Wednesday 14 December 2011

கன்னத்தில் முத்தமிட்டால் கறை படியும்

ஒரு தெய்வம் தந்த பூவே பாடலை கேட்டுக் கொண்டே இருக்கையில் இந்த படத்தை பார்க்கவே இல்லையே எனும் ஒரு வேண்டாத ஆசை வந்து சேர்ந்தது. இந்த படம் வந்து கிட்டத்தட்ட ஒன்பது வருடங்கள் மேல் ஆகிவிட்டது.

ஈழத்து தமிழர்கள் பற்றிய படம் என்றெல்லாம் கேள்விபட்டது மட்டுமே உண்டு. பலரும் இந்த படத்தை சிலாகித்து பேசக் கேட்டது உண்டு. விடைகொடு எங்கள் நாடே எனும் பாடல் அத்தனை துயரங்களை சொல்லி செல்லும்.

அப்படி என்னதான் படம் என பார்த்தால் ஒரு எழுத்தாளரும், ஒரு குழந்தையும் பற்றிய கதை. ஈழத்து நிகழ்வுகளை பற்றி கதை கதையாக பேசி ஈழம் வெளிநாடுகளில் மலர்ந்து விட்டது என கூவி கோடிக்கணக்கான  மக்களின் கனவுகள் சிதைந்து போன தேசமாக இப்போது இலங்கை இருந்து வருகிறது. இந்த இலங்கை அற்புத தேசம் எனவும் சுற்றுலா தளங்களில் மிகவும் சிறந்தது எனவும் சொல்லப்படுவது உண்டு.

ஒரு குழந்தையின் ஏக்கம் தனை படம் முழுக்க காட்டப்பட்டு சினிமா நடிக்க வேண்டும் என, வீட்டுக்கு பயந்து என வீட்டை ஓடிப் போகும் குழந்தைகள் போல தாயை தேடி அகதி முகாம் செல்லும் வரை என குழந்தையின் மன நிலையை இளங்கன்று பயம் அறியாது என காட்டி இருந்தது நன்றாகவே இருந்தது.

ஒரு சாதாரண மனிதருக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் விடுதலை வேட்கையை தற்கொலை மனிதராக காட்டியது திடுக்கிடத்தான் செய்தது. ஒரு கிராமத்தில் வாழும் பூசாரி அந்த இறைவன் வந்து காப்பற்ற மாட்டாரா எனும் ஏக்கம் எல்லோர் மனதிலும் நிறைந்தே இருக்கும். இப்படி காட்சிக்கு காட்சி என ஒரு திரைப்படம் கவிதையாக வடிக்கப்பட்டு இருந்தாலும் ஒரு இனம் புரியாத சோகம் மனதில் இழையோடிக் கொண்டே இருந்தது. எட்டு ஆண்டுகள் முன்னர் கள்ளத்தோணி பிடிச்சி வந்தேன் என கண்ணீர் கதையை சொன்ன நண்பரை கட்டிபிடித்து என்ன செய்யலாம் என கேட்டபோது இங்கே இருந்தே அவங்களுக்கு சாவு மணி அடிக்கலாம் என்றார். அவரை அதற்கு பின்னர் நான் காணவே இல்லை. ஈழத்தில் நடந்த விசயங்கள் சாதாரண விசயங்கள் என எவரேனும் சொன்னால் அவர்கள் கல் நெஞ்சக்காரர்கள், இடுக்கண் வருங்கால் நகுக என இளித்து கொண்டு போக கூடியவர்கள். ஆனால் வாழ்க்கை அத்துடன் நிற்கவில்லை. தினமும் எவரும் இந்த நிகழ்வுகள் நினைத்து அழுது கொண்டிருக்கவும் இல்லை. இதுதான் பூமி கண்ட கோட்பாடு. செத்தாருக்கு சொல்லி அழு. அழுதவுடன் எல்லாம் தீர்ந்தா போய்விடுகிறது! வடுக்கள் ஏற்பட வழியில்லா ரணம் ஆறிட வழி இல்லை. சொந்த மண்ணை கீறி எரிதழலில் போட்டு பொசுக்கி போன பின்னர், எதுவுமே நடக்கவில்லை என்றா இளைய தலைமுறை வரலாறு கற்று கொள்ளும்? வெறுப்பு எப்படி எல்லாம் வளர்ந்து தொலைக்கிறது!!!

இப்பொழுது ஈழம் எப்படி இருக்கும்? சிங்களவர்கள் அனைவருமே கெட்டவர்கள் அல்ல என இருந்தாலும் சிங்களவர்கள் எனும் நினைப்பே தமிழர்களுக்கு ஒருவித எரிச்சல் தந்துவிட்டு போகிறது. எனக்கு தெரிந்த சிங்கள நண்பரிடம் பேசும்போது வார்த்தை தடுமாறுகிறது. அவரோ சகஜமாகவே பேசுவார், என்ன செய்வது சில கோணங்கி புத்தி உடையவர்களால் மொத்த இனமே வேறுபாட்டினை கொள்கிறது என்பார். ஆனால் சில கோணங்கி புத்தி இல்லை, ஒரு இனமே கோணங்கி புத்தி உடையதாக அல்லவா இருக்கிறது என அவரிடம் சொல்லிவிட்டு, நீங்கள் புலம் பெயர்ந்து வந்ததால் அந்த உணர்வு இருக்க வாய்ப்பு இல்லை என நகர்ந்து விடுவேன். அதுவும் எத்தனை உயிர்கள் மாய்க்கப்பட்டன, எத்தனை சிறார்கள் சிதறடிக்கப்பட்டார்கள், இது போன்ற காணொளி எல்லாம் இணையதளத்தில் உலவியபோது அதை பார்க்கும் தைரியம் எதுவுமே இல்லை. மருத்துவ உதவி செய்யப்போன புலம் பெயர் தமிழர் சொன்ன கதையை கேட்டு, போர் நிறுத்தம் செய்ய கூறி போராட்டம் நடத்தப்பட்ட வெளிநாடுகளில் கூடிய கூட்டம் கண்டு ஈழம் மலர்ந்து விடும் என்றே கனவுகள் உண்டு. ஆனால்... ஐம்பது வருட போராட்டம் கண்டது... இப்பொழுது இலங்கை அரசு மீதான நடவடிக்கைகள் எதுவுமே நடப்பதாக தெரியவில்லை. ஈழம் பற்றிய அக்கறை இனி எவருக்கும் வரப்போவது இல்லையோ! எல்லாம் போச்சு! என்றுதான் என்னிடம் ஒரு நண்பர் பிரபாகரன் மரணம் அடைந்த செய்தி வந்ததும் சொன்னார். ஒரு நல்ல இலக்கியம் ஒன்றை தமிழுக்கு படையுங்கள் என ஒரு நண்பர் கேட்டார். கதைகளும், காவியங்களும் எவருக்கு தேவை, கண்ணீருடன் வாழ்ந்து மடியும் இனங்கள் உள்ளபோது என இருந்தாலும் வரலாற்றை திரிக்கும் முயற்சியில் பலர் ஈடுபட்டு இருப்பது வேதனைக்கு உரியது. கறைபடிந்த வரலாறாக மாறக்கூடாது.

இலங்கைக்கு சென்று வரும் எனக்கு தெரிந்த நண்பர்களிடம் எல்லாம் நாடு எப்படி இருக்கிறது என்று கேட்டு கொள்வதோடு, அங்கே செல்வதால் பயம் இல்லையா என்று கேட்டால் 'எனது தாய் மண்' என்றே பெருமிதம் கொள்கிறார்கள். கண்கள் பனிக்கின்றன.

இருபது வருடங்கள் முன்னால் எழுதிய கவிதை தொலைந்து போய்விட்டது. மயானத்தில் கூட அமைதி, அந்த அமைதியையா இந்த போர் வேண்டி நிற்கிறது என வரும் அந்த கவிதை. போர்  எல்லாம் அமைதிக்கான வழியே இல்லை, இருப்பினும் எதிரிகளின் கன்னத்தில் முத்தமிட்டால் நமது உதடுகளில் கறைபடிந்து விடுவதை துடைக்க வழிதான் தெரிவதில்லை. 

2 comments:

Unknown said...

"பகைவனுக்கும் அருள்வாய் நெஞ்சே"
அவனுள்ளும் இருப்பதும் அந்த
பேரொளி என்னும் பிரம்மமே என்றான்
மானுடம் போற்றிய மகாகவி....

போராளிகள் அல்ல யாராகிலும் சரி
சுட்டுப் பொசுக்கு, கொத்துக் கொத்தாய்
கூண்டோடு வெடித்துச் சிதறவே
வேண்டிய அளவுத் தாக்கு என்றே
ஈவு இறக்கமின்றியே கொலைவெறியோடு
பூ, பிஞ்சு,காய், கனி அனைத்தையும்
அடியோடு அழிக்கவே ஆணையிட
எங்கிருந்தது வந்தது ஆணை..
ஐயகோ! ஈசனுக்கும் அடுக்குமோ?...

மனிதநேயம் தான் செத்துப் போனதோ?
ஓ மனமே!.. அது மனிதருக்கு மாத்திரம்
இருக்கும் குணம் அன்றோ?...

கச்சத்தீவில் குச்சிக் கட்ட...
காட்டுமிராண்டிகளின் துணை கொண்டே
மஞ்சளாற்றுக்கு மஞ்சம் போட்டு தந்து
தந்திரமாய் வரலாறு தெரியாத
வந்தேறிகளின் துணைகொண்டே
தஞ்சம் என்றே எங்கும் விரைந்து
நெஞ்சம் கொதிக்க மண்ணின் மைந்தர்களை
தரணியெல்லாம் பரவ செய்து விட்டார்கள்!...

கெஞ்சிக் கேட்க பிச்சை அல்லவே - மனம்
துஞ்சியும் போகவில்லை எனினும் யாருக்கும்
அஞ்சியும் இருக்க வில்லை
மிஞ்சிப் போனால் இன்னும் எத்தனைக்காலம்
கொஞ்சம் பொறுத்திருப்போம் ஓரினத்தையே
வஞ்சித்த பாவிகளை நிந்திக்க நெடுகாலம் இல்லை
வஞ்சித்திணை பாட வேலும் விவேகமும் தாங்கிய
விடியலுக்கு வெகுதூரம் இல்லை.

Radhakrishnan said...

//வஞ்சித்திணை பாட வேலும் விவேகமும் தாங்கிய
விடியலுக்கு வெகுதூரம் இல்லை.//

அருமை ஐயா. மிகவும் சிறப்பு. பகிர்ந்தமைக்கு நன்றி.