Wednesday 12 October 2011

திருச்சியில் சுயேச்சை போட்டியாளர் வெற்றி

சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் நாளான 20ம் தேதிக்கு பின்னர் இப்படியொரு செய்தியை படித்தால் தமிழகத்தில் உள்ள மக்களின் மனநிலை எப்படி இருக்கும்? 

மக்களின் நலனை மட்டுமே கருதி 'தோற்றுப் போய்விடுவோம்' என தெரிந்தும் 'தனது பணம் வீணாகும், என புரிந்தும் மக்கள் இந்த அரசியல் கட்சிகளை ஓரம் கட்டமாட்டார்களா என ஒவ்வொரு தொகுதியில் நம்பிக்கையுடன் போட்டியிடும் உண்மையான நேர்மையான சுயேச்சை வேட்பாளர்களை அடையாளம் கண்டுபிடித்து அவர்களை எல்லாம் ஒருங்கிணைத்து வெற்றி பெற செய்ய கூடிய ஒரு அமைப்பு தோன்ற வேண்டும். இது ஒரு மாநிலத்தில் மட்டுமல்ல அனைத்து மாநிலங்களிலும் பரவ வேண்டும். இதுதான் நான் கொண்டிருக்கும் கனவு. 

அப்படிப்பட்ட மக்களின் நலம் சார்ந்த ஒரு அமைப்பினை உருவாக்கும் பொறுப்பு 'அரசியல்' சாராத, குறுக்கு நெடுக்கு அரசியல் நடத்த விரும்பாத தமிழ் பதிவர்களிடம் உருவாக வேண்டும். இப்படி போன்ற அமைப்பிற்கு மக்களின் ஆதரவை திரட்ட வேண்டும். அது எப்படி சாத்தியம்? உள்குத்து இல்லாத, உண்மையாகவே சமூக அக்கறையுடன் போராடக் கூடிய, நான் பெரிதா, நீ பெரிதா என்கிற பாரபட்சம் பார்க்கும் மன நிலையில் இல்லாத பதிவர்கள் இந்த விசயத்தை தொடங்க வேண்டும்.  நமக்கெல்லாம் அரசியல் எதற்கு என்கிற மனோபாவம் தொலைத்து மக்களின் நலனுக்காக போராடும் குணம் தமிழ் பதிவர்களிடம் உருவாக வேண்டும். இப்படி தமிழ் பதிவர்களின் பார்வையானது பலமாக சமூகத்தில் படும்போது அதற்குரிய மாற்றத்தை உருவாக்கும் திறன் நிச்சயம் வளரும். 

புத்தகம் வெளியிடும் பதிவர்கள் ஒவ்வொருவரும், தங்களது இந்த முயற்சியை புத்தகத்தில் குறிப்பிட்டு மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இதோ பதிவர்களால், பதிவர்களுடன் கூட்டு சேர்ந்துள்ள யுடான்ஸ் தொலைக்காட்சி இது போன்ற விசயங்களை மக்களுக்கு எளிதாக கொண்டு செல்ல வேண்டும். இதற்குரிய முயற்சியை, இதுவரையிலும் வேறு கட்சிகளில் தொடர்பு இருந்தாலும் அதை அறுத்து எறிந்து விட்டு, ஒரு நடிகரின், நடிகையின் ரசிகனாக இருந்தாலும் அதோடு நிறுத்திவிட்டு, கையில் எடுக்க வேண்டும். இந்த எழுத்து போராட்டம், வாசிப்பவர்களின் மனதில் புது வேகத்தை கொடுக்க வேண்டும். 

பதிவர்களிடையே இருக்கும் வேற்றுமை எண்ணங்கள் மறைந்து மக்களின் நலனுக்காக பாடுபடும் அமைப்பை இந்த உலகமெல்லாம் இருக்கும் தமிழ் பதிவர்கள் தொடங்கியே தீர வேண்டும். நோக்கம் மக்களின் நலன். போராட்டம் மக்களின் நலன். இதுதான் தீர்மானம். ஒரு விதை இருளில் இருந்துதான் முளைக்கிறது. மாபெரும் கும்மிருட்டில் இந்த விதையை தூவுகிறேன். 

 பத்து இருபது படங்களில் நடிக்கும் ஒரு நடிகரோ, நடிகையோ கட்சி ஆரம்பித்தால் அதற்கு ஆதரவு தரும் இந்த மக்கள் தங்களுக்கென போராட ஒரு அமைப்பு இருக்கிறதென உணர வேண்டும். வெறும் பேருக்கென இருக்கும் இலக்கிய அமைப்புகள் பற்றியோ, வெட்டி சவாடல் விடும் அமைப்புகள் பற்றியோ நாம் இங்கு பேசவில்லை. அது போன்ற அமைப்புகள் இருப்பவர்கள் மக்களின் நலன் கருதி உண்மையாக போராட வேண்டும். ஒரு எழுச்சியை நம்மால் உருவாக்க இயலும். 

இதோ பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் பேசுகிறார், திராவிட கட்சிகளை அழிப்பதே அவரது கட்சியின் நோக்கமாம். அட, மக்களுக்கு பாடுபடுவதுதானே கட்சியின் நோக்கமாக இருக்க வேண்டும். எந்த நோக்கத்திற்காக கட்சி ஆரம்பித்தேன் என்பது கூட இத்தனை வருசம் தெரியாமல் இப்படி உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதற்காக வீர வசனம் பேசி திரியலாமா? 

இதோ தே மு தி க தலைவர் ஊரெல்லாம் மக்களுடன் கூட்டணி என பேசுகிறார். அட, மக்களுடன் கூட்டணி, என்ன மக்களுடன் கூட்டணி, எதற்காக கட்சி ஆரம்பித்தீர், என்ன நோக்கம், என்ன கொள்கை என்பது குறித்து அல்லவா பேச வேண்டும். எதற்கெடுத்தாலும் அதை இலவசமாக தருவேன், இதை இலவசமாக தருவேன். தனியாக போட்டியிடுவேன் எனும் வீர வசனம் எதற்கு? இலவசமாக கொடுக்க பணத்தை எங்கே இருந்து எடுப்பீர்களோ? இதை கூட சிந்திக்கும் திறன் இழந்த மக்களை அல்லவா உருவாக்கி வைத்து இருக்கிறீர்கள். விசுவாத்தின், நம்பிக்கையின் அடிப்பைடயில் நலிந்து போன மக்கள் ஐயா, நலிந்து போன மக்கள். 

இவர் எப்பொழுது கட்சி தலைமைக்கு வந்தார்? எதற்கு தி மு க கட்சி தொடங்கப்பட்டது என்பதெல்லாம் பேசி பேசியே திரைப்படங்களில் ஆஹோ ஓஹோ என வசனம் எழுதியே அரசியல் நடத்திய தி மு க தலைவர். எல்லா வேலைக்கும் ஒரு குறிப்பிட்ட வயதில் கட்டாய ஓய்வு கொடுத்து விடுவார்கள். ஆனால் அரசியலில் மட்டும் அப்படிப்பட்ட ஓய்வு எல்லாம் இல்லை, எதற்கு தெரியுமா கழக தலைவரே? உங்களுக்கு கலிங்கத்து பரணி எல்லாம் அத்துப்படி, பல விசயங்கள் பசுமையாக இருக்கும் உங்கள் நினைவினை திரும்பி பாருங்கள். மக்களின் சேவைக்கு ஓய்வு என்பதே கூடாது என்பதற்காகத்தான். இதுநாள் காறும் என்ன செய்தீர்கள் என்பதை யோசித்து பாருங்கள், பல விசயங்கள் உங்களை உறுத்தும், உறுத்த வேண்டும். 

அம்மா. அட பாவமே. அம்மா என மாடு அழைத்தால் கூட இவரைத்தான் அழைக்கிறது என்கிற தோரணை எல்லாம் கட்டப்பட்டு இருந்த காலம். மக்கள் தலைவர் என போற்றப்பட்ட ஒருவரின் உதவியின் மூலம் கொள்கை பரப்பு செயலாளார் எனும் பதவி கொண்டு பல இன்னல்களுக்கு இடையில் போராடி அ தி மு க எனும் அரசியல் கட்சியை அழிந்து போகவிடாமல் இன்று முதல் அமைச்சர் எனும் முக்கிய பதவியில் அமர்ந்து இருக்கிறார்கள். கொள்கை பரப்பு செயலாளர், நிச்சயம் கொள்கைகள் தெரிந்து இருக்க வேண்டும், ஆனால் கொள்கைகள் எல்லாம் காற்றில் பறந்து கொண்டிருக்கிறது. தி மு க வை தோற்கடிக்க அமைந்த கூட்டணி. மக்களின் நலனுக்கு அமையவில்லை கூட்டணி என்பதை ஐந்து மாத கால கட்டத்துக்குள் நிரூபித்தாகி விட்டது. 

மக்களே எதற்கு இன்னமும் யோசனை? 

இனிமேல் இதுவரை சுயநலத்துக்காகவே உருவாக்கப்பட்ட இது போன்ற கட்சிகளின் சார்பில் போட்டியிடும் எந்த வேட்பாளரும் வெற்றி பெறக் கூடாது என்கிற முழு தீர்மானம் மக்களிடம் எழ வேண்டும். மக்களின் நலனே முக்கியம் என பாடுபடும், நினைக்கும் இது போன்ற அரசியல் சார்ந்த கட்சிகளில் வேட்பாளாராக போட்டியிடும் வேட்பாளர்கள் கட்சியில் இருந்து விலகி மக்களை முறையாக அணுகி வெற்றி பெற வேண்டும். அல்லது இந்த அரசியல் கட்சிகள் மக்களுக்காக உண்மையாக பாடுபடுவோம் என்கிற உறுதியை எடுத்து செயலாற்ற வேண்டும். இனிமேலாவது மக்களுக்கென பாடுபடும் மக்களை அடையாளம் கண்டு கொண்டு அவர்களை வெற்றி பெற செய்ய வேண்டும். மக்களின் நலன் குறித்த சிந்தனை உடையவர்களே உண்மையான வேட்பாளர்கள் என்கிற எண்ணம் எழ வேண்டும். 

இது போன்ற எண்ணங்கள் எல்லாம் கனவுக்கும், கற்பனைக்கும் மிகவும் நன்றாக இருக்கும் என்பதுதான் இதுவரை உலகம் கண்ட வரலாறு. இந்த மாற்றத்தை ஏற்படுத்த மாபெரும் புரட்சி ஒன்றை எழுத்து மூலம் தொடங்கி வைப்போம். பின்னர் செயல்களில் முறைப்படுத்த முனைவோம். 


Monday 10 October 2011

போங்காட்டம் (சவால் சிறுகதை - 2011)


சனிக்கிழமை காலையில் எழுந்து தனது மிதி வண்டியில் வெகுவேகமாக தன்னிடம் இருந்த புகைப்படத்தை எடுத்துக் கொண்டு ரமேஷ், மனோகரின்  வீட்டிற்குப் போனான். வீடு பூட்டப்பட்டு இருந்தது. மனோகரின்  செல்பேசிக்கு பக்கத்தில் இருந்த ஒரு கடையில் இருந்து அழைப்பு விடுத்துப் பார்த்தான். செல்பேசியின் அழைப்பு சத்தம் மறுமுனையில் கேட்டுக் கொண்டே இருந்தாலும் எவரும் எடுத்து பேசவில்லை. கையில் வைத்திருந்த புகைப்படத்தை உற்று நோக்கியவாறே நின்று கொண்டிருந்தான் ரமேஷ்.

மீண்டும் செல்பேசியில் மனோகரை தொடர்பு கொண்டான் ரமேஷ். மனோகர் செல்பேசியை எடுத்தான்.

 'டேய் மனோகர், எங்க இருக்க? சீக்கிரமா வீட்டுக்கு வரியா, நான் உன் வீட்டு பக்கத்துலதான் இருக்கேன்'

'என்னடா அவசரம், இப்பதான் கடைக்கு சாப்பிட வந்தேன்'

'எந்த கடையில இருக்க'

'விஷ்ணு ஹோட்டல், மேலப்புதூர்.

'ஏண்டா, இங்க இருக்கறது எல்லாம் கடையா தெரியலையா, அங்க சாப்பிட போகனுமா?'

'நீயும் வாடா, உனக்கும் சேர்த்து ஆர்டர் பண்றேன்'

'சரி பூரியும், பொங்கலும் சொல்லு'

ரமேஷ் விஷ்ணு ஹோட்டல் சென்று அடையும் போது ஹோட்டலின் வெளியில் மனோகர் காத்துக் கொண்டிருந்தான்.

'என்னடா ஆர்டர் பண்ணலையா?'

'ஆறிப்போகும்னு ஆர்டர் பண்ணலை, என்ன என்னை தேடி வந்திருக்க என்ன விசயம்?'

'சொல்றேன், சாப்பிடலாமா?' ஹோட்டலைப் பார்த்ததும் சாப்பிட வேண்டும் எனும் வேகம் ரமேஷிடம் அதிகமாகவே இருந்தது.

'சரி வா சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்'

விஷ்ணு ஹோட்டல் மிகவும் பளிச்சென இருந்தது. இங்கே அசைவம், சைவம்  பரிமாறப்படும். இந்த ஹோட்டலுக்கு மனோகர் அவ்வப்போது வந்து சாப்பிட்டு செல்வது வழக்கம். ரமேஷ் ஹோட்டலை வெளிப்புறம் மட்டுமே பார்த்து சென்று இருக்கிறான். அருகில் ஒரு அருமையான மைதானம் இருக்கிறது, அங்கே சிறுவர்கள் விளையாடி மகிழ்வார்கள்.

ஹோட்டலுக்குள் நுழைந்ததும் ஒரு ஓரமாக இருந்த மேசைக்கு சென்று அமர்ந்தான் மனோகர்.

'உட்காருடா, இதுதான் நான் வந்தா எப்பவும் உட்காருற இடம், அதுவும் காலியா இருந்தா'

ரமேஷ் மனோகருக்கு எதிராக அமர்ந்தான். அவர்கள் அமர்ந்த அடுத்த நிமிடம் என்ன சாப்பிட வேண்டும் என பணியாளர் வந்து நின்றார். ஒவ்வொன்றாக சொல்லி அவரை அனுப்பினான் மனோகர்.

'இன்னைக்கோட உன்னோட பழகி ஆறு மாசம் ஆகப்போகுதுடா மனோகர், இந்த மதுரைக்கு வந்து இறங்கின மறு நிமிஷம் பணத்தை தொலைச்சி நின்னப்ப, யாரு என்ன அப்படினு விசாரிக்காம பணம் கொடுத்து உன்னோட செல்பேசி, அட்ரஸ் எல்லாம் கொடுத்து பழகினதை இன்னும் மறக்கமுடியலை, அந்த ஐநூறு ரூபாய நிச்சயம் திருப்பி கொடுத்துருறேன்'

'நானே இந்த ஊருக்கு வந்து ஒன்றரை வருஷம்தான் ஆகுது, ஏண்டா பாக்கறப்ப எல்லாம் இதைப் பேசி என்ன பெரிய தியாகி லெவலுக்கு கொண்டு போற, அந்த பணத்தை விடுடா, நீ என்னைய பாக்க வந்த காரணத்தை சொல்லு'

'இந்தாடா இந்த புகைப்படத்தைப் பாரு'

'அட, ரொம்ப நல்லா இருக்கே, யாருடா அந்த படத்துல, நீயா?'

'இல்லைடா, இந்த படத்தில இருக்கறதை வைச்சி கதை எழுதனுமாம், எழுதி தருவியா?'

'இதுக்குத்தான் இந்த காலையிலே என்னை தேடி வந்தியா'

'டேய் எழுதிக் கொடுடா, முதல் பரிசு பத்தாயிரம் ரூபாய்டா'

பணியாளர் தண்ணீர் கொண்டு வைத்து போனார்.

'இந்த படத்தைப் பாக்கறப்ப யாரோ ஒருத்தனை அவனுக்கே தெரியாம படம் எடுத்து இருக்காங்கடா'

'டேய் மனோகர், இது கதை எழுதுரதுக்காக எடுத்த படம்டா'

'இருக்கட்டும்டா, ஆனா இந்த படத்துல இருக்கற விசயம் சிலிர்ப்பா இருக்குடா, கவலை வேண்டாம் அப்படினு எப்பவும் உபயோகிப்பான் போலடா அந்த ஆளு'

'ஒரு கிரைம் கதை எழுதுடா, அதுல sir எஸ் பி கோகுலிடம் நான் தவறான குறியீட்டைத்தான் கொடுத்திருக்கிறேன், கவலை வேண்டாம் விஷ்ணு அப்படினும், Mr. கோகுல் S W H2 6F இதுதான் குறியீடு, கவ விஷ்ணு அப்படினு போட்டுருக்குலடா'

அப்பொழுது பணியாளர் பூரி, இட்லி பொங்கல் என கொண்டு வந்து வைத்துப் போனார்.

'சரி எழுதி தரேன், சாப்பிடு'.

ரமேஷ் இரட்டிப்பு சந்தோசத்துடன் சாப்பிட்டான். சாப்பிட்டுவிட்டு கடையில் பணத்தை கட்ட சென்றபோது கல்லாவில் இருந்த முதலாளி அதுக்கென்ன இப்போ கவலை வேண்டாம் என முன்னால் பணம் கட்டியவரிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

'இந்த படத்துக்கு நீ கதை எழுதி கொடுத்து முத பரிசு எனக்கு கிடைச்சா, ஊருக்கு அனுப்பி வைச்சிருவேண்டா' என்றான் ரமேஷ்.

'சரிடா, கவலைய விடு' என்றவன்

'விஷ்ணு ஹோட்டல் அப்படின்னு பேரு வைச்சிருக்கீங்க, என்ன காரணம் சார்' என ஹோட்டல் முதலாளியிடம் கேட்டான் மனோகர்.

'என் பேரைத்தான் வைச்சிருக்கேன், அதைப்பத்தி உங்களுக்கு கவலை வேண்டாம்' என்றார் ஹோட்டலின் முதலாளி.

'இந்தப் படத்தை பாருங்க' என்றான் மனோகர்.

'இந்தப் படம் எங்க கிடைச்சது, நீங்க யாரு' என்றார் ஹோட்டல் முதலாளி.

'நாங்க சுந்தரம் மோட்டார்ஸ்ல வேலைப் பாக்கறம். இண்டர்நெட்டுல இருக்கிற இந்தப் படத்தை வைச்சி ஒரு கதை எழுதணுமாம்' என்றான் மனோகர்.

'முத்து வந்து கல்லாவைப் பாத்துக்கோடா, யாராச்சும் வந்தா நான் வெளிய போயிருக்கேன்னு சொல்லு ' என்றவர்

'நீங்க ரெண்டு பெரும் என்னோட வாங்க' என ஹோட்டலில் மேலிருந்த மாடிக்கு அவர்களை அழைத்து சென்றார், ஹோட்டல் முதலாளி விஷ்ணுவரதன். கணினியை இயக்கினார்.

'இது ஒரு எழவு, ரொம்ப மெதுவாத்தான் திறக்கும், அந்த எஸ் பி கோகுல் எப்போ வருவானோ, சிக்கலுல மாட்டிகிட்டேனே'

'என்ன சார் சிக்கலு, சொல்லுங்க'

'இரண்டு வருஷம் முன்னாடிதான் இந்த ஹோட்டலை எஸ் பி கோகுல்கிட்ட நான் வாங்கினேன்.'

'எந்த ஊரு எஸ் பி சார்?

'அவன் எஸ் பி இல்லை, அவன் பேரு எஸ் பி கோகுல், சாத்தூர் பாலசுப்ரமணி கோகுல் அதைத்தான் அவன் சுருக்கி எஸ் பி கோகுல் அப்படினு வைச்சிகிட்டேனு சொல்வான், அதைப்பத்தி இப்போ கவலை வேண்டாம்'

கணினி திறந்தது. மின்னஞ்சல் பக்கத்துக்கு சென்றார்.

'அப்பாடா, குறியீடு பத்தி ஒன்னும் பதில் காணோம்'

'ஒன்னும் புரியலையே சார், என்ன சார் குறியீடு?'

'நீங்க பாத்த இண்டர்நெட்டு பக்கத்தை காட்டுங்க, படத்தை யார் எடுத்தது, எங்க எடுத்தது எல்லாம் தெரியணும், இந்த படத்தை நீக்க சொல்லணும்'

'சார் மொத்த விபரமும் சொன்னா நாங்க உங்களுக்கு உதவி பண்றோம்' என்றான் மனோகர்.

'என்கிட்டே கடைய வித்துட்டுப் போன எஸ் பி கோகுல் அப்போ அப்போ இந்த கடைக்கு வருவான். ஆறு மாசமா தல்லாகுளம் குமாரோட சேர்ந்து தங்கம் வியாபாரம் செய்ய ஆரம்பிச்சேன். வர கஷ்டமர்கிட்ட பேசி கலப்பட தங்கம் வித்துருவேன் நாக்கு குழருது என எச்சில் விழுங்கியவராய் கலக்கலா ரொம்ப தங்கம் வித்துருவேன்.  இதனால குமாருக்கு என் மேல மரியாதை. ரொம்ப முக்கியமானவங்களுக்கு மட்டும் ஒரு குறியீடு கொடுப்பேன், அதை சொன்னாத்தான் குமார் நல்ல தங்கம் முக்கால்வாசி விலைக்குத் தருவான்' இதை தெரிஞ்ச இந்த எஸ் பி கோகுல் போன வாரம் தங்கம் வேணும்னு கேட்டான். நான் சரினு சொன்னேன், ஆனா எனக்கு இந்த எஸ் பி கோகுல் கொஞ்சம் கூட பிடிக்காது.

நேத்துதான் நான் எஸ் பி கோகுலுக்கு, Mr. கோகுல் S W H2 6F இதுதான் குறியீடு, கவலை வேண்டாம் அப்படினு அனுப்புனேன். அதை அப்படியே குமாருக்கும்  அனுப்பிட்டு, அடுத்த மெயிலுல sir எஸ் பி கோகுலிடம் நான் தவறான குறியீட்டைத்தான் கொடுத்திருக்கிறேன், கவலை வேண்டாம் அப்படினு அனுப்பிட்டு குமாருக்கு போன் போட்டேன். அவன் 'விஷ்ணு இன்பார்மர்' அப்படினுதான் என் பேரை அவன் மொபைலுல போட்டுருப்பான்.

இந்த இரண்டு விசயத்தையும் அவன் பாத்துட்டு இருந்தப்பதான் யாரோ அவனை படம் எடுத்து இப்படி செஞ்சி இருக்காங்க. இப்ப காட்டுங்க எங்க அந்த பக்கம்'.

'ரமேஷ் காட்டுடா'

ரமேஷ் இணையம் திறந்தான். 'ஒரு பத்தாயிரம் ரூபா கொடுங்க சார், எல்லாத்தையும் அழிச்சிரலாம்' என்றான் மனோகர்.

'எதுக்கு அவ்வளவு பணம்?'

'தாங்க, இல்லைன்னா பிரச்சினை பெரிசாயிரும், சார் பாலாவை எனக்கு தெரியும், அவன்தான் இந்த இணையதள உரிமையாளர், இருங்க கூப்பிடுறேன் என செல்பேசியில் அழைத்தான் மனோகர். பாலா அப்பொழுதே வருவதாக சொன்னான்.

விஷ்ணுவரதன் பணத்தை எண்ணி கொடுத்தார். பின்னர் மூவரும் கீழே வந்தார்கள்.

இவர்கள் கீழே வருவதற்கும் பாலா அங்கே நிற்பதற்கும் சரியாக இருந்தது.

'ஐ ஆம் எஸ் பி கோகுல், சாரி ஐ ஆம் எம் எல் பாலா' என கையை நீட்டினான். விஷ்ணுவரதன் 'நான் தான் விஷ்ணு' என கையை நீட்டினார்.

மனோகர் எல்லா விபரங்களும் சுருக்கமாக சொன்னான். 'கவலை வேண்டாம் சார், எல்லாத்தையும் அழிச்சிருவோம்' என விஷ்ணுவரதன் முன்னரே அனைத்தையும் அழித்தான் பாலா.

 பின்னர் வெளியில் வந்தார்கள்.

'எப்படிடா அந்த படம் உனக்கு கிடைச்சது' என்றான் மனோகர்.

'எல்லாம் தல்லாகுளம் குமாரும், எஸ் பி கோகுலும் நானும் சேர்ந்து செஞ்சதுடா. இந்த விஷ்ணு ரொம்ப மோசமானவன், இவனால குமாருக்கு ரொம்ப கெட்ட பேரு. இவனாலதான் இந்த ஹோட்டலையே விற்கிற நிலைமைக்கு எஸ் பி கோகுலு போனான். இவனை எப்படி பிஸினஸ்ல இருந்து கழட்டி விடலாம்னு யோசனை பண்ணினப்ப நாங்க சேர்ந்து தீட்டின திட்டம் இது. நல்லாவே வொர்க் அவுட் ஆயிருச்சி. இனி குமார் மத்ததைப் பார்த்துப்பான்' என்றான் பாலா.

'படத்தை எடுத்தீட்டீங்க, கதை எழுதற நினைக்கிறவங்க கதி?' என்றான் ரமேஷ்.

'அதோகதிதான்' என சிரித்தான் பாலா.

'இந்தாடா ரமேஷ், பத்தாயிரம் வைச்சிக்கோ, கதை எழுதாமலேயே உனக்கு பரிசு கிடைச்சிருச்சி' என்றான் மனோகர்.

அருகில் இருந்த மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுவன் 'சரியான போங்காட்டம்டா' என மற்ற சிறுவர்களை நோக்கி சத்தம் போட்டு கொண்டிருந்தான்.





Friday 7 October 2011

வாகை சூட வா

தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட காலத்தில் என்ன சொல்வது? படம் வெளியாகி  அனல் குறையாத பட்சத்தில் கொஞ்சம் கூட பிசகு இல்லாமல், தரம் குறையாமல் படத்தினை இணையத்தில் வெளியிட்டுவிடுகிறார்கள். இதன் காரணமாக திரையரங்குக்கு சென்று படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைகிறது என்பதோடு இதனால் கணிசமான லாபத்தை படத் தயாரிப்பாளர்கள் முதற்கொண்டு திரையரங்கு முதலாளிகள் என பலரும் இழந்து விடுகிறார்கள்.

அதோடு மட்டுமில்லாமல் திருட்டு குறுந்தகடு என படங்கள் வெகு எளிதாகவே கிடைத்துவிடுகின்றன. இத்தனை இடர்பாடுகளுக்கு இடையில் ஒரு நல்ல திரைப்படம் அதுவும் பெரிய பெரிய நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என இல்லாமல் உருவாக்கப்படும்போது மக்களுக்கு மத்தியில் நல்ல பெயரை எடுத்தாலும் பெரிய அளவில் வியாபாரம் செய்ய இயலாமல் போவது மிகவும் துரதிர்ஷ்டமானது. இதை தடுக்கும் முயற்சிகள் என மேற்கொண்டாலும் எப்படியாவது இந்த நிகழ்வுகள் நடந்தேறி விடுகின்றன.

இலவசமாக கிடைக்கிறது என்றால் எவருக்குத்தான் கொண்டாட்டம் இருக்காது. மேலும் இலவசம் இலவசம் என பலவற்றை கொடுத்து மனிதர்களை பிச்சைகாரர்களாக்கி வைத்திருக்கும் அரசு எல்லா நாடுகளிலும் அதிகமாகவே இருக்கத்தான் செய்கிறது. பொருளை இலவசமாக கொடுப்பதை விட, கல்வியை இலவசப்படுத்தும் வசதியை உலகில் உள்ள எல்லா நாடுகளும் கொண்டு வர இயலுமா என்றால் அது அத்தனை சாத்தியமில்லை.

கல்வியை கற்பிக்கும் ஆசிரியருக்கு பணம் எங்கிருந்து வரும்? கல்வியை கற்று தரும் பள்ளிக் கூடங்கள் கட்ட பணம் எங்கிருந்து வரும் என ஒட்டு மொத்த தமிழகமும் கல்வியை மாபெரும் வியாபார கூடங்களாக மாற்றி வைத்திருப்பது இன்று நேற்றல்ல பல வருடங்களாகவே நடந்து கொண்டுதான் வருகிறது. பணம் இருந்தால் படிப்பு என்றாகிப் போனது. கல்வியா, செல்வமா, வீரமா என கேட்கப்பட்ட நாட்களிலிருந்து ஒன்றில்லாமல் மற்றொன்று நிலைப்பது கடினம் என சொன்னாலும் பொருளாதாரத்தில் பின் தங்கிப் போனால் இவ்வுலகம் இல்லை என்பதுதானே நிதர்சனம். இரண்டாயிரம் வருடங்கள் முன்னரே இந்த நிலைமைதான், பொருளிளார்க்கு இவ்வுலகம் இல்லை.

வாகை சூட வா எனும் ஒரு அழகிய தமிழ் திரைப்படம். காலம் காலமாக சொல்லப்பட்டு வரும் 'அடிமைபட்டுப் போன மக்கள்'. இந்த மக்களின் உழைப்பை சுரண்டும் முதலாளிகள். வயிற்றுப் பிழைப்புக்காக வாழும் மக்களிடம் போராட்ட குணம் இருப்பதில்லை, அடிமைபடுத்தபட்டு இருக்கிறோம் என்கிற ஒரு எண்ணம எழுவதில்லை. ஆனால் விசுவாசம் மட்டுமே மிஞ்சி இருக்கும். அத்தகைய விசுவாசத்தினை தனது வசமாக்கி கொள்ளும் முதலாளிகள் மட்டுமே மிச்சம்.

ஒரு திரைப்படம் எப்படி எடுக்க வேண்டும், எப்படி எடுக்க கூடாது என்கிற வரைமுறை எல்லாம் எவருக்கு வேண்டும் என்கிற தமிழ் திரைப்பட உலகில் இதுபோன்ற திரைப்படங்கள் அவ்வப்போது தலைகாட்டுவது மிகவும் சிறப்பான விசயம் தான்.

இந்த படத்தை பார்க்கும்போது இது போன்ற கிராமங்கள் இன்னும் இருக்கின்றனவா என்று கேட்டால் ஆமாம் என்று தைரியமாக சொல்லலாம். அங்கொன்று இங்கொன்றுமாக அடிப்படை வசதிகள் எதுவுமின்றி இருக்கத்தான் செய்கின்றன. படத்தின் காலகட்டம் வேறாக இருந்தாலும் இன்னும் குழந்தை தொழிலாளிகளை சுமந்து கொண்டிருக்கும் கிராமங்கள் மிகவும் அதிகம். எதற்கும் பனியன் விற்கும் தொழிற்சாலை நகரத்திற்கோ, பட்டாசு தொழில் அதிபோகமாக நடக்கும் சிவகாசி சுற்றியுள்ள ஊருக்கோ சென்று வந்தால் தெரியும்.

'காசு வித்து பாத்துராதண்ணே' என ஒரு செங்கல் சுமக்கும் சிறுமியின் ஓலத்தை ஒரு கவிதையில் எழுதியது இன்னமும் ரணமாகவே இருக்கிறது. இப்படி வறுமையில், அறியாமையில் தவிக்கும் குழந்தைகளை நினைக்கும்போது ஒவ்வொரு மனமும் என்னத்த சம்பாதிச்சி சாதிச்சோம் என நினைத்தாலும் திரைப்படம் முடிந்துவிடும்போது எல்லாம் முடிந்தது போலாகி விடுகிறது.

அழகாக கதாபாத்திரங்களை கையாண்டு இருக்கும் இயக்குனரை மிகவும் பாராட்டலாம். பழைய கணக்கு எல்லாம் தொலைந்து போய்விட்டது. விடுகதை, கணக்கு கதை என மிகவும் அதி புத்திசாலிகளாக பலர் அன்றைய காலகட்டத்தில் எவ்வித தொழில் நுட்பம் இன்றி இருந்தது உண்டு. மிகவும் சிந்திக்க வைக்கும் செயல்களை செய்தார்கள். இந்த திரைப்படத்தில் காட்டப்படும் ஒரு வயதான கதாபாத்திரம் போன்ற மனிதர்கள் வாழ்ந்தார்கள், அவர்கள் இன்னமும் எங்கேனும் இருக்க கூடும் அல்லது நாம் தொலைத்து விட்டிருக்க கூடும். அரைக்கால், முக்கால், அரையணா என பல விசயங்கள் நம்மை விட்டு தொலைந்து போனது, நமது கலாச்சாரம் தொலைந்து கொண்டிருப்பதை போல.

நகைச்சுவை என திரைப்படத்தில் தனி கதாபாத்திரம் என வைக்கப்படும் பெரும்பாலான திரைப்படங்களை விட, எல்லா கதாபாத்திரங்களுக்குள் நகைச்சுவை உண்டு என்று மிகவும் அழகாக சொன்னவிதம் பாராட்டலாம். எப்பொழுதுமே சிறுவர்கள் நடிக்கும் படங்கள் பெரியவர்களின் மனதினை ஒரு ஆட்டு ஆட்டி வைத்துவிட்டு போகும். உளவுரீதியாக நாம் அனைவரும் நமது பாலர் பருவ நிலைக்கு செல்லும் மனநிலை நம்மை சேர்வது உண்டு. நான் சின்னப்பையனா இருந்தப்போ... அந்த நினைவுகள் மிகவும் தாலாட்ட கூடியவை. இப்பொழுது இருக்கும் சிறுவர்களுக்கு அதுவும் குறிப்பாக நகர வாழ் சிறுவர்களுக்கு அந்த அனுபவம் குறைந்து போனதாகவே இருக்கும்.

அறிவாளியாக இருப்பதை விட ஏமாற்றப்படாத வெகுளியாக வாழ்வதில் இருக்கும் சுகம் தனி சுகமே. கதாநாயகன், கதாநாயகி என ஒரு மெல்லிய காதலை சுகமான பாடல் மூலம் வெளிப்படுத்தும் விதம் தனிச்சிறப்பு.

கிராம வளர்ச்சி என ஒரு சிறுகதை எழுதியபோது மனதில் ஏற்பட்ட வலி இந்த திரைப்படத்தினை பார்க்கும் போது வந்து போனது. ஒவ்வொரு படைப்பாளியும் தனக்குள் மாபெரும் ஏக்கத்தினோடு வாழ்ந்து கொண்டிருக்கிறான். அவனது ஏக்கங்கள் எழுத்து வடிவாகவோ, படங்கள் மூலமாகவோ வெளிப்பட்டு கொண்டிருக்கின்றன. ஆனால் பிரச்சினைகள் அத்தனை எளிதாக தொலைவதில்லை.

ஊருக்கெல்லாம் பள்ளிகள் கட்டிய காமராசர், படிக்க வா என பசி போக்கிய காமராசர்... இப்பொழுது பெரும்பாலானோர் பணம் கட்டி படிக்க வைக்கிறார்கள் எதை எதையோ தொலைத்துவிட்டு. இதனால் படித்தவர்கள் தங்களையே தொலைத்து விடுகிறார்கள்.

படத்தில் சொல்லப்படும் ஒரு வசனம் 'விவரம் கெட்டவன்' இந்த வாசகத்திற்காகவே தைரியமாக தான் நினைப்பதை செய்ய முடியாத பலர் பயந்து ஒதுங்கிப் போனார்கள்.

படிப்பறிவு அனைவரும் பெறட்டும், படிப்பறிவு என்பது என்ன என்பதை படித்தவர்களும் தெளியட்டும்.

இவ்வுலகம் இருளால் ஆனது, பொருள் எனும் இருளால் ஆனது. இந்த இருள் போக்கவேண்டிய கல்வியும் இருளில் மூழ்கிப் போனதுதான் இவ்வுலகம் கண்ட மாபெரும் துயரம்.

பாராட்டுகள். வாகை சூட வா. அழைத்து கொண்டே இருப்போம். எவரேனும் தென்படுகிறார்களா? 

Wednesday 5 October 2011

தடைகற்கள்

பாதையில் பல கற்கள்
போதையில் விழுந்தவனை போல
தடுமாறி கிடக்கின்றன
தள்ளி வைப்பார் எவருமில்லை

கற்களால் குத்துபட்டோ வெட்டுபட்டோ
கடந்து சென்றவர்கள் மிச்சம்
கற்களை கடத்தி வைத்தவர்கள்
கொஞ்சம் கூட மிச்சமில்லை

தடைகற்கள்தனை பிறர் தாண்டிய விதம்
தாண்டுவோரை மலைக்க வைப்பதில்லை
வெட்டுபட்டும் குத்துபட்டும்
கடந்து கொண்டே இருக்கிறார்கள்

தடைகற்கள் அகற்றுவதாய்
சாமியும், சாமி துதிபாடும் பூசாரியும்
தலைவரும், தலைவர் துதிபாடும் தொண்டரும்
மனிதர்களில் குறைச்சல் இல்லை

தடைகற்கள்தனை பொடிப்பொடியாய்
உடைத்துப் போட்டாலும்
தடைகற்கள் தடைகற்களாய்
உடை உடுத்தி கொள்தல் அபாயமோ!

Saturday 24 September 2011

தூக்கு தண்டனை வேண்டாமெனும்

இதுவரை மனித அறிவிற்கு எட்டியவரை இந்த உலகத்தில் பூமியில் தவிர வேறு கிரகங்களில் ஜீவராசிகள் இருப்பதாக தெரியவில்லை. இருப்பினும் பூமியை போலவே வேறு கிரகங்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும், சில கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் உண்டு, அந்த கிரகங்களில் ஜீவராசிகள் இருக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் நம்புகிறார்கள். ஆனால் இதுவரை எந்த ஒரு தடயமும் கிடைக்கவில்லை. 

இப்படியொரு அரிய வாய்ப்பினை பெற்ற பூமியில் நிம்மதியாக வாழ்ந்து விட வேண்டும் என்கிற முனைப்பு பலரிடம் இருப்பதாக தெரியவில்லை. ஏதாவது பிரச்சனைகளை உருவாக்கி கொள்கிறார்கள் அல்லது சிக்கி கொள்கிறார்கள். இப்படிப்பட்ட கட்டுக்குள் அடங்காத வாழ்க்கையில் இப்படி வாழ்வதே பெரும் சுவாரஸ்யமாக இருக்கிறது என்கிறார்கள் பலர். 

பொருளாதார சரிவு ஒருபுறம். தொலைந்து போகாத தீவிரவாத போக்கு ஒரு புறம் என இந்த பூமி தொடங்கிய தினம் முதல் இதுவரை பல இன்னல்கள் மறையவில்லை. சமுதாய மாற்றம் என்பது அத்தனை எளிதாக நடைபெறும் எனும் கனவு கனவாகவே இருக்கப் போகிறதோ எனும் அவ நம்பிக்கை வந்து போகிறது. 

திருடர்கள், கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்கள் என அனைவருமே இந்த வாழ்க்கையில் மிகவும் எளிதாக தப்பிவிடுகிறார்கள். இவர்கள் அத்தனை எளிதாக பிடிபடுவது இல்லை, இவர்களுக்கு கிடைக்கும் இந்த சுதந்திரமே தொடர்ந்து தவறுகள் நடைபெற்று வருவதற்கு காரணமாகும். ஹசாரே ஒவ்வொரு அதிகாரிகளின் வீடு சென்று ஊழல் செய்கிறார்களா என ஆராயவாப் போகிறார், வேண்டா வெறுப்பாக மசோதா இயற்றிய அரசு கடுமையாக நடந்து கொள்ளத்தான் போகிறதா? இப்படித்தான் மொத்த உலகமும் திண்டாடி கொண்டிருக்கிறது. 

போதை பொருள் விற்பனை என ஒரு பக்கம் கோடி கோடியாக சம்பாதிக்கும் கயவர்கள் கூட்டம், தெரிந்தே தவறு நடந்து கொண்டிருக்கிறது. இதை கண்டு கொள்ளும் நிலையில் நாம் இல்லை என்பதுதான் ஆச்சரியம். 

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் கொலை நடந்து வருடங்கள் உருண்டோடி விட்டன. அவரின் உயிர் எடுக்கப்பட்ட விதம், அவரின் உயிர் எடுக்கப்பட வேண்டிய அவசியத்தின் காரணம் என நியாயங்களும், எதிர் விவாதங்களும் என பிரிந்து நின்றவர்கள் பற்றி நினைக்கும்போது இவர்களும் வாழ்கிறார்கள் என்கிற நினைப்பு மட்டுமே எஞ்சி நிற்கும். தவறு செய்ய திட்டமிட்டவர்கள், தவறு செய்ய துணை போனவர்கள் என தெரிந்தும் நியாயம், அநியாயம் என விவாதிக்கப்பட்டு சட்டம் என ஒரு தீர்ப்பு எல்லாம் சொன்ன பிறகும் அநியாயம், நியாயம் என பேசி கொண்டிருப்பவர் பற்றி நினைக்கும்போது இவர்கள் எல்லாம் எப்படிப்பட்டவர்கள் எனும் நினைப்பு மிஞ்சி நிற்கும். 

பொது விவாதம் எல்லாம் முள்ளுக்கு முள் சரியா என்பதுதான். கொடுமைகள் செய்ய கொஞ்சமும் பயம் இல்லாத, எதைப்பற்றியும் கொஞ்சமும் சிந்திக்காத இந்த உலகில் உலா வந்து கொண்டிருக்கும் பல அர்த்தமற்ற பிறப்புகள் பற்றிய சிந்தனை அவசியமில்லாததுதான். 

இலங்கை மாநகரில் தீவிரவாத கொடுமைகளால் கொல்லப்பட்ட உயிர்கள் எத்தனை? அத்தனை உயிர்களை பறித்த மன சாட்சியே இல்லாத ராணுவ வீணர்கள் எந்த சவ சட்டத்திடம் அனுமதி பெற்றார்கள்? அத்தனை கொடுமைகளையும் நிறைவேற்றிய பின்னரும் கொக்கரித்துக் கொண்டிருக்கும் கேவல பிறப்புகள் இன்றும் உலகில் உலா வருகிறதே? அந்த பிறப்புகளுக்கு  உலக அமைப்பு தூக்கு தண்டனை தர வேண்டும் என தீர்மானித்தால் இவர்கள் என்ன சொல்வார்கள் என்றுதான் பார்க்க வேண்டும்! ஒவ்வொருவருக்கும் தான் செய்கிற காரியத்திற்கு அவர்களுக்கு ஏற்றார் போல் ஒரு காரணம் இருக்கத்தான் செய்யும், தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். 

உலகில் மிக அதிகமான மக்கள் சூழ்நிலைகளால் தவறு செய்கிறார்களாம். ஆனால் சூழ்நிலைகளை காரணம் காட்டி பிற உயிர்களை பறிக்கும் உரிமை எவருக்குமே இல்லை என வீர வசனம் பலருக்கும் அத்துப்படி. அப்படி பிற உயிர்களை பறிக்கும் கொடுமைகளை செய்ய துணை நிற்கும், பிற உயிர்களை எடுத்து தொலையும் மற்ற உயிர்கள் இவ்வுலகில் இருக்கவேண்டும் என்பதெல்லாம் அவசியம்தானா என்பதற்கான விவாதம் கூட தேவை இல்லை. 

திருத்தப்படாத சட்டம், திருந்த முடியாத வட்டம். 

எவராவது எழுதலாம் தூக்கு தண்டனை வேண்டுமெனும் என. 


Monday 12 September 2011

கொலைகார பாதகர்கள்

'அரசியல்' இல்லாத உலகம் ஒன்று உருவாக்கப்படுமானால்... அது எப்படி இருக்கும் என்பதை யூகம் செய்வது அத்தனை எளிதில்லைதான். ஆனால் இன்றைய அரசியல் கலந்த வாழ்க்கை கலப்படம் மிக்கதாகவே இருக்கிறது என்பதை யூகம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை, அதனை கண்கூடாகவே நாம் பார்த்து கொண்டிருக்கிறோம்.

போராட்டம் என்கிற பொதுப் பெயரில் நடத்தப்படும் சூறையாடல்கள் மனிதகுலத்திற்கே ஒரு ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும். இதனால் ஏற்படும் உயிர் இழப்புகள் முதற்கொண்டு எல்லா இழப்புகளும் இளக்காரமாகத்தான் இதில் ஈடுபடுவோருக்கு தெரிகின்றன. இவர்கள் எதை சாதிக்க நினைக்கிறார்கள் என்பதுதான் புரியாத புதிர்.

சாதி! இனம்! நிறம்! கட்சி! மொழி என மனிதர்கள் கொண்டிருக்கும் பாகுபாடுகள் தரும் இன்னல்கள் அளவுக்கு அதிகமானவை. அவ்வப்போது இந்த தொடர் அவமானங்கள் ஏதாவது ஒரு பெயரில் நிகழ்த்தப்பட்டு கொண்டே வருகின்றன. இதனை தடுக்கும் தலைவர்களைவிட முடுக்கி விடும் தலைவர்களே அதிகம் என்கிறது எழுதப்படாத வரலாறு. இதுதான் அரசியல் என்கிறார்கள்.

'பிரித்து வைத்து ஆள்வது' என்பதுதான் உலகின் தாரக மந்திரம். மானிடர்கள் எண்ணங்களால் பிரிந்து கிடக்கிறார்கள், அதனால் மனித குலமே சரிந்து கொண்டிருக்கிறது. இப்பொழுது சாதி எதற்கு? என்று கேள்வி கேட்டால் சாதிக்கு என்று குலத்தொழில் இருக்குமாம். அந்த குலத்தொழில் தொலைந்து போகாமல் இருக்க இந்த சாதி தொடருமாம். பொருளாதாரம் மட்டும் அனைவருக்கும் சமமாக இருந்துவிட்டால் இந்த சாதி தொழில் தொலைந்து போயிருக்கும் எனபதை எத்தனை உறுதியாக சொல்ல இயலுமோ தெரியாது. இந்த சாதியினால் மட்டுமே பல பரம்பரை விசயங்கள் இன்னும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன என எவராலும் உறுதியாக சொல்லவும் இயலாது. பொருளாதாரம் நிறைவான நாடுகளில் கூட ஏதவாது ஒரு வகையில் பிரச்சினைகள் தலை தூக்கி கொண்டே இருக்கின்றன.

எத்தனையோ காரணங்கள் சொல்லப்பட்டாலும், வேலை இல்லாத வெட்டி வீணர்களால், வாய்சவடால் மட்டுமே பேச தெரிந்த அரசியல் கட்சி தலைவலிகளால் சாதாரண மக்கள் படும் துயரங்கள் அளவிட முடியாதவை.

வலியவன் எளியவனை எள்ளி நகையாடுதல் ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வரும் கோர சம்பவம். உரிமைகளை தொலைத்துவிட்டு அடிமையாக ஒடுக்கப்பட்ட சமுதாயம் உலகெங்கும் இருக்கத்தான் செய்கிறது.  வேலை செய்ய பிடிக்காத ஒரு சமூகம். வேலை செய்தும் தகுந்த கூலி பெற இயலாத சமூகம் என சீழ் பிடித்து போன சமூகத்தில் நடைபெறும் அவலங்களை துடைத்தெறிய அவ்வப்போது தலைவர்கள் உருவாக்கப்படுவது உண்டு. அவர்கள் 'அந்த இனத்திற்காக, அந்த சாதிக்காக போராடுவார்கள். இப்படி எனது சாதி, எனது இனம் என போராடிய காரணத்தினால் தான் இன்னும் பிரிவினை தொடர்ந்து கொண்டிருக்கிறது. மனித இனம் ஒன்று என்கிற ஒரு உணர்வு ஓங்கி இருந்து இருக்கேமேயானால்... ஆருடம் சொல்ல வேண்டிய அவசியம் எதுவும் இல்லை.

வன்னியர்க்கு என்று ஒரு அரசியல் கட்சி தொடங்கியவன், முக்குலத்தோர்க்கு  என ஒரு அரசியல் கட்சி தொடங்கியவன், தலித்துகளுக்கு ஒரு கட்சி தொடங்கியவன், தமிழனுக்கு, தெலுங்கனுக்கு, கொங்கனுக்கு என அரசியல் கட்சி தொடங்கியவன் மனிதத்தை அழிக்க கட்சி தொடங்கியவனே. இவன் எப்படி ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்க இயலும் என எதற்கு எவரும் சிந்திப்பதில்லை. இவனை பின்பற்ற பல உணர்வற்ற சடங்கள். இவனைப் போன்றோர் கொள்வதெல்லாம் பிற சமூகத்தின் மீதான காழ்ப்புணர்ச்சி மட்டுமே அன்றி நிச்சயம் ஒரு மாற்றுக்கு என கொள்ள இயலாது. ஒரு கட்சியானது, அமைப்பானது மொத்த மக்களுக்கு என தொடங்கப்பட வேண்டும், அதில் பிரிவினை எல்லாம் இருத்தல் கூடாது. அதைப்போலவே மிக சிறந்த கொள்கைகளும், நேர்மையான செயல்பாடுகளும் உடைய ஒரு பாதையை பின்பற்றும் மக்கள் அதிகரிக்க வேண்டும். ஆனால் திருட்டு உலகில் குருட்டுத்தனம் மட்டுமே மிச்சம்.

சக மனிதரை மதிக்க தெரியாத பாதகர்கள் உலகில் இருக்கும் வரை அறிக்கைகளும், துப்பாக்கி சூடுகளும் குறைவில்லாமல் அவ்வப்போது நடந்து கொண்டேதான் இருக்கும். மத வெறியர்கள், சாதி வெறியர்கள், நிற வெறியர்கள் என அழைக்கப்படுபவர்கள் எல்லாருமே மனித வெறியர்கள்.
சாதியை அழித்தால், சாதி வெறியர்களை அழித்தால், மதத்தை ஒழித்தால், மத வெறியர்களை ஒழித்தால், நிறத்தை கலைத்தால், நிற வெறியர்களை கலைத்தால் இந்த சமுதாயம் திருந்திவிடும் என்பதெல்லாம் வெறும் கனவு. மனிதர்களின் எண்ணங்கள் மேம்பட வேண்டும். அது ஒன்றுதான் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு.

'ஆடத் தெரியாதவனுக்கு தெரு கோணல்' வாழ தெரியாதவனுக்கு எல்லாமே கோணல்' அப்படித்தான் இந்த உலகில் இன்னும் பலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பரிணாம வளர்ச்சியில் முயலுக்கு கூட மூன்று கால் சாத்தியமாகலாம், குதிரைக்கு கூட கொம்பு முளைத்துவிடலாம் ஆனால் இந்த மனித வெறியர்களின் வழித் தோன்றல்கள் திருந்துவது என்பது சாத்தியமே இல்லை என கறைபடிந்து காட்டி கொண்டிருக்கிறது வரலாறு.

அன்று மன்னர்கள் கொன்று வென்ற காலங்கள், இன்று மாக்கள்கள் கொன்று மடியும் கோலங்கள்.

கொலைகார பாதகர்கள்!







Wednesday 31 August 2011

அஹம் பிரம்மாஸ்மி அப்படின்னா

எதற்கு ஒரு நிகழ்வு நடக்கிறது என்பதற்கான பரிசோதனை ஒன்றை நடத்திப் பார்த்தோமானால் அது நமது எண்ணங்களினால் கட்டப்பட்ட ஒரு விசயம் என ஒதுக்கிவிட இயலவில்லை. அதனையும் தாண்டிய ஒரு உணர்வு ஒன்று இருந்து கொண்டே இருக்கும், அது என்னவென விளக்கவும் இயலாது. அதனை விளங்கிக் கொள்ளும் பொருட்டு நமது முயற்சியில் வெற்றி கிடைத்தால் இந்த 'அஹம் பிரம்மாஸ்மி' வந்து அங்கே நிற்கும்.

ஒரு மனிதன் பிறந்த பின்னர் கடவுளை உணர்கிறாரா? அல்லது மனிதன் பிறக்கும் முன்னரே கடவுளை உணர்ந்து இருக்கிறாரா? அல்லது அந்த மனிதன் இறந்த பின்னரும் கடவுளை உணர்ந்து கொண்டிருக்கிறாரா? 

மேற்குறிப்பிட்ட இந்த மூன்று கேள்விகளை சிந்தித்துப் பார்த்தால் மனிதன் உயிரோடு இருக்கும்போது மட்டுமே கடவுளை உணர்வதாகத்தான் பலரும் அறிவார்கள், பலரும் புரிந்து கொள்வார்கள். ஆனால் 'அஹம் பிரம்மாஸ்மி' எனும் சொல்லானது இந்த மூன்று கேள்விக்கு பதிலாக அனைத்து நிலைகளிலும் கடவுள் உணரப்பட்டு கொண்டேதான் இருக்கிறார் என்பதாகும். 'உணர்வற்ற நிலையிலும் உன்னை உணர்வதற்கு நிகரேது' இதுதான் ஒரு கவிதையில் கடவுள் குறித்தான சிந்தனை எனக்குள் எழுந்தது. 

இதைத்தான் மாணிக்கவாசகர் 'எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன்' என்கிறார். இவ்வுலகம் என்பது உயிரினங்களுடன், உயிரற்ற பொருள்களினாலும் ஆனது. ஒரு உயிர் எப்படி படைக்கப்பட்டு இருக்கும், அல்லது உருவாகி இருக்கும் எனப் பார்த்தால் நிச்சயம் உயிரற்ற பொருள் ஒன்றில் தான் இந்த உயிர் இருந்து இருக்க வேண்டும் என இந்த ஒரு விசயத்தை தெளிவுப்படுத்திக் கொண்டோமானால் 'அஹம் பிரம்மாஸ்மி' மிகவும் தெளிவாகும். 

'தோன்றாப் பெருமையனே' என கடவுளை விளிக்கும் பொருட்டு இவ்வுலகில் கடவுள் தோன்றவே இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளும் வேளையில், 'தூணிலும் இருக்கிறார், துரும்பிலும் இருக்கிறார்' எனும் வாசகமானது கடவுள் தோன்றவில்லை என்பதை மிகவும் உறுதிப்படுத்திக் கொள்ளலாம், அதே வேளையில் கடவுள் எல்லாவற்றிலும் இருக்கிறார் என்பதையும் தெளிவுபடுத்திக் கொள்ளலாம். அந்த தெளிவு கொண்டுவருவதுதான் 'அஹம் பிரம்மாஸ்மி' 

'அஹம் பிரம்மாஸ்மி' ஒருவர் தன்னைத்தானே கடவுள் என சொல்லிக்கொள்ளும் விதம்தனை அகந்தை என கொள்வோர் உண்டு. காரணம் கடவுள் என்பதற்கான விளக்க நிலைகள் வெவ்வேறு. ஒரு மனிதர் கடவுள் ஆக இயலாது, ஆனால் கடவுள் மனிதரில் இருப்பது என்பதை மாற்ற இயலாதது. இந்த ஒரு தெளிவு கிடைத்துவிட்டால் அதுதான் 'அஹம் பிரம்மாஸ்மி' 

மேலே எழுதிய பல விசயங்கள் தெளிவு தருவது போல் இருக்கும், ஆனால் சில தினங்களில் அந்த தெளிவு தொலைந்து போகும், இதுதான் வாழ்க்கையின் மாபெரும் சூட்சுமம். 'தெளிந்த பின், தெளிந்ததில் தெளிவில்லை என திரும்புவானோ' இந்த வாசகம் ஒரு கதையில் நான் ஒரு கதாபாத்திரத்திற்கு வைத்தது. இது எல்லாருக்கும் பொருந்தி போகக்கூடும்!

ஒரு எழுத்தாளர் எப்பொழுது வெற்றி பெறுகிறார் என்றால் வாசிக்கும் வாசகர் தன்னை அந்த எழுத்தில் தன்னை வைத்து பார்க்கும்போதுதான் என சொல்வார்கள். ஆனால் உண்மையிலேயே அந்த நிலையானது ஒரு இருள் நிலை தான். ஆனால் வாசகர் தனது மனதில் அந்த அந்த சூழலாகவோ, கதாபாத்திரமாகவோ மாறுகிறார். இங்கே வருவதுதான் 'அஹம் பிரம்மாஸ்மி' . வாசகர் நிச்சயமாக அந்த கதாபாத்திரமாக மாற இயலாது, ஆனால் அந்த கதாபாத்திரம் அந்த வாசகரில் எங்கேனும் ஓரிடத்தில் இருக்கலாம் என்பதுதான் தெளிவு. 

'அஹம் பிரம்மாஸ்மி' இதனை 'நானே கடவுள்' என அர்த்தப்படுத்துவதை விட 'என்னிலும் கடவுள் இருக்கிறார்' என்பதுதான் சரியாக இருக்கும். 

'நானே கதாபாத்திரம்' என ஒரு எழுத்தில் நம்மைப் பார்ப்பதைவிட 'இந்த கதாபாத்திரமும் என்னில் இருக்கிறது' என்பது மிகச் சரியாக இருக்கும்.

'அஹம் பிரம்மாஸ்மி'

Wednesday 17 August 2011

அன்னா ஹசாரேவாம் உஷார்

கடையில போய் வெல்லக்கட்டி வாங்கிட்டு வாப்பா என அம்மா சொல்லும்போதே பத்து பைசாவை சரிகட்ட வேண்டும் என நினைக்கும் பிள்ளைகள் கொண்ட தேசம் இது.

தனக்கு வேலை செய்பவன் கூலி வாங்குவதோடு மட்டுமின்றி கொத்தடிமையாக இருக்க வேண்டும் என நினைக்கும் முதலாளிகள் உள்ள தேசம் இது. ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என இலவசமாக தருவதுபோல் தந்து பணம் குவிக்கும் வியாபாரிகள் கொண்ட தேசம் இது.

ஆட்சிக்கு வந்த விதமே மக்களுக்கு அடுக்கடுக்காக பணம் தந்துதான், அதை வாங்கி பதுக்கி கொண்ட மக்களா ஊழலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள்? தான் கொடுப்பதை மட்டுமே வெறுக்கும் மக்கள், தாங்கள் பெரும் போது சிந்திப்பதும் இல்லை.

ஊழல் என்பது இரண்டு பக்கமும் நடப்பது. ஒருவர் கொடுப்பது, மற்றொருவர் வாங்குவது. கொடுப்பவர் இல்லாமல் போனால் வாங்குபவர் எப்படி இருக்க இயலும்?

உண்ணாவிரதம் கூட ஒருவகை ஊழல் தான். ஒன்றை நிலைநாட்ட இன்னொரு விசயத்தை கையாள்வது ஊழல் தான். இத்தனை வருடமாக பாரத தேசத்தில் ஊழல் இல்லாமலா இருந்தது? இப்பொழுது மட்டும் ஊழல் ஊழல் என உரக்க சத்தமிட.

இந்த ஊழலை ஒழிக்க ஒரே வழி உண்டு. அந்த வழி எப்போதும் சாத்தியமும் இல்லை. பத்து ரூபாய் கொடுத்தால் வேலை நடக்கும் என தெரிந்தால் பத்து ரூபாய் தரத்தான் மக்கள் காத்து இருக்கிறார்கள், இந்த வேலை நடக்காவிட்டால் கூட பரவாயில்லை, பணம் தரமாட்டேன் என போகும் மக்கள் வெகு வெகு குறைவு. லஞ்சம் தராதவர்களை இளிச்சவாயர்கள் என பேசும் மக்கள் இருக்கும் வரை லஞ்சம் ஒழியாது.

கிசன் பாபுராவ் ஹசாரே. இவர் அன்னா ஹசாரே என அழைக்கப்படுகிறார். ஊழல் எதிர்ப்பு சட்டத்தை நிறைவேற்ற ஏப்ரலில் நான்கு நாட்கள் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார். ஏப்ரல் முதல் தினம் முட்டாள் தினம் என்றால் ஏப்ரல் மாதம் முழுவதுமே முட்டாள் மாதம் தான், அது எதற்கு, முன்னூற்றி அறுபத்து ஐந்து நாட்களும் முட்டாள்கள் தினம்தான் இந்தியாவில். சட்டத்தை போட்டுத்தான் ஒன்றை தடுத்து நிறுத்த வேண்டும் என நினைத்தால் ஓரளவு அவ்விசயம் குறையுமே தவிர, முற்றிலுமாக குறையாது என்பதுதான் நாட்டில் நடந்து வரும் கொலைகளும், குற்றங்களும் காட்டும் சாட்சி. ஊழல் எதிர்ப்பு சட்டம் வலிமை படுத்த வேண்டுமாம்.

உனக்கும் எனக்கும் மட்டும் தெரியட்டும் என ஊழல் நடந்தால் எவர் அதை தடுப்பது, ஆதாரமில்லாமல் நடத்தப்படும் ஊழல்களை எவர் நிறுத்துவது. ஊழல் செய்யாமலே ஊழல் செய்தார் என பொய் குற்றச்சாட்டுகள், ஊழல் செய்தார் என தெரிந்தும் பல வருடமாக நீதிக்குள் சிக்காமல் வளைந்து செல்வது என்பதெல்லாம் எப்படி? அதுதான் இந்திய தேசம். உயரத்திலும் தன்னை காண்பிக்கும், தாழ்வதிலும் தன்னை காண்பிக்கும். முரண் கொண்ட தேசம்.

கிட்டத்தட்ட நாற்பத்தி இரண்டு வருடங்கள் முன்னாள் கொண்டு வரப்பட்ட ஊழலை ஒடுக்கும் சட்டம் இன்னமும் இந்த இந்திய திருநாட்டில் நிறைவேற்றப்பட முடியவில்லையெனில் காரணம் என்ன? திருடர்களிடமே திருடாதே என சொன்னால் எந்த திருட்டு பயல் தான் காது கொடுத்து கேட்பான்.

இந்த அரசு இதை நிறைவேற்ற வில்லையென கூக்குரலிடும் பா ஜ க எனும் பசுத்தோல் போர்த்திய குரங்கு தான் அரசு நடத்திய போது இதை பற்றியே தெரியாதா?  மக்கள் மடையர்களாக இருக்கும் வரை மடையர்கள் ஆட்சியை நடத்தத்தான் செய்வார்கள். கேடு கெட்ட தேசம்.

இந்த மசோதா எத்தனை முறை மாற்றம் செய்யப்பட்டது. திருடுபவனுக்கு தோதாக ஒரு சட்டம் வேண்டுமெனில் அதை எழுதாமலே இருக்கலாமே. அப்படித்தான் பல வருடங்களாக இந்த மசோதா தள்ளப்பட்டு வந்திருக்கிறது. இப்படியொரு மசோதா இருப்பதே பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவரவர் வேலை நடக்க வேண்டும் என இருப்பவருக்கு இதெல்லாம் எதற்கு.

சாமான்ய மக்களின் குறைகளை கூறியே தனக்கு குறை இல்லாமல் பார்த்து கொண்ட தலைவர்கள் வளர்ந்து வரும் தேசம் இது. அதோடு மட்டுமின்றி தனக்கு வசதி வேண்டுமெனில் கறை படியாத கைகள் என உரைகள் கூறி , உறைகள் மாட்டி திரியும் மக்கள் கொண்ட தேசம் இது.

அன்னா ஹசாரே, நீங்கள் உண்ணாவிரதம் இருக்க எவரும் உங்களுக்கு பணம் தரவில்லையே? என கேட்கும் நாக்கு கொண்ட பூமி இது.

காசு கொடுத்ததும் கூவும் கூட்டம். காசு கொடுக்காமலே சில நேரங்களில் கூவும்.

அன்னா ஹசாரே, உங்கள் போராட்டம் எல்லாம் சரிதான், அதை அடித்தட்டு மக்களிடம் இருந்து தொடங்குங்கள். உங்கள் கூட்டத்தில் இருப்பவர்களின் மனசாட்சியை தொட்டு கேட்க சொல்லுங்கள்.

தவறு செய்யாத மனிதனே இல்லை என்பதை போல ஊழல் செய்யாத மனிதனே இருக்க இயலாது. இதை நீங்கள் உணர்ந்து போராட்டம் தொடக்குங்கள். மக்களிடம் மாற்றம் இல்லையெனில் அரசு மாறி பிரயோசனம் இல்லை.

இப்படி சிலர்,

''என்னப்பா சொன்ன வேலைய செஞ்சியா?''

''செஞ்சிட்டேன் சார்.''

''இந்தா இருநூறு ரூபா. இருவது ரூபா கூட்டித்தான் கொடுத்திருக்கேன்''.

''இன்னும் கொஞ்சம் அதிகமா கொடுங்க சார்''

''சட்டம் என்ன சொல்லுதுன்னு தெரியும்ல''

''அட போங்க சார், சட்டமும் படிச்ச பட்டமும், கொடுங்க சார்''

இப்படியும் சிலர்,

''ஒரு ஆளா எத்தனை பெரிய வேலை செஞ்சிட்ட, இந்தாப்பா பணம்''

''பணம் எல்லாம் எதுக்கு ஐயா, அது என் கடமை''

''வைச்சிக்கப்பா, உபயோகப்படும்''

''உங்க அன்பு ஒன்னு போதும் சார்''

இந்த ஊழலை ஒழிக்க ஒரே வழி உண்டு. அந்த வழி எப்போதும் சாத்தியமும் இல்லை.

அந்த அன்பின் வழி அனைவருக்குமே வலியாக இருப்பதுதான் இந்த காலத்தின் கட்டாயம்.

Monday 15 August 2011

பெரிய்ய லண்டனு

சின்னஞ்சிறு பருவத்தில் வெளியூர் என்றாலே பெரிய விசயமாக இருந்தது. எட்டு வரை உள்ளூரில் பள்ளி இருந்தாலும், ஆறு படிக்க மூணு மைல் தொலைவு செல்ல முயற்சித்தபோது உள்ளூர் பள்ளி ஆசிரியர்களிடம் வாங்கிய திட்டுகள். அந்த பள்ளி ஆசிரியர்களை உங்க ஊருல இருக்கிற பள்ளிக்கூடத்துல சொல்லி தராம எதுக்கு இங்க சொல்லி தர வாறீங்க என எதிர்த்து பேச முடியாத அடக்கம் எனும் அடக்கப்பட்ட தன்மை. பழைய கால நினைவுகள் பசுமையானவையாம். பட்டுப் போன விசயங்கள் பசுமையாக இருப்பது அதிசயம் தான். 

பம்பரம், செதுக்கு முத்து, கண்ணாமூச்சி, கிரிக்கெட், குண்டு விளையாட்டு என சலிக்காமல் விளையாடித் திரிந்த பொழுதுகளில் வானத்தில் பறந்து செல்லும் பறவைகளை விட விமானங்கள் தந்த ஆச்சர்யம் பெரியவை. வரப்புகளில் பேருந்து ஓட்டியும், சுற்றிய கயிறுக்குள் நின்று கொண்டு ரயில் ஓட்டியும் திரிந்த பொழுதுகளில், காகிதத்தில் செய்யப்படும் விமானமும், கப்பலும் மிகவும் பிரசித்து பெற்றவை. மழையால் தன்னை நிரப்பி கொண்ட சாலையில் மிதந்து செல்லும் கப்பலில், கத்தி கப்பல் தரை தட்டியே நிற்கும். ஓரளவுக்கு மேல் பறக்க முடியாமல் காகித விமானம் படீரென விழும், ஆனால் ஒருபோதும் நொறுங்கியது இல்லை, தொடர்ந்து பறக்க மாட்டேன்கிறதே என மனமும் நொறுங்கிப் போனது இல்லை. 

தொழில் நுட்பம் வளர்ந்த பின்னரும், அந்த தொழில் நுட்பம் நுழைய முடியாத கிராமங்களில் இது போன்ற விசயங்களுக்கு இணை எதுவுமே இல்லை. பிளாஸ்டிக் பொம்மைகளும், பிளாஸ்டிக் கார்களும் வலம் வரும் வீட்டு தரையில் பெற்ற சுகத்தை விட, புழுதியில் புரண்டு, வெயிலில் விறுவிறுத்து பெற்ற சுகம் பன்மடங்கு என ஒப்புமை சொல்வதில் எவ்வித முரணும் இல்லை. அத்தகைய குழந்தை பருவம் மீண்டும் வேண்டுமென்று ஏங்கி தவிக்கும் பல உள்ளங்கள். தொலைந்து போனவை பற்றியே சுத்தி தெரியும் மெல்லிய மனது. 

தாத்தாவையும், பாட்டியையும் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை பற்றிய கதைகள் கேட்டு, நமது வாழ்க்கை எப்படி அமையுமோ எனும் அச்சம் அவ்வப்போது துளிர் விட்டு இருக்கையில் வேலையே இல்லாமல் வாழ்ந்து முடித்துவிட்ட சிலரையும்,  சீட்டாடியும், குடித்தும் சதா சச்சரவுடன் வாழ்ந்து கொண்டிருந்தபோதும் பிள்ளைகள் பெற்று காலத்தால் நகர்த்தப்படும் வாழ்க்கை பெற்றவர்களை பார்க்கும்போதெல்லாம் அந்த அச்சம் மிச்சம் மீதி என எதுவும் இல்லாமல் ஓடிப் போகும். பேயும் பிசாசும், சாமியும் பூசாரியும் என நடுக்கத்துடன் இருட்டில் கிடந்த வாழ்க்கையில் வெளிச்சமும் வராமல் இருந்தது இல்லை. 

வெளியூர், வெளி மாநிலம் என காலடி வைத்தபோது அனைவரும் மனிதர்கள் என்பதே மறந்து போனது கொடுமை. வெளியூர்க்காரன், வெளி மாநிலத்துகாரன் என இனம் பிரிக்கப்பட்டபோது, உள்ளூரில் சாதியால் பிரிக்கப்பட்ட கொடுமையின் வலியை விட சீரணிக்க முடியாத ஒன்றுதான். பழகி போன விசயங்களில் மனம் பேதம் பார்ப்பது இல்லையாம். பாழாய் போன பின்னரும் பதப்படுத்தி பக்குவபடுத்துவது எதற்கு என இருந்து இருக்கலாம். 

இங்கிலாந்து எனும் ஒரு நாடு என தெரிந்ததை விட லண்டன் எனும் நாடுதான் அதிகம் புழக்கத்தில் இருந்தது. லண்டன், அமெரிக்கா என்றாலே பெரிய விசயங்கள். பெரிய லண்டன் துரை இவரு என அடைமொழி எல்லாம் அதிகமாகவே உபயோகத்தில் இருப்பது உண்டு. 

வெளிநாடு செல்வது என்றாலே வெளி கிரகம் செல்வது போல என்றிருந்த நிலையில் வெளிநாடுகள் பற்றிய கனவுகள், வெளிநாடு என்றால் வர்ணிக்க முடியாத கற்பனைகள் என திரிந்த பொழுதுகளை இப்பொழுது நினைத்து பார்க்கும்போது எட்டாதவரை எதுவுமே பெரிய்ய விசயம் தான். 

குடிசைகள் இருக்கும் பகுதிகளுக்கு, மட மாளிகைகள் எப்பொழுதுமே பெரிய்ய. ஒட்டு போட்ட சட்டை டவுசர்களுக்கு, சூட்டும் கோட்டும் எப்பொழுதுமே பெரிய்ய. கருப்பு நிறங்களை விட வெள்ளை நிறங்கள் பளிச்சென இருப்பதும் பெரிய்ய. இப்படி பெரிய்ய பெரிய்ய என பல விசயங்கள் சிறுமையில் தள்ளாடும் நிலை. 

'பெரிய்ய' என கொட்டாவி விட்டு பார்த்த கண்கள். 'பெரிய்ய....' என இளக்காரமாக ஒன்று எப்போதுமே அவை கிடைக்காத பொழுதில் சொல்ல தோன்றும், அல்லது கிடைத்த பின்னர் சொல்ல தோன்றும். 

பெரிய்ய லண்டனு, ஒரு மண்ணும் இல்லை. ஆனால் பிரிந்து போக வழியும் இல்லை. காகிதம், மணல் தரைகளை விட மிக மிக வெறுமையாய்!

Thursday 4 August 2011

முக்காலமும் உணர்ந்த முனிவர்களா நாம்? 3

குழந்தை பிறந்தவுடன் அந்த குழந்தை பிறந்த நேரத்தை கொண்டு கணிக்கப்படும் ஜோதிடம் எனப்படும் கலை ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு பெரும் பங்கு வகிக்கிறது என்பது பெருமளவு உண்மைதான். நம்பிக்கை இல்லாவிட்டாலும் கூட பலர் சுவாரஸ்யத்திற்காக ஜோதிடம் பார்ப்பது உண்டு, படிப்பது உண்டு. முக்காலமும் உணர்ந்த முனிவர்களை காட்டும் கண்ணாடி அல்லவா அது! பல நேரங்களில் கண்ணாடி சரிவர காமிப்பது இல்லை என்பதுதான் துரதிர்ஷ்டம்.

இந்த ஜோதிடத்தை நம்பி மோசம் போனவர்கள் உண்டு, அதே வேளையில் லாபம் அடைந்தவர்கள் உண்டு. லாபம் அடைந்தவர்கள் பெரும்பாலும் ஜோதிடம் சொல்பவர்கள்தான். இந்த ஜோதிடம் சொல்லும் பாடம் ஒன்றுதான். வாழ்க்கையானது ஒரு நிகழ்தகவு. வாழ்க்கை ஒரு வாய்ப்பு.

சிலருக்கு ஒரே மாதிரியாக, அது நல்லவிதமோ, கெட்ட விதமோ, அல்லது இரண்டு நிலைகளிலும் உட்பட்டோ அமைந்து விடுகிறது. வாழ்க்கை ஒரு சக்கரம். அது சுழன்று கொண்டே இருக்கும் என்கிறார்கள்.

எங்கு தொடங்கியதோ அங்குதான் முடியும் என்பதுதான் முக்காலம் உணர்த்தும் ஒரு செய்தி. இடுகாடோ, சுடுகாடோ எங்கு சுற்றினாலும் இங்குதான் வரவேண்டும் எனும் மொழி வழக்கு உண்டு.

'உன்னை மட்டும் என் வாழ்வில் பார்க்காது இருந்து இருந்தால் எனது வாழ்கை அஸ்தமனமாக போயிருக்க கூடும்'

'இவர் மட்டும் இல்லாது போயிருந்தால் உனது வாழ்க்கை நரகமாகி இருக்க கூடும்'

'இவரால் தான் உனது வாழ்க்கையே இப்படி நரகமாகிப் போனது'

இப்படிப்பட்ட வசனம் பேசும் பலரை நாம் காணலாம். இது போன்ற வரிகளை எல்லாம் சற்று அலசி பார்த்தால் மனிதர்களின் மனம் போடும் கணக்கு மிகவும் தவறாகவே இருக்கிறது!

அடுத்த நொடி என்ன, அடுத்த யுகத்தையே நிர்ணயிக்கும் வல்லமை முனிவர்களிடம் இருந்திருக்கிறது என்கிறது புராணங்கள். அதாவது 'பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுவது' போல.

அவதாரங்கள் எல்லாம் பார்த்தால் ஒரு தீயவர் படைக்கப்படுவார், அல்லது உருவாகுவார், அந்த தீயவரை, தெய்வம் அவதாரம் எடுத்து திருத்தும் அல்லது பெரும்பாலும் கொல்லும்!

'மனிதன் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும்'

காலை எழுந்தவுடன் ஒரு இயந்திரம் போல் பணியாற்றும் நமது நிலையை பாருங்கள். இரவு வந்ததும் என்ன என்ன செய்தோம் என நினைத்து பாருங்கள். ஒரு நாளுக்கு மற்றொரு நாள் வித்தியாசமாக இருக்கிறதா என எழுதி வைத்து கொள்ளுங்கள்.

வாழ்க்கை ஒரு விசித்திரமா! வாழ்க்கை ஒரு சித்திரமா!

இன்று இதை இதை செய்ய வேண்டும் என பட்டியலிட்டு எதுவுமே செய்ய இயலாது போனால் வாழ்க்கை ஒரு விசித்திரம்.

என்ன செய்ய வேண்டும் என நினைத்து அதையே செய்து முடித்தால் வாழ்க்கை ஒரு சித்திரம்.

கவன குறைவு தான் பல பேராபத்துகளுக்கு காரணம். இது தவறு என்று தெரிந்து செய்யும் குணாதிசயம் உடையவன் மனிதன். முயற்சி என்பதன் அர்த்தம் பல நேரங்களில் தவறாகவே இருக்கிறது. இந்த முயற்சியினை முறையாக செயல்படுத்த தெரியாமல் அழிவுக்கு உட்பட்ட விசயங்கள் பற்பல. அதன் பொருட்டே இந்த உலகம் பொருளாதார சீரழிவுக்கோ, கலாச்சார சீரழிவுக்கோ உட்பட்டு வந்து கொண்டு இருக்கிறது.  என்ன சொல்லி வைத்தார்களாம்! கலியுகம்!

சிந்தனைகளின் வலிமை பற்றி ஒரு பெரும் கருத்து உண்டு. அதாவது ஒரு சிந்தனை வலுப்பெற அதை பின்பற்ற பலர் தேவை. அப்படி இல்லாது போனால் அந்த சிந்தனை அழிந்துவிடும்.

இதில் அந்த சிந்தனை உண்மையா, பொய்யா என்பதை நிரூபணம் செய்ய வேண்டிய அவசியம் எல்லாம் தேவை இல்லை. உலகில் உள்ள மனிதர்களில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் நம்பினாலே போதும், அது அப்படி அப்படியே பரவி அந்த சிந்தனை வலுப்பெறும் என்பதுதான் காலம் உணர்த்தும் செய்தி.

இரண்டாயிரம் வருடங்கள் முன்னர் மக்கள் தொகை எத்தனை?!

இரண்டாயிரம் வருடங்கள் முன்னர் மக்களின் சிந்தனை எத்தகையது?!

அப்படியே பெருக்கி கொண்டே போவோம். நான்காயிரம், எட்டாயிரம், பதினாறாயிரம்!

முக்காலம் உணர்ந்த முனிவர்கள் மிகவும் அதிசயிக்க வைக்கத்தான் செய்கிறார்கள்!

(தொடரும்)


Wednesday 20 July 2011

பத்திரிகை தர்மம்

தர்மம் என்றால் என்ன ?

நீதி என்றால் என்ன?

நியாயம் என்றால் என்ன?

நேர்மை என்றால் என்ன?

இதற்கான விடைகள் தெரிந்து கொள்வது மிகவும் கடினம் என்றுதான் இன்றைய கால நிலையை குறை சொல்லும் அளவுக்கு நாம் வாழ்ந்து வருகிறோம். 

'தர்மம் வெல்ல அதர்மத்தின் வழியில் நடக்கலாம்' இது பல ஆண்டு காலமாக சொல்லப்பட்டு வரும் நியதி. 

ஒரு பொய்யான செய்தியை உண்மையாக்கும் வல்லமை பத்திரிகை உலகுக்கு உண்டு. 

ஒரு உண்மையான செய்தியை பொய்யாக்கும் வல்லமை பத்திரிகை உலகுக்கு உண்டு. 

செய்தி தாள்கள் உண்மையை மட்டும் சுமந்து வருகின்றனவா என்று பார்த்தால் பாதி கலப்பட செய்திகள் உண்டு, கற்பனை விசயங்களும் உண்டு. அரை குறையாக தெரிந்து வைத்து கொண்டு திரைக்கதை எழுதும் வல்லமையும் இந்த பத்திரிக்கை நிருபர்களுக்கு உண்டு. 

இந்த பத்திரிகை நிருபர்கள் சேகரிக்கும் செய்திகளை வைத்து ஒரு பத்திரிகையின் தரத்தை நிறம் பிரித்து விடலாம். நமது ஊரில் உள்ள பத்திரிகைகளில் தினமணி சிறந்த பத்திரிக்கை எனும் பெயர் முன்னரே உண்டு. அதனால் அந்த பத்திரிகையில் வரும் செய்திகள் கட்டுரைகள் தரம் வாய்ந்தவை என பலரால் பெரிதும் நம்பப்படுபவை. 

இந்த பத்திரிக்கை நிருபர்கள் செய்திகளை சேகரிக்க என்ன என்ன பாடுபடுகிறார்கள் என்பதுதான் வெளித் தெரியாத விசயம். அதுவும் ஒவ்வொரு பத்திரிகையும் 'உலக பத்திரிகையில் இதுவரை வெளிவராத விசயம்' என மார் தட்டி கொள்ள போடும் போட்டிகள் மிக மிக அதிகம். 

பக்கங்களை நிரப்பிட பாடாய் படும் இந்த பத்திரிக்கை நிருபர்கள் பாடு திண்டாட்டம்தான். அதன் காரணமாகவே ஐம்பது சதவிகிதம் மேல் உருப்படியில்லா விசயங்களை இந்த பத்திரிக்கைகள் எழுதி தீர்த்து விடும். இதனோடு மட்டுமில்லாது மலர்கள் வேறு. 

இப்படிப்பட்ட பத்திரிக்கைகளுக்கு என்ன தர்மம் இருந்து விட முடியும்?

லண்டனில் பெரும் பரபரப்பாக பேசப்பட்ட பத்திரிக்கை ஒன்று இன்று மூடி விடப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. காரணம் இவர்கள் மற்றவர்களின் தொலைபேசியை ஒட்டு கேட்டு செய்திகளை சேகரித்ததுதான்.

அதோடு மட்டுமில்லாமல் பணம் கொடுத்து எல்லாம் பரபரப்பு செய்திகளை சேகரித்து இருக்கிறார்கள். இந்த பத்திரிகை மட்டுமா அப்படி செய்தது? எனும் கேள்விக்கு எல்லா பத்திரிகையும் குற்றவாளிகள் தான் எனும் பார்வை தான் மிஞ்சுகிறது. 

துணிச்சலாக உண்மை செய்தியை வெளியிட்டால் பத்திரிக்கை அலுவலகம் சூறையாடப்படும் அவல நிலை நமது ஊரில் உண்டு. நிருபர்கள் கொல்லப்படும்  அவல நிலையும் உண்டு. 

எத்தனை நிருபர்கள் உயிரை பணயம் வைத்து செய்திகள் சேகரித்து தருகிறார்கள் என்பதை கவனத்தில் கொள்வதும் நல்லது. 

தர்மம் என்றால் என்ன? 

விடை தெரியா கேள்விகள் பல ஊருக்குள், உலகத்துக்குள் உலாவி வருவது மிகவும் துரதிர்ஷ்டமான விசயம். 


Tuesday 5 July 2011

தமிழ்மண சேவை நிராகரிப்பு

பல வலைத்தளங்களை அடையாளப்படுத்தி வரும் தமிழ்மண சேவை மிகவும் பாராட்டுக்குரியது. 

பல வலைப்பூக்கள் பிரபலமாக இந்த திரட்டிகள் மிகவும் உபயோகமாக இருந்து இருக்கின்றன. 

ஆனால் பல நல்ல வலைதளங்கள், வலைப்பூக்கள் இந்த சேவையை பயன்படுத்துவதில்லை. நல்ல எழுத்தினை அனைவரும் தேடி கண்டு கொள்வார்கள் என இருந்து இருக்கலாம்.

இப்பொழுது கட்டண சேவையும் சிறப்பாக செயல்படுகிறது.

இந்த நேரத்தில் தமிழ்மணபதிவுப்பட்டை எனது வலைப்பூவில் இயங்கவில்லை. இதற்கு காரணம் என்னவாக இருக்கும் என தெரியவில்லை. 

இத்தனை நாள் ஆதரவு தந்த தமிழ்மண நிர்வாகிகளுக்கு மிக்க நன்றி. 
 

Wednesday 29 June 2011

பிரபஞ்சமும் ஐந்தும்

வெளிச்சத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது, இருட்டில் சென்று விழுந்தது பந்து. விழுந்தது என்பதைவிட தொலைந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

இனி இருட்டில் வெளிச்சம் பரவினால் தான் கண்ணுக்கு தெரியும் பந்து. சூரியன் வரும் வரை காத்திருப்பதா? ஏதேனும் சுடர் ஏற்றிக்கொண்டு தேடி அலைவதா?

எந்த நட்சத்திரங்களும் தென்படவில்லை. நிலவு கூட நிசத்தில் இல்லை என்பதுதான் பெரும் கவலையாக இருந்தது.

'இருட்டுனப்புறம் என்ன விளையாட்டு' சற்று நேரத்திற்கு முன்னர் தான் அம்மாவின் சத்தம் செவிப்பறையை மோதி சென்றது.

இருட்டில் பந்தை தேடும் பொருட்டு செல்வதின் மூலம் நானும் தொலைந்து விடும் வாய்ப்பு இருப்பதாகவே மனம் பயமுறுத்தியது.

அந்த பயமுறுத்தல் கொடுத்த எண்ணம், காலையில் எடுத்து கொள்ளலாம் எனும் சின்ன நம்பிக்கையுடன் படுக்க நினைத்தபோது தூக்கம் பிடிக்கவே இல்லை.

'டார்ச் லைட்' இருக்கா எனும் முனகல் வார்த்தைகள் எவருக்கும் கேட்டிருக்க வாய்ப்பில்லை என் சகோதரன் உட்பட. அனைவரும் உறங்கியதன் அடையாளம் தெரிந்தது.

இருட்டான அறையில் தேடி சென்று விளக்கொளி பொத்தானை அழுத்தியபோது மனதில் வெளிச்சம் பரவியது. முதன் முதலில் இவ்வுலகம் இருட்டில் தான் இருந்தது. காலையில் படித்தது மனதில் ஓடிட 'லைட்ட எதுக்கு இப்போ போட்ட' என உறக்கத்தில் இருந்து விழிக்காத வண்ணம் என் சகோதரன் கேட்டதும் 'பந்து தொலைஞ்சி போயிருச்சி' பளிச்சென வந்து விழுந்தன வார்த்தைகள்.

'பந்தை தொலைச்சிட்டியா' படுக்கையில் இருந்து அவன் எழுந்து வந்தது எனக்குள் பயத்தை அதிகரித்தது. மற்றவர்கள் உறங்கி கொண்டுதான் இருந்தார்கள்.

வந்ததும் பளாரென கன்னத்தில் அவனது கைகள் விழுந்தது. அவனது அடுத்த கை விளக்கினை அணைத்தது. 'எத்தனை கஷ்டப்பட்டு இந்த பந்தை வாங்கினேன், உன்னை யாரு என்னை கேட்காம எடுத்து விளையாட சொன்னது, வா தேடு, காலையில எவனாச்சும் எடுத்துட்டு போயிருவான்' என கதவினை மெதுவாக திறந்து என்னை வெளியே தள்ளிவிட்டதில் அழுகையின் ஈரம் காய தொடங்கியது.

இருட்டில் விளக்கொளி பொத்தான் தேடிய கைகள். விளையாடிய இடத்தில் இருந்து ஒரு திசை நோக்கி தரையில் காலை உதைத்தபடி உட்கார்ந்து நடந்தபோது கன்னத்தில் வலித்தது. தொலைந்து போய்விடுதல் குறித்த சிந்தனை அகன்றது. உடன் தேடினான் சகோதரன். 'இனிமே பந்தை தொட்ட' அவனது மிரட்டல்.

கைகளை தரையில் பரப்பியபோது கையில் பட்டது கல். மீண்டும் தேடினேன் அகப்பட்டது பந்து. 'பந்து கிடைச்சிருச்சி' என்றே பரவசமானேன். 'கொண்டா' என வாங்கியவன் மீண்டும் அதே வாசகம் சொன்னான்.

அன்றிலிருந்து அந்த பந்தினை தொடும் பாக்கியம் கிட்டவில்லை. அழுது அழுது ஒரு புது பந்தினை வாங்கினேன். அன்று நன்றாக விளையாடினேன். வீடு திரும்பும் வழியில் ஒருவர் 'புது பந்தா' என்றார். 'ஆம்' என தலையாட்டினேன்.

பந்து தொலைத்த கதையை சொன்னேன்.

சிறுவனாக இருந்த என்னை பார்த்து நீ வாழ்வில் கற்று கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது என தொடங்கினார்.

முதலில் பிறர் என்ன சொல்கிறார்கள் என கவனமாக கேள். கவனமாக கேட்பது என்பதுதான் மிகவும் முக்கியம். நீ கேட்கும் திறனை வளர்த்தால் தான் கற்று கொள்ளும் திறன் வளரும். பிறர் சொல்வது பிடிக்கவில்லை என்றாலும் என்ன சொல்கிறார்கள் என்பதை கேள். எதற்கு இப்படி முடிவை எடுத்தார்கள் என்பதை அவர்கள் சொல்வதில் இருந்து அறிய முடியும். நீ பொருட்படுத்தாத பிறர் சொன்னாலும் கேள். இப்படி கேட்கும் திறன் வளர்த்து கொள்வது மிக மிக கடினம். அதற்கு நிறைய பொறுமை வேண்டும். ஆனால் அதுதான் நீ கற்றுக் கொள்ளும் பாடம்.

இரண்டாவதாக கேள்வி கேட்கும் திறனை வளர்த்து கொள். விதண்டாவாதமாக  இருக்கும் என கேள்வி கேட்பதை தவிர்த்து விடாதே. நேற்று சரியாக நடக்கும் விசயம் இன்று சரியாக நடக்கும் என சொல்லிவிட இயலாது. சரியாக கேள்வி கேட்டு கொள்வதன் மூலம் நடந்த தவறுகளை களையலாம். வாழ்வில் ஒரு தெளிவு வேண்டுமெனில் கேள்வி கேட்பதில் தான் இருக்கிறது. என்ன சொன்னாய்? இவ்வுலகம் இருட்டில் தான் இருந்தது. இதை மீண்டும் தெளிவுபடுத்தி கொள்ள கேள்வி கேட்டுப்பார்.

மூன்றாவதாக உனது உள்ளுணர்வு என்ன சொல்கிறது என கேள். அது சரியாக இல்லாமல் போகலாம். ஆனால் ஒரு நல்ல பாதையை அது நிச்சயம் காட்டும். அந்த உள்ளுணர்வினை வளர்த்து கொள்ளும் பக்குவம் வளர்த்து கொள்.

நான்காவதாக நீ என்ன கற்று கொள்கிறாயோ அதை உனது குழந்தைகளுக்கு போதிக்கும் நிலையை அடைகிறாய். நீ உனக்காக செய்கிறாயா, அல்லது உனது குழந்தைகளுக்காக செய்கிறாயா என்பதை அந்த சூழலில் உன்னை கேட்டு கொள். நீ படிப்பது, விளையாடுவது என்பது உனக்கா, பெற்றோருக்கா என்பதை தெளிவுபடுத்தி கொள். உனக்காக நேரம் ஒதுக்க கற்று கொள்.

ஐந்தாவதாக 'எதுவுமே முன்னர் இருந்ததை விட இப்போது மோசமாக இருக்கப் போவதில்லை' என்பதில் திடமாக இரு. எந்த ஒரு சோதனை வந்தாலும், அதை முறியடித்து வாழும் பக்குவம் எல்லா உயிரினங்களிலும் உண்டு. அந்த பக்குவத்தை வளர்த்து கொள்ளும் தைரியம் வேண்டும். புதிய புதிய வாய்ப்புகளை உருவாக்கிட முனைபவர்க்கு பழையவை மோசமாக இருக்கப் போவதில்லை. அழுவதில் இல்லை சிறப்பு. அழும் கண்களை துடைப்பதில்தான் இருக்கு சிறப்பு.

இத்தனை நேரம் சொன்னதை கவனத்துடன் கேட்டாயா என்றார். 'ம்' என்றேன். திருப்பி சொல் என்றார். அவர் சொன்னதை அப்படியே சொன்னேன். நான் சொன்னதை கேள்வி கேட்க எதற்கு மறுக்கிறாய் என்றார்.

நீங்கள் பெரியவர்... நீங்கள் சொல்வது மிகவும் பயனுள்ளது என்றேன். பயனுள்ளது எனினும் கேள்வி கேட்பதில் தவறில்லை. ஆனால் எவரும் இந்த இரண்டாவது நிலையை அடைய துணிவதில்லை என்றார்.

நீ தொலைத்த பந்தினை எங்கு தொலைத்தாய் என்று தெரிந்ததால் எளிதாக தேடி கண்டு கொண்டாய். நீ தேடியபோது உனக்கு தேவையில்லாத கல்லும் அகப்பட்டது. அதை பந்து என்று எதற்கு நீ நினைக்கவில்லை.

இப்பிரபஞ்சத்தில் உண்மை தொலைந்து போய்விட்டது. அது எவர் தொலைத்தது, எப்படி தொலைந்தது என ஒரு விபரமும் இல்லை. இப்பொழுது கையில் அகப்படும் விசயம் கொண்டு உண்மை அதுவென இதுவென உரைக்கிறார்கள், நீ கேள்வி கேள் என சொல்லிவிட்டு நடந்தார்.

அப்பொழுது ஒரு கேள்வி எழுந்தது.கேட்டு விடவேண்டும் என நினைத்து பின்னர் கேட்காமல் பந்தை வானத்தை நோக்கி எறிந்தும், பின்னர் அதைப் பிடித்தும் வீடு வந்து சேர்ந்தேன்.

'இவ்வளவு நேரம் விளையாடிட்டா வர, ஹோம் வொர்க் செய்யனும், பாட்டு பழகனும், அக்கறையே இல்லையா' மொத்தென்று முதுகில் விழுந்தது அடி.

சிறுவனாகிய எனக்கு விளையாட சுதந்திரம் வேண்டும். எனது பந்து தொலைந்து விடாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதுதான் எனது தேவை.

முதன் முதலில் மட்டுமல்ல எப்போதுமே இவ்வுலகம் இருட்டில் தான் இருக்கிறது. புத்தகத்தில் எழுதப்படாத வாசகத்தை மிகவும் சத்தம் போட்டு படித்தேன்.

Saturday 25 June 2011

முக்காலமும் உணர்ந்த முனிவர்களா நாம்? 2


இதற்கு அனைத்துக்கும் விடையாய் அமைவது எது தெரியுமா? மனிதரின் எண்ணங்கள்.

இது எங்களுக்கு தெரியாதா? என உங்கள் மனம் நினைத்தால் அதுதான் இந்த சிந்தனைக்கு கிடைத்த வெற்றி. ஏனெனில் வேறு ஏதேனும் இருக்க கூடுமோ என மனம் கணக்கு போடத் தொடங்குகிறது. என்னவாக இருக்க கூடும் என்பதில் மனதின் எண்ணங்கள் அலைபாயத் தொடங்குகிறது. இது ஒரு சாதாரண மனிதரின் மன நிலை.

சற்று அதிகப்படியான சிந்தனையாளரின் மனநிலை என்ன செய்யும்? 

என்னவாக இருக்க கூடும் எனும் வினாவில் இருந்து வெளியேறி இதுவாகத் தான் இருக்கும் என கணக்கு பண்ண தொடங்குகிறது. பல விசயங்களை இதனுடன் இணைத்து கொள்கிறது. இதுவாகத்தான் இருக்கும் என்பதற்கான விசயத்திற்கு உறுதுணையாக இருப்பவைகளை கணக்கில் எடுத்து கொண்டு திட்டவட்டமாக இதுதான் என நினைத்து விடுகிறது. 

ஒருவர் நமக்கு தீங்கு இழைக்கிறார். இது நிகழ்கால நிகழ்வு. எதிர்காலத்தை நாம் தீர்மானிக்க தயாராகிறோம். எப்படி? இந்த மனிதர் கெட்டவர். எனவே அவர் எதிர்காலத்திலும் கெட்டவராகவே இருப்பார் எனும் ஒரு எண்ணம் உறுதியாகிறது.

இப்படி ஒவ்வொரு விசயத்திலும் எதிர்காலத்தை தீர்மானிக்கிறோம். இதே போலவே இறந்தகாலமும் தீர்மானிக்கப்படுகிறது. நிகழ்கால நிகழ்வுகளை கொண்டே எதிர்காலமும், இறந்தகாலமும் நிர்ணயிக்கப்படுகிறது. 

இப்படித்தான் இந்த உலகம் நிர்ணயிக்கப்பட்டு பல்வேறு விசயங்கள் மனிதர்களின் மனதில் ஊசலாடி கொண்டு இருக்கின்றன. இயல்பு வாழ்க்கை பாதிக்கபடுவது இதனால்தான். 

'இப்படித்தான் எனது வாழ்க்கை இருக்கும்' என வாழ்ந்து முடித்தவர்கள் உண்டு. இல்வாழ்க்கை. துறவற வாழ்க்கை, இதுவும் அற்ற, அதுவும் அற்ற வாழ்க்கை என மனிதர்களின் வாழ்க்கைதனை பிரிக்கலாம். அதே வேளையில் இப்படி பிரித்துதான் வாழ வேண்டிய கட்டாயம் கூட நமக்கு இல்லை. ஆனால் அப்படித்தான் இருக்கிறது. 

ஒரு மனிதரின் சராசரி ஆயுட்காலம் சுமார் அறுபது வயதில் இருந்து நூறு வயது வரை வைத்துக் கொள்வோம். இந்த நூறு வருட காலத்தை ஒருவர் எப்படி வாழ்ந்து முடிக்கிறார், என்ன செய்து முடிக்கிறார் என ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு வரலாறு எழுதி வைப்போம். அப்படி எழுதப்படும் வரலாறுகளில் கிட்டத்தட்ட தொன்னூற்றி ஐந்து சதவிகிதம் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். மீதமுள்ள ஐந்து சதவிகித வரலாறு மட்டுமே மிகவும் வித்தியாசமாக இருக்கும். யார் அந்த மனிதர்கள்? 

புராணங்களில் புனையப்பட்ட மனிதர்களா? இதிகாசங்களில் எடுத்துரைக்கப்பட்ட மனிதர்களா? வாழ்ந்து கொண்டிருக்கும் நாமா?  யார் அந்த முக்காலமும் உணர்ந்த முனிவர்கள்? 

(தொடரும்) 


Wednesday 22 June 2011

ஈரானில் நெடா

ஒரு குழந்தை தனது எதிர்காலம் எப்படி இருக்கும் என எந்த வித எதிர்பார்ப்புமின்றி பிறக்கிறது. அந்த குழந்தையின் ஆசைகள், அந்த குழந்தையின் எண்ணங்கள் எல்லாம் சுற்றுபுற சூழல் வைத்து வளர்கிறது. 

குழந்தையின் மனதில் சில விசயங்கள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. சில நேரங்களில் அந்த பாதிப்புகள் எந்தவித சுவடும் இன்றி தொலைந்து விடுகிறது. சில பாதிப்புகள் மாறா வடுக்களாக பதிந்து விடுகின்றன. 

 சுமார் இருபது வருடங்களுக்கு முன்னர் எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி நெடா எனும் பெண் குழந்தை ஈரானில் பிறந்தது. சுதந்திரம் இல்லாத பெண்கள் வாழ்வினை கண்டு மனம் வேதனை கொண்டது. பெண்கள் அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு ஈரானில் நடத்தப்படும் கொடுமைகள் மிகவும் வேதனைக்குரியவை. 

பெண்கள் தான் சுதந்திரமாக தனக்கு பிடித்த உடையை கூட உடுத்த முடியாத அடுக்கு முறை பல நாடுகளில் பல ஆண்டுகளாக இருந்து வந்தது. சில நாடுகளில் இதில் மாற்றம் ஏற்பட்டாலும் இன்னும் பல நாடுகளில் இந்த அவல நிலை தொடர்ந்து வரத்தான் செய்கிறது. 

நெடா தனது துர்க்கியில் சென்று படித்தபோது தான் அனுபவித்த சுதந்திரத்தை ஈரானிலும் அனைவரும் பெற வேண்டும் என நினைத்தார். இந்த பெண் சுதந்திரமற்ற தன்மையை ஆதரித்தவர்களில் பெண்களும் இருந்தார்கள். பழமைவாதிகள் என்றும் அத்தனை எளிதாக மாறுவதில்லை. 

சமீபத்தில் நடந்த தேர்தலில் நெடா புரட்சிகர பெண்ணாக போராடினார். ஆனால் தேர்தல் முறைப்படி நடக்கவில்லை. அதனால் மாற்றம் என்பது ஏற்பட வழியின்றி போனது. தேர்தலுக்கு பின்னர் நடந்த அமைதி போராட்டத்தால் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. ஆட்சியாளர்களின் அடக்குமுறையால் பலர் கொல்லபட்டார்கள். 

அப்படி நடந்த ஒரு போராட்டத்தில் நெடா அநியாயமாக கொல்லப்பட்டார். வீட்டுக்கு வந்துவிடு என அம்மாவின் அழைப்பையும் மீறி நெடா துடிப்புடன் செயல்பட்டதாக நெடா சுடப்பட்டபோது அருகில் இருந்த ஒரு மருத்துவர் கூறினார். 

இந்த உலகம் சுதந்திரம் இல்லாத உலகம் என போராட்டம் நடக்கும் பல இடங்களில் ஆட்சியாளர்களால் தனி மனிதர்கள் நொறுக்கப்படும்போது ஒரு நெடா மட்டும் என்ன செய்ய இயலும்? 

Sunday 19 June 2011

கோவில்


மனிதர்களின் நம்பிக்கை மிகவும் சக்தி வாய்ந்தது. திடமான நம்பிக்கை இருந்துவிட்டால் சாதிக்க முடியாத விசயங்களும் சாத்தியமாகும் வாய்ப்பு அதிகமாகிறது. இப்படிப்பட்ட நம்பிக்கை ஒருவரிடத்தில் இருந்து பலரிடத்தில் பரவும் பட்சத்தில் அந்த நம்பிக்கையின் மீதான பிடிப்பு அதிகரிக்கிறது.

இறைவன் என்பவர் யார் என்பற்கான விவாதங்கள் அதிகம் இருந்தாலும், மனிதர்களின் நம்பிக்கையில் இறைவன் மிகவும் பலமாகவே இருக்கிறார். அறிவு வளார்ச்சியில் ஆண்டவனின் வளர்ச்சியும் அதிகரித்து கொண்டேதான் இருக்கிறது. 

நன்மை பயக்கவேண்டும் என நினைப்பவர்கள்தான் இவ்வுலகில் அதிகம். பிரச்சினைகள் எளிதாக தீர்ந்துவிட வேண்டும் என எண்ணி நாம் பயணப்படுகிறோம். நமது கட்டுப்பாடுகளில் இல்லாத பல செயல்கள் நம்மில் பதில் பெற முடியாத கேள்விகளை எழுப்பி செய்கின்றன. 

''சாமிய கும்பிட்டாத்தான் நாம நல்லா இருப்போமா'' எனும் கேள்விக்கு 'ஆம் அல்லது இல்லை' என ஒருவர் பதில் தந்துவிடமுடியும். சாமியின் மீது நம்பிக்கை வைத்திருப்பவர் ''ஆம்'' என சொல்லிவிட இயலும். ''அப்படின்னா சாமிய கும்பிடலைன்னா நாம நல்லா இருக்க மாட்டோமா'' எனும் கேள்வி எழும் பட்சத்தில் சாமியின் மீது நம்பிக்கை வைத்திருப்பவர் ''ஆம்'' என்றே சொல்வார். இங்கே நம்பிக்கை விதைக்கப்படுகிறது. நன்றாக இருக்க வேண்டுமெனில் சாமியை கும்பிட வேண்டும் எனும் எண்ணம் ஆழமாக விதைகிறது. இருக்கிறது எனும் நம்பிக்கைக்கு இருக்கும் ஆற்றல், இல்லை என்பதற்கு இல்லை. அதனால் தான் அது அவ நம்பிக்கையாக கருதப்படுகிறது. 

ஏதேனும் தவறு நடந்து விட்டாலும் கூட ''நாம சாமிய சரியா கும்பிடலையோ'' எனும் ஒரு ஐயப்பாடு எழுந்து விடுகிறது. கஷ்டங்கள் என பல வந்தாலும் ''சாமி சோதனை செய்கிறார்'' என ஆறுதல் கொள்ள செய்கிறது. 

வாழ்வில் நடக்கும் சில பல விசயங்களை மிகவும் உன்னிப்பாக கவனித்து பார்த்தால் ஏதோ ஒன்று நமது மேல் ஆதிக்கம் செலுத்துவது போன்று காணப்படும். வழி வழியாக வந்த இந்த இறைவன் எனும் எண்ணம் அனைவரையும் ஒரு முறையேனும் சிந்திக்க வைத்து விடுக்கிறது, அது நம்பிக்கையாகவும் இருக்கலாம், அவ நம்பிக்கையாகவும் இருக்கலாம். 

''கோவிலுக்கு போனா மனசு நிம்மதியாக இருக்கிறது'' எனும்போது கோவிலுக்கு செல்லாத சமயங்களில் மனசு நிம்மதியாக இல்லையா? எனும் கேள்வி எழுகிறது என வைத்துக் கொள்வோம். இந்த கேள்விக்கு நிம்மதி என வேறிடத்தில் இருந்தாலும் கோவிலில் ஏற்படும் நிம்மதி இருப்பதில்லை எனும் பதில் பொருத்தமாகிறது. சாத்திரங்கள், சம்பிரதாயங்கள், மந்திரங்கள் என மனம் கொள்ளும் நம்பிக்கை மிகவும் அதிகமே. தனி மனிதர்களின் மீது வைக்கப்படும் நம்பிக்கைகளை விட தனி மனிதன் மூலமாக இறைவன் மீது வைக்கப்படும் நம்பிக்கைகள் மிகவும் உறுதியாக இருக்கிறது. 

உலகில் எண்ணற்ற கோவில்கள் இருக்கின்றன. ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு வரலாறு இருக்கிறது. உலகெங்கும் நிறைய பொருட்செலவில் புதிய கோவில்கள் கட்டப்படுகின்றன. இந்த கோவில்களினால் சமூகத்தில் எத்தகைய பலன்கள் ஏற்படுகின்றன, எத்தகைய சீரழிவுகள் ஏற்படுகின்றன என பட்டிமன்றம் வைத்து பேசுவதற்கு பக்தர்கள் தயாராக இல்லை. மனம் குளிர வணங்கிட ஒரு தெய்வமும், அங்கே கோவிலும் மட்டுமே பக்தர்களுக்கு முக்கியம். அப்படிப்பட்ட அவர்களின் நம்பிக்கையை நல்ல விதமாக நல்ல நோக்கத்திற்காக பயன்படுத்த வேண்டும் என கோவிலை சார்ந்த அமைப்புகள் இருக்கின்றன. அத்தகைய அமைப்புகள் மிகவும் செழித்தோங்க வேண்டும்.

கோவில் மட்டுமே பிரதானம் அல்ல, கோவிலை சார்ந்து உருவாக்கப்படும் கல்வி நிறுவனங்கள், மருத்துவ வசதிகள், கலை அமைப்புகள் என மொத்த சமூகத்தையும் தூக்கி நிறுத்தக் கூடிய தெய்வங்கள் நமக்கு மிகவும் அத்தியாவசியம். மனிதர்களின் நம்பிக்கையினால் இந்த உலகில் ஒரு மாபெரும் புரட்சி ஏற்படுத்த இயலும். சாமியை கும்பிடுபவர்கள் தவறு செய்ய மாட்டார்கள் எனும் நம்பிக்கை முன்னொரு காலத்தில் இருந்தது. நாம் சாமியை கும்பிடுகிறோம் அதனால் தவறே செய்யக் கூடாது என்கிற பய பக்தியும் மனிதர்களிடம் இருந்தது. நாளடைவில் இந்த நம்பிக்கைகள் சிதறடிக்கப்பட்டன. ஆனாலும் ஆங்காங்கே நம்பிக்கை உடையவர்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.  சமூக அமைதிக்காக , சமூக ஒற்றுமைக்காக இந்த கோவில்கள் தமது பங்களிப்பை அளிக்க வேண்டும் என்பதுதான் ஒரு சின்ன கனவு.

(தொடரும்) 


Thursday 19 May 2011

எப்படி காதலிப்பது

வாழ்க்கையில் காதல் மிகவும் சுவராஸ்யமானது. ஆனால் எப்படி காதலிப்பது? 

வாழ்க்கையில் காதல் ஒருமுறைதான் வருமாம். ஆனால் எவரை காதலிப்பது? 

திரைப்படங்களில் காட்டப்படும் காதல் காட்சிகள் பல மிகைப்படுத்தப்பட்டவை என சொன்னாலும், உண்மையான வாழ்க்கையில் காதல் மிகைப்படுத்தப்பட்டதாகவே தெரிகிறது. 

'நீ இல்லையினா நா செத்து போயிருவேன்' வெறும் பேச்சுக்காக பேசப்பட்ட வசனங்கள் இல்லை இவை. பலர் இறந்து போயிருக்கிறார்கள். 

'மனசுக்கு பிடிச்சவரை காதலிச்சம், ஆனால் கல்யாணம் பண்ண முடியலையே' எனும் ஏக்கத்தில் பலர் வாழ்வதாகத்தான் சொல்கிறார்கள். 

காதல் வெகு அதிகமாகவே கொச்சைப்படுத்தப்படுவதும் உண்மைதான். 

அப்படி என்னதான் காதல்?! 

காதல் புரிய முடியாதது என்கிறார்கள் புரிந்து கொண்டவர்கள் போல! 

காதலின் சுவையை அறியாதவரை காதல் இனித்து கொண்டிருக்கும் என்கிறார்கள் பலர். 

காதலிக்கிறோம் என்கிற உணர்வே இல்லாமல் காதலிப்பதில்தான் ஒரு அலாதிப் ப்ரியம் இருக்கிறது. 

எப்படி காதலிப்பது? எவரை காதலிப்பது? 

காதல் சொல்லிக்கொண்டு வருவதில்லை. காதல் இவரை காதலி என கை காட்டுவதும் இல்லை. 

காதல் மனதில் தோன்றும் ஒரு உணர்வு. இந்த காதல் ஒரு விதமான நோய் என சொல்லி வைத்தார்கள். 

நோய் தீர்ந்துவிட்டால் காதல் இல்லாது போய்விடும் போல. 

இந்த காதல் பற்றிய பல காவியங்கள் மாபெரும் வெற்றி பெற்று இருக்கின்றன. காதலித்து வாழ்தலில் இருக்கும் சுகம் எதிலும் இல்லை என ரகசியமாகவே காதல் புரிந்து கொண்டிருக்கிறார்கள். கள்ளக்காதல். 

எது எப்படியெனினும் எப்படி காதலிப்பது? எவரை காதலிப்பது? 

காதல் புரிந்து கொண்டே பலரும் கேட்டு கொள்ளும் கேள்விதான் இது. 

காதல் ஒருபோதும் எவருக்குமே ஒழுங்காக வந்தது இல்லை. எவருமே முறையாக காதலித்ததும் இல்லை. 

Wednesday 18 May 2011

ஈழத் தமிழா பரமேஸ்வரா நீ கெட்டிக்காரன்

சட்டென ஒரு தொலைக்காட்சி நிகழ்வு. கண்கள் நிலை குத்தி நிற்கிறது. இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டியும், அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்படுவதை நிறுத்த வேண்டியும் லண்டன் பாராளுமன்ற வளாகத்தின் அருகில் சாகும் வரை உண்ணாவிரத்தில் ஈடுபடுகிறார் தன்மான தமிழன், ஈழத் தமிழன் பரமேஸ்வரன். வருடம் 2009. 

அந்த போராட்டம் நடைபெற்றபோது மக்கள் வெகுவாக திரண்டு சென்று கொண்டிருந்தனர். இந்த மக்களின் எழுச்சி போராட்டம் அப்போது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. புலம் வாழ் தமிழர்களின் ரணப்பட்ட மனம். பல வருடங்களாக மாறாத சோகம். உண்மை வரலாற்றினை மறைத்து வைத்த கொடுமைகள். உலகெங்கும் எழுச்சி அலைகள். 

சொந்த நாட்டில் வாழ இயலாத பெரும் துயரம். பிற நாடுகளின் குடியேறி சொந்த நாட்டிற்கென பணம் அனுப்பி துயரம் துடைத்திட துடித்திட்ட மக்கள், துடித்திடும் மக்கள். போராட்டம் வலுப்பெற்று இருந்தது. 

பரமேஸ்வரனின் உடல்நலத்தை சமயந்தோறும் சரிபார்த்திட மருத்துவ வசதிகள், பிரச்சினைகள் பெரிதாகிவிடக் கூடாதென பணியமர்த்தப்பட்ட காவல் அதிகாரிகள். இதற்கான செலவுகள் மிகவும் அதிகம் என்றே கணிக்கப்பட்டது. உயிர்களை விட பணமா பெரிது?! 

இந்த நிகழ்வினை கண்டு பொறுக்கவில்லை பத்திரிகைகள். முதல் வேலையாக டெய்லி மெயில் எனும் பத்திரிகை தமிழர்களை கேவலப்படுத்தி எழுதியது. அதாவது பரமேஸ்வரன் திருட்டுத்தனமாக பர்கர் சாப்பிட்டார் என்று சொன்னது. போலித்தனமான உண்ணாவிரதம் என எழுதியது. இதைப் படித்த சில தமிழ் நல்ல உள்ளங்கள் உடனே செய்தியை உண்மை என நம்பி பரமேஸ்வரனுக்கு மிரட்டல்களும், பரமேஸ்வரனின் செயலால் தமிழர்களுக்கு அவமானமும் நிகழ்ந்தது என பரமேஸ்வரனுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பினார்கள். 

பரமேஸ்வரன் கூனி குறுகிப் போனார். தான் நியாயமான முறையில் நடந்து கொண்டும், தம் இன மக்களுக்காக உண்ணாவிரதம் இருந்தது எத்தனை முட்டாள்தனம் என நினைத்து இருக்க வேண்டும். நன்றி கெட்ட மனிதர்கள் எல்லா இனத்திலும் உண்டு. 

நமது ஊரில் ஏதேனும் சாதாரண மனிதர்களைப் பற்றி பத்திரிக்கை எழுதினால் எதுவும் செய்ய இயலாது, ஆனால் இலண்டனில் சட்டம் ஓரளவுக்கு வேலையை செய்யும், மேலும் பத்திரிகைகள் நினைத்ததை எழுதி தப்பிக்க இயலாது. பார்த்தார் பரமேஸ்வரன். 

தெருக்களில் சுதந்திரமாக நடமாட இயலவில்லை. கருங்காலி என பட்டம் சூட்டப்படாத குறைதான். அந்த இரண்டு பத்திரிக்கைகள் மீது வழக்கு தொடர முடிவு எடுத்தார் பரமேஸ்வரன். நல்ல நேர்மையான வழக்கறிஞர்கள். பத்து மாதங்களில் தாங்கள் செய்தது தவறு என பத்திரிகைகள் மன்னிப்பு கேட்டன. போனா போகுது என்கிற தொனியில் இருந்தது அந்த மன்னிப்பு. வழக்கு மன்றத்தில் போராடி அந்த இரண்டு பத்திரிக்கைகள் மன்னிப்பு கேட்டதோடு கிட்டத்தட்ட 80,000 பவுண்டுகள் பரமேஸ்வரனுக்கு நஷ்ட ஈடு தந்தது, அதுவும் வழக்கறிஞர்களின் செலவுடன் சேர்த்து. 

ஈழத்தமிழா பரமேஸ்வரா நீ கெட்டிக்காரன். உனக்கு நீதி கிடைத்துவிட்டது. ஆனால் இன்னும் ஈழத்தமிழர்களுக்கு ஒரு நீதியும் கிடைக்கவில்லை. நீ இருந்த உண்ணாவிரதம் மூலம் எவருக்கு ஐயா விடுதலை கிடைத்தது? அன்று புலம் பெயர்ந்த நாடுகளில் ஏற்பட்ட எழுச்சிகள் மூலம் என்ன ஐயா விடிவு வந்தது? 

ஈழத்தமிழர்கள் நடத்த வேண்டிய இந்த உண்ணாவிரத போராட்டம் இலங்கையில் நடந்து இருந்தால் எத்தனையோ இழப்புகள் தவிர்த்து இருந்திருக்கலாம். அதற்காக மறைந்த தலைவர் பிரபாகரன் எடுத்துக்கொண்ட பாதை தவறு என ஒருபோதும் சொல்லவில்லை. இலங்கையில் நமது இனம் மெல்ல மெல்ல அழிய நாமே காரணமாகிப் போனோம் என்பதுதான் மறைக்க முடியாத துயரம். 

இலங்கையில் என்ன நடக்கிறது என்பதை அங்கு வாழும் தமிழ் மனிதர்களிடம் கேட்டுப் பாருங்கள்! அவர்கள்தான் உண்மையான ஈழத்தமிழர்கள். புலம் வாழ் தமிழ் நெஞ்சங்களே, நமது இதயத்தைத் தொட்டு சொல்வோம், நாம் வீரமற்ற வாய்ச்சொல் வீரர்கள். 

பல நேரங்களில் உண்மையை சொல்லாமல் இருப்பதே நல்லது என்கிறார்கள். 

கண்ணு பட்டுருச்சோ ரஜினி!

எப்ப, எனக்கும் எந்த குறையும் இல்லைன்னு ஒரு இடத்தில பேசினாலும் பேசினாரு, சோதனைக்கின்னே வந்து சேர்ந்துச்சு நோயி. அந்த பேச்சை கேட்டதும் என்னை அறியாமலே 'அட பாவமே' என்றுதான் தோணிச்சி, ஆனா இப்படி வந்து சேரும்னு நினைக்கல. வேதனையுடன் சொல்கிறார் ரஜினியின் மீது பிரியம் வைத்து இருப்பவர். கண்ணு பட்டுருச்சோ ரஜினி. 

உங்களுக்கு சிறு பிரச்சினை என்றால் அதை பெரும் பிரச்சினை என வேடிக்கை பார்க்கும் மனிதர்கள் உண்டே ரஜினி. நீங்கள் எண்பதுகளில் பட்ட வேதனையை விட இது ஒன்றும் பெரிது இல்லைதான். வயது வளர்கிறதல்லவா! 

இந்த கஷ்ட நேரத்தில்  எதையும் எழுதி உம்மை கஷ்டபடுத்த விரும்பலை, உம்மை என் எழுத்து கஷ்டபடுத்தவும் படுத்தாது. ஆனால் உம்மை பின்பற்றும் பல கோடி ரசிகர்களின் மனம் வேதனை படுமே ரஜினி. அவர்கள் வாழ்க்கையில் இனிமேலும் வேதனை படுவது அவசியமில்லாத ஒன்றுதான். நீங்கள் கைவிட்டு விட்ட புகை பழக்கம், மது பழக்கம் பலரும் கைவிட கூடும். எண்பது வயதாகும் என் தந்தையின் உடல்நலம் சீரடைந்து பின்னர் சீராகி பல வருடங்களாக உண்ணாமல் இருந்த முட்டையை உண்பதாக சொன்னபோது 'வாழ்க்கையை எப்படியும் வாழ்ந்துவிட வேண்டும் எனும் ஆசை எவரையும் விட்டுவிடுவதில்லைதான். வெளிப்படையான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் உங்களை பலருக்கும் பிடித்துதான் இருக்கிறது, உங்களில் அவர்களை பார்க்கிறார்கள். 

புகை பிடிக்கும் பழக்கத்தை இத்தனை வருட காலம் கொண்டிருந்தீர்களே, அது உடனடியாக எதுவும் செய்யாது என்பதலா? நீங்கள் பிடிக்கிறீர்கள் என நானும் பிடிக்கிறேன் என பிடித்து காட்டிய நண்பர்கள் கண்டு வெறுப்பு அடைந்திருக்கிறேன். 'தலைவர் பிடிக்கிராருடா' என என்னை ஏளனம் பேசியவர்கள் உண்டு. 

மது பழக்கம் இல்லாத மக்களை மேலை நாடுகளில்  பார்ப்பது கடினம், அந்த மதுவையே மறைந்து இருந்து குடிக்கும் வழக்கம் கொண்ட பலர் நம் ஊரில் அதிகம். இந்த மதுவை விட முடியாத வாழ்க்கை கொண்டீர்களே, என்ன காரணம் ரஜினி. கணித மேதை ராமனுஜரின் வாழ்க்கை வரலாறு மிகவும் மோசமானது ரஜினி. தெரிந்து இருப்பீர்கள். கடல் கடந்து சென்றால் ஒரு பிராமணர் என்ற அந்தஸ்து தொலையும் என்ற நிலையிலும் கடல் கடந்து சென்றவர். ஆனால் தனது உயிர் புலால் உண்பதால் சரியாகும் என்கிற நிலையிலும் அதை தொடாதவர் என்றே வரலாறு சொல்கிறது. அது என்ன காரணமோ ரஜினி. தனிப்பட்ட மனிதர்களின் வாழ்க்கை தனிப்பட்ட மனிதருக்கு மட்டுமே சொந்தம். ஆனால் எப்பொழுது அவர்கள் பொது மனிதர்கள் ஆகிறார்களோ அப்பொழுது அவர்களுக்கு தனிப்பட்ட வாழ்க்கை எதுவும் இல்லைதான். 

சாதாரண மனிதருக்கு இருக்கும் பொறுப்பை விட பிரபலமான மனிதர்களுக்கு இருக்கும் பொறுப்பு மிக மிக அதிகம் என சொல்வார்கள். ஆனால் பொறுப்பில்லாமல் நடந்து கொள்ளும் பக்குவம் அந்த பிரபலமானவர்களுக்கே  உரித்தான ஒன்று. எத்தனை கதாபாத்திரங்கள், எத்தனை கதைகள் படித்து இருப்பீர்கள். எத்தனை கதைகள் சொல்லி இருப்பீர்கள். உங்களுக்கு தெரியாததா ரஜினி. 

ஆன்மிகம் என சொல்லிக்கொண்டு சக உயிரினங்களை உண்டு வாழும் வாழ்க்கை எப்படி சரியென சொல்வது. தனது அன்னை, தந்தை, உறவினர்களின் உடல் நலம் பற்றி அக்கறை கொள்ளாத பலர் உங்கள் உடல் நலம் குறித்து வேதனை கொண்டிருப்பதை கண்டீர்களா ரஜினி. மது, புகை என இருந்தாலும் இத்தனை வருடம் பிரச்சினை இல்லாமல் வாழ்ந்ததே உங்களின் கட்டுகோப்பான வாழ்க்கைதான். உங்களின் கட்டுகோப்பு எங்களை போன்றவர்களிடம் இல்லையே ரஜினி. 

நீங்கள் நல்ல மனிதர் என்றே பலராலும் அறியப்பட்டு இருக்கிறீர்கள். ஆனால் குடிப்பழக்கம், புகைப்பழக்கம், புலால் உண்ணல், கோபம் போன்றவை கொண்டிருப்போர் நல்ல மனிதர்களாக இருந்திடல் சாத்தியம் எனினும் நல்ல உடல் நலத்துடன் இருப்பது சாத்தியம் இல்லை என்பது உங்களுக்கு இமயமலை கற்றுத் தராததா. 

சூழ்நிலை கைதி என சொன்னீர்களே ரஜினி. பணம் சம்பாதிக்கும் வியாபாரிகள் அனைவருமே அப்படித்தான். அந்த வியாபாரிகள் தனது சொந்த நலனுக்காக எதையும் விற்றுவிடும் அளவுக்கு துணிந்தவர்கள். நேர்மையும், நியாயமும் உலகில் எங்குமே இல்லையே ரஜினி. 

இத்தனை விசயங்கள் என்னை போன்று எழுதும் பலர், பேசும் பலர் எல்லாம் யோக்கியவான்கள் இல்லை ரஜினி. இந்த எழுத்தை, பிறர் எழுத்தை, பிறர் பேசுவதை நீங்கள் படிக்க, கேட்க நேரிட்டால் மனதுக்குள்  சிரித்து கொள்வீர்கள் அல்லவா. அதுதான் மனிதர்களின் ரகசியம். பிறருக்கு ஒன்று எனில் உடனே அறிவுரை சொல்லும் வித்தைகாரர்கள். தன்னை பற்றி நினைத்து கூட பார்க்க மாட்டார்கள். நீங்கள் இதற்கெல்லாம் கவலைப்பட போவது இல்லை. விரைவில் நலம் பெறுங்கள் ரஜினி. உங்களால் மனதளவில் உற்சாகம் கொள்ளும் கோடி மக்கள் உண்மையிலேயே உண்டு. 

Friday 13 May 2011

அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்

அரசியல் பண்ண வேண்டிய இடத்தில் அரசியல் பண்ணாமல் வேறு  பல இடங்களில் அரசியல் பண்ணுவது நமது வாடிக்கை.

வீட்டில் இருந்தே அரசியல் தொடங்கிவிடுகிறது. 'நாக்கில்லாத நரம்பு எப்படின்னாலும் பேசும்' என்பது உலகம் அறிந்த உண்மைதான். 

'சீ சீ இந்த பழம் புளிக்கும்' எனும் கதையாய் பல நேரங்களில் நிகழ்வது தவிர்க்க இயலாதது. 

அ தி மு க எனும் கட்சியும் இரட்டை இலை எனும் சின்னமும், தி மு க கட்சியும், உதயசூரியன் எனும் சின்னமும் இன்னும் கிராமங்களில் இருந்து கொண்டிருக்கலாம். நகரங்களில் பல மாற்றங்கள் வந்த பிறகும் அதே கட்சி, அதே சின்னம், அதே 'இல்லாத கொள்கைகள்' என இந்த கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வருவதும் ஏதாவது ஊழல் வெளித் தெரிவதும் என இந்த கட்சிகளின் செயல்பாடுகள் மக்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுவது இல்லை. 

அதை செய்கிறேன், இதை செய்கிறேன் என வாய் சவுடால் விடாமல் மக்களின் குறை தீர்க்கும் அரசு என்பது வெறும் கனவு. 

அமெரிக்காவின் ஒபாமா பெரிதும் எதிர்பார்க்கப்பட்டார். பொய்த்து போனது மக்களின் எதிர்பார்ப்பு. 

ஒரு அரசு செய்வதை விட மக்கள் நினைத்தால் செய்யலாம் என்பதுதான் அமெரிக்காவில் நடக்கும் தேர்தலும் சரி, தமிழகத்தில் நடக்கும் தேர்தலும் சரி காட்டுகின்றன. 

எனவே இந்த அரசு, தான் என்ன செய்ய வேண்டும் என்பதை விட மக்களை எப்படி விழிப்புணர்வுடன் செயல்பட விட வேண்டும் என்பதில் தான் இந்த அரசின் வெற்றி உள்ளது. 

மக்கள் நினைத்தால் மட்டுமே பெரிதும் மாற்றம் ஏற்படுத்த முடியும். மக்களின் மன நிலையில் பெரும் மாற்றம் ஏற்படுத்தும் அரசு என்பதெல்லாம் நமது தமிழகத்தில் மட்டுமல்ல உலகத்தில் கூட  சாத்தியம் இல்லை. 

அதே குண்டும் குழியும் நிறைந்து கிடக்கும் சாலைகள். எந்த ஒரு வசதிகளும் இல்லாத பள்ளிகள், ஊழல் நிறைந்த மனிதர்கள், வியாபாரிகள் என இவர்கள், இவைகள் எல்லாம் ஒரு அரசு மாறுவதால் மாறுவதில்லை. மனிதர்கள் மாறினால் மட்டுமே மாறும்.

அந்த பெரும் மாற்றத்தினை முதலில் தமிழக முதல்வராக பதவியேற்க இருக்கும் ஜெயலலிதா அவர்கள் தனக்குள் ஏற்படுத்தி கொண்டிருக்கிறாரா என்பதுதான் இன்று முதன்மை கேள்வி. 

இந்த வெற்றியின் உற்சாகத்தில் பேசும் பேச்சுகள் அடுத்த நொடிகளில் மறந்து போகும். மக்கள் மீண்டும் மறக்கப்படுவார்கள். மக்களும் மறந்து போவார்கள். 

ஒரு வீடு, ஒரு நகரம், ஒரு மாநிலம் எப்படி இருக்க வேண்டும் எனும் கனவு எந்த முதல்வருக்கும் இருந்தததில்லை, இருப்பதும் இல்லை. 

சிறு வயதில் இந்த கட்சிக்கு கொடி தூக்கிய காலம், தொண்ணூறுகளில் இந்த கட்சி மாபெரும் வெற்றி பெரும் என கணித்தபோது ஒரு இடம் கூட கிடைக்காமல் தொலைந்த காலம். அ தி மு க ஏனோ மனதில் இருந்து கொண்டிருக்கிறது, எந்த ஒரு மாற்றமும் இல்லாமல். 

வாழ்த்துகள் அ தி மு க தலைமைக்கும், தொண்டர்களுக்கும், மக்களுக்கும். 

ஐந்து வருடங்களில் என்ன நடக்கும் என எவர் சோதிடம் பார்ப்பது இனி? ஒரே சாலையில் பயணித்து பழக்கப்பட்டுத்தான் போனோம். வழியில் பார்க்கும் மனிதர்கள் மட்டும் வெவ்வேறாக இருக்கிறார்கள் ஒரே குணத்துடன். 




Thursday 5 May 2011

சமூக சேவை எனும் சாக்கடை

சேவை மனப்பான்மை என்பது அனைவருக்கும் அத்தனை எளிதில் கை கூடுவதில்லை. சமூகத்தின் மீது அக்கறை கொண்டு சமூகத்தினை ஒரு சிறந்த, உயர்ந்த சமூகமாக மாற்றிட பலரின் மனதில் எண்ணம் ஓடிக் கொண்டிருக்கும். 

இந்த சமூக சேவையானது வீட்டில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பார்கள். வீட்டினை குப்பையாக வைத்திருப்பவர் சமூகத்தினை நிச்சயம் துப்புரவு செய்ய இயலாது. 

இந்த சமூகத்தில் நான் என்பது தனி, நாம் என்பது ஒரு கூட்டம். இதில் ஒரு நாம் என்பதற்கு பதிலாக பல நாம் இருப்பதுதான் சமூக பிரச்சினை ஆகிறது. 

நோய் என ஒன்று வந்துவிட்டால் அதன் அடிப்படை விசயத்தை அறிந்து கொண்டு தீர்வு செய்யாவிட்டால் அந்த நோய் மீண்டும் மீண்டும் வந்து சேரும். அதைப் போலவே சமூக பிரச்சினைகளுக்கான ஆணி வேரதனை அறியாது போனால் பிரச்சினைகள் ஒருபோதும் அழியாது. 

சிறுவர்களை வதைப்படுத்தும் படங்களை சேமித்து வைப்பது தனக்கு ஒரு பொழுது போக்கு என ஒருவரை கைது செய்தபோது கொஞ்சம் கூட மனிதாபிமானமே இல்லாமல் அவர் சொன்னதை கேட்டபோது தவறு எங்கு தொடங்கபடுகிறது என்பது அறிவது அவசியமாகிறது. 

நல்லவையோடு தீயவைகளும் சேர்ந்தே இருக்கும், அதில் நல்லவைகளை மட்டும் தேர்ந்தெடுத்து வாழ வேண்டும் என இருப்பதுதான் பகுத்தறிவு என சொன்னாலும், மனிதர்களின் பலவீனங்களால் தீயவைகளே மிகவும் முன்னிலை வகிக்கின்றன. 

அப்படிப்பட்ட தீயவைகளை அடியோடு ஒழித்து கட்ட முயலாமல் வேடிக்கை பார்க்கும் சாக்கடை சமூகம் தான் இவ்வுலகம் எங்கும் நிலவுகிறது. பல கோடி மக்களை பார்க்கும்போது இவர்களா தவறு செய்கிறார்கள் எனும் இனம் புரியாத கேள்வி எழும் வேளையில் நாமும் தவறு செய்கிறோம் என்கிற ஒரு உணர்வு சகிப்புத்தன்மையை ஏற்படுத்தி செல்வதை எவராலும் தவிர்க்க இயலாது. ஏதோ ஒருவகையில் முரண்பட்ட வாழ்வினை வாழும் சமூக புழுக்கள் ஆகிப் போனோம். 

நேர்மையும், நியாயமும் கேலிப் பொருளாகிப் போனது. தவறு செய்பவர்களை மறைக்கும் கேவலம் எங்கும் நிறைந்து போனது. இப்படித்தான் உலகம் இருக்கும் என்பதை ஏற்று கொண்ட பின்னர் அதன்படியே வாழ்வது என்பது பலருக்கும் பழகித்தான் போனது.

கொலை குற்றங்கள் என நிறைந்து காணப்படும் சமூகத்தில் நாம் வாழ்ந்தால் என்ன? அழிந்தால் என்ன? 

ஒவ்வொரு வினாடியும் பல குழந்தைகள் பரிதாப நிலைக்கு உட்படுத்தபடுகிறார்கள். இதை தெரிந்தும் தெரியாத சமூகமாகவே வாழும் நமக்கு எதிர்காலம் என்பது வெளிச்சமாகவே இருக்கிறதாம். 

Tuesday 3 May 2011

முடியாது என சொல்லவா தெரியாது!

முடியாது என சொல்ல தெரியாமல் பல விசயங்களில் மனிதர்கள் சிக்கி கொண்டு தடுமாறுகிறார்கள் என படித்தபோது ஆச்சர்யமாக இருந்தது.

நம்மை பற்றி நாம் அறிந்து கொண்டிருப்பதை விட நம்மை பற்றி பிறர் அதிகம் அறிந்து வைத்திருக்கும் வகையில் நாம் நடந்து கொள்கிறோம் என்பதுதான் இந்த சிக்கலுக்கு காரணம். 

பிறரின் தூண்டல்களில் நம்மை நாம் ஈடுபடுத்தி கொள்வதினால் நாம் மிகவும் சிரமப்படுகிறோம். இதைத்தான் ஆசையே துன்பத்திற்கு காரணம் என சொல்லலாம். 

துன்பம் துயரம் இல்லாம் உயரம் கைக்கு எட்டுவதில்லை. அப்படியெனில் சிரமம் இல்லாமல் வாழ்வது எப்படி? போராடாமல் வாழ்வது எப்படி?

சிரமப்படாமல், போராடாமல் வாழ ஒருவர் நினைத்துவிட்டால் அதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவுதான். 

நினைத்ததை செயல்படுத்த அதற்கான அயற்சி இல்லாத முயற்சி அவசியம். முடியாது என சொல்லவா தெரியாது. 

முடியும் விசயத்தில் முடியாது என சொல்பவர்கள் சாதனையாளர்களாக முடியாது என்பது உண்மை. முடியாது விசயத்தில் முடியும் என சொல்பவர்கள் சோதனைகுட்பட்டு, வேதனைக்குட்பட்டு சீரழிகிறார்கள். 

முடியும் விசயம் எது? முடியாது விசயம் எது? உங்களை நீங்களே உறுதி படுத்தி கொள்ளுங்கள். அடுத்தவர் சொல்வதை கேட்டு அடுத்த அடி கூட எடுத்து வைக்காதீர்கள். 

Sunday 1 May 2011

கூட்டி கழித்தல்

கூட்டி கழித்தல் 
மனிதர்களின் அற்புத விளையாட்டு 

தேவையெனில் கூட்டுவதும்
தேவையற்றதெனில் கழித்தலும்
பரம்பரையாய் வந்த விளையாட்டு 

லாப கணக்குதனில் கூட்டுதலும்
நஷ்ட கணக்குதனில் கழித்தலும்
கால கணக்குகளின் விளையாட்டு 

கூட்டுதலிலும் கழித்தலிலும் 
மனம் வைத்தே பெருக்குவதில்
சிறுத்து போன மனித விளையாட்டு! 


Wednesday 23 March 2011

ஆஸ்த்மா - ஒரு ஆராய்ச்சித் தொடர் (2)

காற்று வளி மண்டலம். பூமிக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் எனலாம். வாயுக்கள் சில கிரகங்களில் இருக்கத்தான் செய்கின்றது. ஆனால் அந்த வாயுக்கள் எல்லாம் உயிர்கள் தோன்ற வழி வகுக்கவில்லை என எண்ணும்போது ஆச்சர்யம் மட்டுமே மிஞ்சுகிறது. அறிவியல் சொல்படி இந்த பூமி உருவானபோது இங்கே ஆக்சிஜன் தனியாக இல்லை. ஏதோ ஒரு தனிமத்துடன் இணைந்தவண்ணமே இருந்து இருக்கிறது. கரியமில வாயு தன்மையில் இந்த ஆக்சிஜன் கலந்து இருக்கிறது. மேலும்  நீர் கோமெட்டினால் பூமியில் கொட்டப்பட்டு இருக்கிறது. அந்த நீரில் ஆக்சிஜன் ஹைட்ரஜனுடன் கலந்து இருக்கிறது.

தனியே தனிமமாக இல்லாத ஆக்சிஜன், ஆனால் உயிர்கள் எப்படி உருவானது என பார்க்கும்போது பாக்டீரியாவை சொல்கிறார்கள். இவ்வுலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் (?)சுவாசிக்கின்றன. ஏதோ ஒரு வகையில் அதன் உடல் அமைப்புகள் அவ்வாறு இருக்கிறது. இந்த சுவாசத்தின் முக்கிய பணி என்னவெனில் அந்த உயிரினத்திற்கு தேவையான சக்தியை வழங்குவது மட்டுமே.

தானாக உணவை தயாரிக்க தெரிந்த பாக்டீரியாக்கள், தாவரங்கள் எல்லாம் சுவாசம் செய்து கொண்டுதான் இருக்கின்றன. மூச்சை உள்ளிழுத்து விடுதல் மூலம் மட்டும் ஒரு உயிரினம் வாழ்ந்து விடுவதில்லை. செல்களில் இருக்கும் மைட்டோகான்றியாவில் நடைபெறும் வேதிவினையே ஒரு உயிரினம் வாழ  வழி வகுக்கிறது.

உள்ளிழுக்கப்பட்ட காற்றில் இருக்கும் வாயுக்கள் அளவும், வெளிவிடப்படும் காற்றில் இருக்கும் வாயுக்கள் அளவும், ஏன் ஈரப்பதமும் வித்தியாசபடுகிறது.

உள்ளிழுக்கும் காற்றில் இருக்கும் வாயுக்கள் அளவு ஆக்சிஜன் 21% , நைட்ரஜன் 78% கார்பன் ஆக்சைடு 0.04% ஆர்கன் மற்றும் இதர வாயுக்கள் 1% அதோடு குறைந்த ஈரப்பதம் என அறியப்படுகிறது. அதுவே வெளியிடப்படும் காற்றில் உள்ள வாயுக்கள் அளவு ஆக்சிஜன் 16% , நைட்ரஜன் 78% கார்பன் ஆக்சைடு 4% ஆர்கன் மற்றும் இதர வாயுக்கள் 1% அதோடு அதிக  ஈரப்பதம் என அறியப்படுகிறது. 

இந்த நைட்ரஜன் நீரில் மூழ்கி செல்பவர்களுக்கு ஆஸ்த்மா வரவழைக்கும் சக்தி உடையதாக குறிப்பிடுகிறார்கள். 

(தொடரும்) 

Saturday 5 March 2011

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?


பணம் குழந்தையை தரும் என்றேன் மனதில் ஏற்பட்ட பதட்டத்தை நீக்கிவிட்டு. என்ன சொல்கிறாய் என்றே திருப்பி என்னைக் கேட்டாள். ஆமாம், பணம் எல்லாவற்றையும் தரும் என்றேன் சொல்வதின் அர்த்தம் புரியாமல். 

விளையாட்டாக பேசாதே, எனது வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டது. என் மீது அவர் கொண்டிருந்த பாசம் எல்லாம் விலகி போய்கொண்டிருக்கிறது என அழுதேவிட்டாள். 

நிலைமையை புரிந்து கொண்டவனாய் என்ன பிரச்சினை என கேட்டபோது எல்லா பிரச்சினைகளையும் வரிசையாக சொல்லி வைத்தாள். குழந்தை பெற்றுக் கொள்ளும் பாக்கியம் இல்லாத ஒன்றுதான் பெரும் கவலை என்றாள். கவலைப்படாதே என ஆறுதல் மட்டும் சொல்லி வைத்தேன். 

ஆனால் அதற்கடுத்த கேள்வி ஒன்றை அவள் என்னிடம் கேட்பாள் என சற்றும் எதிர்பார்க்கவில்லை. 'என்னை திருமணம் செய்து கொள்வாயா?'' என்றாள். எனக்கு ஆத்திரம் அதிகமாகவே வந்தது. இனிமேல் உன்னுடன் எனக்கு எந்த உறவும் வேண்டாம் என உதறி தள்ளிவிட துடித்தேன். அதை சொல்லாமல் செய்துவிடுவது மிகவும் நல்லது என தோன்றியது. 

''எதற்கு உனது மனம் இப்படி அலைபாய்கிறது, திருமண வாழ்க்கையில் நீ இருந்து கொண்டு எதற்கு இப்படி பேசுகிறாய், நிச்சயம் உனது பிரச்சினை சரியாகிவிடும்'' என சொல்லிவிட்டு அவளிடம் பணம் செலவழித்து பிள்ளைபேறு பெற்று கொள்ள வழி தேடுமாறு சொன்னேன். எல்லா மருத்துவமும் பார்த்தாகிவிட்டது என்றே கண்ணீர் வடித்தாள். எனக்கு வேதனையாகி போனது. நீயும் காதலித்து பார் எல்லாம் புரியும் என்றாள் அவள். 

நான் திருமணம் ஆனவன், எனக்கு எப்படி காதல் இனிமேல் வரும் என்று அவளிடம் சொல்லி சென்று வருமாறு அனுப்பிவிட்டேன். எனக்கு காதல் வருமா எனும் யோசனை அதிகம் ஆகிப் போனது. இதை மனைவியிடம் ஒரு நாள் கேட்டு வைத்தேன். 

உங்களுக்கு வரும் எனில் எனக்கும் வரும் என எச்சரித்தார். அவரின் தீராத கோபம் என்னை பயமுறுத்தியது. ஆனாலும் காதல் வருமா எனும் கேள்வி மட்டும் தொலைந்து போகவே இல்லை. 

என்னுடன் வேலை செய்த பெண் எனக்கு ஒருமுறை அழைப்பு விடுத்தாள். என்ன என விசாரித்தேன். அவளது வாழ்க்கையை இனிமேல் வாழ விருப்பமில்லை என சோகமாக சொன்னாள். மேலும் அவளது கணவர் அவளை விவாகரத்து பண்ண வேண்டும் என அதற்கான பணிகளை செய்ய தொடங்கிவிட்டார் என சொன்னதும் கவலை வந்தது. உடனடியாக நான் அவரிடம் பரிந்து பேசினேன். எனக்கு தெரிந்த சில விசயங்களையும் சொன்னேன். சரி என கேட்டு கொண்டார். ஆனால் சில மாதங்களில் விவாகரத்து அவர்களுக்குள் நடைபெற்றது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. 

காதல் வருமா? காதல் எப்படி வரும்? என்பதற்கான காரணத்தை தேடி அலைந்தேன். இந்த தேடலில் இருந்த நேரத்தில் தமிழ் படங்களில் வரும் கதை நாயகிகளை போல ஒரு நாயகியை கண்டேன். அவள் யார், அவளுக்கு திருமணம் ஆகிவிட்டதா, எனக்கு திருமணம் ஆகிவிட்டதே என்பதையெல்லாம் மறந்து எனக்குள் காதல் துளிர்விட்டது. இதுதான் காதல் என சொல்வதா என்பதை புரிந்து கொள்ள இயலாமல் அந்த நாயகியுடன் பேசுவதில் அலாதி பிரியம் கொண்டேன். அவள் பக்கத்து அலுவலகத்தில் புதிதாக வேலைக்கு சேர்ந்து இருக்கிறாள் என்பதே பெரும் வசதியாகி போனது. 

இது காதல் என்பதா? மனைவியிடம் விபரத்தை சொன்னேன். அன்று வீட்டில் இருந்த பொருட்கள் எல்லாம் நடனம் ஆடின. அமைதி, சப்தத்திடம் புதிய பாடம் கற்று கொண்டிருந்தது. 

என்னுடன் வேலை செய்த பெண் என்னை சில தினம் பின்னர் பார்த்தாள். இன்னும் நீங்கள் என் மனம் விட்டு அகலவில்லை என்றாள். எனக்குள் இருந்த காதல் அவளது காதலை முதல் முதலாக புரிந்து கொண்டது. 

இந்த சமூகத்தில் எல்லா அவலங்களும் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. எது அவலம், எது அவலம் இல்லை என்பதை தீர்மானிப்பவர்கள் மட்டும் மாறிக்  கொண்டே இருக்கிறார்கள். 

முற்றும். 

Tuesday 15 February 2011

வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யமானது

பல மாதங்கள் முன்னர் எனது மனைவிக்கு ஒரு புத்தகம் வாங்கி தந்தேன். புத்தகத்தின் தலைப்பு மூன்று தேநீர் கோப்பைகள். இந்த புத்தகம் வாங்க சொல்லி எவரும் பரிந்துரைக்க வில்லை.

தமிழ் எழுதுவது மறந்து கொண்டிருந்தது. வேலை பளு என சொல்வதா, எழுத விருப்பம் இல்லை என சொல்வதா என தெரியவில்லை. ஏனோ தமிழ் பக்கம் வரவே எண்ணம் ஏற்படவில்லை. சில நேரங்களில் இது போன்ற ஒரு இடைவெளி எனக்கு ஏற்படுவது உண்டு.

இந்த புத்தகம் பற்றி சொல்ல நினைத்ததை தலைப்பாகவே வைத்துவிட்டேன். ஆங்கிலம் படிக்க விருப்பம் இருப்பவர்கள் நிச்சயம் இந்த புத்தகம் வாங்கி படியுங்கள்.

உலகில் உதவ வேண்டும் என எண்ணம் இருப்பவர்கள் பல்லாயிரம் இருக்கலாம், ஆனால் வெகு சிலரே உதவி செய்கிறார்கள். அப்படி உதவி செய்யும் மனிதர்களை நாம் உற்சாகபடுத்தி அவர்களது உதவிக்கு உறுதுணையாய் இருந்தாலே அது பெரிய காரியம் தான். ஆனால்...

எனது சட்டை பையில் கொஞ்சம் பணம் அதிகமாகவே இருக்கிறது; அழுத பையன் அழுதபடியே;

புத்தகம் வாங்க, அறிந்து கொள்ள  http://www.threecupsoftea.com

நன்றி. 

Tuesday 4 January 2011

ஆஸ்த்மா - ஒரு ஆராய்ச்சித் தொடர் (1)

1. 


கதைகளும், கவிதைகளும், கட்டுரைகளும் தமிழில் எழுதிக் கொண்டிருந்தபோது மருத்துவம் சம்பந்தமாக எழுத இயலுமா என என்னை நோக்கிக் கேட்டபோது இப்போதைக்கு அந்த எண்ணம் இல்லை என ஓரிரு வருடம் முன்னர் சொல்லி இருந்தேன். 'கதை விடுவது மிகவும் எளிது' என நினைத்துக் கொண்டு மருத்துவம் சம்பந்தமாக எழுதுவது பற்றி சிறு முயற்சி கூட எடுத்ததில்லை.

கிட்டத்தட்ட பதினெட்டு வருடங்களாக ஆங்கில மொழியிலேயே பயின்று வந்ததின் காரணமாக பல ஆங்கில சொற்களை தமிழ்படுத்துவதில் இருக்கும் சிரமம் ஒரு ஆராய்ச்சியாளனின் பாதை எனும் தொடரை எழுதும்போது அறிந்தேன். ஒரு விசயத்தை வெளியில் சொல்ல வேண்டுமெனில் இருக்கும் சிரமத்தைப் பொருட்படுத்தாது எழுதுவது மிகவும் அத்தியாவசியமாகும். அதன் பொருட்டே ஆஸ்த்மா பற்றிய ஆராய்ச்சித் தொடரை எழுத முயற்சி எடுத்து இருக்கிறேன்.

தமிழில் எழுதுவதின் மூலம் விசயங்களைத் தவறாகச் சொல்லிவிடக் கூடாது என்பதில் கவனமுடன் இருக்க முயற்சி செய்கிறேன்.

சுவாசம் நன்றாக இருந்தால்தான் இந்த பூமியில் சுகவாசம் செய்ய இயலும். அந்த சுவாசத்தில், சுவாசக் குழலில், சுவாசப் பைகளில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும், அது எதனால் ஏற்படுகிறது, என்னென்ன ஆராய்ச்சிகள் உலகில் செய்து வருகிறார்கள், என்னென்ன மருந்துகள் நடைமுறையில் இருக்கின்றன என்பது குறித்து விரிவாக, விளக்கமாக விரைவில் தொடர்வோம்.