Friday 23 December 2011

இங்கே குப்பைகளை கொட்டாதீர்கள்

மிகவும் அருமையான எழில் கொஞ்சும் அழகிய கிராமம் அது. பச்சை பசேலென எங்கு பார்த்தாலும் ஆகாயத்துடன் போட்டி போட்டு கொண்டு பூமி பசுமையாய் காட்சி அளித்து கொண்டிருந்தது. அழகிய சாலைகள் மிகவும் சீராக அமைக்கப்பட்டு இருந்தன. அந்த கிராமத்தில் வசிப்பவர்கள் எல்லாம் அவரவர் வீட்டினை சுத்தம் செய்வதோடு சாலைகளை சுத்தமாக வைத்து இருந்தார்கள். அந்த கிராமத்தில் எவரை கண்டாலும் அத்தனை சுத்தமாக இருந்தார்கள். மணலில் சோறு போட்டு சாப்பிடும் மாந்தர்கள் எல்லாம் அந்த கிராமத்துக்கு சென்றால் மிகவும் தைரியமாக தெருக்களில் சோறினை போட்டு சாப்பிடலாம், அத்தனை சுத்தமாக இருந்தது. அப்படிப்பட்ட கிராமத்தில் இருக்கும் வீடுகள் பல கண்டு கோவில் என கும்பிட்டுவிட்டு செல்லலாம்.

அந்த கிராமத்தில் திருஷ்டி பொட்டு வைப்பது போல ஒரு வீடு இருந்தது. அந்த வீட்டில் சுப்பிரமணியம் மட்டும் வசித்து வந்தார். அவருக்கு அறுபது வயதாகிவிட்டது. முப்பத்து ஆறு வருடங்களுக்கு முன்னாள் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அவருக்கு திருமணம் ஆகவில்லை, உடன் பிறந்தோர் என அனைவரும் வெவ்வேறு ஊர்களுக்கு சென்று வசித்தார்கள். பெற்றோர்கள் இருவரும் இப்போது உயிருடன் இல்லை. இந்த சுப்பிரமணியம் வீட்டினை பார்த்தால் மொத்த குப்பைகளின் கூடாரம் எனலாம். ஆனால் ஊராரின் கண்ணுக்கு குப்பைகள் என தெரிந்தவை எல்லாம் அவருக்கு மிகவும் அவசியமாகவே தென்பட்டது. இவரது அன்னை உயிரோடு இருந்தவரை இந்த வீடு ஆலயமாகவே தென்பட்டது. அன்னையின் மறைவிற்கு பின்னர் சுப்பிரமணியத்திடம் ஒருவித பழக்கம் தொற்றி கொண்டது. மனிதர்கள் பல்வேறு பழக்கங்களுக்கு அடிமையாகும் மனதை பெற்று இருக்கிறார்கள்.

இந்த பழக்கங்களுக்கு அடிமையாகும் மனிதர்கள் ஒரு நோயாளியாகவே கருதப்படுகிறார்கள். ஆனால் இவர்களுக்கு தாங்கள் ஒரு மன நோயாளி என்பதை உணரும் சக்தி எதுவும் இருப்பது இல்லை. இந்த அடிமை பழக்கவழக்கத்தால் தன்னிலை மறந்து கோபமும் வெறுப்பும் அதிகமாகி உலகமே தன்னை எதிர்ப்பது போன்ற உணர்வினை பெறுகிறார்கள். கதைக்குள் ஒரு கதை விடுகிறேன். ஒரு முறை துரியோதனர்களிடமும், பாண்டவர்களிடமும் உங்களு வீட்டுக்கு வருகிறோம், உங்கள் வீட்டினை நீங்கள் நிரப்பி வையுங்கள் என முனிவர் சொல்லி செல்கிறார். முனிவர் துரியோதனன் வீட்டிற்கு செல்கிறார். வீட்டின் கதவை திறக்க முடியாமல் வெளியில் நிறுத்தப்படுகிறார் முனிவர். என்ன என விசாரித்தபோது வீட்டினை வைக்கோலால் நிரப்பி விட்டேன் என துரியோதனன் சொல்லி பெருமைபட்டு கொள்கிறான். ஆனால் முனிவரோ என்ன மடத்தனம் என திட்டிவிட்டு போகிறார். அடுத்து பாண்டவர் வீட்டிற்கு செல்கிறார் முனிவர். அங்கே உள்ளே வரவழைத்து முனிவரை உபசரிக்கிறார்கள். உடன் துரியோதனனும் செல்கிறான். வீட்டில் அகர்பத்திகளை ஏற்றிவைத்து வீடெல்லாம் மணம் பரப்பி கொண்டிருந்தது. அந்த மணத்திலும், உபசரிப்பிலும் மனம் லயித்து பாண்டவர்களை வெகுவாக பாராட்டி செல்கிறார் முனிவர்.

இப்படி வைக்கோலால் எப்படி துரியோதனன் வீட்டினை ஒரே நாளில் நிரப்பினானோ அதைப் போல முப்பத்து ஆறு ஆண்டுகளாக குப்பைகளை சேகரிக்கும் ஒருவித மன நோயாளி தன்மையை இந்த சுப்பிரமணியம் பெற்றார். தான் வாங்கும் நாளிதழ்களை சேகரித்து வைப்பது, சின்ன சின்ன பொருட்களை எல்லாம் வீட்டிலேயே வைத்துவிடுவது போன்ற பழக்கம் ஆரம்பித்து அவரது வீட்டின் பின்புற தோட்டத்து இடத்தில் குப்பைகள் எல்லாம் சேர்த்து வைக்கத் தொடங்கினார். வீடு எல்லாம் கடந்த முப்பத்து ஆறு வருடத்தில் நாளிதழ்கள் என எல்லாம் நிரம்பி வாசற்படியையே அடைக்கும் அளவுக்கு வந்துவிட்டது. வாசற்படியில் ஊர்ந்து சென்றால் தான் உள்ளே செல்ல முடியும். உள்ளே சமையல் அறை, படுக்கை அறை என எல்லாம் நாளிதழ்கள் மேல் ஊர்ந்து சென்றால் மட்டுமே முடியும். படுக்கை அறையில் ஒரு தொலைக்காட்சி, சின்ன மேசை, ஒரு நாற்காலி மட்டுமே இருந்தது. அதில் தான் உறக்கம். தினமும் இரண்டு முட்டையும் ஒரு ரொட்டி மட்டுமே சாப்பாடு.

ஊரார்கள் சுப்பிரமணியம் மீது வழக்கு போட்டார்கள். ஆனால் வழக்கில் சுப்பிரமணியமே வெற்றி பெற்றார். எவர் என்ன சொன்னாலும் கேட்பதில்லை. இப்படியாக இருந்த சுப்பிரமணியத்திற்கு அவருக்கு குப்பைகளை சேகரிக்கும் நோய் இருக்கிறது என ஒரு மருத்துவர் உதவ வந்தார், அந்த உதவியை நிராகரித்தார் சுப்பிரமணியம், தனக்கு எதுவும் இல்லையென சாதித்தார். வீட்டில் இருக்கும் பொருட்களை எல்லாம் தூக்கி போட சம்மதிக்கவே இல்லை. கடந்த ஏழு வருடங்களாக குளிக்கவே இல்லை. ஆனால் மன நோய் தவிர்த்து வேறு எந்த நோயிற்கான அறிகுறியும் தென்படவில்லை.

இவரது வீட்டிற்குள் நுழையவே அதிகாரிகள் சிரமப்பட்டார்கள். அந்த ஊரில் இருந்தவர்கள் எல்லாம் இவர் வழக்கில் வெற்றி பெற்றதால் கோபமும் ஆத்திரமும் கொண்டார்கள். ஆனால் அந்த ஊர்ருக்கு புதிதாக குடிவந்த ஒருவர் இவரிடம் மெதுவாக பேச்சு கொடுத்து தோட்டத்து பக்கம் ஒரு அடைப்பை ஏற்படுத்தினால் குப்பைகள் வெளியில் இருப்பவருக்கு தெரியாது என சொல்லி ஒரு அடைப்பை ஏற்படுத்தினார். இவருடன் மெதுவாக தினமும் பேச்சு கொடுத்து தோட்டத்தில் இருந்த குப்பைகள் கொஞ்சம் அகற்றினார். எதற்குமே சம்மதிக்காத சுப்பிரமணியம் இந்த மனிதரின் பேச்சில் சற்று இறங்கி வந்தார். அதற்கடுத்து ஊரில் இருந்த ஒரு சிலர் குப்பைகளை அகற்ற வந்தார்கள். குப்பைகள் எல்லாம் ஒரு சில வாரங்களில் அகற்றப்பட்டது. தோட்டப்பகுதி சுத்தமானதை கண்டு மற்றவர்கள் சந்தோசபட்டார்கள், ஆனால் சுப்பிரமணியம் இரண்டுவித மன நிலையிலேயே இருந்தார்.

பின்னர் அவரது வீட்டில் இருக்கும் குப்பைகளை அகற்றும் பணி தொடங்கியது. தனது மனநிலையை முதலில் உணர்ந்து கண்ணீர் விட்டார் சுப்பிரமணியம். தான் ஒரு நோயாளி என்பதை அறிந்தாலும் தன்னிடம் மாற்றம் ஏற்பட சில காலங்கள் ஆகும் என்றார். தன்னால் உடனே இந்த குப்பைகள் சேகரிக்கும் பழக்கத்தை கைவிடமுடியாது என சொல்லிக்கொண்டார். ஆனால் முதல் முறையாக பல வருடங்கள் பின்னர் குளித்தார். அவரது மன அழுக்கு நீங்கியதை போல உடல் அழுக்கு நீங்கியது. உதவி செய்ய வந்த நபர் மூலம் வீட்டில் இருந்த குப்பைகளும் அகன்றது. ஊரில் இருந்தவர்கள் நாங்கள் எவ்வளவோ சொன்னோம், ஆனால் கேட்கவில்லை, சொல்லத்தான் செய்தோம், உதவி என கேட்டால்தான் உதவுவது என இருந்தோம் என சொன்னார்கள். ஆனால் நிலைமையை உணர்ந்த ஒருவர் செய்த உதவியின் மூலம் இன்று சுப்பிரமணியம் அனைவரிடம் நன்றாக பழகுகிறார், சகஜ நிலைக்கு திரும்பிவிட்டார் என பெருமைப்பட்டு கொண்டார்கள்.

சுப்பிரமணியம் இப்போதெல்லாம் குப்பைகளை சேகரிப்பது இல்லை. அவ்வப்போது சுத்தம் செய்துவிடுகிறார். இந்த சுப்பிரமணியம் போல இன்னும் எத்தனையோ விதவிதமான சுப்பிரமணியர்கள் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் திருந்த ஒரே ஒரு அன்பு உள்ளம் தேவை! அந்த அன்பு உள்ளத்தை எங்கே தேடுவது?!

3 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம் ...

Unknown said...

நல்லக் கதை...
சட்டம் நியாத்தை மட்டுமே கூறும்...
அன்பு தான் எது தர்மம் என்பதைக் கூறும்...
அன்பு ஆண்டவனிடமே கொண்டு செல்லுமாம்..

அருமையான கருப்பொருள் இடையே
மகாபாரதக் கதையும் சேர்த்து.....
நல்லப் பதிவு பகிர்விற்கு நன்றிகள் நண்பரே!

Radhakrishnan said...

நன்றி நண்பரே.

நன்றி தமிழ் விரும்பி ஐயா.