Friday 6 February 2009

அறுபத்தி நான்காம் மொழி - அத்தியாயம் 2

2. ஜெயராணியையும் உடன் அழைத்துச் செல்லலாம் என நினைத்து அவளை அழைத்தபோது வேலை இருக்கிறது என மறுத்துவிட்டாள். நான் மட்டும் தனியாக நாவரசன் வேலைப் பார்க்கும் இடத்துக்குச் சென்றேன். ஜெயராணி சொன்னதுபோலவே ஒரு பெண் நாவரசனிடம் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தாள். எனக்கு மிகவும் ஆத்திரமாக வந்தது. மிங்கி மிங்கி பா மட்டுமே சொல்லும் இவனிடம் அப்படி என்ன இவள் சிரித்துப் பேசிக்கொண்டிருக்கக்கூடும் என நினைத்தவாரே நெருங்கிச் சென்றேன். அவள் பேசி முடித்துவிட்டாள் போலும், என்னை நோக்கி நடந்து வரத் தொடங்கினாள்.

அவளை நிறுத்தினேன். நீ யார் எனக் கேட்டேன். நல்லவேளை அவள் நன்றாகவே பேசினாள். எங்கே இவளும் மிங்கி மிங்கி பா என்று சொல்லி விடப்போகிறாளோ என ஆத்திரத்துடன் பயமும் இருக்கத்தான் இருந்தது. அதற்குள் நாவரசன் அங்கேயிருந்து சென்றிருந்தான். என்னை கவனிக்கவில்லை போலும். பெயர் பவளக்கொடி எனவும் ஊர் பேர் சொன்னதும் எனக்கு ஆர்வம் வரத்தொடங்கிவிட்டது. யார் மகள் எனக் கேட்டபோது பழனிச்சாமி மகள் என சொன்னதும் எனக்குப் புரிந்தது. ஜபராஜ் கல்லூரியில் படிப்பதாகவும் மாலை நேரத்தில் இங்கு வந்து வேலை பார்ப்பதாகவும் சொன்னாள்.

அவன் எனது மகன் தான் என்று சொன்னேன். ஓ அப்படியா? என ஆர்வமாகக் கேட்டாள். பிறந்த ஊருக்கு சென்று பல வருடங்கள் ஆகிவிட்டது. அதனால் எங்களை அவளுக்கு அதிகமாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. என்ன பேசினாய் எனக் கேட்டேன். மிங்கி மிங்கி பா என்றாள். அவளை ஓங்கி அறைந்து விடலாம் போல் இருந்தது எனக்கு. தொலைவில் இருந்து பார்த்தபோது நீ சிரித்துப் பேசினாயே என்றேன் சற்றும் வெட்கமில்லாமல். நான் பேசினேன், அவர் மிங்கி மிங்கி பா என பல தோரணைகளில் சொன்னார் என்றாள். இனிமேல் எனது உணர்ச்சிகளை இப்படி தேவையில்லாமல் அலைபாய விடக்கூடாது என்று அவளை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தேன்.

காபி போட்டுக் கொடுத்தேன். இரசித்துக் குடித்தவள் ஏன் நாவரசன் மிங்கி மிங்கி பா சொல்கிறார் தெரியுமா என்றாள். நானும் அவளுக்குத் தெரிந்திருக்கும் என நினைத்துக்கொண்டு தெரியாது, உனக்குத் தெரியுமா என்றேன் ஆவலுடன். நானும் வேலைக்குச் சேர்ந்ததிலிருந்து கேட்கிறேன், அவர் சொல்ல மறுக்கிறார். ஆனால் வேலை இடத்தில் எல்லோரும் அவரை மிகவும் மதிக்கிறார்கள். புன்முகத்துடன் மிங்கி மிங்கி பா என சொல்லி செல்கிறார்கள். சற்றுக்கூட கோபம் கொள்வதில்லை அவர் மேல். இவரும் புன்னகையுடன் நன்றாக வேலை செய்கிறார் என சொன்னதும் எனக்கு இது தெரிந்ததுதானே என்றுதான் சொல்ல வேண்டும் போலிருந்தது. ஆனால் ம் அப்புறம் என்றேன்.

என்னிடமே தைரியமாக எனக்கு அவரை மிகவும் பிடித்திருக்கிறது என்று சொன்னாள். என்னதான் என் ஊரு மண்ணாக இருந்தாலும் என்னிடமே இப்படிச் சொல்லலாமா என நினைத்தாலும் மனதுக்குள் சந்தோசமாகத்தான் இருந்தது. யார் இவனுக்கு வாழ்க்கைப்படுவா என இருந்த நான் எங்கள் ஊர்ப் பெண்ணே வந்து சொல்வது கேட்க நன்றாகத்தான் இருந்தது. ஆனால் அந்த பழனிச்சாமிக்குத் தெரிந்தால் என்ன ஆகும் என நினைக்கும்போது நான் மிங்கி மிங்கி பா சொல்லிவிடுவேன் போல.

(தொடரும்)

1 comment:

cheena (சீனா) said...

அன்பின் வெ.இராதாகிருஷ்ணன்

இரண்டாம் அத்தியாயம் நங்கு செல்கிறது - அனைத்தையும் படிக்கிறேன் - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா - மிங்கி மிங்கி பா