Friday 10 October 2008

அவசர அறிவிப்பு

விண்வெளி ஆராய்ச்சியாளர் முருகானந்தம் வீட்டிற்குள் சந்தோசம் கலந்த முகத்துடன் வேகவேகமாக நுழைந்ததைக் கண்டு அவரது மனைவி பிரியா புரியாது கேட்டார்.

'என்ன அவசரமாக வருகிறீர்கள். என்னாயிற்று?'

'மிக முக்கியமான விசயம், உடனடியாக செயல்படுத்த வேண்டும், இதற்கு எவ்வளவு செலவு ஆகும் எனத் தெரியவில்லை, எப்படி அனைத்து நாடுகளும் ஒப்புக்கொள்ளும் என்று தெரியவில்லை ஆனால் இதைக் கட்டாயமாக செயல்படுத்த வேண்டும்' என்று சொன்னவாரே தனது அறைக்குள் சென்று முருகானந்தம் தன்னுடன் கொண்டு வந்திருந்த அனைத்து விபரங்களையும் ஒழுங்குப்படுத்தினார்.

அவரைப் பின் தொடர்ந்து வந்த அவரது மனைவி பிரியா 'அப்படி என்ன முக்கியமான காரியம், நிதானமா யோசியுங்க' என்று சொன்னதும்தான் தாமதம்,

முருகானந்தம் வேகமாக திரும்பி 'இது அப்படி யோசிக்க வேண்டிய காரியமில்லை, இன்னைக்கு நானும் நண்பர் சிவானந்தமும் ஒரு முக்கியமான விசயத்தைக் கண்டுபிடிச்சிருக்கோம். இயந்திர தொலைநோக்கியின் மூலம் 5000 ஒளியாண்டுகளுக்கு அப்பால் உள்ள நமது பூமியைப் போன்ற ஒரு கிரகத்தை கண்டுபிடிச்சிருக்கோம். சாதாரணமான ஒளியானது பல்வேறு பகுதிகளில் சிதறுவதால் அது நமது பூமியை அடைவது இல்லை, ஆனா ஒரு நட்சத்திரமானது மற்றொரு நட்சத்திரத்திற்கு அருகில் போனால் அந்த நட்சத்திரத்தின் ஒளியானது வளையும் அதனால அந்த நட்சத்திரம் பிரகாசமா தெரியும். அப்படி நாங்க உருவாக்கின தொலைநோக்கியால பார்த்தப்ப நம்ம பூமி போல ஒரு கிரகம் பார்த்தோம், இதுவரைக்கும் யாரும் பார்த்தது இல்லை' என வெகுவேகமாக சொல்லிக்கொண்டே அனைத்து கோப்புகளையும் தயார்படுத்திக்கொண்டு அறையைவிட்டு வெளியேறினார் முருகானந்தம்.

'வாழ்த்துகள் உங்களுக்கு, ஆனா இப்ப அதுக்கு என்னங்க வந்துருச்சு, இவ்வள அவசரமா தலைபோற காரியம் மாதிரி செய்றீங்களே' என்றார் பிரியா.

'நம்மளைப் போல அறிவான உயிரினங்கள் அங்கு வாழக் கூடிய சாத்திய கூறுகள் இருக்கு, நாம இங்கிருந்து அங்க போக கிட்டத்தட்ட 6 பில்லியன் வருடங்கள் ஆகும், அதனால நாம அங்கு போக நமக்கு சாத்தியமில்லை. ஆனா அவங்க அங்கே இருந்து இங்கு வர சாத்தியம் இருக்கலாம்' என விண்வெளி ஆராய்ச்சியாளர், ஜோசியக்காரர் போல் இந்த விசயம் சொன்னதும்

பிரியா சிரித்துக் கொண்டே 'என்னங்க நாம போக முடியாதுனா, அங்க யாரும் இருந்தா இங்க வரமுடியாது தானே. இதுக்குப் போய் வந்ததும் வராததுமா ஒரு காப்பி கூட குடிக்காம என் முகத்தைப் பார்த்துக் கூட பேசாம பறக்கிறீங்களே' என்றார்.

'உனக்கு சிரிப்புதான் வரும், நம்ம பூமியின் நிலையைப் பார்த்தியா, குழந்தைகள் பசி பட்டினியால அவதிப்படறாங்க, ஒவ்வொருத்தரும் ஒரு நம்பிக்கையை கையில வைச்சிக்கிட்டு எதிர்மாறா நடக்கிறாங்க. எங்கப் பார்த்தாலும் அமைதியில்லாத சூழ்நிலை, சுற்றுப்புற சுகாதார பிரச்சினை, பணப் பிரச்சினை, உள்நாட்டு வெளிநாட்டு கலவரங்கள், நாட்டு உரிமை இப்படி ஏகப்பட்ட பிரச்சினைகள். இப்படி நாம துண்டாடிக் கிடக்கறதை அவங்க வரும்போது பார்த்துட்டா நம்மளைப் பத்தி என்ன நினைப்பாங்க அதான் இதைப்பத்தி நாட்டுத் தலைவர்கள்கிட்ட பேசி உடனே அனைத்தையும் சரி செய்யனும் அதான் நமது ஜனாதிபதியை சந்திக்க கிளம்பிட்டு இருக்கேன்' என்றார்.

'நல்ல விசயம்தான், ஆனா இதெல்லாம் கொஞ்சம் அதிகபிரசங்கித்தனமாத் தெரியலை உங்களுக்கு, போன வாரம் நம்ம சாலையில சாக்கடை செல்லும் குழாயில் அடைப்பு இருந்தது, அதை சரிசெய்ய உங்களை புகார் கொடுத்து வரச் சொன்னப்ப இந்த ஊர் கவுன்சிலருப் பார்த்துப்பாருனு சொன்னீங்க, நீங்க செய்யலைனு தெரிஞ்சதும் நான் போய் புகார் கொடுத்து இப்ப சரியாயிருச்சி, அப்ப நம்ம இடத்தைப் பார்த்து மற்றவங்க என்ன நினைப்பாங்கனு வராத அக்கறை இப்ப வந்துருக்கிறது கொஞ்சம் அதிகம்தான்' என பிரியா சொன்னதும்

முருகானந்தம் தன்னிடம் இருந்த கோப்புகளை எடுத்து மேசையில் வைத்தார். 'எல்லா நல்ல காரியங்களும் ஒரு தனி மனிதன்கிட்ட இருந்துதான் தொடங்கனும், ஆனா தனிமனிதனுக்கு ஆயிரம் சிந்தனைகள் இருக்கு. இப்படி இருக்கேனு நினைச்சி சொல்லிக்காட்டிட்டு போறவங்கதான் ரொம்ப பேரு, ஆனா இப்படி இருக்கேனு அதை சரி செய்யறவங்க கொஞ்ச பேருதான். இது அவசர உலகம் பாரு. நீ செஞ்ச நல்ல காரியத்துக்கு எனது வாழ்த்துகள், ஒரு பூமி போல ஒரு கிரகத்தை கண்டுபிடிச்சதும் எனக்கு கையும் ஓடல காலும் ஓடல. அவங்க வந்துட்டா நம்ம பூமியைப் பார்த்து ஏளனம் பண்ணுவாங்களேனு தோணிச்சி, இப்ப நம்ம நாடுக ஒருத்தரை ஒருத்தர் ஏளனம் பண்ணிக்கிட்டு இருக்கறது மறந்தே போச்சு'என அமைதியாய் இருக்கையில் அமர்ந்தார்.

பிரியா புன்னகைத்துக் கொண்டே தனது கணவனுக்காக காப்பி போடச் சென்றார்.

காபியை அருந்திவிட்டு மனைவிக்கு தனது அன்பு வார்த்தைகள் சொல்லிவிட்டு தான் அவசர அவசரமாக வரும்போது வீதி வழியில் தான் கண்ட குப்பையினை எடுத்துப் போடாமல் வந்தவர், இப்பொழுதும் எடுத்துப் போடாமல் இருப்பதை கண்டு நிதானமாக அப்புறப்படுத்தினார்.

'என்னது கிரகத்தைப் பார்த்துட்டு இருக்கற மனுசனுக்கு, கிரகம் பிடிச்சிருச்சி போல இப்படி ரோட்டுல கிடக்கற குப்பையை அள்ளிப் போட்டுட்டு கிடக்காரு' என அந்த வீதி வழியில் நடந்து சென்றவர்களின் பேச்சு முருகானந்தத்திற்கு சுர்ரெனப் பட்டது. எனக்கும் தான்.

முற்றும்.

3 comments:

Thamiz Priyan said...

நல்லா எழுதி இருக்கீங்க...
வாழ்த்துக்கள்!

நசரேயன் said...

கதையும் கருத்தும் அருமை

Radhakrishnan said...

மிகவும் நன்றி தமிழ்பிரியன் மற்றும் நசரேயன் அவர்களே.