Monday 14 September 2009

கருத்துகளும் அதன் சுதந்திரமும்

வலைப்பூக்களில் எழுதுவோர் அனைவருக்கும் கருத்துக்களை வெளியிட சுதந்திரம் உண்டு, அதே வேளையில் கருத்துக்களை எவ்வாறு வெளியிட வேண்டும் என்கிற ஒரு வரைமுறையும் இருக்கிறது? என்பதை அனைவரும் அறிவோம்.

கருத்துக்களைப் பொருத்தவரை கருத்துக்களை வெளியிடுபவரின் மனநிலை, கருத்துக்களைப் படிப்பவரின் மனநிலை என இரண்டு விதமாகப் பிரித்துக் கொள்ளலாம். கருத்துக்களை வெளியிடுபவர் எந்த சூழ்நிலையிலும் சரி, எல்லாச் சூழ்நிலையிலும் சரி தனது கருத்துக்களுக்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்பதை எவரும் மறுக்க இயலாது.

கருத்துக்களை எடுத்துக்கொள்வது என்பது படிப்பவரின் மனநிலையைப் பொருத்தே அமைகிறது, அதாவது அந்த நேரத்தில் என்ன மனநிலையில் இருக்கிறார் என்பதைப் பொருத்தும் அமைகிறது. படிப்பவர் ஒவ்வொருவரின் மனநிலைக்கு ஏற்ப கருத்துக்கள் எழுதுவது என்பது எளிதான காரியமில்லைதான் ஆனால் கருத்துக்களை திறம்பட எழுதும் விதம் உண்டு.

மேலும் ஒருவரால் வெளியிடப்படும் கருத்துக்களினால் ஏற்படும் மனஸ்தாபங்கள், அதனால் வரக்கூடிய மன உளைச்சல்கள் என கருத்தினை வெளியிடுபவரும், கருத்தினால் பாதிக்கப்படுபவரும் அடைகிறார் என்பதில் இரு கருத்து இல்லை. இதன் விளைவாக அவ்வப்போது தலைகாட்டும் பிரச்சினைகள் பெரிய விவாதங்களை ஏற்படுத்தி வருவது ஒருவரது எழுத்தின் நோக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் அமைந்துவிடுகிறது.

'குழப்பமில்லாது இருப்பின் தெளிவுக்கானத் தேடல் அவசியமில்லை' என்பதை அனைவரும் அறிவோம். பல விசயங்கள் குழப்பம் தரக்கூடியதாக இருக்கும் காரணத்தினாலேயே தெளிவுக்காக விசயங்கள் விவாதிக்கப்படுகின்றன. ஒரு மாறுபட்ட எண்ணம் மற்றவர் மனதில் எழுவதற்கு நமது கருத்துக்களும் காரணம் என்பதும் உண்மையே.

பொதுவாக எவரையும் புண்படுத்த வேண்டும் எனும் நோக்கத்தில் எவரும் பதிவுகளை இடுவதில்லை. கருத்துச் சுதந்திரத்தை நாம் எவ்வாறு பயன்படுத்திக் கொள்கிறோம் என்பதை பரிசீலனை செய்வோம். 'நமக்குச் சரியெனத் தெரிவது பிறருக்குத் தவறாக இருக்கலாம்' நமக்குத் தவறெனத் தெரிவது பிறருக்குச் சரியாக இருக்கலாம்' எனும் உண்மையை உணர்ந்து கொண்டு விவாதத்தைத் தவிர்த்துவிட்டு கலந்துரையாடினால் அனைவரும் மகிழ்வுடன் இருப்பார்கள், நல்ல நல்ல விசயங்கள் கற்று மகிழலாம்.

எழுத்தின் நோக்கம் வெல்லட்டும், பல சிறந்த எழுத்தாளர்கள் உருவாகட்டும்!

9 comments:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

எழுத்தின் நோக்கம் வெல்லட்டும், பல சிறந்த எழுத்தாளர்கள் உருவாகட்டும்!


அருமையான கருத்துகள்

............... வாழ்த்துக்கள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமை

மாடல மறையோன் said...

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகத்தான் எழுதுவார்கள். அவர்களுக்கு ஒரு வரைமுறையென்றால் கிடையாது தனிப்பதிவர்களின் வலைபூக்களில்.

வலைபூக்கள் பல்வேறு விடயங்களை,பல்வேறு வழிகளில், பல்வேறு நோக்கங்களுக்காக எழுதப்ப்டுகின்றன.

ஏன் அவைகளுக்கு வரைமுறைகள்? தனிப்பட்டவர்க்ளின் வலைபுக்களைப் படிக்க யாரும் நிர்ப்பந்தப்படுத்தப்படுத்தவில்லை.
என்ன பிரச்னை பின்?

சில வலைபூக்கள், பிறரை அல்லது பிறர்கொள்கைகள கடும் விமர்சனத்துக்குள்ளாக்கவே எழுதப்படுகின்றன. அவற்றின் நோக்கமும் அதுவே. அவை தவறெனவும், கூடாதெனவும் என்றால், இது என்ன கொடுங்கோலர் ஆட்சியா?

தனி நபரின் தனிப்பட்ட வாழ்க்கையை ”காரணமின்றி” வதைக்கவேண்டும் என்று எழுதும் வலைபதிவுகள் மட்டுமே தடுக்கப்பட முடியும். அதுவும் கூட சிக்கல்தான். You can kill another man for defending your life, cant you?

பொத்தாம்பொதுவாக, தவறென குற்றம் சொல்லமுடியாது.

அது எந்த நபர், என்ன வாழ்க்கை, அதை எப்படிச்சொல்லும்போது தவறு,- என பல கேள்விகள் எழும். எல்லாவற்றுக்கும் சரியான பதில் தேடி, பின்னரே தவறு எனச்சொல்ல முடியும்.

சுருக்கமாக:

தனிநபர் வலைபூக்களை அவர் என்ன எப்படி எழுதவேண்டும் என யாரும் சொல்லவேண்டியதவசியமில்லை. விரும்பினால் படியுங்கள். இல்லயென்றால், அவரவர் வேலையைப் அவரவர் பார்த்துக்கொண்டுபோனால் நல்லது.

Radhakrishnan said...

மிக்க நன்றி உலவு.காம், ஐயா மற்றும் ஜோ அவர்களே.

ஜோ அவர்களே, நீங்கள் எழுதியிருப்பதைப் படித்து விசயங்கள் அறிந்து கொண்டேன். மிக்க நன்றி. நீங்கள் உங்கள் கருத்தினைச் சொல்லி முடிக்கும் போது நீங்கள் சொல்ல வந்தக் கருத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டுவிட்டீர்கள். அதுதான் எழுத்து தரும் ஒரு உத்வேகம். எழுத்தின் உத்வேகத்தைக் கட்டுப்படுத்தும் கலை மிகவும் கடினமான ஒன்றுதான்.

//தனிநபர் வலைபூக்களை அவர் என்ன எப்படி எழுதவேண்டும் என யாரும் சொல்லவேண்டியதவசியமில்லை//

இப்படி எழுதியதன் மூலம் தனிநபர் வலைப்பூவில் எழுதும் வரைமுறையை தங்களுக்குத் தெரியாமலேத் திணித்து விட்டீர்கள் என்பதைக் கவனித்தீர்களா?

எழுத்துக்கு என்று ஒரு வரைமுறை உண்டு. இலக்கணப் பிழைகள், எழுத்துப் பிழைகள், சொற்பிழைகள் என பலவற்றையும் பார்த்தே ஒரு எழுத்து எழுதப்பட வேண்டும்.

மேலும் சொல்லப்படும் கருத்தில் உண்மை இருந்தால் மிகவும் நல்லது. கற்பனைக் கதைகளில் உண்மை தேடுவது அவசியமற்றது, ஆனால் எழுதப்படும் உண்மை விசயங்களில் உண்மை மறைக்கப்படுவது தவறேதான்.

கொடுங்கோலர் ஆட்சி இருந்தால் மட்டுமே சுதந்திரத்தின் அர்த்தம் புரியும். சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக அந்த சுதந்திரத்தின் அர்த்தத்தையே மாற்றியமைப்பது எவ்வகையில் நியாயம்? மோசமான முறையில் தான் எழுதுவேன் என்பது கூட ஒருவகையில் கோடுங்கோல் செயல் தான்.

நீங்கள் சொல்வது போல யாரும் எதையும் படிக்க நிர்பந்தப்படுத்தப்பட வில்லை, ஆனால் படிக்க நேரும்போது எழும் விமர்சனங்களை எழுத்தில் வைக்க எவருக்கும் உரிமையுண்டு. அதையேன் படிக்கிறீர்கள், அதுகுறித்து ஏன் எழுதுகிறீர்கள் எனக் கேட்பது சரியாகப்படாது.

//சில வலைபூக்கள், பிறரை அல்லது பிறர்கொள்கைகள கடும் விமர்சனத்துக்குள்ளாக்கவே எழுதப்படுகின்றன. //

இதுதான் அவர்களது எழுத்தின் நோக்கம் எனில் இது தவறு என அவர்களிடம் நான் வாதாடப்போவது இல்லை, எழுதும் முறையில் கண்ணியம் காக்கப்படுமெனில் தமிழ் பெருமைப்பட்டுக் கொள்ளும்.

நல்லதொரு சமுதாயத்தை எழுத்து மூலம் உருவாக்கமுடியும் எனும் நம்பிக்கை கொள்ளும்போது, இதெல்லாம் வேண்டாத வேலை எனும் கருத்தும் நிலவுகிறது. அதுவும் சரிதான்!

Thekkikattan|தெகா said...

திரு. வெ. இரா அவர்களே நலமா?

முதலில் வாழ்த்துக்கள்! புதிய "template" எளிமையாகவும், எந்த ஆர்பாட்டமும் இல்லாமல் இருக்கிறது.

பதிவு பொருத்த கருத்தாக எனக்கு தோன்றச் செய்வது, ஆரோக்கியமான, சிந்திப்பிற்கென வழிவகுக்கும் பதிவுகள் எல்லோரின் மனதையும் தொட வேண்டும் என்றோ அல்லது எல்லா சூழ்நிலையிலும் எல்லாருக்கும் இனிக்கும் விதமாக அமைக்கப் பட வேண்டுமென்றோ அமரும் பொழுது, அங்கே எழுத்தில் பசப்பு மோலோங்கியும், உண்மைகள் சற்றே மறைக்கப் பட்டும் அமைந்துவிடுவதாக இருப்பது இயல்புதானே.

இருப்பினும் நீங்கள் குறிப்பாக எதனை அவதானித்து இப்படியான ஒரு பதிவை இங்கு கொணர்ந்திருக்கிறீர்கள் என்று தெரியவில்லை. இதுவும் தனி மனித சிந்தனையின் பொருட்டு எழுந்தது, முன் வைப்பதும் அவசியமாகவேப் படுகிறது. :)

Radhakrishnan said...

மிகவும் நலம் தெகா அவர்களே. தாங்களும் நலமுடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன். தங்களின் வாழ்த்துகளுக்கும், அழகிய கருத்துக்கும் நன்றி.

//எழுத்தில் பசப்பு மேலோங்கியும், உண்மைகள் சற்றே மறைக்கப் பட்டும் அமைந்துவிடுவதாக இருப்பது இயல்புதானே//

ஆமாம், மிகவும் சரியே.

//இருப்பினும் நீங்கள் குறிப்பாக எதனை அவதானித்து இப்படியான ஒரு பதிவை இங்கு கொணர்ந்திருக்கிறீர்கள் என்று தெரியவில்லை.//

நான் இணைந்திருக்கும் முத்தமிழ்மன்ற குழுமத்தில் கருத்துகள் பற்றியும், கருத்து சுதந்திரம் பற்றியும் எழுத வேண்டிய சூழ்நிலை வந்தது. அது இந்த வலைப்பூக்களுக்கும் பொருந்தும் என பல வலைப்பூக்களைப் படித்துப் பார்த்ததின் காரணமாகவும், திறமைமிக்க எழுத்தாளர்களின் திறன் பல வேளைகளில் பயனற்ற விசயங்களில் பரிணாமிப்பது கண்டும் ஏற்பட்ட எண்ணத்தின் காரணமாக திருத்தம் செய்து இங்கே பொருந்தும்படி இணைத்துவிட்டேன்.

நிகழ்காலத்தில்... said...

//'நமக்குச் சரியெனத் தெரிவது பிறருக்குத் தவறாக இருக்கலாம்' நமக்குத் தவறெனத் தெரிவது பிறருக்குச் சரியாக இருக்கலாம்' எனும் உண்மையை உணர்ந்து கொண்டு விவாதத்தைத் தவிர்த்துவிட்டு கலந்துரையாடினால் அனைவரும் மகிழ்வுடன் இருப்பார்கள், //

நட்பை பேணுவோம், கருத்து விவாதம், மோதல் இருக்கலாம், தவறில்லை, ஆனால் நட்பு வேறு, விவாதம் வேறாக பார்க்கவேண்டும்.

//சுருக்கமாக:
தனிநபர் வலைபூக்களை அவர் என்ன எப்படி எழுதவேண்டும் என யாரும் சொல்லவேண்டியதவசியமில்லை. விரும்பினால் படியுங்கள். இல்லயென்றால், அவரவர் வேலையைப் அவரவர் பார்த்துக்கொண்டுபோனால் நல்லது.//

இதற்கு பின்னூட்ட வசதியினை எடுத்துவிட்டால் மற்றவர்கள் படிப்பதோடு வேறு வழியில்லாமல் நிறுத்தி விடுவார்கள்

கிரி said...

//பொதுவாக எவரையும் புண்படுத்த வேண்டும் எனும் நோக்கத்தில் எவரும் பதிவுகளை இடுவதில்லை. //

சார் ஒரு சிலர் இதே வேலையா இருக்காங்க ..ஆனா நீங்க சொல்வது போல பெரும்பான்மையானவர்கள் அப்படி செய்வதில்லை

// 'நமக்குச் சரியெனத் தெரிவது பிறருக்குத் தவறாக இருக்கலாம்' நமக்குத் தவறெனத் தெரிவது பிறருக்குச் சரியாக இருக்கலாம்'//

இது தான் சார் பிரச்சனை... பலர் இதை புரிந்து கொண்டதை போலவே தெரியலை

நல்ல பதிவு சார்

//படிக்க நேரும்போது எழும் விமர்சனங்களை எழுத்தில் வைக்க எவருக்கும் உரிமையுண்டு. அதையேன் படிக்கிறீர்கள், அதுகுறித்து ஏன் எழுதுகிறீர்கள் எனக் கேட்பது சரியாகப்படாது. //

வழிமொழிகிறேன்..அப்ப இவங்க தனியா எழுதிக்க வேண்டியது தான்..திரட்டி எல்லாம் இணைத்தால் விமர்சனங்களை எதிர் கொண்டு தான் ஆகணும்.. பொது என்று வந்து விட்டாலே உடன் விமர்சனமும் வருவது தவிர்க்க முடியாத ஒன்று

Radhakrishnan said...

அருமையான கருத்துகளை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சிவா மற்றும் கிரி அவர்களே.

ஆ...! இந்த பதிவினை தமிழ்10 தளத்தில் இணைத்தேனே?! ஓட்டளிப்பு பட்டையில் சின்ன பிரச்சினையை நானே உண்டு பண்ணிவிட்டதால் ஓட்டளிப்புப் பட்டையை நீக்க வேண்டியதாகிப் போய்விட்டது. ஒரு பதிவுக்கு ஓட்டளித்தால் எல்லா பதிவுக்கும் ஓட்டு விழும்படி ஒருமுறை தவறுதலாக இணைத்துவிட்டேன்.