Wednesday 26 August 2009

என் உயிர் நீ

உனைப் பற்றி ஒரு கவிதை
எழுதித் தர வேண்டுமென
உரிமையுடன் கேட்டாய்
உவகையுடன் சம்மத்தித்தேன்
இமைகள் மூடி திறக்கிறேன்
இருபத்தி ஐந்து ஆண்டுகள்
இன்னும் நீ கேட்ட கவிதைக்குப்
பிள்ளையார் சுழி கூடப் போடவில்லை.

உன்னை மட்டுமே நேசிக்க எனக்கு
உரிமம் தந்தவள் நீ
உறங்கிடும் போதும் எனை
காத்து நிற்பவள் நீ
எழுதத் தோணவில்லை இதற்கு மேல்.
காதலிக்கும்வரை கவிதை வார்த்தைகள்
கல்யாணத்திற்குப்பின்
வாழ்க்கையில் காதல் கவிதைகள்

கவிதை ஒரு பொய்த்தீர்மானம்
காதல் ஒரு மனத்தீர்மானம்
நிஜமான காதல் கவிதை உனக்கு
பொய்யான நிழல் கவிதை எதற்கு.

நுனிப்புல் - பாகம் 1 (1)

ஓம் நமோ நாராயணாய நம ஓம்
நீ என் அருகினில் இருப்பினும்
உன்னை என்னுள் உணராதவரை
உன்னை தேடுதல் ஒரு தேவை
நுனிப்புல் பாகம் - 1 தரவிறக்க

மனதெல்லாம் ஒருவிதமான சந்தோசம். சின்ன அமைதியும், சில்லென்ற காற்றும், காற்றின் ஓசையும் வாசனின் கண் இமைகளை மூடியவாறே வைத்து இருந்தன. வாசன் அந்த அற்புதமான நிகழ்வினை ரசித்தபடியே அவரது தோட்டத்தில் சாய்ந்து இருந்தான்.

வாசன் இருபத்திரண்டு வயது இளைஞன். அவனது கிராமத்தின் பெயர் குளத்தூர். இந்த அழகிய கிராமம் தமிழகத்தின் தெற்கில் அமைந்து இருந்தது. 150 வீடுகள் கொண்டதாய் தெருக்கள் மிகவும் அழகாக அமைக்கப்பட்டு கிராமம் மிகவும் அற்புதமாய் இருந்தது. கிராமத்தின் தெற்கில் ஒரு கோவில், வடக்கில் ஒரு கோவில், கிழக்கில் ஒரு கோவில் மற்றும் மேற்கில் ஒரு கோவில் என கோவில்கள் சூழ்ந்த கிராமம் பாதுகாப்பாக இருந்தது. நாணல் கோட்டை எனும் நகரத்தில் இருந்து தினமும் இரண்டு பேருந்துகள் ஏழு முறை ஊருக்குள் வரும். விவசாயம் ஊரின் பிராதன தொழில். 5 வகுப்புவரை கொண்ட ஒரு பள்ளி. 4 கி.மீ தொலைவில் உள்ள சோலையரசபுரத்திற்குத்தான் 12 வரை படிக்கச் செல்ல வேண்டும். மக்கள் கூடிப் பேச பொதுவாய் ஒரு திண்ணை. மரங்களும் செடிகளும் வண்ண வண்ண மலர்களும் பூத்து இருந்தன. தண்ணீர் நிரம்பிய குளம் இரண்டு இருந்தன. செம்மையான, செழிப்பான கிராமம், தெற்கில் கரிசல் மண்ணும், வடக்கில் செவந்த மண்ணும் கொண்டதாய் இனம் பிரித்து இருந்தது.

'வாசன், வாசன்' யாரோ அழைக்கின்ற சப்தம் கேட்டு, தன் தியானம் கலைத்து, வந்து நின்ற பெரியவரைப் பார்த்து வணக்கம் சொல்லியவாரே எழுந்தான் வாசன்.

''வாசன், என்ன மாலை நேர உறக்கமா?'' என்றார் பெரியவர் வினாயகம். 50 வயது மதிக்கத்தக்க பெரும் தனக்காரர், தாராள மனம் உடையவரும் கூட. திருமண பந்தம் என்ற ஒன்றை அறியாதவர். தனி மனிதனாகவே வாழ்ந்து கழித்துக் கொண்டு இருப்பவர். இவருக்கு ஒரு சகோதரர் மட்டும் உண்டு.

''வாங்க அய்யா, உட்காருங்க'' என அங்கு இருந்த கட்டிலை எடுத்துப் போட்டான் வாசன். ''இளநீர் கொண்டு வரேன்யா'' என்று வந்தவருக்கு இளநீர் வெட்டி வருவதற்காகச் சென்றான்.

''என் கேள்விக்கு பதில் இல்லையா'' என்று இளநீரை வாங்கியவாரே கேட்டார் பெரியவர். நாம் கேட்பதை கேட்போம் பதில் வந்தால் வரட்டும் என வாழும் மக்கள் உள்ள உலகில், ஒரு விசயம் கேட்டு அந்த விசயம் விவரம் அறிய ஆசைப்படுபவர் வினாயகம்.

சிரித்தான் வாசன். ''அய்யா நான் அமைதி தேடி அமர்ந்திருந்தேன், மாலை நேர உறக்கம் எல்லாம் ஒண்ணும் இல்லை அய்யா'' என்ற வாசகம் வினாயகத்திற்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது.
''அமைதி தேடியா?'' புருவம் ஏறிட புரியாமல் விளித்த வினாயகம் விழித்தார்.

''என்ன ஆச்சர்யமா கேட்கிறீங்க அய்யா, உங்களிடம்... என்கிட்ட எதையோ தேடுவது போலே எனக்கு தெரியுத'' வாசன் வாக்கியம் முடிக்கும் முன் இடைமறித்தார் வினாயகம். ''வாசன் என்னப்பா எல்லாம் அறிந்தவன் போலே பேசற, அமைதி தேடுறேன்னு சொல்ற, உன்கிட்ட ஏதோ எதிர்பார்க்கிறேன்னு சொல்ற... ம், உண்மைதான் வாசன், உன் தோட்டம் எல்லாம் விலைக்கு தரியா?'' தறிகெட்டு வந்து விழுந்த வார்த்தைகள்! தடுமாறிப்போனான் வாசன். தந்தையிடம் கேட்காமல் நம்மிடம் ஏன் கேட்கிறார் என சந்தேகமாய் அவரை நோக்கினான்.
''என்ன வாசன் , என்ன பதில் சொல்லப்போற, உங்க அப்பாகிட்ட சொன்னா உன்கிட்ட கேட்கச்சொல்வார்'' என விசயம் அறிய வேதனைப்பட்ட்டார் வினாயகம். நிலைகுலைந்த வாசன், ''என்ன அய்யா திடீரென என் தோட்டத்தை விலைக்கு கேட்கறீங்க'' கருத்து அறிய கவலையுற்றான்.

வினாயகம் அவனை உற்று நோக்கியவாறே ''பதில் சொல்வேன்னு பார்த்தா, என்கிட்ட வினா கேட்கிற'' என்றவாரே ''இந்த கரிசல் மண்ணை எனக்கு கொடு, அதே அளவு என் செவல நீ எடுத்துக்கோ, சம்மதமா?'' பெரியவரின் வார்த்தைகள் பெரும் புதிராகவே இருந்தன. வாசன் அமைதியாய் அடம்பிடித்தான்.

''வாசன் நீ அமைதி தேடு, நான் வேண்டாம்னு சொல்லல, அதுக்குன்னு வார்த்தை பேசாம இருந்து அமைதி காத்தேன்னு வைச்சிக்கோ அப்புறம் வெளிச்சம் உனக்கும் இல்ல, எனக்கும் இல்ல, இப்பவே இருட்டிருச்சி'' அவசரப்பட்டார் வினாயகம். வாசன் தன்னை ஆசுவாசபடுத்திகொண்டான்.

''சரி, இருங்க அய்யா, கதவை அடைச்சிட்டு வரேன், பேசிக்கிட்டே போகலாம், யோசிச்சு சொல்ற விசயத்த, யோசிக்க கூட நிமிசம் இன்றி யாசிக்கிறது என்ன தர்மமோ'' என கூறியவாரே கதவை இழுத்து சாத்தினான். கதவு சாத்தப்பட்ட வேகத்தில் காற்றுக்கு வேதனை இருப்பது சப்தத்தில் தெளிவாக தென்பட்டது.

அவர்கள் நடந்தனர். வாக்கியங்கள் பரிமாறப்பட்டன. வார்த்தைகள் விட்டுகொடுக்கப்பட்டன. வினாயகத்தின் கண்களில் பெரிய கருணை தென்பட்டது. இனி சிரமம் இல்லை என தோன்றியது அவருக்கு. ஊர் எல்லை தொடுவதற்கும் தன் உள்ளத்தில் உள்ளவற்றை வாசனிடம் கொட்டி முடிப்பதற்கும், வாசன் எதையும் சிந்தாமல் தன் எண்ணத்தில் சேகரித்து வைப்பதற்கும் மிகச் சரியாக இருந்தது.

வாசன் தன் வீடு நோக்கி நடந்தான். இருட்டுத் தெரியவில்லை. ஊரெல்லாம் ஒரே வெளிச்சமாக இருந்தது. ''வாசா தோட்டவேலை முடிஞ்சதா'' என சேட்டூர் கிராமவாசி ராஜன் கேட்டார். ''முடிஞ்சதுண்ணே, இந்த பக்கம் என்ன இன்னைக்கு'' என தானும் கேட்டு வைத்தான். ''அது இல்லப்பா, இங்க ஆட்களை வேலைக்கு கூட்டிட்டு போகலாம்னு வந்தேன், இந்த ஊரு ஆட்கள் நல்ல வேலை செய்வாங்களே அதான்'' என ஊரின் பெருமை சொன்ன அவரை பார்த்து ''பார்போம்'' என அனுப்பிவிட்டு நடந்த வாசனை நோக்கி குழந்தைகள் குதூகலித்து சத்தம் போட்டு வந்தனர்.

வாசன் தினமும் இரவு 7 மணிக்கு அங்கு கூடி விளையாடும் குழந்தைகளுக்கு கதை, கவிதை சொல்வது வழக்கம். வீடு சென்று வருவதாக சொல்லிவிட்டு அவர்களை புத்தகம் கொண்டுவந்து படிக்கச் சொல்லி நகர்ந்தான். தாய் என்ன சொல்வாளோ என யோசனை அதிகமாக இருந்தது.

(தொடரும்)

மற்றும் இப் பொழுது. And, Now எழுதிய உறவுகளுக்கு.

மிகவும் வித்தியாசமாகத்தான் இருக்கிறது வலைப்பூ எழுதுபவர்களின் சிந்தனை. ஒருவர் மற்றொருவரை அடித்தால் மற்றொருவர் அடுத்தவரை தொடர்ந்து அடிக்க வேண்டும் எனும் விளையாட்டு போல ஒருவர் ஒரு கருத்தை வைத்து எழுதிட அதே கருத்துடைய விசயத்தை தங்களது பாணியில் எழுதி ஒவ்வொருவரும் தங்கள் கருத்தை முன் வைக்கிறார்கள்.

பெரும்பாலானவை தொலைந்து போன விசயங்களுடன் ஒட்டிய விசயங்களை முன்னிலைப்படுத்திய விதம் மிகவும் அருமையாக இருந்தது. பொதுவாக நம்மிடம் இருக்கும் பொருளுக்கு நாம் அத்தனை மதிப்பு தருவதில்லை, நம்மிடம் எப்பொழுது ஒன்று தொலைந்து போகிறதோ அது குறித்த சிந்தனை அதிகமாகவே நமக்கு இருக்கும். இது இயல்பாகவே நடப்பது. இதுகுறித்து எந்த சிந்தனையும் இல்லாமல் 'மொக்கை' என இடுகைகள் இடப்பட்டதும் சரி, 'கவுஜ, கவிதை, அனுபவம்' என இடப்பட்ட இடுகைகளும் சரி ஒருவருடைய எண்ணத்தை எடுத்துக்காட்டுகின்றன. அதாவது குறிப்பிடப்பட்ட விசயத்தைப் பற்றி சற்றும் யோசிக்காமல் திடீரென என்ன எண்ணத் தோன்றுகிறதோ அதை வைத்து எழுதப்படும் நான்கைந்து வரிகள் எனலாம்.

இதையே சற்று நேரம் சிந்தித்து எழுதினால் வரும் சந்ததிகளுக்கு நல்லதொரு விசயத்தையும், எப்படிப் போராடி வெற்றி பெற்றோம் என்கிற நல்லதொரு எண்ணத்தையும் விதைக்கும் வண்ணமாக எழுத்து இருந்தால் அது மிகவும் பயனுள்ளதாக அமைந்துவிடுகிறது, இப்போது எழுதப்பட்டவை எல்லாம் பயனற்றவை என கருத இயலாது. இது ஒரு விளையாட்டு என கொள்ளலாம். மூளை வளர்ச்சி அடையும் வகையில் கேளிக்கை செய்வோம் என்றுதான் பாடல் கூட இயற்றி இருக்கிறார்கள். அந்த வகையில் இவை திடீர் சிந்தனையின் வெளிப்பாடுகளே.

2003ல் தொடங்கப்பட்ட நுனிப்புல் பாகம் 1 எனும் நாவல் எழுதி முடிக்க மூன்று வருடங்கள் மேல் ஆனது. அதனை சொந்த செலவில் அச்சடித்து வெளியிட்டோம். இலண்டனில் உட்கார்ந்து கொண்டு எப்படிச் செய்ய வேண்டும், என்ன செய்ய வேண்டும் என புரியாமல் அச்சடிக்கப்பட்ட புத்தகத்தில் அதிகமான எழுத்துப்பிழைகள், வாக்கியப் பிழைகள், வார்த்தைப் பிழைகள். புத்தகத்தைத் திரும்பிப் படிக்கும்போது மிகவும் கஷ்டமாகப் போய்விட்டது. முதலில் எழுதப்படுவது நன்றாக இருந்தால்தான் பின்னால் எழுதப்படுவது இலகுவாக அனைவரையும் அடையும் என்றிருந்த நிலையை உணராமல் பல மாதங்கள் பின்னரே வெளிவந்தது அந்த நாவல்.

இந்த நாவலை வெளியிட எங்கு கேட்டாலும் உடனடியாக செயல்படுத்த முடியாத நிலையாகத்தான் இருந்தது. நூலகங்கள் எடுத்துக் கொள்ள வழி செய்ய முயற்சித்து கொண்டிருக்கையில் மனுவுக்கான இறுதிநாள் தவறிப்போனது. எழுதிய நான் இல்லாமலே நாவலை வெளியீடு செய்து பத்திரிகைகளுக்கு எல்லாம் செய்திகள் கொடுத்து பத்திரிகைகளில் இதுகுறித்து வெளிவந்த விசயம் மிகவும் மகிழ்வாக இருந்தது. இருப்பினும் நாவலை எப்படி எல்லோரிடமும் கொண்டு சேர்ப்பது எனப் புரியவே இல்லை.

நண்பர்களின் முயற்சியினால் பல புத்தகங்கள் பலரைச் சென்றடைந்தன. ஆனால் மொத்தமாக எவரும் எடுத்து விற்பனை செய்ய முன்வரவில்லை, முறையாக நாங்கள் முயற்சிக்க வில்லை. பின்னர் பல்லவி வெளியீட்டாளரிடம் தொடர்பு கொண்டு நூலகங்களுக்கு மனு செய்தோம். நூலகங்கள் நாவலை எடுத்துக்கொண்டால் சரி, அப்படி இல்லையெனில் விற்பனை செய்து தருவதாக அவர்கள் வாக்குறுதி அளித்தார்கள்.

நாட்கள் சென்று கொண்டே இருந்தது, எதுவும் ஒரு முடிவு கிடைத்தபாடில்லை. நூலகங்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட மகிழ்ச்சி செய்தி வந்தாலும், நூலகங்களிலிருந்து புத்தகங்கள் அனுப்பச் சொல்லி முறையான கடிதம் எங்களுக்கு வந்து சேரவில்லை. இருந்த நம்பிக்கையும் தொலைந்து போன நேரத்தில் நேற்று முன் தினம் நுனிப்புல் பாகம் 1 தனை அனுப்பச் சொல்லி கடிதம் வந்து சேர்ந்தது. அதைப் பார்க்கையில் நாவல் வெளியிட வேண்டும் எனும் சாதாரண ஆசை ஒரு வித்தியாசமான திசையில் பயணித்து ஒரு இலக்கை அடைந்துவிட்டதை எண்ணும்போது இப்பொழுது எவ்வளவோ மகிழ்ச்சியாக இருக்கிறது.

சென்னை கன்னிமாரா நூலகத்தில் எனது நாவலுக்கும் ஒரு இடம் கிடைத்துவிடும், மேலும் கொல்கத்தா, மும்பாய், டில்லி நகர நூலகங்களுக்கும் இந்த நாவல் பயணிக்கிறது என நினைக்கும் இப் பொழுது சிறப்பாகவே இருக்கிறது. எப் பொழுதும் சிறப்பாகவே இருக்கும் எனும் நம்பிக்கையும் பிறக்கிறது.

நிலையான நட்பு

முகம் பார்க்காமல் முதல் அறிமுகம்
வார்த்தைகளில் தொடங்கி வருடங்கள் பல கடந்து வளர்பிறையாய்
முகவரி தெரியாமல் முழு நிலவாய்
அகம் அறியாது இனம் புரியாத நட்பு

எண்ணங்கள் நினைவுகளில் இடும் அலங்காரம்
இனிய நாட்கள் இன்ப ஒளி வீசி மலர்ந்து சிரிக்கும்
நெருடல்கள் இல்லாது வணங்கி கொண்டு
நெஞ்சை வருடி நெகிழ்வு தருமது நட்பு

இடங்கள் பல மாறியது உண்டு
தொடர்ந்தே என்றும் இணைந்து வந்ததுண்டு
அன்பே உருவான இனிய இதயத்தோடு
முதுமை வரைக்கும் வருமோ இளமை மாறா நட்பு

கண்ட உண்மையில் கற்பனை மறைந்துவிடும்
கொண்ட நட்பினால் உள்ளம் அளவிலா மகிழ்ச்சி கொள்ளும்
எல்லைதனை வகுத்து புரிந்து கொண்டால்
குறையின்றி நெறியோடு நீண்டநாள் வாழ்ந்திடும் நிலையான நட்பு.

Tuesday 25 August 2009

வலைப்பூ கண்டு மிரண்டு போனேன்

உலகில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்து கொண்டேதான் இருக்கின்றன, பிரச்சினை இல்லாத உலகம் காண வேண்டும் என நினைப்பதெல்லாம் வெறும் கனவாகவே இருக்க முடியும். பிரச்சினைகளுடன் வாழ்ந்து அதிலிருந்து கொண்டே பிரச்சினைகளை வென்று அடுத்த பிரச்சினைகளை எதிர்நோக்கி வாழ்வதுதான் நிதர்சனம்.

நல்லது, பிரச்சினை முடிந்துவிட்டது என அமைதியாக எவராலும் இருக்க இயலாது. திறம்பட வாழ்க்கையை வாழ்வதற்கு நாம் நமது மனதில் உறுதியுடன் இருத்தல் அவசியம் என்பதை அறிவோம்.

சில மாதம் முன்னர் அன்பரின் 'நிகழ்காலத்தில்' எனும் வலைப்பூவிற்குச் சென்றபோது வலைப்பூ மால்வேரினால் பாதிக்கப்பட்டுள்ளது, மீறிச் சென்றால் உங்கள் கணினி பாதிக்கப்படும் எனும் எச்சரிக்கையைக் கண்டு பல நாட்களாக அவரது வலைப்பூவினைப் பார்க்காமலே இருந்தேன். ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது எனப் பார்த்தபோது அன்பர் சக்திவேலின் 'படிக்காத பக்கங்களில்' ஒரு இடுகை கண்டேன், எந்த எந்த திரட்டிகளில் எல்லாம் வலைப்பூவினைச் சேர்க்கக் கூடாது என. அவ்வாறு சில திரட்டிகளில் இணைக்கும்போது மால்வேர் பாதிப்பு வரும் என அறிந்தேன். அதன் காரணமாகவே பல தமிழ்திரட்டிகளினை முழுவதுமாகத் தவிர்த்தேன்.

மேலும் எனது வலைப்பூவில் முதன்முதலாக தன்னை இணைத்துக் கொண்ட ஜெஸ்வந்தி அவர்களின் வலைப்பூவும் இதே பாதிப்பு அடைந்ததைக் கண்டு அவரது படைப்புகளை படிக்க முடிவதில்லை.

இப்படியிருக்க நேற்று எனது வலைப்பூ விகடன்.காம் மூலம் மால்வேர் கொண்டுள்ளது என எனக்கு எச்சரிக்கை வர என்ன செய்வது எனத் தெரியவில்லை. இருப்பினும் கிருஷ்ணமூர்த்தி ஐயாவின் பின்னூட்டம் பார்த்தபின்னர் கூகிளைத் தொடர்பு கொண்டு மால்வேர் விசயம் பற்றி அறிவித்தேன். இன்று மால்வேர் எச்சரிக்கை இல்லாமல் வலைப்பூ திறந்தது.

இந்த மால்வேர் எச்சரிக்கை பாதிக்கப்பட்ட பிற தளங்களினால் நமது வலைப்பூக்களுக்குத் தெரிவது போலும்! இது கூகிள் குரோமினால் மட்டுமே அறிய முடிகிறது.

ஆஸ்த்மா தொடர் ஆரம்பித்த பின்னர் தான் இந்தப் பிரச்சினை வந்தது. விகடன்.காம் தளத்தின் ஆர்வம் புரிந்து கொள்ளும்படியாகத்தான் இருக்கிறது. இதுபோன்ற பிரச்சினை உங்களுக்கும் நேர்ந்தது உண்டா?

Sunday 23 August 2009

ஆஸ்த்மா - ஒரு ஆராய்ச்சித் தொடர் (1)

கதைகளும், கவிதைகளும், கட்டுரைகளும் தமிழில் எழுதிக் கொண்டிருந்தபோது மருத்துவம் சம்பந்தமாக எழுத இயலுமா என என்னை நோக்கிக் கேட்டபோது இப்போதைக்கு அந்த எண்ணம் இல்லை என ஓரிரு வருடம் முன்னர் சொல்லி இருந்தேன். 'கதை விடுவது மிகவும் எளிது' என நினைத்துக் கொண்டு மருத்துவம் சம்பந்தமாக எழுதுவது பற்றி சிறு முயற்சி கூட எடுத்ததில்லை.

கிட்டத்தட்ட பதினெட்டு வருடங்களாக ஆங்கில மொழியிலேயே பயின்று வந்ததின் காரணமாக பல ஆங்கில சொற்களை தமிழ்படுத்துவதில் இருக்கும் சிரமம் ஒரு ஆராய்ச்சியாளனின் பாதை எனும் தொடரை எழுதும்போது அறிந்தேன். ஒரு விசயத்தை வெளியில் சொல்ல வேண்டுமெனில் இருக்கும் சிரமத்தைப் பொருட்படுத்தாது எழுதுவது மிகவும் அத்தியாவசியமாகும். அதன் பொருட்டே ஆஸ்த்மா பற்றிய ஆராய்ச்சித் தொடரை எழுத முயற்சி எடுத்து இருக்கிறேன்.

தமிழில் எழுதுவதின் மூலம் விசயங்களைத் தவறாகச் சொல்லிவிடக் கூடாது என்பதில் கவனமுடன் இருக்க முயற்சி செய்கிறேன்.

சுவாசம் நன்றாக இருந்தால்தான் இந்த பூமியில் சுகவாசம் செய்ய இயலும். அந்த சுவாசத்தில், சுவாசக் குழலில், சுவாசப் பைகளில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும், அது எதனால் ஏற்படுகிறது, என்னென்ன ஆராய்ச்சிகள் உலகில் செய்து வருகிறார்கள், என்னென்ன மருந்துகள் நடைமுறையில் இருக்கின்றன என்பது குறித்து விரிவாக, விளக்கமாக விரைவில் தொடர்வோம்.

Saturday 22 August 2009

அழுதபோதா அம்மா வருவாள்

பசிக்கிறது...
அழும் சத்தம்
களை எடுக்கும் அம்மாவின்
காதில் விழுமோ
மரத்தின் கிளையில்
சேலை கட்டித் தொங்கவிட்டு
தூங்கவைத்து போன அம்மா...

நிழலில் நான்...
வெயிலில் உருகி உருகி
அம்மா தினமும்
வேகும் நினைப்பு வரும்
வரும் அழுகையை அடக்கியே
அமைதியாகிப் போவேன்
ஆடாத தொட்டில்
உச்சி வெயில் அடிக்க
உறங்கியது போல இருப்பேன்
ஓடி வந்து பார்ப்பாள்
ஓரக்கண்ணால் ரசிப்பேன்
பசிக்குமே பிள்ளைக்கு என
என்னைத் தூக்கி
மார்போடு அணைக்கையில்
எனக்கு கண்ணீர் முட்டும்...

உலகத்தில் உள்ள
குழந்தைகளுக்கெல்லாம்
ஒரு தாய் இருக்கக்கூடாதோ
ஆதரவற்ற பிஞ்சுகளை
நினைத்து என் நெஞ்சு
கனத்துப் போகும்
மொழி பேசத் தெரிந்ததும்
அம்மாவிடம் இதைதான்
கேட்கவேண்டும் என இருக்கிறேன்
அம்மா இல்லாத பிஞ்சுக்கெல்லாம்
அழுதபோதாவது அம்மா வருவாளா...

Friday 21 August 2009

சமணர்களே தமிழுக்கு முன்னோடி

சமண சமயம் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள் என பல குறிப்பிடப்பட்டு இருக்கின்றன. சமணத்தை அடியோடு அழிக்க சைவம் புறப்பட்டதாக சொல்லப்படுவதும் உண்டு. உண்மையிலேயே சமணர்கள் தான் தமிழை வளர்த்தார்களா என்றால் மிக எளிதாகச் சொல்லிவிடுவேன், எனக்குத் தெரியாது.

திருக்குறள் சமணர் நூல் என மார்தட்டிக் கொண்டிருக்கும் வீரச் சமணர்களும் உண்டு! திருக்குறள் பொது நூலா? இல்லை, அது இந்து நூல் என வாதிடுவார்கள் என்பதையும் அறிவோம். அர்த்தமுள்ள இந்துமதத்தில் கண்ணதாசன் திருக்குறள் இந்து நூல் என கட்டுரைகளும் கேள்வி கேட்டவர்களுக்கு பதிலும் எழுதி இருக்கிறார். உலகப் பொதுமறை நூல் எனும் திருக்குறளுக்கே இந்த கதி எனில்!

இந்திரனில் பல உண்டு என்பதையும் காரணம் காட்டி திருக்குறளில் வரும் இந்திரனே சாலுங் கரி எனும் குறளுக்கும் ஒரு விளக்கம் கொடுத்து அது சமணர் நூல் தான் என சொல்கிறார்கள்.

ஆதிபகவன் எனும் பெயர் சமணர் வணங்கும் ஆதிநாதனைத்தான் குறிக்குமாம். எழுதி வைத்தத் திருவள்ளுவர் இப்படியெல்லாமா நினைத்து இருப்பார், தனது நூலுக்கு சமண நூல் என வர்ணம் பூசுவார்கள் என!

காமத்துப்பால் எப்படி ஒரு சமணர் எழுதியிருப்பார் எனக் கேட்பவர்க்கும் ஒரு பதில் வைத்து இருக்கிறார்கள். திருத்தக்கத் தேவர் சீவகசிந்தாமணி எழுதவில்லையா? என்பதுடன் நில்லாது மேலும் சமணம் தான் முதன்முதலில் இல்லறத்தையும் துறவறத்தையும் தனியாய் பிரித்தது எனவும் தைரியமாகச் சொல்கிறார்கள். உண்மையைச் சொல்லத் தைரியம் தேவையில்லை என்பதை இப்போது நினைவில் கொள்க!

இதில் சீவகசிந்தாமணி கதை என்னை ஒருநிமிடம் 'அடடா' என்றுதான் சொல்ல வைத்தது. கதையின் நாயகன் பல தாரங்களை மணந்து கொள்கிறான், அதோடு நில்லாமல் இன்பத்தையும் சொல்வதே சீவக சிந்தாமணியின் கதை, அனைத்துமே ஆசிரியப்பா போன்ற வகையில் அமைந்திருக்கிறது என்றே நினைக்கிறேன். சில பாடல்களைப் படித்தேன், மிகவும் இரசனையுடனே எழுதியிருக்கிறார். நிச்சயம் அவரைப் பாராட்டியேத் தீரவேண்டும். முழு சீவக சிந்தாமணியைப் படித்து அப்படியே ஒரு அட்டகாசமான கதையாக எழுதிவிடலாம்.

திருத்தக்கத் தேவருக்கு விடப்பட்ட சவாலால்தான் அந்த சீவக சிந்தாமணியே எழுந்தது. ஒரு சமணருக்கு இல்லறம் பற்றி என்னத் தெரியும் எனக் கேட்க இப்படி எழுதிவைத்துவிட்டார்.

இதைவிடக் கொடுமை என்னவெனில் திருத்தக்கத் தேவரை அவரது பாடல்களையெல்லாம் கேட்டு முடித்தபின்னர் அவமானப்படுத்தி விட்டார்களாம். தன்னை சுத்தமானவர் என நிரூபிக்க சீதை அக்னியில் குதித்து கற்பை நிரூபித்தது போன்று இவரும் தனது கையை எரித்து, எழுதிய கை எரியவில்லை, கற்பினை என நிரூபித்தாராம். களங்கம் கற்பிக்கவே ஒரு கூட்டம் அன்று என்ன இன்றும் தொடர்ந்து வருகிறது. எழுதத் தெரியாது உனக்கு என்பது, எழுதினால் அனுபவமில்லாமலா எழுதினாய் என ஏளனம் செய்வது!

ஐம்பெருங்காப்பியங்கள் எல்லாம் சமணர்களின் நூல் தான் என்கிறார்கள் உறுதியுடன். நீலகேசி எனும் நூல் வேறு. இவர்கள் குறிப்பிடும் நூல்கள் பற்பல. தொலைந்த நூல்கள் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்கள். எப்படி தொலைந்த நூல்களின் பெயர்கள் இவர்களுக்குத் தெரியவந்தது என்பதற்கான ஆதாரம் அவர்களிடம் இருக்கும் என்றே நினைக்கிறேன். இதைப்போலத்தான் எனக்கு திருநாவுக்கரசர் எழுதிய பல பாடல்கள் காணவில்லை எனச் சொல்வது எப்படி எனவும் யோசிக்கிறேன். இத்தனை பாடல்கள் எழுதினேன் என எங்காவது திருநாவுக்கரசர் சொல்லி இருக்கிறாரா எனவும் தெரியவில்லை. இதுபோன்று பல கேள்விகளை இந்த தமிழ் எழுப்பாமல் இல்லை. திருநாவுக்கரசரை இங்கே குறிப்பிட்டது காரணம் இவர் ஒரு சமணர் என்று அடையாளம் காட்டப்பட்டதுதான்! சமணராக இருந்தபோது எழுதியவை தொலைக்கப்பட்டதா? அழிக்கப்பட்டதா என கேள்வி எழும்.

வைணவம் தமிழ் வளர்த்தது என்பதை விட ''கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள்'' எனக் கேட்க எப்படி சுவையாய் இருக்கிறது. எது எப்படியோ சமணம் தமிழ் வளர்த்தது, வைணவம் தமிழ் வளர்த்தது, சைவம் தமிழ் வளர்த்தது என்றெல்லாம் சொல்லி இனிய தமிழ், பிரிவினைக்காரர்களால்தான் வளர்ந்து வந்து இருக்கிறது என நினைக்கும்போது சற்று இடைஞ்சலாகத்தான் இருக்கிறது.

திருஞானசம்பந்தர் வேண்டுமெனில் தமிழ் எனத் தன்னை அடையாளம் காட்டியிருக்கலாம், அவரைப் போல் எவரேனும் தமிழ் என்று மட்டுமே தன்னை அடையாளம் காட்டிக்கொண்டார்களா? தமிழ்க்கென ஒரு கடவுள் மட்டுமே இருந்திருக்க வேண்டும் என நினைத்துத்தானோ முருகன் என பின்னாளில் அடையாளம் காட்டினார்கள்?

இப்படித்தான் இலண்டன் கோவிலில் சொற்பொழிவு ஆற்ற வந்த மங்கையர்க்கரசி (கிருபானந்த வாரியாரின் மாணவி) முருகன் பற்றி பேசினார். தொகுப்பாளாராக பேசிய நான் முருகன் தமிழ்க் கடவுள் என்று சொல்லி வைக்க, அவரும் முருகன் தமிழ்க் கடவுள்னா மற்ற கடவுளெல்லாம் இங்கிலீஸ் கடவுளா எனக் கேட்டு வைத்தார்.

அதற்கு நான் மனதில் இப்படிச் சொல்லி வைத்தவர்களைத்தான் கேட்க வேண்டும், அதோடு இப்படிச் சொல்லும்படி மூளைச் சலவை செய்யப்பட்டு முட்டாளானது என் தவறு எனக் கூறிக்கொண்டேன்.

தவம் புரிதல் (உரையாடல்?)

கானகம் சென்று கடவுள் காண
கண்மூடி உள்மந்திரம் சொல்லி
கரையான்கள் உடலில் புற்றுகள்
கட்டியதையும் உணராது
காலம் பல காத்து இருந்து
காட்சி தரும் கடவுளை
கண்ட பின்னரே கலைந்திடும் தவம்
கருத்துடன் பெற்றிடுவார் வரம்

கணப்பொழுதேனும் சிந்தித்து இருந்தால்
கள்ளம் இல்லா உலகம்
கவலை இல்லா வாழ்க்கை
காதல் கொண்ட மனம்
கற்புள்ள செயற்பாடுகள்
களிப்புடன் நகரும் வினாடிகள்
கோள்கள் பல பூமி போன்று
கணக்கில்லாத நல்ல வரங்கள்

கடவுளிடம் வரும் சந்ததியினருக்கு பெற்று
கருணை கொண்ட உலகம் உருவாக்கி
கலப்படம் இல்லாத வாழ்க்கை
கூட்டி தந்து கொண்டாடி இருக்கலாம்
காரணம் தெரியாது நல்ல
காரியம் செய்யாது போயினர்
கலக்கத்தில் இன்றைய வாழ்க்கை...

கடவுளை வேண்டி தவம் செய்ய
கானகமும் இல்லை நேரமும் இல்லை
தவம் புரிதல் இனி எளிதும் இல்லை
தவம் புரிய யாரேனும் புறப்பட தயார் எனில்
உலகம் செழிக்க ஒரே ஒரு வரம் கேளுங்கள்
கடவுள் நல்ல வரம் தருவார்

இக்காலத்தின் நிலைமை கண்டு
தவத்தின் நோக்கம் கண்டு
ஒருவேளை வராமலே இருந்து கொள்வார்
வரும் வரை புரியுங்கள் தவம்
தவம் புரிதல் என்பதே அதுதான்
தவத்தின் பலனை மற்றும்
முன்னோர்கள் போன்று மறந்து விடாதீர்கள்!

Thursday 20 August 2009

எழுத்தாளர் திரு.ஜெயமோகன் சொல்வது சரியா?!

Robin said...

moral sense - ஐ ஆன்மிகம் என்று நினைத்து எழுதியுள்ளீர்கள். தவறு. ஆன்மிகம் moral sense -ஐ பலப்படுத்தும். ஆனால் அதுதான் ஆன்மிகம் என்பது சரியல்ல.

Robin said...

வைத்தால் குடுமி அடித்தால் மொட்டை என்பார்கள். ஒன்றில் அதி தீவிரமாக ஒன்றை பின்பற்றுவது அல்லது ஒரேயடியாக வெறுத்து விடுவது. கடவுளை நம்புபவர்கள் பலரும் செய்யும் தவறுகளால் கடவுள் என்றாலே வேண்டாத பொருளை போல பார்க்கும் நிலை வளர்ந்து வருகிறது. மதங்கள் வேண்டாமென்ற நிலை மாறி இப்போது கடவுளே தேவையில்லை என்னும் போக்கு வளர்ந்து வருகிறது.


சம்பந்தபட்ட பதிவு: http://ellaam-irukkum-varai.blogspot.com/2009/08/blog-post_20.html

----------------------------------------

மிக்க நன்றி ராபின். நீங்கள் இவ்வாறு எழுதிய பின்னர் எனக்குள் இருந்த ஆன்மிகம் குறித்த தெளிவான பார்வை சற்று மங்கலாக முயற்சித்தது. ஆனால் மீண்டும் சிந்தித்த பின்னர் மிகவும் தெளிவாகத்தான் தெரிந்தது. இவ்வுலகிற்கு இறைவன் அவசியமில்லை. நாம் செய்யும் செயல்களுக்கு எல்லாம் பொறுப்பேற்றுக் கொள்ள ஒரு இறைவன் அல்ல ஓராயிரம் இறைவன் இருந்தாலும் இந்த உலகம் தாங்காது. நமது செயல்களுக்கு நாம் தான் பொறுப்பேற்க வேண்டும். எனது பாவங்களை, புண்ணியங்களை ஏற்றுக்கொள்ள இறைவன் யார்? இதையெல்லாம் இறைவன் செய்ய வேண்டும் என இறைவனை நான் பணித்தேனா? இது அவரின் கடமை என என்னைக் கேட்காமல் இறைவன் செய்ய முற்படுகிறாரா? இதில் ஒன்றை தீவிரமாகப் பின்பற்றுவது, அல்லது ஒரேயடியாக வெறுத்துவிடுவது எனக் கருத வேண்டாம். இறைவன் அவசியமில்லை எனச் சொல்வதற்கும் இறைவனை வெறுத்து ஒதுக்குவதற்கும் வேறுபாடு உண்டு. உங்கள் பின்னூட்டம் பார்த்தபின்னர் ஆன்மிகம் என்றால் என்ன எனத் தேடியதில் ஆன்மிகம் குறித்து எழுத்தாளர் திரு. ஜெயமோகனின் பதிவில் இருந்து சிலவற்றை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்.


தன் தளத்தில் ஆன்மிகம் என்பது ஓர் இருத்தல், நிகழ்தல் மட்டுமே. அதற்கடுத்த தளத்தில் அது ஒரு தேடல். இரு வகையிலும் அதில் நெறி என ஏதுமில்லை. ஆன்மிகம் என்றால் ‘சாராம்சவாதம்’ என்று பொதுவான பொருள். அதன்படி ஒவ்வொரு பொருளுக்கும், இருப்புக்கும் சாராம்சமான ஒன்று அதில் உள்ளது. நாம் அறிவது அச்சாராம்சத்தின் ஒரு தோற்றத்தை மட்டுமே. ஆகவே நாம் காண்பவை முழுமையான உண்மைகளல்ல, காண்பவற்றுக்கு அப்பால் முழுஉண்மை வேறு ஒன்று உள்ளது என்பதே ஆன்மிகத்தின் தொடக்கம்.


ஆன்மிகம் என்றால் இறைவாதம் அல்ல. ஆன்மிக வாதிகளில் ஒருபெரும்சாரார் சாராம்சமாக தாங்கள் உருவகிப்பதை இறைசக்தியாக உருவகம் செய்துகொண்டிருக்கிறார்கள். ஆன்மிகம் என்றால் கடவுள்வழிபாடோ பக்தியோ மட்டுமல்ல. ஆன்மிகம் என்பது மதம் அல்ல. மதம் தன்னை மரபார்ந்த நம்பிக்கைகள் குறியீடுகள் சடங்குகள் மூலமே நடைமுறை வாழ்க்கையில் பொருத்திக் கொள்கிறது. உதாரணம் நீத்தார்சடங்கு என்பது புராதனமான ஒரு நடைமுறை மட்டுமே. அதை மதம் தனக்குரிய பொருள் அளித்து தனது வழிமுறைகளில் ஒன்றாக ஆக்குகிறது. பல நம்பிக்கைகளிலும் குறியீடுகளிலும் சடங்குகளிலும் இவ்வாறு மதம் மூலம் ஏற்றப்பட்ட ஆன்மிக அடிப்படை இருக்கக் கூடும். ஆனால் ஆன்மிகம் என்பது அவை ஏதும் அல்ல.


நாம் வாழும் இப்பிரபஞ்சம் நம் எளிய அனுபவங்களின் எல்லைக்கு அப்பாற்பட்ட மாபெரும் சாராம்சம் கொண்டது என்ற உணர்விலிருந்து எழுவதே ஆன்மிகத் தேடல். இதன் பின் ஒரு நோக்கம் அல்லது இலக்கு செயல்படுகிறது என உணர்வதே ஆன்மிகம். அதன் விதிகளை அறியமுயல்தலே ஆன்மிகத்தேடல்.


நான் உள்ளுணர்வை மேலும் நம்பும் படைப்பாளி. ஆகவே ஆன்மிகவாதி.


முழு பதிவினையும் படித்திட http://jeyamohan.in/?p=118


பெரும்பாலனவர்களால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் சொன்னால் உலகம் சரியென்று ஏற்கும் எனச் சொல்ல வரவில்லை. ஒவ்வொருவரின் பார்வையும் ஆன்மிகம் குறித்து வேறுபட்டிருக்கக் கூடும். இறைவனை எதற்கெடுத்தாலும் காரணம் காட்டுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள இயலாத சாதாரண மனிதனே நான்.

ஆன்மிகம் - ஒரு தெளிவான பார்வை

ஆன்மிகம் என்பது உள்ளுணர்வு எனக் கொள்வதோடு மட்டுமின்றி, வாழ்க்கையில் நேர்மையாகவும், நியாயமாகவும், நீதி தவறாமலும், ஒழுக்கமாகவும், அமைதியாகவும், தன் மற்றும் பிற உயிரினங்களின் மேல் அன்பு செலுத்தக்கூடியதாகவும் இருப்பது.


இறைவனையும், ஆன்மிகத்தையும் சம்பந்தப்படுத்தியே நமது நடைமுறைப் பழக்கவழக்கங்கள் வளரத்தொடங்கின. நாகரிகம் என நதியோரங்களில் தொடங்கியபோது இயற்கை விசயங்கள் இறைவனாக பரிமாணம் செய்து கொண்டது. இத்துடன் நிறுத்தப்பட்டிருந்தால் எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் போயிருக்கும், ஆனால் நமது உள்ளுணர்வின் வெளிப்பாடாக இறைவன் இயங்கிக் கொண்டிருப்பது போன்றத் தோற்றம் தான் முரண்பாடுகள் ஏற்பட வழிவகுத்தன.


இப்பொழுது ஆன்மிகம் பற்றிய ஒரு தெளிவான கண்ணோட்டம் வேண்டுமெனில் மேலே ஆன்மிகத்திற்கென வரையறுக்கப்பட்ட நெறிமுறைகளைப் பின்பற்ற இறைவனுக்கு முதலிடம் தருவதும், இறைவனை முன்னிறுத்தி இச்செயல்பாடுகளைச் செய்வதும் அவசியமில்லாத ஒன்றாகும் என்பது மிகவும் தெளிவாகும்.


இவ்வாறு ஒன்றைத் தெளிவுப்படுத்திக் கொள்ளும்போது இறைவனுக்கெனச் செய்யப்படும் சடங்குகள், சம்பிரதாயங்கள் தேவையற்றவை என்பது தெள்ளத் தெளிவாகும். மேலும் ஆன்மிகமானது இறைவனுக்கும், மனிதனுக்கும் இடையேயானத் தொடர்பு கொள்ளும் வழி இல்லை என்பது அறியப்படும். இப்படி இறைவனை சம்பந்தப்படுத்திக் கொள்ளாத இந்த ஆன்மிக முறையை பின்பற்றும் மனிதரை ஆத்திகர் என்றோ, பின்பற்றாத மனிதரை நாத்திகர் என்றோ சொல்ல வேண்டியதில்லை.


அறிவியல் வளர்ச்சியினாலும், தனிமனித சிந்தனை வளர்ச்சியினாலும் இறைவனைப் பற்றியும், உள்ளுணர்வு பற்றியும் விழிப்புணர்வு வளரத் தொடங்கியது. மனிதர்களின் சுயநலப் போக்கினால், வெறுப்புணர்வு வளர்ந்த காரணத்தால் ஆன்மிகம் இறைவனை முன்னிறுத்தி தனது அடையாளத்தைத் தொலைக்கத் தொடங்கியது. தங்களுக்குள் வேறுபாடுகளுடன் வாழத் தொடங்கிய மனிதர்களுக்கு உண்மையான ஆன்மிகம் எதுவெனத் தெரியாமல் போனது.


ஆன்மிகம் என்பது வாழ்க்கையை முறையாக வாழும் கலை என்பதை மனதில் உறுதியுடன் நிறுத்திக் கொண்டால் சிறந்த வாழ்க்கை முறையை நம்மால் வாழ இயலும், மேலும் ஆன்மிகம் நல்வழிப்பாதையாக மனிதகுலத்திற்கு என்றும் சிறந்து விளங்கும்.


இறைவனை வணங்கினால் தான் எல்லாம் சிறப்பாக நடக்கும் என ஆன்மிகம் சொல்லவே இல்லை. நாம் சிறப்பாக, பொறுப்புடன் நடந்து கொண்டால் தான் எல்லாம் சிறப்பாக நடக்கும் என்றுதான் ஆன்மிகம் சொல்கிறது. மேலும் ஒருமுறை ஆன்மிகம் என்றால் என்ன என்பதை நினைவு படுத்துவோம்.


ஆன்மிகம் என்பது உள்ளுணர்வு எனக் கொள்வதோடு மட்டுமின்றி, வாழ்க்கையில் நேர்மையாகவும், நியாயமாகவும், நீதி தவறாமலும், ஒழுக்கமாகவும், அமைதியாகவும், தன் மற்றும் பிற உயிரினங்களின் மேல் அன்பு செலுத்தக்கூடியதாகவும் இருப்பது.


Tuesday 18 August 2009

கலக்கல் பின்னூட்டம் - நன்றி Sword Fish

Sword Fish said...

Your question is: Why does anmikam (meaning of this word, as used by you, is confusing) put off people today, unlike in the past?

Instead of answering the question in simple terms, you have rambled so much that I dont understand what is in your mind - except at the end, where, the meaning of anmikam, according to you, appears to be one that goes beyond religion and the god the religions point to. You want that anmikam to be detached from religion, god, and rituals and ceremonies. But this does not answer the question: why is anmikam unpopular today?

Please write clearly.

சம்பந்தபட்ட பதிவு http://ellaam-irukkum-varai.blogspot.com/2009/08/blog-post_18.html

--------------------------------

இந்தப் பின்னூட்டத்தைப் பார்த்ததும் முதலில் எனக்கு சிரிப்புதான் வந்தது. மீண்டும் படித்தாலும் சிரிப்பு வரத்தான் செய்கிறது. மிகவும் ரசிக்கிறேன்

இவர் தனது மனதில் உள்ளதை அப்படியே சொல்லிச் சென்றவிதம்தனைப் பார்த்து மிகவும் ரசித்துக் கொண்டிருக்கலாம். கடைசியில் தயவுசெய்து தெளிவாக எழுது என்று சொன்னவிதம் மிகவும் நன்றாக இருந்தது.

ஏதோ எழுதுகிறோம் என்ற நினைப்பைப் போக்கும் விதத்தில், சொல்ல வந்ததைத் தெளிவாகச் சொல்ல வேண்டும் என அழுத்தமாகச் சொல்லிச் சென்ற விதம் மிகவும் அருமை.

நானும் பலருடைய இடுகைகளுக்குப் பின்னூட்டங்கள் இட்டிருக்கிறேன், சில இடுகைகளில் பின்னூட்டம் இடாமல் வந்துவிடுவேன். எனது பின்னூட்டங்கள் பல சிதறிக் கிடக்கின்றன. பின்னூட்டங்கள் கூட பயனளிக்கும் விதமாக அமைந்தால் எத்தனை நல்லது என்பதை இன்று இரண்டாவது முறையாக காண்கிறேன்.

நாம் நமது வலைப்பூவில் எழுதுவது மட்டும் அல்ல எழுத்து, பிறரது வலைப்பூவிலும் எழுதுவதும் எழுத்துதான். எனவே நமது எண்ணங்கள் பயன்படுமாறு எழுதுவது இன்றியமையாததாகிறது.


ஆன்மிகம் என்றால் ஒதுங்குவது ஏன்?

ஆன்மிகம் என்றாலே வேண்டாம் எனச் சொல்லி ஒதுங்குமளவிற்கு இன்றைய ஆன்மிக நிலை பலரை உள்ளாக்கியிருப்பது மிகவும் யோசிக்க வேண்டிய விசயம். அப்படி என்னதான் இந்த ஆன்மிகம் செய்தது, செய்து கொண்டிருக்கிறது?

நல்லதை வேண்டாம் என சொல்லுபவர் உண்டோ உலகில்? தமக்கேனும் இல்லாது போனாலும் பிறருக்கேனும் நன்மை வாய்த்திட வேண்டும் என வாழ்ந்த/வாழும் புண்ணியர்கள் நிறைந்த, நிறைந்திருக்கும் பூமியல்லவா இது. இதைத்தான் ஆன்மிகம் செய்ய வந்தது, இன்னும் சிலரால் செய்து கொண்டிருக்கிறது.

ஒரு சின்ன கதை உண்டு. நீங்கள் அனைவரும் அறிந்திருக்கவும் கூடும். ஒரு ஐந்து வயது சிறுவன் சாய்வு நாற்காலியில் எப்பொழுதும் சென்று அமர்ந்திருப்பான். சாப்பிடுவது, உறங்குவது, உட்கார்வது என இதுதான் அவனது வேலை. எப்பொழுதும் ஓய்வு தான். அவனை அவனது தாத்தா

''ஏன் இப்படி எப்பப் பார்த்தாலும் இப்படி இருக்க'' எனக் கேட்பார்.

அதற்கு அவன்,

''என்ன செய்யனும் தாத்தா'' என்பான்.

''நீ படிக்கனும், வேலைப் பார்க்கனும், கல்யாணம் பண்ணனும், குழந்தைக பெறனும், என்னைப் போல தாத்தா ஆகனும், அப்புறம் இப்படி உட்காரனும்'' என்பார்.

''இதெல்லாம் செஞ்சிட்டு உட்காருரதுக்கு, இப்ப இருந்தே உட்கார்ந்தா என்ன தப்பா தாத்தா'' என்பான் அந்த சிறுவன்.

தாத்தா விழிப்பார். இந்த தாத்தா நிலையில் நாம் இருந்தால் என்ன செய்வோம், அது அவரவர் விருப்பம்.

இதுதான் வாழ்க்கை. ஒன்றை பற்றிக் கொண்டு செய்தலும் சரி, பற்றிக்கொள்ளாமல் இருத்தலும் சரி, முடிவில் அத்தனை வித்தியாசம் ஒன்றும் இருக்கப்போவதில்லை. பேசாமல் சாதித்த இரமணரும் சரி, பேசி சாதித்த விவேகாநந்தரும் சரி! ஒவ்வொருவருக்கு ஒரு திசை, ஒவ்வொருவருக்கு ஒரு அனுபவம்.

ஆன்மிகத்திற்கு விளக்கம் அவசியமில்லை எனும் கருத்து எனக்குண்டு. ஆன்மிகம் ஒரு உணர்வு. அந்த உணர்வினை வெளிக்காட்டுதலின் பொருட்டு எழுந்ததே அத்தனை வேதங்களும், சத்தியங்களும், தர்மங்களும், நெறிக்கலைகளும், பாடல்களும், புராணங்களும் என்ற கருத்தும் எனக்கு உண்டு. என்னவொரு பிரச்சினை எழுந்தது எனில் எழுதியவர் தன்னை முன்னிலைப்படுத்தியதின் விளைவு பிறர் அந்த எழுத்துக்களை கொஞ்சம் சந்தேக விழிகளுடன் பார்க்கத் தொடங்கினர் எனலாம்.

ஆன்மிகத்தைப் பொதுப்படுத்தி எழுதியவர் எவரேனும் உண்டு எனில் உண்டு, மெளனத்தை மொழியாக்கிக் கொண்ட ஞானிகள். அந்த மெளன மொழியை கற்றுக்கொண்டவர்களும் உண்டு. ஆன்மிகம் பற்றி எழுதியதை, எழுதப்பட்ட விதத்தை கண்டு மெய்மறந்து ரசிப்பேன், பாடப்பட்ட பாடல் எல்லாம் படிக்கும்போது எத்தனை திறமை என உள்ளூர வியந்து கொள்வேன். அது எந்த அடையாளம் கொண்ட எழுத்தாக இருந்தாலும் சரி, எந்த ஒரு இலக்கை சுட்டுவதாக இருந்தாலும் சரி, ரசிப்பதும், விளங்கிக் கொள்வதும் தான் எனக்கு வேலை. இங்கேயும் என்னை முன்னிலைப்படுத்துவதன் காரணம் ஒவ்வொருவருக்கும் ஒன்றொன்றாக இருக்கலாம் என்பதேயாகும்.

மேலும் ஒன்றை விலக்கிட ஓராயிரம் காரணங்கள் இருந்தாலும், ஒன்றைச் சேர்த்துக் கொள்ள ஒரு காரணம் போதும், ஆனால் அந்த காரணமும் ஆன்மீகத்தில் இல்லாதிருப்பது போன்று ஆகிவருகிறது இன்றைய காலகட்ட சூழல்கள்.

எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது, என்னிடம் எவரேனும் எதையும் பிடித்திருக்கிறதா? பிடிக்கவில்லையா? எனக் கேட்டால் பிடித்திருக்கிறது அல்லது பிடிக்கவில்லை என்று மட்டுமே சொல்லிவிடுவேன். என்ன காரணம் எனக் கேட்டால் பிடித்திருக்கிறது அதனால் பிடித்திருக்கிறது, பிடிக்கவில்லை அதனால் பிடிக்கவில்லை என சொல்லி நிறுத்திவிடுவேன்.

இன்ன காரணத்துக்குத்தான் இன்னது பி்டிக்கிறது என்றும், இன்ன காரணத்துக்குத்தான் இன்னது பிடிக்காமல் போகிறது என்றும் சொல்ல மிகவும் யோசிப்பேன். காரணம் சொல்லமாட்டாயா எனக் கேட்பவர்களுக்கு என்ன பெரிய காரணம் இருந்துவிடப் போகிறது என இருந்துவிடுவேன். இப்படித்தான் ஆன்மீகத்தினை அணுகத் தொடங்கினேன். ஆன்மீகத்திற்கு எந்த ஒரு காரணமும் அவசியமில்லை என்றே உறுதி கொண்டேன்.

ஒரு காரணமும் சொல்ல மாட்டேன்கிறாயே என என்னைக் கேட்டவர்கள் உண்டு. ஆனால் காரணம் சொல்லிப் பழகிய காலமும் சரி, விசயங்களும் சரி, மனதில் பெரும் சஞ்சலத்தை ஏற்படுத்தத் தொடங்கின. காரண காரியங்கள் விருப்பு வெறுப்புகளை உள்ளடக்கி வருவன. ஆன்மீகம் என்றாலே அமைதி என்ற கொள்கையை எனக்குள் வைத்துக் கொண்டு நான் எழுதுவதும் சரி, பேசுவதும் சரி, வாழும் முறையும் சரி பெரும் முரண்பாடாகத்தான் இருக்கின்றது. இந்த முரண்பாடு ஒரு காரணமோ? ஆன்மீகம் என்றாலே அமைதி என்பது ஒரு காரணமோ? காரணம் சொல்லாமல் வாழ முயல்வதே பெரிய விசயம் தான், ஆனால் காரணமின்றி காரியங்கள் இல்லை எனப் பழகிவிட்டோம் நாம்.

மேலும் நோய் இல்லாத உடம்பைத்தான் இறைவனிடம் ஒப்புவிக்க வேண்டும் எனவும் ஆன்மீகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆதிகாலத்தில் நோய் என்பது பாவ புண்ணியங்களின் அடிப்படையில் வந்த விசயம் எனக் கருதப்பட்டு அவ்வாறே இன்றும் சில இடங்களில் சொல்லப்பட்டு வருகிறது என எண்ணுகிறேன். நோய் வந்தால் சமூகத்திலிருந்தே அவர்களை ஒதுக்கி வைத்தார்கள், இன்று கூட சில தொற்று நோய் உடையவர்களை தனித்து இருக்கச் சொல்வதுண்டு. அதேவேளையில் ஏன் நோய் வருகிறது என இவர்களுக்கு எல்லாம் அறிவுறுத்தி அதை தீர்க்க வந்தார் ஒருவர், அவரையும் அன்றைய சமூகம் விட்டுவைக்கவில்லை. அவரை கேலி பண்ணியது, உதாசீனம் செய்தது. ஆனால் அவர் போராடி வெற்றி பெற்று மருந்தினை கண்டுபிடித்தார். ஹும், நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க படும்பாடு இருக்கிறதே, இது எந்த பாவ புண்ணியத்தில் சேரும் எனத் தெரியவில்லை.

'நோய் கொல்லும் மருந்தினை உட்கொண்டு
மெய் வளர்க்கும் நிலையது கொண்டபின்
மெய்ப்பொருள் உன்னை மனமேற்றி வைத்திட
உன்மனம் சம்மதம் தந்தாய் இறைவா'

எனும் கவிதையை எழுதியது உண்டு. ஆன்மிகம் என்றாலே கசக்கும் பொருளாகிப் போனது பலருக்கு. தீண்டத்தகாத விசயமாக ஆன்மிகம் கருதப்பட்டு வருகிறது. இந்த நிலையை ஏற்படுத்த உதவிய பல சடங்குகள் சம்பிராதயங்கள் ஆன்மிகத்துக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாதவை. ஆன்மிகத்தை இந்த சடங்குகள் சம்பிராதயங்களிலிருந்து விலக்கிப் பார்த்தால் அது ஒரு அருட்பெருஞ் சுவையாகத் தெரியும். ஆன்மிகத்திலிருந்து விசயங்களைக் கற்றுத் தெளிதல் எளிது. வேறுபாட்டினைப் பார்த்தால் எப்படி ஒற்றுமை கண்ணுக்குத் தெரியும்? மதம், கடவுள்கள் எல்லாம் ஆன்மிகத்துக்குத் தேவையில்லாதவை என்பதை அறிந்து கொள்வோம்.

இப்பொழுது சிந்தியுங்கள், ஆன்மிகம் என்றால் ஒதுங்கிப் போவோரா நீங்கள்?

ஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 2

இந்த அணுக்கள் மிகவும் விசித்திரமானவை. இவைகளை நம்மால் ஆக்கவோ அழிக்கவோ முடியாது. இனி வரும் காலங்களில் மாற்றம் எற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அறிந்து கொள்ளத்தானே அறிவியல். இத்தோடு முடிந்துவிட்டது என தூக்கிப் போடுவதற்கு எதற்கு அறிவியல்?

புரோட்டான் எலக்ட்ரான் நியூட்ரான் இவை ஒரு அணுவில் இருக்கும் துகள்கள் என அறிந்து இருப்பீர்கள். ஹைட்ரஜனுக்கு மட்டும் எதற்கு ஒரு புரோட்டான் ஒரு எலக்ட்ரான்? அதிசயம் தான், ஒரு தொடக்கம் இருக்க வேண்டுமே.

ஒரு அணுவினை எடுத்துக் கொண்டால் அந்த அணுவுக்கு என ஒரு கருவறை (neucleus) இருக்கும், அந்த கருவறையில் புரோட்டானும் நியூட்ரானும் இருக்கும், இதன் மொத்த கூட்டுத்தொகையே அந்த அணுவின் நிறை(mass number) ஆகும். நிறைக்கும் (mass) எடைக்கும் (weight) வித்தியாசம் இருக்கிறது அது பற்றி பின்னர் பார்க்கலாம். மேலும் பல துகள்கள் பின்னர் அறியப்பட்டன.

இப்பொழுதுதான் நமக்கு கற்பனை தேவைப்படுகிறது. இந்த கருவறையை சுற்றி எலக்ட்ரான்கள் சுற்றி சுற்றி வருகின்றன. இதில் ஒரு அதிசயம் என்னவென்றால் இப்படி சுற்றி வரும் எலெக்ட்ரான்கள் நாளடைவில் கருவறைக்குள் விழ வேண்டும் ஆனால் விழுவதில்லை, நமது கோள்களைப் போன்று என வைத்துக்கொள்வோம்.

கற்பனை பண்ண தயார் ஆகுங்கள். எத்தனை புரோட்டான்கள் இருக்கிறதோ அது பொருத்தே அந்த அணுவுக்கு எண்கள் (atomic number) தரப்படும். எண் ஜோதிடம் பற்றியெல்லாம் நினைக்க வேண்டாம். அதே வேளையில் எத்தனை புரோட்டான்கள் இருக்கிறதோ அத்தனை எலெக்ட்ரான்கள் வெளியில் சுற்றிக் கொண்டு இருக்கும். ஒருவனுக்கு ஒருத்தி என்ற தத்துவம் உணரப்பட்டது இங்குதான். சில மாற்றங்கள் நிகழும் அது குறித்து ஐசோடோப்களில் குறிப்பிடுகிறேன்.

சரி எப்படி இந்த எலெக்ட்ரான்கள் சுற்றி வருகின்றன என பார்த்தால் அவைகளுக்கு ஆர்பிட்டால்கள் (orbitals) என பெயரிடப்பட்டு அழைக்கப்படுகின்றன. அதாவது ஒரு அணுவினை சுற்றி ஏழு சுற்றும் அடுக்கு மாடிகள் உள்ளன. அவை முறையே கே (k) எல் (L) எம் (M) என் (N) ஓ (O) பி (P) கியூ (Q) என அணுவின் கருவறையில் இருந்து தொடங்கும். ஒவ்வொரு மாடியிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையான விருந்தாளிகளே அதாவது எலக்ட்ரான்கள் தங்க முடியும். சில நேரங்களில் எலக்ட்ரான்கள் மாடியில் உள்ள அறையை மாற்றம் செய்து கொள்ளவோ மாடியையே மாற்றம் செய்து கொள்ளவோ வேண்டி வரும். அதனை பின்னர் விளக்கமாக பார்ப்போம்.
ஒவ்வொரு மாடியில் எவ்வளவு எலக்ட்ரான்கள் தங்கலாம் என பார்ப்போம்.

K இந்த மாடியில் ஒரே ஒரு அறை அது s. அதில் இரண்டு பேர் தங்கலாம். ஒரு அறைக்கு இருவர் மட்டும் தான்.

L இந்த மாடியில் இரன்டு அறை. s, p எனப்படும். p அறை சற்று பெரிய அறை அதில் மூன்ரு பகுதிகள் பிரிக்கப்பட்டு அங்கு 6 எலெக்ட்ரான்களும் s அறையில் 2 எலெக்ட்ரான்களும் ஆக மொத்தம் 8 எலெக்ட்ரான்கள் தங்கலாம்.

M மாடியில் மூன்று அறைகள். s, p, d. s அறை இரன்டு. p அறை 6. d அறையும் p அறை போன்று ஐந்தாகப் பிரிக்கப்பட்டு இருக்கும் அதில் 10 எலெக்ட்ரான்கள் தங்கலாம். ஆக மொத்தம் 18.

N, இதில் நான்கு அறைகள். s,p,d, f என அழைக்கப்படும். மேற்சொன்னபடி s=2, p=6 , d=10 f ஏழு பகுதிகளாய் பிரிக்கப்பட்டு 14 எலெக்ட்ரான்கள் ஆக மொத்தம் 32

O இதில் ஐந்து அறைகள் s,p,d,f,g என அழைக்கப்படும். g க்கு 18 ஆக 50.

P இதில் ஆறு அறைகள் s,p,d,f,g,h என அழைக்கப்படும் hக்கு 22 ஆக 72.

Q மாடியில் ஏழு அறைகள் s,p,d,f,g,h,i என அழைக்கப்படும் iக்கு 26 ஆக 98.

(தொடரும்)

Monday 17 August 2009

உயிரது உணர்வற்றது

செல்கள் பொசுக்குவாய்
தசை எரிப்பாய்
உறுப்புகள் உருக்குவாய்
நெருப்பே நீ
உயிர் எரித்ததுண்டா?

உள்ளும் வெளியுமாய் செல்வாய்
ஓரிடத்தில் ஒழுங்காய் நில்லாய்
உலகதில் தொடாத பாகமில்லை
காற்றே நீ
உயிரைத் தீண்டியதுண்டா?

வாயுவாய் மாறுவாய்
பனிப்பாறையுமாக ஆகுவாய்
வாழ்வது உன்னில் தொடக்கமாம்
நீரே நீ
உயிரை உருவாக்கியதுண்டா?

எட்டாத தொலைவுக்கு உன் பாதை
எட்டும் தொலைக்கு உன் பார்வை
தொடக்கமுமின்றி முடிவுமின்றி
பால்வெளி வீதியே நீ
உயிரை உள்ளடக்குவாயா?

உணர்வில் அறிந்த உணர்வில்
உட்படாத அரியதுவாம்
பெரியதாகியும் சிறியதாகியும்
உயிரே நீ
உயிரில்லை என உணர்வாயா?

'தோன்றாப் பெருமையனே'

இறைவன் உலகில் தோன்றவே இல்லை என்பது சத்திய வாக்கு. அதெப்படி உனக்குத் தெரியும் எனக் கேட்டால் இதை நிரூபிக்க புதிய செய்முறைப் பயிற்சி ஒன்றை எழுதி அதை விளக்கிக் கொண்டிருக்கமுடியாது. ஒன்றை விளக்க முடியாது போனால் அதைப் பற்றி விவரித்துக் கொண்டிருப்பதால் என்ன பயன்? அதுவும் அந்த விளக்கம் முழுவதையும் விளக்க முடியாது இருக்குமானால் அதனால் என்ன பயன்?

இப்படி நினைத்து இருந்தால் எந்த ஒரு விசயத்தையும் அறிந்து கொள்ள இயலாது. கண்கள் குருடாகும் வரை வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்த அறிவியலாளார் ஒருவரை உலகம் நினைவுப் படுத்திக் கொண்டிருக்காது.

இறைவனுக்குப் பிறப்பு இல்லை, இறப்பு இல்லை. இதுதான் உண்மை. இதில் கிருஷ்ணரின் பிறந்ததினம் என வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அப்படியெனில் கிருஷ்ணர் கடவுள் இல்லை என்றாகிவிடுகிறது. ஆம், கிருஷ்ணர் இறைவன் இல்லை. அப்படியெனில் சிவனின் திருவிளையாடல்கள் என பலவும், அவரது குழந்தைகள் குமரன், விநாயகர், அவரது குடும்பம் எனப் பேசப்படுவதால் அவரும் இறைவன் இல்லை என்றாகிவிடுகிறது. அவர்கள் மனிதர்கள், அவ்வளவே. ஆனால் நம்மில் பலரால் அவர்களை மனிதர்கள் என ஏற்றுக்கொள்ள முடிவதில்லை, காரணம் நமக்குள் விதைக்கப்பட்ட நம்பிக்கை. எப்படி நமது பெற்றோர்கள், மூதாதையர்கள் இறந்தபின்னும் வழிகாட்டும் தெய்வங்களாக இருக்கிறார்கள் என எண்ணுகிறோமோ அதைப் போலவே இவர்களும் தெய்வங்களாகப் போற்றப்படுகின்றனர்.

இதனால் தான் வையத்துள் வாழ்வாங்கு வாழ்வானை எனச் சொல்லி வானுறையில் தெய்வத்துள் வைக்கப்படும் என்கிறார் வள்ளுவர். ஆக, வையத்துள் இறைவன் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் என்பது இல்லை என்பதாலேயே மனிதர்கள் மற்றும் விலங்குகள், தாவரங்கள் உருவாகின. இதில் மனிதனின் சிந்தனை அதிகமாகி இறைவனுக்கு ஒருத் தோற்றம் கற்பிக்க வேண்டியதன் அவசியம் ஏற்பட்டது. அதன் விளைவாக வாழ்வாங்கு வாழ்ந்தாரை வையத்துள்ளே தெய்வமாகப் போற்றினர். அதன்படி சிவன், முருகன், கிருஷ்ணர் இஷ்ட தெய்வங்கள், குல தெய்வங்கள், ஊர் தேவதைகள் என எல்லாரும் அடங்குவர்.

இதில் ஹரியும் சிவனும் ஒன்று எனச் சொல்வாரும் உளர். ஆனால் இருவரும் வெவ்வேறு. எப்பொழுது ஒன்று தன்னை தனியாகக் காட்டிக்கொள்கிறதோ அப்பொழுது அது அதன் தனித்தன்மையைக் காட்ட வேண்டும்.

மேடு, பள்ளங்கள், உயர்வு, தாழ்வு உள்ள பூமி ஒரு குறிப்பிட்ட தொலைவு மேல் சென்று பார்த்தால் எல்லாம் சமமாகத்தான் தெரியும், ஆனால் சமமில்லை என்பதை உற்று நோக்கினால்தான் புரியும். அதிகமாக உற்று நோக்கினால் அதிலும் வித்தியாசம் இருக்காது. இதை உணர்த்தவே ஹரியும் சிவனும் ஒன்று எனக் கொண்டார்கள். இப்படி தோன்றாமலே இருக்கும் இறைவனுக்குத் தோற்றம் கொடுத்து அதிலும் இறைத்தூதர்கள் என பறைசாற்றிக்கொண்டு வாழ்ந்த மனிதர்கள் தங்களை சாதாரண மனிதர்கள் எனச் சொல்லாமல் சென்றது பெரும் குழப்பத்தை விளைவிக்கக் காரணம் ஆனது.

குழப்பமில்லாமல் இருக்க, எது குழப்பம் தருகிறதோ அதைப் பற்றிப் பேசாமல் இருப்பதுதான் முறை. ஆனால் தெளிவு கிடைக்கும் என்கிற எண்ணத்தில் தெளிவான ஒன்றை குழப்பிக் கொண்டிருப்பதில் நாம் மிகவும் முன்னேறிவிட்டோம். அதன்காரணமாகவே தோன்றாப் பெருமையனின் பெருமைகளை திருவிளையாடல்களாகச் சொல்லிக் கொண்டிருக்கிறோம். அழிவில்லாதவனை அழிந்து பின் வருவதாகவும் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

இந்த தோன்றாப் பெருமையனே என எழுதிய மாணிக்கவாசகரிடம் இதுபற்றிக் கேட்டால் அதற்கு வேறு விளக்கமும் கிடைக்கும், ஏனெனில் அவரே சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்து அருள்வது நீயே என்கிறார். இப்படி இறைவனின் மேல் கொண்டுள்ள பற்றால் எழுதப்பட்ட பல விசயங்கள் இறைவனை கேலிக்குரியப் பொருளாய் பார்க்கும்படி செய்தது எவரின் தவறு எனத் தெரியவில்லை.

இறைவன் தோற்றமில்லாதவன், பிறப்பில்லாதவன், தொடக்கமில்லாதவன், முடிவில்லாதவன், எனச் சொல்லி இன்னபிற கதைகள் சொல்லும்போது தெளிவு பிறப்பதில்லை மாறாக எதுதான் இறைவன் என்கிற கேள்வி எழுந்து விடுவதைத் தவிர்க்க முடியாது.

எனவே இனிவரும் சந்ததிகளுக்காவது எவரேனும் ஒருவர் தான் நினைத்ததை, எண்ணியதைச் சொல்லாமல் உண்மையை உரைப்பாரேயானால் இந்த உலகத்துக்கு ஒரு விடை சொல்ல முடியாத கேள்விக்குப் பதில் கிடைக்கும்.

'கண்டவர் விண்டில்லை; விண்டவர் கண்டில்லை' எனச் சொல்லும் நிலை ஏற்படாது. இப்படி இதைச் சொன்னவருக்கு எப்படி இந்த ரகசியம் தெரிந்தது என்பது ஆச்சரியம் தான்.

உருவமில்லா இறைவன்!

இறைவனுக்கு ஆதியும் இல்லை அந்தமும் இல்லை, அதாவது தொடக்கமும் இல்லை, முடிவும் இல்லை. உருவமற்றவன் எனவும் இறைவனைச் சொல்வார்கள். ஆனால் சொல்ல வந்ததை எல்லாரும் ஏற்கும் வண்ணம் எவராலும் சொல்ல இயலுவதில்லை என்பதைவிட என்னால் சொல்ல இயலுவதில்லை. பிறர் சொல்ல வருவதென்ன என என்னாலும் புரிந்து கொள்ள இயலுவதில்லை. இறைவனுக்கு உருவம் உண்டா? இல்லையா? உருவம் இருந்தால் என்ன, இல்லாது போனால் என்ன என பேசாமல் இருந்து விடலாம். இதைத் தெரிந்து கொள்வதால் எவர்க்கு லாபம் என நினைத்தால் இருக்கவே இருக்கிறது உருவ வழிபாடுகள். உருவ வழிபாடு இல்லையெனில் கோவில்கள் அவசியமற்றுப் போய்விடும். பின்னர் பக்தர்கள் தேவை பூர்த்தியடையாது. ஆக உருவம் ஒரு பெரிய விசயம் தான்.

கோவில்கள் தேவையில்லை என்பதை உணர்த்தும் வண்ணம் பூசலை நாயினார் கதையும் உண்டு. என்னவொரு பிரச்சினை, எல்லாரும் பூசலை நாயினார் ஆகிவிட முடியுமா?! சரி, உருவம் இருக்கா? இல்லையா? உருவம் இல்லை என்றே சொல்வேன் நான். ஏனெனில் எனக்குத் தெரிந்தது அவ்வளவுதான். ஆனால் உருவம் இருப்பதாகத்தான் பலரும் சொல்கிறார்கள், பின்பற்றி வருகிறார்கள். இதில் இறைவனே இல்லை எனச் சொல்பவர்களுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்?. எதுவும் இல்லை என்பதற்கும், உண்டு ஆனால் இல்லை என்பதில் இருக்கும் வித்தியாசம் போலத்தான்.

சரி, விசயத்துக்கு வருவோம்,

இறைவனை சோதி வடிவானவன் என சொல்லும்போதே உருவம் வந்து விடுகிறது!

அலகில் சோதியன் எனச் சொன்னாலும் உருவம் இருக்கிறது ஆனால் அளக்கமுடியாது எனும்போது உருவம் தலைதூக்குகிறது.

தீ க்கு உருவம் இல்லை, ஒளிக்கு உருவம் இல்லை என கொள்வது தகுமா? இதுதான் இன்னதுதான் உருவம் என வகுத்தது நாம். கண்ணுக்குத் தெரியாத காற்றுக்கும் உருவம் உண்டு. அதனால் தான் உருவமுமாய் அருவமுமாய். சாதாரண கண்களுக்குத் தெரியாத உருவத்தையே அருவம் என கொள்ளலாமே தவிர மொத்தமாகவே உருவமற்றது என கொள்ள இயலாது.

அறிவியல் விளக்கப்படி சடப்பொருளுக்கு உருவம் உண்டு. தண்ணீருக்கு தான் கொள்ளும் பாத்திரத்தின்,இடத்தின், உருவம் உண்டு ஆனால் வாயுவுக்கு உருவம் இல்லை. வாயுவுக்கு உருவம் இல்லை என சொன்னதன் காரணம் ஒரு சின்ன விசயத்தை ஒப்புமைப்படுத்திச் சொல்லமுடியாததே. அதே வாயுவை ஒரு குடுவையில் அடக்கி வைத்தால் அதன் உருவம் வராதா? வராது என்று சொல்கிறதா அறிவியல்?

மனிதன் என்றால் இப்படிப்பட்ட உருவம் என இருப்பதைப் போன்றே ஒவ்வொன்றுக்கும் ஒரு உருவம் உண்டு. வெறுமைக்கும் உருவம் உண்டு.

விளக்குதலும் விளங்குதலும் காலம் காலமாகவே பிரச்சினையாக உள்ளது. நான் விளங்கிக்கொண்ட முறை சரியென நான் சொன்னால் உலகம் மெத்த சரி என சொல்லிவிடுமா? ஒவ்வொருடைய விளக்கமும், விளங்கிக்கொள்தலும் அதனதன் உண்மை நிலையை ஒளித்து வைத்துவிடுவது மறுக்க இயலாத விசயம்.

சில கருத்துகள் ஏற்புடையவனாகவும், ஏற்புடையதற்றதாகவும் இருப்பது உலக இயல்பு. ஒன்றைப் பற்றி அறிந்து கொள்ள முயலும்போது இதுபோன்று நிகழ்ந்துவிடுகின்றன. என்னைப் பொருத்தவரை ஒருவரின் பார்வையில் ஒரு விசயம் எப்படி அறியப்படுகிறது என்பதை உற்று நோக்குவதுதான் எனக்குப் பிடித்திருக்கிறது. என்னைப் பொருத்தவரை இறைவன் உருவமில்லாமல் தான் இருக்கிறான். இருப்பினும் உருவமில்லா இறைவனுக்கு உருவம் தந்த பெருமை நம்மைத்தான் சேரும்.

அடுத்து 'தோன்றாப் பெருமையனே' எனும் பெருமை கொண்ட இறைவனுக்குத் தோற்றம் தந்தது எங்ஙனம் என்பதைப் பார்ப்போம்.

Sunday 16 August 2009

ஆற்றாமை - அருகில் செல்லும் புதுரக வாகனங்கள்

முன்னுரை:

பொட்டுக்கடலை வாங்கி நடந்து சென்ற காலம் எல்லாம் தாண்டி இப்பொழுது வாகன வசதிகள் வந்ததைப் பார்த்து நடந்து செல்ல மனமின்றி, வாகனமும் வாங்க வழியின்றி தவிக்கும் மனித வர்க்கம் வருத்தம் அடையச் செய்கிறது. இவர்களின் நிலைக்கு என்னதான் விடிவு எனில் இவர்களும் உழைத்து முன்னேறி வாகனம் வாங்குவதுதான்.

செங்கல் பேருந்து, வரப்பு வாகனம்:

வயதான பலர் தங்கள் வாழ்க்கையில் சிறுவயதில் மணலில் செங்கல் வைத்து பேருந்து ஓட்டி விளையாடிய கதையும், வரப்புகளில் வாகனம் ஓட்டுவது போல் ஓட்டி மகிழ்ந்திருந்த காலத்தையும் சொல்வார்கள். இன்றைய சூழலில் சாலையில் ஊர்ந்து செல்லத் தெரியாமல் பறந்து செல்லும் வாகனங்கள் ஆக்கிரமித்துக் கொள்ளத் தொடங்கிவிட்டன.

கிராமத்து மனிதர்களின் செங்கல் பேருந்து கனவு எல்லாம் கலைந்து போய்விட்டது. வீட்டிற்கு ஒரு வாகனம் இருக்க வேண்டும் எனும் நினைவு வந்து சேர்ந்துவிட்டது. இதன் காரணமாக வீணான மன உளைச்சலுக்கு இவர்கள் ஆட்படுகிறார்கள்.

உலக சந்தை:

பொருளாதார தாராளமயமாக்குதல் கொள்கையால் இன்று உலகப் பொருளாதாரம் நமது வீட்டின் வாசலில் வந்து நின்று வேடிக்கைப் பார்க்கிறது, வேதனை தருவதாய் இருக்கிறது. உலக நாடுகளில் மட்டும் உற்பத்தியாகிக் கொண்டு இருந்த வாகனங்கள் இன்று நமது உள்ளூரிலேயே உற்பத்தி பண்ணக்கூடிய வாய்ப்பை பெற்றும் அதை வாங்கக்கூடிய மனிதர்கள் எண்ணிக்கையும் வியப்பைத் தருகிறது. எனினும் சாதாரண மனிதர்கள் இந்த வாகனத்தைப் பார்த்து கை அசைத்து செல்லும் மகிழ்ச்சியை மட்டுமே அடைகிறார்கள் என்பது மிகவும் வருத்தம் தரக்கூடியது. நமது பொருளாதாரத்திற்கு ஏற்ப நமது வாழ்க்கைத் தரம் அமைந்து விட்டால் அது சிறப்பாக இருக்கும், இல்லையெனில் வாழ்க்கை மிகவும் கேள்விக்குறியாக மாறிவிடும். இன்றைய வாகனங்கள் அத்தகைய சூழலைத்தான் இன்று உருவாக்கி வருகிறது.

மிதிவண்டி, மாட்டுவண்டி எல்லாம் மறந்து போய்விட்டது. இன்றைய தேதியில் டாடாவினால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் புதிய வாகனம் அனைவரது பார்வையையும் வெகுவாக கவர்ந்து இழுத்து இருக்கிறது, கவலையையும் அதிகரித்து இருக்கிறது.

தொழில்நுட்பம்:

வெளிநாட்டு வாகனங்களில் இருக்கும் தொழில்நுட்பங்கள் நமது நாட்டு வாகனங்களில் இல்லாது இருப்பது, வாகனம் வைத்து இருப்பவரையும் யோசிக்க வைக்கிறது. அதே வேளையில் அத்தகைய வாகனங்கள் அதிக மதிப்புள்ளதாக இருப்பதால் வாங்குவது எளிதாக இல்லை. இதனை போக்க அதிக தொழில்நுட்பம் உள்ள வாகனங்களை நாம் குறைந்த விலைக்கு உருவாக்குவதுதான் வழி.

முடிவுரை:

'மனமிருந்தால் மார்க்கமுண்டு' 'போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து' என இருப்பதை வைத்து நிம்மதியாக வாழ்வதோடு மட்டுமின்றி மேலும் பல முன்னேற்றத்தை அடைய முயற்சி செய்தால் இன்று இருக்கும் ஆற்றாமை ஓடிவிடும், அருகில் செல்லும் புது ரக வாகனங்களில் அமர்ந்து செல்லலாம்.

Saturday 15 August 2009

அறிவாளி

உயிர் எனச் சொன்னதும்
உடல் எல்லாம் கூறு போட்டு
எங்கன இருக்கு உயிர் என
ஏளனமாய் கேட்ட அவனிடம்
கொன்னு போட்ட பின்னே
கண்ணு காணுமோ உயிர்
எனச் சொன்ன என்னை
அறிவாளி என அவர் புகழ்ந்ததை
எப்படி ஏற்றுக் கொள்வது.

Friday 14 August 2009

கடவுள் எழுதிய கவிதை.

எனக்கென்று எதுவுமில்லை என்னையன்றி எதுவுமில்லை
தனக்கென்று என்னை வைத்துக் கொண்டு
பிரித்து வைத்த கொடுமை கண்டு
சிரித்து வைக்கிற வழிதான் எனக்கு!

கண்டதில்லை என்னை ஒருவரும் பொதுமறை
உணர்ந்ததுமில்லை என்னை ஒருவரும் இதுவரை
உள்ளத்து உணர்ச்சியில் உண்மை தொலைத்தவருக்கு
பிள்ளை நோக்கும் தாயாய் நானே!

வட்டம் போட்டு வைத்த பின்னர்
தொட்டு தொடங்கிய இடம் தெரியாது
தெரியாத விசயங்களுக்கு தெரிந்ததை போல்
அறியாத என்னை வைத்தனர் அன்னையாய்!

எல்லையில்லாமல் பரந்து கிடக்கும் வெளியில்
தொல்லையின்றி இருந்த என்னை எடுத்து
காற்றில் நெருப்பில் நீரில் நிலத்தில்
போற்றி ஓரிடம் தந்தனர் ஆகாயத்தில்!

உயிரற்ற பொருளில் உயிராய் இருப்பவன்
உயிருள்ள பொருளில் உணர்வாய் தகிப்பவன்
ஒப்புமைக்கு உட்படாது தனக்கே நிகரானவன்
செப்புமொழியில் வைத்தே சிறப்பித்தனர் என்னை!

பற்றற்றவன் என என்னை சொல்லியே
குற்றமானவனாய் தூதர்கள் அவதாரங்கள் அனுப்பியதாய்
கதைகள் பேசிடும் காவியங்கள் அனைத்திலும்
விதைபோல் இருப்பவனாய் விதைத்தனர் என்னை!

ஓங்கி வளர்ந்துவிட்டேன் ஒன்றுக்கும் உதவாமல்
தாங்கி நிற்கும் தவழும் கைகளாய்
பார்த்து பரவசமாகும் நம்பிக்கை கொண்டோரிடம்
தீர்ந்து போகும் நிலையில்லை எனக்கு!

என்னை வந்தடைய வழிதேடும் பலருக்கு
இன்ன வழியென்று வகுத்து வைத்தே
உள்ளுக்குள் ஒளிந்திருப்பதாய் என்னை கண்டிட
பள்ளிக்கும் செல்லாமல் பாடம் கற்பிப்பர்!

ஞானமற்ற என்னை ஞானிகள் கண்டதாய்
தானமற்ற நெஞ்சம் புண்ணியம் கொண்டதாய்
எல்லாம் கடந்து உள்ளிருப்பதாய் நானிங்கு
சொல்லியதாய் எழுதியது நானல்ல ரெங்கனே!

சொல் எனும் சொல் கவிதையும், இறைவன் பற்றிய எண்ணமும்

இந்து சாமிகளில் யார் பெரியவர் எனும் கேள்விக்கணையை சுந்தர் அவர்கள் தொடுத்திருக்க, அவருக்கு எனது கவிதையான சொல் எனும் சொல் கவிதையைத் தந்து இறைவனிடம் சென்று அவரை இந்த கவிதை குறித்து என்ன சொல்கிறார் எனக் கேட்டு வரச் சொன்னேன். அவரும் இறைவனிடம் கேட்டு வந்ததாகவும் "ரகசியம் என்று ஒன்று இருக்கிறது என்று தீராத வாஞ்சையுடன் நீங்கள் தேடுகிறீர்கள் அறியாத ஒன்றை அறிந்ததாக நினைத்துகோள்கிறீர்கள்" அவ்வளவுதான் பதில் எனச் சொல்லி இருந்தார். ஆனால் எனக்கோ அந்தப் பதிலை பார்த்ததும் இப்படி ஒரு பதில் எல்லாம் தருவார் இறைவன் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதற்கு நான் எனது பதிலைத் தெரிவித்தேன். ''கவிதையை வாசித்து என்ன சொல்கிறார் என்று தானே கேட்டேன், நான் என்ன நினைக்கிறேன் என அவரை சொல்லச் சொன்னேனா ஐயா? இதிலிருந்து என்ன தெரிகிறது? இந்த மனுசர்கள் மிகவும் கெட்டிக்காரர்கள். இதிலிருந்து தெரிகிறதா ஐயா நீங்கள் கேட்ட கேள்விக்கான யார் பெரியவர் எனும் கேள்விக்கான பதில்.''

பின்னர் அவர் என்னிடம் கேட்ட சில விசயங்களுக்கு கீழ்கண்டவாறு பதில் அளித்து இருந்தேன். நீங்களும் தெரிந்தால் சொல்லுங்கள்.

சுந்தர்: உங்கள் கவிதையை பற்றி மட்டும் பேசுவோம்,
முதலில் அந்த கவிதை நீங்கள் எழுதியதா அல்லது இறைவனிடம் இருந்து பெற்றதா?
உங்களுக்கு அதன் அர்த்தம் தெரியுமா? தெரியாதா?
இரகசியத்தை நீங்கள் அறிந்து கொண்டீர்களா அல்லது இன்னும் அறியவில்லையா?

நான்: உண்மையைச் சொல்லப் போனால் எழுதியது நானேதான், ஆனால் ''எழுதியது நானே'' என சொல்லும்போது ஆணவம் மட்டுமே மிஞ்சுகிறது, எனது நினைவுக்குத் தெரிந்தவரை இறைவனிடம் இருந்து பெறவில்லை ஐயா. இப்படித்தான் இறைவன் சொல்வதாய் ஒரு கவிதை எழுதிவிட்டு இதை எழுதியது நான் அல்ல, ரங்கனே என குறிப்பிட்டு இருக்கிறேன், அந்த கவிதையும் விரைவில் தங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

அர்த்தமில்லாத, அர்த்தம் கொடுக்காத கவிதைகளை ஒருபோதும் எழுதிடத் துணிவதில்லை, ஒரு வார்த்தையாவது முழு கவிதைக்கு அர்த்தம் கொடுத்துவிடும், அவை வெறும் வார்த்தைகளாக இருந்தாலும். ஆம் ஐயா அர்த்தம் தெரியும்.

இரகசியம் அறிந்து கொண்டேன். இதைச் சொல்லும்போதே இரகசியம் காப்பாற்றப்படுவது முடியாததாகிறது. எனவே இரகசியம் அறியாததுபோலவே இருக்கின்றேன். அறிந்ததை பிறருக்கு அறியச் செய்த இராமானுஜர் எங்கே, அறிந்தும் அறியாத அஞ்ஞானம் உடையவனாய் இருக்கும் நான் எங்கே!

இறைவன் தங்களை என்னிடம் கேள்வி கேட்க வைத்து அவர் சொன்ன பதில் சரிதான் என நிரூபிக்கப் பார்க்கிறார் போலும்.


சுந்தர்: சிலரை போல் அல்லமால் உங்களுக்கு உலகத்துக்கு அப்பாற்பட்ட சிந்தனைகள் இருக்கிறது என்பது எனக்கு தெரிகிறது அது நல்லதுதான் ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் எந்த ஆராச்சியினாலும், அறிவினாலும் இறைவனை மட்டும் அறிந்துவிட முடியாது.

நான்: உலகத்திற்கு அப்பாற்பட்ட சிந்தனைகள் எதுவும் இல்லை, ஆனால் உலகத்திற்கு உட்பட்ட சிந்தனை இருக்கிறது, அது மட்டுமே இருக்க முடியும், அதுதானே எனக்குத் தெரிந்த ஒன்று. பிறரது சிந்தனைகள் எனது சிந்தனையைவிட வலிமையானவை என்றே அறிந்திருக்கிறேன்.

அனைத்திற்கும் அப்பாற்பட்டு இருப்பவனும், அனைத்திலும் கட்டுப்பட்டு உள்ளே இருப்பவனும் இறைவன் என்பதை தாங்கள் மறுக்கமாட்டீர்கள் என்றே நினைக்கின்றேன்.


சுந்தர்: நான் விடாபிடியாக எதையும் தேடுபவன்தான். ஆனால் தேடுதலில் பயன் இருக்க வேண்டும். இறைவன் என்று ஒருவர் இருக்கிறான் என்பதை கண்டுகொண்டேன் எனவே விடாப்பிடியாக அவரை தேடுகிறேன்.

நான்: ஐயா, தேடிக்கண்டெடுக்கும் பொருள் அல்ல இறைவன் என்பதை நீங்கள் அறிவீரோ? கண்டுகொண்ட ஒன்றை தொலைத்தால்தானே தேட வேண்டும், காணாத ஒன்று இருப்பதாய் அறிந்ததால் அதைத் தேடுகிறீர்களா? தேடலுக்கெல்லாம் உட்படாதவன் இறைவன், தேடுங்கள் எனச் சொன்னதெல்லாம் உங்களை நீங்களே உணரத் தேடச்சொன்னது, இறைவனை அல்ல!

சுந்தர்: உங்கள் கவிதைக்கான பதிலை கண்டுபிடிக்க நான் விடப்பிடியாய தேட வேண்டும் என்றால் எனது மேற்கண்ட கேள்விக்கு பதில் தரவும்.

நான்: பதில் அளித்துவிட்டேன் ஐயா, தேடலைத் தொலைத்துவிடாதீர்கள்

சுந்தர்: நான் எழுதுவது பலருக்கு ஜோக்காக தெரிந்தாலும் சிலர் பற்பல இடங்களில் இருந்து என்னை தொடர்புகொண்டு உண்மை பற்றி விசாரித்து அறிகின்றனர், அவர்கள் இருதயத்தை இறைவன் திறந்துள்ளார். அது தான் நான் எதிர்பார்ப்பது.

இறைவனைப் பற்றி அறிந்த ஒருவர் அமைதியாக இருப்பாரேயன்றி இறைவனைப் பற்றி பிரசங்கம் செய்து கொண்டிருக்கமாட்டார். வாழ்வியல் நெறிமுறைகள் பற்றி பேசிய, வாழ்ந்த மாபெரும் மனிதர்கள் இருந்த பூமிதானே இதுவன்றி இறைவனை பற்றி பிரசங்கம் செய்த பூமி அல்ல இது. அது அவசியமில்லாதது, ஆனால் அதுபோன்ற ஒரு பிரமையை ஏற்படுத்தியது நமது தவறே. பிரபஞ்சம் படைத்தவனை பற்றி யார் யாருக்குச் சொல்லித் தரவேண்டும்? இது அறிவியல் இல்லை ஐயா, சூரியன் மையமாகவும், கோள்கள் சுற்றிவருவதாகவும் சொல்லித்தருவதற்கு. ஒவ்வொருவரும் அறிந்த ஒன்றை அவர் அறியவில்லை என நாம் நினைத்துச் சொல்லித்தர முனைகின்றோம், ஆனால் அறிவிற்கு அப்பாற்பட்டவன் அல்லவா அவன். இதயம் எங்குமே திறந்துதான் இருக்கிறது, அனைவரும் அறிவார்கள், நல்லது ஐயா. ஆனால் உங்கள் எதிர்பார்ப்புகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு இருப்பவன் அவன்.

கேலிக்குரிய விசயங்கள் என ஒன்றை நாம் ஏன் ஏற்படுத்தித்தர வேண்டும்? உலக மக்கள் அனைவரும் அனைத்தையும் ஏற்றுக்கொள்வதில்லை என்பதிலிருந்தே நாம் சொல்லும் விசயங்களை பற்றித்தானே நமக்கு அக்கறை இருக்கவேண்டுமேயன்றி அனைவரும் ஏற்க வேண்டும் எனும் நோக்கம் இருக்கக் கூடாது, அதனால் மனம் சலிப்பு அடையவும் கூடாது.


சுந்தர்: பள்ளியில் வாத்தியார் எல்லோருக்கும் ஒன்றுபோல்தான் பாடம் சொல்லி தருகிறார் ஆனால் எல்லோருமா புரிந்துகொள்கின்றனர்? இல்லையே! அதுபோல் புரிபவர்களுக்கு புரியட்டும் புரியாதவர் சிரித்துவிட்டு போகட்டும்

அனைவருக்கும் புரியும்படிச் சொல்லித்தருபவரே சிறந்த ஆசிரியர், புரிந்துகொள்ளும்படி நடப்பவரே சிறந்த மாணாக்கன். புரிதல் இருந்தும் சிரிப்பவர்கள் இருக்கலாம் அல்லவா! அந்த உணர்தல் நமக்கு இருந்தால் போதும், பிறரை நாம் எப்பொழுதும் மாபெரும் மனிதர்களாகவே மதித்து நடத்துவோம்

சுந்தர்: படிக்கும் நேரத்தில் வேறு விஷயத்தில் நேரத்தை செலவழிக்கும் பலர் வாழ்வில் துன்பப்படும் போது அதை உணர்கின்றனர் அது போல் உணருகின்ற காலம் ஒன்று விரைவில் வரும் ! நாம் பிறருக்கு இறைவனை உணர்த்தவேண்டிய நமது கடமையை செய்வோம்!

நான்: உணர்வுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு இருப்பவனும் அவனே. உணர்வில்லாத நிலையில் கூட அவனை உணரலாம் ஐயா. மீண்டும் சொல்கிறேன் ஐயா, பிரபஞ்சம் படைத்தவனைப் பற்றி யார் யாருக்கு சொல்லித்தர வேண்டும்? இதுதான் தங்கள் கடமையாக கருதுவீர்களேயானல் செவ்வனே செய்யுங்கள், எதற்கும் மனம் தளராதீர்கள். நாம் அனைவரையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருந்தால் போதும், அவன் ஆனந்தப்பட்டுப் போவான்.

திரு. செந்தில்நாதன் - சில யோசனைகள்.

சிங்கையில் வாழும் நண்பர்கள் இதுகுறித்து நிச்சயம் கலந்தாலோசித்து இருப்பார்கள். இருப்பினும் சிங்கையில் வாழ்ந்த நண்பர் ஒருவரின் சில ஆலோசனைகளை இங்கே இணைக்கிறேன்.

-----------------------

நண்பர் செந்தில்நாதன் நிரந்தரவாசியா? அவர் நிரந்தரவாசியோ அல்லது சிறப்பு தகுதியில் அங்கு வேலை செய்தாலும் சரி பரவாயில்லை. அவர் எந்த இடத்தில் வசிக்கின்றார் என கேளுங்கள். அந்த தொகுதி எம்.பி யை சந்திக்க அவர் இருக்கும் இடத்திற்கு அருகில் இருக்கும் மக்களின் குறையை கேட்க, வாரத்திற்க்கு ஒரு நாள் ஒதுக்கப்படும். அன்று அவரை (அவரது துணைவியாராக இருந்தாலும் சரி) தகுந்த ஆதாரங்களுடன் போய் அந்த தொகுதி எம்.பி யை பார்க்க சொல்லுங்கள். நிச்சயம் அவர் உதவுவார். கவலை வேண்டாம் என சொல்லுங்கள். தயவு செய்து அந்த தொகுதி எம்.பி.யை போய் பார்க்க சொல்லுங்கள். நிரந்தரவாசி என்றால், நிச்சயம் அவருக்கு தனிச்சலுகை கிடைக்கும்.

சிண்டா என்ற ஒரு அமைப்பு, சிங்கை வாழ் தமிழ் மக்களின் நலனுக்காக செயல்படுகின்றது. அவர்களையும் தொடர்பு கொள்ள சொல்லுங்கள். அவர்களிடம் மிக குறைந்த அளவிலேயே ரெஸ்பான்ஸை எதிர்பார்க்க முடியும். இருந்தாலும், நமக்கு காரியம் ஆக வேண்டும். மனம் தளராது போராட வேண்டும். நண்பரின் துணவியாரிடம் இருக்கும் அனைத்து ஆதாரங்களை ஒரு நகல் எடுத்து ஒலி 96.8-க்கு (சிங்கையில் இருக்கும் தமிழ் வானொலி நிலையம்) நேயர் விருப்பத்தின் பொழுது பேச சொல்லுங்கள். மீனாட்சி சபாபதி, பாலா, பாமா ஆகியோர் இரவு நேரங்களில் ஒளிபரப்பு செய்வார்கள். அவர்களை தொடர்பு கொண்டு, அவர்களையும், நேயர்களையும் உதவ கேட்கலாம்.

--------------------------

சிங்கையில் தகவல் ஊடகத்தில் வேலை பார்க்கும் நண்பர் ஒருவரிடம் இதுகுறித்து விபரம் கேட்டு மின்னஞ்சல் அனுப்புகிறேன்.

மிக்க நன்றி.

அறுபதாம் கல்யாணம்

'அப்பா உங்களுக்கு அறுபதாம் கல்யாணம் செய்து பார்க்கனும்' ஆவலுடன் நம்பெருமாள் வந்து சொன்னான்.

அப்பா, பார்த்தசாரதி, அவனை மேலும் கீழும் ஏறிட்டுப் பார்த்தார். 'அதெல்லாம் ஒண்ணும் வேணாம்பா, எதுக்கு வீண் செலவு ஆர்ப்பாட்டம் எல்லாம்' என மனதில் வேறொன்றை நினைத்தவராய்
அதைச் சொல்லாமல் தன் மகனிடம் தனது விருப்பமின்மையைச் சொன்னார்.

நம்பெருமாள் அம்மாவிடம் சென்று 'அம்மா உங்களுக்கு அறுபதாம் கல்யாணம் செய்யலாம்னா அப்பா வேணாம்னு சொல்றாரும்மா, நீதான் சொல்லி சம்மதம் வாங்கித் தரனும்மா' என்றான்.

அம்மா 'அதெல்லாம் எங்களுக்கு வேணாம்பா' என மறுத்தார். நம்பெருமாள் தன் மனைவியிடம் சென்று விசயத்தைச் சொன்னான். 'என்னங்க பண்றது' எனப் புரியாமல் விழித்தாள்.

வீட்டுக்கு மூத்தவனான நம்பெருமாள் தனது இரண்டு சகோதரர்களிடமும், இரண்டு சகோதரிகளிடமும் சென்று தனது விருப்பத்தையும் தாய் தந்தையர் சம்மதம் தரவில்லையென்றும் கூறினான்.

ஒருவேளை பிரபுவுக்கு கல்யாணம் ஆகட்டும்னு நினனக்கிறாங்களோ என நம்பெருமாள் தமக்கை மீனாட்சிதான் சொன்னாள்.

கடைசிப்பையன் பிரவுக்கு மட்டும்தான் திருமணம் செய்ய வேண்டிய பாக்கி. அனைவர்களுக்கும் திருமணம் பண்ணியாகிவிட்டது.

வீட்டுக்கு மூத்தவன் நம்பெருமாள் பெற்றோர்களுடனே துணையாய் வாழ்ந்து வந்தான்.

'அப்படின்னா பிரபுவுக்கு கல்யாண ஏற்பாடெல்லாம் பண்ணலாம்' என பிரபு காதல் புரிந்து கொண்டு இருந்த பொண்ணையே சம்மதம் பேசி மூன்றே மாதத்தில் திருமண வைபவம் நடந்தேறியது.

இம்முறை அனைவரும் சென்று பெற்றோரிடம் கேட்டனர். முடியவே முடியாது என இப்போதும் மறுத்துவிட்டனர். நம்பெருமாளுக்கோ மனது மிகவும் சங்கடமாகிப் போனது. அறுபதாம் கல்யாணம் நடக்கவே இல்லை.

வருடங்கள் உருண்டோடின. பார்த்தசாரதி இயற்கை எய்திய தினத்தன்றே அவரது மனைவி பாரிஜாதமும் இயற்கை எய்தினார்.

புருசோத்தமன் நம்பெருமாளின் நண்பன். புருசோத்தமன் தனது 7 ஆண்டுகால திருமணத்தை கேள்விக்குறியாக்கும் வண்ணம் சிற்சில காரணங்களைக் காட்டி அவனது மனைவியிடம் விவாகரத்து வாங்கப் போவதாக நம்பெருமாளிடம் வந்து சொன்னான். நம்பெருமாள் புருசோத்தமனை தனது வீட்டிற்கு அழைத்து வந்தான்.

அறுபதாம் கல்யாணம் கூட ஒருவிதத்தில் இரண்டாவது கல்யாணம் என்று செய்ய மறுத்த தனது தந்தை பார்த்தசாரதியின் படத்தின் முன்னால் அவனை நிறுத்தி தனது தந்தையின் வாழ்க்கையைச் சொல்லி 'வாழ்க்கைன்னா என்னனு புரிஞ்சிக்கோ' என்றான். புருச இலட்சணம் உணர்ந்தவனாய் புருசோத்தமன் வணங்கி நின்றான்.

முற்றும்

Thursday 13 August 2009

அழுகிய இதயங்கள் - நகைக்கும் இதழ்கள்

முன்னுரை:-

'உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவோர் உறவு கலவாதிருத்தல் வேண்டும்'

நல்லதொரு சிந்தனையும் எண்ணமும் உடைய மனிதர்களே நமக்கு எந்த ஒரு தருணத்திலும் துணையாக இருப்பார்கள். எண்ணமும் செயலும் வெவ்வேறாக உடையவர்கள் நமக்கு பெரும் துன்பம் இழைப்பவர்கள் ஆவார்கள். அப்படிப்பட்ட மனிதர்களை அடையாளங்கண்டு வாழ்க்கையை செம்மையாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.

இதயமும் இதழும்:

இதயம் ஒன்று எண்ணித் துடிக்க
இதழ் ஒன்றை சொல்லி சிரிக்க
மனிதன் போடும் போர்வையில்
புனிதம் மூச்சிரைத்துப் போனது

என்பான் ஒரு கவிஞன். முதன்முதலில் கிரேக்க மேதை அரிஸ்டாட்டில் இதயம் தான் எல்லா விசயத்தையும் நடத்தி வைக்கிறது என சொன்னார். அதன் காரணமாகவே இதயம், மூளையை விட அதிக அந்தஸ்து பெறத் தொடங்கியது. காவியங்களும், காதல் வேள்விகளும் இதயத்தை அடிப்படையாக வைத்தே புனையப்பட்டன. இதயம் நமது உறுப்புகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

இதில் இதழ்கள் பெறும் பங்கு வகித்தன. இதழ்கள் புன்னகையை வெளிப்படுத்துவதுன் மூலம் தனக்கென ஒரு இடத்தை பெற்றுக்கொண்டன. இதன் மூலம் இதயத்தை உரசுவது போன்ற உணர்வு, காதலர்கள் தரும் இதழ்கள் பரிமாறிக் கொள்ளும் முத்தம் ஏற்படுத்தும் என அறியாமை உணர்வு ஏற்பட்டது.

கருணைக்கும் கொண்ட வெறுப்புக்கும் இதயம் பங்கெடுத்துக்கொண்டது. தான் துடித்துக் கொண்டிருப்பது போதாதென மனிதர்களின் சொல்லாட்சியால் இதயம் மேலும் துடித்து துவண்டது. இதழ்களோ வர்ணம் பூசிக்கொண்டன.

அக முக:

நட்பினை பற்றி குறிப்பிடும்போது முகம் மட்டும் சிரிக்கும் நட்பானது நட்பில்லை, நெஞ்சத்திலிருந்து சிரிப்பதுதான் நட்பு என திருவள்ளுவரின் திருக்குறளிலிருந்தும் நாம் இதயம் பற்றி அறியலாம். மேலும் இதயத்திலிருந்து சொல்கிறேன் என இதயத்தில் கை வைத்து பேசுவதும் வழக்கமாகிவிட்டது. அப்படிப்பட்ட இதயம் எப்படி இருக்க வேண்டும்? மிகவும் சுகாதாரமாக, சுறுசுறுப்பாக, உண்மையின் சொரூபமாக இருக்க வேண்டும். எப்பொழுது அப்படி இருக்கும்? அன்பே உருவாக இருந்தால் இதயம் அந்த நிலையில் இருக்கும்.

இன்றைய நிலை எப்படி இருக்கிறது? எப்பொழுது யாரை வீழ்த்தலாம் எனும் வியாபார நோக்கம். இந்த நிலையில் இதயமானது அழுத்தம் கொள்கிறது என்பதை அறிபவர்கள் குறைவு. அழுத்தம் கொண்டே இதயம் அழுகிப்போய் விடுகிறது. இவர்கள் இதயத்தில் எதிரிகளாக பாவித்துக்கொண்டவர்களை, இதழ்கள் மூலம் நண்பர்களாக காட்டிக்கொள்ள முயற்சிக்கின்றனர். ஆனால் பெரும்பாலான நல்ல இதயங்கள் இந்த இதழ்களை உண்மையென நம்பிவிடுவது காலத்தின் கொடுமையாகும். இந்த நல்ல இதயங்களின் செயல்பாடுகள் அழுகிப்போன இதயத்தை சீர்திருத்த முயற்சித்தாலும் முடிவதில்லை. மாறாக அந்த இதழ்களை நம்பி உறவு கொண்டது மூலம் இந்த நல்ல இதயங்கள் பாழ்பட்டு போகின்றன.

இதனை தடுப்பது எவ்வாறு? இப்படிப்பட்ட அழுகிய இதயங்களை உடையவர்களை இனம் கண்டு கொள்ள வேண்டும். பிறர் துன்பப்படும்போது இவர்களது செயல்பாடுகளை நாம் கவனித்தால் நாம் இவர்களை இனம் பிரித்துக் கொள்ள முடியும். ''சேரும் இடம் அறிந்து சேர்'' என்பதை நாம் அறிய வேண்டும்.

மகாபாரதமும் இராமாயணமும் சொல்ல வந்தது இந்த அழுகிய இதயங்களையும் நகைக்கும் இதழ்களையும் பற்றித்தான். அத்தனை பெரும் காவியம் சொல்லியும் நம்மிடத்தில் இன்னும் இதுபோன்ற மனநிலை உடையவர்கள் வாழ்வது நமக்கு பெரும் அவமானமாகும். அவர்களிடத்தில் சிக்கிக் கொள்ளாது நாம் அவர்களை திருத்த வழி செய்ய வேண்டும்.

முடிவுரை:

'இன்னா செய்தாரை ஒறுத்தல்' என்பதற்கேற்ப நாம் அனைவரையும் சமமாக பாவித்து தீங்கில் கிடந்து உழல்பவரை காப்பாற்றி இதயமும் இதழ்களும் நகைக்கச் செய்வது ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும். இதழ்கள் மட்டும் நகைக்கிறது என ஒதுக்கி விடுதல் சமுதாய சீரழிவினை கொண்டு வந்து சேர்க்கும் என்பதை நினைவில் கொள்ளல் வேண்டும்.

சிங்கைநாதன் அவர்களுக்கு முத்தமிழ்மன்றமும் உதவும்.

'Every Little Helps'

ஒரு பெரிய கடையின் விளம்பரம் இது. இதைப் பார்க்கும்போதெல்லாம் மனதில் ஒரு பெரிய தைரியம் வந்து சேரும். அது அவர்களின் வியாபார உக்தி என நினைத்துக் கொண்டாலும் நமது அன்புக்கும் இதைச் சேர்த்துக் கொள்ளலாம். சின்ன சின்ன உதவிகள், சின்ன சின்ன பாராட்டுகள் மனிதனை சந்தோசமாகவும், நலமுடன் இருக்கவும் வழிவகை செய்யும்.

மனிதநேயம் இறந்து போய்விட்டதாகவும், மானுடம் எந்த வழியில் செல்கிறது என வருத்தப்பட்டும் இருப்போர்களுக்கிடையில் எந்தவொரு பிரதிபலனும் எதிர்பார்க்காமல் சக மனிதன் துயரப்படுவதைக் கண்டு அவனுக்கு உதவிட துடிக்கும் உள்ளங்கள் உண்டு என்பதை பல பொழுதுகளில் பார்த்திருக்கிறேன்.

திரு.செந்தில்நாதன் அவர்கள் இதய நோயால் அவதியுறுவதைக் கண்டு அவருக்கு உதவிட இணைந்திருக்கும் நண்பர்கள் கண்டு பெருமிதம் கொள்கிறேன். திரு. கே.வி.ராஜா என்பவர் எழுதிய திரு.செந்தில்நாதன் பற்றிய பதிவினை

முத்தமிழ்மன்றத்தின் நிதியிலிருந்து உதவிடக் கேட்டு முத்தமிழ்மன்றத்தில் இணைத்தேன். நிச்சயம் முடிந்ததைச் செய்யலாம் என சொல்லி இருக்கிறார்கள். இதுபோல் நீங்கள் சார்ந்திருக்கும் வலைத்தளங்களிலும் நண்பர்களைக் கேளுங்கள். உதவி புரியும் நிலையிலிருப்பவர்கள் நிச்சயம் உதவுவார்கள் எனும் நம்பிக்கை நிறைய உண்டு.

திரு. செந்தில்நாதன் அவர்கள் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

ஆழ்வாரோடு நாயன்மார்கள்

துள்ளும் மில்லி விநாடியிலும்
மனம் ததும்பும் பொருள் கொண்டு

அருள்கொண்ட தூயவனை
அன்பால் சிந்தித்து அழகிய தமிழில்
போற்றி போற்றி பாடிய பாவினில்

பொல்லாத சிந்தனை நீங்கும்
கண்கள் அலையடித்து இதயம் செழிக்கும்

உன்னை நோக்கி நானும்
ஏங்கியே எழுதுகிறேன்

நானும் ஓர் நாள்
ஆழ்வார்களில் ஒருவனாய்
நாயன்மார்களில் ஒருவனாய்
மாறிட வேண்டி

மனமுருகி இருக்கையில்
மெல்லமாய் வந்து
சொல்லிச் செல்கிறது தும்பி

பலன்நோக்கி செய்யும் செயலதில்
இறைவனது சிந்தை நிற்பதில்லை

எழுதுவதால் மட்டும்
ஆழ்வார்கள் ஆவதில்லை
எழுதுவதை மட்டுமே
நாயன்மார்கள் செய்ததில்லை

நாணிக் கொள்கிறேன்
அவர்கள் போன்று
ஆகமுடியாது போவதற்கு!

Wednesday 12 August 2009

வைரஸ்

ஒடுக்கப்பட்ட உயிர்
அடக்கப்பட்ட உயிர்
தனித்து இருந்தால் மயான நிலை
ஒன்றினுள் நுழைந்தால் உயிர்த்த நிலை

மண் துகள்களுக்கு
விமோசனம் தந்து
உயிரற்ற பொருளுக்கும்
உயிர் கொண்ட பொருளுக்கும்
பாலமும் பகையுமாய்

ஒற்றை கயிறு ஆர் என் ஏ
கொண்டு
இரட்டை கயிறு டி என் ஏ
திரித்து
உலக உயிர்களின் வழியானாய்
உலக உயிர்களுக்கு வலியுமானாய்

உன்னில் தேடுகிறேன்
எனக்கான இறைவனை!