி தேசிய கட்சி அங்கீகாரம் பெறனும் சார்''

இதைக் கேட்டதும் நாகராஜன் ரகுராமனது கைகளைப் பிடித்து குலுக்கினார். அவரது கண்களில் பெரும் நம்பிக்கை தெரிந்தது.

''உங்களுக்கு என்ன உதவி வேணுமோ, அதை என்கிட்ட தயங்காம கேளுங்க ரகுராமன், நிச்சயம் செஞ்சி தரேன், என்னை மாதிரி எத்தனையோ பேர் நிச்சயம் இருப்பாங்க''

''ரொம்ப தேங்க்ஸ்பா''

ரொம்ப நன்றி சார்''

''படிப்புலயும் கவனம் இருக்கட்டும்''

சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். ரகுராமன் மிகவும் சந்தோசத்துடன் நன்றி சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.

தனது கனவுகள் சாத்தியப்படாதவைகள் என ஒதுங்கிப் போய்விடும் மனிதர்கள் யாவரும் சற்று சிந்தித்து அந்த கனவுகளை அடைய வேண்டிய முயற்சியில் இறங்கினால்தான் என்ன? கனவு மெய்ப்பட வேண்டும் என பாரதிக்கு மட்டும் தான பாட வருமா?

(தொடரும்)

4 comments:

Chitra said...

தனது கனவுகள் சாத்தியப்படாதவைகள் என ஒதுங்கிப் போய்விடும் மனிதர்கள் யாவரும் சற்று சிந்தித்து அந்த கனவுகளை அடைய வேண்டிய முயற்சியில் இறங்கினால்தான் என்ன? கனவு மெய்ப்பட வேண்டும் என பாரதிக்கு மட்டும் தான பாட வருமா?


..... சரியா சொல்லி இருக்கீங்க!

Radhakrishnan said...

நன்றி சித்ரா

ராம்ஜி_யாஹூ said...

nice

Radhakrishnan said...

நன்றி ராம்ஜி.