Monday 5 July 2010

அடியார்க்கெல்லாம் அடியார் - 20


அறைக்கதவைத் திறந்த கதிரேசனுக்கு வைஷ்ணவியைப் பார்த்ததும் ஆச்சரியமாக இருந்தது. ''உள்ளே வா'' என அழைத்தான். வைஷ்ணவி அறைக்குள் நுழைந்ததும் ''சிவன் கோவிலுக்குள்ள வந்த மாதிரி இருக்கு'' என்றாள். ''உட்கார்'' என சொன்னான். தண்ணீர் ஊற்றி கொடுத்தான். சில பலகாரங்கள் எடுத்து வைத்தவன் ''இது அம்மா செஞ்சி கொடுத்தனுப்பினது'' என்றான். ''நல்லாவே உபசரிக்கிற'' என்றவள் ''சிவன் கோவில் மாதிரியே இருக்கு'' என்றாள் மீண்டும். ''காலேஜ்ல நடந்தது உனக்கு கஷ்டமா இருக்கா?'' என்றவளிடம் ''கஷ்டமில்லை'' என்றான் கதிரேசன். மேலும் அவனே தொடர்ந்தான்.

''நீ ஏன் சிவன் கோவிலுக்கு வரதில்லை'' எனக் கேட்டான் கதிரேசன். ''மதுசூதனன் என்னை சிவன் கோவிலுக்குப் போக வேணாம்னு சொன்னதால சிவன் கோவிலுக்கு வரதில்லை'' என்றாள் வைஷ்ணவி. ''ஓ ஏன்?'' எனக் கேட்ட கதிரேசனிடம் ''அவனுக்குப் பிடிக்கறதில்லை, அதனால வேணாம்னு சொன்னான், நானும் சரினு கேட்டுக்கிட்டேன்'' என்றாள் வைஷ்ணவி.

''அவனுக்குப் பிடிக்கலைனு உனக்குப் பிடிச்சதைச் செய்யாம இருப்பியா?'' என்றான் கதிரேசன். ''அதுதானே காதல், அவனுக்கு எதுப் பிடிக்குமோ அதைத்தான் நான் செய்வேன்'' என்றாள். ''கொஞ்சம் சிந்திச்சிப் பாரு, உனக்குப் பிடிச்சதை அவன் செஞ்சிருக்கலாம்தானே'' என்றான் கதிரேசன். ''நீ என்ன சொல்ல வர'' என்றவளுக்கு ''அவன் உனக்குப் பிடிச்சதையும் செய்யலாமே'' என்றான் மீண்டும்.

''யாராவது ஒருத்தர் விட்டுக்கொடுத்துத்தான் வாழனும், அதுதான் காதல், எனக்கு அவனுக்காக விட்டுக்கொடுக்கிறதுல்ல எதுவும் சிரமமாத் தோணலை'' என்றாள் வைஷ்ணவி சாப்பிட்டுக் கொண்டே. ''ரொம்ப நல்லாருக்கு'' என்றாள். ''ம்ம், அம்மா எதையுமே ரொம்ப ரசிச்சி செய்வாங்க'' என்றான் கதிரேசன். ''அதான் ருசியா இருக்கு'' எனச் சிரித்தாள் வைஷ்ணவி. 

''இதே மதுசூதனன் சொல்றதை உன்னால செய்ய முடியாம போனா என்ன பண்ணுவ?'' என்றான் கதிரேசன். ''அப்படி ஒரு சூழ்நிலை வந்தா என்னோட காதல் அங்கே இல்லாம போயிருக்கும்'' என்றாள் வைஷ்ணவி. அப்பொழுது இனிப்பு ஒன்றை எடுத்து வைத்தான் கதிரேசன். ''இது யார் பண்ணினது, கடையில வாங்கினியா?'' என்றாள் அவள். ''அம்மா செய்தது, கெடாமத்தான் இருக்கு'' என்றான் மேலும். சுவைத்துப் பார்த்தவள் ''ரொம்ப ரொம்ப நல்லாருக்கு'' என்றாள். ''செய்ற முறையில செஞ்சி, பாதுகாக்கிற முறையில பாதுகாத்தா பதார்த்தங்கள் அத்தனை சுலபமா கெடாது'' என்றான் கதிரேசன். ''நல்லாவே பேசற'' என்றாள் அவள். 

''சினிமா, கூத்து, கொண்டாட்டம், பொண்ணுங்க, போதைப் பொருள், கேம்ஸ், புகழ், பேரு, பணம்னு இருக்கிற இந்த உலகத்துல இப்படி சிவனே கதினு நீ இருக்கிறதைப் பார்த்தா எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு, இதே நீ ஒரு வைணவ குடும்பத்தில பிறந்திருந்தா சிவன் மேல இப்படி பக்தியா இருந்திருப்பியா?, என்னை மாதிரி ஒரு வைணவப் பொண்ணு உன்னை காதல் பண்றேனு சொன்னா உன்னால ஏத்துக்க முடியுமா?'' என்றாள் வைஷ்ணவி. பல நாட்களாக பேசாமல் இருந்தவளுக்கு நிறைய பேச வேண்டும் என நினைத்திருக்க வேண்டும். ''தெரியலை'' என்றான் கதிரேசன். 

''இதே சிவன் ஒரு சைவ சமயக் கடவுளா இல்லாம இருந்திருந்தா நீ தொழுதிருப்பியா?'' என்றாள் மேலும். கதிரேசன் தெரியலை என்றே சொன்னான். ''இராமன் சிவனைத் தொழுததாகவும், அர்ச்சுனன் சிவனைத் தொழுததாகவும் ஏன் அந்த திருமாலே சிவனைத் தொழுததாகவும் புராணங்களிலே எழுதப்பட்டிருக்கு, உனக்குத் தெரியும்தானே, ஆனா எங்கேயாவது சிவன் திருமாலைத் தொழுதார்னு எழுதியிருக்கிறதாப் படிச்சிருக்கியா?'' என்றாள் அவள். ''தெரியலை'' என்றான் கதிரேசன். ''என்னோடப் பேசப் பிடிக்கலையா?'' என்றாள் வைஷ்ணவி. ''அப்படியெல்லாம் இல்லை, எனக்கு நீ கேட்ட கேள்விக்கெல்லாம் பதில் தெரியலைனு சொன்னேன்'' என்றான் கதிரேசன். 

''நீ வைணவத்துக்கு மாறலைன்னு உன்னோட கோவமாயிட்டான் மதுசூதனன், நான் இப்படி இருக்காதேனு அவன்கிட்ட சொன்னேன், அதுக்கு அவன் நீ மாறுவனு சொல்லியிருக்கான், நாங்கதான் உன்கிட்ட அவ்வளவா பேசாம இருந்தோம், தப்பா எடுத்துக்காதே'' என்றாள் அவள். ''உன்னோட விருப்பத்துக்கு இல்லாம, அவனோட விருப்பத்துக்கே வாழறதா இருந்தா உனக்குனு வாழ்க்கை இல்லையா?'' என்றான் கதிரேசன். ''அவனுக்கா அது தோணனும், எனக்கு அவனுக்காக வாழறதுல சிரமம் இல்லை'' என்றாள் அவள். 

''கொஞ்ச நேரம் இரு, இதோ வந்துருரேன்'' என கீழே சென்றான் கதிரேசன். சற்று நேரத்தில் காபியுடன் மேலே வந்தான். ''இந்தா காபி'' என வைத்தான். ''நீ போட்டதா?'' என்றாள் அவள். ''இந்த வீட்டு அம்மா போட்டது, என்னக் கேட்டாலும் உடனே பண்ணிக்கொடுத்துடுவாங்க, என்னை அவங்களோட பையன் மாதிரி பார்த்துப்பாங்க, எனக்கு இவங்க முன்ன உறவு இல்லை, ஒட்டு இல்லை. இப்போ எனக்கு என்னோட அம்மாவாத் தெரியறாங்க'' என்றான் கதிரேசன். ''ம்ம், காபி நல்லா இருக்கு, நீ குடிக்கலையா?'' என்றாள். ''இல்லை, பூஜை பண்ணிட்டு சாப்பிடனும்'' என்றான் கதிரேசன். ''நான் கேட்ட ஒரு கேள்விக்குமே உன்கிட்ட பதில் இல்லையா?'' என்றாள் அவள்.

''சிவனை ஒரு சமயக் கடவுளாத்தான் நீ பார்க்கிறயா?'' என்றான் கதிரேசன். ''அப்படித்தான் உலகம் பார்க்குது'' என்றாள் வைஷ்ணவி. ''திருமால் கூட சிவனைத் தொழுதுட்டு வரதால அவர் ஒரு சமயக் கடவுள்னு ஆகுமா?'' என்றான் கதிரேசன். வைஷ்ணவி அமைதியானாள். 

''சாதி, சமயம், மொழி, மதம், இனம், நிறம் இப்படியெல்லாம் இருக்கிற பேதத்தைத் தாண்டி ஒன்றானவன் சிவன்'' என நிறுத்திய கதிரேசன் ''அப்படித்தான் ஒவ்வொரு உயிரினமும், எல்லா பேதங்களையும் தாண்டியவை'' என்றான் அவன். ''நீ சொன்னியே மதுசூதனுக்காக வாழறதுல ஒரு சிரமமும் இல்லைனு அதுக்கு காதல் தான் அடிப்படைனு, அதுபோலத்தான் ஒற்றுமைக்காக உலக அன்புக்காக ஒற்றுமையா வாழறதுல இந்த உலக உயிர்களுக்கு என்ன சிரமம் இருந்துறப் போகுது'' என்றான் கதிரேசன்.

''அப்படின்னா நீ சிவனே எல்லாம்னு சொல்றதில்ல என்ன அர்த்தம் இருக்கு?'' என்றாள் அவள். ''இறைவனை அன்பே உருவானவனு பொதுவாத்தான் சொல்லி வைச்சாங்க, ஆனா சிவம் தான் அன்பு, அன்பு தான் சிவம்னு பிரிச்சிப் பார்க்க முடியாம வைச்சது சிவனுக்குத்தான்'' என கதிரேசன் சொன்னதும் ''நீ பேச்சுப் போட்டியில கலந்து பேசியிருக்கனும், நான் எதுக்கு வந்தேன்கிறதையே மறந்துட்டேன்'' என தன் பையிலிருந்த ஒரு புத்தகத்தை எடுத்துக் கொடுத்தாள். 

'சமணமும் தமிழும்' என இருந்தது. ''மயிலை சீனி வேங்கடசாமி எழுதினது, கடைக்குப் போனேன், கண்ணுலப் பட்டுச்சு உனக்குத் தரலாம்னு வாங்கினேன், இப்ப சொல்றேன் நீ என்னோட நல்ல நண்பன்'' என்றாள் அவள். ''நன்றி வைஷ்ணவி, ஆனா மதுசூதனன் ஏதாவது சொல்லப் போறான்'' என்றான் கதிரேசன். கலகலவென சிரித்தாள் எந்த கவலையுமின்றி. பின்னர் விடைபெற்றுச் சென்றாள். கதிரேசன் இரவு சிவனுக்கு பூஜை செய்து பாடினான். 

''அழிப்பது உன்செயலாம் பிரித்தே வைத்தனர் வேலையை
பழிப்பது பற்றி சிறிதும் அஞ்சாதோர்
தீயவை யாவும் நல்லவையாக்கும் திறன் கொண்டோனே
தீயது எவைஎவையென சொல்சிவனே''

(தொடரும்)

No comments: