Sunday 10 October 2010

அடியார்க்கெல்லாம் அடியார் 28

கண்களைத் துடைத்துக்கொண்டார் ஆதிராஜன். கதிரேசன் அமைதியாகவே அமர்ந்து இருந்தான். ''எல்லாமே ஒண்ணா இருக்கக்கூடாதானு இப்பவும் நினைப்பேன், ஆனா இனிமே எப்படி ஒண்ணா ஆகப்போகுதுனு தெரியலை'' என்றார் ஆதிராஜன். ''பிரிஞ்சே இருந்தாலும் ஒண்ணாத் தெரியறமாதிரி எல்லாருமே 'இறைவன் ஒருவனே' னுதானே சொல்றாங்க, அதனால எல்லாமே ஒண்ணுதான்'' என்றான் கதிரேசன்.

''
ஆமா, சமணம் வணங்குற ஆதிநாதனுக்கும், சைவம் வணங்குற சிவனுக்கும் ஆயிரம் ஒற்றுமை சொல்லலாம். உலகத்துல ஒவ்வொருத்தருக்குக்கும் ஒரு நம்பிக்கை வச்சி அதுல இணைஞ்சி வாழறவங்க இருந்துட்டுதான் வராங்க. தன்னோட நம்பிக்கையில மனசை வைக்கிறதோட இல்லாம, மத்தவங்க நம்பிக்கைக்கும் மரியாதைக் கொடுத்து வாழறப்ப எல்லா நம்பிக்கைகளும் அவநம்பிக்கையை எப்பவுமே தராது. எப்ப மத்தவங்களோட நம்பிக்கையை மதிக்காமப் பார்க்கறமோ அப்பதான் பிரச்சினையே ஆரம்பிக்குது'' என்றார் ஆதிராஜன்.

''
மதிக்கிறமோ, மதிக்கலையோ எல்லா நம்பிக்கைகளும் தன்னோட வேலையைச் செஞ்சிட்டு வருது, எத்தனையோ நம்பிக்கைகள் அழிஞ்சிட்டு வரத்தானே செய்து, அதுல சமணமும் அடக்கம்தானே'' என்றான் கதிரேசன். ''சமணம் சொன்ன நம்பிக்கையும், கொள்கையும் எப்பவுமே அழியாது. சமணம்னு இருக்கற பேரு வேணும்னா மாறுமேத் தவிர கொள்கை எப்பவுமே மாறாது, அழியாது. மொத்தத்தில இந்து மதத்துக்கு முன்னமேத் தோன்றினதுதான் இந்த சமண மதம். சமண மதக் கொள்கைகளை எடுத்துட்டு இந்து மதம் நிலைக்க ஆரம்பிச்சது. எங்களோட கொள்கைக்கு பேரு மாறட்டும், கொள்கை நிலைச்சி நிற்கனும் அதுதான் முக்கியம் அதைப் பின்பற்றி வாழற மக்கள் அதிகரிக்கனும் எந்த மதம்னு இருந்தா என்ன'' என்றார் ஆதிராஜன். 

மேலும் அவரே தொடர்ந்தார். ''சைவம், வைணவம் இருக்கறவரைக்கும் இந்த சமணமும் நிலைச்சி நிற்கும். வரலாறே இல்லாத விசயத்துக்குக் கூட வரைபடம் காமிக்கிற இந்த உலகத்துல பெரிய வரலாறு வைச்சிருக்கிற சமணத்தை அழிக்கிறது அத்தனை ஈசியில்லை, பெரிய பெரிய கோவில் எல்லாம் இருக்கு, மகாபலி கோவில் சாதாரணமானது இல்லை. எப்ப மனுசங்க இதையெல்லாம் நிராகரிக்கத் தொடங்கறங்களோ அப்ப வேணும்னா மாறும் ஆனா அழியாது'' என்றார் ஆதிராஜன். 

''
நீங்க சமணரா?'' என்றான் கதிரேசன் சட்டென. ''ஆமா நான் சமணர்தான், என்னை சமணர்னு அடையாளம் காட்டுறதல எனக்கு எப்பவுமே இரண்டாவது கருத்து இல்லை. நான் முதல்ல மனுசன் அப்படினு  புத்திசாலித்தனமா சொல்றதைவிட எனக்குனு ஒரு அடையாளம் தரது இந்த சமணம் தான். ஒரு மாகாணம், நாடு, நிறம், இனம் ஒவ்வொருத்தருக்கு ஒரு அடையாளம் தந்து வைச்சிருக்குங்கிறதை நீ மறுக்கிறயா? நானும் வைணவக் குடும்பப் பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணியிருக்கேன், அவளை நான் சமணத்துக்கு மாறச் சொல்லலை, நான் வைணவத்துக்கு மாறவும் இல்லை. கொள்கையைச் சொல்றது தப்பில்லை, இதுதான் சிறந்த கொள்கை, மாறுனு கட்டாயப்படுத்துறது ரொம்பவேத் தப்பு'' என நிறுத்திவிட்டு தண்ணீர் குடித்தார் ஆதிராஜன்.

''
என மனசுக்கு சிவன் தான் எல்லாம். அதுல மாத்தமே இல்லை'' என்றான் கதிரேசன். ''ஊருக்காக நம்மளை மாத்திக்கிரது ஒருபோதும் உதவாது, உள்ளத்தில மாற்றம் ஏற்பட வைக்கனும், நீ போகப் போக புரிஞ்சிப்ப, அன்போட இரு, பிறரை துன்புறுத்தாத. நீ நம்பிக்கை வைச்ச சிவனை ஒருபோதும் கைவிடாத, அந்த சிவன் உன்னை ஒருபோதும் எப்பவும் எதுக்காகவும் கைவிடவே மாட்டார்'' என்றார் ஆதிராஜன்.

''
உங்களையுமா?'' என்றான் கதிரேசன். ''எல்லாரையும்'' என்றார் ஆதிராஜன். கதிரேசனுக்கு ஆச்சரியமாக இருந்தது. ''அப்படின்னா ஏன் நீங்க சமணர்?'' எனக் கேட்டான் கதிரேசன். ''எனக்குத் தெரிஞ்சது, எனக்குப் பழக்கப்பட்டது, நான் பழகினது, வேற எதுக்கும் மாற மனசு இடம் தரல, ஆனா எல்லாத்தையும் ஏத்துக்கிறப் பக்குவம் இருக்கு. மத்த உயிரை மதிச்சி நடக்கனும், உயிர்களைக் கொல்லாமை, விகாரமில்லா காமம், அன்பே சிறப்புனு சொல்ற சமணம் எனக்கு ரொம்பவே சம்மதம்'' என்றார் அவர். கதிரேசன் சரியெனத் தலையை ஆட்டினான். 

நேரம் ஆகிக்கொண்டிருந்தமையால் ஊருக்குச் செல்ல வேண்டுமெனத் திட்டமிட்டவன் ஆதிராஜனிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டான். ஆதிராஜன் கதிரேசனை ஆரத் தழுவினார்.

கதிரேசனை வழியனுப்ப பேருந்து நிலையம் வந்தாள் வைஷ்ணவி. அவன் பிரிந்து சென்ற பேருந்தினைப் பார்த்தபடியே வீடு வந்து சேர்ந்தாள். மனம் மிகவும் கனமாக இருந்தது. சில மணிநேரத்திற்கெல்லாம் மதுசூதனன் வைஷ்ணவியை தொலைபேசியில் அழைத்தான். 

''
என்னை மன்னிச்சிரு வைஷ்ணவி, இனிமே நம்ம காதலை கேவலப்படுத்தமாட்டேன்'' என்றான் அவன். ''ம் ஒருதரம் தடம்மாறிப் போய்ட்டா எப்ப இனி தடம் மாறுமோனு பயமாத்தான் இருக்கும், நீ எப்பவும் தடம் மாறமா இருப்பனு நினைக்கிறேன், இன்னும் வருசம் இருக்குப் பார்க்கலாம்'' என சொல்லிவிட்டு வைத்துவிட்டாள்.

கதிரேசன் இரவு வேளையில் வீடு வந்து சேர்ந்தான். அவனது வீட்டில் ஈஸ்வரி இருந்தாள். கதிரேசனைப் பார்த்ததும் ''அம்மா ரொம்பக் கவலைப்பட்டுட்டாங்க, கடைக்குப் போயிருக்காங்க'' என்றாள்.

சந்திப்பில் நடந்த அனைத்து விசயத்தையும் சொன்னான் கதிரேசன். ''மத்தவங்களுக்காக வேசம் போடவேக் கூடாது, அது நல்லதில்லை'' எனச் சொன்னவளிடம் ''நான் வைணவத்துக்கு மாறினா ஏத்துப்பியா?'' எனக் கேட்டான் கதிரேசன். ''நீ சமணத்துக்கு மாறினாக் கூட நான் ஏத்துப்பேன், எனக்கு வைணவப் பொண்ணா மாற ஒரு நிமிசம் கூட ஆகாது, உனக்கு நான் எப்படி வேணும்னாலும் இருப்பேன்'' என ஈஸ்வரி சொன்னதும் முகம் கழுவச் சென்றான் கதிரேசன். 

முகம் கழுவித் திரும்பிய கதிரேசனிடம் ''அடையாளம் போடாத வரைக்கும், அடுத்தவங்க அடையாளம் குத்தாதவரைக்கும் எல்லாருமே மனுசங்கதான்'' என முதன்முதலாக கதிரேசனைக் கட்டிப்பிடித்துச் சொன்னாள் ஈஸ்வரி. கதிரேசன் ஈஸ்வரியின் தலைக்கேசத்தை விரல்களால் கோதியவாரே பாடினான். 

கள்ளமில்லா உள்ளத்து அன்பில் களித்து நின்றேன்
தெள்ளிய நீரோடையாய் எண்ணம் கொண்டேன்
பொல்லாத வினையாவும் இல்லாது போனதென்று உணர்ந்தேன்
சொல்லாதது எதுவுமிருந்தால் சொல்சிவனே.
அன்றைய தின நேரம் புது அனுபவமாகவே இருந்தது கதிரேசனுக்கு. தன்னை ஈஸ்வரியின் பிடியில் இருந்து விடுவித்துக் கொண்டவன் ஈஸ்வரா எனச் சொல்லிக்கொண்டான். ஈஸ்வரி தன்னிலை வந்தவளவாய் கண்களைத் துடைத்துக் கொண்டு மெல்லிய புன்னகை ஏந்திக்கொண்டாள். ''இதுவே முதலும் கடைசியாக இருக்கட்டும்'' என்றான் கதிரேசன். ''என்னச் சொல்ற'' என்றாள் ஈஸ்வரி. 

''
என்னை நீ திருமணம் செய்து கொள்ளும்வரை நம்மில் உடல் ஸ்பரிசம் தேவையில்லை'' என்றான் கதிரேசன். ''நீ பாடின பாட்டுக்கு என்னதான் அர்த்தம்'' என்றாள் ஈஸ்வரி. ''என்ன பாடினேன்'' என்றான் கதிரேசன். ''பொல்லாத வினையாவும் இல்லாது போனதென்று உணர்ந்தேன்'' என்றாள் ஈஸ்வரி. ''தெரியாது'' என்றான் கதிரேசன். அப்பொழுது செல்லாயி வீட்டினுள் நுழைந்தார். ''எப்பப்பா வந்தே, இவ்வளவு லேட்டாவா வரது'' எனச் சொல்லிவிட்டு சாப்பிடுவதற்கு எல்லாம் தயாராக எடுத்து வைக்கச் சென்றார். ''ஏன் பாடினனு தெரியாதா'' என ஈஸ்வரி கேட்டுக்கொண்டே தான் வீட்டிற்குச் செல்வதாய் கூறினாள். செல்லாயி சாப்பிட்டுச் செல்லுமாறுக் கேட்டுக் கொண்டார், ஆனால் ஈஸ்வரி மறுத்துவிட்டாள். 

கதிரேசனைப் பார்த்துக் கொண்டேச் சென்றுவிட்டாள் ஈஸ்வரி. ஈஸ்வரி கதிரேசனைக் காண அவனது வீட்டுக்கு பல நாட்களாக வரவேயில்லை. கதிரேசனும் ஈஸ்வரியைத் தேடிச் செல்லவில்லை. சில மாதங்கள் பின்னர் ஈஸ்வரி கதிரேசனை தற்செயலாக கடைத் தெருவில் பார்த்தாள். ''ஈஸ்வரி'' என அழைத்தான் கதிரேசன். ''பொல்லாத வினையாவும் பதில் சொல்'' என்றாள் ஈஸ்வரி. ''எப்படியிருக்க'' என்றான் கதிரேசன். ''நீ நலமா இல்லைன்னா எனக்குனு ஒண்ணு ஆயிராதா, அதுபோல நான் நலமில்லைன்னா உனக்குனு ஒண்ணு ஆயிரும்'' என பதில் சொன்னாள் ஈஸ்வரி. ''எந்த இலக்கியம் படிச்ச'' என்றான் கதிரேசன். 'ஓரமா நின்னு பேசுங்கலே, தாமிரபரணி ஆத்துப் பக்கம் போய் பேசுங்கலே, இப்படியா வரவங்க போறவங்களுக்கு வழிமறிச்சிட்டு பேசுறது' என ஒருவர் கதிரேசனைத் தட்டிச் சொல்லிவிட்டுப் போனார். அதைக்கேட்டு இருவரும் சிரித்தார்கள். இருவரும் அவ்விடத்தை விட்டு நடந்து ஒரு மடத்தில் வந்து நின்றார்கள். ஈஸ்வரி பாடினாள்.


கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,
எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன்


''
ம்ம் நல்லா இருக்கு, சொல்லு'' என்றான் கதிரேசன். ''மாணிக்கவாசகரே தான் பொல்லாத வினையை உடையவன் என தன்னைத் தானே சொல்றார், அப்படியிருக்க நீ எது போனதாய் சொன்ன'' என்றாள் ஈஸ்வரி. ''தெரியலை'' என்றான் கதிரேசன். ''என்னோட குடும்ப வாழ்க்கை உன்னால நடத்த முடியுமா?'' எனப் பட்டெனக் கேட்டாள் ஈஸ்வரி. கதிரேசன் பதட்டம் அடைந்தவனானான். ''சொல்லு'' என்றாள் ஈஸ்வரி. ''என்ன சந்தேகம் இப்போ'' என்றான் கதிரேசன்.

''
உள்ளத்து அன்பில் கொள்ற மகிழ்ச்சி போல உடலின் தொடுதல் இன்பத்திலும் மகிழ்ச்சி இருக்கனும்'' என சற்று வேகமாகவேச் சொன்னாள் ஈஸ்வரி. ''கல்யாணம் ஆகிற வரைக்கும் இதுபத்தி பேசாதே'' என்றான் கதிரேசன். ''உன்னிட்ட சில விசயங்களைத் தெளிவுபடுத்திக்க ஆசைப்படறேன்'' என்றாள் ஈஸ்வரி. ''எனக்காக நீ எப்படியும் இருப்பனு சொன்ன'' என்றான் கதிரேசன். ''ஆமா ஆனா என்னால உள்ளுக்குள்ள வேசம் போட முடியாது'' என்றாள் ஈஸ்வரி. கதிரேசன் சற்றே தடுமாறினான். ''இன்னொரு நாளைக்குப் பேசலாம், இப்போ வேணாம்'' என்றான் கதிரேசன். ''என்னை பொண்ணுப் பார்க்க வரப்ப பேசுறமாதிரி வைச்சிக்காதே'' என சொல்லிவிட்டு சென்றாள் ஈஸ்வரி. கதிரேசனுக்கு கவலையாக இருந்தது. 

பொல்லாத வினை இல்லாது போனதா, சொல்லியதால் வந்ததா என யோசனையிலேயே நாட்கள் நகர்த்தினான் கதிரேசன். மாதங்கள் கடந்தன. ஒரே ஊரில் இருந்து கொண்டு பார்க்காமலேயே இருவரும் இருந்தார்கள். சிவன் கோவில், வேலை, வீடு என்றே இருந்தான். ஒருதினம் ஈஸ்வரியை சந்தித்தான் கதிரேசன். ''என்னைப் பார்க்கனும்னு இப்பவாச்சும் தோணிச்சே'' என்றாள் ஈஸ்வரி. ''உனக்குத் தோணவே இல்லையா'' என்றான் கதிரேசன். ''உன்னை எப்பவும் எனக்குள்ளப் பார்த்துக்கிட்டேதானே இருக்கேன்'' என்றாள் ஈஸ்வரி. ''நீ வார்த்தை அலங்காரம் செய்ற'' என்றான் கதிரேசன். ''வாழ்க்கையும் அப்பதான் அலங்காரமா இருக்கும்'' என்றாள் ஈஸ்வரி. 

''
உன்னோட என்னால குடும்ப வாழ்க்கை நடத்த முடியும்'' என்றான் கதிரேசன். ''அப்படின்னா என்னை இப்போ கட்டிப்பிடிச்சிக்கோ'' என்றாள் ஈஸ்வரி. ''கல்யாணம் ஆகட்டும்'' என்றான் கதிரேசன். ''என்ன நீ, இவ்வளவு கல்லா இருக்க'' என்றாள் ஈஸ்வரி. ''எனக்கு இஷ்டமில்லை'' என்றான் கதிரேசன். ''தொடுறதுல காதல் இருக்கு'' என்றாள் ஈஸ்வரி. ''அதில் கள்ளமும் உண்டு'' என சொன்னவன் வார்த்தையை சட்டென நிறுத்தினான். ஈஸ்வரி விறுவிறுவென சென்றுவிட்டாள். தனது நாக்கைக் கடித்துக் கொண்டான் கதிரேசன். வலியெடுத்தது. ஈஸ்வரியைத் தொடர்ந்தான். ''என்னை தொடர்ந்து வராதே'' என சொல்லிவிட்டுப் போனாள் ஈஸ்வரி. வலி மிகவும் அதிகமானது. 

''
என்னிடம் நீ என்ன எதிர்ப்பார்ப்பாய் ஈசனே
தன்னிடம் இருந்தும் தராத காரணத்தால்
புறந்தள்ளி போவாயோ அகம் வெறுத்து செல்வாயோ
அறமெனப் படுவதுயாது சொல்சிவனே''

(
தொடரும்)

2 comments:

ஹேமா said...

சின்னக்குழந்தைக்குக் கதை சொலவதுபோலப் புரிய வைத்துக்கொண்டு வருகிறீர்கள் டாக்டர்.நன்றி.

Radhakrishnan said...

நன்றி ஹேமா