Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Thursday 15 March 2012

குரான் பேசுமா அறிவியல்

ஒரு நூலினை நாம் எப்படி அணுக வேண்டும் என்பது குறித்து ஒவ்வொருவருக்கும் ஒரு வித எண்ணம் இருக்கும். ஆனால் ஒரு நூல் பலரால் போற்றப்பட்டு, பலரால் நம்பப்பட்டு வரும் பட்சத்தில் அந்த நூலில் கூறப்படும் கருத்துகளை மறுத்து பேசுவது என்பது நம்பிக்கையாளர்களின் மனம் நோக செய்வதாகும்.

எத்தனையோ அறிவியல் வல்லுனர்கள், முனிவர்கள் எழுதிய நூல்கள் இருந்தாலும், அதிக மக்களால் அறியப்பட்ட நூல் என்றால் பகவத் கீதை, குரான், பைபிள் என்றே சொல்லலாம். இவை மதங்களின் அடிப்படையில் எழுதப்பட்டு இருந்தாலும், வாழ்க்கை முறைகளை சொல்வதாகவே கருதப்பட்டு இருக்கின்றன. அறிவியல் வளர்ச்சி அடைந்த இந்த காலகட்டத்தில் குரான், பைபிள் போன்ற நூல்கள் தங்களது வலிமையை இழக்கத் தொடங்கின என்றாலும் இன்னமும் இந்த நூல்கள் பலராலும் பின்பற்றப்பட்டு போற்றப்பட்டு வருகின்றன. தாய் வழித் தோன்றல்கள், தந்தை வழித் தோன்றல்கள் போல இந்த நூல்கள் இறைவழித் தோன்றல்கள் என்றே கருதப்பட்டு வருவது இந்த நூல்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்.

தத்தம் இறைவனை நம்புபவர்கள் இந்த நூல்களை ஒருபோதும் எதிர்த்து பேச முற்படமாட்டார்கள். ஆனால் வெவ்வேறு வழிப்பாதை கொண்டவர்கள் ஒரு கொள்கையின் மீது அவதூறு பேசி தமது கொள்கையே சிறந்தது என தமது வழிப்பாதை மலர்களால் அலங்கரிக்கப்பட்டது என்றே பெருமை பட்டு கொள்வார்கள். இதில் பகவத் கீதையை நாம் சற்று தள்ளி வைத்துவிடலாம். இதற்கு காரணம் அந்த நூல் அறிவியல் பேசுகிறது என இதுவரை எவரும் சொன்னதில்லை, பகவத் கீதை யோக நிலைகளை பறைசாற்றும் ஒரு இலக்கியம். அதற்கடுத்து பைபிள், இதுவும் அறிவியல் பேசுவதாக எவரும் சொல்வதில்லை. ஆனால் அவ்வப்போது உலகம் அழிவதாக சொல்வதாக சொல்வார்கள். ஆனால் அதை எல்லாம் தாண்டி குரான் அறிவியல் பேசுவதாக பல அறிவியல் அறிஞர்கள் முதற்கொண்டு படித்து தெளிந்த பலர் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

குரான் அறிவியல் பேசித்தான் அது இறைவன் சொன்னதாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என நினைக்கும் அளவுக்கு குரானின் நிலை சென்று கொண்டிருப்பது வருத்தத்திற்கு உரியது. குரான் அறிவியல் பேச வேண்டிய நிர்பந்தம் தான் என்ன? அது அறிவியல் நூலா, வாழ்வியல் நூலா? என்று இதுவரை அறிந்தது இல்லை.

முகம்மது நபிகள் படிக்காதவர், அவருக்கு இத்தனை ஞானம் எப்படி வந்திருக்கும், எனவே குரான் இறைவன் சொன்னதுதான் என்று ஒரு வாதம் வேறு. படிக்காதவர்களை இப்படி எல்லாம் இழிவு படுத்தி இருக்க வேண்டாம். அதே படிக்காத நபிகள் தான் நபிகள் வாக்கு என சொல்லி இருப்பதாகவும் இருக்கிறது. படிக்காத ஒருவர் எப்படி அப்படியெல்லாம் அழகிய வாக்குகள் சொல்லமுடிந்தது என எவரேனும் நினைப்பாரில்லை. குரானும், நபிகள் வாக்கும் பிரித்தே கையாளப்பட்டு இருக்கிறது என்பதுதான் வரலாறு. மேலும் படிப்பறிவு என்பது எதை வைத்து சொல்வது என்பதையும் எவரும் அறிந்தாரில்லை. குரான் எழுதப்பட்டதாக சொல்லப்படும் காலகட்டங்களில் அரேபிய நாடுகள் அறிவியலில் செழித்தோங்கி இருந்தன. அதன் விளைவாக கூட சில வசனங்கள் குர்ஆனில் வைக்கப்பட்டு இருக்கலாம், எனினும் குரானின் நோக்கம் அறிவியல் பேசுவதா?

எனது நண்பர் ஒருவர் சொன்னார், குரான் மட்டுமே அறிவியலுக்கு நெருக்கமாக பேசுகிறது என. நான் அவரிடம் கேட்டேன். நீங்கள் குரான் முழுவதும் படித்து விட்டீர்களா என! இல்லை என்றார். ஒரு நூலை அணுகும் முன்னர் வெளிப்படையான மனம் இல்லை என்றால் அந்த நூலில் நாம் தேடுவது இருக்கிறதா என்றுதான் கண்கள் போகும். அப்படி ஒன்று இருந்துவிட்டால் சாதகம் எனில் சாதகமும், பாதகம் எனில் பாதகமும் என நமக்கு வசதிக்கு ஏற்ப நாம் எழுதுவோம்.

ஆனால் மனதை நிர்மூலமாக்குதல் என முன்னோர்கள் சொல்லி வைத்து இருக்கிறார்கள். அதாவது குரான் ஒரு நூல் மட்டுமே. இப்போது முகம்மது நபிகள் ஒரு இறைத்தூதர், அந்த நூல் முகம்மது நபிகளுக்கு இறைவன் சொன்னது என்பதெல்லாம் இரண்டாம் நிலை. இந்த இரண்டாம் நிலை எல்லாம் நாம் அறிந்து கொண்டு அந்த நூலினை அணுகும்போது நமது மனநிலை, ஒன்று இறைவன் மீது நம்பிக்கை உள்ளவராக இருந்தால் நேசத்தோடும், இரண்டாவது இறைவன் மீது நம்பிக்கையற்றவர்களாக இருந்தால் வெறுப்போடும் அணுகத் தோன்றும். இது மனித இயல்பு. எந்த ஒரு முதல் புத்தகமும், எழுதுபவருக்காக வாங்கப்படுவதில்லை. ஆனால் அதற்குப்பினர் அந்த நபரால் எழுதப்படும் புத்தகங்கள் அவருக்காகவே வாங்கப்படும் நிலை ஏற்படுகிறது. ஆனால் அந்த நிலை எல்லாம் குரானுக்கு இல்லை. குரான் நம்பிக்கைகளின் வெளிப்பாடு.

எனக்கு ஒரு நண்பர் அரபு வசனங்கள் கூடிய தமிழ் வசனங்கள் கொண்ட குரான் தந்தார். முதலில் படிக்கும்போது எதற்கு இறைவன் இப்படி நபிகளிடம் சொன்னார், இதை எல்லாம் இறைவன் சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்றே தோணியது. எப்போது மனதை நிர்மூலமாக்குகிறேனோ அப்போது குரான் வாசிக்கிறேன் என நண்பரிடம் சொன்னேன். அதற்கு அவர் சிரித்துக்கொண்டே உங்களால் மனதை இனிமேல் நிர்மூலம் ஆக்க முடியாது. இதை செய்ய வேண்டும் எனும் அணுகுதல் இருக்கும்போது அதை செய்து விட்டோமா என சரி பார்க்க தோன்றும், எனவே மனதை நிர்மூலமாக்குதல் அவசியம் இல்லை. இறைவன் தந்ததாகவே படியுங்கள் என்றார். அந்த மன நிலை இப்போது இருக்கிறது என்றே கருதுகிறேன். அறிவியல் மூலம் மேலும் பல விசயங்கள் அறிந்து கொள்ளவே விருப்பம் உண்டு, அதுபோலவே இந்த குரானும்.

குரான் - இறைவன் தந்தது.


ஆமாம், குரானை எழுத சொன்னவரே இறைவன் சொன்னதாய் சொன்னது. 

Friday 24 February 2012

ஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 13

பாதை 12 

13 . பகுப்பாய்வு முறைகள்

மிளகுதனில் இருந்து பைப்பெரின் எனும் மூலக்கூறினை பிரித்தெடுத்தாகிவிட்டது. அது பைப்பெரின் தானா என சரி செய்து கொள்ள வேறு சில செய்முறைகளை செய்தாகவேண்டிய சூழல். அவை அனைத்துமே ஒருவகையில் ஒளி, எலக்ட்ரான்கள், புரோட்டான்கள், காந்தபுலம் போன்ற விசயங்களின் மூலமே நடைபெறுகின்றன.

அப்போதுதான் ஆய்வகத்தில் எழுதபட்டிருந்த ஒரு வாசகம் என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு பொருளின் தனித்தன்மையை எந்த ஒரு ஆய்வும் முழுமையாக சொல்லிவிட இயலாது என்றே எழுதப்பட்டு இருந்தது. அது நூற்றுக்கு நூறு உண்மை. ஏனெனில் நாம் ஒரு பொருளை ஆய்வு செய்யும் பொது அதற்கான இலக்குகளை மட்டுமே வைத்து செயல்படுவது உண்டு.

ஒரு மூலக்கூறினை சரியா என அறிந்து கொள்ள பயன்பாட்டில் உள்ள எளிய முறைகள். முதலில் யு.வி. (அல்ட்ராவயலட்). அதற்கடுத்து எம்.எஸ் (மாஸ் ஸ்பெக்ட்ரோஸ்கோபி), அதற்கடுத்து ஐ.ஆர் (இன்ப்ரா ரெட்ஸ்பெக்ட்ரோஸ்கோபி) அதற்கடுத்து என்.எம்.ஆர் (ந்யுக்ளியர் மேக்னேடிக்  ஸ்பெக்ட்ரோஸ்கோபி). இப்படி ஒவ்வொரு நிலையிலும் அந்த மூலக்கூறு பகுத்தறியப்பட்டு இறுதியில் எல்லா ஸ்பெக்ட்ரம்களை ஆய்வு செய்து இதுதான் மூலக்கூறு என்று உறுதி செய்வதாகும். அப்படி இந்த முறைகளுக்கு உட்படுத்தபடாத மூலக்கூறின் வடிவமைப்பை கண்டு கொள்வது மிகவும் கடினமாகும். இதை எல்லாம் செய்தாலும், உண்மையிலேயே இந்த மூலக்கூறுதானா என்பதை இறுதியாக உறுதி செய்வது ஈ.எம் (எளிமெண்டல் அனலிசிஸ்). இந்த ஈ. எம் மூலம் அந்த மூலக்கூறில் உள்ள கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன் சதவிகித அளவு கண்டுபிடிக்கப்படும். ஒரே மூலக்கூறு வாய்ப்பாடு கொண்டிருக்கும் ஒத்த மூலக்கூறுகள் இருந்தால் சற்று பிரச்சினைதான், எனினும் மற்ற ஆய்வுமுறைகள் மூலம் தெளிந்து கொள்ளலாம்.

மேலே குறிப்பிடப்பட்ட தொழில்நுட்பங்களை நான் ஆய்வு மேற்கொள்ளும் முன்னர் செய்தது இல்லை. முதலில் எம்.எஸ் செய்ய வேண்டும் என மூலக்கூறினை எடுத்து கொண்டு வேறொரு இடத்தில் உள்ள ஆய்வகம் சென்றேன். அங்கே ஒரு படிவத்தை நிரப்பி கொடுத்துவிட்டு எனது மின்னஞ்சல் தர சொன்னார்கள். ஆய்வு செய்ததும் முடிவினை அனுப்பி வைக்கிறோம் என சொன்னதும் எனக்கு தூக்கி வாரி போட்டது. நான் கற்று கொள்ள என்ன இங்கே இருக்கிறது என நான் இந்த உபகரணத்தை இயக்கலாமா என அங்கே இருந்த பெரிய உபகரணத்தை சுட்டி காட்டினேன். அதற்கு அவர் சிரித்து கொண்டே இதோ இந்த மூலக்கூறினை இங்கே வைத்துவிட்டால் அதோ அங்கே இருக்கிற கணினியில் அரைமணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும். இதை எங்கே பெரிதாக இயக்கப் போகிறாய் என்றார்.

மனிதர்களின் சிந்தனை, கண்டுபிடிப்புகள் என ஒவ்வொன்றும் பெரிதும் ஆச்சர்யம் அடைய செய்பவை. ஒரு மூலக்கூறினை பகுதி பகுதியாக சிதைத்து அந்த மூலக்கூறின் நிறை எண்ணை கண்டு கொள்ளும் முறை தான் இந்த எம்.எஸ். இந்த எம். எஸ் மூலம் ஒரு மூலக்கூறின் நிறை எண்ணை துல்லியமாக சொல்லிவிடலாம், இருப்பினும் இந்த எம்.எஸ் மூலம் ஒரு மூலக்கூறு நூறு சதவிகிதம் தூய்மையானதா என்று மட்டும் கண்டுகொள்ள முடியாது.

அடுத்த பகுதியில் ஒவ்வொரு உபகரணம், அது எப்படி செயல்படுகிறது, எனது அனுபவங்கள் குறித்து பார்க்கலாம்.

எம்.எஸ். உபகரணம். நன்றி கூகிள்.


Tuesday 21 February 2012

மஹா சிவராத்திரியும் வில்வ மரமும்

பதினோராம் வகுப்பு படிக்க சென்ற போது ஒரு பாடல் என்னை மிகவும் அதிகமாக சிந்திக்க வைத்தது. அந்த பாடல் பாடிய பின்னரே பள்ளி தொடங்கும். அந்த பாடல் சிவபெருமானின் பெருமையை பற்றி பேசுகிறது என்பதெல்லாம் அந்த கணத்தில் எனக்கு தெரியாது.

உலகமெலாம் உணர்ந் தோதற் கரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.

அன்றைய தினத்தில் இந்த பாடலானது பெரியபுராணத்தில் சேக்கிழாரால் எழுதப்பட்டது என்பது தெரியாது. பின்வரும் நாளில் கூட பெரியபுராணமோ, பன்னிரு திருமறைகளோ படிக்க வேண்டும் எனும் முயற்சி ஒருபோதும் எடுத்தது கிடையாது. திருவாசகம் இளையராஜாவின் சிம்பொனி இசையில் வந்தபோது கேட்டு மகிழ்ந்தது உண்டு. அப்போதுதான் திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பதன் அர்த்தம் புரிந்தது.

அதிலும் புல்லாகி பூடாகி எனும் வரிகள் மொத்த பரிணாமத்தையும் அசைத்து பார்த்துவிட்டு போகும். பல்விருகமாகி, பறவையாய் பாம்பாகி. எப்படியெல்லாம் சிந்தனைகள் வந்து குவிந்துவிடுகின்றன. புராணங்கள் மூலம் சொல்லப்பட்ட சிவன் பற்றிய கதைகள் குறித்து பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் அவை சொல்லும் ஒவ்வொரு விசயங்களும் மனதில் ஒரு சிந்தனையை எழுப்பாமல் போவதில்லை, அது நேர்மறை சிந்தனையா, எதிர்மறை சிந்தனையா என்பது சிந்திப்பவரை பொறுத்தே அமைகிறது.

நான் ஒரே ஒரு விசயத்தில் மிக மிக தெளிவாக இருக்கின்றேன். சிவன், பிரம்மன், விஷ்ணு எல்லாருமே மனிதர்கள். ஒன்று இவர்கள் வாழ்ந்து இருக்கலாம், அல்லது இவர்கள் படைக்கப்பட்டு இருக்கலாம். எவர் இந்த புராணங்கள் (வியாசர் என்றே சொல்கிறார்கள்) எல்லாம் தொகுத்து எழுதினாரோ அவருக்கே எல்லாம் வெளிச்சம். அதைப்போலவே அந்த அந்த காலகட்டத்தில் சொல்லப்பட்ட விசயங்கள் எல்லாம் உண்மையிலேயே நடந்தனவா என்பதை ஆராய வேண்டிய அவசியம் எதுவும் இல்லை என்றே தோன்றுகிறது. சொல்லப்பட்ட விசயங்களில் என்ன நீதி சொல்லப்படுகிறது என்பதை காண்பது மட்டுமே அறிவு என்றாகிறது.

கிருஷ்ணர் பற்றி நான் எழுதியதை வீட்டில் சொன்னதும் 'திமிர் பிடித்தவன்' என்றே என்னை சொன்னார்கள். உண்மையிலேயே யோசித்து பார்க்கிறேன், அத்தனை அகங்காரமா எனக்கு? தெய்வங்களாக போற்றப்படுபவர்களை நிந்திக்கும் அவசியம் எனக்கு எதற்கு வந்தது? நான் என்னை ஒருபோதும் ஆத்திகன் என்றோ, நாத்திகன் என்றோ நினைத்து கொள்வதில்லை. ஆனால் எனக்கு இறைவன் மிக மிக பிடிக்கும்.

நேற்று ஆலயத்திற்கு செல்கிறேன். மக்கள் அலைகடலென திரண்டு இருக்கிறார்கள். ஆலயத்தின் உள்ளே செல்லக்கூட இடம் இல்லை. சட்டென மனதில் நினைவுக்கு வருகிறது. அடடா, மஹா சிவராத்திரி. அத்தனை பக்தர்கள் கண்டு மனம் ஆனந்தம் கொள்கிறது. நான் நேற்று மீள்பதிவிட்ட பதிவினை நினைத்து  எனக்கே வெட்கமாக வருகிறது.  அலங்காரம் செய்யப்பட தெய்வ சிலைகள் கண்டு மனம் பூரிப்பு அடைகிறது. எங்கே எனது சிந்தனைகள். எனக்குள் எழுந்த எதிர்மறை சிந்தனைகள் எல்லாம் ஓடி ஒளிகின்றன.

பூஜைகள் நடந்து கொண்டிருக்க ஒருவர் சொற்பொழிவு செய்கிறார். நீங்கள் குரங்கு தெய்வம், மாடு தெய்வம் என விலங்குகளை எல்லாம் தெய்வமாக கொண்டாடுகிறீர்களே நீங்கள் செல்லவேண்டியது மிருககாட்சி சாலை, கோவில் அல்ல என்று ஒருவர் சொன்னாராம். அதற்கு விலங்குகளையும் மதித்து போற்றும் மனப்பான்மை உடையவர்கள் நாங்கள் என்பதில் எங்களுக்கு பெருமை உண்டு எல்லா உயிரினங்களையும் போற்றும் தன்மை படைத்தவர், நன்றியுடன் நடந்து கொள்பவர் இறைவனுக்கு சொந்தமானவர் என பதில் அளித்தாராம்.

அதற்கடுத்து சிவராத்திரி பற்றிய விசயங்களை பேசியதை கேட்டதும் எனக்கு இந்த மஹா சிவராத்திரி பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என ஆவல் பிறந்தது. அதிலும் குறிப்பாக வில்வ மரம் பற்றியும், தனக்கே தெரியாமல் அர்ச்சனை செய்து கொண்டிருந்த ஒருவர் பற்றி கூறியதும் சிவராத்திரி பற்றி தேடி பார்த்தேன். பல ஆச்சர்யமூட்டும் தகவல்கள் இருந்தது.

இந்த மஹா சிவராத்திரியானது வருடத்திற்கு ஒருமுறை வில்வ இலைகளால் சிவனுக்கு  பூஜை செய்யப்பட்டு இரவெல்லாம் விழித்து இருந்து, விரதம் இருந்து வழிபடுவதாகும். இது கிருஷ்ண பக்ச தினத்தில் நடைபெறுமாம். வருடா வருடம் இந்த நாள் மாறி மாறி வரும். இந்த மஹா சிவராத்திரியானது பெண்களால் தங்களது கணவர்மாரும், மகன்களும் நலமுடன் இருக்க வழிபடும் தினமாம். சிவனின் மனைவி பார்வதி தேவியார் அமாவாசை அன்று (இன்றுதான் அமாவாசை) தனது கணவருக்கும், குமாரர்களுக்கும் வழிபட்டதாக சொல்கிறார்கள்.

அதோடு மட்டுமல்லாமல் பாற்கடலை கடைந்தபோது பாம்பானது கக்கிய விஷம் உலகெலாம் பரவி அனைத்து உயிரினங்களையும் அழித்துவிடும் அபாயம் ஏற்படும் நிலை வந்தபோது 'அழிக்கும் கடவுள்' என போற்றப்படும் சிவன் 'காக்கும் பணியை' எடுத்து கொண்டு அந்த விஷத்தை தானே அருந்திய செயலை கண்டு வெகுண்ட பார்வதி தேவியார் 'பாச கயிற்றால் சிவனின் கழுத்தை பிடித்து நிறுத்த' அந்த விஷமானது அப்படியே நிற்க அந்த தினத்தை மஹா சிவராத்திரியாக கொண்டாடுகிறார்கள் என்பது ஒரு ஐதீகம்.

பிரளயம் என்று ஒன்று புராணங்களில் அதிக அளவு சொல்லப்பட்டு வருகிறது. இந்த பிரளயங்கள் ஏற்படும்போதெல்லாம் ஒரு யுகம் அழிந்து மறு யுகம் தோன்றுவது இயற்கை. அப்படி யுகங்கள் அழிந்து மறுபடியும் யுகம் தோன்றும்போது எல்லாம் அழிந்துவிட்டால் மீண்டும் உருவாக்குவது கடினம் என்பதால் சில விசயங்கள் மட்டும் பாதுக்கக்கப்படும். அப்படி பிரளயம் உருவானபோது சிவனை வழிபடுவோர் இந்த பிரளயத்தில் சிக்காமல் காக்கப்படுவது வாடிக்கை. இங்கே சிவன் அழிக்கும் தொழில் செய்பவரா? காக்கும் தொழில் செய்பவரா என்பது சிந்திக்க வேண்டியது. கெட்டதை அழித்து நல்லதை காக்கும் தெய்வமாகவே சிவனின் செயல்பாடுகள் இருக்கின்றன.

சித்ரபானு எனும் அரசர் தனது மனைவியுடன் சேர்ந்து விரதம் இருந்து சிவனை மஹாசிவராத்திரி அன்று வழிபட்டார்கள். எதற்காக இப்படி வழிபாடு செய்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள அரசவைக்கு வந்திருந்த அஷ்டவக்ரா எனும் முனிவர் கேட்க சித்ரபானு சொன்ன கதை என கருட புராணத்தில் குறிப்பிடப்பட்டு இருப்பதாக தெரிகிறது. அர்ஜூனன் எப்படி கண்ணனிடம் 'நீ இப்போதுதானே பிறந்தாய், ஆனால் எப்படி சூரியபகவான் மகனுக்கு பகவத் கீதையை சொன்னாய் என கேட்கும்போது' கண்ணன் 'நான் எல்லா பிறப்புகளின் நினைவுகளையும் சுமந்து கொண்டிருப்பவன், ஆனால் நீயோ மற்ற மனிதர்களோ ஒரே ஒரு பிறப்பு மட்டுமே நினைவில் இருக்கும் என்கிறான்'

அதுபோலவே சித்ரபானு தனது முற்பிறவியில் நடந்த விசயங்கள் தனக்கு நினைவில் இருப்பதாக கூறி தான் ஒரு வேட்டைக்காரன் என்றும், பறவைகள், விலங்குகள் என வேட்டையாடி திரிபவனாக வாழ்ந்தேன் என்றும் கூறுகிறான். அப்போது அவனது பெயர் சுஸ்வரா. இவ்வாறு வேட்டையாட சென்ற ஒரு தினம் மானை கொல்ல நினைக்கையில், அந்த மான், அதன் குடும்பத்தின் நிலை கண்டு கொல்லாமல் விட்டுவிடுகிறான். எங்கும் தேடியும் வேறு விலங்குகள் கிடைக்காமல் போக இருள் சூழ்ந்து கொள்கிறது. அது அமாவாசை தினம். அப்போது தன்னை இரவில் காத்து கொள்ள ஒரு மரத்தின் மீது ஏறிக்கொள்கிறான். தன்னிடம் இருந்த தண்ணீர் பானையில் இருந்த சிறு ஓட்டையால் தண்ணீர் கொஞ்சம் கொஞ்சம் கொட்டிக்கொண்டு இருந்தது. தனக்கு பசியும் தாகமும் வேறு. இந்த இரு நிலைகள் கொண்டிருந்தால் எப்படி உறக்கம் வரும் என்கிற நிலையோடு, உறங்கினால் கீழே விழுந்துவிடுவோம் என்கிற அச்சம் வேறு. தான் உறங்காமல் இருக்க மரத்தில் இருந்த இலைகளை கிள்ளி கீழே போட்டுக்கொண்டே இருக்கிறான். காலை வந்ததும் பசியோடு காத்து இருக்கும் தனது மனைவி குழந்தைகளுக்கு உணவு எடுத்து செல்கிறான். உணவு உண்ணும் தருவாயில் 'எனக்கு உணவு போடுங்கள்' என ஒருவர் வந்து கேட்க தங்களுக்கு இருக்கும் உணவில் அவருக்கு  பகிர்ந்து தருகிறான்.

இப்படி வாழ்ந்த சுஸ்வரா மரணம் அடையும் தருவாயில் அவனை சிவலோகத்திற்கு அழைத்து செல்ல தேவர்கள் வருகிறார்கள். தேவர்கள் சுஸ்வராவிடம் நீ ஒரு இரவில் வில்வ மர இலைகளை மரத்தின் கீழ் இருந்த லிங்கம் மீது போட்டு பூஜித்தாய், உனது பானையில் இருந்த நீர் லிங்கம்தனை கழுவியது. அந்த இரவு முழுவதும் உணவு அருந்தாமல் இருந்தாய்.  எனவே உன்னை சிவலோகம் அழைத்து செல்ல வந்திருக்கிறோம் என்றார்கள். தனக்கு தெரியாமலே சிவனை பூஜை செய்த தனக்கு இத்தனை பெரிய பாராட்டா என சுஸ்வரா ஆச்சர்யம் கொள்கிறான். அதற்கு பின்னர் பல வருடங்கள் கழித்து சித்ரபானுவாக அவன் பிறந்தான். அந்த நாள் நினைவில் இருந்ததால் நானும் எனது மனைவியும் பூஜை செய்கிறோம் என சொன்னான் சித்ரபானு. அப்படித்தான் இந்த மஹா சிவராத்திரி கொண்டாடப்பட்டு வருவதாக சொல்கிறார்கள்.

இந்த மஹா சிவரத்திரியானது மூன்று மணிநேரம் என நாலு கால பூஜைகள் என நடைபெறும். அப்போது வில்வ இலைகளால் சிவனுக்கு அபிசேகம் செய்வார்கள். முதல் காலத்தில் பால் அபிசேகம், இரண்டாம் காலத்தில் நெய் அபிசேகம், மூன்றாம் காலத்தில் தயிர் அபிசேகம். நான்காம் காலத்தில் தேன் அபிசேகம். நான்காம் கால பூஜை முடிந்ததும் அந்தணர் ஒருவருக்கு அன்னமிட்டு விரதம் முடித்து கொள்வது சிறப்பு என்றே சிவனே சொல்வதாக அமைந்து இருக்கிறது. இந்த மஹா சிவராத்திரி பிப்ரவரி மார்ச் மாதங்களில் வரும்.

வில்வ மரம் மருத்துவ குணங்கள் உடையது. இந்த மரத்தின் பழங்கள் மருத்துவ தன்மை உடையதாகும். வில்வ பழம்தனை காயவைத்தோ அப்படியேவோ சாப்பிடலாம். இந்த பழம் வர கிட்டத்தட்ட பதினோரு மாதங்கள் ஆகும். இந்த பழத்தின் ஓடு மிகவும் கடினத்தன்மை உடையது. மரத்தின் கீழ் நிற்கும்போது இந்த பழம் தலையில் விழுந்தால் தலையில் காயம் ஏற்பட வாய்ப்புண்டு. வில்வ பழம் மூளைக்கும், இதயத்திற்கும் நல்லதாம். காசநோய், வயிற்றுபோக்கு, வயிருவலி போன்றவைகளுக்கு நல்லதாம். வில்வ பழத்தில் ரிபோப்லவின் நிறைய உண்டு. இந்த மரத்தின் வேர்கள் மருத்துவ குணங்கள் உடையதாகும். பாம்பின் விஷத்தை முறிக்கும் தன்மை உடையதாம் மற்றும் அலர்ஜி, வீக்கங்கள், காயங்களை சரிபடுத்தும் பாங்கு இந்த வேர்களுக்கு உண்டு. தமிழ் சித்தர்கள் இந்த மரத்தை கூவிளம் என்றே அழைத்தார்கள்.

இந்த வில்வ மரத்தை இந்துக்கள் வெகுவாக போற்றுகிறார்கள். எனது வீட்டில் கூட வில்வ மரங்கள் உண்டு. அவை போன்சாய் மரத்தை போன்றே வளராமல் அப்படியே இருக்கிறது. இதுவரை அவை பழங்கள் தந்தது இல்லை. நான் மஹா சிவராத்திரி கொண்டாடினால் இந்த வில்வ மரம் பழங்கள் தர சிவன் மனம் வைப்பாரோ?!

Monday 6 February 2012

கோவம் ஏனய்யா? நாம சாவது

தமிழகத்தில் தென்மாவட்டமாகிய விருதுநகர் அருகில் உள்ள குண்டத்தூரில் இருந்து ஒரு சாமி தாத்தா வருடம் தோறும் எங்கள் ஊருக்கு வருவார். எங்கள் பக்கத்து வீட்டில் உள்ள திண்ணையில் தினமும் ஒரு வாரத்திற்கு இரவு கதை சொல்வார். வீட்டில் என்னை கதை கேட்க சொல்லி போகச் சொல்வார்கள். ஆனால் நான் இரவு எட்டு மணி ஆனதும் தூங்க போய்விடுவேன். ஒருநாள் கூட அவர் சொன்ன கதையை கேட்க நான் போனது இல்லை. 

வீட்டின் மாடியில் தான் படுத்து உறங்குவது வழக்கம். அப்போது அவர் பேசும் பேச்சுகள் காதில் காற்றோடு கலந்து வந்து விழும். அவருக்கு.நல்ல கனத்த குரல் அவர் கதை சொல்லி முடித்ததும் ஒரு பாடல் பாடுவார். ஆனால் என்ன என்ன கதை சொன்னார் என்பதெல்லாம் எதுவுமே தற்போது நினைவில் இல்லை, ஏனெனில் நான் கதையை காது கொடுத்து கேட்டது இல்லை. இந்த சாமி தாத்தா எனது உறவினர் தான். இவரைப் பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது. குண்டத்தூர் சென்றபோது ஒரு சில முறை பார்த்து இருக்கிறேன். எங்கள் ஊருக்கு வரும்போதெல்லாம் பார்த்துவிட்டு புன்னகையோடு சென்றதோடு சரி. அவர் என்னிடம் பேசியது இல்லை, நான் அவரிடம் பேசியதும் இல்லை. 

ஆனால் அவர் கதையின் முடிவில் பாடிய பாடலின் முதல் வரிகள் மட்டும் எப்போதும் என்னில் ரீங்காரமிட்டு கொண்டிருக்கின்றன. எனக்கு கோபம் வரும் போதெல்லாம் இந்த பாடல் மனதில் தைத்துவிட்டு போகும். ஆனால் கோபம் வந்தது வந்ததுதான். எதற்கு இந்த கோபம் என கோபம் வந்து சென்றபின்னர் சிந்தித்து பார்த்தால் 'எல்லாம் முட்டாள்தனமாக மட்டுமே தோன்றும்'. 

அவர் பாடிய பாடலின் முதல் வரி இதுதான். 'கோவம் ஏனய்யா நாம சாவது நிசம் ஐயா' அதற்கடுத்து என்ன வரிகள் பாடினார், அந்த பாடல் எப்படி போகும் என்பதெல்லாம் எனக்கு நினைவில் இல்லை. ஆனால் இந்த வரி மட்டும் என்னை மிகவும் பாதித்த வரி. நான் மிகவும் கோபக்காரனாகவே எனது வாழ்வில் நான் வாழ்ந்து இருந்து இருக்கிறேன். என்னை எனது வீட்டில் விசுவாமித்திரர் என்றே சொல்வார்கள். 

ஆனால் நான் கோபம் கொண்டது எல்லாம் அன்றைய நாட்களின் தேவைக்கு மட்டுமே. எனக்கு சமூக அக்கறையோ, சமூகத்தின் மீதான அக்கறையில் எழுந்த கோபமோ, அல்லது தீண்டத்தகாதவர் என எனது ஊரில் ஒதுக்கி வைக்கப்பட்ட சமுதாயம்தனை ஒடுக்கி வைத்தவர்களின் மீதான கோபமோ, சாலை போடப்பட்ட ஒரே மாதத்தில் பழுதாகிப் போன சாலை போட்டவர்கள் மீதான கோபமோ, சாதிகள் என பல சாதிகள் கொண்ட ஊரில் வாழ்ந்து கொண்டிருக்கிறோமே, சாதியை ஒழிக்க வேண்டும் என்கிற கோபமோ இல்லை. எனது கோபம் எல்லாம் மிக மிக சின்ன சின்ன அதுவும் அற்ப விசயங்கள் என சொல்வார்களே அப்படித்தான் இருந்தது, இப்பவும் அப்படித்தான் இருக்கிறது. 

இந்த கோபம் இயலாமையின் வெளிப்பாடு என்றே ஒருமுறை எனக்கு ஒருவர் சொன்னார். கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும் என மற்றொருவர் சொன்னார். ஆனால் இந்த கோபம் மொத்த குடும்பத்தையே வேரறுக்கவல்லது என்பதை பல கதைகளில் கற்று தெளிந்து இருக்கிறேன். இருப்பினும் கோபம் நம்மை விட்டு அகல்வதில்லை. 

கோபத்தை எதற்காக கட்டுபடுத்த இயலாது? அல்லது கோபத்தை எதற்காக கட்டுபடுத்த வேண்டும்? எனது நண்பர் என்னிடம் சொல்வார், ஒரு நிமிடம் யோசித்து பார்த்தால் இந்த கோபம் எல்லாம் அனாவசியம் என்பார். ஆனால் அவர் கொண்டுள்ள கோபங்கள் பற்றி எதுவுமே பேசமாட்டார். நான் மிக மிக கோபக்காரன், ஆனால் எப்படி வெளிப்படுத்துவது, எங்கே வெளிப்படுத்துவது என்பதில் நான் மிகவும் கவனமாகவே இருக்கிறேன். 

சாலையில் போய்க் கொண்டிருப்பவனிடம் நான் ஒருபோதும் எனது கோபத்தை காட்டியது இல்லை. எனது உற்றார் உறவினர் என இவர்களிடமும் கூட நான் அவ்வளவாக கோபம் காட்டியது இல்லை. ஏதேனும் அவர்கள் செய்தால் கூட புன்முறுவலுடன் விலகிப் போய்விட முடிகிறது. இவர்கள் மீது கோபம் கொண்டு என்ன செய்யப்போகிறோம் என்கிற உணர்வு மேலிடுகிறது. இவர்களின்பால் எனது அன்பு கூட அளவுடனே இருக்கிறது. என்னால் முடிந்தால் அவர்கள் கேட்கும் உதவிகளை செய்வதுடன் நான் எனது அன்பு எல்லாம் அங்கே நின்றுவிடுகிறது. கேட்டுவிட்டார்களே என மாய்ந்து மாய்ந்து செய்யும் பழக்கம் எல்லாம் இல்லை. எவர் எப்படி பேசினால் எனக்கு என்ன என்கிற மமதை அதிகமாகவே இருக்கிறது. 

ஆனால், எங்கு அன்பு அதிகம் செலுத்துகிறேனோ அங்கே நான் அதிகம் கோபம் கொள்கிறேன். அன்புதனை செலுத்தும் இடத்தில் அங்கே கோபத்திற்கு என்ன வேலை? புரிந்து கொள்வது என்பது மிகவும் கடினமான ஒன்றாகவே இருக்கிறது. இந்த கோபத்தின் மூலம் நான் இதுவரை எவரையுமே அடித்தது இல்லை. ஆனால் வார்த்தைகளால் சுட்டு இருக்கிறேன் என்றே கருதுகிறேன். ஒருவேளை நான் அடித்து இருந்தால் ஏற்பட்டு இருக்கும் வலியை விட இந்த வார்த்தைகளின் வலி எனக்கு அதிகம் வலித்து இருக்கிறது. 

கோபத்தை கட்டுபடுத்த பலமுறை நினைத்துவிட்டேன், ஒரு நாள், இரண்டு நாட்கள், மூன்று நாட்கள். மீண்டும் கோபம் வந்து தொலைக்கிறது. எனது சாமி தாத்தா பாடிய பாடலும் மனதில் ரீங்காரம் இடுகிறது. இறுதியாக ஒரு முடிவில் வந்து நிற்க முடிகிறது, அதாவது  மனிதன் இறக்கும் வரையில் இந்த கோபம் இறப்பது இல்லை. ஏதேனும் ஒரு காரணம் காட்டி கொண்டு பல்லை நறநறவென கடித்து கொண்டு வார்த்தைகளை துப்பிவிடுகிறது. 

சினம் - குலத்தை அழித்துவிடும். சினம் - நண்பர்களை குலைத்துவிடும். 

நியாயமான கோபம், தார்மீக கோபம் என கோபம் பற்றி என்னவெல்லாமோ சொல்லி நியாயப் படுத்துகிறார்கள். சாவே உனக்கு சாவு வராதா என கதறி அழுதானாம் ஒரு கவிஞன்.  மனித வாழ்வில் பலரும் கோபமே உனக்கு சாவு வராதா என்று கேட்பதில் கூட கோபம் கொள்கிறார்கள். 

கோபம் பற்றி எழுத தூண்டிய சகோதரி ஷக்திப்ரபா பதிவுக்கு நன்றி. 

Thursday 2 February 2012

இந்த பிரபஞ்சம் தட்டை தான்

என்னைய நீங்க நொட்டை சொல்லக் கூடாது. இந்த பிரபஞ்சம் தட்டை தான், மட்டைகளா என ஒரு அறிவியல் குழு சொல்லிவிட்டது. நான் மொட்டை தலையை தடவி கொண்டு இருக்கிறேன். 

இந்த பிரபஞ்சம் தட்டை தான். 

ஆச்சர்யமாக இருக்கிறதா? இதில் ஆச்சர்யப்பட ஏதும் இல்லை. 

ஐன்ஸ்டீன் இந்த பிரபஞ்சம் சற்று வளைவானது என்று சொன்னதில் இருந்தே இது குறித்து அறிவியலாளர்கள் நிறையவே சிந்தித்து இருக்கிறார்கள். 

ஆனால் சமீபத்தில் அன்டார்டிகா மீது வானில் பறந்த ஒரு பலூன் இந்த பிரபஞ்சம் தட்டை என்றுதான் உறுதி செய்து உள்ளது. 

அதாவது ஈர்ப்பு விசை இல்லாத பட்சத்தில் ஒளியானது நேர்கோட்டில் மட்டுமே செல்லும், வளைந்து செல்லாது என்பது ஒரு விதி. 

அதோடு மட்டுமா, இந்த உலகம் எப்படி பெரு வெடிப்பு மூலம் உருவானதோ அதைப்போல பெரு சுருக்கத்தில் சென்று முடிவடையும் என்று முன்னாளில் நினைத்து இருந்தார்கள். ஆனால் அவ்வாறு இந்த பிரபஞ்சம் பெரு சுருக்கத்தில் முடிவடையாது என சமீபத்தில் ஆய்வின் மூலம் நிரூபணம் செய்து நோபல் பரிசு கூட பெற்று விட்டார்கள் அறிவியலாளர்கள். 

இப்படி தொடர்ந்து விரிவடைந்து அப்படியே உறைந்துவிடும் பிரபஞ்சம் தட்டையாகவே இருக்க இயலும் என உறுதி செய்யப்பட்டு உள்ளது. 

நாம் சாப்பாட்டினை சூடு செய்ய உபயோகிக்கும் மைக்ரோ அலைகள் பெரு வெடிப்பு நடந்தபோது உருவாக்கிய கதிரியக்க வெப்பம் தனை கொண்டு பல எப்படி பிரபஞ்சம் விரிவடைகிறது என கண்டறியலாம். 

இதற்காக ஒரு தனிதன்மையுள்ள கருவியை உருவாக்கி இருந்தார்கள். அதில் ஒரு கேலக்ஸியில் இருந்து உருவாகும் ஒளி செல்லும் பாதையை விட முதன் முதலில் உருவான (பெரு வெடிப்பில்) ஒளியானது பிரபஞ்சத்தை ஊடுருவி சென்றது ஆச்சரியம் அளிக்கும் வகையில் இருந்ததாம். 

இந்த பிரபஞ்சம் முதன் முதலில் அது கொஞ்ச நேரத்திற்கு வளைவாக இருந்தது, ஆனால் இப்போது தட்டையாகிவிட்டது என்கிறார்கள்.

ஆமாம், வேத நூல்களில் 'தட்டை' என சொன்னது பிரபஞ்சத்தையா, பூமியையா? எதுக்கு சொல்ல வருகிறேன் எனில் சொல்பவர் சொல்வதை புரிபவர் வேறு விதமாக புரியலாம் அல்லவா. 

Wednesday 1 February 2012

வானியல் ஆராய்ச்சியில் விருப்பமா?

சிறு வயதில் இரவில் நான் ஓடிக்கொண்டிருக்க என்னுடன் ஓடி வரும் நிலா. நான் நின்றால் நின்று கொள்ளும் நிலா. என் பேச்சு கேட்கும் அன்பு நிலா.

அம்மாவின் இடுப்பில் அமர்ந்து நிலாவைப் பார்த்து சாப்பிட்ட தருணங்கள். இந்த நிலா, வெள்ளை நிலா, 

நிலா நிலா ஓடி வா என பள்ளி காலங்களில் படித்து ரசித்த பாடங்கள். நிலா உள்ளம் கொண்ட கொள்ளை நிலா. 

தேய் பிறை, வளர் பிறை என நிலா தேய்வதும், வளர்வதுமாய். இது நிலா பற்றிய ஒரு கால கணிப்பு. 

வானத்தில் மேகங்கள் வலம் வர அங்கே எவரோ இருப்பதாய் கண்டு சிரித்த காலங்கள். 

ஆடு போன்ற உருவங்கள், ராஜா பவனி வரும் குதிரை வண்டிகள் என எத்தனை எத்தனையோ மேகங்களில் பார்த்து ரசித்த ஓவியங்கள். ஒவ்வொரு தினமும் எவரேனும் வரைந்து வைத்ததைப் போன்றே புதிதாக தோன்றும். 

இரவில் வானத்தைப் பார்த்து நட்சத்திரங்கள் எண்ணுவது ஒரு பொழுது போக்காக இருந்தது. எங்கோ தொலைவில் விழுந்து விடும் நட்சத்திரங்கள் விர்ரென பறந்து போனது கண்டு எரி நட்சத்திரம் என்றார்கள். 

சூரிய பகவான். வாயு பகவான். வருண பகவான் என வானத்தில் கடவுளர்களை தேடிய பொழுதுகள் உண்டு. இடி இடித்தால் அர்ஜுனன் பெயர் சொல்லி கதவுக்கு பின்னால் மறைந்த பொழுதுகள் உண்டு. 

எத்தனை எத்தனை கவிதைகள், பாடல்கள். வான மங்கை போட இருக்கும் கோலத்திற்கான புள்ளிகள் தான் நட்சத்திரங்கள் என வாசித்த போது சிலிர்க்க வைக்க சிந்தனைகள். 

மழைக்காக மாரியம்மனுக்கு மழை கஞ்சி எடுத்த நினைவுகள். இன்னும் இன்னும் நினைவில் பசுமையாக இருக்கிறது. 

வானத்தில் இருக்கும் சொர்க்கம் என்றே பாட்டியிடம் கேட்ட கதைகள். இறந்தவர்கள் சாமியிடம் சென்று விட்டார்கள் என வானத்தை நோக்கி சொன்ன வார்த்தைகள். 

சூரிய நமஸ்காரம் சொன்னதோடு நவ கிரகங்கள் என ஒன்பது கிரகங்களை கோவில்களில் சுற்றி வந்த பொழுதுகள். எந்த கணக்கில் இருபத்தி ஏழு நட்சத்திரங்கள் என கண்டு கொண்டார்களோ என புரியாத கணக்குகள். ராசியும் பலன்களுமாய். 

ஒவ்வொரு கிரகத்திற்கும் தொடர்பு உண்டு. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் தொடர்பு உண்டு. இந்த மொத்த அண்ட சாரமும் பிண்டத்தில் உண்டு என்று சொன்ன விதிகள். 

இன்னும் இன்னும். நிலா தொட்டு விட்டோம். பூமிக்கு மட்டுமே நிலா அல்ல, ஒவ்வொரு கிரகத்திற்கும் நிலா உண்டு என்று கண்டு கொண்டோம். 

நாம் இருக்கும் இடம் இந்த பிரபஞ்சத்தில் ஒரு சின்ன துளி. என்றோ அனுப்பப்பட்ட வானியல் கோள் புளுட்டோவை தாண்டி கொண்டு சென்று கொண்டிருக்கிறது. 

சிறு வயதில் வானத்தில் படங்களை பார்த்தது போல தொலை தூர நட்சத்திரங்களில் நெபுலாவில் அதிசய படங்கள் பார்க்கிறார்கள். அதிசய படங்கள் காட்டுகிறார்கள். அத்தனை அழகுடன் வியாபித்து இருக்கிறது இந்த பிரபஞ்சம். 

நமது சூரிய குடும்பத்தில் உள்ள ஆக்சிஜன் அணு அளவும், நமது சூரிய குடும்பத்துக்கு வெளியே உள்ள ஆக்சிஜன் அணு அளவும் வெவ்வேறு என கண்டு கொள்ள முடிகிறது. இதனால் புது விசயம்தனை தெளிந்து கொள்ளலாம் என போராடுகிறார்கள். 

இப்படி எத்தனையோ முன்னேற்றம் அடைந்து கொண்ட இந்த கால தொழில் நுட்பம் பொது மக்களை வானியல் ஆராய்ச்சி செய்ய அழைக்கிறது. தொலை நோக்கி மூலம் வானில் ஏற்படும் அதிசயங்களை கண்டு தர சொல்கிறது. 

ஒருவரின் கண்ணுக்கு தெரிவது மற்றொரு கண்ணுக்கு வேறொன்றாக புலப்படலாம். பலரும் போட்டி போட்டு கொண்டு இந்த பணியில் இறங்கி எந்த ஆராய்ச்சி பட்டம் பெறாத ஒருவர் ஒரு புது கிரகத்தை அதுவும் பூமி போன்ற கிரகத்தை சமீபத்தில் கண்டு பிடித்தார். 

சந்திர கிரகணம். சூரிய கிரகணம். பாம்பு விழுங்கிய கதை எல்லாம் இன்னமும் நினைவில் இருக்கிறது. இன்றும் கூட கிரகணம் சமயங்களில் வெளியில் வர வேண்டாம் என கட்டுபாடுகள் விதிக்கிறார்கள். 

வானத்தில் அதிசயங்கள் நடைபெற்று கொண்டே இருக்கின்றன. வெடித்து சிதறும் பல நட்சத்திரங்கள். குட்டியாய் தோன்றும் நட்சத்திரங்களில் தண்ணீர் சிதறும் மர்மங்கள். இன்னும் இன்னும்.

ஒரு நாள் இரவில் தனியாய் மகனுடன் நடந்து கொண்டு இருந்தேன். வானத்தைப் பார்த்தவன் அதோ நிலவுடன் ஒரு நட்சத்திரம் என்றான். வானில் பறக்கும் விமானமாக இருக்கும் என்றேன். இல்லை இல்லை அது நேர்கோட்டில் அமைந்த நட்சத்திரம் என்றான். படம் எடு என வற்புறுத்த வேண்டாம் என மறுத்தேன். 

மறுநாள் மீண்டும் இரவில் நடந்தோம். அதே நிலா, அதே நட்சத்திரம். படம் எடுத்தே ஆக வேண்டும் என சொன்னான். படம் எடுத்தேன். வானியல் ஆராய்ச்சி விருப்பம் உடையவர்கள் ஒரு தொலைநோக்கியுடன் வானத்தைப் பாருங்கள். அதிசயங்கள் கிட்டும். 


வானில் எத்தனையோ அதிசயங்கள். இறைவன் மட்டும் தென்படுவதே இல்லை. 

Thursday 26 January 2012

நண்பனால் தடுமாறிய தமிழ்வெளி

ஹிட்ஸ் ஹிட்ஸ் ஹிட்ஸ்! 

பதிவு எழுத வந்திருப்பவர்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்கிறார்களா என்பது பற்றிய விவாதம் எல்லாம் இரண்டாம் பட்சம் தான். 

பதிவு எழுத வந்திருப்பவர்கள் தரமிக்க பதிவுகளை எழுதுகிறார்களா என்பது பற்றிய கலந்துரையாடல் எல்லாம் இரண்டாம் பட்சம் தான். 

எந்த பதிவர் எப்படி தலைப்பு வைத்து எழுதி எப்படி ஹிட்ஸ் அள்ளி குவிக்கிறார் என்பதுதான் இன்றைய விவாதம் எல்லாம். ஹிட்ஸ் வைத்து வீடா கட்டப் போகிறோம் என அறைகூவல் விடுத்தாலும் ஹிட்ஸ் என்பது ஒரு அங்கீகாரத்தின் அடையாளம். 

எழுத்துகள் அத்தனை எளிதாக எவரையும் வசீகரிப்பதில்லை. எந்த ஒரு எழுத்தாளரும் அனைத்து சமூகத்தையும் தன்னருகே ஒருங்கே நிறுத்தியது இல்லை இதுவரை. பிரிவினைகள் இருந்து கொண்டே இருக்கின்றன. நான் இவரது ரசிகன் என ஒருவர் சொல்லும்போதே மற்றவர்களை ரசிக்கும் தன்மை குறைந்தவராகவே தென்படுகிறார். 

எழுதுவது அவரவர் உரிமை. எப்படி எழுதுவது, எதை எழுதுவது என்பதை எழுதுபவரே தீர்மானிக்கிறார். 

இப்பொழுதெல்லாம் ஒரு சட்டம் இருக்கிறது. இதை மறுமொழி இடுபவர்க்கு என வெப்துனியா தனது மறுமொழி இணைப்புக்கு முன்னர் எழுதி இருக்கிறது. 

//விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.//

இதே விசயத்தை பதிவு எழுதுபவர்கள் மீதும் ஒருவர் தொடங்கலாம் என்பது அனைவரும் நினைவில் நிறுத்த வேண்டிய ஒன்று. 

இணையத்தில் நல்ல விசயங்களை மட்டுமே வாசிக்க நினைப்பவர்கள் கையில் தான் மவுஸ் உள்ளது. இவர்கள் அவ்வாறு செய்யாமல் சர்ச்சைக்குரிய விசயங்களைப் பற்றி பேசி பொழுதை வீணடிக்கிறார்கள் என்கிறார் இணையதளத்தை அதிகமாக உபயோகிக்கும் ஒருவர். 

மேலும் இணையதளத்திற்கும், மொபைல் போன்களுக்கும் அடிமையாகிவிட்டு இதற்கெல்லாம் அடிமையாகி விடாதீர்கள் என பிறருக்கு அதே அடிமைத்தனத்தில் இருந்து கொண்டே எச்சரிக்கை விடுப்பது குடிகாரன் பிறரை குடிக்காதே என அறிவுரை சொல்வது போன்றதுதான். அவரவருக்கு தெரியும் எது செய்ய வேண்டும், எது செய்ய கூடாது என. எந்த போதையும் கண்களை மறைக்கும். 

இந்த ஹிட்ஸ் பற்றி என்ன சொல்வது?

எந்திரனை மிஞ்சிய நண்பன் எனும் பதிவுக்கு தமிழ்வெளி மூலம் வந்த வாசகர்கள் என ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேலே காட்டியது. அதைவிட கூகுள் பக்கம் பார்வைகள் ஒரே நாளில் நான்காயிரம் அருகில் என காட்டியது. இதுவரை எந்த ஒரு பதிவுக்கும் இப்படி ஒரு நிலை வந்தது இல்லை. இத்தனைக்கும் எந்திரனை மிஞ்சிய நண்பன் எனும் பதிவு எனது கணக்கில் ஒரு கமர்சியல் பதிவு. அவ்வப்போது ஒரு கமர்சியல் பதிவு எழுதுவது வாடிக்கை.



இப்படி எந்த பதிவு எத்தனை பேரால் வாசிக்கப்பட்டது என்பது பெரிய விசயமாக பேசப்பட்டாலும் அதில் எத்தனை பேர் பயன் அடைந்தார்கள் என பார்த்தால் சைபர். சைபர் என்றால் இருவேறு அர்த்தங்களும் உண்டு. 

ஒவ்வொருவருக்கு ஒவ்வொன்று பிடித்து இருக்கிறது. பிடித்த விசயத்தை பகிர்ந்து கொள்கிறார்கள். தனக்கு அதாவது தனக்கு தவறென தெரிந்தால் எதிர்த்து பதிவு போடுகிறார்கள். இவர்களது கருத்து பரிமாற்றங்கள் தனிமனித தாக்குதல் வரை சென்று அச்சத்தை விளைவிக்கிறது. 

ஹிட்ஸ் குவிக்க நினைப்பவர்கள் எழுத வேண்டிய விசயங்கள் 

சினிமா சம்பந்தமான கிசுகிசுக்கள், பரபரப்பு செய்திகள். 

பாலியல் சம்பந்தமான போக்கிரித்தனமான பதிவுகள். 

பதிவர்கள் சம்பந்தமான உள்குத்து வெளிகுத்து கும்மாங்குத்து பதிவுகள். 

ஆனால் இதை எல்லாம் தாண்டி பல வாழ்வியல், அறிவியல் விசயங்களை மட்டுமே அற்புதமாக எழுதும் பதிவர்கள் இந்த பதிவுலகில் நிறையவே உண்டு. அவர்களை இனம் கண்டு கொள்வதில் எந்த சிரமமும் எவருக்கும் இல்லை. அவரவர் கையில் மவுசும், கீபோர்டும் உள்ளது. 

Sunday 22 January 2012

உயிரினங்கள் தானாக தோன்றுவதில்லை

முன்னொரு காலங்களில் எல்லாம் உயிரினங்கள் தானாக தோன்றுகின்றன என்கிற சிந்தனை பெரும்பாலும் நம்பப்பட்டு வந்தது. அதாவது தண்ணீரோ, உணவோ கெட்டுப் போனால் அதிலிருந்து தானாக உயிரினங்கள் தோன்றுகிறது என நம்பினார்கள்.  ஆனால் இந்த உயிரினங்கள் தானாக தோன்றுவதில்லை என்பதை முதன் முதலில் உலகுக்கு எடுத்து காட்டியவர் ச்பல்லன்ஜானி எனும் அறியியல் அறிஞர்தான். 

உணவு பொருட்கள் அடங்கிய இரண்டு குடுவைகள் எடுத்துக் கொண்டார். அதில் ஒன்றை காற்றுவெளியில் திறந்து வைத்தார். மற்றொன்றை நன்றாக கொதிக்க வைத்து மூடியால் நன்கு இருக்க மூடி வைத்தார். ஒரு சில நாட்கள் பின்னர் இந்த இரண்டு குடுவைகளை பார்த்தபோது திறந்து வைக்கப்பட்டு இருந்த குடுவையில் நுண்ணுயிர்கள் தோன்றி இருந்தது, ஆனால் கொதிக்க வைக்கப்பட்டு மூடப்பட்ட குடுவையில் எந்த நுண்ணுயிர்களும் தோன்றவில்லை. இந்த செய்முறையை பலமுறை செய்து பார்த்துவிட்டு 'உயிரினங்கள் தானாக தோன்றுவது என்பது கிடையாது என அறிவித்தார். ஆனால் அவர் சொன்னதை அத்தனை எளிதாக எவரும் நம்பவில்லை. 

காற்றில் உள்ள முக்கியமான பொருளை இப்படி கொதிக்க வைத்ததால் செயல் இழக்க செய்துவிட்டதால் உயிரினங்கள் தோன்றவில்லை என வாதிட்டார்கள். இந்த அறிவியல் அறிஞரும் இப்படிப்பட்டவர்களை என்ன சொல்லி திருத்துவது என பேசாமல் விட்டுவிட்டார். 

அதற்கு அடுத்த வந்த அறிவியல் அறிஞர்கள் ஸ்வான் மற்றும் ச்சுல்சே காற்றை கந்தக அமிலத்தில் செலுத்தினார்கள். அவ்வாறு கந்தக அமிலத்தில் செலுத்தியபோது காற்றில் இருக்கும் சுவாச வாயு மாறாமலும், ஆனால் காற்றில் உள்ள நுண்ணுயிர்கள் அழிந்திருக்கும் என்றும் நம்பினார்கள். அதை செயல்முறை படுத்த இவ்வாறு கந்தக அமிலத்தில் செலுத்தப்பட்ட காற்றை உணவு பொருட்களில் செலுத்தினார்கள். சில நாட்கள் ஆகியும் அந்த உணவு பொருட்களில் எந்த நுண்ணுயிரும் தோன்றவில்லை. அதைப்போலவே சாதாரண காற்றை உணவு பொருட்கள் செலுத்திய சில நாட்கள் பின்னர் நுண்ணுயிர் தோன்றியது. அப்பொழுது கூட காற்றில் உள்ள மிக முக்கியமான பொருளை சிதைத்துவிட்டார்கள் என்றே எதிர் தரப்பினர் வாதிட்டனர். 

பின்னர் நடந்த வெவ்வேறு ஆராய்ச்சிகள் மூலம் உயிர்கள் தானாக தோன்றுவதில்லை, அவை காற்றில் மூலம் தான் வர வாய்ப்பு இருக்கிறது என நிரூபிக்கப்பட்டது. 

அதெல்லாம் சரி, இன்னும் எப்படி மனிதர்கள், கடவுளால் அப்படியே படைக்கபட்டார்கள் எனவும், அறிவார்ந்த கட்டமைப்பு எனவும் நம்பி கொண்டிருக்கிறார்கள் என்பது மிகவும் புரியாத புதிராகவே இருக்கிறது. 

ஒரு செல் பல செல்கள் அமைப்பு என்பது நாமே கண்கூடாக பார்க்கும்போது அப்படி அப்படியே எப்படி களிமண்ணில் பொம்மை செய்து வைப்பதுபோல கடவுள் மனிதர்களை செய்து வைத்திருப்பார் என நினைக்கும்போது வெறுமை மட்டுமே மிஞ்சுகிறது. 

கடவுளை பொம்மை செய்து வைத்து அழகு பார்க்கும் வித்தையை நாம் கற்று கொண்டது போல கடவுளும் நம்மை பொம்மை போல செய்து வைத்திருப்பார் என எண்ணுவது விந்தைதான். 

ஒன்றுமே இல்லாமலா இவ்வுயிரினங்கள் தோன்றின எனும் சிந்தனையின் முன்னுரையாய் இதை எழுதியது, ஜீரோ எழுத்துக்காக. 

Friday 20 January 2012

உருவ வழிபாடு தப்பாங்க!



சுயநலமற்ற மனிதர்களின் கருத்துமலர்கள் சத்திய வாக்குதான். என்னைப் பொருத்தவரை அவர்கள் மனிதர்களே. வாழ்வில் இப்படித்தான் வாழ வேண்டுமெனெ சத்தியத்துக்கு கட்டுபட்டு வாழ்ந்த ஷீர்டி சாய்பாபா போன்ற வெகு சில மனிதர்கள் போற்றத்தக்கவர்கள்தான், மறுப்பதற்கில்லை. இருப்பினும் என்னைப் பொருத்தவரை அவர்கள் கூறிய கருத்துமலர்களை மட்டுமே போற்றி கொண்டு இருக்காமல் நாமும் ஒரு சாய்பாபா போல வாழ்ந்து காட்டுவதுதான் அவர் போன்றோரை பின்பற்றுபவர் செய்ய வேண்டிய அரிய செயலாகும். இது எவருக்கும் வாய்ப்பது அத்தனை எளிதில்லை, அதனால்தான் ஒரே ஒரு ஷிரிடி சாய்பாபா மட்டுமே இருக்கிறார், மற்றவர்கள் எல்லாம் அவர்களின் அடியார்களாக‌ இருக்கிறார்கள். இது நான் மக்களின் மீது சொல்லும் குற்றசாட்டு அல்ல. 

சாதாரண மக்கள் தங்களால் வாழ இயலாத வாழ்க்கையை இந்த மகான்களிடம் காண்பதால் பெரு மகிழ்ச்சி கொண்டு தங்களைத் தாங்களே முடக்கி கொள்கிறார்கள் என்பதுதான் எனது எண்ணம். இதன் காரணமாக மனிதர்களை கடவுளாக வழிபடுதல் என்பது அவரவரின் மனதுக்கு ஏற்ப நடக்கும் நம்பிக்கை எனும் செயல்பாடு. இந்த நம்பிக்கை இருக்கும் மட்டுமே ஷ்ரிடி சாய்பாபா, ரமண மகரிஷி, ராகவேந்திரர் போன்ற மகான்கள் மீதான பற்றுதல் தொடர்கிறது. இப்பொழுது சிவன், விஷ்ணு, முருகன், விநாயகர் எனும் மனித உருவில் உள்ள தெய்வங்கள் என சொல்லப்படுபவர்களை எடுத்துக் கொள்வோம். இந்த தெய்வங்கள் எல்லாம் இன்னல்களில் இருந்து காத்துவிடுவார்கள் எனும் நம்பிக்கை ஒன்றுதான் நம்மை அவர்களை வணங்க செய்கிறது. ஊரில் விளையாட்டாக சொல்வார்கள், கஷ்டம்னு ஒன்னு வந்தாத்தான் கடவுள் நமது கண்களுக்குத் தெரிவார் என்பார்கள். 

மரணமடைந்த எனது தாய் இறைவனாக இருந்து காத்து கொண்டிருக்கிறார் என எனது தந்தை அடிக்கடி சொல்வார், என்ன முட்டாள்தனம் என்றே எனக்குத் தோன்றும், ஆனால் பிறரது நம்பிக்கைகளை உதாசீனப்படுத்தும் யோக்யதை எனக்கு இல்லை, யோக்யதை இருந்தாலும் உதாசீனப்படுத்தும் எண்ணம் எனக்கு இல்லை, எனவே சிரித்து கொண்டே அமைதியாக இருப்பேன். கிராமத்து வீட்டில் எனது தாத்தா, எனது தாய் என பூஜையறையை அலங்கரித்து கொண்டிருப்பார்கள். அதே போல எனது மற்றொரு தாத்தாவுக்கு (எனது தாயின் அப்பா) கிராமத்து தோட்டத்தில் சமாதி ஒன்று உண்டு, அங்கே பூஜைகள் எல்லாம் நடக்கும். அதே போல நாச்சாரம்மாள் எனும் குழந்தை தீயில் விழுந்து இறந்து போனதால் அந்த குழந்தை நம்மை காக்கும் என அவரையும் ஒரு வீட்டில் தெய்வமாக கொண்டாடுவோம். இப்படி மனிதர்களை கடவுளாக வைத்து வணங்கிப் பார்க்கும் பழக்கம் நம்மில் தொன்று தொட்டு வந்து கொண்டிருக்கிறது. இதெல்லாம் தவறு என்று நான் சொல்லவில்லை. வாழ்க்கையில் என்ன வேண்டும்? நிம்மதி! அந்த நிம்மதி எந்த ரூபத்தில் வந்தால் என்ன என்கிற மனப்பக்குவம் உடையவர்கள் தான் நாம். 

எனக்கு இறை நம்பிக்கை கிடையாது, ஆனால் இறைவன் இருக்கிறார். எப்படி இருக்கிறார், ஏன் இருக்கிறார், எதனால் இருக்கிறார், எங்கே இருக்கிறார் என்பதெல்லாம் எனக்கு தெரியாது. தெரிந்து கொள்ள முயற்சிப்பதும் இல்லை. இறைவன் இருக்கிறார் அவ்வளவே. எனது செயல்பாடுகளுக்கே நானே காரணம். இதில் இறைவன் பங்கு கொள்வதும் இல்லை, பங்கு பெறுவதும் இல்லை. நான் என்ன புதிதாக சொல்லிவிடப் போகிறேன். நன்றும் தீதும் பிறர்தர வாரா என சொன்னவர்கள் இந்த வாழ்க்கையின் சூட்சுமத்தை அறிந்தவர்கள். 

ஏதேனும் தவறாக நடந்தால், ஏதேனும் நேர்மாறாக நடந்தால் 'தெய்வம் சும்மா விடாது' என சொல்பவர்களை கண்டு சிறுவயதில் மிகவும் பயந்தே இருக்கிறேன். இப்பொழுது கூட வாழ்வில் நடக்கும் பல விசயங்களைப் பார்க்கும்போது நமக்கு அதனதன் காரண காரியங்கள் தெளிவதில்லை தெரிவதும் இல்லை. நான் முதன் முதலில் நாவலுக்கு எழுதிய கவிதை 

நீ என் அருகினில் இருப்பினும்
உன்னை என்னுள் உணராதவரை
உன்னை தேடுதல் ஒரு தேவை.

இது எனது மனைவி அருகில் இருக்க நான் எழுதியது. இங்கே இறைவனைப் பொருத்திப் பார்க்கலாம், எனது மனைவியை நினைத்தும் பார்க்கலாம். 

மனிதர்களின் செயல்பாடுகளுக்கெல்லாம் இறைவன் பொறுப்பு ஏற்பது இல்லை, எனினும் நடக்கின்ற ஒவ்வொரு செயலுக்கும் இறைவன் ஒரு காரணியாக காட்டப்படுவதால் மனிதர்களின் நம்பிக்கை, தெய்வங்களிடம் மட்டுமின்றி மனிதர்களிடமும் பரவி இருக்கிறது என்பதுதான் நான் இதுவரை கண்டுகொண்ட விசயம். 

அவரவருக்கு எது எது பிடித்து இருக்கிறதோ அதன்படி அவர்கள் மட்டுமே நடந்து கொண்டால் பிரச்சினை இல்லை, அதை மற்றவர்களிடம் எதிர்பார்ப்பது பெரும் பிரச்சினைக்கே வழி வகுக்கும். 

நான் அவர்களின் அருகில் இல்லாத காரணத்தினால் மகான்கள் எனப் போற்றபடுபவர்கள் எல்லாம் என்னை வியக்க வைக்கிறார்கள். இதற்கு காரணம் அவர்களைப் பற்றி என்னில் பல அபிமானங்களை பிறர் திணித்துவிடுகிறார்கள், அல்லது அபிமானங்களை நானே திணித்துக் கொள்கிறேன். 

ஒரு கட்டத்துக்குள் நம்மை நாமே நுழைத்துக்கொள்ளும்போது எந்த சிந்தனையும் முழுமை பெறுவதில்லை. 

உருவ வழிபாடு தப்பும் இல்லை, வழிபாடு பண்ணாம இருப்பதும் தப்பு இல்லை. அவரவருக்கு அவரவர் செயல்கள் தப்பே இல்லையாம்! 

Monday 2 January 2012

என் பதிவு திருடு போச்சே!

உங்க பதிவு ஒன்னு திருடு போச்சு, கவனிச்சீங்களா?

எப்பவோ சொல்லிட்டேனே, என் பதிவுகளை தாராளமாக திருடுங்கள் அப்படினுட்டு, அது சரி இந்த திருட்டை எங்க போய் எப்படி கவனிக்கிறது?

இந்த பதிவு நீங்க எழுதினதா அல்லது நீங்க திருடி எழுதினதா? 

எந்த பதிவு?


ஆமாம், நான் எழுதினதுதான். 

எப்படி நம்புறது, இதை கருப்புரோஜாக்கள் ராஜேஷ், தான் எழுதினது போல அவரோட வலைப்பூவில் எழுதி வெளியிட்டு தேன்கூடு அப்படிங்கிற ஒரு திரட்டியில இணைச்சி இருக்காரு, யுடான்ஸ் ல இணைச்சி இருக்கார். 

நான் எழுதின தேதி நவம்பர் 3, 2011. அவர் வெளியிட்ட தேதி நவம்பர் 18, 2011. தலைப்பை கூட மாத்தாம அப்படியே வெளியிட்டு இருக்கார். அழகான ஒரு படம் போட்டு இருக்கார். அந்த படம் தான்  வித்தியாசம். 

உங்களுக்கு கோவம் வரலையா?
எதுக்கு கோவம் வரனும்? அவருக்கு பிடிச்ச பதிவுகளை சேகரிச்சிட்டு வரார். என்னமோ போங்க, அடுத்தவங்க எழுதினதை தன்னோடது போல காட்டுறது அவருக்கு ஒரு சந்தோசம். இதுமாதிரி ரொம்ப பேரு பிடிச்ச பதிவுகளை தங்களோட பதிவு போல காப்பி பண்ணி பேஸ்ட் பண்றது ரொம்பவே சகஜம் தானே. சினிமா செய்திகள், செய்திகள் அப்படின்னு விசயங்களை பிற தளங்களில் இருந்து பகிர்ந்து கொள்வது தவறில்லைதான், ஆனா ஒரு நன்றி அப்படின்னு போட்டுட்டா குறைஞ்சிறவா போறாங்க. இப்படித்தான் கிராம வளர்ச்சி அப்படின்னு ஒரு சிறுகதை எழுதி தட்ஸ்தமிழ் இணையத்துக்கு அனுப்பினேன், அவங்க அந்த கதையை வெளியிட்டாங்க. அட பரவாயில்லையே அப்படின்னு நினைச்சு தேடுனப்ப ரெண்டு மூணு இணையத்தில வெளியிட்டு இருந்தாங்க, என்னோட பெயரோட. பரவாயில்லையேன்னு நினைச்சிகிட்டேன். அந்த கதை இந்த வலைதளத்தில இல்லை, அதை வேகமா இணைச்சிருறேன். 

உங்களை மாதிரி இருக்கறவங்க இப்படி பதிவுகளை திருடி வெளியிடுறவங்களை  ஊக்குவிக்கிறீங்கதானே! அவங்களுக்கு பிடிச்சி இருந்தா ஒரு இணைப்பு தந்தா போதாதா, அல்லது நன்றி சொல்லி போட்டா ஆகாதா! அவருக்கு மின்னஞ்சல் அனுப்பலையா?

நிச்சயமா நான் அவங்களை ஆதரிக்கவில்லை. எனக்கு என்னமோ இப்படி எழுதி என்னத்தை பெரிசா சாதிச்சி பேரு வாங்க போறோம், பொழுது போக்கு, ஆத்ம திருப்தி அப்படி இப்படின்னு எதோ தமிழ் தெரியும் அப்படிங்கிறதுக்காக எழுதிட்டு வரோம், அப்படிங்கிற நினைப்பு மட்டும் தான். இஷ்டபட்டா அவங்க பதிவா போட்டுட்டு போகட்டும், என்ன பண்றது. தப்பு அப்படின்னு தெரிஞ்சே செய்றவங்களுக்கு என்ன தண்டனை தந்தா திருந்துவாங்க? சொல்லுங்க. எதுக்கு மின்னஞ்சல்? பிறர் பொருள் கள்வர்களுடன் என்ன பழக்கம் வேண்டி இருக்கிறது? 

உங்க வீட்டை என்னோட வீடு அப்படின்னு ஒருத்தர் சொன்னா, உங்க பொருளை என்னோட பொருள் அப்படின்னு மத்தவங்க சொன்னா சண்டைக்கு போக மாட்டீங்களா?. 

ஹூம், எது எதுக்கோ முடிச்சி போடறீங்க. நிச்சயம் சண்டைக்கு போகமாட்டேன், காவல் துறையில புகார் கொடுத்துட்டு என் வேலைய நான் பாத்துட்டு இருப்பேன். இப்போ நான் எழுதினதை எல்லாம் எடுத்து ஒரு புத்தகமா போட்டு அது மூலம் ஒருத்தர் லாபம் அடைஞ்சா எனக்கு எந்த வருத்தமும் வரப்போறதில்லை. என்னோட பெயர் இல்லாம போனாலும். 

பாரதியார், திருவள்ளுவர், கம்பர் இவங்க எல்லாம் புகழ், பெயர் வேணுமின்னு எழுதின மாதிரி எனக்கு தெரியலை. இந்த எழுத்து மூலம் நான் ஒருபோதும் புகழோ பெயரோ தேடிக்கிற போறதில்லை.  நினைச்சதை எழுதுவேன், புத்தகம் வெளியிடுவேன், அது குழந்தைகால கனவு. எல்லாருக்கும் தங்களோட கனவுகளை நனவாக்குற வாய்ப்பு கிடைக்கிறது இல்லை, அதனால புத்தகமா வெளியிட ஆசைப்படறவங்க எழுத்தை புத்தகமா வெளியிடற எண்ணம் எல்லாம் இருக்கு, காலம் கனியட்டும். 

நீங்க இனிமே எதைப்பத்தி எழுதப்போறீங்க? புது வருட புதிய கொள்கைகள்?

என்னது நீங்க திருந்திடீங்களா அப்படின்னு யாரும் என்னை கேட்ககூடாது. அப்படியேதான் இருக்கும் என் எழுத்து. மீண்டும் உறுதி அளிக்கிறேன், என் பதிவுகளை தாராளமாக திருடுங்கள், தயவு செய்து பிறர் பதிவுகளை திருடி எனது பெயர் பொறித்துவிடாதீர்கள், அது போதும். 

Saturday 31 December 2011

புதிதாக என்ன இருக்கிறது?

இன்றைய புதியவகைகள் நாளைய பழையவகைகள் ஆகின்றன. நேற்றைய புதியவைகள் இன்றைய பழையவைகள் ஆகின்றன. புதியவைகள் புதியவைகளாக என்றுமே இருப்பதில்லை. இருந்தும் புதியவகைகள் தரும் மோகத்திற்கு குறைவும் இல்லை.

புதிதாக வாங்கிய ஒன்று தொலைந்து போயிருந்தது. அதை தேடி கண்டெடுக்கும்போது அது பழையவையாக மாறியிருக்க கூடும். புதியவகைளை போற்றி பாதுகாக்க செய்யும் முயற்சியை போல பழையவைகளை போற்றி பாதுகாக்க மனம் முயல்வதில்லை. பழையதுதானே எனும் அலட்சியம் பரவலாகவே ஏற்படுவது உண்டு.

பழையவைகள் தம்மை புதியவைகளாக மாற்றி வலம் வருவதுண்டு.  இருப்பினும் தம்மிடம் இருக்கும் பழமையை முற்றிலும் அவை துறப்பது இல்லை. தாம் பழையவைகள் ஆகிவிடுவோம் என்கிற கவலை கொஞ்சமும் இல்லாமல், எண்ணற்ற புதியவைகள் ஒவ்வொரு நாளும் வந்து கொண்டே இருக்கின்றன.

புதிய சிந்தனைகள் எல்லாம் பழையவற்றில் இருந்தே தோன்றி அந்த புதிய சிந்தனைகள் மீண்டும் பழைய சிந்தனைகள் ஆகின்றன. சிந்தனையற்ற நிலையில் மனம் லயித்து கொண்டிருப்பது என்பது ஒரு கடினமான பயிற்சியாகவே இருக்க கூடும். தியானத்தில் கூட, உறக்கத்தில் கூட ஏதாவது ஒரு சிந்தனையில் மனம் ஓடிக்கொண்டே இருக்கிறது. அதைப் பிடித்து உட்காரவைக்கும் திறன் எவர் கொண்டு இருப்பாரோ?

ஆதியும் அந்தமும் இல்லாத அனைத்திலும் நிரம்பிய இறைவன் மிக மிக பழையது. புதிதாய் தோன்றும் மனிதர்களால் இறைவன் புதுப்பிக்கப்பட்டு கொண்டே இருக்கிறான் அல்லது இறைவனை  புதுப்பிக்க புதிய புதிய விசயங்கள் மனிதர்களால் படைக்கப்பட்டு கொண்டே இருக்கின்றன.

நிறைக்கும் எடைக்கும் வித்தியாசம் உண்டு. மாற்றமில்லா நிறை இந்த பிரபஞ்சத்தில் எங்கும் ஒரே நிலையில் இருக்கும். அதே மாற்றமில்லா நிறையின் எடை கிரகத்துக்கு கிரகம் மாறும். இருக்கின்ற எல்லாமே பழையது. அதில் வந்து அமரும் சிந்தனை, சிந்தனையின் செயல் வடிவம் புதியது.

ஒரு பொருளுக்கு நிறை வந்தது எப்படி எனும் தேடல் புதியது. நிறை என்பது எந்த ஒரு பொருளுக்கும் பழையது. பொருளின் வஸ்து அளவை நிறையை கொண்டே கணிக்கப்படுகிறது. அந்த பொருளில் எத்தனை அணுக்கள் இருக்கின்றன, மூலக்கூறுகள் இருக்கின்றன என்பது மூலமும் எத்தனை சக்தியால் பின்னப்பட்டு இருக்கிறது என வஸ்துவின் அளவை கணிக்கிறார்கள்.

ஒரு பொருளின் சடத்துவதிணிவு என்பது ஒரு விசையை அந்த பொருளின் மீது செலுத்தும்போது அந்த பொருளானது தனது இடப்பெயர்ச்சியை எதிர்க்கும் சக்தியை பெற்று இருப்பதை பொறுத்தே அளக்கப்படுகிறது. ஈர்ப்பு பொருண்மை பொறுத்து பொருளின் வேகம் மாறுபடும். இதுபோன்று ஆங்கிலத்தில் சொல்லப்பட்ட விசயங்கள் பழையது. அதை தமிழில் மொழிபெயர்த்து சொன்னால் தமிழுக்கு புதியது.

இந்த கவிதை புதியது, அதில் இருக்கும் எழுத்துகள் பழையது.

புதிய ஆண்டுதான்
புதிய எண்கள்தான்
நாம் ஏனோ
பழையது போன்றே இருக்கிறோம்.

ஆசையுடன் வாங்கினேன்
புதிய ஆடை, புத்தாண்டு
என்னிடம் இருந்த
பழைய ஆடையும் புதிதானது
இல்லாதவன்
உடுத்தி கொண்டதால்.

பழையவைகள் எல்லாம் பொக்கிசங்கள்
பெருமிதமாய் சொல்லி வைத்தார்
பழையன கழிதல் என்றே
பொக்கிசங்கள் தொலைந்து போயின.

புதியது பழையது
எல்லாம் மனது
சொல்லி சிரித்தார்
அவரிடமே கேட்டேன்
இனி புதிதாக என்ன இருக்கிறது?


இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
   (மொழி வாரியாக, இனம் வாரியாக, நாடு வாரியாக புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருவது புதிதான பழையது)

Sunday 25 December 2011

பெண்ணால் பாவப்பட்டேன்

இதோ இந்த இதழை வாசிப்பீர்கள் என்கிற நம்பிக்கையில் தங்களிடம் தருகிறேன் என வீட்டு வாசற்கதவை தட்டிய முன் பின் தெரியாத இரு நபர்கள் தந்தார்கள்.

வாங்கி பார்த்தபோது எழுந்திரு என அந்த இதழின் பெயர் இருந்தது. அவர்கள் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர்கள் என புரிந்தது. இப்படி எப்போதாவது வந்து ஒரு சில தாள்களை தந்துவிட்டு போவார்கள். அதை மறுக்காமல் வாங்கி வைத்துவிடும் வழக்கம் உண்டு. சில நேரங்களில் என்ன எழுதி இருக்கிறது என மேம்போக்காக பார்ப்பது உண்டு, அவ்வளவுதான் ஆர்வம்.

சில வருடங்கள் முன்னர் என்னிடம் இது போல ஒரு காகிதம் தந்து இந்த உலகம் அமைதியாக இருக்க வாய்ப்பு இருக்கிறதா? என கேட்ட ஒருவரிடம் அதிக நேரம் பேசியது உண்டு. இறைவன் வந்துதான் இந்த உலகத்தை பாவத்தில் இருந்து காக்க வேண்டுமெனில் அந்த பாவத்தை உருவாக்கிய இறைவன் தனை நீக்கினால் எல்லாம் சரியாய் போய்விடுமே என்று சொன்னதும் அவர் என்னை ஒருமாதிரியாக பார்த்தார். வீட்டில் அன்று எனக்கு நல்ல திட்டு விழுந்தது. எவரேனும் இது போன்று வந்தால் அன்பாக உபசரிக்காவிட்டாலும் அவர்களின் மனம் நோகுமாறு பேசாமல் அனுப்பி வைப்பது நல்லது என்றே சொன்னார்கள். அன்றிலிருந்து எவரேனும் வந்தால் பேசாமல் ஒரு புன்முறுவலுடன் வாங்கி வைத்து கொள்வேன்.

பத்திரபடுத்திய அந்த இதழை படிக்க வேண்டும் என நினைத்து பல நாட்கள் கடந்து போனது. இயேசு கிறிஸ்து நினைவுக்கு வந்ததால் அந்த இதழை நேற்று எடுத்து பார்த்தேன். கார்பன் கூட்டாளி எழுதியது போன்றே அந்த இதழில் மரபணுக்கள் பற்றி எழுதி இருந்தது. எப்படி இயற்கையாக இந்த மரபணுக்கள் எழுதி இருக்க முடியும் என கேள்வி இருந்தது. விஞ்ஞானிகள் குறித்து கேலியும் இருந்தது. டி என் ஏ வில் உள்ள இன்றான் எக்சான் குறித்து நேரடியாக சொல்லாவிட்டாலும் அது குறித்து எழுதியும் இருந்தது. தமிழ் ஆக்கம் பண்ணலாம் என நினைத்தேன், எதற்கு என விட்டுவிட்டேன். அதில் ஒரு விசயம் என்னை யோசிக்க வைத்தது. இந்த உலகை ஆறு நாளில் கடவுள் படைத்தார், ஆறாயிரம் வருடங்கள் முன்னர் என்பது போன்ற வசனங்கள் இந்த இறை நூல்களின் மதிப்புதன்மையை குறைக்கின்றன என எழுதி இருந்தது. அதே வேளையில் அந்த வாசகங்கள் சரியே என வாதம் புரிந்தது. ஒரு நாள் என்பது பகலும் இரவும் கூடிய ஒரு நாள் அல்ல என்பதே பொருள் என சொன்னது. ஆறு நாள் முடிந்தது, இப்போது ஏழாம் நாள் நடந்து கொண்டிருக்கிறது என கருத்து சொன்னது. எனவே ஆறாயிரம் வருடங்கள் என்பது பல மில்லியன் வருடங்களுக்கு சமானம் என கருத வேண்டும் என சொன்னது.

உடனே எனது புத்தி வேறு விதமாக சிந்திக்க ஆரம்பித்துவிட்டது. யார் இந்த இயேசு கிறிஸ்து? என எண்ண தொடங்கிய மனது எனது பெயர் ஆபிரகாம் என வந்து நின்றது. உடனே விடுமுறையில் தானே இருக்கிறோம் இந்த கிறிஸ்துவ மதம் பற்றி சற்று தெரிந்து கொண்டால் என்ன என தொடங்கி ஆங்காங்கே தகவல்களை இணையத்தின் மூலம் வாசிக்க ஆரம்பித்தேன். ஆதாம், ஏவாள் பற்றி வாசித்தபோது கடவுள் ஆதாமை நோக்கி இந்த மரத்தை சாப்பிட்டதால் பாவி ஆகிவிட்டீர்கள் என்கிறார். அதற்கு ஆதாம் சொல்கிறான். 'இதோ எனக்கு துணையாய் இருக்க நீங்கள் என்னிடம் இருந்து உருவாக்கிய எனது மனைவி இந்த மரத்தை சாப்பிட சொன்னாள், அதனால்தான் நான் சாப்பிட்டேன்' என்கிறான். மரத்தில் இருந்த ஆப்பிள் என்பதெல்லாம் பிற்பாடு வந்த கட்டுக்கதை என்கிறார்கள் சிலர். ஆடை இல்லாமல் இருப்பது அத்தனை கேவலம் என அன்று நல்லது எது, தீயது எது என அறிவைத் தரும் மரத்தை தின்றதால் ஞானம் பிறந்து இருக்கிறது என படித்தபோது 'அட தாவரம்'. நீங்கள் என்ன உணவு சாப்பிடுகிறீர்களோ அதைப் போன்றே உங்கள் எண்ணமும் இருக்கும் என முன்னோர்கள் சொன்னது நினைவுக்கு வந்தது.

மனைவியின் பேச்சு கேட்க கூடாது என அதனால் தான் சொல்கிறார்களோ என்னவோ? ஹூம்! சரி இயேசு கிறிஸ்து உண்மையா இல்லையா என தேடினேன். இயேசு கிறிஸ்து உண்மை இல்லை, அது ஒரு கதாப்பாத்திரம் என பத்துக்கு ஆறு பேரு சொன்ன கருத்தை கேட்டு ஒரு முடிவுக்கு வர இயலவில்லை. ஆனால் கிறிஸ்துவின் பெயரால் விடுமுறை கிடைப்பது மட்டற்ற மகிழ்ச்சி. மேலும் இத்தனை வருடங்களாக பலரால் நினைவு கூறப்பட்டு வரும் கிறிஸ்து போற்றுதலுக்குரியவர் தான். சரி என எனது பெயர் ஆபிரகாம் என நினைத்தேன் அல்லவா. ஆபிரகாம் பெயரைத் தேடினேன். ஆச்சர்யம்.

இந்த ஆபிரகாம் இறைவனால் அனுப்பப்பட்டவர். இதற்கு முன்னர் நோவோ என்பவர் வாழ்ந்த போது ஏற்பட்ட பாவத்தினால் இந்த உலகை வெள்ளத்தில் அழித்து நோவோ குடும்பத்தை மட்டுமே காத்தாராம் இறைவன். அதற்கு பின்னர் மீண்டும் பாவங்கள் பெருகிய போது வெள்ளத்தினால் உலகை அழிக்கமாட்டேன் என உறுதி தந்த இறைவன் ஆபிரகாம் மூலம் ஒரு புது உலகம் உருவாக்குகிறார். இந்த ஆபிரகாம் பைபிள் மற்றும் குர்ஆனில் அதிகம் பேசப்படுகிறார். ஏறக்குறைய பல விசயங்கள் குரானிலும், பைபிளிலும் ஒன்றாகவே இருக்கிறது என ஓரிடத்தில் படித்தேன். எப்படியும் குரானையும் பைபிளையும் அடுத்த ஏப்ரலுக்குள் படித்துவிட வேண்டும் என இருக்கிறேன்.

இந்த ஆபிரகாம் கதை சுவாரஸ்யமாக இருந்தது. ஆபிரகாமுக்கு சாரா என்கிற மனைவி, சாரா என்கிற மனைவியின் மூலம் குழந்தை பாக்கியம் ஆபிரகாமுக்கு கிடைக்கவில்லை. அப்போது சாரா வீட்டில் வேலை செய்யும் ஹாஜர் எனும் பெண்ணை ஆபிரகாமுக்கு திருமணம் செய்ய முயற்சி செய்கிறார் சாரா. சம்மதம் சொல்கிறார் ஆபிரகாம். ஹாஜர் கருத்தரிக்கிறாள், அதன் மூலம் கர்வம் கொள்கிறாள். இதனால் சாராவை நிந்திக்கிறாள். கோவம் கொண்ட சாராவின் செயலால் ஹாஜர் வீட்டை விட்டு வெளியேற்ற படுகிறார். கடவுளின் உத்தரவுபடி மீண்டும் வந்து ஆபிரகாமிடம் சேர்ந்து பிள்ளை பெறுகிறார்.  குழந்தை பெரும் காலகட்டத்தை கடந்த பின்னர் சாரா கருத்தரிக்கிறார். இப்படி இவர்கள் பெற்ற குழந்தைகள் ஐசாக், இஸ்மாயில் எனப்படுகின்றனர். ஹாஜரின் குழந்தையான இஸ்மாயில் சாராவின் குழந்தை ஐசாக் தனை கேலியும் கிண்டலும் செய்ய கோபமுற்ற சாரா அவர்களை வீட்டை விட்டு வெளியேற்ற ஆபிரகாமிடம் சொல்கிறார். ஆபிரகாம் கடவுளிடம் ஆலோசனை கேட்டு அவ்வாறே செய்கிறார். ஹாஜர் தனது பையனுடன் ஆபிரகாம் தந்த ரொட்டி மற்றும் தண்ணீர் எடுத்து கொண்டு செல்கிறார் என போகிறது கதை. கடவுள் உனது பையன் ஒரு பெரிய நாடாவான் என சொல்வதாக அமைகிறது.

இந்த கதையை படித்ததும் பல சீரியல்கள் ஞாபகத்திற்கு வந்தது. எத்தனையோ வருடங்கள் முன்னர் நடந்த விசயங்கள் இன்றும் நடந்து கொண்டுதானிருக்கிறது. மேலும் மேலும் படிக்க தொடங்கினேன். அதில் ஆதாம் ஏவாளுக்கு காலையில் ஒரு பெண் ஒரு ஆண் குழந்தையும், மாலையில் ஒரு பெண் ஒரு ஆண் குழந்தையும் பிறந்ததாம். காலையில் பிறந்த ஆண் மாலையில் பிறந்த பெண்ணை மணம் முடித்ததாக அதே போல் மாலையில் பிறந்த ஆண் காலையில் பிறந்த பெண்ணை மணம் முடித்ததாக சொல்லப்பட்டு இருந்தது. இது எல்லாம் எத்தனை உண்மை என புக் ஆப் ஜெனிசிஸ் படிக்க ஆரம்பித்துவிட்டேன். இப்போது எனக்கு தரப்பட்ட இதழுக்கு திரும்புகிறேன். ஒரு நாள் என்பது எத்தனை மில்லியன் வருடம் எனில் ஒரு காலை என்பது எத்தனை வருடங்கள்? மாலை என்பது எத்தனை வருடங்கள்? புரியவில்லை.

மோசஸ் என்பவருக்கு முன்னாள் வாழ்ந்தவர்கள் 900 வருடங்கள் வாழ்ந்தார்கள் என்றெல்லாம் சொல்லப்பட்டு இருக்கிறது. அந்த 900  வருடங்கள் எந்த கணக்கு? ஏதேதோ கேள்விகள் எழுகின்றன. படித்துவிட்டு பேசலாம் என இருக்கிறேன். 


நன்றாக தெரிந்த ஒரு பெண்ணிடம் கேட்டேன். 


கடவுளை பற்றி என்ன நினைக்கிறாய்?

ஒன்றும் சொல்வதற்கு இல்லை.

பரவாயில்லை சொல், கடவுளைப் பற்றி என்ன நினைக்கிறாய்?

நான் என்ன நினைக்கிறேன் என்பது பற்றி உனக்கு என்ன அக்கறை.

சும்மா சொல், கடவுளை பற்றி என்ன நினைக்கிறாய்?

நான் உணர்வதை உன்னால் உணர இயலாது, சொல்லி என்ன பயன்.

பரவாயில்லை சொல், கடவுள்?

உன்னைப் போல நம்பிக்கை இல்லாதவர்கள் பாவப்பட்டவர்கள்.

அந்த வாக்கியத்தில் என்னை பளாரென அறைவது போலிருந்தது. ஆதாமும் ஏவாளும் இறைவனிடம் நம்பிக்கையற்று போனதால் தான் இந்த உலகம் பாவப்பட்டது என்கிறார்களே! உண்மையோ!

Monday 19 December 2011

இறுமாப்பு

சரியாக மதியம் ஒரு மணிக்கு எல்லாம் விமானம் கிளம்பிவிடும் என்பதால் காலை எட்டு மணிக்கு எல்லாம் தயார் ஆகி பயணம் தொடங்கியாகிவிட்டது. சரியாக மூன்று மணி நேரம் முன்னர் விமான நிலையம் சென்று சேர்ந்து விடலாம் எனும் எண்ணம் மனதில் ஓடியது. விமான நிலையத்திற்கு செல்ல மூன்று வழிகள் உண்டு. இரண்டு வழிகளை புறக்கணித்துவிட்டு ஒரு வழி தேர்ந்தெடுத்தாகிவிட்டது.

பாதையெல்லாம் சரியாய் இருக்க பயணம் நன்றாகத்தான் போய் கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் சென்ற சாலையில் விபத்து நடந்து இருக்கிறது என வாகனங்கள் வரிசையாக நின்று கொண்டிருந்தது. இன்னும் நேரம் இருக்கிறதே என காத்துக் கொண்டிருக்க காலம் காத்திருக்கவில்லை. பாதையில் இருந்து விலகி செல்ல வேறு வழியும் இல்லை.

எப்படியும் சென்று விடலாம் எனும் இறுமாப்புடன் காத்திருக்க காலம் கடந்து கொண்டிருந்தது. ஒரு வழியாய் பாதை சரியாக வேகமாக செல்ல வழியின்றி வழி நெடுக வாகனங்கள். அரை மணி நேரத்திற்கு முன்னர் விமான நிலையம் சென்று அடைய இனிமேல் விமானத்தில் சென்று செல்ல முடியாது என்றே விமான நிலைய அதிகாரிகள் மறுத்துவிட்டார்கள்.

எப்படி விமானத்தை எல்லாம் தவற விடுகிறார்கள் என்றே ஏளனமாக நினைத்தது உண்டு, இறுமாப்பில் விமானத்தை தவற விட்ட போதுதான் எப்படி வேண்டுமானாலும் நடக்க வாய்ப்புண்டு என புரிய முடிந்தது.

எவர் என்ன செய்துவிடுவார்கள், எவர் என்ன சொல்லி விடுவார்கள், எவர் என்ன சொன்னால் நமக்கென்ன எனும் இறுமாப்பு எப்போதும் இருப்பது உண்டு. அந்த இறுமாப்பில் பலரோடு இணக்கங்கள் பிணக்கங்கள் ஆனது கண்டு இறுமாப்புதனை தளர்த்தி கொள்ள விழைகின்றேன்.

அகங்காரம் கொண்டால் அடுத்தடுத்த பிறப்பு வருமென்றும், ஒவ்வொரு பிறப்பிலும் அந்த இறைவனை நினைத்து கொண்டே இருக்கலாம் என்றும் கவிதை வடித்தது நினைவில் வருகிறது. அகங்காரம் அழிவை தரும் என படித்து இருந்தாலும் அகங்காரம் அவ்வப்போது அலங்காரம் பூசி கொள்கிறது.

இறுமாப்பு கொள்வது இருப்புக்கு ஆகாது
இறுமாப்பு இன்னல் தராமல் போகாது
இறுமாப்பிடம் இன்பங்கள் ஒருபோதும் சேராது
இறுமாப்பு இனிமேல் எனக்கு ஆகவே ஆகாது.


பைத்தியகாரர்கள் சங்கமம்

இவர்கள் ஏனோ குழுமமாய் திரிகிறார்கள். இவர்கள் நோக்கங்கள் எவரேனும் அறிந்தது உண்டா!
இணையத்தில் எழுதுகிறார்கள். எழுதியதால் இணைகிறார்கள். வருடம் ஒருமுறையோ சிலமுறையோ கூடி கழிக்கிறார்கள், களிக்கிறார்கள். 

எழுத்து பைத்தியங்கள் இவர்கள். பைத்தியகாரத்தனத்தை பதிவு செய்தும் வைக்கிறார்கள். இவரின் பராக்கிராமங்களை  படித்துப் பார்த்தது உண்டா! கட்டிங், வெட்டிங், ஒட்டிங் என்றே கண்டதையும் சொல்லித் திரிகிறார்கள், பிரிகிறார்கள். 

அறியா சங்கங்கள் வைத்ததால் நாடு பலன் பெற்றது உண்டா! ஒருவர் மீது ஒருவர் துவேசம் கொண்டதை அறியாதோர் போல் நடந்தே செல்கிறார்கள். மன அழுத்தத்தில் முகம் தனை மறைத்தே உலவுகிறார்கள், உறைகிறார்கள். 

சின்னதாய் ஆரம்பித்தே பெரியதாய் மாறப்போகும் தன்மை கண்டது உண்டா! ஈக்கள் மொய்த்தால் பண்டங்கள் கெட்டுவிடும்.எங்கும் பைத்தியங்கள் மீண்டும் மீண்டும் சங்கமித்தால் இவ்வுலகம் கெட்டுவிடும்.  கலாச்சார சீரழிவின் கரையை தொடுகிறார்கள், ஓடுகிறார்கள். 

பாராட்டு மழையில் நனைந்ததோ சிலர். பார்த்து ரசித்ததோ பலர். தாங்கள் செல்ல முடிந்தும் இதுபோன்ற பைத்தியகாரதனத்தில் ஈடுபட மனமின்றி விலகி நின்றோரை கண்டதுண்டா! வரமுடியவில்லையே என வருத்தம் தெரிவிக்கிறார்கள், அறிவிக்கிறார்கள். 

வெளிநாட்டில் வாழ்ந்தும் உள்நாட்டில் மனம் வைத்திருப்போர். வழி தெரியாது தவித்திருப்போர். எட்டாத கனியை கண்டு ஏக்கம் கொண்டு நிற்பார்கள் பார்த்தது உண்டா! கனவுலகம் என்றே அறிந்தே காலையும், மாலையும் பாராது அலைகிறார்கள், சிலைகளாகிறார்கள்.

இன்னும் இன்னும் எப்படியோ! எவரேனும் ஏதேனும் சொல்லித் திரிவார்கள். துவண்டு போய் தொலைந்து போய்விடுவோமோ! பிறர் பார்வையில் பைத்தியங்களாகவே இருந்துவிட்டுப் போவோம். குறைந்த பட்சம் இந்த பைத்தியங்கள் மூலமாவது இந்த உலகம் சுபிட்சம் பெறட்டும். 

விதை மெதுவாய் வளரட்டும். விருட்சம் ஆகட்டும். விழி கொண்டு பார்த்தே மகிழட்டும். விடை பெறும் தருணமிது. வியக்கும் நாள் அது வருமது. கனவுகள் கலைகிறது, மனிதர்கள் கவலைகளால் கதறிக் கொண்டே இருக்கிறார்கள், மரிக்கிறார்கள். 

Sunday 18 December 2011

பின்னூட்ட புண்ணாக்கு

புண்ணாக்கு எனப்படுவது மாட்டு தீவனத்தில் ஒன்று. இந்த புண்ணாக்கு பொதுவாக எண்ணை நிறைந்த வித்துகளில் இருந்து எண்ணை நீக்கப்பட்ட பின்னர் உருவாக்கப்படுகிறது. அதாவது தமிழில் சக்கை என சொல்வார்கள். இந்த சக்கையில் என்ன சத்து இருந்து விடப்போகிறது என நினைக்காமல் அதை ஒரு தீவனமாக பயன்படுத்திய முன்னோர்களின் அறிவு!

தாவரங்கள் ஒளியின் உதவியால் உணவை உற்பத்தி செய்கின்றன. தாவரங்கள் கரியமில வாயுவை (கார்பன் டை ஆக்சைடு) உட்கிரகித்து அவற்றை நீருடன் இணைத்து ஆக்சிஜனையும், குளுக்கோசையும் உருவாக்குகிறது.  இந்த உணவு உருவாக்கும் முறையானது இரண்டு நிலைகளில் செயல்படுகிறது. ஒன்று ஒளியின் உதவியால் நடைபெறுகிறது மற்றொன்று ஒளியின் உதவியின்றி நடைபெறுகிறது. நீரினை பகுத்திட ஒளி பயன்படுகிறது. அத்துடன் ஒளியின் வேலை முடிவடைந்து விடுகிறது. அதன் பின்னர் எலக்ட்ரான்கள் உயர் ஆற்றல் நிலை அடைவது, புதிய ஆற்றல் மூலக்கூறு நடைபெறுவது என வேலை தொடர்கிறது. அதற்கு பின்னர் ஒளியற்ற நிலையில், கால்வின் சக்கரம், குளுக்கோஸ் உருவாக்கப்படுகிறது. இலையின் பசுமை நிறத்து காரணியான குளோரோபில் எனப்படும் பொருளின் மூலமே இந்த உணவு தயாரிக்கும் முறை நடைபெறுகிறது, ஏனெனில் இந்த குளோரோபில் ஒளியை உறிஞ்சும் தன்மை கொண்டது. மனிதரின் செல்களில் இந்த குளோரோபில் போன்ற ஒன்றை உருவாக்க இயலுமா என்பதுதான் எனது நீண்ட நாளைய ஆராய்ச்சி கனவு. அதாவது மரங்களே இல்லாத சூழல் ஒன்று வருகிறது என வைத்து கொள்வோம், அப்பொழுது மனிதர் போன்ற விலங்கினங்கள் தங்களுக்கு தாங்களே உணவு தயாரிக்க இயலுமா என்பதுதான் பரிணாம, மரபணு வழியில் வந்த ஒரு புது சிந்தனை. பார்க்கலாம்.

ஒளி தாயரிப்பு எப்படி ஏறடுகிறது என்பதற்கான வேதிவினை இது.

                                                       ஒளி
கார்பன் டை ஆக்சைடு + நீர் --------------------------> குளுக்கோஸ் + ஆக்சிஜன்
                                                    குளோரோபில்

இந்த குளுக்கோஸ் பலவகையில் மாற்றம் கொள்கிறது. இந்த குளுக்கோஸ் செல்களில் உள்ள செல்லுலோசாக மாற்றம் கொள்கிறது. அதாவது பாலிமர் என இதை குறிப்பிடுகிறார்கள். இந்த குளுக்கோஸ் பல குளுக்கோஸ்களுடன் ஒரு இணைப்பு சங்கிலி ஏற்படுத்தி உருவாவதுதான் செல்லுலோஸ்.

மேலும் இந்த குளுக்கோஸ் எளிதாக நீரில் கரையும் தன்மை உடையதால் எதிர்கால சேமிப்புக்கு என இவை அப்படியே இருக்க முடியாது என்பதால் இவை ஸ்டார்ச் எனும் மற்றொரு பாலிமர் போன்று தன்னை மாற்றி கொண்டு சேமிப்பாக மாறிவிடுகிறது. இந்த ஸ்டார்ச் பிறிதொரு நாளில் தாவரங்கள் உணவு தயாரிக்க முடியாது போகும் பட்சத்தில் குளுக்கோஸாக மாற்றம் உடைந்து பயன்படுகிறது. இந்த ஸ்டார்ச் கரையும் தன்மை அற்றது. இந்த ஸ்டார்ச் அமைலோஸ், அமைலோபெக்டின் எனும் இரு பொருட்களால் ஆனது. இந்த இரண்டுமே பல குளுக்கோஸ் இணைந்து உருவான சிறிது வேறுபாட்டுடன் கூடிய இரட்டை பிள்ளைகள்.

இப்படியான குளுக்கோஸ் தாவர விதைகளில் எண்ணையாக மாற்றம் கொள்கிறது. மேலும் இந்த குளுகோஸ் பழங்களில் வேறொரு இனிப்பாக சுக்ரோஸ், பிரக்டோஸ் என மாற்றம் கொண்டு அதிக இனிப்பு தன்மையை உருவாக்குகிறது. மேலும் இந்த குளுக்கோஸ் நைட்ரெட் போன்ற தாது பொருட்களுடன் இணைந்து அமினோமிலங்கள் உருவாக்கி பின்னர் புரதம் உருவாக்குகிறது. மிக முக்கியமாக ஆற்றலை தருவது இந்த குளுக்கோஸ் தான். செல்களில் நடைபெறும் சுவாச வேதி வினையின் காரணமாக இந்த குளுக்கோஸ் ஆற்றலாக மாறுகிறது.

குளுக்கோஸ் + ஆக்சிஜன் ------------------> கார்பன் டை ஆக்சைடு + நீர் + ஆற்றல் (சக்தி)

இப்படி தாவர விதைகளில் எண்ணையாக மாறிய குளுக்கோஸ் தனை விதைகளை நசுக்கி, பிழிந்து எண்ணையை பிரித்தெடுத்து விடுகிறார்கள். சில நேரங்களில் விதைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து எண்ணையை ஆவியாக்கி பின்னர் குளிரூட்டி பிரித்து விடுகிறார்கள். இப்பொழுது கிடைக்கும் சக்கையானது இந்த குளுக்கோஸ் மூலம் உருவான பல பொருட்களால் ஆனது. அதைத்தான் புண்ணாக்கு என அழைக்கிறார்கள். இது சக்கை என்றாலும் இதில் உள்ள பொருட்களை செரிக்கும் தன்மையை இந்த மாடு போன்ற விலங்கினங்கள் கொண்டுள்ளன. நம்மால் இந்த பொருட்களை செரிக்கும் திறன் கிடையாது, எனவேதான் கரும்பில் இருக்கும் திரவத்தை உறிஞ்சிவிட்டு சக்கையை துப்பி விடுகிறோம். வாழைப்பழ தோலை தூக்கி எறிவதும் இதன் காரணமே. ஆனால் ஆடு மாடு போன்ற விலங்கினங்கள் இவைகளை உண்டு செரித்து கொள்கின்றன.

புண்ணாக்கு பெயர்க்காரணம் கூறுக. தாவர விதையை காயப்படுத்தி உருவாக்கப்பட்ட பொருள் என்பதால் புண்ணாக்கு என அழைக்கப்பட்டது. புண் + ஆக்கு = புண்ணாக்கு என கொள்ளலாம்.  பிண்ணாக்கு =பிண்ணம் +ஆக்கு , அதாவது சிதைத்து பின்னர் உருவாக்கியது, விதைகளை கூழாக நசுக்கி பின்னர் கிடைப்பது எனப்பொருள், ஹி..ஹி இது ஏதோ நினைவில் இருந்து எழுதுகிறேன், சரியானு தமிழ் ஆர்வலர்கள் தான் சொல்லனும்! (நன்றி வவ்வால்) இந்த புண்ணாக்கு கடலை, தேங்காய், எள்ளு, ஆமணக்கு போன்ற எண்ணை விதைகளில் இருந்து உருவாக்கப்படுகிறது.

புண்ணாக்கு என ஒருவரை அழைப்பது அவரிடம் சரக்கு எதுவும் இல்லை என்பதை குறிக்கவே. அதாவது மிகவும் பயன்பாடான எண்ணை நீக்கப்பட்ட பின்னர் உள்ள சக்கையை போல அவர் இருக்கிறார் என சொல்லாலம், ஆனால் அது கூட ஒருவகை தவறுதான், ஏனெனில் புண்ணாக்கு கூட பயன்பாடான பொருளாகவே இருக்கிறது என்பதை அறிந்தோம். ஜீரோ எழுத்தில் எழுதப்பட இருப்பதை போல எந்த ஒரு பொருளும் ஒன்றும் இல்லாமல் இல்லை. அதாவது எதுவுமே இல்லாமல் எதுவுமே இல்லை.

மதிப்பிற்குரிய எனது நண்பர் ஒருவர் ஆளில்லாத கடையில் டீ ஆத்துவது தவறு என சொன்னார். அதாவது இந்த வலைப்பூ எழுதுவதன் மூலம் பிறர் பயன்பட வேண்டும் என்றும் கருத்து பரிமாற்றம் நிகழ வேண்டும் என்பதுதான் அவரது எண்ணம். பலர் வந்து மறுமொழியோ, பின்னூட்டங்களோ எழுத வேண்டும், அப்படி எழுதி கருத்துகளை பரிமாற வேண்டும். ஒரு எழுத்துக்கு  பின்னூட்டங்கள், மறுமொழிகள், எழுதுபவரை உற்சாகத்தில் வைத்திருக்கும், இல்லையெனில்  ஈ ஓட்டுவது, காற்று வாங்குவது என பொருள்படும் என்பது அவரது கருத்து. ஆனால் எனக்கு சொல்லி தந்த ஆசிரியரோ எவருமே செருப்பு அணியாத இடத்தில் சென்று செருப்பு விற்பவனே அதி புத்திசாலி என சொல்லிக் கொடுத்தார். ஒன்றை விரும்பாத, ஒன்றை அறியாத மக்களிடம் சென்று புதுமையை புகுத்துவது. அதன் மூலம் அவர்களை அந்த விசயத்திற்கு அடிமையாக்குவது என்பதாகும்.

நீங்கள் வலைப்பூக்களில் சென்று இடும் உங்கள் பின்னூட்டங்கள் புண்ணாக்கா? எண்ணையா?

Wednesday 14 December 2011

கன்னத்தில் முத்தமிட்டால் கறை படியும்

ஒரு தெய்வம் தந்த பூவே பாடலை கேட்டுக் கொண்டே இருக்கையில் இந்த படத்தை பார்க்கவே இல்லையே எனும் ஒரு வேண்டாத ஆசை வந்து சேர்ந்தது. இந்த படம் வந்து கிட்டத்தட்ட ஒன்பது வருடங்கள் மேல் ஆகிவிட்டது.

ஈழத்து தமிழர்கள் பற்றிய படம் என்றெல்லாம் கேள்விபட்டது மட்டுமே உண்டு. பலரும் இந்த படத்தை சிலாகித்து பேசக் கேட்டது உண்டு. விடைகொடு எங்கள் நாடே எனும் பாடல் அத்தனை துயரங்களை சொல்லி செல்லும்.

அப்படி என்னதான் படம் என பார்த்தால் ஒரு எழுத்தாளரும், ஒரு குழந்தையும் பற்றிய கதை. ஈழத்து நிகழ்வுகளை பற்றி கதை கதையாக பேசி ஈழம் வெளிநாடுகளில் மலர்ந்து விட்டது என கூவி கோடிக்கணக்கான  மக்களின் கனவுகள் சிதைந்து போன தேசமாக இப்போது இலங்கை இருந்து வருகிறது. இந்த இலங்கை அற்புத தேசம் எனவும் சுற்றுலா தளங்களில் மிகவும் சிறந்தது எனவும் சொல்லப்படுவது உண்டு.

ஒரு குழந்தையின் ஏக்கம் தனை படம் முழுக்க காட்டப்பட்டு சினிமா நடிக்க வேண்டும் என, வீட்டுக்கு பயந்து என வீட்டை ஓடிப் போகும் குழந்தைகள் போல தாயை தேடி அகதி முகாம் செல்லும் வரை என குழந்தையின் மன நிலையை இளங்கன்று பயம் அறியாது என காட்டி இருந்தது நன்றாகவே இருந்தது.

ஒரு சாதாரண மனிதருக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் விடுதலை வேட்கையை தற்கொலை மனிதராக காட்டியது திடுக்கிடத்தான் செய்தது. ஒரு கிராமத்தில் வாழும் பூசாரி அந்த இறைவன் வந்து காப்பற்ற மாட்டாரா எனும் ஏக்கம் எல்லோர் மனதிலும் நிறைந்தே இருக்கும். இப்படி காட்சிக்கு காட்சி என ஒரு திரைப்படம் கவிதையாக வடிக்கப்பட்டு இருந்தாலும் ஒரு இனம் புரியாத சோகம் மனதில் இழையோடிக் கொண்டே இருந்தது. எட்டு ஆண்டுகள் முன்னர் கள்ளத்தோணி பிடிச்சி வந்தேன் என கண்ணீர் கதையை சொன்ன நண்பரை கட்டிபிடித்து என்ன செய்யலாம் என கேட்டபோது இங்கே இருந்தே அவங்களுக்கு சாவு மணி அடிக்கலாம் என்றார். அவரை அதற்கு பின்னர் நான் காணவே இல்லை. ஈழத்தில் நடந்த விசயங்கள் சாதாரண விசயங்கள் என எவரேனும் சொன்னால் அவர்கள் கல் நெஞ்சக்காரர்கள், இடுக்கண் வருங்கால் நகுக என இளித்து கொண்டு போக கூடியவர்கள். ஆனால் வாழ்க்கை அத்துடன் நிற்கவில்லை. தினமும் எவரும் இந்த நிகழ்வுகள் நினைத்து அழுது கொண்டிருக்கவும் இல்லை. இதுதான் பூமி கண்ட கோட்பாடு. செத்தாருக்கு சொல்லி அழு. அழுதவுடன் எல்லாம் தீர்ந்தா போய்விடுகிறது! வடுக்கள் ஏற்பட வழியில்லா ரணம் ஆறிட வழி இல்லை. சொந்த மண்ணை கீறி எரிதழலில் போட்டு பொசுக்கி போன பின்னர், எதுவுமே நடக்கவில்லை என்றா இளைய தலைமுறை வரலாறு கற்று கொள்ளும்? வெறுப்பு எப்படி எல்லாம் வளர்ந்து தொலைக்கிறது!!!

இப்பொழுது ஈழம் எப்படி இருக்கும்? சிங்களவர்கள் அனைவருமே கெட்டவர்கள் அல்ல என இருந்தாலும் சிங்களவர்கள் எனும் நினைப்பே தமிழர்களுக்கு ஒருவித எரிச்சல் தந்துவிட்டு போகிறது. எனக்கு தெரிந்த சிங்கள நண்பரிடம் பேசும்போது வார்த்தை தடுமாறுகிறது. அவரோ சகஜமாகவே பேசுவார், என்ன செய்வது சில கோணங்கி புத்தி உடையவர்களால் மொத்த இனமே வேறுபாட்டினை கொள்கிறது என்பார். ஆனால் சில கோணங்கி புத்தி இல்லை, ஒரு இனமே கோணங்கி புத்தி உடையதாக அல்லவா இருக்கிறது என அவரிடம் சொல்லிவிட்டு, நீங்கள் புலம் பெயர்ந்து வந்ததால் அந்த உணர்வு இருக்க வாய்ப்பு இல்லை என நகர்ந்து விடுவேன். அதுவும் எத்தனை உயிர்கள் மாய்க்கப்பட்டன, எத்தனை சிறார்கள் சிதறடிக்கப்பட்டார்கள், இது போன்ற காணொளி எல்லாம் இணையதளத்தில் உலவியபோது அதை பார்க்கும் தைரியம் எதுவுமே இல்லை. மருத்துவ உதவி செய்யப்போன புலம் பெயர் தமிழர் சொன்ன கதையை கேட்டு, போர் நிறுத்தம் செய்ய கூறி போராட்டம் நடத்தப்பட்ட வெளிநாடுகளில் கூடிய கூட்டம் கண்டு ஈழம் மலர்ந்து விடும் என்றே கனவுகள் உண்டு. ஆனால்... ஐம்பது வருட போராட்டம் கண்டது... இப்பொழுது இலங்கை அரசு மீதான நடவடிக்கைகள் எதுவுமே நடப்பதாக தெரியவில்லை. ஈழம் பற்றிய அக்கறை இனி எவருக்கும் வரப்போவது இல்லையோ! எல்லாம் போச்சு! என்றுதான் என்னிடம் ஒரு நண்பர் பிரபாகரன் மரணம் அடைந்த செய்தி வந்ததும் சொன்னார். ஒரு நல்ல இலக்கியம் ஒன்றை தமிழுக்கு படையுங்கள் என ஒரு நண்பர் கேட்டார். கதைகளும், காவியங்களும் எவருக்கு தேவை, கண்ணீருடன் வாழ்ந்து மடியும் இனங்கள் உள்ளபோது என இருந்தாலும் வரலாற்றை திரிக்கும் முயற்சியில் பலர் ஈடுபட்டு இருப்பது வேதனைக்கு உரியது. கறைபடிந்த வரலாறாக மாறக்கூடாது.

இலங்கைக்கு சென்று வரும் எனக்கு தெரிந்த நண்பர்களிடம் எல்லாம் நாடு எப்படி இருக்கிறது என்று கேட்டு கொள்வதோடு, அங்கே செல்வதால் பயம் இல்லையா என்று கேட்டால் 'எனது தாய் மண்' என்றே பெருமிதம் கொள்கிறார்கள். கண்கள் பனிக்கின்றன.

இருபது வருடங்கள் முன்னால் எழுதிய கவிதை தொலைந்து போய்விட்டது. மயானத்தில் கூட அமைதி, அந்த அமைதியையா இந்த போர் வேண்டி நிற்கிறது என வரும் அந்த கவிதை. போர்  எல்லாம் அமைதிக்கான வழியே இல்லை, இருப்பினும் எதிரிகளின் கன்னத்தில் முத்தமிட்டால் நமது உதடுகளில் கறைபடிந்து விடுவதை துடைக்க வழிதான் தெரிவதில்லை. 

Saturday 10 December 2011

மனைவியின் மயோர்கா - 4

பாதை மிகவும் மோசம் என சொன்னாலும் பளிங்கு போல சாலை பளபளப்பாகத்தான் இருந்தது. ஆனால் சாலையின் இருபுறங்களிலும் எவ்வித பாதுகாப்பு இன்றி இருந்தது. அதன் காரணமாகவே அதை மோசமான சாலை என சொல்லி வைத்திருக்கிறார்கள் போலும் என நினைத்து கொண்டேன்.

மலைகளின் மீதான பயணம் வெகு சிறப்பாக இருந்தது. இயற்கை காட்சிகள் அதி அற்புதமாக இருந்தன. எல்லாம் கடந்து ஓரிடம் சென்றால் அங்கு கடற்கரை ஒன்று இருந்தது. அந்த கடற்கரையில் உற்சாகமாக மக்கள் நீந்தி கொண்டிருந்தார்கள். சிறிது நேரம் அங்கே இருந்துவிட்டு மீண்டும் பயணம் தொடங்கினோம்.

முதன் முதலில் பார்த்த ஹோட்டல் பக்கம் செல்லலாம் என அந்த பாதை சென்றோம். சாலைகளில் பயணித்து கொண்டே பல இடங்களை பார்த்தாகிவிட்டது. ஒரு முறை ஒரு காரினை பின் தொடர்ந்து செல்ல அந்த காரோ வழி தெரியாமல் வேறு வழி செல்ல நாங்களும் பாதை மாறினோம், ஆனால் விரைவாக சுதாரித்து அருகில் சென்ற சாலையில் மாறி நேர் வழிக்கு வந்தோம். பாதை மாறிய மற்ற காரோ பரிதவித்து நின்று கொண்டிருந்தது. இப்படித்தான் சில ஊர்களுக்கு செல்லும்போது பாதை தெரியாமல் அவதிப்பட்டது உண்டு.

அங்கிருந்து ஒரு சின்ன கிராமம் சென்றோம். அந்த கிராமம் எனது ஊரில் இருக்கும் சாலைகளை நினைவுபடுத்தியது. கட்டை வண்டிகளும், டிராக்டரும் செல்ல கூடிய பாதைகள் கொண்ட எனது ஊரில் அவ்வப்போது கார்கள் வந்து போகும். அதைப் போலவே மிகவும் குறுக்கும் நெடுக்குமாக இருந்த கிராமத்து சாலையில் பயணம் செய்தோம். முன்னே கார் வந்தால் விலக முடியாத சூழல். எவரேனும் திட்டிவிடுவர்களோ எனும் அச்சம் வேறு.

முத்துகள் செய்யும் தொழிற்சாலை ஒன்றை தேடி சென்றோம். அந்த தொழிற்சாலை சென்று அடையும் முன்னர் சாலையில் காட்டப்பட்டிருந்த விளம்பரத்தை கண்டு பாதை மாறி வேறு இடம் சென்றோம். பெரிய தலைவலியாக போய்விட்டதே என நினைத்தாலும் எந்த இடங்களும் முன்னர் பார்க்காத இடங்கள் என்பதால் பயணம் வெகு சிறப்பாகவே இருந்தது. சிறிது நேரத்தில் முத்துகள் செய்யும் தொழிற்சாலை அடைந்தோம். இந்த காலத்தில் விடுமுறை என தொழிற்சாலை பூட்டப்பட்டு இருந்தது ஏமாற்றத்தை தந்தாலும் அருகில் இருந்த பெரிய விற்பனை தளத்திற்கு சென்றோம். அங்கே விற்பனையாளர்கள் அதிகம் இருந்தார்கள். வாடிக்கையாளர்கள் மிகவும் குறைவாகவே இருந்தார்கள். இந்த மயோர்கா முத்துக்களுக்கு பிரபலம் என சொல்லிக் கொண்டார்கள்.

முத்து மாலை பல பார்த்தோம், அதில் சில பிடித்து இருந்தது. ஆனால் விலையோ மிகவும் அதிகம். வாங்குவதா வேண்டாமா என மனப் போராட்டத்தில் இருக்கும் இருப்பினை நினைத்து வேண்டாம் என வேண்டா வெறுப்பாக வெளியில் வந்தோம். 'இனி எப்போ இங்க வரப்போறோம், வாங்கலாம் எனும் மனைவியின் ஆசையை அங்கேயே நிராகரிக்க வேண்டிய சூழல் வந்தது' சில நேரங்களில் சில விசயங்கள் நமது கட்டுபாட்டுக்குள் நம்மால் கொண்டு வர இயலும், ஆனால் பெரும்பாலும் அதன்படி நாம் நடப்பதில்லை.

அங்கிருந்து ஒரு வியாபர நகர் சென்றோம். அங்கே வித விதமான பொருட்கள் விற்று கொண்டிருந்தார்கள். பல கடைகள் ஒரே இடத்தில் அமைக்கப்பட்டு இருந்தன. மாலை நேரம் நெருங்கி வர ஹோட்டல் வந்து சேர்ந்தோம். வரும் வழியில் பல்மா எனும் நகரின் அழகை ரசித்தோம். எங்கேனும் நிறுத்தலாம் என நினைத்தால் இடமே இல்லை. இந்த பல்மா நகரின் அழகை சுற்றிப் பார்க்காமல் மயோர்காவின் பல இடங்களுக்கு சென்று வந்துவிட்டோம் என தோணியது. மறு நாள் பல்மா நகர் என முடிவானது. வரும் வழியில் டேஸ்ட் ஆப் இந்தியா எனும் மற்றொரு கடையை அங்கே பார்த்தோம். அதே போல வேறொரு பிரபலமான சாப்பாடு  கடை ஒன்று இருந்தது.  நாளை வரலாம் என பயணித்தோம்.  பல்மா நகரின் சிறு சிறு சாலைகளில் கட்டிடங்களுக்கு இடையில் எல்லாம் பயணித்தோம். நாம் செல்லும் பாதை சரியா தவறா என்கிற எண்ணம் எல்லாம் இல்லை. ஆனால் சரியாகவே வழிகாட்டி வழி காட்டியது என கடைசியாக தெரிந்தது. அன்று இரவும் ஹோட்டலுக்கு அருகில் உள்ள அதே கடையில் சாப்பிடாமல் மற்றொரு இந்தியர் கடையில் சாப்பிட்டோம். சாப்பாடு அந்த அளவுக்கு சரியாக இல்லை. பேசாமல் நேற்று சென்ற கடைக்கே சென்று இருக்கலாம் என தோணியது.

இரவு மீண்டும் அதே பாடல் காட்சி. உறக்கம். காலையில் எழுந்ததும் இன்னும் ஒரு நாளில் இந்த மயோர்கா விட்டு பிரிய வேண்டுமே எனும் ஏக்கம் வந்து சேர்ந்தது. பல்மா நகருக்கு விரைந்தோம். ஓரிடத்தில் காரினை நிறுத்திவிட்டு நடையாய் நடந்தோம். கட்டிடங்கள், படகுகள் கூடிய கடல் என பல இடங்கள் பாத்தோம். வியர்த்து விறுவிறுத்து போனது. எங்கு பார்த்தாலும் கடைகள் என தேவாலயம் எல்லாம் சென்றோம். அதே தொலைவு நடந்து திரும்பினோம். மதியம் ஆனபோது அந்த பிரபலமான கடை மூடி இருந்தது. டேஸ்ட் ஆப் இந்தியாவில் சாப்பிட்டோம்.

இரவு எட்டு மணிக்கெல்லாம் காரை திருப்பி தர வேண்டும் என்பதால் வேறு எங்கும் செல்லாமல் வீடு திரும்பலாம் என நினைத்தோம். இருப்பினும் ஒரு கடற்கரை சென்று திரும்பலாம் என புதிய இடத்தை அடைந்தோம். அப்பொழுதுதான் தெரிந்தது மொத்த மயோர்காவையும் சுற்றி முடித்தாகிவிட்டது என்று. கடற்கரையில் சிறிது நேரம் விளையாடிவிட்டு காரை திருப்பி ஒப்படைத்தோம்.

பணம் எதுவும் அதிகமாக வாங்கவில்லை. எந்த பிரச்சினையும் செய்யவில்லை. ஊருக்கு கடிதம் அனுப்புவார்கள், பணம் அதிகம் எடுப்பார்கள் என இணையத்தில் படித்து இருந்ததை போல எதுவும் நடக்கவில்லை. காரை விட்டபின்னர் எங்களை பத்திரமாக ஹோட்டல் வந்து சேர்த்தார்கள். அங்கே காருக்கு பெட்ரோல் போட செல்லும் இடங்களில் வேலை பார்க்கும் பையன்கள் இருந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இங்கே எல்லாம் நாங்களகாவே பெட்ரோல் போடும் வழக்கம் உண்டு. அதிலும் ஓரிரு இடங்களில் தானியங்கிகள் தான்.

ஹோட்டல் வந்து அடைந்ததும் அதற்கடுத்து டென்ரீப் என மனைவி சொன்னார். சிறிது காலம் போகட்டும் என நினைத்து இருந்தேன். இங்கே தான் கார் ஓட்டியாகிவிட்டதே மாட்ரிட் போன்ற ஐரோப்பா இடங்கள் போகலாம் என சொன்னார். பார்க்கலாம் என அடுத்த நாள் விமானம் ஏறி ஊர் வந்தோம்.

விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டு இருந்த எனது காரில் ஏறி அமர்ந்தபோது இந்த காரை எடுத்து சென்று இருக்கலாம் என தோணியது.

முற்றும். 

Friday 2 December 2011

ஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 12

பாதை 11  இங்கே.

12 . ஆராய்ச்சியும் குழந்தையும்

'விட்டிலிகோ' எனும் தோல் வியாதிக்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி அது. விட்டிலிகோ எனும் நோயினால் தோலானது ஆங்காங்கே வெள்ளையாக மாறிவிடும். இந்த தோலின் வெள்ளைத் தன்மையினால் வெயில் மூலம் பிற பிரச்சினைகள் தோலில் ஏற்பட வாய்ப்புண்டு. 



இந்த நோய் எதனால் ஏற்படுகிறது, எப்படி இதை தீர்ப்பது என்பதுதான் நான்கு வருடங்கள் மேல் நான் செய்த ஆராய்ச்சி.

இந்த நோய்க்கு மருந்து என எனக்கு முன்னர் சீனாவைச் சேர்ந்த ஒருவர் செய்த ஆராய்ச்சியை தொடர வேண்டிய சூழல் எனக்கு. ஏனெனில் சீனாவைச் சேர்ந்தவர் தனது ஆராய்ச்சி படிப்பை முடித்துவிட்டதாலும், மேற்கொண்டு ஆராய்ச்சி தொடர விருப்பமில்லாததாலும் எனது கைக்கு இந்த ஆராய்ச்சியானது  வந்து சேர்ந்தது. 

இந்த ஆராய்ச்சியின் பொருட்டு சொல்லப்பட்ட சில விசயங்கள் எனக்கு அத்தனை பரிச்சயமில்லை என்றாலும் மனதில் ஒருவித தைரியத்துடன் நிச்சயம் கற்று கொள்ள முடியும் என்கிற தன்னம்பிக்கையில் சம்மதம் தெரிவித்தாகிவிட்டது. நான் இந்த ஆராய்ச்சியை எடுத்துக் கொண்ட நாள் 12-04-1999. 

சில மாதங்கள் முன்னர் தான் மனைவி கருவுற்றிருந்தார். அவர் தனது பிசினஸ் படிப்பில் இறுதியாண்டு படித்து கொண்டிருந்தார். வாழ்க்கையில் ஒரு நிலையை அடையும் முன்னரே குடும்பம் அமைத்தல் குறித்தான கேலி பேச்சுகள் நிறைய இருந்தன. கருவுற்ற குழந்தையை கலைத்து விடலாமா எனும் சிலரின் யோசனை இன்னமும் சில நேரங்களில் எரிச்சல் தந்து விட்டு போகும். எப்படி அவர்களால் இப்படி நினைக்க முடிந்தது என! பொதுவாகவே நமது வாழ்க்கையை பிறர் வாழ எத்தனிப்பதன் மூலம் தேவையில்லாத சங்கடங்கள் வந்து சேர்வது இயல்பு. நமக்கு அறிவுரை சொல்ல வருபவர்கள் பெரும்பாலோனோர் தங்களது வாழக்கையை திறம்பட செயல்படுத்த வழி இல்லாதவர்களாகவே இருக்க கூடும். வீட்டுக்கு வீடு வாசற்படி என்றுதான் இருக்கும். நாங்கள் கூட்டு குடும்பமாக இருந்த காரணத்தினால் எந்த பிரச்சினையும் எழவில்லை. 

கருவுற்ற நாளில் இருந்து மனைவிக்கு காலையில் வாந்தி வருவது நின்றபாடில்லை. அவர் சிரமப்படுவதைப் பார்க்க மிகவும் சிரமமாக இருந்தது. தினமும் அதிகாலை ஆராய்ச்சியின் பொருட்டு கல்லூரிக்கு செல்வதும், மாலை ஒன்பது மணிக்கு திரும்புவதும் என புதிய வாழ்க்கை ஒன்றை  சமாளிப்பது மிகவும் கடினமாகவே இருந்தது. புதிய வேலை என்பதாலும், பல விசயங்கள் கற்று கொள்ள வேண்டியது இருந்ததாலும் மிகவும் போராட்டமாகவே இருந்தது. 

இந்த சூழ்நிலையில் இன்னும் ஆறு மாதத்தில் கல்லூரி வேறொரு இடத்திற்கு மாறப் போகிறது என்று வேறு சொல்லி வைத்தது அதிக பயத்தை தந்துவிட்டு போனது. 

எனக்கு ஆராய்ச்சி என தரப்பட்ட முதல் பணி என்னவெனில் மிளகுதனில் இருந்து பைபெரின் எனும் மூலக்கூறை தனியாக பிரித்தெடுப்பதுதான். இந்த பணியை சீனா நபர் முன்னரே செய்து இருந்தாலும் எனக்கு பழக்கத்திற்கு வர வேண்டும் என்பதற்காக அந்த பணியை செய்ய சொன்னார்கள். இதுவரை இந்த பணியை செய்தது இல்லை. எல்லாம் புதிதாக இருந்தது. 

இந்த மருந்துகளுக்கு எல்லாம் முன்னோடி இயற்கையில் உருவாகும்  தாவரங்கள் தான் என்பதை அனைவரும் அறிவார்கள். இந்த தாவரங்களின் பலனை அறிந்து கொண்டவர்கள் அதனை காயவைத்து அரைத்தோ, கொதிநீரில் கொதிக்க வைத்தோ மருந்தாக பயன்படுத்தி வந்தார்கள். இந்த அடிப்படை அறிவானது எப்படி நமது முன்னோர்களுக்கு வந்தது என்பது நமது சுற்றுபுறம் பற்றிய அக்கறையினால் விளைந்தது. ஆனால் இந்த தாவரம், இந்த தாவரம் இன்ன வியாதிக்கு உதவும் என்பதை புரிந்து கொள்ளும் திறன் இல்லாத காரணத்தினால் அனைத்து தாவரங்களில் இருந்து சேர்த்து ஒரு கலப்பு மருந்தாக உபயோகப்படுத்தினார்கள். 

அப்படி இந்த விட்டிலிகோவுக்கு மருந்தாக மாட்டு சாணம் போன்றவை முன்னாளில் உபயோகத்தில் இருந்து வந்தது. இந்த பைபெரின் போன்றவை நேரடியாக உபயோகத்தில் இருந்தது என சொல்லப்படவில்லை. ஆனாலும் சில நாட்டு வைத்தியங்கள், சீன மருத்துவ முறைகளில் பைபெரின் கொண்ட தாவரங்கள் பயன்படுத்தப்பட்டு வந்து இருக்கின்றன. இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் இந்த பைபெரின் விடிளிகோவுக்கு ஒரு மருந்தாகும் எனும் ஒரு சிந்தனை எனது ஆசிரியருக்கு வந்து சேர்ந்தது. இவர் கேரளத்தை சேர்ந்த தமிழர், எனினும் இவரது வாழ்க்கை எல்லாம் கென்யா போன்ற நாடுகளில் இருந்தது. 

கருப்பு மிளகு எனப்படும் ரகத்தினை எத்தனால் எனும் திரவத்தில் கொதிக்க விட வேண்டும். இதனை பிரித்தெடுக்கும் முறை என சொல்வார்கள். இந்த விசயத்தை செய்ய அதற்கென தனி குடுவை எல்லாம் தேவைப்படும். குடுவையை சூடு பண்ணும்போது இந்த திரவம் அதி வெப்பத்தால் ஆவியாகும். அந்த ஆவியானது ஒரு குழாயின் மூலம் மேலே செல்ல அந்த குழாயானது குளிரூட்டப்பட்டு இருக்கும் காரணத்தினால் இந்த திரவம் மீண்டும் குடுவைக்கு வந்து சேரும். இவ்வாறு தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். ஒரு நாள் இதே வேலையாக நடை பெறும். 


அதற்கு பின்னர் குடுவையில் இருக்கும் திரவத்தை வடிகட்ட வேண்டும். இப்பொழுது மிளகானது பிரிக்கப்பட்டு, மிளகில் இருக்கும் மூலக்கூறுகள் எல்லாம் திரவத்தில் இருக்கும். இதே போன்று திரவங்களின் தன்மையை பொருத்து மூலக்கூறுகள் பிரிந்து வரும். 

மூலிகையில் பெட்ரோல் தயாரிக்கும் முறை, பனை மரத்தில் கள் இறக்குதல், தேங்காயில் இருந்து தேங்காய் எண்ணை எடுத்தல் போன்ற பல விசயங்கள் பல்கலைகழகத்தில் கற்று கொண்டதல்ல. அவரவரின் அறிவு சார்ந்து ஒரு விசயம் செய்யப்படுவது உண்டு. என்ன ஒரு பிரச்சினை எனில் இவை எல்லாம் சாதாரணமாக செய்யும்போது சீர்படுத்த இயலாது. 

இந்த திரவத்தை எல்லாம் நீக்கிவிட பல மூலக்கூறுகள் நிறைந்த திரவம் இருக்கும். அதற்கு பின்னர் சுத்திகரிப்பு வேலையை செய்ய வேண்டும். இந்த சுத்திகரிப்பு வேலைக்கு முன்னர் நமக்கு தேவையான மூலக்கூறினை பிரித்தெடுக்க வேண்டும். 


இது மிகவும் சிரமமான காரியம் தான். நாம் பிரித்தெடுக்கும் மூலக்கூறு சரியானதுதானா என தொடர்ந்து அந்த மூலக்கூறினை ஆராய்ச்சிக்கு உட்படுத்த வேண்டும்.  இதை முதலில் செய்ய குரோமொடக்ராபி எனப்படும் பிரித்தெடுக்கும் முறை கையாளப்படுகிறது. இதற்கு சிலிகா ஜெல் எனப்படும் பொருளானது அலுமினியம் தகட்டில் வைத்து உருவாக்கி இருப்பார்கள். இது ஒரு சோதனை முறை. இந்த முறையில் மூலக்கூறு நன்றாக பிரிந்து வந்தால் கண்ணாடியில் சிலிகா ஜெல் வைத்து அந்த மூலக்கூறினை பிரிப்பார்கள். 

அவ்வாறு இந்த பைபெரின் தனை பிரித்து எடுத்து விட்டேன். வெறும் இரண்டு வரிகளில் எழுதிய இந்த விசயம் செய்து முடிக்க இரண்டு வாரங்கள் மேல் ஆகிவிட்டது. 



இந்த மூலக்கூறுகள் அந்த அலுமினிய தகட்டில் ஒரு புள்ளியாக வைக்க வேண்டும். அவை ஒரு பீகரில் திரவம் ஒன்றில் மூழ்கிவிடாமல் வைக்க வேண்டும், இந்த திரவத்தை தேர்ந்தெடுக்கும் முறையானது அத்தனை எளிதல்ல. ஒரே திரவம் அல்லது திரவங்களின் கலவையாக இவை மூலக்கூறினைப் பொருத்து அமையும். இந்த திரவம் அலுமினியம் தகட்டின் மீது மேலே செல்ல செல்ல மூலக்கூறுகள் பிரிந்து கொண்டே செல்லும். இப்படி தெரிந்த ஒன்றை வேறு வழியாக பிரிக்க முடியும். 

இதனை குழாய் குரோமொடக்ராபி என சொல்வார்கள். இந்த குழாய் குரோமொடக்ராபியில், நாம் உருவாக்கிய ௨ மில்லி லிட்டர் அளவே உள்ள திரவம் அடங்கிய மூலக்கூறுகளை ஊற்றி, அதன் பின்னர் ஒவ்வொரு திரவமாக ஊற்ற வேண்டும். இந்த திரவங்கள் எவை எவையென மூலக்கூறு பொருத்து அமைகிறது. அவ்வாறு தனித்தனியே பிரித்தெடுக்கப்படும் போது கலவையான மூலக்கூறுகள் தனியாக பிரிந்துவிடும். தனிதனி மூலக்கூறு மட்டும் உள்ள திரவம் எல்லாம் மொத்தமாக்கினால் ஒரு குறிப்பிட்ட அளவு மூலக்கூறு கிடைக்கும். அந்த திரவத்தை ஆவியாகிய பின்னர் இந்த பைபெரின் கிடைக்கும். 

அது பைபெரின் தானா எனும் சோதனைக்கு முன்னர் பைபெரின்தனை சுத்தபடுத்த சில வழிகள் உண்டு. அது என்னவெனில் குறைவான அளவுடைய ஒரு திரவத்தில் இந்த மூலக்கூறை கொதிக்க வைத்து பின்னர் மெதுவாக குளிரவைத்தால் இந்த பைபெரின் படிமங்களாக வெளிவரும். இதனை கிரிச்டளைசெசன் என சொல்வார்கள்.

இந்த சூழலில் எனக்கு சற்றும் பழக்கமில்லாத ஒரு துறைக்குள் காலடி எடுத்து வைக்க வேண்டி ஒரு ஆசிரியரை சந்திக்க வேண்டும் என எனது ஆசிரியர் அழைத்து சென்றார். மனதில் அதிக பயம் கவ்வி கொண்டது. அவர் இந்த கல்லூரியில் மிகவும் பிரபலமானவர், அவரை அதி புத்திசாலி என்றெல்லாம் சொல்லிக் கொண்டார்கள். அவரிடமா நாம் மற்றொரு வேலை பார்க்க போகிறோம் என நினைக்கும்போது என்னுள் ஏற்பட்ட அந்த உணர்வு... இந்த வேலை செய்ய உனக்கு பிரச்சினை இல்லை அல்லவா என்று எனது ஆசிரியர் கேட்டபோது சற்றும் யோசிக்கமால் பிரச்சினை இல்லை என்று சொல்லி வேலையைத் தொடங்க சம்மதித்தேன். அவரை சென்று சந்தித்தோம். என்னைப் பார்த்து நம்பிக்கையூட்டும் விதமாக அவர் பேசியதும், எனக்கென ஒரு தனி நபரை ஆய்வகத்தில் அமர்த்தியதும் என்னுள் அதிக தைரியத்தை வரவழைத்தன. அப்பொழுதே நான் என்ன செய்ய வேண்டும் என திட்டமிட்டு ஒரு இலக்கை கொடுத்தார்கள். 

வேதியியல் ஆய்வகத்தில் காலடி எடுத்து வைத்தேன். அந்த ஆய்வகத்தில் வேலை செய்பவர்கள் தங்கி இருக்கும் அறையில் ஓரிடம் தந்தார்கள். அந்த அறையில் நான் கண்ட ஒரு வரைபடம் என்னுள் வாழ்க்கையின் மேடு பள்ளங்களை, கஷ்ட நஷ்டங்களை, வாழ்க்கையில் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும், சாகும்போதுதான் ஓய்வு என்பதெல்லாம் சொல்லி தந்தது. அந்த வரைபடம் குறித்து இதே வலைப்பூவில் எழுதியதாக நினைவு. இருவர் காரில் செல்வார்கள். ஒரு மேடு வரும், அதை தாண்டியதும் 'அப்பாடா' என்பார் ஒருவர் அதற்குள் இன்னொரு மேடு தொலைவில் தென்படும். இதுதான் வாழ்க்கை. ஒரு பிரச்சனை தீர்ந்துவிட்டது என எந்த மனிதருமே நிம்மதியாக அமர முடிவதில்லை. ஏதேனும் ஒன்று முளைத்து கொண்டே இருக்க வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யமான ஒன்றாக இருக்கிறது. 

அந்த வேதியியல் ஆய்வகத்தில் வேலை பார்த்தவர்கள் ஒன்றும் தெரியாத எனக்கு மிகவும் அக்கறையுடனே கற்று தந்தார்கள். முதலில் ஒரு வேதிவினையை உருவாக்கினேன். அந்த வேதிவினையானாது பெங்களூரில் இருக்கும் ஒரு ஆய்வகத்தில் முன்னரே செய்யப்பட்ட ஒன்று. பலமுறை செய்து பார்க்கிறேன், எதுவுமே பலன் கிடைக்கவில்லை. அவர்கள் சொன்ன மூலக்கூறு எனக்கு வரவே இல்லை, மாறாக வேறு மூலக்கூறு வந்து சேர்ந்தது. இதனை உறுதிபடுத்த அந்த ஆய்வகத்தில் இருந்த ஒருவர் தானே அந்த வேதிவினை செய்து பார்த்தார், நான் கண்டுபிடித்த மூலக்கூறுதான் வந்தது. உடனே பெங்களூருக்கு எழுதினோம், பதிலே வரவில்லை! அந்த மூலக்கூறு இதுவரை எவருமே கண்டுபிடிக்காத மூலக்கூறு என்பதால் புதிதாக பெயர் சூட்டும் பொறுப்பு என்னிடம் தரப்பட்டது. எனது மனைவியின் பெயரை மனதில் கொண்டு பார்வரின் என வைத்தேன். 

இந்த நேரத்தில் ஆய்வக இட மாற்றம் நடை பெற ஆரம்பித்தது. அப்படியே வேலைகள் சம்பித்தன. எல்லா பொருள்களை எடுத்து வைக்கவும், இடம் மாற்றவும் செய்யவுமே நேரம் சரியாக இருந்தது. மனைவியை அழைத்து கொண்டு மருத்துவமனை செல்லவும், கர்ப்பிணிகளுக்கான வகுப்பு செல்லவும் நேரம் போய்க்கொண்டிருந்தது. அந்த தருணத்தில் எனது மனைவி தனக்கு பெண் குழந்தைதான் பிறக்கும் என சொல்ல, நானோ இல்லை இல்லை உனக்கு ஆண் குழந்தைதான் பிறக்கும் என சொல்ல எங்களுக்குள் ஒரு சின்ன போட்டிம யார் சொல்வது பலிக்கும் என!. இதை வைத்துதான் உலகில் ஒரு தத்துவம் எனக்கு புரிந்தது. எல்லா விசயங்களிலும் ஒன்று அதுவாக இருக்க கூடும், அல்லது இதுவாக இருக்ககூடும். இரண்டும் இல்லா நிலை விதிவிலக்கே.  பொதுவாக மருத்துவமனைகளில் என்ன குழந்தை என சொல்லமாட்டார்கள், அதுவும் குறிப்பாக ஆசிய மக்களிடம். இதற்கு முக்கிய காரணம் ஆசிய மக்கள் பெண் குழந்தைகளை வேண்டாம் என ஒதுக்கிவிடுவார்கள் எனும் ஒரு பொல்லாத குற்றச்சாட்டு நிலவுவதுதான். என்ன குழந்தை என எங்களுக்கு சொல்லவில்லை, நாங்களும் கேட்டு தெரிந்து கொள்ளவில்லை. தினமும் வாந்தி வருவது நின்றபாடில்லை. பொதுவாக சில மாதங்களில் நின்று போகும் இந்த வாந்தி நிற்கவே இல்லை.

ஆய்வகம் மாறி வந்தாகிவிட்டது. வேறொரு மூலக்கூறு உருவாக்க சொல்லி இருந்தார்கள். அந்த வேளையில் வகுப்புகளுக்கு செய்முறை பயிற்சி சொல்லிக்கொடுக்க சொன்னார்கள். இப்படியாக இருக்க மூலக்கூறு உருவாக ஒரு மாதம் ஆகிவிட்டது. இந்த வேதி வினை இலகுவானதாக இருந்தாலும் கடைசியில் வந்த மூலக்கூறு சரியில்லாமலே இருந்தது. மனைவிக்கு பிரசவ வலி இன்று வருமோ, அன்று வருமோ எனும் பயம் வேறு. கல்லூரி படிப்பை முடித்துவிட்டிருந்தார். நவம்பர் நான்கு என தேதி கொடுத்து இருந்தார்கள். நவம்பர் நான்கு தாண்டியது. பத்து வந்தது. வலி எதுவுமே இல்லை. 

மருத்துவமனைக்கு சென்று பார்த்தோம். அடுத்த நாள் வர சொன்னார்கள், எதுவும் நடக்கவில்லை. பன்னிரண்டாம் தேதி வந்தது. நாள் ஆகிவிட்டதால் இனி இது பெண் குழந்தைதான் என மனைவி சந்தோசப்பட்டு கொண்டார். பெண் குழந்தை என்றால் அத்தனை பிரியம் எனது மனைவிக்கு. எந்த குழந்தை எனினும் பரவாயில்லை, பிரசவம் ஆக வேண்டுமே என பயம் மனதில் ஒட்டிக் கொண்டது. ஆனாலும் இந்த செய்முறை பயிற்சி பாடம் இருந்ததால் கல்லூரி செல்வதை தவிர்க்க இயலவில்லை. 

இறுதியாக வலியை உருவாக்க வேண்டும் என எபிடூறல் ஊசி போட்டார்கள். மனைவியுடனே இருந்தேன். அவர் பட்ட சிரமத்தை பார்த்தபோது இனிமேல் குழந்தை வேண்டாம் என்று அன்றுதான் முடிவு செய்தேன். எனது தாய் அப்படி நினைத்து இருந்தால் நான் பிறந்து இருக்கவே மாட்டேன். நான் வீட்டில் பதிமூன்றாவது குழந்தை. அப்பொழுதெல்லாம் குடும்ப கட்டுப்பாடு, பொருளாதார கட்டுப்பாடு எல்லாம் இல்லை. எனது மனைவிக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்கிற கவனமும், அவரது கதறலில் நான் மிகவும் உடைந்து போயிருந்தேன். அன்று இரவு குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்தபோது அருகில்தான் இருந்தேன். போர்செப்ஸ் மூலம் குழந்தையை வெளி எடுத்தார்கள். என்ன குழந்தை என்றெல்லாம் பார்க்க தோணவில்லை. மனைவியின் தலையின் மீது எனது கரம் இருந்து கொண்டே இருந்தது. கண்களில் கண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருந்தது. எத்தனை சிரமம்! எத்தனை துயரம்! குழந்தை பெற்று கொள்வது பெண்ணுக்கு மறு பிழைப்பு என சும்மாவா சொல்லி வைத்தார்கள். எனக்கு மறு பிழைப்பு போல் தான் இருந்தது. ஆண் குழந்தை என காட்டினார்கள். சந்தோசம் ஒருபுறம் இருந்தாலும் மனைவியின் வேதனை மனதை வெகுவாக பாதித்து இருந்தது. நான் மருத்துவமனையில் தங்க முடியாது என சொல்ல, அன்றுதான் முதன் முதலில் மனைவியை விட்டு பிரிந்து தூங்கினேன். அதற்கடுத்த தினமே ஆய்வகம் செல்ல வேண்டியதாகிப் போனது. 

பல நாட்களாக உருவாக்க முடியாத மூலக்கூறினை உருவாக்கினேன். நான் தந்தை ஆனது ஆய்வகத்தில் அனைவருக்கும் தெரிந்தது. எனது ஆசிரியர்கள் எனது குழந்தைக்கும், மூலக்கூறுக்கும் சேர்த்து வாழ்த்து சொன்னார்கள். இனி வேதிவினை எளிதுதான் எனும் நம்பிக்கை பிறந்தது. 

ஒரு மூலக்கூறு எப்படி அதுதான் என தீர்மானிக்கப்படுகிறது என்பதற்கான நான் கற்று கொண்ட ஆய்வு மிகவும் வித்தியாசமாக இருந்தது. படங்கள்: நன்றி கூகிள் 

(தொடரும்)