Wednesday 2 September 2009

சனிப்பெயர்ச்சி பலன்கள் படிச்சா பயம் வருமா?

என்ன சொல்வது? எவ்வளவு தூரம் விஞ்ஞானம், தொழில்நுட்பம் என முன்னேறினாலும், நாடுவிட்டு நாடு போனாலும் இந்த தின பலன்கள், வார பலன்கள், மாத பலன்கள் ஆண்டு பலன்கள் படிப்பதில் இருக்கும் சுகமே அலாதிதான். அதுவும் குருப்பெயர்ச்சி பலன்கள், சனிப் பெயர்ச்சி பலன்கள் பற்றி சொல்லவே தேவையில்லை. அவற்றின் முக்கியத்துவம் குறித்து தனிப் புத்தகங்கள் இருக்கக் கூடும்.

இதில் நம்பிக்கை இருக்கிறதா இல்லையா என்பதை விட அப்படி என்னதான் எழுதி இருக்கிறார்கள் எனப் படிப்பதில் கொஞ்சம் ஆர்வம் அதிகமே உண்டு. நமது ராசியைப் போலவே உலகில் எத்தனையோ பேர்கள் இருக்க, அத்தனை பேரும் ஒரே மாதிரி வாழ்க்கை வாழாமல் இருப்பது தெரிந்தும் வாசிப்பது என்பதை மட்டும் விடத் தோணுவதில்லை. அதுவும் எழுதியதை வாசித்துவிட்டு அதற்கடுத்து என்ன நடக்கிறது என்பதைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் வாழ்ந்து கொண்டே இருப்பதுதான் வழக்கமாக இருக்கிறது.

விளையாட்டுச் செய்திகள் படித்துவிட்டு கண்கள் நோக்குவது என்னவோ இன்றைய பலன்கள் செய்தியைத்தான். செய்தியில் உண்மையில்லாமலும் இருக்கக் கூடும். மேலும் ஒரு நண்பர் சொன்னது என்னவெனில் எந்த ராசி எனத் தெரியாமலே ஒரு ராசியை எடுத்துக்கொண்டு இதுதான் நம் ராசி எனப் படித்தாலும் கூட சரியாகவே இருக்குமாம். ஆனால் ராசி தெரிந்த காரணத்தினால் பிற ராசிகளைப் படிக்கும்போது அப்படி எனக்குத் தோன்றவில்லை. மனைவியின் ராசிக்குத் தவிர பிற ராசிகளில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதில் படிப்பதில் ஒரு பிடிப்பும் இருப்பதில்லை, இருப்பினும் எழுதியவரின் மனநிலை என்ன என அறிந்து கொள்ள அனைத்து ராசிகளையும் ஒரு கண்ணோட்டம் விடுவதுண்டு.

இப்படி சனிப்பெயர்ச்சி பலன்கள் படித்தபோது பல ராசிகளுக்கு ஒட்டுமொத்தமாக சரியில்லை எனும் வகையில் எழுதப்பட்டிருப்பதைப் படிக்க நேர்ந்தது. அடடா, எழுதுபவர்கள் நம்பிக்கையை வளர்க்கும் வண்ணம் எல்லாமே நன்றாக நடக்கும் என எழுதியிருந்தால் படிப்பவர்களுக்கு ஒருவித மன சந்தோசம் ஏற்படுமே என்றுதான் தோணியது. வேறு எவரேனும் என்ன எழுதியிருக்கிறார்கள் என்றுப் பார்த்தால் ஆம் ஒருவர் எழுதி இருந்தார், சனி சங்கடம் தருவார் என பயப்பட வேண்டாம் எனும் தொனியில் அனைத்து ராசிகளுக்கும் அமைந்து இருந்தது. எப்படியிருப்பினும் படிக்கும்போது இருக்கும் சுவாரஸ்யம் அதிகமே.

'மடியில் கனமிருந்தால் வழியில் பயம்' என சொல்வார்கள், அதுபோல நாம் முறையான வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் இடப்பெயர்ச்சியாளர்களால் எதுவும் நேராதுதான், ஆனால் முறையான வாழ்க்கையையா நாம் தேர்ந்தெடுத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என கணப் பொழுது யோசித்தால் இந்த இடப்பெயர்ச்சியாளர்கள் இடம்பெயராமலே இன்னலுக்கு நம்மை ஆட்படுத்திக்கொண்டிருக்கிறோம் என்பது தெரியும் தான். இப்போ சொல்லுங்க, சனிப்பெயர்ச்சி பலன் படிச்சாத்தான் பயம் வருமா?

ஆவலுடன் ராசிகளைப் படிக்க நினைத்து இருப்பீர்கள், அதனால் நான் விரும்பிப்படிக்கும் மாத ராசி பலன்களின் இணைப்பு இதோ. இவர் எழுதுவது எனக்கு மிகவும் பிடிக்கும், மாதம் ஒரு முறை மறக்காமல் படித்துவிடுவது உண்டு. நீங்களும் படித்துப் பாருங்களேன்.

8 comments:

அமர பாரதி said...

//நான் விரும்பிப்படிக்கும் மாத ராசி பலன்களின் இணைப்பு இதோ. இவர் // அவர் எழுதுவது எனக்கும் பிடிக்கும். மூன்று வருடங்களுக்கு முன்பு வரை வருட பலன்கள் புத்தகம் வெளியிட்டுக் கொண்டிருந்தார். ஆனால் கடந்த மூன்று வருடமாக மாத பலன் மட்டுமே.

Radhakrishnan said...

ஓ, மேலதிக தகவலுக்கு மிக்க நன்றி அமரபாரதி அவர்களே.

அவருடைய எழுத்துகளில் ஒருவித உண்மை ஒளிந்து கொண்டிருக்கும். அதைக் கண்டுபிடித்துக் கொண்டால் போதும், மிகவும் ரசிக்கலாம்.

கிருஷ்ண மூர்த்தி S said...

தினத் தந்தி நிறுவனர் சி.பா. ஆதித்தனார் கூடத் தன் பத்திரிகையில், ராசிபலன் எழுதும்போது நல்ல பலனாகத் தான் அதிகம் எழுதவேண்டும் என்று சொல்வாராம்! நீண்ட நாட்களுக்கு முன் அவர் எழுதி வெளியிட்ட எழுத்தாளர் கையேடு, அந்த நாட்களில் பலருக்கும் ஒரு வழிகாட்டி!

அதே மாதிரி, தன் பத்திரிகையைப் படிப்பவர்கள் பெரும்பாலும் அதிகப் படிப்பறிவு இல்லாதவர்கள் என்ற பிரக்ஞை அவருக்கு இருந்தது. ஒரு கொலைச் செய்தியை எழுதும் போது கூட, சதக் சதக் சதக் என்று கத்தியால் குத்தினார்..சம்பவ இடத்திலேயே துடிதுடித்துச் செத்தார் என்ற ரீதியில், விவரணை இன்றைய இன்வெஸ்டிகேடிவ் ஜார்னலிசத்துக்கு[?!] முன்னோடி.

இதை ஏன் இங்கே சொல்கிறேன் என்கிறீர்களா?

ஜோசியமும் அப்படித்தான்! கொஞ்சம் நல்லவிதமாகச் சொல்லி ஆறுதலும் சொல்வார்கள். சதக் சதக் என்று அது பெயர்ந்து இது வரும், இது பெயர்ந்து அது வரும் என்ற ரீதியிலும், திகில் படமும் காட்டுவார்கள்.

என்ன மாதிரி இருந்தாலும் ரீல் ரீல் தான்!

Saranya said...

hi!
just now my father bought the book and came
my sister commenting what is thr in it like that...
may be a precaution...to know how it may be ...
yes radhakrishnan sir that the writers will give the words which insist confidence may be good to the readers atleast....

கிரி said...

//இதில் நம்பிக்கை இருக்கிறதா இல்லையா என்பதை விட அப்படி என்னதான் எழுதி இருக்கிறார்கள் எனப் படிப்பதில் கொஞ்சம் அக்கறை அதிகமே உண்டு//

உண்மை தான்..அக்கறை என்பதை விட ஆர்வம் என்று கூறலாம்.

Radhakrishnan said...

//கிருஷ்ணமூர்த்தி said...
தினத் தந்தி நிறுவனர் சி.பா. ஆதித்தனார் கூடத் தன் பத்திரிகையில், ராசிபலன் எழுதும்போது நல்ல பலனாகத் தான் அதிகம் எழுதவேண்டும் என்று சொல்வாராம்!

ஜோசியமும் அப்படித்தான்! கொஞ்சம் நல்லவிதமாகச் சொல்லி ஆறுதலும் சொல்வார்கள்.

என்ன மாதிரி இருந்தாலும் ரீல் ரீல் தான்!//

அவரின் நல்லெண்ணம் அறிந்து கொள்ள முடிகிறது, ஜோசியத்தின் ஆறுதல் புரிந்து கொள்ள முடிகிறது.

எல்லாமே பொய் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.

வாழ்க்கையின் சூட்சுமமே அதுதானே ஐயா. பல விசயங்களை அறிந்து கொள்ள முடிந்தது, மிக்க நன்றி ஐயா.

Radhakrishnan said...

//Reshma said...
hi!
just now my father bought the book and came
my sister commenting what is thr in it like that...
may be a precaution...to know how it may be ...
yes radhakrishnan sir that the writers will give the words which insist confidence may be good to the readers atleast....//

நல்லதே நடக்க வேண்டும் எனும் கனவுகளுடன் வாழும் ஒவ்வொரு மனிதருக்கும் ஏதேனும் வழியில் நல்வழி தெரியாதா எனும் நம்பிக்கை அதிகமே உண்டு. நம்பிக்கையூட்டும் வரிகளும், அன்பும் ஒவ்வொருவருக்கும் அதீத தேவை. மிக்க நன்றி ரேஸ்மா அவர்களே.

Radhakrishnan said...

//கிரி said...

உண்மை தான்..அக்கறை என்பதை விட ஆர்வம் என்று கூறலாம்.//

மிக்க நன்றி கிரி அவர்களே, மாற்றியமைத்துவிடுகிறேன். ஆர்வம் சரியான வார்த்தையாக இருக்கிறது.