Sunday 13 June 2010

நுனிப்புல் (பாகம் 2) 7


7. தந்தை சொல்மிக்க மந்திரமில்லை


சேகர், சுந்தரன் முன்னரே கிளம்பிச் சென்றதை அறிந்து கொண்டார். அந்த மதிய வேளையில் பெரியவர் விநாயகம் சேகரைத் தொடர்பு கொண்டு பல விசயங்கள் பேசினார். திருமால் குறித்தும், பாரதி நேற்று அவரை பார்க்க சென்றதாகவும் அதுகுறித்து ஏதேனும் விபரங்கள் தெரியுமா எனக் கேட்டார். சேகர், தனக்கு இது குறித்து எதுவும் தெரியாது என தெரிவித்தவர், மன வருத்தம் கொண்டார். அருணை அழைத்துக் கொண்டு சேகர் வீட்டிற்கு வந்தார். சரோஜா, சுந்தரனை காணாமல் சேகரிடம் கேட்டார்.


‘’என்னங்க, சுந்தரன் தம்பி வரலையா’’ 


‘’வரலையா, அப்பவே வேலைய முடிச்சிட்டு கிளம்பி போயாச்சே''


''அருண், உனக்கு ஏதும் விபரம் தெரியுமா’’ 


‘’இல்லைம்மா, அவன் ஒண்ணும் சொல்லலையே’’ 


''என்னங்க, எங்க போயிருப்பான்?''


‘’எங்க போயிருக்க போறான், வந்துருவான் சாப்பாடு எடுத்து வை’’ 


சரோஜாவிற்கு இன்று சுந்தரன் பற்றிய கவலை வந்து சேர்ந்தது. பாரதியும் சாப்பிடுவதற்கு வந்து அமர்ந்தாள். அவளது எண்ணம் குளத்தூரில் இருந்தது. சரோஜா சாதம் போதுமா என கேட்டதை கேளாமல் அமர்ந்து இருந்தாள். அருண் பாரதியைப் பார்த்து சொன்னான்.


‘’வர வர கனவு காணுற வேலையாப் போச்சு உனக்கு பாரதி’’ 


பாரதி திடுக்கிட்டாள்.


‘’என்னம்மா இவ்வளவு சாதம்’’ 


‘’நான் தான் கேட்டேனே, நீ எங்கேயோ இருந்தா’’ 


பாரதி வாசனை தொடர்பு கொள்வதா வேண்டாமா என மீண்டும் எண்ணியவள், எதற்கு தன்னை வாசன் இன்னமும் தொடர்பு கொள்ளவில்லை என நினைத்துக்கொண்டும் சாப்பிட்டு முடித்தாள். சேகரும் அருணும் சாப்பிட்டு முடித்தார்கள். சிறிது நேரம் பின்னர் பாரதியை சேகர் அவரது அறைக்கு அழைத்துச் சென்றார்.


‘’உட்கார்’’ 


‘’என்ன விசயம்பா’’ 


‘’திருமால் பத்தி உனக்குத் தெரியுமா?’’ 


பாரதிக்கு மனம் படபடவென அடித்துக்கொண்டது. 


‘’எந்த திருமால் பத்தி கேட்கறீங்கப்பா?’’ 


‘’சாத்திரம்பட்டி திருமால்’’ 


பாரதிக்கு வியப்பும் பயமும் அதிகமானது. பாரதி பயந்து கொண்டே எல்லா விபரங்களையும் சொன்னாள். 


‘’வாசனுக்காக இதையெல்லாம் செய்றேன்னு சொல்றதான, வாசன் நாளைக்கு ஏதாவது உன் மனசுக்குப் பிடிக்காததை செய்ய சொன்ன செய்வியா?’’ 


‘’அப்படியில்லைப்பா’’ 


‘’நாங்க எல்லாம் இருக்கோம், சுந்தரனையோ, அருணையோ போகச் சொல்லி இருக்கலாம், பிரச்சினை ஆகாதவரைக்கும் பரவாயில்லை, பிரச்சினை ஆயிருந்தா, வாசனா பதில் சொல்வான்’’ 


‘’சரிப்பா, இனிமேல் இப்படி நடந்துக்கற மாட்டேன்பா’’ 


‘’இங்க பார் பாரதி, நீ நல்லா படி அதுதான் உனக்கு ரொம்ப முக்கியம், அதை நீ மறந்துராத, இனிமே உன்னுடைய, உனக்குத் தேவையான விசயத்தை மட்டும் செய். நீ செஞ்சதெல்லாம் தப்புனு சொல்ல வரலை, தப்பா போயிறக் கூடாதுனு சொல்றேன், என் மேல வருத்தம் எதுவும் இல்லையே, உன் சுதந்திரத்தில நான் தடையா இருக்க விரும்பல. திருமால் பத்தி உன் பெரியப்பா சில விசயங்கள் சொன்னார், அதான் உன்கிட்ட சொல்றேன். உலகத்துல எல்லாரும் நல்லவங்கதானு நாம நம்பலாம், ஆனா எல்லோரும் நல்லவங்களா இருப்பாங்கனு உறுதியாச் சொல்ல முடியாது, சூழ்நிலையும் சந்தர்ப்பங்களும் ஒரு மனிதனை தலைகீழா மாத்திரும்’’ 


''சரிப்பா, கவனமா இருந்துக்கிறேன்''


சேகர் பாரதியை அன்புடன் பார்த்தார். பாரதி புன்முறுவலிட்டாள். 


''உங்ககிட்ட அவரைப் பத்தி பேச எனக்கு பயம்மா இருந்ததுப்பா, அம்மாகிட்டவும் சொல்லலை''


''இனிமே பயப்பட வேணாம், பயப்படும்படியான விசயங்களைத்தான் முதல்ல சொல்லனும், இனி கவலையை விடும்மா''


பாரதியின் மேல் சேகர் கொண்ட அன்பும், நம்பிக்கையும் பாரதியின் மனதை புண்படுத்திவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தது. பாரதி தந்தையின் எண்ணத்தை புரிந்து கொண்டாள். சரோஜாவிடம் மட்டும் விபரத்தை கூறினார் சேகர். அருண் இதில் ஈடுபாடு இல்லாதவன் போல் வெளியில் சென்று விட்டான். சரோஜா பாரதியிடம் இதுகுறித்து பேசினார். பாரதி அமைதியாக கேட்டுக் கொண்டாள். வெளியில் சென்ற அருண் வீட்டிற்கு மாலை வேளையில் வந்தான்.


‘’என்ன இந்த சுந்தரனை இன்னும் காணோம், வீடு வேற பூட்டியிருக்கு, மொபைலுக்கு அடிச்சா எடுக்க மாட்றான், கடற்கரைக்கு போகலாம்னு சொன்னான், இங்க வந்தானாம்மா’’ 


‘’வரலையே’’ 


‘’ஊருக்குப் போய்ட்டானோ சொல்லாம கொள்ளாம’’ 


அருண் சொன்னதை ஏதோ எழுதிக்கொண்டிருந்த சேகர் பதிலளித்தார்.


‘’அப்படியெல்லாம் போகமாட்டான்’’ 


‘’அப்படின்னா வரட்டும் ஊருக்கு அனுப்பி வைச்சிருவோம்’’ 


‘’அவனை ஊருக்கு அனுப்பரதிலேயே நீயும் உன் தங்கச்சியும் குறியா இருங்க, அவன் இங்க வந்தப்பறம் எனக்கு எவ்வளவு உதவியா இருக்குத் தெரியுமா, பாவம் மனசு ஏதோ குழப்பத்தில இருக்கான்’’ 


இதைக் கேட்ட பாரதியின் மனதிற்கு கஷ்டமாக இருந்தது. அப்பொழுது கிருத்திகா பாரதியின் வீட்டிற்கு வந்தாள். அனைவருக்கும் வணக்கம் சொல்லிக்கொண்டவள் பாரதியினைத் தேடி மாடிக்குப் போனாள். 


‘’என்னய்யா படிப்போமா''


கிருத்திகாவிடம் பாரதி நடந்த விசயத்தை சுருக்கமாக கூறினாள். 


‘’திருமால் பத்தி நான் கவனிச்சிக்கிறேன்யா''


சுந்தரன் பற்றி பாரதி சொன்னதும் கிருத்திகா சிரித்தாள். 


‘’ம் கிராமத்தில உயிர்க்காதலர்கள் நிறைய கிடைப்பாங்க போலிருக்குய்யா, சுந்தரன் பாவம்யா சொல்லி வைச்சிருவோம்யா’’ 


‘’சொல்லிட்டேன் கிருத்தி, இன்னும் வீட்டுக்கு வந்து சேரலை’’ 


‘’இது வேறப் பிரச்சினையா, நாம எப்ப படிக்கிறது, எப்படி டாக்டர் ஆகிறது ஹூம்’’ 


''அந்த பிரச்சினை அப்படியே இருக்கட்டும், நான் சுந்தரன் வந்ததும் உனக்கு சொல்றேன், நீ அவன்கிட்ட போய் பேசு''


''இன்னைக்கு எத்தனை மணியானாலும் பேசிறேன்யா, இப்போ ஜெனிடிக்ஸ் பத்தி படிக்கலாம்யா''


மரபியல் மருத்துவம் பற்றி பாரதி பேச ஆரம்பித்தாள். கிருத்திகா கவனத்துடன் கேட்க ஆரம்பித்தாள். சுந்தரன், திருவேற்காட்டில் அம்மன் ஆலயத்தில் தியானத்தில் அமர்ந்து இருந்தான்.


(தொடரும்)

2 comments:

Chitra said...

:-)

Radhakrishnan said...

மிக்க நன்றி சித்ரா