Showing posts with label அறிவியல். Show all posts
Showing posts with label அறிவியல். Show all posts

Wednesday 11 September 2013

ஜீரோ எழுத்து - 5 குவாண்டம் கொள்கையும் மூடத்தனமும்


 ''இது தீர்மானிக்கப்பட்ட வாழ்க்கை'' - ஐன்ஸ்டீன்

''எப்படி எப்படி நடக்குமோ, அப்படி அப்படியே நடக்கும்'' - வழக்கு மொழி

''கிடைக்கிறது கிடைக்காம போகாது, கிடைக்காதது கிடைக்கவே கிடைக்காது'' - ரஜினி பட வசனம்

''கடவுள் தாயக்கட்டையை உருட்டுவதில்லை'' - ஐன்ஸ்டீன்

''மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்'' - வழக்கு மொழி

''வினை விதைத்தவன் வினை அறுப்பான், திணை விதைத்தவன், திணை அறுப்பான்'' - வழக்கு மொழி

''அண்டத்தில் உள்ளது பிண்டத்தில்'' - வழக்கு மொழி

மேலே சொன்ன விசயங்கள் எல்லாம் ஒரு துக்கிரித்தனமாக இருக்கும்.  இது போன்ற பல சொல்லப்பட்ட விசயங்கள்  மூடத்தனமான கருதப்படுகின்றன. இந்தியாவில், ஏன் இந்த உலகில் வாழும் ஒவ்வொருவரும் தத்துவ மேதைகள் போலவே காட்சி அளிக்கிறார்கள். இதில் பெரும்பாலோனோர் வாழ்க்கையை மிகவும் சர்வ சாதாரணமாய் வாழ்ந்துவிட்டு போவார்கள்.

அணுக்கொள்கை பற்றி கிரேக்கம் சொன்னது இது தான். ''ஒன்றை வெட்ட வெட்ட சின்ன துகள்கள் ஆகும். அதை மேலும் மேலும் வெட்ட அதை வெட்ட இயலாத நிலை ஒன்றை  அடையும்'' இப்படி எண்ணற்ற விசயங்கள் நினைவில் இருந்து வந்தவைதான்.

''ஒளியைவிட வேகமாக செல்லும் துகள்களோ, அலைகளோ இல்லை'' - ஐன்ஸ்டீன்

பொதுவாக ஒரு விசயத்தை சொன்னால் அதற்கான செயல்பாட்டு முறை அவசியம், அதாவது நிரூபிக்கும் வழி முறை. கடவுள் இருக்கிறார் என்பதை நிரூபிக்க பல சோதனைகள் கடவுளே நடத்துவதாக சொல்லப்பட்டு வருகிறது.இவ்வாறு அறிவியலில் சொல்லப்பட்ட விசயங்கள் பல செயற்முறை பயிற்சி மூலம் நிரூபிக்க பட்டு கொண்டு இருக்கிறது.

கீழே சொல்லப்பட்ட வாக்கியங்கள் மிகவும் விசித்திரமானவை. ஒன்றில் இருந்தே மற்றொன்று தொடங்கும் என்பதற்கான ஒரு தொடர்பு.

 ''நெருப்பில்லாமல் புகையாது''

''அறிவியல் யூகம் சொல்லும்''

''அறிவியல் தாயக்கட்டை உருட்டும்''

ஒரு நாணயத்தை, தலை பூ என இருந்தால், சுற்றிவிடும் போது  ஒன்று தலை விழும். அல்லது பூ விழும். இதைத்தான் அறிவியல் சொல்கிறது. ஆனால் எப்போது தலை விழ வேண்டுமோ அப்போது மட்டுமே தலை விழும் என்பதுதான் தீர்மானிக்கப்பட்ட விசயம். இதை வைத்தே ''கடவுள் தாயக்கட்டை உருட்டுவதில்லை'' என்றார்.

''குவாண்டம் கொள்கை'' இந்த உருட்டலைத்தான் சொல்கிறது. குவாண்டம் கொள்கையானது சொல்லப்படும் யூகம் ஓரளவுக்கு சரியே என்பாரும் உளர். ஆனால் இந்த குவாண்டம் கொள்கையினை நிரூபிக்க கூடிய செயல்பயிற்சி முறை இன்னமும் கிட்டவில்லை. இதனால் இதை ஒட்டிய ஷ்ட்ரிங் தியரியை கடுமையாக விமர்சிப்பவர்கள் இருக்கிறார்கள்.

இந்த குவாண்டம் கொள்கை அறிவியலின் மூடத்தனம் என்றே சொல்லவும் செய்கிறார்கள். அறிவியலால் நிரூபிக்க முடியாத விசயங்களை இந்த குவாண்டம் கொள்கையின் தலையில் கட்டிவிட்டதாகவும், இதற்காக செலவிடப்படும் பணம் ஊதாரித்தனமான செலவு எனவும் சொல்கிறார்கள்.

ஆமாம், குவாண்டம் கொள்கை என்றால் என்ன? இந்த குவாண்டம் கொள்கையை உருவாக்கியவர் சொன்னார், குவாண்டம் கொள்கையை புரிந்து கொண்டேன் என எவரேனும் சொன்னால் அவரைப் போல முட்டாள் எவரும் இல்லை.

குவாண்டம் கொள்கை எனக்கு மிக மிக சரியாக புரிந்து விட்டது. எனது முட்டாள்தனத்தை சிறிது நாட்கள் பின்னர் பார்க்கலாம்.

(தொடரும்) 

Thursday 22 August 2013

சூரியனின் வெகு அருகில் கோள்கள்

சாப்பிட்டுட்டு அப்புறமா போய் தூங்கு என அம்மா சொன்னதையும் கேட்காமல் தூங்க சென்றுவிட்டேன். சொன்னா கேட்கமாட்டியா என அம்மா வந்து மீண்டும் எழுப்பி நான் சாப்பிட்ட பின்னரே என்னை உறங்க அனுப்பினார்.

நல்ல அசதியாக இருந்தது. மீண்டும் என்னை யாரோ எழுப்பினார்கள். எனக்கு எரிச்சல் வந்தது. பார்த்தால் சாமியார் வந்து அருகில் நின்று கொண்டிருந்தார்.

''பக்தா, உடல் அலுப்போ''

''என்ன சாமி, இந்த நேரத்தில் வந்து எழுப்புகிறீர்கள்''

''என்னை கண்டால் உனக்கு வெறுப்பு வருமே, வரவில்லையா''

''இல்லை சாமி, அப்படி எல்லாம் வெறுப்பு இல்லை, நீங்கள் வராமல் இருப்பதே எனக்கு சங்கடமாக இருக்கிறது''

''பக்தா, நீ பூமி பற்றி அறிந்து கொள்ளும் தருணம் வந்துவிட்டது''

''சாமி, சொல்லுங்கள்''

''ஒரு சூரிய குடும்பம் உருவாக பல பில்லியன் ஆண்டுகள் ஆகின்றன. உருவான சூரிய குடும்பங்களில் இருக்கும் ஆற்றல் மீண்டும் மீண்டும் சூரிய குடும்பங்களை உருவாக்கி கொண்டே இருக்கின்றன. அப்படி உருவாகும் சூரிய குடும்பங்களில் உள்ள கோள்கள் சூரியனுக்கு வெகு அருகாமையில் இருப்பது இல்லை. கிட்ட இருந்தால் முட்டப் பகை என்பது போல இந்த கோள்கள் சற்று தள்ளியே அமைந்து விடுவதுண்டு. இதன் காரணமாக சூரியனின் ஈர்ப்பு விசையில் இருந்து தப்பித்து கொள்ளலாம்.

சூரியனை அனைத்து கோள்களும் சுற்றி வரும் என்பது நீ அறிந்தது தான். அதுவும் அருகில் இருக்கும் கோள்கள் மிகவும் வேகமாக சுற்றும் தன்மை கொண்டது. இதன் காரணமாக அவை சூரியனின் இழுப்புகள் சென்று விடுவது இல்லை.

ஆனால் சில கோள்கள் மிக மிக அருகாமையில் அதுவும் நான்கு மணி நேரத்தில் சூரியனை சுற்றிவிடும் அளவுக்கு உள்ள கோள்கள் சில இருக்கத்தான் செய்கின்றன. இத்தனை அருகாமையில் சென்றால் சூரியன் தனது வெப்ப அலைகள் மூலம் கோள்களை பிரித்து மேய்ந்துவிடும். அந்த கோள்கள் அழிந்தே போய்விடும். ஆனால் அப்படி அழிவுக்கு உட்படாத இந்த கோள்கள் இருப்பது ஒரு அதிசயத்தக்க நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது.

சூரியனை சுற்ற நமது பூமி எடுத்துக் கொள்வதோ 365 நாட்கள்.  சூரியனுக்கு அருகாமையில் உள்ள புதன் எடுத்து கொள்ளும் நாட்கள் 88. ஆனால் நான்கு மணி நேரம் என்பது நினைத்து கூட பார்க்க இயலா ஒன்று.

இப்படி இருக்கும் கோள்கள் இரும்பு தாதுக்களால் மட்டுமே ஆனதாக கூட இருக்கும் என யூகம் சொல்கிறார்கள். இவர்களின் கணக்கீட்டு படி பூமி செல்லும் வேகம் வினாடிக்கு 30கிலோமீட்டர், இந்த கோள்கள் ஒரு வினாடிக்கு 250கிலோமீட்டர் வேகம். அப்படி பார்த்தால் எட்டு மடங்கு குறைந்து, குறைந்தது நாற்பது முதல் நாற்பத்தி ஐந்து  நாட்கள் ஆகும். ஆனால் நான்கே மணி நேரத்தில் சுற்றுவது என்பது சுற்றும் அளவை கூட குறித்ததாக இருக்கலாம். பக்தா...

''என்ன சொன்னீங்க சாமி''

''சூரியனை வெகு வேகமாக சுற்ற கூடிய கோள்கள் உண்டு''

''அதனால என்ன சாமி''

''பக்தா, அப்படிப்பட்ட கோள்களில் உயிரினங்கள் வாழ சாத்தியம் இல்லை''

''அதனால என்ன சாமி''

''பக்தா, ஒரு அறிவுக்கு எட்ட வேண்டிய விசயம்''

''தண்ணீர் இல்லாத கோள்களில் கூட உயிரினம் வாழலாம், அந்த சூரியனில் கூட உயிரினம் வாழலாம் சாமி''

''பக்தா, உளறலை நிறுத்து''

''அப்படி அப்படியே உயிரினங்களை இந்த பூமியில் படைத்த இறைவனால் இது எல்லாம் சாத்தியமே''

''அவசியம் இல்லை பக்தா''

''அப்படி எனில், இது போன்று வெகு அருகாமையில் இருக்கும் கோள்கள் பற்றிய அறிவு கூட எனக்கு அவசியம் இல்லை சாமி''

''இந்த உலகில் எண்ணற்ற விசயங்கள் நடைபெற்று கொண்டிருக்கின்றன, அதை அறிந்து கொள்வதில் என்ன சிரமம்''

''தெரிந்து என்ன செய்ய சாமி''

''ஊருக்கெல்லாம் சொல், இந்த பிரபஞ்சம் மிக அதிசயம் என சொல்''

''சொல்லி''

''உன்னிடம் பேசியது வீணோ''

''இதேதானே சாமி, ஊருக்கு சொன்னாலும் நடக்கும்''

திடீரென சாமியார் மறைந்துவிட்டார். என் மீது கோபமோ என நினைத்துப் பார்கையில் காலை சூரியன் கன்னத்தை தழுவிக் கொண்டிருந்தான். மீண்டும் அதே வேலை, அதே வாழ்க்கை. அம்மாவோ, அப்பவோ எழுப்பும் முன்னர் நானே எழுந்து ஓடினேன். 

Tuesday 20 August 2013

ஜீரோ எழுத்து - 4 (ஒண்ணுமில்லை கோட்பாடு)

ஐசக் அசிமோவ் பற்றி கேள்வி பட்டு இருப்பீர்கள். அவர் சொன்னது என்னவெனில் 'நான் இறந்து போய்விட்டால் சொர்கத்திற்கோ, நரகத்திற்கோ செல்லமாட்டேன், மாறாக ஒரு ஒன்றுமில்லா தன்மையான வெறுமையே மிஞ்சி இருக்கும்'. ஆனால் அசிமோவ் எப்படி சொர்க்கம், நரகம் என்பது இல்லை என்று கருதினாரோ அதைப் போலவே ஒன்றுமில்லா தன்மையும் இல்லையென்றே எண்ணினார். அதற்கடுத்து தத்துவமேதை நோஜிக் என்பவரும் இதே கருத்தை கொண்டிருந்தார். அதாவது வாழும்போது மட்டுமே வாழ்க்கை, இறந்தபின்னர் எல்லாம் வெறுமையாகவே இருக்கும் என்பதுதான் அது.

இறந்தபின்னர் என்ன நடக்கும் என்பதை இதுவரை எவருமே அறிந்து சொன்னது இல்லை. இதன் காரணமாகவே பல அறிஞர்கள், தத்துவ மேதைகள் இறந்த பின்னர் சூன்யம் மட்டுமே நிலவுவதாக சொன்னார்கள். சிபயாமா எனும் ஜென் மேதை இந்த சூன்யத்தை ஒரு வட்டமாக வரைந்து காண்பித்தார். இதைத்தான் இந்து தத்துவமும் சொல்கிறது. இருப்பினும் 'ஒன்றுமே இல்லாத ஒன்றில் இருந்து எதுவும் தோன்றிட வாய்ப்பில்லை' என்பதுதான் இன்றைய அறிவியல் கோட்பாடு.

என்ன இதற்கு முன்னர் இருந்தது என்பது அழிக்கப்படும் பட்சத்தில், உண்மையிலேயே என்ன இருந்தது என எவரால் அறிய முடியும். ஒரு நட்சத்திரம் ஒரு ஒன்றுமில்லாததில் இருந்து தொடங்கி கருந்துளை என ஒன்றாய் முடிவது என்பது அறிவியல் பாடத்தில் படிக்க நன்றாக இருக்கும். ஆனால் இதில் இருக்கும் உண்மையை அறிந்து கொள்ளும் அறிவு நம்மில் இல்லாதபட்சத்தில் 'ஒருவித வெறுமை' நிலவத்தான் செய்யும்.

ஆனால் அதை எல்லாம் உடைத்து அந்த உண்மையை சொல்ல வந்ததுதான் குவாண்டம் கொள்கை. கருந்துளையிலும் சரி, இவ்வுலகம் தோன்றியதாக சொல்லப்படும் பேரு வெடிப்பு கொள்கையிலும் சரி, கட்டுகடங்கா ஆற்றல் அடங்கி இருந்ததாக, இருப்பதாக இப்போது அறிவியல் சொல்லி முடிக்கிறது.
அண்டத்தில் உள்ளது பிண்டத்தில்! கடவுள் என்பதன் தத்துவமும் அதையே சொல்கிறது.

நம்மில் இருக்கும் ஆத்மாவும், நமது வெளியில் இருக்கும் பிரம்மனும் ஒன்றே எனும் தத்துவமே குவாண்டம் கொள்கையின் அடிப்படை, அதை வைத்தே டி என் ஏ எல்லாம் கண்டுபிடிக்கப் பட்டதாக ஒரு பேச்சு உண்டு.

இப்போது சொல்லுங்கள், கந்தகம் நிறைந்த இடத்தை தேடி செல்வீர்களா?

(தொடரும்)

Thursday 20 June 2013

அஷ்டமாசித்திகளும் அகிலாண்டீஸ்வரியும் - 5

இலகிமா, இதை காற்றை போல் மென்மையாதல் என்றே குறிப்பிடுகிறார்கள். வானத்தில் பறக்கும் சக்தியை இது கொடுக்கும் என்றும், நீரில் மீது நடக்கும் சக்தியை தரும் என்றே கருதப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை அருகில் ஒரு சித்தர் இப்படி வானில் பறந்ததாக சமீபத்தில் ஒரு கதை படித்தேன்.

ஒல்லியான உருவம் கொண்டவரை 'காற்று அடித்தால் உன்னை தூக்கிக் கொண்டு போய்விடும்' எனும் ஒரு நகைச்சுவை சொல்வழக்கு உண்டு. பறப்பவை எல்லாம் பறவைகள் என்றுதான் குறிப்பிடப்பட்டு வருகின்றன, ஆனால் மனிதன் பறக்கும் தன்மையை பெற்று இருக்கவில்லை. ஆனால் ஹனுமார் பறந்து சென்றே சஞ்சீவி மலையை பெயர்த்து எடுத்து வந்ததாக புராணங்கள் குறித்து வைக்கிறது.

இவை எல்லாம் அமானுஷ்ய தன்மைகள் என்றும் சொல்லப்பட்டு வருகின்றன. உண்மையிலேயே எங்கே ஈர்ப்பு சக்தி குறைவாக இருக்கிறதோ அங்கே பறக்கும் தன்மையை மனிதன் பெற இயலும். உதாரணத்திற்கு நிலவை குறிப்பிடலாம். ஒரு பொருளின் நிறை எந்த இடத்திற்கு சென்றாலும் மாறாது, ஆனால் ஒரு பொருளின் எடை மாறும்.

ஒரு பொருளின் எடையானது அந்த இடத்தின் ஈர்ப்பு விசையின் தன்மையை பொறுத்தே அமைகின்றன. பூமியின் ஈர்ப்பு விசை ஒரு கிலோவுக்கு பத்து நியூட்டன் என்றே கணக்கிட்டு வைத்து இருக்கிறார்கள். வியாழனில் இந்த ஈர்ப்பு விசை ஒரு கிலோவுக்கு இருப்பத்தி நான்கு நியூட்டன். இப்படி ஒவ்வொரு கோள்களிலும் ஈர்ப்பு விசை மாறுபாடு அடைகிறது. இந்த ஈர்ப்பு விசை ஒரு பொருளின் நிறையை பொருத்து அமைகிறது எனலாம். ஒன்றில் ஈர்ப்பு அதிகமாக அதிகமாக பிரச்சினைகள் அதிகமாகும்.

ஒரு விசயத்தில் பற்று கொண்டு அதனிலே உழன்று மன நோயிற்கு உட்பட்டு பாதிப்புக்கு உள்ளாவோர் நிறையவே உண்டு. அங்கே 'மனம் பாரமாக இருக்கிறது' என பொருள். இப்பொழுது அவர்கள் மிகவும் கனமாக உணர்வார்கள். அந்த நபர்களின் பிரச்சினையை தீர்க்கும் வண்ணம் எவரேனும் அவருக்கு வாய்த்தல் அவர்கள் மிகவும் இலகுவாக உணர்வார்கள். 'இப்போதான் மனசு ரொம்ப லேசா இருக்கு' இதுதான் இலகிமா.

மனசு லேசாக இருக்கும்போது காற்றில் பறப்பது போன்ற ஒரு உணர்வு வரும். மென்மையான தன்மை நம்மில் உருவாகும். இப்படி மென்மையான தன்மை வரும் பட்சத்தில் பிற உயிர்களுக்கு தீங்கிழைக்கும் எண்ணம் அடியோடு ஒழிந்து போகும். நல்லதையே நினைக்கும், நல்லதையே செய்ய துடிக்கும் எண்ணங்கள் மட்டுமே பீறிடும்.

இப்படிப்பட்ட உணர்வு இந்த உலகத்தில் அத்தனை எளிதாக நாம் அடைய இயலாது என்றாகி விட்டது. பிரச்சினைகளால் உந்தப்பட்டு எவரால் நமக்கு தொல்லை வருமோ, என்ன என்ன எழரைகள் வந்து சேருமோ எனும் அச்சத்தில் வாழ்க்கையை கழித்து கொண்டு இருக்கும் மானுடருக்கு இந்த மென்மையான தன்மை ஒரு அமானுஷ்ய தன்மையாக மாறிப்போனதில் ஆச்சரியமில்லை.

இப்படிப்பட்ட மன அழுத்தத்தில் சிக்கிக் கொண்டு இருப்போருக்கு ஆறுதல் தரவே அகிலாண்டீஸ்வரி வரம் புரிகிறார். கோவிலுக்கு செல்வோம், நூலகங்களுக்கு செல்வோம். இறைவனிடம் மனம் விட்டு பேசுவோம். அவர் எதிர்பேச்சு எதுவும் பேசமாட்டார். எவரிடமும் சென்று நமது குறைகள் பற்றி கேலி பண்ண மாட்டார். ஆனால் ஒன்றே ஒன்று, இறைவனிடம் சொல்லிவிட்டோம், நமது குறைகள் தீர்ந்துவிட்டது என நாம் நம்பிக்கை கொள்வோம். மனம் லேசாகிவிடும். அப்படியே வாழப் பழகுவோம் .

பிரச்சினைகளில் மூழ்கி தவிப்போருக்கு வெளிவரவே இறைவன் எனும் பாடம் நமக்கு சொல்லப்பட்டது. ஆனால் இந்த இறைவனையும் பிரச்சினைக்கு உட்படுத்தி அசிங்கபடுத்தி பார்ப்பதில் நமக்கு நிகர் எவருமில்லை.

''ஏன்  ஒருமாதிரியா இருக்கே, என்னப்பா பிரச்சினை?''

''ஒண்ணுமில்லை''

''இதுதான் பிரச்சினையா?''

''இல்லை, அது வந்து...''

பிரச்சினைகளில் இருந்து வெளிவர வேண்டுமெனில் மனதை லேசாக மாற்ற முயற்சிப்போம். இலகிமா, சித்தர்களுக்கு மட்டுமல்ல, நமக்கும் அவசியம்.





Thursday 14 February 2013

அஷ்டமாசித்திகளும் அகிலாண்டீஸ்வரியும் - 3

பகுதி  2 

மகிமா என்பது மலை போன்று பெரிதாவது என்றே குறிப்பிடபடுகிறது. விஸ்வரூபம் என்பது கூட ஒருவகையான சித்தி என்றே கணக்கில் எடுத்து கொள்ளப்படுகிறது. ஒரு சிறு விதை விருட்சமாவது என்பதை எவரும் மறுக்க இயலாது. ஆனால் விருட்சமான மரமானது மேலும் அதுவும் கணநொடியில் மேலும் விருட்சம் என்பது அபூர்வமான ஒன்றாகவும், நம்ப முடியாத விசயமாகவே நமது எண்ணத்திற்கு தோற்றம் அளிக்க கூடியவனாக இருக்கின்றன. 

ஆனால் இப்படிப்பட்ட மகிமா சக்தியை சித்தர்கள் பெற்று இருந்தார்கள் என்றே இன்னமும் சொல்லப்பட்டு வருகிறது. மகாபாரதத்தில் வரும் விஷ்ணுவின் அவதாரம், கிருஷ்ணரின் விஸ்வரூபம் கூட இந்த கணக்கில் தான் எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஆனால் இதுவரை எவரும் மனித உருவினை விஸ்வரூபம் எடுத்து பெரிதாக காட்டியதாக வரலாறு குறிக்கவே இல்லை. அப்படியெனில் இந்த மகிமா சாத்தியமா? சாத்தியம் அற்றதா? ஒன்று நம்மால் முடியாதவரை அது சாத்தியம் அற்றது என்றே கருதப்பட்டு வருகிறது. ஆனால் அதற்கான முயற்சியும் திறனும் நம்மிடம் நாம் வளர்த்து கொள்ள வேண்டும். 

இப்படிப்பட்ட முயற்சி பற்றி எண்ணிடும்போது சூரிய சித்தாந்தம் பற்றி நினைவுக்கு வந்தது. இந்த சூரிய சித்தாந்தம்தனை எழுதியவர் எவர் என்று குறிப்பில் இல்லை. இந்த சூரிய சித்தாந்தம் சூரிய கடவுள் மாயன் எனும் அசுரனுக்கு தரப்பட்டது என்று ஒரு ஐதீகம் உண்டு. தேவர்கள், அசுரர்கள் என அக்காலத்தில் இருந்து குறிப்பில் வைக்கப்பட்டு இருக்கின்றன. அசுரர்கள் அழிக்கும் கூட்டம் எனவும், தேவர்கள் காக்கும் கூட்டம் எனவும் வழக்கத்தில் இருந்து இருக்கிறது. இந்த சூரிய சித்தாந்தத்தில் மிகவும் பிரமிக்கத்தக்க வகையில் பல குறிப்புகள் சூரியன் பற்றியும், அதன் கோள்கள் பற்றியும் இருக்கின்றன. கால சூழல் வேறுபாட்டால் பல ஸ்லோகங்கள் தொலைந்து போனதாக வரலாறு குறிப்பிடுகிறது. ஒரு கோளின் அளவினை எல்லாம் இந்த சூரிய சித்தாந்தம் குறிப்பிட்டு இருப்பது, இன்றைய அளவுக்கு மிகவும் சரியாகவே இருப்பது, சைன், டேன், காஸ் டீட்டாகளை எல்லாம் கணக்கில்  வைத்தது பிரமிக்கவைக்கும் செயல் அன்றி வேறு என்னவாக இருக்க இயலும்.

பஞ்சாங்கம் என்பது இந்த சூரிய சித்தாந்தத்தின் அடிப்படையில் உருவானதுதான். எந்த எந்த நேரத்தில் எந்த கோள்கள் எங்கிருக்கும் என்றெல்லாம் கணக்கீடு செய்து வைத்து இருக்கிறார்கள். அதன் காரணமாகவே சூரிய கிரகணம், சந்திர கிரகணம் எல்லாம் தெரிந்து இருக்கிறது. இப்படிப்பட்ட பிரமிப்பில் ஒரு மலையை சூரியனும், கோள்களும் சுற்றிக்கொண்டு இருக்கின்றன என சொன்னால் எப்படி இருக்கும்?

இந்த மலைகள் எப்படி உருவானது என்பதற்கு பூமித்தட்டுகள் முட்டிக்கொண்டு மேல் எழுந்ததுதான் என்கிறார்கள் இன்றைய அறிவியல் வல்லுனர்கள். இந்த பூமியானது பல தட்டுகளால் உருவானது என்றும் ஒவ்வொரு தட்டுகளும் நகர்ந்து கொண்டே இருக்கின்றன, அப்படி நகர்தலின் காரணமாக நிலநடுக்கம், மலைகள் உருவாதல் எல்லாம் நடைபெறுகிறது என்றே சொல்கிறார்கள். தரைமட்டமாக இருந்த நிலபரப்பு திடீரென மலையாய் மாறுதல். மகிமா!

 
இது இமயமலைத் தொடர். இதற்கு பெரிய கதையே உண்டு. இப்போதைக்கு அகிலாண்டீஸ்வரியையும், சிவபெருமானையும் விட்டுவிடுவோம். நமது இந்திய நிலபரப்பு பல்வேறு வருடங்களில் நகர்ந்து வந்து மோதியதால் உருவானது இந்த இமயமலை என்பது ஒரு கணக்கீடு. நன்றி: விக்கிபீடியா 



ஆங்காங்கே இந்திய நிலபரப்பு மட்டுமல்லாது, உலகெங்கும் உள்ள மலைகள் இப்படித்தான் உருவாகி இருக்கும் என்பது ஒரு கணக்கீடு. 


இது ஆல்ப்ஸ் மலைத்தொடர். மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் என உலகில் ஆயிரக்கணக்கான மலைகள் இருப்பதாகவும் கிட்டத்தட்ட இருபத்தி ஐந்து சதவிகிதம் பூமி மலைகளால் ஆனது என்றே குறிப்பிடுகிறார்கள். 

ஆனால் மேரு மலை என்று ஒன்று குறிப்பில் உள்ளது. இந்த மேரு மலையில் தான் பிரம்மா மற்றும் அனைத்து கடவுளர்களும் குடியிருப்பதாக ஒரு ஐதீகம். இதுவரை இந்த மேரு மலையை எவருமே கண்டதில்லை. இது எங்கு இருக்கிறது என்பதற்கான ஒவ்வொருவரின் எண்ணமும் வெவ்வேறு விதமாகவே இருக்கிறது. இந்த மலையின் உயரம் கிட்டத்தட்ட பத்து லட்சம் கிலோமீட்டர் உயரம் என்றும், இதனின் குறுக்களவு பூமியைவிட எண்பத்து ஐந்து மடங்கு பெரிதாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. உயரத்தை குறிப்பிட யோஜனா என்றும் ஒரு யோஜனா பதினோரு கிலோமீட்டர் என்றும் கணக்கு சொல்கிறார்கள். 

முன்னர் குறிப்பிட்டது போல இந்த மலையை சூரியன் முதற்கொண்டு பிற கோள்கள் சுற்றி வருவதாக ஒரு ஐதீகம். இந்த மேரு மலையை சூரிய சித்தாந்தம் மத்திய பூமியில் இருப்பதாக கணக்கீடு காட்டுகிறது. ஒருவேளை பூமி  வெடித்து சிதறி அதிலிருந்து வேறு பல கோள்கள் உருவாகும் முன்னர் இந்த மலை ஒன்று பூமியில் இருந்து இருக்கலாம் என சூரிய கடவுள் மாயனுக்கு சொல்லி இருக்கலாம். பூமியை சூரியன் சுற்றிய காலமும், சூரியனுக்குள் இருந்த பூமி வெளியே எறியப்பட்ட காலமும் இருந்திருக்கலாம். எவர் கண்டது? ஆனால் இப்படி சூரிய சித்தாந்தத்தில் சொல்லப்பட்ட மேரு மலை இல்லாதது கண்டு பின் வந்தவர்கள் மேரு மலை ஒன்று முன்னர் இருந்தது ஆனால் தற்போது பூமியில் இல்லை என்றே குறிப்பிட்டு இருக்கிறார்கள். 

இந்த மேரு மலை ஒருமுறை கர்வம் கொண்டதாகவும், அந்த மேரு மலையின் கர்வத்தை போக்கிட நாரதர் வாயு பகவானின் உதவியுடன் மேரு மலையை சிதறடித்ததாகவும் அதிலிருந்துதான் இலங்கை எல்லாம் உருவானது என  ஒரு கதை எல்லாம் உண்டு. அதுவும் லெமூரியா கண்டம் பற்றி எல்லாம் பரபரப்பாக நாம் பேசித் திரிந்த காலம் கூட இங்கே குறிப்பிட வேண்டியதுதான். 

மகிமா என்று சொல்லிவிட்டு மலைகள் பற்றி சொல்லிட வேண்டிய அவசியம் என்ன? பகவான் விஷ்ணு சொல்கிறார் மலைகளில் நான் மேரு. ஒரு மனிதன் தனது எண்ணத்தால், செயலால் உயரும்போது மலையை உதாரணமாக சொல்கிறார்கள். 

உருவத்தில் மனிதன் உயர்வதல்ல மகிமா. மனிதன் தனது உள்ளத்தில், எண்ணத்தில், உணர்வில், செய்கையில் உயர்வது மகிமா. இந்த மகிமா எனும் அஷ்டசித்திகளில் ஒன்றான இதை நாம் பற்றி கொண்டால் உலகம் சுபிட்சமாகவே இருக்கும். 

(தொடரும்)

Thursday 1 November 2012

ஓவபைன் தந்த அதிர்ச்சி

பொதுவாகவே மருத்துவ ஆராய்ச்சி என்றால் அப்படி இப்படித்தான் இருக்கும் போல. இன்று இருக்கும் தொழில்நுட்ப வசதி, பலவகையான செயல்முறை பயிற்சிகள் என எதுவமே இல்லாத காலத்தில் இந்த இந்த தாவரம் இந்த இந்த பலனைத் தரும் என சித்தர்கள் என போற்றப்படுபவர்கள் கண்டுபிடித்து தந்ததே பெரும் அதிசயம் தான்.

இந்தியா, சைனா போன்ற நாடுகள் இது போன்ற மருத்துவ முறைக்கு மிகவும் முக்கியத்துவம் தந்து கொண்டிருந்தன. தாவரங்களின் மூலம் தங்களது உடல் நலனை காத்துக் கொள்ளும் முறையை மனிதர்கள் கற்றுக் கொண்டார்கள். இது கூட இயற்கைத் தேர்வு அடிப்படையில் மனித இனம் தம்மை இவ்வுலகில் தக்க வைத்துக் கொண்ட ஒரு முயற்சி எனலாம்.

ஓவபைன் அல்லது ஸ்ட்ரோபந்தின் எனப்படும் மருந்து ஸ்ட்ரோபந்துஸ் எனப்படும் மலர் இன வகை சார்ந்த தாவரத்தில் இருந்து பிரித்தெடுக்கும் பொருளாகும். இந்த ஸ்ட்ரோபந்துஸ் ஆப்பிரிக்கா, இந்தியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் வளரும் தன்மை உடையது. இவை மிகவும் உயரமாக வளரக்கூடிய தாவரமும் ஆகும்.

இந்த தாவரம் மிகவும் விஷத்தன்மை உடையது என்பதை முன்னரே அறிந்து வைத்திருந்த ஆப்பிரிக்கர் கூட்டம் இதனை அம்பில் தடவி பிறரை கொல்ல பயன்படுத்தி இருக்கிறார்கள் என்றே குறிப்புகள் இருக்கின்றன. அதி வேளையில் இந்த தாவரத்தில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட ஓவபைன் இதயத்திற்கு மிகவும் உபயோகமாகக் கூடிய மருந்தாக பயன்படுத்தப்பட்டது. எதுவுமே அளவுக்கு அதிகமாக உபயோகித்தால் அமிர்தமும் நஞ்சு என்பது போல இந்த மருந்து அளவு அதிகமானால் ஆளையே கொன்று விடும் என்பதுவும் அறியப்பட்ட ஒன்று.

இதய கோளாறுகள் நீக்கும் இரண்டு வகை மருந்துகள் என டிஜிடளிஸ் மற்றும் ஸ்ட்ரோபந்துஸ் இரண்டுமே விஷத்தன்மை உடையவை. இந்த ஓவபைன் சோடியம் பொட்டாசியம் பரிமாற்றத்தை தடுக்கும் தன்மை உடையது. இப்படிப்பட்ட மிகவும் கொடிய மருந்துடன் வேலை பார்க்க வேண்டும் என்பதெல்லாம் தலையில் எழுதப்படாத விதி.

கினிபிக்ஸ் வேகஸ் நரம்புதனில் இந்த மருந்தினை சோதனை செய்தபோது இவை மிகவும் அற்புதமாகவே வேலை செய்தது. மிகவும் சிறப்பான மருந்து ஒன்று கண்டுபிடித்துவிட்டோம் என்ற குதூகலத்தில் இந்த மருந்து அளவு அதுவும் மிகவும் குறைவான அளவு கினிபிக்ஸ் ற்கு தந்தபோது அவை அனைத்தும் இறந்து போயின. இந்த செயல்முறையை செய்வதற்கு முன்னரே எனக்கு எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது. கவனத்துடன் இரு, இல்லையெனில் இந்த மருந்து உன்னை தாக்கலாம் என.

ஆனால் மிகவும் குறைந்த அளவே தந்தும் இப்படி இந்த மருந்து செய்தது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. வாழ்விலும் அப்படித்தான். கெட்ட விசயங்கள் மிகவும் குறைவாக செய்தால் பிரச்சினை இல்லை என்று நினைக்க கூடியவர்கள் உண்டு. ஆனால் அந்த குறைவான கெட்ட விசயங்கள் மனிதர்களை அழிக்கும் வல்லமை உடையதுதான். ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் நடப்பதைவிட ஒரு உண்மை சொல்லி அந்த கல்யாணம் நின்றால் அதுதான் சிறப்பு.

இப்படி உலகில் பல விஷத்தன்மையான விசயங்கள் நல்லது செய்வது போலவே வலம் வருகின்றன. அவை வளம் பெறாமல் காப்பது நமது கையில் உள்ளது. 

Thursday 19 July 2012

முக்காலமும் உணர்ந்த முனிவர்களா நாம்? 5

தியரி அதாவது கோட்பாடு, தேற்றம். நமது சிந்தனைகள் இந்த தியரி எனப்படுவதை சுற்றியே நிகழ்கிறது. சோதனைகள் செய்யும் முன்னர் இந்த தியரி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட தியரிக்கான சிந்தனையின் மூலம் என்ன என்பது குறித்து அவரவருக்கு அந்த வேளையில் ஏற்படும் சிந்தனை குறித்தே சொல்ல முடியும்.

ஒரு உதாரணத்திற்கு புத்தர். இப்போது புத்தர் சொன்ன ஆசையே துன்பத்திற்கு காரணம் என்பது ஒரு தியரி. ஆசை என்பதன் அளவு எது? துன்பத்தின் அளவு எது? என்பதெல்லாம் இங்கே விவரிக்கப்படவில்லை. மிகவும் எளிமையாக சொல்லப்பட்ட கோட்பாடு இது. ஆசையே துன்பத்திற்கு காரணம். இப்போது இந்த சிந்தனை எப்படி புத்தருக்கு எழுந்தது. இப்போது நாம் சொல்லப்போவது கூட ஒரு தியரி தான். ஆனால் உண்மை என்ன என்பது புத்தருக்கு மட்டுமே வெளிச்சம். அரண்மனையில் சுகவாசம் அனுபவித்த புத்தர் வெளியில் சென்று பார்க்கும்போது மக்கள் இன்னல்படுவதை காண்கிறார். அங்கே அவருக்கு எதற்கு மக்கள் இன்னல் படுகிறார்கள் எனும் சிந்தனை எழுகிறது. அதற்கான காரணம் என்னவென பார்க்கும்போது அவருக்கு ஆசை என்ற ஒன்று பிடிபடுகிறது. அப்படியே ஒரு மரத்தடியில் அமர்கிறார். கண்களை மூடி அமர்கிறார். மக்கள் துன்பபடுவது ஆசையின் காரணம் தான் என நினைவில் கொள்கிறார். அதை பின்னர் உலகுக்கு அறிவிக்கிறார். இப்போது இந்த கோட்பாடுதனை சோதனைக்கு உட்படுத்தலாம்.

இரு நபர்கள் எடுத்துக் கொள்வோம். ஒருவர் ஆசையே படாதவர். இருப்பதே போதும் என இருப்பவர். மற்றொருவர் அளவுகடந்த ஆசை கொண்டவர். அது வேண்டும், இது வேண்டும் என அலை பாய்பவர். பொதுவாக எல்லோர் வீட்டில் கணவன், மனைவி இப்படித்தான் இரண்டு துருவங்களாக இருப்பார்கள் என்பது வேறு விசயம். ஆசையே இல்லாதவர் துன்பத்துடன் வாழ்கிறாரா, ஆசை கொண்டவர் துன்பமின்றி வாழ்கிறாரா என அவர்களது வாழ்க்கையை இருபது ஆண்டு காலம் கவனித்து வருவோம். பொதுவாக போதும் என இருப்பவர் துன்பம் கொள்வது இல்லை என்பது ஒருவித தியரி. அதன்படியே போதும் என இருப்பவர் இருபது வருடம் முன்னர் எப்படி இருந்தாரோ அப்படியே தான் இப்பவும் இருப்பார். அதாவது எந்த வித முன்னேற்றமோ, வசதிகளோ, வாய்ப்புகளோ பெருக்காமல், ஏனெனில் அவருக்கு எவ்வித ஆசையும் இல்லை. இருப்பினும் சில தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் இவர்  துன்பம் அடைகிறார். இப்போது அவரைப் பொறுத்தவரை வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அவர் ஒரு துர்பாக்கியம் கொண்டவர். ஆனால் அவருக்கோ அப்படி இருப்பதே ஆனந்தம். மற்றவர் அப்படி இல்லை. ஆசையின் காரணமாக போராடி நல்ல வசதி வாய்ப்புகளை பெருக்கி கொள்கிறார். இதன் காரணமாக அவர் கொண்ட துன்பம் அதிகம். இல்லாது இருப்பவர் போதிய வசதி இல்லாமல் துன்பம் அடைகிறார். இருப்பவர் மேலும் மேலும் வசதிகள் வேண்டுமென துன்பம் அடைகிறார். இப்போது ஆசை கொண்டவரும் துன்பம் அடைகிறார். ஆசை இல்லாதவரும் துன்பம் அடைகிறார். இதன் காரணமாக ஆசை ஒரு காரணி. ஆனால் ஆசை மட்டுமே துன்பத்திற்கு காரணம் இல்லை என இந்த சோதனையின் முடிவில் தீர்ப்பு எழுதப்படும்.

இப்படி கோட்பாடுகளை கொண்டு எழுதப்பட்டுத்தான் முக்காலமும். அந்த கோட்பாடுகளை சொன்னவர்கள் தங்களுக்குள் உணர்ந்து கொண்ட விச யத்தை சொன்னவர்கள் உண்டு. அதே வேளையில் கணிதம், பௌதிகம், பூகோளம் என கணக்கீடு முறையால் இப்படித்தான் இருக்கும் என சொன்னவர்கள் உண்டு. தங்களுக்குள் உணர்ந்து கொண்டு சொன்ன விச யத்தை நிரூபிக்க கதைகள் எழுதலாம். ஆனால் அதை ஒரு சோதனை மூலம் நிரூபிப்பது சற்று இயலாத காரியம். கணக்கீடு முறையால் சொன்ன விசயங்களை சோதனைகள் மூலம் நிரூபிக்கலாம். அப்படி நிரூபிக்க முடியாது போனால் அந்த கோட்பாடு தவறு என்றே முடிவுக்கு கொண்டு வரப்படும்.

இப்படி பல சிந்தனைகளை உருவாக்கும் நரம்பு மண்டலத்தில் எவர் இதற்கான விதைகள் விதைத்தது. உங்கள் வீடு ஒன்று. உங்கள் வீட்டில் இருக்கும் நபர்கள் பல. இப்போது ஒரே விசயம். அந்த ஒரே ஒரு விசயத்தை வீட்டில் இருக்கும் நபர்கள் எப்படி எல்லாம் சிந்திக்கிறார்கள் என பாருங்கள். இந்த சோதனையை வீட்டில் செய்து பாருங்கள். ஒவ்வொருவரும் ஒரு தாளில் எழுதி கொள்ள வேண்டும். பின்னர் அனைவருக்கும் வாசித்து காண்பியுங்கள். சிந்தனைகளுக்கான காரணம் என்னவாக இருக்கும்?

ஒன்று கண்ட, கேட்ட விசயங்களின் நேரடி, மறைமுக பாதிப்பு.  மற்றொன்று எதற்கும் தொடர்பே இல்லாத ஒரு சிந்தனை. இப்படி எதற்குமே தொடர்பே இல்லாத சிந்தனை ஒன்று உண்டா?

மாணிக்கவாசகர் பாடுகிறார்.

சோதியனே துன் இருளே தோன்றா பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே

ஒளியும், இருளும் நீயன்றி எதுவும் இல்லை. தோன்றியவைகளும், தற்போது தோற்றத்தில் இல்லாதவைகளும் நீயன்றி எதுவும் இல்லை. முதலுமாய், முடிவுமாய் என முதலும் முடிவும் இல்லாதவன் நீயன்றி எதுவும் இல்லை.

முக்காலமும் எப்படி மாணிக்கவாசகர் அறிந்தார்?

(தொடரும்) 

Wednesday 14 March 2012

ஆஸ்த்மா - ஒரு ஆராய்ச்சித் தொடர் (4)

பகுதி 3 

நமது உடலில் அமைந்து இருக்கும் இந்த நுரையீரல், மூச்சுக்குழல் என்பதில் எல்லாம் இந்த ஆஸ்த்மா பிரச்சினை பண்ணுவதில்லை என்றில்லை. மூச்சுக்குழல் இரண்டாக பிரிவடைந்து செல்லும் அந்த இருபகுதிகளில் ஏற்படும் இறுக்கமே ஆஸ்த்மாவுக்கு அடிப்படை காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. நாம் சுவாசம் செய்வதற்கு நமது நரம்பு மண்டலம் உறுதுணையாக இருக்கிறது.

நன்றி: கூகிள்

நாம் உடற்பயிற்சி செய்யும்போதோ, ஓடும் போதோ நமது சுவாசம் அதிகரிப்பதற்கு நமது உடலுக்கு தேவையான ஆக்சிஜனை தரவேண்டியே இந்த சுவாசம் வெகுவேகமாக நடைபெறுகிறது. பெரும்பாலோனோர் மூச்சு பயிற்சி செய்வதன் மூலம் நமது உடலில் பல விசயங்களை கட்டுபாடுக்குள் கொண்டு வரலாம் என சித்தர்கள் குறிப்பில் உள்ளதாக கூறுகிறார்கள்.

நமது உடலில் உள்ள தசைகள், செல்கள் எல்லாவற்றிற்கும் மிகவும் சீரான முறையில் ஆக்சிஜன் சென்றாலே போதும். தசைகள், செல்கள் எல்லாம் நன்றாக வேலை செய்யும். யோகா பயிற்சி முறைகள் உடலை கட்டுப்பாடாக வைத்திருக்க உதவி புரியும் என்பதில் இருவேறு கருத்தில்லை. இந்த உடற்பயிற்சி குறித்து ஒருவர் நகைச்சுவையாக சொன்னார்.

அதோ அந்த பூங்காவில் நடந்து கொண்டு இருக்கிறார்களே அவர்கள் எல்லாம் இங்கே எப்படி வந்தார்கள் தெரியுமா? என்றார். 


தெரியவில்லை சொல்லுங்கள் என்றார் மற்றொருவர். 


இதோ இந்த கார்களில் தான் வந்தார்கள் என்றார். 

வாழ்க்கையில் சில விசயங்களை எதற்கு செய்கிறோம் என்கிற ஒரு அடிப்படை உணர்வே நமக்கு மறந்து போய்விடுகிறது. நன்றாக மூக்கு முக்க சாப்பிட்டுவிட்டு உடற்பயிற்சி செய்தால் சரியாகிப் போய்விடும் என்பது. மருந்து மாத்திரை இருக்கிறதே என கண்டபடி வாழ்க்கையை அமைத்து கொள்வது. இதை எழுதும் நான் ஒன்றும் இதற்கு விதிவிலக்கு அல்ல. இப்படியெல்லாம் வாழ்ந்தால் எப்படி இருக்கும் என நினைத்தே பொழுதுகள் கரைந்து போய்விடுகின்றன.

இந்த ஆஸ்த்மா ஏற்படுவதற்கு முக்கிய காரணம் என மரபணுக்கள், அலர்ஜி சம்பந்தமான பொருட்கள் என குறிப்பிடப்படுகிறது. ஒவ்வொருவரின் நிலையம் வெவ்வேறாகவே இருக்கிறது. இன்னதுதான் என அறுதியிட்டு சொல்லமுடியாத நிலையும் கூட நிலவுகிறது. இது போன்ற இறுக்கத்தை தளர்த்தும் மருந்துகள் என சல்புடமோல் பெரிதாக உபயோகப்படுகிறது.

பிரணாயாமம் எனும் மூச்சு பயிற்சி முறை பெருமளவில் இந்தியாவில் பேசப்படுகிறது. இது குறித்து திருமூலர் எழுதிய பாடல்களை பார்க்கலாம்.
இந்த தலைப்பில் எழுதப்பட்ட பாடல்கள் என பதினான்கு பாடல்கள் தென்படுகின்றன. பாடல்கள் குறிப்பு எழுதப்பட்டே இருக்கிறது. நேரடியாக எதுவும் சொல்லாமல் இருப்பது போன்றே தென்படுகிறது. இதற்காக பிரத்தியோக தமிழை கற்று கொள்தல் அவசியமாகிறது.

பன்னிரண்டானை பகல் இரவுள்ளது
பன்னிரண்டானையை பாகன் அறிந்திலன்
பன்னிரண்டானையை     பாகன் அறிந்தபின்
பன்னிரண்டானைக்கு பகல் இரவு இல்லையே.

என்னது பன்னிரண்டு? இது குறித்து சிலர் சில விளக்கம் சொல்கிறார்கள். நமது உடலில் இருக்கும் காற்றினை எப்படி கையாள்வது என்பது குறித்தே இவரது சிந்தனையெல்லாம் இருக்கிறது.

புறப்படு புக்கு திரிகின்ற வாயுவை
நெறிப்பட வுள்ளே நின்மல மாக்கில்
உறுப்பு சிவக்கும் உரோமங் கறுக்கும்
புறப்பட்டுப் போகான் புரிசடை யோனே.

ஹீமோக்ளோபின் எனும் புரதம் நமது உடலில் உள்ள ஆக்சிஜனை எல்லா செல்களுக்க்ம் எடுத்து செல்கிறது. அப்படிபட்ட ஆக்சிஹீமொக்லோபின் சிவப்பு நிறத்திலே இருக்கும். எப்போது ஆக்சிஜன் நீங்குகிறதோ சிறு பச்சை வண்ணம் மாறி விடும். எதற்கு இப்படிப்பட்ட பாடல்கள் எல்லாம் இங்கே உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என பார்த்தால் வாய் வழியாக சுவாசித்து அந்த ஆக்சிஜன் எதற்கு ரத்தத்தில் சேரக்கூடாது எனும் சிந்தனை நமக்கு தேவைப்படுகிறது. மேலும் திருமூலர் சொல்கிறார்.

ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்குங்
காற்றை பிடிக்குங் கணக்கறி வாளரில்லை
காற்றை பிடிக்குங் கணக்கறி வாளர்க்கு
கூற்றை யுதைக்குங் குறியது வாமே

இப்போது ஆஸ்த்மா உடையவர்கள் இந்த கணக்கை எல்லாம் அறிந்து கொண்டால் தீர்வாகி விடுமா என்றால் இதை சொல்வது மிகவும் கடினம். காற்றே உட்புக வழியின்றி போம்போது அங்கே எப்படி எதை பிடித்து நிறுத்துவது?

இந்த உலகில் ஆஸ்த்மாவினால் கிட்டத்தட்ட முன்னூறு மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஒரு ஆய்வு சொல்கிறது. கிட்டதட்ட 250,000 மக்கள் வருடந்தோறும் உலகில் இறக்கிறார்கள். இந்த ஆஸ்த்மாவிற்கு முறையான சிகிச்சைகள் இல்லையெனினும், மக்கள் தங்கள் வாழ்க்கை முறையின் மூலம் கட்டுபடுத்தலாம் எனவும் ஆய்வு சொல்கிறது.

ஆஸ்த்மாவிற்கான அறிகுறிகள் என மூச்சு இழப்பு, நெஞ்சில் இறுக்கம், தொடர் இருமல் போன்றவை ஆகும். இப்படி வரும்போது உடனடியாக மருந்தினை எடுத்துகொள்வது பயன் தரும். ஆனால் இது போன்ற சூழலில் உடனடியாக மருத்துவமனையை அணுகுவது நல்லதாகும்.

எந்த ஒரு நோயையும் உதாசீனபடுத்துவது நம்மில் பெரும் அபாயத்தை விளைவிக்கும். தெரிந்தே அந்த தவறை நாம் செய்து கொண்டே வருகிறோம்.

(தொடரும்)




Wednesday 7 March 2012

ஜீரோ எழுத்து -3 (ஒண்ணுமில்லை கோட்பாடு)

உலகில் எல்லாவகையான சிந்தனையாளர்கள் உண்டு. ஆனால் இவர்களை ஒரே மாதிரி சிந்திப்பவர்கள், வித்தியாசமாக சிந்திப்பவர்கள் என பிரித்து விடலாம். இதன் காரணமாகவே ஒருவரைப் பற்றி அவரா, அவர் அப்படித்தான் எனும் சிந்தனை கூட நம்மில் வந்துவிடுவது உண்டு. இப்படிப்பட்ட சிந்தனையில் வறட்டு சிந்தனை, தெய்வீகச் சிந்தனை, காதல் சிந்தனை, காம சிந்தனை, வேலை சிந்தனை, வெட்டிவேலை சிந்தனை என பல சிந்தனைகள் அடக்கம்.

நாம் இயங்கி கொண்டே இருக்க வேண்டும். நாம் ஏதும் செய்யாமல் இருந்தால் நமக்குள் விபரீத சிந்தனைகள் எல்லாம் எழும் என்பார்கள். ஏதும் செய்யாமல் எவரேனும் இருக்க இயலுமா? உறங்குதல் கூட ஒரு செயல் என ஆனபின் எப்படி ஏதும் செய்யாமல் எவராலும் இருக்க இயலும்? 'சும்மா இருப்பதே சுகம்' என்றார்கள்.

ஒரு நபரை சந்திக்கிறோம். நாம் அவரிடம் கேட்கிறோம். ஏதாவது உங்களிடம் இருக்கிறதா என! அவர் தனது பைகளில் எல்லாம் தேடிப்பார்த்துவிட்டு என்னிடம் ஒன்னும் இல்லை என சொல்கிறார் என வைத்துக் கொள்வோம். இப்பொழுது தன்னை எப்படி அவர் மறந்தார் எனும் கேள்வி எழ வேண்டும். ஒரு மனிதரை விடவா அவரிடம் இருக்கும் பொருள்கள் பெரிது? அவர் என்ன சொல்லி இருக்க வேண்டும், என்னைத் தவிர என்னிடம் வேறு பொருட்கள் இல்லை. ஆனால் எவரும் அப்படி சொல்வதில்லை. என்னிடம் ஒன்னும் இல்லை என சொல்வதன் மூலம் அவர் இருக்கிறார் எனும் புரிதல் தானாக வர வேண்டும் என்பதுதான் அந்த பதிலின் அர்த்தம். ஆனால் இந்த உலகம் பொருள்கள் இல்லாத ஒருவரை 'வெறும் பயல்' என்றுதான் பட்டம் சூட்டுகிறது.

எதற்கு இப்படி இருக்கிறாய்?

ஒண்ணுமில்லை.

ஏதாவது பிரச்சனையா?

ஒண்ணுமில்லை.

ஒண்ணுமே இல்லைன்னா எதுக்கு இப்படி இருக்கிறாய்?

அதான் ஒன்னுமில்லைன்னு சொல்லிட்டேனே.

இப்படி ஒண்ணுமில்லை, மனிதர்களின் வாழ்வில் ஒரு பெரும் அங்கம் வகிக்கிறது. அறிவியல், தத்துவம், இறையியல் எல்லாம் இந்த ஒண்ணுமில்லை கோட்பாடு பற்றி என்ன சொல்கிறது?

அறிவியல் குறிப்பாக இயற்பியல் விதிப்படி இந்த உலகம் ஒன்றுமே இல்லாத ஒன்றில் இருந்து தொடங்கி ஒன்றுமே இல்லாத ஒன்றில் முடிவடையும் என்பதுதான். ஒன்றுமே இல்லாமல் எப்படி ஒன்று இருந்திட முடியும் எனும் போது 'அப்படித்தான், இப்போது என்ன செய்யப்போகிறாய்' என இயற்பியல் விதிகள் நமது சிந்தனைகளை கட்டுப்படுத்த எத்தனிக்கும்போது அங்கே 'ஒண்ணுமே சொல்ல இயலாமல்' போய்விடக்கூடிய வாய்ப்பு மிகவும் அதிகமே. ஆனால் இது ஒரு விதண்டாவாதம் என எவரும் நினைப்பதில்லை, ஏனெனில் இது அறிவியல்.

ஒரு முழு உருவம் ஒன்றை எடுத்துக் கொள்வோம். இப்போது அந்த உருவம் இருக்கிறது. இதற்கு முன்னர் அந்த உருவம் எங்கே இருந்தது? எங்கேயும் இல்லை என சொன்னால் நம்மால் நம்ப இயலுமா? நம்பித்தான் ஆக வேண்டும் என்கிறது தத்துவம் சொல்லும் ஒண்ணுமில்லை. இப்பொழுது அதே உருவத்தை சின்னாபின்னாமாக்கி தூள் தூளாக்குவோம். நமது கண்ணுக்கே தென்படாத துகள்கள் இப்போது அந்த உருவம் ஆகிவிட்டது. அந்த உருவம் ஒன்றுமே இல்லையா எனில் ஆம் அப்படித்தான் ஆகிவிட்டது. துகள்கள், முடிந்தால் கண்டுபிடித்து கொள் என்கிறது தத்துவம். பிறக்கும் முன்னர் நாம் எப்படி இருந்தோமோ அப்படியே இறந்து பின்னர் ஆகிவிடுவோம் என மிக சர்வசாதாரணமாக சொல்லி செல்கிறது இந்த தத்துவம் சார்ந்த ஒண்ணுமில்லை. இதைத்தான் எதைக்கொண்டு வந்தாய், எதைக் கொண்டு செல்லப்போகிறாய் என பகவத் கீதை பேசுகிறது என ஒரு சிந்தனையாளர் எழுதினார்.

அடுத்ததாக இறையியல் சொல்லும் ஒண்ணுமில்லை. கடவுள் இருக்கிறார். எங்கே இருக்கிறார், எப்படி இருக்கிறார். எவரேனும் தெரிந்து கொண்டனரா என்றால் ஒண்ணுமில்லை என ஆகாயத்தை விளிக்கிறார்கள். இந்த ஒண்ணுமில்லை தன்னை தானே அறிந்து கொள்தல் என பொருள்கொண்டு அதில் இறைவனை அறிவது என்பதுதான் இறையியல் தத்துவம்.

ஒரு குறிப்பிட்ட தொலைவுக்கு மேல் வானத்தில் இருந்து பார்த்தால் பூமியில் உள்ள எல்லாம் ஒரே மாதிரிதான் தெரியுமாம்.  சமநிலை கோட்பாடு என்பதைத்தான் ஒண்ணுமில்லை கோட்பாடு அடைய துடிக்கிறது என்கிறது இந்த அறிவியல், தத்துவம், இறையியல் கோட்பாடுகள்.

சமநிலையை நோக்கிய ஒரு இழுவை என அறிவியலும், சமநிலையை நோக்கிய ஒரு பார்வை என தத்துவம், இறைவனுடன் கலந்து சமநிலை கொள்தல் என இறையியலும் ஒண்ணுமில்லை கோட்பாடு பற்றி குறிக்கிறது.

ஆனால் சம நிலையும், ஒண்ணுமில்லை என்பதும் வெவ்வேறானவை என்பதை இந்த மூன்று பார்வைகளும் பார்க்காமல் விட்டுவிட்டன. எப்படி ஒண்ணுமில்லை சமநிலை ஆக இயலும்? எல்லாம் இருப்பது கூட சமநிலை அடைய முடியும் அல்லவா.

ஒண்ணுமில்லை என்பதெல்லாம் நமது சிந்தனையை கட்டிப்போட சொன்ன ஒரு வழி. எனது தாய் சொன்ன ஒண்ணுமில்லை இன்னும் நினைவில் ஆடிக்கொண்டுதான் இருக்கிறது. இயற்பியல் விதிகள் அனைத்தையும் தகர்த்துவிடத்தான் ஆசை. ஆனால் இயற்பியல் விதிகளே ஒன்னுமில்லாதபோது இல்லை என சொல்லியபின்னர், இல்லாத விதிகளை எப்படி தகர்ப்பது?

கந்தகம் நிறைந்த மண்ணில் இருந்துதான் உயிரினங்கள் தோன்றின என எவரேனும் சொன்னால் என்ன செய்வீர்கள்? அது உண்மையாக இருக்காது என ஒதுங்கி போய்விடுவீர்களா? அப்படி கந்தகம் நிறைந்த மண் எங்கே இருக்கிறது என தேடித்தான் போவீர்களா?

(தொடரும்)

Friday 2 March 2012

தேடிக் கொண்ட விசயங்கள் - 5

ஆர் என் ஏ பற்றி குறிப்பிடுவது எனில் நமது எண்ணத்திற்கு வருவது புரதம். இந்த புரதம் நமது உடலில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.


இந்த எண்ணற்ற புரதங்களை உருவாக்க அமினோஅமிலங்கள் உபயோகப்படுகின்றன. மொத்தம் இருபத்தி இரண்டு அமினோஅமிலங்கள் மட்டுமே இருக்கின்றன. அந்த இருபத்தி இரண்டு அமினோமிலங்களில் இருபது அமினோஅமிலங்கள் நமது மரபணு குறிப்புகள் மூலம் சேர்ந்து பலவிதமான புரதங்களை உருவாக்குகின்றன.  இதில் ஒன்பது அமினோ அமிலங்கள் நமது உடல் மூலம் உருவாக்க முடியாத காரணத்தால் அவை உணவு வகையில் இருந்து பெறப்படுகிறது. மற்ற அமினோ அமிலங்கள் நமது உடலில் உருவாக்கப்படுகிறது. உணவுகளில் இருந்து மூலமே பெறப்படும் அமினோ அமிலத்தை 'முக்கியத்துவம் வாய்ந்த அமினோ அமிலங்கள்' என அழைக்கிறார்கள்.

நமது உடலில் வினையூக்கிகள், ரிசெப்டார், சில ஹார்மோன்கள் எல்லாம் இந்த புரதத்தினால் ஆனவையே. அதனால் தான் இந்த புரதம் தனை உடலின் அடிப்படை மூலக்கூறுகள் என்று அழைக்கிறார்கள். அதன் காரணமாகவே புரத சத்து அதிகமுள்ள உணவினையும் நம்மை உட்கொள்ள சொல்கிறார்கள். புரத சத்து உணவை நாம் உண்ணும்போது அந்த புரதம்தனை நேரடியாக நமது செல்கள் உறிஞ்சி கொள்ள முடியாததால் அவை எல்லாம் சிறு அமினோ அமிலங்களாக புரோட்டியேஸ் எனப்படும் வினையூக்கியால் மாற்றப்பட்டு பின்னர் நமது உடல் நமக்கு தேவையான புரதத்தை மாற்றி கொள்கிறது.

அதிகப்படியான அமினோ அமிலங்கள் நமது உடலில் இருந்தாலும் அது ஆபத்துதான். அப்படி அதிகப்படியான அமினோ அமிலங்கள் நமது கல்லீரலில் சென்று அவை உயிர்வினைக்கு உட்பட்டு யூரியாவாக மாற்றம் கொள்கிறது.



இந்த யூரியா நமது உடலில் இருந்து சிறுநீரகம் மூலம் சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றபடுகிறது. அப்படி வெளியேற்றபடாத பட்சத்தில் நமது உடலில் விஷத்தன்மை ஏற வாய்ப்பு உள்ளது. ஆர் என் ஏ பற்றி பேச ஆரம்பித்துவிட்டு புரதம், அமினோ அமிலங்கள் பற்றி கூறுவதற்கு காரணம் இருக்கிறது. இந்த அமினோ அமிலங்களை புரதத்தை உருவாக செய்வது ஆர் என் ஏ தான். என்னதான் டி என் ஏ தன்னிடம் எல்லா விசயங்களையும் சேமித்து வைத்தாலும் இந்த ஆர் என் ஏ க்கள் இல்லை என்றால் எந்த ஒரு வேலையும் நடக்காது. இதற்கு முக்கிய காரணம் டி என் ஏ வால் நமது செல்லின் கருவில் இருந்து வெளியேற முடியாது.

அப்படி கருவில் இருந்து வெளியேற முடியாவிட்டால் எப்படி தனக்குள் இருக்கும் சிந்தனைகளை டி என் ஏ வெளியே சொல்ல இயலும்? அதற்காக உருவானதுதான் ஆர் என் ஏ. இந்த புரதம் எல்லாம் ரிபோசொம்ஸ் எனும் செல்லின் ஒரு பகுதியில் நடைபெறுகிறது. இது கருவுக்கு வெளியே இருக்கிறது. எனவே இந்த ஆர் என் ஏவானது டி என் ஏ விடம் இருந்து விசயத்தை பெற்று கொண்டு அதை வெளியே கொண்டு வந்து புரதம் தனை உருவாக்க வழி செய்கிறது. ஒரு ஆர் என் ஏ மட்டும் இந்த வேலையை செய்ய வில்லை. ஆர் என் ஏக்கள் ஐந்து வகைப்படும்.

மேசன்ஜெர் ஆர் என் ஏ. இந்த ஆர் என் ஏ தான் டி என் ஏ விடம் இருந்து விசயத்தை பெரும் ஆர் என் ஏ.

டிரான்ஸ்பர் ஆர் என் ஏ. இந்த ஆர் என் ஏ அமினோ அமிலத்தை மெசஞ்சர் ஆர் என் ஏ வில் உள்ள மரபு குறிப்புகளுக்கு ஏற்ப கொண்டு வந்து சேர்ப்பவை.

ரிபோசொம் ஆர் என் ஏ. இவை புரதத்தை உருவாக்க உதவுபவை.

மைக்ரோ ஆர் என் ஏ. ஸ்மால் இண்டர்பிரோன் ஆர் என் ஏ எல்லாம் இருக்கின்றன.

ஆர் என் ஏக்கும் டி என் ஏக்கும் சில வித்தியாசங்கள் உண்டு. டி என் ஏ இரட்டை சங்கிலி. ஆர் என் ஏ ஒரு சங்கிலி. ஆர் என் ஏவில் தைமின் பதில் யுராசில் எனும் அமைப்பும், ரிபோஸ் எனும் சர்க்கரையும் உண்டு.

டி என் ஏ வில் உள்ள பல விசயங்களை புறந்தள்ளுவது இந்த ஆர் என் ஏ க்கள். இந்த ஆர் என் ஏ க்கள் முதன் முதலில் உருவாகி அதன் பின்னரே டி என் ஏ உருவாகி இருக்கலாம் என்றே கருதுகிறார்கள். ஆர் என் ஏ வைரஸ் உலகின் முதல் உயிரற்ற செல்.

எப்படி உயிரற்ற ஒன்றிலிருந்து உயிருள்ள ஒன்று உருவாக வாய்ப்பு இருக்கிறது என்பதை காட்டவே இந்த வைரஸ் இன்னும் உலவி கொண்டிருக்கிறது. உடல் நோய் தருவது வைரஸ் எனும் கிருமி. அதை போலவே கணினி கட்டுப்பாட்டினை செயல் இழக்க செய்வது வைரஸ் என்றே அழைத்தார்கள்.

பாக்டீரியா தரும் நோயிற்கும், வைரஸ் தரும் நோயிற்கும் வித்தியாசம் இருக்கத்தான் இருக்கிறது. வைரஸ் பற்றிய கவிதை என்றோ எழுதியது.

ஒடுக்கப்பட்ட உயிர் 
அடக்கப்பட்ட உயிர் 
தனித்து இருந்தால் மயான நிலை 
ஒன்றினுள் நுழைந்தால் உயிர்த்த நிலை 

மண் துகள்களுக்கு 
விமோசனம் தந்து 
உயிரற்ற பொருளுக்கும் 
உயிர் கொண்ட பொருளுக்கும் 
பாலமும் பகையுமாய் 

ஒற்றை கயிறு ஆர் என் ஏ 
கொண்டு 
இரட்டை கயிறு டி என் ஏ 
திரித்து 
உலக உயிர்களின் வழியானாய் 
உலக உயிர்களுக்கு வலியுமானாய் 

உன்னில் தேடுகிறேன் 
எனக்கான இறைவனை!



(தொடரும்)

Monday 27 February 2012

முக்காலமும் உணர்ந்த முனிவர்களா நாம்? 4

பகுதி - 3 

திருமூலர் கதையை பற்றி அறிந்ததும் இதெல்லாம் எப்படி சாத்தியம் என்றே மனம் சொல்லி அமைதி கொண்டது. பேய் பிடித்து அதை விரட்ட சொல்லி எங்கள் ஊருக்கு முனியாண்டி என்ற ஒரு பூசாரியிடம் வந்த பலரின் கதையை கேட்டதுண்டு. ஒவ்வொருவரும் ஒரு விதமாகவே சொன்னார்கள். அந்த அம்மா, அந்த பொண்ணு போலவே பேசினாங்க. என்ன நடந்த்துச்சினு, எப்படி நடந்துச்சுன்னு சொன்னாங்க என்றெல்லாம் சொன்னதை கேட்டதும் மனதில் ஆச்சர்யம் பொங்கி வழிந்தது. ஆனால் இதுவரை எதையும் சோதனை செய்தது இல்லை. 

நான் உறங்கி கொண்டிருக்க, மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து ஆவியை வைத்து விளையாடிய கல்லூரி நண்பர்கள் சொன்ன கதை பலிக்காமல் போனது கண்டு புன்முறுவல் மட்டுமே செய்ய முடிந்தது. 

திருமூலரின் கதை சுருக்கத்தை மீண்டும் பார்க்கலாம். 

திருமூலர் சுந்தரநாதா எனும் இயற்பெயர் கொண்டவர். இவர் வாழ்ந்த காலம்  எட்டாம் நூற்றாண்டு அல்லது பதினோராம் நூற்றாண்டு என்றே கருதபடுகிறது. அதுவும் இவர் எழுதிய திருமந்திரம் மூலமே இவரது காலம் கணிக்கப்படுகிறது. அதாவது எப்போது வாழ்ந்தார், எப்படி வாழ்ந்தார் என்கிற ஒரு விபரங்கள் கிடைக்காத படச்சத்தில் இவரைப் பற்றிய ஒரு விசயம் பரவலாகப் பேசப்படுவது ஆச்சர்யமே. அதாவது இவர் கூடு விட்டு கூடு பாயும் கலையை கற்று கொண்டவராக சொல்லப்படுகிறது. இவர் பதினெட்டு சித்தர்களில் ஒருவராகவும், அறுபத்தி மூன்று நாயன்மார்களிலும் ஒருவராகவும் போற்றப்படுகிறார். 

இவர் இமாலய மலைப்பகுதிகளில் தோன்றியவர் என்றும் கூறப்படுகிறது. இமாலய மலைப்பகுதிகளில் தோன்றிய இவர் தென்னிந்தியாவிற்கு வந்து அதுவும் தமிழில் மூவாயிரத்திற்கும் மேலாக பாடல்கள் இயற்றி இருப்பது  பெருமைக்குரியது. பொதுவாகவே இந்த சித்தர்கள், முனிவர்கள் எல்லாம் சாதாரண மனிதர்கள் போலவே இடம் விட்டு இடம் செல்லுபவர்களாகவே இருந்து வந்திருக்கிறார்கள். மனிதர்கள் வணிகம் செய்ய செல்வார்கள், இவர்கள் எதற்கு இப்படி இடம் பெயன்றார்கள்? 

இவர் பொதிகை மலையில் இருந்த தனது நண்பர் அகஸ்தியரை  காணவே கைலாய மலைகளில் இருந்து கிளம்பினாராம். அன்றைய காலத்தில் தொலைபேசி இல்லை, கடித போக்குவரத்து புறா மூலம் இருந்து இருக்கலாம். இதை எல்லாம் உபயோகிக்காமல் நேரடியாக அகஸ்தியரை காண திருமூலர் கிளம்பிவிட்டார். அப்படி வரும்போது சாத்தனூர் எனும் ஊருக்கு அருகில் பசுக்கள் எல்லாம் இறந்து போன ஒரு மனித உயிரை சுற்றி அழுது கொண்டிருந்தனவாம். அந்த மனிதர் மூலன், அந்த மாடுகளை தினமும் மேய்ப்பவன். இப்படி மாடுகள் அழுவதை கண்டு இரக்கப்பட்ட திருமூலர், தான் ஏதாவது செய்தாக வேண்டும் என முடிவு செய்தார். தனது உடலை ஒரு மரக்கட்டையில் பத்திரப்படுத்திவிட்டு இந்த மூலன் உடலில் தான் உட்புகுந்தார். அந்த மாடுகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தன. அந்த மாடுகளை எல்லாம் வீட்டில் பத்திரமாக சேர்த்துவிட்டு தனது உடலை பார்க்க வந்த திருமூலர் உடல் காணாமல் போனது கண்டு கலக்கமுற்றார். இப்போது மாடுகள் திருமூலருக்கு வழிகாட்டியதா? அல்லது மூலனின் உடலில் நுழைந்ததால் எல்லா விசயங்களும் திருமூலருக்கு நினைவுக்கு வந்ததா? இப்போது தான் மூலன் இல்லை என்கிற ஒரு உணர்வு திருமூலருக்கு இருந்து இருக்க வேண்டும், அதே வேளையில் மூலன் என்பவனின் எண்ணங்களும் திருமூலருக்கு இருந்து இருக்க வேண்டும். எது சரி? 

அந்த மூலனின் உடலில் இருந்து கொண்டே பல பாடல்கள் இயற்றியமையால் திருமூலர் எனும் பெயர் அடைந்தார் என்கிறது வரலாறு. இப்போது இந்த பாடலை எழுதியது மூலன் என்பவனா? அல்லது மூலனின் உடலில் உட்புகுந்த சுந்தரநாதா எனும் திருமூலரா? மூலனின் உடலில் உள்ள நரம்பு மண்டலத்தில் சிந்தனையை உருவாக்கியது திருமூலரின் ஆன்மாவா? அல்லது மூலனின் சிந்தனைகளா? 

சுந்தரநாதா என இருந்தவரை எந்த ஒரு பாடலும் இயற்றியதாக வரலாறு இல்லை. அதுவும் சுந்தரநாதா என இருந்தபோது என்ன மொழி இவர் அறிந்து இருந்தார் என்பதற்கான ஆதாரங்களும் கிடையாது. மூலன் தமிழன். தமிழில் பாடல் இயற்றிய திருமூலர் இதை எங்கேனும் சொல்லி இருக்கிறாரா என பாடல் முழுவதும் தேடிக்கொண்டிருக்கிறேன். 

எதற்கு திருமூலர் கதை? எழுதியவரே இப்படி எல்லாம் எழும் கேள்விகள் என ஆங்காங்கே பதில்கள் எழுதி வைத்து இருக்கிறார். அதே வேளையில் நரம்பு மண்டலத்தை அலசி பார்க்க இதுதான் ஒரு சிறந்த வழியாக தெரிகிறது. பரிணாமம், கடவுள் என்றெல்லாம் பேசி பேசி மொத்த நரம்பு மண்டலத்தை சிதைத்து கொண்டிருக்கிறோமோ என்னவோ! 

நரம்புகள் பற்றிய பார்வை மூலம் எப்படி ஒருவர் முக்காலமும் அறிந்தவராக மாற முடியுமா என்பதை காணலாம். இந்த நரம்பு மண்டலம் தான் சிந்தனைகளை தூண்டுகின்றனவா? நமது மூளைக்கும், விலங்குகளின் மூளைக்கும் என்ன வித்தியாசம்? இந்த மூளையை பற்றி நிறைய ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. கடவுள் பகுதி என ராமச்சந்திரன் என்பவர் மூளையில் ஒரு இடத்தை கண்டுபிடித்ததாக நுனிப்புல் நாவலில் எழுதி வைத்தேன். அதாவது கடவுள் பற்றாளர்கள் மத, கடவுள் எண்ணம் எழும்போது மூளையில் ஒரு பகுதி அதிக அளவில் செயல்படுவதாகவும், அதே வேளையில் கடவுள் நம்பிக்கையற்றவர்களுக்கு மூளையில் அந்த பகுதி செயல்படுவதில்லை எனவும் சொல்லி இருப்பது விவாதத்திற்கு உரியது என்றாலும் ஒன்றை ஒன்றுடன் தொடர்பு படுத்தி பார்ப்பதுதான் அறிவியலில் உள்ள வேலை. 

அவனை ஒழிய அமரரும் இல்லை
அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவனன்றி மூவரால் ஆவதொன்றும் இல்லை
அவனன்றி ஊர்புகு மாற்றி யேனே (6 )

மேற்குறிப்பிட்டபடி திருமூலர் வரலாறு என்றே திருமூலரே பல பாடல்களில் எழுதி இருக்கிறார். அதில் ஒரு பாடலில் இப்படி எழுதி இருக்கிறார். 

பின்னைநின் றென்னே பிறவி பெறுவது 
முன்னைநன் றாக முயல்தவஞ் செய்கிலர் 
என்னைநன் றாக இறைவன் படைத்தனன் 
தன்னைநன் றாக தமிழ்ச்செய்யு மாறே (80 )

நந்தி அருளாலே மூலனை நாடிப்பின்
நந்தி அருளாலே  சதாசிவ னாயினேன் 
நந்தி அருளால்மெய்ஞ்  ஞானத்துள்  நண்ணினேன் 
நந்தி அருளால் நானி ருந்தேனே (92 )

இந்த பாடலில் திருமூலர் ஒரு ரகசியத்தை எழுதி வைத்து இருக்கிறார். மூலனை நாடிப்பின் சதாசிவ னாயினேன். 

அதிலும் ஒரு சிறப்பு. 

சுந்தரனாதன் எழுதியது என்று திருமூலர் சொல்லவில்லை. 

மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ் 
ஞாலம் அறியவே நந்தி அருளது
காலை எழுந்து கருத்தறிந் தோதிடின் 
ஞாலத் தலைவனை நண்ணுவ ரன்றே (99 )

யான் பெற்ற பெறுக இவ்வையகம் என்றே சொல்கிறார் திருமூலர். அதோடு மட்டுமில்லாமல் மூலனின் உடலில் உட்புகும் முன்னர் சிவனோடுதான் இருந்தேன் என்கிறார். சிவநாமங்கள் ஓதிக்கொண்டிருந்தேன். நந்தியின் இணையடிக்கீழ்  இருந்தேன் என்கிறார். 

விநாயகர் பற்றி துதி எழுதியது திருமூலர் இல்லை என்று ஒரு குற்றச்சாட்டு நிலவுவது உண்டு. திருமூலருடன் சேர்ந்து  பல முனிவர்களை சந்திப்பதோடு நரம்பு மண்டலம் நோக்கிய பயணம் தொடரும்.  

Friday 24 February 2012

ஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 13

பாதை 12 

13 . பகுப்பாய்வு முறைகள்

மிளகுதனில் இருந்து பைப்பெரின் எனும் மூலக்கூறினை பிரித்தெடுத்தாகிவிட்டது. அது பைப்பெரின் தானா என சரி செய்து கொள்ள வேறு சில செய்முறைகளை செய்தாகவேண்டிய சூழல். அவை அனைத்துமே ஒருவகையில் ஒளி, எலக்ட்ரான்கள், புரோட்டான்கள், காந்தபுலம் போன்ற விசயங்களின் மூலமே நடைபெறுகின்றன.

அப்போதுதான் ஆய்வகத்தில் எழுதபட்டிருந்த ஒரு வாசகம் என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு பொருளின் தனித்தன்மையை எந்த ஒரு ஆய்வும் முழுமையாக சொல்லிவிட இயலாது என்றே எழுதப்பட்டு இருந்தது. அது நூற்றுக்கு நூறு உண்மை. ஏனெனில் நாம் ஒரு பொருளை ஆய்வு செய்யும் பொது அதற்கான இலக்குகளை மட்டுமே வைத்து செயல்படுவது உண்டு.

ஒரு மூலக்கூறினை சரியா என அறிந்து கொள்ள பயன்பாட்டில் உள்ள எளிய முறைகள். முதலில் யு.வி. (அல்ட்ராவயலட்). அதற்கடுத்து எம்.எஸ் (மாஸ் ஸ்பெக்ட்ரோஸ்கோபி), அதற்கடுத்து ஐ.ஆர் (இன்ப்ரா ரெட்ஸ்பெக்ட்ரோஸ்கோபி) அதற்கடுத்து என்.எம்.ஆர் (ந்யுக்ளியர் மேக்னேடிக்  ஸ்பெக்ட்ரோஸ்கோபி). இப்படி ஒவ்வொரு நிலையிலும் அந்த மூலக்கூறு பகுத்தறியப்பட்டு இறுதியில் எல்லா ஸ்பெக்ட்ரம்களை ஆய்வு செய்து இதுதான் மூலக்கூறு என்று உறுதி செய்வதாகும். அப்படி இந்த முறைகளுக்கு உட்படுத்தபடாத மூலக்கூறின் வடிவமைப்பை கண்டு கொள்வது மிகவும் கடினமாகும். இதை எல்லாம் செய்தாலும், உண்மையிலேயே இந்த மூலக்கூறுதானா என்பதை இறுதியாக உறுதி செய்வது ஈ.எம் (எளிமெண்டல் அனலிசிஸ்). இந்த ஈ. எம் மூலம் அந்த மூலக்கூறில் உள்ள கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன் சதவிகித அளவு கண்டுபிடிக்கப்படும். ஒரே மூலக்கூறு வாய்ப்பாடு கொண்டிருக்கும் ஒத்த மூலக்கூறுகள் இருந்தால் சற்று பிரச்சினைதான், எனினும் மற்ற ஆய்வுமுறைகள் மூலம் தெளிந்து கொள்ளலாம்.

மேலே குறிப்பிடப்பட்ட தொழில்நுட்பங்களை நான் ஆய்வு மேற்கொள்ளும் முன்னர் செய்தது இல்லை. முதலில் எம்.எஸ் செய்ய வேண்டும் என மூலக்கூறினை எடுத்து கொண்டு வேறொரு இடத்தில் உள்ள ஆய்வகம் சென்றேன். அங்கே ஒரு படிவத்தை நிரப்பி கொடுத்துவிட்டு எனது மின்னஞ்சல் தர சொன்னார்கள். ஆய்வு செய்ததும் முடிவினை அனுப்பி வைக்கிறோம் என சொன்னதும் எனக்கு தூக்கி வாரி போட்டது. நான் கற்று கொள்ள என்ன இங்கே இருக்கிறது என நான் இந்த உபகரணத்தை இயக்கலாமா என அங்கே இருந்த பெரிய உபகரணத்தை சுட்டி காட்டினேன். அதற்கு அவர் சிரித்து கொண்டே இதோ இந்த மூலக்கூறினை இங்கே வைத்துவிட்டால் அதோ அங்கே இருக்கிற கணினியில் அரைமணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும். இதை எங்கே பெரிதாக இயக்கப் போகிறாய் என்றார்.

மனிதர்களின் சிந்தனை, கண்டுபிடிப்புகள் என ஒவ்வொன்றும் பெரிதும் ஆச்சர்யம் அடைய செய்பவை. ஒரு மூலக்கூறினை பகுதி பகுதியாக சிதைத்து அந்த மூலக்கூறின் நிறை எண்ணை கண்டு கொள்ளும் முறை தான் இந்த எம்.எஸ். இந்த எம். எஸ் மூலம் ஒரு மூலக்கூறின் நிறை எண்ணை துல்லியமாக சொல்லிவிடலாம், இருப்பினும் இந்த எம்.எஸ் மூலம் ஒரு மூலக்கூறு நூறு சதவிகிதம் தூய்மையானதா என்று மட்டும் கண்டுகொள்ள முடியாது.

அடுத்த பகுதியில் ஒவ்வொரு உபகரணம், அது எப்படி செயல்படுகிறது, எனது அனுபவங்கள் குறித்து பார்க்கலாம்.

எம்.எஸ். உபகரணம். நன்றி கூகிள்.


Thursday 2 February 2012

இந்த பிரபஞ்சம் தட்டை தான்

என்னைய நீங்க நொட்டை சொல்லக் கூடாது. இந்த பிரபஞ்சம் தட்டை தான், மட்டைகளா என ஒரு அறிவியல் குழு சொல்லிவிட்டது. நான் மொட்டை தலையை தடவி கொண்டு இருக்கிறேன். 

இந்த பிரபஞ்சம் தட்டை தான். 

ஆச்சர்யமாக இருக்கிறதா? இதில் ஆச்சர்யப்பட ஏதும் இல்லை. 

ஐன்ஸ்டீன் இந்த பிரபஞ்சம் சற்று வளைவானது என்று சொன்னதில் இருந்தே இது குறித்து அறிவியலாளர்கள் நிறையவே சிந்தித்து இருக்கிறார்கள். 

ஆனால் சமீபத்தில் அன்டார்டிகா மீது வானில் பறந்த ஒரு பலூன் இந்த பிரபஞ்சம் தட்டை என்றுதான் உறுதி செய்து உள்ளது. 

அதாவது ஈர்ப்பு விசை இல்லாத பட்சத்தில் ஒளியானது நேர்கோட்டில் மட்டுமே செல்லும், வளைந்து செல்லாது என்பது ஒரு விதி. 

அதோடு மட்டுமா, இந்த உலகம் எப்படி பெரு வெடிப்பு மூலம் உருவானதோ அதைப்போல பெரு சுருக்கத்தில் சென்று முடிவடையும் என்று முன்னாளில் நினைத்து இருந்தார்கள். ஆனால் அவ்வாறு இந்த பிரபஞ்சம் பெரு சுருக்கத்தில் முடிவடையாது என சமீபத்தில் ஆய்வின் மூலம் நிரூபணம் செய்து நோபல் பரிசு கூட பெற்று விட்டார்கள் அறிவியலாளர்கள். 

இப்படி தொடர்ந்து விரிவடைந்து அப்படியே உறைந்துவிடும் பிரபஞ்சம் தட்டையாகவே இருக்க இயலும் என உறுதி செய்யப்பட்டு உள்ளது. 

நாம் சாப்பாட்டினை சூடு செய்ய உபயோகிக்கும் மைக்ரோ அலைகள் பெரு வெடிப்பு நடந்தபோது உருவாக்கிய கதிரியக்க வெப்பம் தனை கொண்டு பல எப்படி பிரபஞ்சம் விரிவடைகிறது என கண்டறியலாம். 

இதற்காக ஒரு தனிதன்மையுள்ள கருவியை உருவாக்கி இருந்தார்கள். அதில் ஒரு கேலக்ஸியில் இருந்து உருவாகும் ஒளி செல்லும் பாதையை விட முதன் முதலில் உருவான (பெரு வெடிப்பில்) ஒளியானது பிரபஞ்சத்தை ஊடுருவி சென்றது ஆச்சரியம் அளிக்கும் வகையில் இருந்ததாம். 

இந்த பிரபஞ்சம் முதன் முதலில் அது கொஞ்ச நேரத்திற்கு வளைவாக இருந்தது, ஆனால் இப்போது தட்டையாகிவிட்டது என்கிறார்கள்.

ஆமாம், வேத நூல்களில் 'தட்டை' என சொன்னது பிரபஞ்சத்தையா, பூமியையா? எதுக்கு சொல்ல வருகிறேன் எனில் சொல்பவர் சொல்வதை புரிபவர் வேறு விதமாக புரியலாம் அல்லவா. 

Wednesday 1 February 2012

வானியல் ஆராய்ச்சியில் விருப்பமா?

சிறு வயதில் இரவில் நான் ஓடிக்கொண்டிருக்க என்னுடன் ஓடி வரும் நிலா. நான் நின்றால் நின்று கொள்ளும் நிலா. என் பேச்சு கேட்கும் அன்பு நிலா.

அம்மாவின் இடுப்பில் அமர்ந்து நிலாவைப் பார்த்து சாப்பிட்ட தருணங்கள். இந்த நிலா, வெள்ளை நிலா, 

நிலா நிலா ஓடி வா என பள்ளி காலங்களில் படித்து ரசித்த பாடங்கள். நிலா உள்ளம் கொண்ட கொள்ளை நிலா. 

தேய் பிறை, வளர் பிறை என நிலா தேய்வதும், வளர்வதுமாய். இது நிலா பற்றிய ஒரு கால கணிப்பு. 

வானத்தில் மேகங்கள் வலம் வர அங்கே எவரோ இருப்பதாய் கண்டு சிரித்த காலங்கள். 

ஆடு போன்ற உருவங்கள், ராஜா பவனி வரும் குதிரை வண்டிகள் என எத்தனை எத்தனையோ மேகங்களில் பார்த்து ரசித்த ஓவியங்கள். ஒவ்வொரு தினமும் எவரேனும் வரைந்து வைத்ததைப் போன்றே புதிதாக தோன்றும். 

இரவில் வானத்தைப் பார்த்து நட்சத்திரங்கள் எண்ணுவது ஒரு பொழுது போக்காக இருந்தது. எங்கோ தொலைவில் விழுந்து விடும் நட்சத்திரங்கள் விர்ரென பறந்து போனது கண்டு எரி நட்சத்திரம் என்றார்கள். 

சூரிய பகவான். வாயு பகவான். வருண பகவான் என வானத்தில் கடவுளர்களை தேடிய பொழுதுகள் உண்டு. இடி இடித்தால் அர்ஜுனன் பெயர் சொல்லி கதவுக்கு பின்னால் மறைந்த பொழுதுகள் உண்டு. 

எத்தனை எத்தனை கவிதைகள், பாடல்கள். வான மங்கை போட இருக்கும் கோலத்திற்கான புள்ளிகள் தான் நட்சத்திரங்கள் என வாசித்த போது சிலிர்க்க வைக்க சிந்தனைகள். 

மழைக்காக மாரியம்மனுக்கு மழை கஞ்சி எடுத்த நினைவுகள். இன்னும் இன்னும் நினைவில் பசுமையாக இருக்கிறது. 

வானத்தில் இருக்கும் சொர்க்கம் என்றே பாட்டியிடம் கேட்ட கதைகள். இறந்தவர்கள் சாமியிடம் சென்று விட்டார்கள் என வானத்தை நோக்கி சொன்ன வார்த்தைகள். 

சூரிய நமஸ்காரம் சொன்னதோடு நவ கிரகங்கள் என ஒன்பது கிரகங்களை கோவில்களில் சுற்றி வந்த பொழுதுகள். எந்த கணக்கில் இருபத்தி ஏழு நட்சத்திரங்கள் என கண்டு கொண்டார்களோ என புரியாத கணக்குகள். ராசியும் பலன்களுமாய். 

ஒவ்வொரு கிரகத்திற்கும் தொடர்பு உண்டு. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் தொடர்பு உண்டு. இந்த மொத்த அண்ட சாரமும் பிண்டத்தில் உண்டு என்று சொன்ன விதிகள். 

இன்னும் இன்னும். நிலா தொட்டு விட்டோம். பூமிக்கு மட்டுமே நிலா அல்ல, ஒவ்வொரு கிரகத்திற்கும் நிலா உண்டு என்று கண்டு கொண்டோம். 

நாம் இருக்கும் இடம் இந்த பிரபஞ்சத்தில் ஒரு சின்ன துளி. என்றோ அனுப்பப்பட்ட வானியல் கோள் புளுட்டோவை தாண்டி கொண்டு சென்று கொண்டிருக்கிறது. 

சிறு வயதில் வானத்தில் படங்களை பார்த்தது போல தொலை தூர நட்சத்திரங்களில் நெபுலாவில் அதிசய படங்கள் பார்க்கிறார்கள். அதிசய படங்கள் காட்டுகிறார்கள். அத்தனை அழகுடன் வியாபித்து இருக்கிறது இந்த பிரபஞ்சம். 

நமது சூரிய குடும்பத்தில் உள்ள ஆக்சிஜன் அணு அளவும், நமது சூரிய குடும்பத்துக்கு வெளியே உள்ள ஆக்சிஜன் அணு அளவும் வெவ்வேறு என கண்டு கொள்ள முடிகிறது. இதனால் புது விசயம்தனை தெளிந்து கொள்ளலாம் என போராடுகிறார்கள். 

இப்படி எத்தனையோ முன்னேற்றம் அடைந்து கொண்ட இந்த கால தொழில் நுட்பம் பொது மக்களை வானியல் ஆராய்ச்சி செய்ய அழைக்கிறது. தொலை நோக்கி மூலம் வானில் ஏற்படும் அதிசயங்களை கண்டு தர சொல்கிறது. 

ஒருவரின் கண்ணுக்கு தெரிவது மற்றொரு கண்ணுக்கு வேறொன்றாக புலப்படலாம். பலரும் போட்டி போட்டு கொண்டு இந்த பணியில் இறங்கி எந்த ஆராய்ச்சி பட்டம் பெறாத ஒருவர் ஒரு புது கிரகத்தை அதுவும் பூமி போன்ற கிரகத்தை சமீபத்தில் கண்டு பிடித்தார். 

சந்திர கிரகணம். சூரிய கிரகணம். பாம்பு விழுங்கிய கதை எல்லாம் இன்னமும் நினைவில் இருக்கிறது. இன்றும் கூட கிரகணம் சமயங்களில் வெளியில் வர வேண்டாம் என கட்டுபாடுகள் விதிக்கிறார்கள். 

வானத்தில் அதிசயங்கள் நடைபெற்று கொண்டே இருக்கின்றன. வெடித்து சிதறும் பல நட்சத்திரங்கள். குட்டியாய் தோன்றும் நட்சத்திரங்களில் தண்ணீர் சிதறும் மர்மங்கள். இன்னும் இன்னும்.

ஒரு நாள் இரவில் தனியாய் மகனுடன் நடந்து கொண்டு இருந்தேன். வானத்தைப் பார்த்தவன் அதோ நிலவுடன் ஒரு நட்சத்திரம் என்றான். வானில் பறக்கும் விமானமாக இருக்கும் என்றேன். இல்லை இல்லை அது நேர்கோட்டில் அமைந்த நட்சத்திரம் என்றான். படம் எடு என வற்புறுத்த வேண்டாம் என மறுத்தேன். 

மறுநாள் மீண்டும் இரவில் நடந்தோம். அதே நிலா, அதே நட்சத்திரம். படம் எடுத்தே ஆக வேண்டும் என சொன்னான். படம் எடுத்தேன். வானியல் ஆராய்ச்சி விருப்பம் உடையவர்கள் ஒரு தொலைநோக்கியுடன் வானத்தைப் பாருங்கள். அதிசயங்கள் கிட்டும். 


வானில் எத்தனையோ அதிசயங்கள். இறைவன் மட்டும் தென்படுவதே இல்லை. 

Sunday 18 December 2011

பின்னூட்ட புண்ணாக்கு

புண்ணாக்கு எனப்படுவது மாட்டு தீவனத்தில் ஒன்று. இந்த புண்ணாக்கு பொதுவாக எண்ணை நிறைந்த வித்துகளில் இருந்து எண்ணை நீக்கப்பட்ட பின்னர் உருவாக்கப்படுகிறது. அதாவது தமிழில் சக்கை என சொல்வார்கள். இந்த சக்கையில் என்ன சத்து இருந்து விடப்போகிறது என நினைக்காமல் அதை ஒரு தீவனமாக பயன்படுத்திய முன்னோர்களின் அறிவு!

தாவரங்கள் ஒளியின் உதவியால் உணவை உற்பத்தி செய்கின்றன. தாவரங்கள் கரியமில வாயுவை (கார்பன் டை ஆக்சைடு) உட்கிரகித்து அவற்றை நீருடன் இணைத்து ஆக்சிஜனையும், குளுக்கோசையும் உருவாக்குகிறது.  இந்த உணவு உருவாக்கும் முறையானது இரண்டு நிலைகளில் செயல்படுகிறது. ஒன்று ஒளியின் உதவியால் நடைபெறுகிறது மற்றொன்று ஒளியின் உதவியின்றி நடைபெறுகிறது. நீரினை பகுத்திட ஒளி பயன்படுகிறது. அத்துடன் ஒளியின் வேலை முடிவடைந்து விடுகிறது. அதன் பின்னர் எலக்ட்ரான்கள் உயர் ஆற்றல் நிலை அடைவது, புதிய ஆற்றல் மூலக்கூறு நடைபெறுவது என வேலை தொடர்கிறது. அதற்கு பின்னர் ஒளியற்ற நிலையில், கால்வின் சக்கரம், குளுக்கோஸ் உருவாக்கப்படுகிறது. இலையின் பசுமை நிறத்து காரணியான குளோரோபில் எனப்படும் பொருளின் மூலமே இந்த உணவு தயாரிக்கும் முறை நடைபெறுகிறது, ஏனெனில் இந்த குளோரோபில் ஒளியை உறிஞ்சும் தன்மை கொண்டது. மனிதரின் செல்களில் இந்த குளோரோபில் போன்ற ஒன்றை உருவாக்க இயலுமா என்பதுதான் எனது நீண்ட நாளைய ஆராய்ச்சி கனவு. அதாவது மரங்களே இல்லாத சூழல் ஒன்று வருகிறது என வைத்து கொள்வோம், அப்பொழுது மனிதர் போன்ற விலங்கினங்கள் தங்களுக்கு தாங்களே உணவு தயாரிக்க இயலுமா என்பதுதான் பரிணாம, மரபணு வழியில் வந்த ஒரு புது சிந்தனை. பார்க்கலாம்.

ஒளி தாயரிப்பு எப்படி ஏறடுகிறது என்பதற்கான வேதிவினை இது.

                                                       ஒளி
கார்பன் டை ஆக்சைடு + நீர் --------------------------> குளுக்கோஸ் + ஆக்சிஜன்
                                                    குளோரோபில்

இந்த குளுக்கோஸ் பலவகையில் மாற்றம் கொள்கிறது. இந்த குளுக்கோஸ் செல்களில் உள்ள செல்லுலோசாக மாற்றம் கொள்கிறது. அதாவது பாலிமர் என இதை குறிப்பிடுகிறார்கள். இந்த குளுக்கோஸ் பல குளுக்கோஸ்களுடன் ஒரு இணைப்பு சங்கிலி ஏற்படுத்தி உருவாவதுதான் செல்லுலோஸ்.

மேலும் இந்த குளுக்கோஸ் எளிதாக நீரில் கரையும் தன்மை உடையதால் எதிர்கால சேமிப்புக்கு என இவை அப்படியே இருக்க முடியாது என்பதால் இவை ஸ்டார்ச் எனும் மற்றொரு பாலிமர் போன்று தன்னை மாற்றி கொண்டு சேமிப்பாக மாறிவிடுகிறது. இந்த ஸ்டார்ச் பிறிதொரு நாளில் தாவரங்கள் உணவு தயாரிக்க முடியாது போகும் பட்சத்தில் குளுக்கோஸாக மாற்றம் உடைந்து பயன்படுகிறது. இந்த ஸ்டார்ச் கரையும் தன்மை அற்றது. இந்த ஸ்டார்ச் அமைலோஸ், அமைலோபெக்டின் எனும் இரு பொருட்களால் ஆனது. இந்த இரண்டுமே பல குளுக்கோஸ் இணைந்து உருவான சிறிது வேறுபாட்டுடன் கூடிய இரட்டை பிள்ளைகள்.

இப்படியான குளுக்கோஸ் தாவர விதைகளில் எண்ணையாக மாற்றம் கொள்கிறது. மேலும் இந்த குளுகோஸ் பழங்களில் வேறொரு இனிப்பாக சுக்ரோஸ், பிரக்டோஸ் என மாற்றம் கொண்டு அதிக இனிப்பு தன்மையை உருவாக்குகிறது. மேலும் இந்த குளுக்கோஸ் நைட்ரெட் போன்ற தாது பொருட்களுடன் இணைந்து அமினோமிலங்கள் உருவாக்கி பின்னர் புரதம் உருவாக்குகிறது. மிக முக்கியமாக ஆற்றலை தருவது இந்த குளுக்கோஸ் தான். செல்களில் நடைபெறும் சுவாச வேதி வினையின் காரணமாக இந்த குளுக்கோஸ் ஆற்றலாக மாறுகிறது.

குளுக்கோஸ் + ஆக்சிஜன் ------------------> கார்பன் டை ஆக்சைடு + நீர் + ஆற்றல் (சக்தி)

இப்படி தாவர விதைகளில் எண்ணையாக மாறிய குளுக்கோஸ் தனை விதைகளை நசுக்கி, பிழிந்து எண்ணையை பிரித்தெடுத்து விடுகிறார்கள். சில நேரங்களில் விதைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து எண்ணையை ஆவியாக்கி பின்னர் குளிரூட்டி பிரித்து விடுகிறார்கள். இப்பொழுது கிடைக்கும் சக்கையானது இந்த குளுக்கோஸ் மூலம் உருவான பல பொருட்களால் ஆனது. அதைத்தான் புண்ணாக்கு என அழைக்கிறார்கள். இது சக்கை என்றாலும் இதில் உள்ள பொருட்களை செரிக்கும் தன்மையை இந்த மாடு போன்ற விலங்கினங்கள் கொண்டுள்ளன. நம்மால் இந்த பொருட்களை செரிக்கும் திறன் கிடையாது, எனவேதான் கரும்பில் இருக்கும் திரவத்தை உறிஞ்சிவிட்டு சக்கையை துப்பி விடுகிறோம். வாழைப்பழ தோலை தூக்கி எறிவதும் இதன் காரணமே. ஆனால் ஆடு மாடு போன்ற விலங்கினங்கள் இவைகளை உண்டு செரித்து கொள்கின்றன.

புண்ணாக்கு பெயர்க்காரணம் கூறுக. தாவர விதையை காயப்படுத்தி உருவாக்கப்பட்ட பொருள் என்பதால் புண்ணாக்கு என அழைக்கப்பட்டது. புண் + ஆக்கு = புண்ணாக்கு என கொள்ளலாம்.  பிண்ணாக்கு =பிண்ணம் +ஆக்கு , அதாவது சிதைத்து பின்னர் உருவாக்கியது, விதைகளை கூழாக நசுக்கி பின்னர் கிடைப்பது எனப்பொருள், ஹி..ஹி இது ஏதோ நினைவில் இருந்து எழுதுகிறேன், சரியானு தமிழ் ஆர்வலர்கள் தான் சொல்லனும்! (நன்றி வவ்வால்) இந்த புண்ணாக்கு கடலை, தேங்காய், எள்ளு, ஆமணக்கு போன்ற எண்ணை விதைகளில் இருந்து உருவாக்கப்படுகிறது.

புண்ணாக்கு என ஒருவரை அழைப்பது அவரிடம் சரக்கு எதுவும் இல்லை என்பதை குறிக்கவே. அதாவது மிகவும் பயன்பாடான எண்ணை நீக்கப்பட்ட பின்னர் உள்ள சக்கையை போல அவர் இருக்கிறார் என சொல்லாலம், ஆனால் அது கூட ஒருவகை தவறுதான், ஏனெனில் புண்ணாக்கு கூட பயன்பாடான பொருளாகவே இருக்கிறது என்பதை அறிந்தோம். ஜீரோ எழுத்தில் எழுதப்பட இருப்பதை போல எந்த ஒரு பொருளும் ஒன்றும் இல்லாமல் இல்லை. அதாவது எதுவுமே இல்லாமல் எதுவுமே இல்லை.

மதிப்பிற்குரிய எனது நண்பர் ஒருவர் ஆளில்லாத கடையில் டீ ஆத்துவது தவறு என சொன்னார். அதாவது இந்த வலைப்பூ எழுதுவதன் மூலம் பிறர் பயன்பட வேண்டும் என்றும் கருத்து பரிமாற்றம் நிகழ வேண்டும் என்பதுதான் அவரது எண்ணம். பலர் வந்து மறுமொழியோ, பின்னூட்டங்களோ எழுத வேண்டும், அப்படி எழுதி கருத்துகளை பரிமாற வேண்டும். ஒரு எழுத்துக்கு  பின்னூட்டங்கள், மறுமொழிகள், எழுதுபவரை உற்சாகத்தில் வைத்திருக்கும், இல்லையெனில்  ஈ ஓட்டுவது, காற்று வாங்குவது என பொருள்படும் என்பது அவரது கருத்து. ஆனால் எனக்கு சொல்லி தந்த ஆசிரியரோ எவருமே செருப்பு அணியாத இடத்தில் சென்று செருப்பு விற்பவனே அதி புத்திசாலி என சொல்லிக் கொடுத்தார். ஒன்றை விரும்பாத, ஒன்றை அறியாத மக்களிடம் சென்று புதுமையை புகுத்துவது. அதன் மூலம் அவர்களை அந்த விசயத்திற்கு அடிமையாக்குவது என்பதாகும்.

நீங்கள் வலைப்பூக்களில் சென்று இடும் உங்கள் பின்னூட்டங்கள் புண்ணாக்கா? எண்ணையா?

Sunday 4 December 2011

தேடிக்கொண்ட விசயங்கள் - 4

விசயங்கள் - 3  இங்கே. 

ஒரு நூலை எழுதும்போது அதில் பல விசயங்களை வைத்துவிட வேண்டும் தீராத ஆர்வம் மொத்த இலக்கையும் சிதைத்துவிடுகிறது. இந்த மரபணுக்கள் பற்றி சிந்திக்கும் போது எதை எதையோ எழுதி விட வேண்டுமென நினைத்துதான் நுனிப்புல் நாவலில் மரபியல் குறித்து எழுதினேன். அதனுடைய தொடர்ச்சி என மொத்த நாவலும் மரபணுக்கள் பற்றிய ஒரு ஆராய்ச்சியின் வடிவமாகத்தான் மூன்றாவது பாகம்தனை வெளிக்கொண்டு வர வேண்டும் என நினைத்து இருந்த வேளையில் இந்த மரபணுக்கள் புரிந்து கொள்ள முடியும் வகையில் எளிதாக இல்லவே இல்லை.

இந்த மரபணுக்கள் குறித்த விரிவான பார்வையில் இறங்கும் முன்னர் மரபணு குறித்த அறிவு எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்வோம். டி என் ஏ, ஆர் என் ஏ. இந்த இரண்டு மூலக்கூறுகள் பற்றிய எளிதான விளக்கங்கள் தெரிந்து கொள்வது சாத்தியமாகிறது. இந்த இரண்டு மூலக்கூறுகள் உருவாக காரணமான நியூக்ளிக் அமிலங்கள், கார்போஹைட்ரெட் மற்றும் பாஸ்பேட் மூலக்கூறு அதற்கு உதவும் வகையில் அமைந்த கந்தக பாலம்.


                                                    **********************


அடினைன் மற்றும் குவானைன் எனப்படும் மூலக்கூறுகளானது புயூரின் எனப்படும் நைட்ரஜன் உள்ளடக்கிய ஒரு மூலக்கூறிலிருந்து இருந்து உருவானதாகும். சைட்டோசின் மற்றும் தைமின் எனப்படும் மூலக்கூறுகளானது பிரிமிடின் எனப்படும் நைட்ரஜன் உள்ளடக்கிய ஒரு மூலக்கூறில் இருந்து உருவானதாகும்

இந்த புயூரின் வகை மூலக்கூறுதான் நாம் அருந்தும் தேநீரிலும் காஃபியிலும் உள்ள கஃபின் எனப்படும் மூலக்கூறாகும். மேலும் சாந்தின், தியோபுரோமின் இந்த புயூரின் வகையில் உள்ளடங்கும். நியூக்ளிக் அமிலங்கள் உருவாக மூலமாக அடினைன், குவானைன், தைமின் சைட்டோசின் மற்றும் யுராசில் மூலக்கூறுகளே பெருமளவு பங்கு வகிக்கின்றன. 

இந்த புயூரின் அல்லது பிரிமிடின் மூலக்கூறுகளுடன் ரிபோஸ் அல்லது டி-ஆக்ஸ்ரிபோஸ் எனப்படும் கார்போஹைட்ரேட் இனிப்பானது இணையும்போது நியூக்ளியோசைடு உருவாகிறது. புயூரின் அல்லது பிரிமிடினுடன் இணைந்த கார்போஹைட்ரேட்டுடன் ஒரு பாஸ்போரிக் அமிலம் இணையும் போது நியூக்ளியோடைடு உருவாகிறது. இப்படி பல நியூக்ளியோடைடுகள் இணையும்போது டி என் ஏ அல்லது ஆர் என் ஏ உருவாகிறது. டி என் ஏ வில் அடினைன் தைமின் குவானைன் சைட்டோசினும், டி ஆக்ஸ்ரிபோஸும் பாஸ்போரிக் அமிலமும் உள்ளது. ஆர் என் ஏ வில் தைமின் பதில் யுராசிலும், டி ஆக்ஸிரிபோஸ் பதிலாக ரிபோஸும் உள்ளது. டி என் ஏ வில் அடினைன் தைமினுடனும் குவானைன் சைட்டோசினும் இணைப்பு ஏற்படுத்திக்கொள்ளும் வகையில் நைட்ரஜனும் ஹைட்ரஜனும் அமைந்து உள்ளது. 

************************
மேலே எழுதப்பட்டுள்ள விசயங்கள் எல்லாம் விரைவில் வெளியிடப் போகும் ஒரு நாவலில் வைத்து இருக்கிறேன். இந்த மரபணுக்களை எல்லாம் மீண்டும் மீண்டும் பார்க்க, எப்படி விசயங்கள் எல்லாம் நடக்கிறது எனும்போது  இந்த டி என் ஏ வை விட ஆர் என் ஏ தான் உயிர் வாழ் இனங்களில் பெரும் பங்கினை வகிக்கிறது எனும் ஒரு சிந்தனை மனதில் எழுந்தது. அதன் காரணமாகவே இந்த ஆர் என் ஏ பற்றிய தேடல் அதிகமாக ஆரம்பித்தது. 

இந்த ஆர் என் ஏ பற்றிய தேடல் குறித்தும், மேற்கொண்டு இந்த மரபணுக்கள் பற்றிய விபரங்களை அடுத்து காண்போம். 



Friday 2 December 2011

ஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 12

பாதை 11  இங்கே.

12 . ஆராய்ச்சியும் குழந்தையும்

'விட்டிலிகோ' எனும் தோல் வியாதிக்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி அது. விட்டிலிகோ எனும் நோயினால் தோலானது ஆங்காங்கே வெள்ளையாக மாறிவிடும். இந்த தோலின் வெள்ளைத் தன்மையினால் வெயில் மூலம் பிற பிரச்சினைகள் தோலில் ஏற்பட வாய்ப்புண்டு. 



இந்த நோய் எதனால் ஏற்படுகிறது, எப்படி இதை தீர்ப்பது என்பதுதான் நான்கு வருடங்கள் மேல் நான் செய்த ஆராய்ச்சி.

இந்த நோய்க்கு மருந்து என எனக்கு முன்னர் சீனாவைச் சேர்ந்த ஒருவர் செய்த ஆராய்ச்சியை தொடர வேண்டிய சூழல் எனக்கு. ஏனெனில் சீனாவைச் சேர்ந்தவர் தனது ஆராய்ச்சி படிப்பை முடித்துவிட்டதாலும், மேற்கொண்டு ஆராய்ச்சி தொடர விருப்பமில்லாததாலும் எனது கைக்கு இந்த ஆராய்ச்சியானது  வந்து சேர்ந்தது. 

இந்த ஆராய்ச்சியின் பொருட்டு சொல்லப்பட்ட சில விசயங்கள் எனக்கு அத்தனை பரிச்சயமில்லை என்றாலும் மனதில் ஒருவித தைரியத்துடன் நிச்சயம் கற்று கொள்ள முடியும் என்கிற தன்னம்பிக்கையில் சம்மதம் தெரிவித்தாகிவிட்டது. நான் இந்த ஆராய்ச்சியை எடுத்துக் கொண்ட நாள் 12-04-1999. 

சில மாதங்கள் முன்னர் தான் மனைவி கருவுற்றிருந்தார். அவர் தனது பிசினஸ் படிப்பில் இறுதியாண்டு படித்து கொண்டிருந்தார். வாழ்க்கையில் ஒரு நிலையை அடையும் முன்னரே குடும்பம் அமைத்தல் குறித்தான கேலி பேச்சுகள் நிறைய இருந்தன. கருவுற்ற குழந்தையை கலைத்து விடலாமா எனும் சிலரின் யோசனை இன்னமும் சில நேரங்களில் எரிச்சல் தந்து விட்டு போகும். எப்படி அவர்களால் இப்படி நினைக்க முடிந்தது என! பொதுவாகவே நமது வாழ்க்கையை பிறர் வாழ எத்தனிப்பதன் மூலம் தேவையில்லாத சங்கடங்கள் வந்து சேர்வது இயல்பு. நமக்கு அறிவுரை சொல்ல வருபவர்கள் பெரும்பாலோனோர் தங்களது வாழக்கையை திறம்பட செயல்படுத்த வழி இல்லாதவர்களாகவே இருக்க கூடும். வீட்டுக்கு வீடு வாசற்படி என்றுதான் இருக்கும். நாங்கள் கூட்டு குடும்பமாக இருந்த காரணத்தினால் எந்த பிரச்சினையும் எழவில்லை. 

கருவுற்ற நாளில் இருந்து மனைவிக்கு காலையில் வாந்தி வருவது நின்றபாடில்லை. அவர் சிரமப்படுவதைப் பார்க்க மிகவும் சிரமமாக இருந்தது. தினமும் அதிகாலை ஆராய்ச்சியின் பொருட்டு கல்லூரிக்கு செல்வதும், மாலை ஒன்பது மணிக்கு திரும்புவதும் என புதிய வாழ்க்கை ஒன்றை  சமாளிப்பது மிகவும் கடினமாகவே இருந்தது. புதிய வேலை என்பதாலும், பல விசயங்கள் கற்று கொள்ள வேண்டியது இருந்ததாலும் மிகவும் போராட்டமாகவே இருந்தது. 

இந்த சூழ்நிலையில் இன்னும் ஆறு மாதத்தில் கல்லூரி வேறொரு இடத்திற்கு மாறப் போகிறது என்று வேறு சொல்லி வைத்தது அதிக பயத்தை தந்துவிட்டு போனது. 

எனக்கு ஆராய்ச்சி என தரப்பட்ட முதல் பணி என்னவெனில் மிளகுதனில் இருந்து பைபெரின் எனும் மூலக்கூறை தனியாக பிரித்தெடுப்பதுதான். இந்த பணியை சீனா நபர் முன்னரே செய்து இருந்தாலும் எனக்கு பழக்கத்திற்கு வர வேண்டும் என்பதற்காக அந்த பணியை செய்ய சொன்னார்கள். இதுவரை இந்த பணியை செய்தது இல்லை. எல்லாம் புதிதாக இருந்தது. 

இந்த மருந்துகளுக்கு எல்லாம் முன்னோடி இயற்கையில் உருவாகும்  தாவரங்கள் தான் என்பதை அனைவரும் அறிவார்கள். இந்த தாவரங்களின் பலனை அறிந்து கொண்டவர்கள் அதனை காயவைத்து அரைத்தோ, கொதிநீரில் கொதிக்க வைத்தோ மருந்தாக பயன்படுத்தி வந்தார்கள். இந்த அடிப்படை அறிவானது எப்படி நமது முன்னோர்களுக்கு வந்தது என்பது நமது சுற்றுபுறம் பற்றிய அக்கறையினால் விளைந்தது. ஆனால் இந்த தாவரம், இந்த தாவரம் இன்ன வியாதிக்கு உதவும் என்பதை புரிந்து கொள்ளும் திறன் இல்லாத காரணத்தினால் அனைத்து தாவரங்களில் இருந்து சேர்த்து ஒரு கலப்பு மருந்தாக உபயோகப்படுத்தினார்கள். 

அப்படி இந்த விட்டிலிகோவுக்கு மருந்தாக மாட்டு சாணம் போன்றவை முன்னாளில் உபயோகத்தில் இருந்து வந்தது. இந்த பைபெரின் போன்றவை நேரடியாக உபயோகத்தில் இருந்தது என சொல்லப்படவில்லை. ஆனாலும் சில நாட்டு வைத்தியங்கள், சீன மருத்துவ முறைகளில் பைபெரின் கொண்ட தாவரங்கள் பயன்படுத்தப்பட்டு வந்து இருக்கின்றன. இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் இந்த பைபெரின் விடிளிகோவுக்கு ஒரு மருந்தாகும் எனும் ஒரு சிந்தனை எனது ஆசிரியருக்கு வந்து சேர்ந்தது. இவர் கேரளத்தை சேர்ந்த தமிழர், எனினும் இவரது வாழ்க்கை எல்லாம் கென்யா போன்ற நாடுகளில் இருந்தது. 

கருப்பு மிளகு எனப்படும் ரகத்தினை எத்தனால் எனும் திரவத்தில் கொதிக்க விட வேண்டும். இதனை பிரித்தெடுக்கும் முறை என சொல்வார்கள். இந்த விசயத்தை செய்ய அதற்கென தனி குடுவை எல்லாம் தேவைப்படும். குடுவையை சூடு பண்ணும்போது இந்த திரவம் அதி வெப்பத்தால் ஆவியாகும். அந்த ஆவியானது ஒரு குழாயின் மூலம் மேலே செல்ல அந்த குழாயானது குளிரூட்டப்பட்டு இருக்கும் காரணத்தினால் இந்த திரவம் மீண்டும் குடுவைக்கு வந்து சேரும். இவ்வாறு தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். ஒரு நாள் இதே வேலையாக நடை பெறும். 


அதற்கு பின்னர் குடுவையில் இருக்கும் திரவத்தை வடிகட்ட வேண்டும். இப்பொழுது மிளகானது பிரிக்கப்பட்டு, மிளகில் இருக்கும் மூலக்கூறுகள் எல்லாம் திரவத்தில் இருக்கும். இதே போன்று திரவங்களின் தன்மையை பொருத்து மூலக்கூறுகள் பிரிந்து வரும். 

மூலிகையில் பெட்ரோல் தயாரிக்கும் முறை, பனை மரத்தில் கள் இறக்குதல், தேங்காயில் இருந்து தேங்காய் எண்ணை எடுத்தல் போன்ற பல விசயங்கள் பல்கலைகழகத்தில் கற்று கொண்டதல்ல. அவரவரின் அறிவு சார்ந்து ஒரு விசயம் செய்யப்படுவது உண்டு. என்ன ஒரு பிரச்சினை எனில் இவை எல்லாம் சாதாரணமாக செய்யும்போது சீர்படுத்த இயலாது. 

இந்த திரவத்தை எல்லாம் நீக்கிவிட பல மூலக்கூறுகள் நிறைந்த திரவம் இருக்கும். அதற்கு பின்னர் சுத்திகரிப்பு வேலையை செய்ய வேண்டும். இந்த சுத்திகரிப்பு வேலைக்கு முன்னர் நமக்கு தேவையான மூலக்கூறினை பிரித்தெடுக்க வேண்டும். 


இது மிகவும் சிரமமான காரியம் தான். நாம் பிரித்தெடுக்கும் மூலக்கூறு சரியானதுதானா என தொடர்ந்து அந்த மூலக்கூறினை ஆராய்ச்சிக்கு உட்படுத்த வேண்டும்.  இதை முதலில் செய்ய குரோமொடக்ராபி எனப்படும் பிரித்தெடுக்கும் முறை கையாளப்படுகிறது. இதற்கு சிலிகா ஜெல் எனப்படும் பொருளானது அலுமினியம் தகட்டில் வைத்து உருவாக்கி இருப்பார்கள். இது ஒரு சோதனை முறை. இந்த முறையில் மூலக்கூறு நன்றாக பிரிந்து வந்தால் கண்ணாடியில் சிலிகா ஜெல் வைத்து அந்த மூலக்கூறினை பிரிப்பார்கள். 

அவ்வாறு இந்த பைபெரின் தனை பிரித்து எடுத்து விட்டேன். வெறும் இரண்டு வரிகளில் எழுதிய இந்த விசயம் செய்து முடிக்க இரண்டு வாரங்கள் மேல் ஆகிவிட்டது. 



இந்த மூலக்கூறுகள் அந்த அலுமினிய தகட்டில் ஒரு புள்ளியாக வைக்க வேண்டும். அவை ஒரு பீகரில் திரவம் ஒன்றில் மூழ்கிவிடாமல் வைக்க வேண்டும், இந்த திரவத்தை தேர்ந்தெடுக்கும் முறையானது அத்தனை எளிதல்ல. ஒரே திரவம் அல்லது திரவங்களின் கலவையாக இவை மூலக்கூறினைப் பொருத்து அமையும். இந்த திரவம் அலுமினியம் தகட்டின் மீது மேலே செல்ல செல்ல மூலக்கூறுகள் பிரிந்து கொண்டே செல்லும். இப்படி தெரிந்த ஒன்றை வேறு வழியாக பிரிக்க முடியும். 

இதனை குழாய் குரோமொடக்ராபி என சொல்வார்கள். இந்த குழாய் குரோமொடக்ராபியில், நாம் உருவாக்கிய ௨ மில்லி லிட்டர் அளவே உள்ள திரவம் அடங்கிய மூலக்கூறுகளை ஊற்றி, அதன் பின்னர் ஒவ்வொரு திரவமாக ஊற்ற வேண்டும். இந்த திரவங்கள் எவை எவையென மூலக்கூறு பொருத்து அமைகிறது. அவ்வாறு தனித்தனியே பிரித்தெடுக்கப்படும் போது கலவையான மூலக்கூறுகள் தனியாக பிரிந்துவிடும். தனிதனி மூலக்கூறு மட்டும் உள்ள திரவம் எல்லாம் மொத்தமாக்கினால் ஒரு குறிப்பிட்ட அளவு மூலக்கூறு கிடைக்கும். அந்த திரவத்தை ஆவியாகிய பின்னர் இந்த பைபெரின் கிடைக்கும். 

அது பைபெரின் தானா எனும் சோதனைக்கு முன்னர் பைபெரின்தனை சுத்தபடுத்த சில வழிகள் உண்டு. அது என்னவெனில் குறைவான அளவுடைய ஒரு திரவத்தில் இந்த மூலக்கூறை கொதிக்க வைத்து பின்னர் மெதுவாக குளிரவைத்தால் இந்த பைபெரின் படிமங்களாக வெளிவரும். இதனை கிரிச்டளைசெசன் என சொல்வார்கள்.

இந்த சூழலில் எனக்கு சற்றும் பழக்கமில்லாத ஒரு துறைக்குள் காலடி எடுத்து வைக்க வேண்டி ஒரு ஆசிரியரை சந்திக்க வேண்டும் என எனது ஆசிரியர் அழைத்து சென்றார். மனதில் அதிக பயம் கவ்வி கொண்டது. அவர் இந்த கல்லூரியில் மிகவும் பிரபலமானவர், அவரை அதி புத்திசாலி என்றெல்லாம் சொல்லிக் கொண்டார்கள். அவரிடமா நாம் மற்றொரு வேலை பார்க்க போகிறோம் என நினைக்கும்போது என்னுள் ஏற்பட்ட அந்த உணர்வு... இந்த வேலை செய்ய உனக்கு பிரச்சினை இல்லை அல்லவா என்று எனது ஆசிரியர் கேட்டபோது சற்றும் யோசிக்கமால் பிரச்சினை இல்லை என்று சொல்லி வேலையைத் தொடங்க சம்மதித்தேன். அவரை சென்று சந்தித்தோம். என்னைப் பார்த்து நம்பிக்கையூட்டும் விதமாக அவர் பேசியதும், எனக்கென ஒரு தனி நபரை ஆய்வகத்தில் அமர்த்தியதும் என்னுள் அதிக தைரியத்தை வரவழைத்தன. அப்பொழுதே நான் என்ன செய்ய வேண்டும் என திட்டமிட்டு ஒரு இலக்கை கொடுத்தார்கள். 

வேதியியல் ஆய்வகத்தில் காலடி எடுத்து வைத்தேன். அந்த ஆய்வகத்தில் வேலை செய்பவர்கள் தங்கி இருக்கும் அறையில் ஓரிடம் தந்தார்கள். அந்த அறையில் நான் கண்ட ஒரு வரைபடம் என்னுள் வாழ்க்கையின் மேடு பள்ளங்களை, கஷ்ட நஷ்டங்களை, வாழ்க்கையில் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும், சாகும்போதுதான் ஓய்வு என்பதெல்லாம் சொல்லி தந்தது. அந்த வரைபடம் குறித்து இதே வலைப்பூவில் எழுதியதாக நினைவு. இருவர் காரில் செல்வார்கள். ஒரு மேடு வரும், அதை தாண்டியதும் 'அப்பாடா' என்பார் ஒருவர் அதற்குள் இன்னொரு மேடு தொலைவில் தென்படும். இதுதான் வாழ்க்கை. ஒரு பிரச்சனை தீர்ந்துவிட்டது என எந்த மனிதருமே நிம்மதியாக அமர முடிவதில்லை. ஏதேனும் ஒன்று முளைத்து கொண்டே இருக்க வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யமான ஒன்றாக இருக்கிறது. 

அந்த வேதியியல் ஆய்வகத்தில் வேலை பார்த்தவர்கள் ஒன்றும் தெரியாத எனக்கு மிகவும் அக்கறையுடனே கற்று தந்தார்கள். முதலில் ஒரு வேதிவினையை உருவாக்கினேன். அந்த வேதிவினையானாது பெங்களூரில் இருக்கும் ஒரு ஆய்வகத்தில் முன்னரே செய்யப்பட்ட ஒன்று. பலமுறை செய்து பார்க்கிறேன், எதுவுமே பலன் கிடைக்கவில்லை. அவர்கள் சொன்ன மூலக்கூறு எனக்கு வரவே இல்லை, மாறாக வேறு மூலக்கூறு வந்து சேர்ந்தது. இதனை உறுதிபடுத்த அந்த ஆய்வகத்தில் இருந்த ஒருவர் தானே அந்த வேதிவினை செய்து பார்த்தார், நான் கண்டுபிடித்த மூலக்கூறுதான் வந்தது. உடனே பெங்களூருக்கு எழுதினோம், பதிலே வரவில்லை! அந்த மூலக்கூறு இதுவரை எவருமே கண்டுபிடிக்காத மூலக்கூறு என்பதால் புதிதாக பெயர் சூட்டும் பொறுப்பு என்னிடம் தரப்பட்டது. எனது மனைவியின் பெயரை மனதில் கொண்டு பார்வரின் என வைத்தேன். 

இந்த நேரத்தில் ஆய்வக இட மாற்றம் நடை பெற ஆரம்பித்தது. அப்படியே வேலைகள் சம்பித்தன. எல்லா பொருள்களை எடுத்து வைக்கவும், இடம் மாற்றவும் செய்யவுமே நேரம் சரியாக இருந்தது. மனைவியை அழைத்து கொண்டு மருத்துவமனை செல்லவும், கர்ப்பிணிகளுக்கான வகுப்பு செல்லவும் நேரம் போய்க்கொண்டிருந்தது. அந்த தருணத்தில் எனது மனைவி தனக்கு பெண் குழந்தைதான் பிறக்கும் என சொல்ல, நானோ இல்லை இல்லை உனக்கு ஆண் குழந்தைதான் பிறக்கும் என சொல்ல எங்களுக்குள் ஒரு சின்ன போட்டிம யார் சொல்வது பலிக்கும் என!. இதை வைத்துதான் உலகில் ஒரு தத்துவம் எனக்கு புரிந்தது. எல்லா விசயங்களிலும் ஒன்று அதுவாக இருக்க கூடும், அல்லது இதுவாக இருக்ககூடும். இரண்டும் இல்லா நிலை விதிவிலக்கே.  பொதுவாக மருத்துவமனைகளில் என்ன குழந்தை என சொல்லமாட்டார்கள், அதுவும் குறிப்பாக ஆசிய மக்களிடம். இதற்கு முக்கிய காரணம் ஆசிய மக்கள் பெண் குழந்தைகளை வேண்டாம் என ஒதுக்கிவிடுவார்கள் எனும் ஒரு பொல்லாத குற்றச்சாட்டு நிலவுவதுதான். என்ன குழந்தை என எங்களுக்கு சொல்லவில்லை, நாங்களும் கேட்டு தெரிந்து கொள்ளவில்லை. தினமும் வாந்தி வருவது நின்றபாடில்லை. பொதுவாக சில மாதங்களில் நின்று போகும் இந்த வாந்தி நிற்கவே இல்லை.

ஆய்வகம் மாறி வந்தாகிவிட்டது. வேறொரு மூலக்கூறு உருவாக்க சொல்லி இருந்தார்கள். அந்த வேளையில் வகுப்புகளுக்கு செய்முறை பயிற்சி சொல்லிக்கொடுக்க சொன்னார்கள். இப்படியாக இருக்க மூலக்கூறு உருவாக ஒரு மாதம் ஆகிவிட்டது. இந்த வேதி வினை இலகுவானதாக இருந்தாலும் கடைசியில் வந்த மூலக்கூறு சரியில்லாமலே இருந்தது. மனைவிக்கு பிரசவ வலி இன்று வருமோ, அன்று வருமோ எனும் பயம் வேறு. கல்லூரி படிப்பை முடித்துவிட்டிருந்தார். நவம்பர் நான்கு என தேதி கொடுத்து இருந்தார்கள். நவம்பர் நான்கு தாண்டியது. பத்து வந்தது. வலி எதுவுமே இல்லை. 

மருத்துவமனைக்கு சென்று பார்த்தோம். அடுத்த நாள் வர சொன்னார்கள், எதுவும் நடக்கவில்லை. பன்னிரண்டாம் தேதி வந்தது. நாள் ஆகிவிட்டதால் இனி இது பெண் குழந்தைதான் என மனைவி சந்தோசப்பட்டு கொண்டார். பெண் குழந்தை என்றால் அத்தனை பிரியம் எனது மனைவிக்கு. எந்த குழந்தை எனினும் பரவாயில்லை, பிரசவம் ஆக வேண்டுமே என பயம் மனதில் ஒட்டிக் கொண்டது. ஆனாலும் இந்த செய்முறை பயிற்சி பாடம் இருந்ததால் கல்லூரி செல்வதை தவிர்க்க இயலவில்லை. 

இறுதியாக வலியை உருவாக்க வேண்டும் என எபிடூறல் ஊசி போட்டார்கள். மனைவியுடனே இருந்தேன். அவர் பட்ட சிரமத்தை பார்த்தபோது இனிமேல் குழந்தை வேண்டாம் என்று அன்றுதான் முடிவு செய்தேன். எனது தாய் அப்படி நினைத்து இருந்தால் நான் பிறந்து இருக்கவே மாட்டேன். நான் வீட்டில் பதிமூன்றாவது குழந்தை. அப்பொழுதெல்லாம் குடும்ப கட்டுப்பாடு, பொருளாதார கட்டுப்பாடு எல்லாம் இல்லை. எனது மனைவிக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்கிற கவனமும், அவரது கதறலில் நான் மிகவும் உடைந்து போயிருந்தேன். அன்று இரவு குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்தபோது அருகில்தான் இருந்தேன். போர்செப்ஸ் மூலம் குழந்தையை வெளி எடுத்தார்கள். என்ன குழந்தை என்றெல்லாம் பார்க்க தோணவில்லை. மனைவியின் தலையின் மீது எனது கரம் இருந்து கொண்டே இருந்தது. கண்களில் கண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருந்தது. எத்தனை சிரமம்! எத்தனை துயரம்! குழந்தை பெற்று கொள்வது பெண்ணுக்கு மறு பிழைப்பு என சும்மாவா சொல்லி வைத்தார்கள். எனக்கு மறு பிழைப்பு போல் தான் இருந்தது. ஆண் குழந்தை என காட்டினார்கள். சந்தோசம் ஒருபுறம் இருந்தாலும் மனைவியின் வேதனை மனதை வெகுவாக பாதித்து இருந்தது. நான் மருத்துவமனையில் தங்க முடியாது என சொல்ல, அன்றுதான் முதன் முதலில் மனைவியை விட்டு பிரிந்து தூங்கினேன். அதற்கடுத்த தினமே ஆய்வகம் செல்ல வேண்டியதாகிப் போனது. 

பல நாட்களாக உருவாக்க முடியாத மூலக்கூறினை உருவாக்கினேன். நான் தந்தை ஆனது ஆய்வகத்தில் அனைவருக்கும் தெரிந்தது. எனது ஆசிரியர்கள் எனது குழந்தைக்கும், மூலக்கூறுக்கும் சேர்த்து வாழ்த்து சொன்னார்கள். இனி வேதிவினை எளிதுதான் எனும் நம்பிக்கை பிறந்தது. 

ஒரு மூலக்கூறு எப்படி அதுதான் என தீர்மானிக்கப்படுகிறது என்பதற்கான நான் கற்று கொண்ட ஆய்வு மிகவும் வித்தியாசமாக இருந்தது. படங்கள்: நன்றி கூகிள் 

(தொடரும்)

ஜீரோ எழுத்து - 1

'இத்தனை நாள் வாழ்ந்து விட்டீர்களே, இவ்வுலகில் இதுவரை என்ன கண்டீர்கள் அம்மா?' இந்த கேள்வி தான் எனது சிறு வயதில் எனது தாயிடம் கேட்டது.

'இவ்வுலகில் ஒண்ணுமே இல்லை' எனது தாயின் பதில் அன்று என்னை மிகவும் யோசிக்க வைத்தது, வாழ்க்கையை புரிய வைத்தது.

ஆனால் இன்று சற்று நிதானமாக யோசித்துப் பார்க்கிறேன். ஒன்றுமே இல்லாமலா இவ்வுலகம் இயங்கி கொண்டு  இருக்கிறது?

இவ்வுலகம் எப்படி தோன்றியது எனக் கேட்டால் வெற்றிடத்தில் ஒரு புள்ளியில் இருந்து தொடங்கியது, காலம், நேரம் என எதுவுமே முன்னால் இல்லை என, இட் கேம் பிரம் நத்திங், என  மிகவும் எளிதாக சொல்லிவிடுகிறார்கள். ஒன்றுமே இல்லாத ஒன்றில் இருந்து இப்படிப்பட்ட பிரபஞ்சம் தோன்றிடத்தான் இயலுமா?

சூன்யம். இந்த சூன்யத்தில் எதுவுமே நடக்க வாய்ப்பில்லை என்பது எத்தனை பெரிய எண்ணம். அப்சலூட் ஜீரோ. இந்த நிலையில் தான் இவ்வுலகம் இருந்து இருக்கிறது, அப்படியெனில் இந்த நிலையை தகர்த்த வேண்டிய காரணம் என்ன, காரணிகள் தான் என்ன?

ஜீரோ என்பதற்கான அர்த்தங்கள் இரண்டு.  ஒன்று ஒன்றுமில்லை என்பதை குறிப்பது, மற்றொன்று எண்ணினை குறிப்பது. பல நாட்டினை சேர்ந்தவர்கள் இந்த ஜீரோவை ஒரு எண்ணாக உபயோகிக்க பலமுறை யோசித்து இருக்கிறார்கள். இந்த ஜீரோவை துணிந்து எண்ணாக உபயோகம் செய்தது இந்தியர்கள் தான் எனவும், இந்த பழக்கம் அப்படியே அரபு நாடுகளுக்கும் சென்றது என்கிறார்கள்.

அப்படிப்பட்ட இந்த ஜீரோ எவ்வளவு முக்கியம் வாய்ந்தது என பின்னோக்கிப் பார்த்தால் மிகவும் அதிசயிக்க தகவல்கள் பலரால் சேமித்து வைக்கப்பட்டு இருக்கின்றன.

'ஸ்பேஸ்' எனப்படும் வான வீதிகளில் எதுவுமே இல்லை என்றுதான் சாதித்து கொண்டிருந்தார்கள். எதுவுமே இல்லாமல் எப்படி ஒன்று இருக்க முடியும் எனும் யோசனையில் தேடிய ஆராய்ச்சி இன்று எங்குமே ஒண்ணுமில்லாமல் இருக்க இயலாது என சொல்லியாகிவிட்டது.

இப்ப என்ன, நாங்கதான் எப்பவோ சொல்லிட்டோம்ல, இப்பிரபஞ்சத்தில் இறைவன் நீக்கமற நிறைந்து இருக்கிறார் என. இதைக் கேட்டதும் ஜீரோ பெரிய ஹீரோதான் என எண்ணத் தோன்றுகிறது.

அப்படி இந்த ஜீரோ சாதித்தது என்ன?


Thursday 10 November 2011

பல் வலி கொல்லும்?

தலைவலியும் பல்வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்பது முதுமொழி. பல் போனால் சொல் போச்சு என்பது சொலவடை. பல் இல்லாவிட்டால் பொக்கை வாய் என கேலி பேசுவோர் உண்டு. இந்த பல்லில் சிங்க பல், தங்க பல், கடாப் பல், அறிவு பல் என சில பிரிவுகள் உண்டு. 

இந்த பல்லானது ஆறு அல்லது பத்து மாதங்களில் குழந்தைக்கு முளைக்க தொடங்கிவிடும். முன்புறம் வளரத் தொடங்கும் பல்லானது இரண்டு  மூன்று வருடங்களுக்குள் பக்கவாட்டில் வளர்ந்து முழுமை பெறும். இப்படி வளரும் பற்கள்தான் பேச்சுக்கும், மெல்வதற்கும் உறுதுணையாக இருக்கின்றன. இப்போதைய தொழில் நுட்பம் வளர்ந்துவிட்ட காலத்தில் பல்லின் அமைப்பை  மாற்றியமைக்க கூடிய வசதிகள் வந்துவிட்டன. தெத்துப் பல், சொத்தை பல், கோரப் பல் என பல்லானது முக அழகை மாற்றியமைத்துவிடும் தன்மை உடையது. 

நமது ஊரில் சிறு குழந்தையின் பல்லானது விழுந்துவிட்டால் அதை எடுத்து பத்திரமாக வைக்கும் பழக்கம் அவ்வளவாக இல்லையெனினும், சில நாடுகளில் அந்த விழுந்த பல்லை எடுத்து தலையணையின் கீழே வைத்து படுத்துக் கொண்டால் பணம் கிடைக்கும் என அக்கால சிறுவர்கள் நம்பினார்கள் என்கிற கதை உண்டு. ஆனால் இன்றைய கால சிறுவர்கள் தனது பெற்றோர்கள் தான் பணத்தை தலையணைக்கு கீழே வைக்கிறார்கள் என்பதை அறிந்து இருந்தாலும் இந்த நிகழ்வை மிகவும் ரசிக்கிறார்கள். மேலும் இந்த குழந்தைகளின் பல்லானது பல் மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு கற்றுக்கொள்ள பெருமளவில் உபயோகப்படுகிறது. 

இந்த பல்லானது எனாமல், டென்டின், சிமென்டம் மற்றும் பல்ப் எனும் ரத்தநாளங்கள், எலும்பு மற்றும் நரம்புகள் கூடிய தசைகளால் ஆனது.  ஈறு, எளிறு என்று தமிழில் சொல்வார்கள். எனாமல் மிகவும் உறுதிவாய்ந்த ஒன்று. இந்த பல் பலமானதற்கு காரணம் கால்சியம் திசுக்களில் சேர்ந்து ஒரு உறுதிபடுத்தப்பட்ட தன்மையை உருவாக்குகிறது. இதன் காரணமாக கால்சியம் நிறைந்த உணவு பொருட்களை நாம் உண்பது அவசியமாகிறது. நாம் எத்தகைய கால்சியம் உணவை உண்டாலும், பல்லை சுத்தமில்லாமல் வைத்துகொண்டால் பல வியாதிகள் வர வாய்ப்புண்டு. ஆடு மாடு என்ன பல்லா விலக்குது என நகைச்சுவையாய் சொல்பவர்கள் உண்டு. அவை வேக வைத்த உணவு பண்டங்களை உண்பது இல்லை அதனால் நமக்கு ஏற்படும் தொல்லைகள் போன்று அவைகளுக்கு இல்லை என சொல்பவர் உண்டு. 

செங்கல் பொடி, சாம்பல் பொடி என இவையெல்லாம் வைத்து பல் துலக்குபவர்கள் உண்டு. ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி என பழமொழி உண்டு. பல்லில் ஏற்படும் பல துயரங்களுக்கு காரணம் பாக்டீரியாக்கள். 

இந்த பாக்டீரியாக்கள் எங்கும் சர்வ சாதாரணமாக திரிவது போல நமது வாயில், பல்லில், நாக்கில் சுழன்று திரியும். அப்படி திரியும் பாக்டீரியாக்கள் சில நல்லவைகள் எனினும், அதன் எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க நமது பல்லில் அது ஒரு கூட்டம் அமைத்து வெள்ளைநிற பற்களை பழுப்பு நிறமாக்குவதோடு, பல்லில் ஓட்டை விழ வழி செய்கின்றன. நாம் உண்ணும் உணவு பெரும்பாலும் இந்த பாக்டீரியாக்களுக்கு பெறும் தீனிகளாக அமைவதால் அவை கொழுத்து திரிகின்றன. இதன் காரணமாகவே நாள் ஒன்றுக்கு நான்கு முறை பல் துலக்க வேண்டும். அதுவும் ஒவ்வொரு முறை பல துலக்கும்போது பல் சிறு இடைவெளியை மிகவும் சுத்தமாக துலக்க வேண்டும் என அறிவுரை சொல்கிறார்கள். இந்த சிறு இடைவெளியே பின்னாளில் பெறும் துயரமாக காரணமாகிறது. இந்த பாக்டீரியாக்களே பிளேக் எனப்படும் படிமங்களை பல்லில் ஏற்பட வலி செய்கிறது. 

சின்ன சின்ன புண்கள் நமது வாயில் ஏற்படுவதன் மூலம் இந்த பாக்டீரியாக்கள் மென்மேலும் வளர்ச்சி பெறுகின்றன. நாம் தெரியாமல் நமது வாயின் பக்க, முன்  தசைகளில் கடிப்பதால் இந்த சின்ன புண்கள் ஏற்படலாம். நமது பல்லை பாதுகாக்க நாம் அடிக்கடி பல் மருத்துவரை சென்று பார்ப்பது இல்லை என்பது பொதுவான குற்றச்சாட்டு. பெரும்பாலோனோர் பல் மருத்துவரை சென்று பார்க்க பயப்படுகின்றனர். 

பல்லில் வலி ஏற்பட்டால் உடனே ஒரு பாரசிட்டமாலோ, ஐபுப்ரோபேனோ போட்டதுடன் சரியென பலர் இருந்துவிடுவதுண்டு. சாதாரண புண்களால் இந்த பல்லின் தசைகளில் சீழ் ஏற்பட வாய்ப்பு உண்டு என்பது பலருக்கு தெரியாத விசயம், இதன் காரணமாகவே வாய் துர்நாற்றம் ஏற்படுவது உண்டு. நாம் உண்ணும் உணவு மூலமாக நமது வயிற்று துர்நாற்றம் வாயின் மூலமாக வெளிப்படும். இத்தகைய விசயங்களை கண்டு காணாமல் இருப்போர்கள் நாட்டில் மிகவும் அதிகம். ஒரு குளோஸ் அப் பல்பொடியை எடுத்து விலக்கிவிட்டலோ, சூயிங் கம் போன்ற வாசம் தரும் விசயங்களை வாயில் அள்ளிப்போட்டாலோ எல்லா பிரச்சினைகளும் சரியாகி விடும் என கருதுவோர் உண்டு. 

குறைந்தது மூன்றோ அல்லது ஆறு மாதம் ஒருமுறை பல் மருத்துவரை சென்று பார்த்து வருவது மிகவும் நல்லது. சென்சிடிவ் பல் என சொல்வதை கேள்விப்பட்டு இருப்பீர்கள். இது எதனால் ஏற்படுகிறது எனில் நமது பல்லில் கீழுள்ள தசையானது பழுதுபட்டுவிடுவதாலும், பல்லை இணைக்கும் நரம்புகள் மீது எளிதாக வெளிப்பொருட்கள் படுவதாலும் இந்த கூசும் உணர்வு ஏற்படுகிறது. இதை சில பல் பொடிகள் மூலம் கட்டுப்படுத்த இயலும், எனினும் பல் மருத்துவரிடம் சென்று காண்பிப்பது நல்லது. 

பல் வலி வந்தால் கிராமப் பகுதிகளில் மூக்கு பொடி வைத்து அந்த வலியை போக்க முயற்சிப்பவர்கள் உண்டு. இப்படியெல்லாம் செய்வது தவறு என்பதை வலியுறுத்தினாலும் அவர்கள் கேட்பதில்லை. புகையிலையின் காரணமாக வாயில் கேன்சர் வர வாய்ப்புள்ளது என்கிறார்கள். மேலும் பல்லை துலக்கும்போது ரத்தம் வருவது உண்டு, இதற்கு காரணம் பல் தசையில் இணைந்திருக்கும் ரத்த நாளங்கள் உராயப்படுவதாகும், எனவே பல்லை துலக்கும்போது பாத்திரத்தை துலக்குவது போல முரட்டுத்தனமாக துலக்குவது தவிர்த்தல் நலம்.

மேலும் பல் குறித்த விபரங்களை அறிந்து கொள்ள, தெரிந்து கொள்ள உடனே பல் மருத்துவரை அணுகவும். 

பல் மருத்துவரை காண பயந்து கொண்டு பல்லில் உருவான வலியை பொருட்படுத்தாமல் இருந்த ஒரு கல்லூரி மாணவி தனது பல் தசையில் சீழ் பிடித்து அதன் மூலம் இறந்து போனார் என்பது துயரமான செய்தி. 

இந்த பல்லில் உருவாகும் பாக்டீரியாக்கள் இருதய ரத்த நாளங்களை பாதிக்கும் தன்மை உடையது என ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது. 

பல் துலக்கியாச்சா? என எவரேனும் கேட்டால் கோபம் படாதீர்கள். பல் துலக்கவில்லை எனில் எந்த நேரமாக இருந்தாலும் சரி உடனே பல் துலக்கிவிடுங்கள். பலர் காபியிலே பல் துலக்கும் பழக்கம் உடையவர்களாக நமது ஊரில் இருப்பார்கள். அவற்றை எல்லாம் தவிர்த்து விடுங்கள். 

வாயை சுத்தப்படுத்தாமல் தண்ணீரோ, காபியோ அருந்தினால் அந்த பாக்டீரியாக்கள் வயிற்றில் சென்று அங்கிருக்கும் அமிலத்தினால் செத்துவிடும் என விவாதம் செய்பவர்கள் உண்டு. இந்த விவாதம் எல்லாம் தள்ளி வைத்துவிட்டு பல்லை துலக்குங்கள். 

இறை அவதாரம் எனினும் அவரும் பல் துலக்க வேண்டும் என்பதை நினைத்துதான் ஆண்டாள் இப்படி எழுதினாரோ என்னவோ?

கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ 
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்தி ருக்குமோ 
மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே. 

வெண்சங்கே உன்னை ஊதுகின்ற அந்த பரந்தாமனின் வாய் வாசனையை கூறாயா என சொல்லும் ஆண்டாளின் கற்பனைதான் எத்தகையது. 

திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும் என்பது நாம் நமது மனதை சுத்தமாக வைத்திருப்பதோடு பல்தனையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் எனும் நோக்கத்தில் சொன்னதுதான். 

பல் இருந்தால் தான் இளிக்க முடியும். பல் இருந்தால் தான் வார்த்தை சொலிக்க முடியும் என இத்துடன் பல் புராணம் முடிக்கிறேன்.