Saturday 24 September 2011

தூக்கு தண்டனை வேண்டாமெனும்

இதுவரை மனித அறிவிற்கு எட்டியவரை இந்த உலகத்தில் பூமியில் தவிர வேறு கிரகங்களில் ஜீவராசிகள் இருப்பதாக தெரியவில்லை. இருப்பினும் பூமியை போலவே வேறு கிரகங்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும், சில கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் உண்டு, அந்த கிரகங்களில் ஜீவராசிகள் இருக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் நம்புகிறார்கள். ஆனால் இதுவரை எந்த ஒரு தடயமும் கிடைக்கவில்லை. 

இப்படியொரு அரிய வாய்ப்பினை பெற்ற பூமியில் நிம்மதியாக வாழ்ந்து விட வேண்டும் என்கிற முனைப்பு பலரிடம் இருப்பதாக தெரியவில்லை. ஏதாவது பிரச்சனைகளை உருவாக்கி கொள்கிறார்கள் அல்லது சிக்கி கொள்கிறார்கள். இப்படிப்பட்ட கட்டுக்குள் அடங்காத வாழ்க்கையில் இப்படி வாழ்வதே பெரும் சுவாரஸ்யமாக இருக்கிறது என்கிறார்கள் பலர். 

பொருளாதார சரிவு ஒருபுறம். தொலைந்து போகாத தீவிரவாத போக்கு ஒரு புறம் என இந்த பூமி தொடங்கிய தினம் முதல் இதுவரை பல இன்னல்கள் மறையவில்லை. சமுதாய மாற்றம் என்பது அத்தனை எளிதாக நடைபெறும் எனும் கனவு கனவாகவே இருக்கப் போகிறதோ எனும் அவ நம்பிக்கை வந்து போகிறது. 

திருடர்கள், கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்கள் என அனைவருமே இந்த வாழ்க்கையில் மிகவும் எளிதாக தப்பிவிடுகிறார்கள். இவர்கள் அத்தனை எளிதாக பிடிபடுவது இல்லை, இவர்களுக்கு கிடைக்கும் இந்த சுதந்திரமே தொடர்ந்து தவறுகள் நடைபெற்று வருவதற்கு காரணமாகும். ஹசாரே ஒவ்வொரு அதிகாரிகளின் வீடு சென்று ஊழல் செய்கிறார்களா என ஆராயவாப் போகிறார், வேண்டா வெறுப்பாக மசோதா இயற்றிய அரசு கடுமையாக நடந்து கொள்ளத்தான் போகிறதா? இப்படித்தான் மொத்த உலகமும் திண்டாடி கொண்டிருக்கிறது. 

போதை பொருள் விற்பனை என ஒரு பக்கம் கோடி கோடியாக சம்பாதிக்கும் கயவர்கள் கூட்டம், தெரிந்தே தவறு நடந்து கொண்டிருக்கிறது. இதை கண்டு கொள்ளும் நிலையில் நாம் இல்லை என்பதுதான் ஆச்சரியம். 

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் கொலை நடந்து வருடங்கள் உருண்டோடி விட்டன. அவரின் உயிர் எடுக்கப்பட்ட விதம், அவரின் உயிர் எடுக்கப்பட வேண்டிய அவசியத்தின் காரணம் என நியாயங்களும், எதிர் விவாதங்களும் என பிரிந்து நின்றவர்கள் பற்றி நினைக்கும்போது இவர்களும் வாழ்கிறார்கள் என்கிற நினைப்பு மட்டுமே எஞ்சி நிற்கும். தவறு செய்ய திட்டமிட்டவர்கள், தவறு செய்ய துணை போனவர்கள் என தெரிந்தும் நியாயம், அநியாயம் என விவாதிக்கப்பட்டு சட்டம் என ஒரு தீர்ப்பு எல்லாம் சொன்ன பிறகும் அநியாயம், நியாயம் என பேசி கொண்டிருப்பவர் பற்றி நினைக்கும்போது இவர்கள் எல்லாம் எப்படிப்பட்டவர்கள் எனும் நினைப்பு மிஞ்சி நிற்கும். 

பொது விவாதம் எல்லாம் முள்ளுக்கு முள் சரியா என்பதுதான். கொடுமைகள் செய்ய கொஞ்சமும் பயம் இல்லாத, எதைப்பற்றியும் கொஞ்சமும் சிந்திக்காத இந்த உலகில் உலா வந்து கொண்டிருக்கும் பல அர்த்தமற்ற பிறப்புகள் பற்றிய சிந்தனை அவசியமில்லாததுதான். 

இலங்கை மாநகரில் தீவிரவாத கொடுமைகளால் கொல்லப்பட்ட உயிர்கள் எத்தனை? அத்தனை உயிர்களை பறித்த மன சாட்சியே இல்லாத ராணுவ வீணர்கள் எந்த சவ சட்டத்திடம் அனுமதி பெற்றார்கள்? அத்தனை கொடுமைகளையும் நிறைவேற்றிய பின்னரும் கொக்கரித்துக் கொண்டிருக்கும் கேவல பிறப்புகள் இன்றும் உலகில் உலா வருகிறதே? அந்த பிறப்புகளுக்கு  உலக அமைப்பு தூக்கு தண்டனை தர வேண்டும் என தீர்மானித்தால் இவர்கள் என்ன சொல்வார்கள் என்றுதான் பார்க்க வேண்டும்! ஒவ்வொருவருக்கும் தான் செய்கிற காரியத்திற்கு அவர்களுக்கு ஏற்றார் போல் ஒரு காரணம் இருக்கத்தான் செய்யும், தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். 

உலகில் மிக அதிகமான மக்கள் சூழ்நிலைகளால் தவறு செய்கிறார்களாம். ஆனால் சூழ்நிலைகளை காரணம் காட்டி பிற உயிர்களை பறிக்கும் உரிமை எவருக்குமே இல்லை என வீர வசனம் பலருக்கும் அத்துப்படி. அப்படி பிற உயிர்களை பறிக்கும் கொடுமைகளை செய்ய துணை நிற்கும், பிற உயிர்களை எடுத்து தொலையும் மற்ற உயிர்கள் இவ்வுலகில் இருக்கவேண்டும் என்பதெல்லாம் அவசியம்தானா என்பதற்கான விவாதம் கூட தேவை இல்லை. 

திருத்தப்படாத சட்டம், திருந்த முடியாத வட்டம். 

எவராவது எழுதலாம் தூக்கு தண்டனை வேண்டுமெனும் என. 


No comments: