Friday 18 September 2009

அடியார்க்கெல்லாம் அடியார் - 1


புளிய மரங்கள் அதிகம் வளர்ந்து செழித்து இருந்த அந்த கிராமம்தான் புளியம்பட்டி. வாகன வசதிகள் எல்லாம் இல்லை. ஆனால் சாலையெல்லாம் போடப்பட்டு இருந்தது. லாரிகள் புளியம்பட்டிக்கு அருகில் இருக்கும் ஆற்றுப் படுகையில் மணல் அள்ளி செல்லும், அதற்காகவே இந்த சாலைகள் பயன்பட்டுக் கொண்டிருந்தது.

கிராமத்தில் பள்ளிக்கூட வசதியும் கிடையாது. அருகில் இருக்கும் சின்னாளம்பட்டிக்குத்தான் ஐந்து வரை படிக்கச் செல்ல வேண்டும். படிக்கச் சிரமப்பட்டு ஊர் சுற்றுபவர்களே இங்கு அதிகம். விவசாயத்தையும், நெசவுத் தொழிலையும் மட்டுமே நம்பி, ஊரில் இருப்பவர்கள் எல்லாம் பணக்காரர்களாக ஆவதென்பது சாத்தியமில்லாமல்தான் இருந்து வருகின்றது. இதில் மணல் லாரியில் வேலைக்குச் செல்பவர்களும் உண்டு. சிறுக சிறுக பணத்தை சேமிக்கலாம் என்றால் உடல் வலி நீங்கும் என சாராயமும், வெற்றியாளர்கள் என நிரூபிக்க சீட்டாட்டமும் பணத்தை பழுது பார்க்கும். பொறுப்பற்றவர்களாக இளைஞர்கள் இருக்கிறார்களெனில் அவர்களது தந்தையர்களும் பொறுப்பில்லாமலே இருந்து வருகிறார்கள். வீட்டு வேலை பார்ப்பதோடு தோட்ட வேலையென பார்த்து கிடைத்தவரை போதும் என அடுப்படிக்குள் புகைந்து போகும் தாய்மார்கள்தான் இங்கு அதிகம்.

வார இறுதி நாட்கள் என வந்துவிட்டால் ஒரு பஞ்சாயத்தாவது நடக்காமல் இருக்காது. சத்தமும் சண்டையுமாகவே அந்த நாட்கள் கழியும். பின்னர் எதுவும் நடக்காதது போல அனைவரும் சகஜமாக பழகி கொள்வார்கள். சாதிப் பிரச்சினை அவ்வப்போது தலை தூக்கும். ஆனால் வெட்டிக் கொள்ளமாட்டார்கள். இப்படி மிகவும் பின் தங்கிப் போய் எந்த ஒரு முன்னேற்றத்தையும் காணாமல் இறந்து போனவர்களும், இருந்து போகப்போவோர்களும் கிராமத்து கணக்கில் அதிகமாகவே தெரியும்.

அந்த புளியம்பட்டியில் வசித்து வந்த செல்லாயி தனது ஒரே மகன் கதிரேஷனை கஷ்டப்பட்டு பன்னிரண்டு வரை படிக்க வைத்து விட்டார். படிப்பினை சிரமம் இல்லாது படித்து வளர்ந்தான் கதிரேசன். கதிரேஷனுக்கு நான்கு வயதாகும் போதே காச நோயினால் அவனது தந்தை முருகேசன் சிவலோக பதவி அடைந்தார். புளியம்பட்டியில் மறுமணம் எல்லாம் செல்லுபடியாகாது. செல்லாயி தனது மகனே வாழ்க்கை என வாழ்ந்து வருகிறார்.

அப்படிப்பட்ட வாழ்க்கைக்கு குறுக்கே பாலிடெக்னிக் படிப்பு வந்து நிற்கிறது. கதிரேசன் இன்று சாயந்திரம் விடுதிக்குச் சென்று சேர்ந்து, நாளையிலிருந்து படிப்புத் தொடங்க வேண்டும். விடுதிக்கான பணத்தை மாதம் தவறாமல் கட்டிவிட முடியும் என்ற நம்பிக்கையில் செல்லாயி கதிரேசனை மேற்கொண்டு படிக்கச் சொல்லிக் கேட்டுக் கொண்டார். கதிரேசனும் படிப்பின் மேல் கொண்ட அக்கறையினால் சரியென கேட்டுக் கொண்டான். மன உறுதியுடன் செல்லாயி இருந்தாலும் மகனைப் பிரிந்து இருப்பது என்பது கடினமானதாகத்தான் இருக்கும் என உணரத் தொடங்கினாள். கண்கள் கலங்கியவாறே முறுக்கு, கடலை மிட்டாய், சேவு என எல்லாம் எடுத்து வைத்து 'பத்திரம்பா' என வழி அனுப்பியபோது இருந்த பாதி உயிரும் போனதாகவே உணர்ந்தாள் செல்லாயி.

ஓட்டு வீட்டிலிருந்து ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தவாரே நடந்தான் கதிரேசன். ஊரின் எல்லையைத் தாண்டிச் செல்லும் முன்னர் ஓடிப்போய் அம்மா முகத்தை மறுபடியும் பார்த்துவிட்டு வரலாமா என்றுதான் இருந்தது கதிரேசனுக்கு.

(தொடரும்)

4 comments:

vasu balaji said...

நல்லா இருக்கு. தொடருங்கள் அன்பரே.

ஆரூரன் விசுவநாதன் said...

நல்ல தொடக்கம்.....அடுத்த பகுதியையும் விரைவில் எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்
ஆரூரன்

க.பாலாசி said...

அந்த வயதில் உண்டாகும் ஏக்கம் முடிவில் தெரிகிறது...தொடருங்கள் அடுத்த பகுதியையும்...

Radhakrishnan said...

அனைவருக்கும் மிக்க நன்றி.