Monday 1 February 2010

வித்தியாசமான விடுமுறை பயணம் - 2009 (5)

பயணம் 5


எங்களுடன் நார்வே நாட்டினைச் சார்ந்த வயதான தம்பதியர்களும் இணைந்து கொண்டார்கள். துபாய் நகரைவிட்டு சவுதி அரேபியா வரை செல்லும் சாலையில் வாகனம் பயணித்தது. இருபுறங்களிலும் பாலைவனங்கள் தென்பட பாலைவன செடிகளும் ஆங்காங்கே தனித்து நின்று கொண்டிருந்தது. ஒரு மணி நேரத்திற்கும் மேலான பிராயணத்திற்குப் பின்னர் ஓரிடத்தில் வாகனத்தின் சக்கரங்களில் காற்றழுத்தம் குறைக்கப்பட்டது. 

பின்னர் மேடு பள்ளங்கள் நிறைந்த பாலைவனத்தில் வாகனம் பிரயாணிக்க 'சரிதான்' என நினைத்துக்கொண்டிருக்க திடீரென மேடான பகுதிக்குச் சென்று பின்னர் கீழிறங்குவதும், மேலேறுவதுமாய் வாகனத்தில் வித்தை காண்பிக்க உடல் குலுங்கியதோடு வயிறும் கலங்கியது. உற்சாகத்தில், பயத்தில் ஆ ஓ என வயதான தம்பதியர்கள் அலறிய சப்தத்தை அசைபடம் போட்டு பார்த்தபோது சிரிப்பை அடக்க முடியவில்லை. அவர்களை, கடவுளைப் பிரார்த்தனை செய்ய வைத்தது அந்த வாகன விளையாட்டு. நவீன் தன் பங்குக்கு வாந்தி வருவதாக இருமுறை கூறி வாகனம் நிறுத்தப்பட்டது. 

அந்த மணலில் இறங்கி நடந்து சுற்றிப் பார்த்திட மணலில் கோலம் இட வைக்கப்பட்ட புள்ளிகளாய் செடிகள். ஒட்டகங்கள் காட்சி கண்டோம். ஓட்டுநரிடம் தினமும் வருவீர்களா எனக் கேட்டபோது ஆம் என சொன்னவர், சில தினங்கள் மழை பெய்து இருந்ததால் நேற்றைய தினம் வாகனம் செலுத்த மிகவும் சிரமப்பட்டதாக வாகன ஓட்டி சொன்னார். மேலும் எங்கள் தொழில் இது என்பதால் சிரமம் இருப்பினும் செய்துதான் ஆகவேண்டும் என அவர் சொன்னபோது ஏதோ மனதில் இடைஞ்சல் செய்தது. இன்று அந்தப் பிரச்சினை இல்லை எனச் சிரித்துக் கொண்டார். 

பின்னர் சிறப்பு விருந்தினர்களாக ஓரிடம் சென்றோம். அது பாலைவனத்திலேயே அமைந்து இருந்தது. பலர் சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்தார்கள். அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது. உணவு மிகவும் சிறப்பாக இருந்தது. சைவம் அசைவம் என பிரித்து வைத்திருந்த விதமும், ஆண்கள், பெண்கள் என தனித்தனிப் பிரிவாக வைத்திருந்த விதமும் சிறப்பாகவே இருந்தது. பின்னர் நடன நிகழ்ச்சியை ஐம்பது வயதுமிக்க இளைஞியும், 25 வயது மிக்க இளைஞரும் ஆட அனைவரும் பார்வையாளர்களாக சென்று இருந்தோம் என்றால் தான் அது சரியாகும். நடனக் கலைஞர்களுடன் ஆர்வத்துடன் படம் எடுத்துக்கொண்டனர் பலர். சிலர் மேடையேறி ஆடவும் செய்தனர். 

இந்நிகழ்வுகளுக்கு முன்னர் ஒட்டக சவாரிதனை செய்ய விருப்பமில்லாமல் பாவமாக ஒட்டகத்தைக் கண்டுவிட்டு வந்தோம். சந்தோசமாக பலர் சவாரி செய்து மகிழ்ந்தார்கள். ஒட்டகமும் எங்கள் தொழில் இது என சொல்லி இருக்குமோ?! 

இரவு ஹோட்டல் வந்து சேர வழக்கம்போல பத்து மணி ஆகியிருந்தது. வழக்கம்போல வசந்தபவன். மறுநாள் காலையில் எழுந்து ஜுமிரா மால் சென்றோம். அது ஒரு தனி நகரமாக நிர்மாணிக்கப்பட்டதாக சொன்னார்கள். உள்ளே பல கலைபொருட்கள் வாங்கும்படியாய் இருந்தது. லதாவிடம் பேசினேன் அபுதாபிக்கு வர இயலாமல் இருப்பதாக. லதாவோ அவரது கணவர் நேற்று துபாய் வந்ததாகவும், தொடர்பு கொள்ள வசதியில்லாததால் அழைக்கமுடியவில்லை எனவும் கூறினார். பின்னர் தானே ஏர்போர்ட் வருவதாக சொல்ல நான் வேண்டாம் என அவரிடம் கேட்டுக்கொண்டேன். 

அங்கிருந்து நேராக மால் ஆஃப் எமிரேட்ஸ் சென்றோம். அங்கே பனிச்சறுக்கு விளையாடி மகிழ்ந்தோம். பின்னர் வைரமாளிகை சென்றோம். டிராகன் மால் சகோதரி சுந்தராவின் வீட்டில் அருகில் இருப்பதாக சொல்லி இருந்தார். அவரது வீட்டுக்குச் சென்று பின்னர் அங்கே செல்லலாம் என அவர் சொல்லி இருக்க எங்களுக்கோ பனிச்சறுக்கு விளையாட்டில் நேரம் ஆகி கொண்டிருக்க நேராக டிராகன் மால் சென்றோம். சீனா வசம் போல டிராகன் மால்!

அங்கிருந்து சகோதரியின் வீடு பக்கம் என நினைத்து டாக்ஸியில் செல்ல சகோதரியின் வீட்டினைக் கண்டுபிடிக்கமுடியாமல் திணறினோம். சகோதரி வழி சொல்லியும் டாக்ஸி டிரைவருக்குப் புரியவில்லை, எனக்கு பாதை கொஞ்சமும் தெரியவில்லை. கிருஷ்சிவா அவர்களை முன்னதாக அழைத்தேன், அவர் வேலைக்குக் கிளம்பிவிட்டார் என கூறினார். நல்லவேளை அவரைக் காத்திருக்க வைக்கவில்லை எனத் தோணியது. நேரத்தை, வீடு கண்டுபிடிக்கிறேன் என டாக்ஸி கொன்று கொண்டிருந்தது. ஆனால் ஆச்சரியம் இருபது நிமிடங்களில் எங்கள் ஹோட்டல் கொண்டு வந்து சேர்த்தார் அவர். வந்து கொண்டிருந்தபோதே புவனாவின் கணவர் எங்களுக்காகக் காத்திருப்பதாக புவனா தகவல் சொல்ல எனக்கோ 'அடடா' என ஆகிவிட்டது. 

பின்னர் புவனாவின் கணவரை ஹோட்டலில் சந்தித்துப் பேசினோம். மிகவும் நன்றாக பேசினார். பேருந்தில் தான் ஷார்ஜா செல்ல வேண்டும் எனவும் ஒரு மணி நேரம் மேல் ஆகும் என அறிந்தபோது வருத்தம் மேலிட்டாலும் அவரைப் பார்த்துப் பேசியதில் அளவில்லாத சந்தோசம் நிறைந்து இருந்தது. பின்னர் சகோதரி தனது குடும்பத்தோடு எங்களை வழியனுப்ப வந்திருந்தார். அன்று அவரின் அன்பால் 'சரவண பவன்' சென்று உணவருந்தினோம். அருமையான சொந்தங்களை எனக்கு அறிமுகப்படுத்திய துபாய் பயணம் ஒரு வித்தியாசமான பயணமாகவே இருந்தது. வியாபார நுணுக்கங்களைப் பற்றி அன்றும் பேசிக்கொண்டிருந்தோம், பல நல்ல விசயங்களை சகோதரியின் கணவர் சொல்லிக் கொடுத்தார். போராடி வாழ்வில் வெற்றி கண்டு கொண்டிருக்கும் ஒரு மாமனிதரையும் சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சி கொண்டேன். 

துபாயில் இன்னும் சிலநாட்கள் தங்கி இருக்கலாம் எனும் ஏக்கத்தை துபாய் நகரமும், அங்கே நான் கண்ட அன்பு உறவுகளும் மனதில் விதைத்ததை வாழ்வில் ஒரு பெரிய விசயமாகத்தான் கருதுகிறேன். என் மகன் என்னிடம் கேட்டது 'இங்கே யாரும் நம்மிடம் பணம் கேட்டு நிற்கவில்லையே, ஏன்?' எனக்கு மிகவும் யோசனையாகத்தான் இருந்தது. எல்லாரும் எல்லாம் பெற்றிருக்க ஏதேனும் வழியுண்டோ? ஆனால் வாகன ஓட்டி சொன்ன ஒரு விசயம் சற்று அதிர்ச்சியாகவும், வித்தியாசமாகவும் இருந்தது. 



''துபாயில் உழைக்கும் வர்க்கத்தினர்க்கு எந்த ஒரு மரியாதையும் இல்லை, உழைக்கும் வரை அவர்களது உழைப்பை உறிஞ்சிவிட்டு அவர்களை ஓட விரட்டிவிடும், எதையும் தந்து அழகுப் பார்க்காது. எப்பொழுது உழைக்கும் வர்க்கத்தினர்க்கு ஒரு நாடு மதிப்பைத் தரவில்லையோ அந்த நாடு ஒரு காலத்தில் தனது மொத்தச் செல்வத்தையும் இழந்து அனாதையாகிவிடும். அப்படித்தான் இப்போது 'அல்லா' இந்த துபாயினை தண்டித்துக் கொண்டிருக்கிறார், இனியாவது துபாய் திருந்தட்டும்'' என அந்த வாகன ஓட்டி சொன்னது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. எதற்கெடுத்தாலும் இறைவன் ஏன் பொறுப்பேற்க வேண்டும் என மனிதர்கள் நினைக்கிறார்கள்! 

''துபாயில் மட்டுமே சட்டத்தில் மற்ற அரபு எமிரேட்ஸ் நாடுகளைத் தவிர விதிவிலக்காக இருக்கிறது. மேற்கத்திய நாடுகளின் பழக்கவழக்கங்கள் இங்கே அனுமதிக்கப்படுகிறது. குடித்துக் கொண்டு ஒருவர் வாகனத்தை ஓட்டும்போது பிற உயிர்கள் பறிக்கப்படுகிறது என அறிந்தும் ஏன் ஒருவரை குடிக்க அனுமதிக்க வேண்டும், குடிப்பதைத் தடைசெய்து இருக்கும் மற்ற அரபு நாடுகள் போல இங்கும் தடை செய்ய வேண்டும்'' என சொன்ன வாகன ஓட்டி அடிக்கடி புகைபிடித்துக் கொண்டிருந்தது எனக்கு வித்தியாசமாகத் தெரிந்தது. எப்படி மனிதர்கள் மட்டும் தங்களது செயல்களை மிகவும் அருமையாக பிறருக்கு எதுவும் தெரியாதது போல நியாயப்படுத்திவிடுகிறார்கள்! 



இனி சென்னை! 

1 comment:

Radhakrishnan said...

:) மிக்க நன்றி புலவன் புலிகேசி.