Wednesday 27 October 2010

இந்தியாவும் எழுத்துலக நண்பர்களும் 6

கொச்சின் என அறிவிப்புதனை பார்த்ததும் கொச்சின் செல்லலாம் என மனதில் எண்ணம் ஓடியது. நண்பரிடம் கேட்டேன். 'அதெல்லாம் போலாம் சார்' என்றார். 'உங்களுக்கு வாகனம் ஓட்டுவது சிரமம் எனில் என்னிடம் சொல்லுங்கள், நான் வாகனம் ஓட்டுகிறேன்' என நண்பரிடம் சொல்லி வைத்தேன். அதெல்லாம் வேண்டவே வேண்டாம் என மறுத்துவிட்டார். நானும் மனதில் நிம்மதி அடைந்தேன். எனக்கு இந்தியாவில் வாகனம் ஓட்டுவது என்பது மிகவும் மலைப்பாகவே இருக்கிறது.

கொச்சின் என்றதும் எனது மனைவி அங்கு படகு வீடு இருக்கும் என கேள்விப்பட்டு இருக்கிறேன் அங்கு தங்கலாம் என சொல்லிவிட சரி என கொச்சின் பயணித்தோம். மலைகளும் அதை மூடியிருந்த தேயிலை தோட்டங்களும் என பச்சை பசேலென இருந்தது. பனி மூட்டத்தினால் பாதையே சரியாக தெரியவில்லை. அந்த மலைகளில் கட்டப்பட்டிருந்த வீடுகள் மனிதர்களின் தைரியத்தை பாராட்ட தோன்றியது. மழை தூறல் விழுந்து கொண்டே இருந்தது.

கோயமுத்தூரில் இருந்து எனது பாவா நாங்கள் மூணாறு சென்றோமா இல்லையா என்பதை அறியவே இல்லை. அவர் எங்களை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது நாங்கள் தொடர்பில் இல்லை. அவரையும் தொடர்பு கொள்ளவில்லை. சரியென ஓரிடத்தில் தேநீர் அருந்த வாகனத்தை நிறுத்தினோம். அங்கே இருந்த தொலைபேசி மூலம் பாவாவிடம் தகவல் சொன்னபிறகே நிம்மதியானார். அதற்குள் எனது சகோதரன் மகன் சீனிக்கு தகவல் தெரிவித்து விசாரிக்க சொல்லி இருக்கிறார். அவனும் முயன்று பின்னர் தகவல் பெற இயலாது போனதை அறிந்து கொண்டேன். நாங்கள் கொச்சின் செல்கிறோம் என சொன்னதும் 'அட எப்படி பாவா இப்படி திடீர் திடீர்னு பயணம் போறீங்க, அதான் நல்லது என' அவர் பாணியிலே சொன்னதோடு கொச்சினில் ராஜேஷ் எனும் உறவுக்கார பையன் இருப்பதாகவும் அங்கு சென்று விசாரித்து இடங்களை சுற்றி பார்க்க சொன்னார்.

நல்லது என பல தூரம் கடந்த பின்னர் செல்பேசி இணைப்பு வந்தது. ராஜேஷிடம் தொடர்பு கொண்டால் தான் ஊருக்கு சென்று இருப்பதாக தகவல் சொன்னான். சரி என சீனியிடம் படகு வீடு விசாரித்தோம். 'என்ன சித்தப்பா இப்ப சொல்றீங்க' என தகவல் சேகரித்து அனுப்புவதாக சொன்னான். பயணித்து கொண்டே இருந்தோம். அவனிடம் இருந்து தகவல் வந்தது. பயமும் வந்தது.

ஆலப்புழா அல்லது குமரகோம் போக வேண்டும் என சொன்னான். அந்த வழியை கடந்துவிட்டோமே என நினைத்தேன். கொச்சினில் படகு வீடு இல்லை என திட்டவட்டமாக சொன்னவன் ஓணம் பண்டிகையின் பொருட்டு படகு வீடு கிடைப்பதே கடினம் என பயமுறுத்தினான். ஆனால் அதே வேளையில் எங்களை ஆலப்புழா போக சொன்னான். ஆலப்புழா போய்கொண்டே இருங்கள் அதற்குள் ஏதாவது பண்ணுகிறேன் என முடிவு சொன்னான்.

கொச்சினில் நுழைந்து கோட்டயம் வழி மாறி சென்று பின்னர் திரும்பி ஆலப்புழா சாலை அடைந்தபோது அப்பாடா என இருந்தது. நண்பர் நன்றாகவே வாகனம் ஓட்டினார். எந்த படபடப்பும் இல்லை. நிதானமாகவே இருந்தார். அதே நம்பிக்கையான வார்த்தைகள். அதெல்லாம் கரெக்டா போயிரலாம் சார்' மனிதர்களின் மொத்த வாழ்க்கையும் தன்னம்பிக்கையில்தான் ஓடிக் கொண்டிருக்கிறது.

ஆலப்புழா சாலை அடைந்த மறு நிமிடம் சீனியிடம் இருந்து அழைப்பு. 'சித்தப்பா நேராக ஆலப்புழா போங்க, அங்கே தாமஸ் என்பவர் இருக்கிறார். ஒரு படுக்கை அறை உடைய படகு வீடு தயார் என்றான். இரண்டு படுக்கை அறை படகு வீடு இருந்தால் அனைவரும் செல்வது எளிது என்றேன். இரண்டு படுக்கை அறை இல்லை என்றான். தாமஸ் என்பவரின் எண் தந்து பேச சொன்னான். நானும் தாமஸ் என்பவரிடம் பேசினேன். இரண்டு படுக்கை அறை உடைய படகு வீடு தயார், அதற்கு ஐநூறு ரூபாய் மட்டுமே அதிகம் செலுத்த சொன்னார். மொத்த தொகை எட்டாயிரம் மட்டுமே. யார் இந்த தாமஸ். எப்படி இவர் கிடைத்தார்.

சீனி இணையதளத்தின் மூலம் தேடியபோது கிடைத்த நபர் தான் இவர். எந்த அறிமுகமும் இல்லை. அதுவும் ஒரு இரவு ஒரு படகு தனில் சென்று தங்க போகிறோம். நாங்கள் நால்வர் மட்டுமே. மனதில் பயம் இருந்தது. ஏமாற்றபட்டு விடுவோமோ எனும் அச்சம் இருந்தது. இருப்பினும் எது நடந்தாலும் பரவாயில்லை என துணிச்சலுடன்  நம்பிக்கையுடன் சென்றோம்.

சாலை வழிதனை தாமஸ் அவ்வப்போது சொல்லிக் கொண்டே வந்தார். நாங்கள் அவர் சொன்ன இடம் சென்றபோது மாலை மணி ஆறு. சாதாரணமாக படகு மதியம் பன்னிரண்டு மணிக்கே கிளம்பிவிடும். மாலை ஆகிவிட்டால் படகு தனை செலுத்த மாட்டார்கள். எங்களுக்காக ஒரு படகு காத்து கொண்டிருந்தது. ஆனால் தாமஸ் என்பவர் அங்கு இல்லை.

வேறு ஒருவர் வந்தார். எனது பெயரை குறிப்பிட்டார். வாருங்கள் என அலுவலகம் அழைத்து சென்றார். தாமஸ் உங்களுக்காக பதிவு செய்து இருக்கிறார், அவர் என்னுடைய நண்பர்தான் என பணம் தனை பெற்றுக் கொண்டார். எங்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு படகினில் ஏறிக்கொண்டோம். எங்களுடன் மூன்று நபர்கள் வந்தார்கள். அதில் ஒருவர் சமையல் செய்பவர், மற்ற இருவர் படகு செலுத்துபவர்கள்.

நன்றாக பேசினார்கள். அதில் ஒருவர் எங்களது சொந்த விசயங்களை பற்றி கேட்டு கொண்டே வந்தார். நாமாக நமது விசயங்களை சொல்லும்போது வராத எரிச்சல் பிறர் கேட்டு சொல்லும்போது தானாக எட்டி பார்த்துவிடுகிறது. சிரித்து கொண்டு கலகலப்பாக பேசினார். முதலில் சொல்ல வேண்டாம் என நினைத்தாலும் எதற்கு பொய் சொல்ல வேண்டும் என எல்லா உண்மைகளையும் அவரிடம் சொல்லிவிட்டேன். அவரும் அவருடைய விபரங்களை பகிர்ந்து கொண்டார். மற்ற இருவரும் நன்றாக பேசினார்கள். எங்களுக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது.

இரவு உணவு சமைத்து கொடுத்தார்கள். மிகவும் பிடித்து இருந்தது. பொதுவாக இரவு பயணிக்க மாட்டோம் என சொன்னவர்கள் எங்களுக்காக படகு எடுத்து வருவதாக சொல்லி படகை மற்றொருபுறத்தில் நிறுத்தியபோது இரவு எட்டு மணி. பம்பை நதியில் தான் பயணம். கரையில் இருபுறங்களிலும் வீடுகள். நிறுத்திய இடத்தில் கூட பல வீடுகள் இருந்தன. எவரேனும் வந்து விடமாட்டார்களா என கேட்டபோது அதெல்லாம் வரமாட்டார்கள் என்றார்கள். இரவு நிம்மதியாக உறங்கினோம் எனலாம். குளிரூட்டப்பட்ட அறை. தொலைகாட்சி என சகல வசதிகளுடன் படகு வீடு இருந்தது.

அதிகாலை கிளம்பி, கிளம்பிய இடத்திற்கே வந்தோம். வரும் வழியில் பார்த்த காட்சிகள் எழில்மிகு காட்சிகள். மரங்கள், வீடுகள் மனிதர்கள் என ரம்மியமாக இருந்தது. வீடுகளின் அமைப்பு எங்கள் வீட்டினை நினைவில் கொண்டு வந்தது. படகுகளில் மூலமே பயணம் செய்கிறார்கள். சாலை போக்குவரத்து கிடையாதாம். அங்கங்கே படகு நிற்க இடம். சொந்த படகும் வைத்திருப்பவர்கள் உண்டு. காலை பத்து மணிக்கு ஆலப்புழாவில் இருந்து கிளம்பினோம்.

கம்பம் செல்ல வேண்டும் என வண்டி பெரியார், குமுளி என மலைகளும், மழை துளிகளும் என அழகிய பயணம். கேரளா குமுளி கடந்து தமிழ்நாடு என எல்லையில் வைத்தபோது மனம் வறண்டு போனது. எழில் தொலைத்த தமிழகம்.

படங்கள் எல்லாம் பின்னர் இணைக்கிறேன். :)

(தொடரும்)

7 comments:

sakthi said...

நல்ல பகிர்வு

அன்பரசன் said...

நல்ல பயணம்.

Chitra said...

கம்பம் செல்ல வேண்டும் என வண்டி பெரியார், குமுளி என மலைகளும், மழை துளிகளும் என அழகிய பயணம். கேரளா குமுளி கடந்து தமிழ்நாடு என எல்லையில் வைத்தபோது மனம் வறண்டு போனது. எழில் தொலைத்த தமிழகம்.


..... இந்த வரிகள், நிறைய சொல்கிறது...... ம்ம்ம்ம்.....

ம.தி.சுதா said...

பயணங்கள் முடிவதில்லை தொடரட்டும்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்ல பகிர்வு..

மங்குனி அமைச்சர் said...

படகு இல்லத்தில் பயப்பட வேண்டியதில்லை சார் , மிக நியாயமாக நடப்பார்கள் , நீங்கள் பகலில் போயிருந்தால் படகேறும் முன் நல்ல மீன்களை வாங்கி கொண்டுசென்று இருக்கலாம் , மிக அருமையாக சமைத்து தருவார்கள் . குமுளி, கம்பம் ..... நம்ம ஏரியாதான் சார்......... நமக்கும் மூனாறு பக்கம் அடிக்கடி பைக்கள போவோம் ....

Radhakrishnan said...

மிக்க நன்றி சக்தி,

மிக்க நன்றி அன்பரசன்

மிக்க நன்றி சித்ரா,

மிக்க நன்றி சுதா

மிக்க நன்றி நண்பரே

மிக்க நன்றி அமைச்சரே.