Saturday 10 December 2011

மனைவியின் மயோர்கா - 4

பாதை மிகவும் மோசம் என சொன்னாலும் பளிங்கு போல சாலை பளபளப்பாகத்தான் இருந்தது. ஆனால் சாலையின் இருபுறங்களிலும் எவ்வித பாதுகாப்பு இன்றி இருந்தது. அதன் காரணமாகவே அதை மோசமான சாலை என சொல்லி வைத்திருக்கிறார்கள் போலும் என நினைத்து கொண்டேன்.

மலைகளின் மீதான பயணம் வெகு சிறப்பாக இருந்தது. இயற்கை காட்சிகள் அதி அற்புதமாக இருந்தன. எல்லாம் கடந்து ஓரிடம் சென்றால் அங்கு கடற்கரை ஒன்று இருந்தது. அந்த கடற்கரையில் உற்சாகமாக மக்கள் நீந்தி கொண்டிருந்தார்கள். சிறிது நேரம் அங்கே இருந்துவிட்டு மீண்டும் பயணம் தொடங்கினோம்.

முதன் முதலில் பார்த்த ஹோட்டல் பக்கம் செல்லலாம் என அந்த பாதை சென்றோம். சாலைகளில் பயணித்து கொண்டே பல இடங்களை பார்த்தாகிவிட்டது. ஒரு முறை ஒரு காரினை பின் தொடர்ந்து செல்ல அந்த காரோ வழி தெரியாமல் வேறு வழி செல்ல நாங்களும் பாதை மாறினோம், ஆனால் விரைவாக சுதாரித்து அருகில் சென்ற சாலையில் மாறி நேர் வழிக்கு வந்தோம். பாதை மாறிய மற்ற காரோ பரிதவித்து நின்று கொண்டிருந்தது. இப்படித்தான் சில ஊர்களுக்கு செல்லும்போது பாதை தெரியாமல் அவதிப்பட்டது உண்டு.

அங்கிருந்து ஒரு சின்ன கிராமம் சென்றோம். அந்த கிராமம் எனது ஊரில் இருக்கும் சாலைகளை நினைவுபடுத்தியது. கட்டை வண்டிகளும், டிராக்டரும் செல்ல கூடிய பாதைகள் கொண்ட எனது ஊரில் அவ்வப்போது கார்கள் வந்து போகும். அதைப் போலவே மிகவும் குறுக்கும் நெடுக்குமாக இருந்த கிராமத்து சாலையில் பயணம் செய்தோம். முன்னே கார் வந்தால் விலக முடியாத சூழல். எவரேனும் திட்டிவிடுவர்களோ எனும் அச்சம் வேறு.

முத்துகள் செய்யும் தொழிற்சாலை ஒன்றை தேடி சென்றோம். அந்த தொழிற்சாலை சென்று அடையும் முன்னர் சாலையில் காட்டப்பட்டிருந்த விளம்பரத்தை கண்டு பாதை மாறி வேறு இடம் சென்றோம். பெரிய தலைவலியாக போய்விட்டதே என நினைத்தாலும் எந்த இடங்களும் முன்னர் பார்க்காத இடங்கள் என்பதால் பயணம் வெகு சிறப்பாகவே இருந்தது. சிறிது நேரத்தில் முத்துகள் செய்யும் தொழிற்சாலை அடைந்தோம். இந்த காலத்தில் விடுமுறை என தொழிற்சாலை பூட்டப்பட்டு இருந்தது ஏமாற்றத்தை தந்தாலும் அருகில் இருந்த பெரிய விற்பனை தளத்திற்கு சென்றோம். அங்கே விற்பனையாளர்கள் அதிகம் இருந்தார்கள். வாடிக்கையாளர்கள் மிகவும் குறைவாகவே இருந்தார்கள். இந்த மயோர்கா முத்துக்களுக்கு பிரபலம் என சொல்லிக் கொண்டார்கள்.

முத்து மாலை பல பார்த்தோம், அதில் சில பிடித்து இருந்தது. ஆனால் விலையோ மிகவும் அதிகம். வாங்குவதா வேண்டாமா என மனப் போராட்டத்தில் இருக்கும் இருப்பினை நினைத்து வேண்டாம் என வேண்டா வெறுப்பாக வெளியில் வந்தோம். 'இனி எப்போ இங்க வரப்போறோம், வாங்கலாம் எனும் மனைவியின் ஆசையை அங்கேயே நிராகரிக்க வேண்டிய சூழல் வந்தது' சில நேரங்களில் சில விசயங்கள் நமது கட்டுபாட்டுக்குள் நம்மால் கொண்டு வர இயலும், ஆனால் பெரும்பாலும் அதன்படி நாம் நடப்பதில்லை.

அங்கிருந்து ஒரு வியாபர நகர் சென்றோம். அங்கே வித விதமான பொருட்கள் விற்று கொண்டிருந்தார்கள். பல கடைகள் ஒரே இடத்தில் அமைக்கப்பட்டு இருந்தன. மாலை நேரம் நெருங்கி வர ஹோட்டல் வந்து சேர்ந்தோம். வரும் வழியில் பல்மா எனும் நகரின் அழகை ரசித்தோம். எங்கேனும் நிறுத்தலாம் என நினைத்தால் இடமே இல்லை. இந்த பல்மா நகரின் அழகை சுற்றிப் பார்க்காமல் மயோர்காவின் பல இடங்களுக்கு சென்று வந்துவிட்டோம் என தோணியது. மறு நாள் பல்மா நகர் என முடிவானது. வரும் வழியில் டேஸ்ட் ஆப் இந்தியா எனும் மற்றொரு கடையை அங்கே பார்த்தோம். அதே போல வேறொரு பிரபலமான சாப்பாடு  கடை ஒன்று இருந்தது.  நாளை வரலாம் என பயணித்தோம்.  பல்மா நகரின் சிறு சிறு சாலைகளில் கட்டிடங்களுக்கு இடையில் எல்லாம் பயணித்தோம். நாம் செல்லும் பாதை சரியா தவறா என்கிற எண்ணம் எல்லாம் இல்லை. ஆனால் சரியாகவே வழிகாட்டி வழி காட்டியது என கடைசியாக தெரிந்தது. அன்று இரவும் ஹோட்டலுக்கு அருகில் உள்ள அதே கடையில் சாப்பிடாமல் மற்றொரு இந்தியர் கடையில் சாப்பிட்டோம். சாப்பாடு அந்த அளவுக்கு சரியாக இல்லை. பேசாமல் நேற்று சென்ற கடைக்கே சென்று இருக்கலாம் என தோணியது.

இரவு மீண்டும் அதே பாடல் காட்சி. உறக்கம். காலையில் எழுந்ததும் இன்னும் ஒரு நாளில் இந்த மயோர்கா விட்டு பிரிய வேண்டுமே எனும் ஏக்கம் வந்து சேர்ந்தது. பல்மா நகருக்கு விரைந்தோம். ஓரிடத்தில் காரினை நிறுத்திவிட்டு நடையாய் நடந்தோம். கட்டிடங்கள், படகுகள் கூடிய கடல் என பல இடங்கள் பாத்தோம். வியர்த்து விறுவிறுத்து போனது. எங்கு பார்த்தாலும் கடைகள் என தேவாலயம் எல்லாம் சென்றோம். அதே தொலைவு நடந்து திரும்பினோம். மதியம் ஆனபோது அந்த பிரபலமான கடை மூடி இருந்தது. டேஸ்ட் ஆப் இந்தியாவில் சாப்பிட்டோம்.

இரவு எட்டு மணிக்கெல்லாம் காரை திருப்பி தர வேண்டும் என்பதால் வேறு எங்கும் செல்லாமல் வீடு திரும்பலாம் என நினைத்தோம். இருப்பினும் ஒரு கடற்கரை சென்று திரும்பலாம் என புதிய இடத்தை அடைந்தோம். அப்பொழுதுதான் தெரிந்தது மொத்த மயோர்காவையும் சுற்றி முடித்தாகிவிட்டது என்று. கடற்கரையில் சிறிது நேரம் விளையாடிவிட்டு காரை திருப்பி ஒப்படைத்தோம்.

பணம் எதுவும் அதிகமாக வாங்கவில்லை. எந்த பிரச்சினையும் செய்யவில்லை. ஊருக்கு கடிதம் அனுப்புவார்கள், பணம் அதிகம் எடுப்பார்கள் என இணையத்தில் படித்து இருந்ததை போல எதுவும் நடக்கவில்லை. காரை விட்டபின்னர் எங்களை பத்திரமாக ஹோட்டல் வந்து சேர்த்தார்கள். அங்கே காருக்கு பெட்ரோல் போட செல்லும் இடங்களில் வேலை பார்க்கும் பையன்கள் இருந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இங்கே எல்லாம் நாங்களகாவே பெட்ரோல் போடும் வழக்கம் உண்டு. அதிலும் ஓரிரு இடங்களில் தானியங்கிகள் தான்.

ஹோட்டல் வந்து அடைந்ததும் அதற்கடுத்து டென்ரீப் என மனைவி சொன்னார். சிறிது காலம் போகட்டும் என நினைத்து இருந்தேன். இங்கே தான் கார் ஓட்டியாகிவிட்டதே மாட்ரிட் போன்ற ஐரோப்பா இடங்கள் போகலாம் என சொன்னார். பார்க்கலாம் என அடுத்த நாள் விமானம் ஏறி ஊர் வந்தோம்.

விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டு இருந்த எனது காரில் ஏறி அமர்ந்தபோது இந்த காரை எடுத்து சென்று இருக்கலாம் என தோணியது.

முற்றும். 

3 comments:

Suresh Subramanian said...

nice to read... thanks for sharing... please read my tamil kavithaigal in www.rishvan.com

Radhakrishnan said...

மிக்க நன்றி, படிக்கிறேன் ரிஸ்வான்

Unknown said...

அனுபவம் நன்று.. பகிர்விற்கு நன்றி...