Friday 26 July 2013

முக்காலமும் உணர்ந்த முனிவர்களா நாம்? 7

சாபம் விடுவது என்பது முனிவர்களின் ஒரு தலையாய கடனாக இருந்து வந்து இருக்கிறது. அதாவது சாபம் விட்டால் அது பலித்து விடும் எனும் ஒரு அதீத நம்பிக்கை அவர்களுக்குள் இருந்தததுடன் மட்டுமில்லாமல் அந்த சாபத்தை கூட மாற்றி அமைக்கும் வல்லமை உடையவர்களாகவே அவர்கள் சொல்லப்பட்டார்கள். ஒருவரது வாக்கு அத்தனை சக்தி வாய்ந்ததா? என்பதெல்லாம் பற்றி ஆராய்ச்சி அவசியம் இல்லை எனினும், ஒருவரது சொல் மனதில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்த கூடும் என்பது அனைவரும் ஓரளவு தெரிந்தே வைத்து இருக்கிறார்கள். 'வசவு பாடுதல்' எல்லாம் எதிர்வினைகளை அதிக அளவில் ஏற்படுத்தவல்லவை. கிராமங்களில் 'மண் வாரி தூற்றுதல்' 'காசு வெட்டி போடுதல்' 'செய்வினை செய்தல்' போன்ற காரியங்கள் எல்லாம் எதிர்காலத்தில் இப்படி நடக்கும், நடந்துவிடும் என்கிற நம்பிக்கையில் செய்யப்படுபவை. இப்படி செய்தால் அப்படி நடக்கும் எனும் ஒரு உணர்வு! எப்படி இந்த மனிதர்கள் முனிவர்கள், சித்தர்கள் பெரும் வல்லமை கொண்டவர்களாக மாறினார்கள்? அல்லது மாற்றம் கொண்டது போல் போற்றப்பட்டார்கள்?

இதுவரை எவரும் 'கல்லாக நீ கடவது' என சபித்து எவரும் கல்லாய் ஆனது கண்டில்லை. இந்த மனிதர்கள் எப்படி உருவானார்கள்? அல்லது எப்படி படைக்கப்பட்டார்கள்?

தற்போதைய மனிதர்கள் தோன்றிய வரலாறு கிட்டத்தட்ட 50000 ஆயிரம் வருடங்களில் இருந்து 100000 ஆயிரம் வருடங்களுக்கு உட்பட்டுதான் என்று வரலாறு குறிக்கிறது. அதுவும் மனித வழித்தோன்றல்கள் 5 மில்லியன் ஆண்டுகள் முன்னர் மற்றொரு உயிரினத்தில் இருந்து வேறுபட்டு வந்துள்ளது என்றே கணக்கு சொல்லப்படுகிறது. இந்த பூமியானது கடந்த 3 பில்லியன் கோடி வருடங்கள் முதற்கொண்டு உயிரினங்கள் வாழ துணை புரிவதாகவும், இன்னும் 200 மில்லியன் ஆண்டுகள் முதற்கொண்டு 5 பில்லியன் ஆண்டுகள் வரை இந்த பூமி உயிரினங்கள் வாழ வழி செய்யும் என்றே குறித்து வைக்கிறார்கள். இப்போது எழுதபட்ட விசயத்தில் எதையும் துல்லியமாக வரையறுத்து சொல்ல இயலாத நிலை இருப்பதை அறியலாம்.

இந்த பூமியில் நடைபெறும் நிகழ்வுகள் அடிப்படையில் உயிரினங்கள் சில மில்லியன்கள் வரை இருப்பதாகவும், அவை மாற்றம் அடைந்து வேறொரு உயிரின வடிவில் தோன்றுவதாகவும் படிமங்களின் ஆராய்ச்சி சொல்கிறது. வருடம்தோறும் ஆயிரக்கணக்கான உயிரினங்கள் அழிவதாகவும், ஆயிரக்கணக்கான உயிரினங்கள் தோன்றுவதாகவும் சொல்கிறார்கள். ஆனால் அவை பெரிய அளவில் உள்ள உயிரினங்கள் என சொல்ல இயலாது. சின்னசின்ன உயிரின மாற்றம் சாத்தியமே.

மனிதர்களுக்கும், பிற உயிரினங்களுக்கும் என்ன வித்தியாசம்? மனித இனம் அழியுமா? அப்படி அழியும் பட்சத்தில் வேறு எந்த உயிரினம் தோன்றும்?

முக்காலம் உணர்ந்த முனிவர்கள் போல எழுதி வைத்து இருக்கிறார்கள். அடுத்த பதிவில் அதைப் பார்க்கலாம்.

(தொடரும்)

Wednesday 17 July 2013

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் 15

என்னைப் பற்றியும் சுபத்ராவைப் பற்றியும் காயத்ரி என்ன நினைத்திருப்பாள் என்றே என் மனம் நினைக்கையில்

"ஹலோ ஐ ஆம் சுபத்ரா" என காயத்ரியின் கைகள் பிடித்து குலுக்கினாள்.

"ஹாய் ஐ ஆம் காயத்ரி"

''சுபா, நீ எப்படி இந்த ஊருக்கு, எப்போ வந்த'' என நான் குறுக்கிட்டேன். சுபா என்றே அவளை அழைத்து பழகிப் போனது.

''நேத்துதான் வந்தேன், பரிணாம ஆராய்ச்சிக்காக வந்து இருக்கேன்''

''என்ன கோர்ஸ் எடுத்துப் படிக்கிற''

''டெவெல்த்தோட ஸ்டாப், பரிணாமத்தில இண்டரெஸ்ட் அதான் அது எடுத்து தனியாப் படிக்கிறேன், சரி பிறகு வந்து பார்க்கிறேன், விவரமா பேசலாம், இப்போ ஒருத்தரை சந்திக்கப் போறேன், ஸீ யூ காயூ'' என அவள் கிளம்பி சென்றாள்

காயூ... நான் அழைப்பது போலவே அவளும் அழைத்து சென்றது எனக்கு பெருமையாக இருந்தது.

''காயூ, நீ சுபாவைப் பத்தி என்ன நினைக்கிற''

''உங்களுக்கு மிகவும் பொருத்தமானவ''

சில வேளைகளில் என்ன பேசுகிறோம் என்றே நமக்கு தெரியாமல் போய்விடுவது துரதிர்ஷ்டம் என நினைத்துக் கொண்டேன். காயத்ரி அவ்வாறு கூறியதும் நான் சமாளிப்பதாக நினைத்துக் கொண்டு பேசினேன்.

''ஆமா, என்னோட அலைவரிசை அவளுக்கு இருக்கு''

''அவளை ஏன் காதலிக்கலை''

''அது அந்த பருவம் வரலை''

''இப்போ காதலிக்கலாமே''

''உன்னை காதலிச்ச பிறகு வேறு யாரை நான் காதலிக்கனும்''

நான் சொன்ன இந்த வார்த்தைகளில் காயத்ரி வாயடைத்துப் போனாள். பொதுவாகவே ஆண் - பெண் இடையே ஈர்ப்பு என்பது சகஜமான ஒன்றுதான். ஒரு ஆண் பல பெண்களை காதலிப்பதும், ஒரு பெண் பல ஆண்களை காதலிப்பதும் என்பதெல்லாம் சரியே என்றே வெளித் தோற்றத்தில் தென்படும். ஆனால் அவை ஒருவகையான பாலின ஈர்ப்பு என்பது புரிந்தபாடில்லை. காதல் என்பதன் முழு அர்த்தம் கவனிக்கப்படவில்லை என்றே தோணியது.

''காயூ, நீ மனசை போட்டு உலப்பிக்காதே, சினிமாவுல வரமாதிரி முக்கோண காதல் எல்லாம் எனக்குள்ள வராது. ஒரு காதல் கதைன்னு வந்தாலே அதுல ஒரு முக்கோண காதல், அந்த பெண் இவனைக் காதலித்தாள், அவன் வேறு ஒருவளை காதலித்தான் அப்படின்னு சொல்றதுக்கு இது நிழல் இல்ல, நிஜம். என்னை நம்பு''

கல்லூரியின் வாசல் அடைந்து இருந்தோம். காயத்ரி எனது கைகளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு என் அப்பாவோட வாழ்க்கை என்னை ரொம்பவே பாதிச்சிருச்சி முருகேசா என கண்களில் கண்ணீர் மல்க  சொன்னாள்.

''காயூ, மனசு அப்படிங்கிறது நமக்கு கட்டுப்பட்ட ஒண்ணா இருக்கனும், மனசுக்கு நாம கட்டுபட்டவங்களா மாறக் கூடாது''

சொன்ன மாத்திரத்தில் எனக்கு புரியவில்லை.  மனதுக்கு கட்டுப்பட்டு இருப்பது, மனதை கட்டுப்படுத்துவது, இதில் என்ன வித்தியாசம் இருப்பதாக எனக்குத் தோன்றியது என புரியாமலே இருந்தது.

''சரி முருகேசா''

புரிந்தது போல சரி என சொல்கிறாளே என நினைத்துக் கொண்டிருக்கையில் நண்பர்கள் சூழ்ந்து கொண்டார்கள். கல்லூரியில் இருக்கும் பொழுதில் பாடத்தில் கவனம் செலுத்திக் கொண்டிருக்க காதல் சற்றே வழிவிட்டு நிற்கும். எனக்குப் பிடிக்காத ஆசிரியரே பாடம் எடுத்தார். அவர் எடுத்த முதல் பாடம் மனம் பற்றியதுதான். எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

''Human mind is not an object, it is not located any particular part of the body''

வழக்கம்போல எனது அருகில் இருந்தவன் எழுந்து ''mind your language'' என்றான். மொத்த வகுப்பும் கொல்லென சிரித்தது. அந்த ஆசிரியர் மிகவும் கோபத்துடன் ''why should I?, get out of the class'' என்றார்.

''சாரி சார், நீங்க சொன்னது எனக்குப் புரியலை, கொஞ்சம் தமிழுல சொல்றீங்களா''

''அப்படி கேட்க வேண்டியதுதானே, டிசிப்ளின் இல்லாத பசங்க எல்லாம் எதுக்குப் படிக்க வரனும், பன்னி மேய்க்க போகலாமே''

''பன்னி மேய்க்க கூட டிசிப்ளின் வேணும் சார், அதுவும் படிக்க சொல்லித் தரதுக்கு ரொம்ப டிசிப்ளின் வேணும் சார்''

''பாடம் நடத்துங்க சார், நீங்க இரண்டு பேரும் வெளில சண்டையை வைச்சிகோங்க'' என்றாள் வளர்மதி. மொத்த வகுப்பும் ஆமா சார் என்றது.

''This is what I call is human mind. It is not located any particular part of the body, it is everywhere. அதாவது மனம் எங்கும் வியாபித்து  இருக்கிறது. வளர்மதி சொன்னதும் நீங்க எல்லாரும் ஆமாம் சொன்னீங்க இல்லையா அதுதான் மனம். அது சுற்றுப்புற சூழல் மூலம் மாசும் அடையும், சுத்தமும் அடையும். Human mind is influenced by external stimulations; based on that, internal vibrations start to occur. It is very difficult to control internal vibrations once you have constant external stimulations or once external stimulations occurred very deeply, this start coming back again and again to create internal stimulations how clever you are!''

''யோவ் நீ என்னதான் சொல்ல வர''

இப்படி அருகில் இருந்தவன் சொல்வான் என்றே எவரும் எதிர்பார்க்கவில்லை. அவர் நடத்திய பாடம் எனக்கு பிடித்து இருந்தது. முதலில் பிடிக்காத ஆசிரியர் எனக்கு பிடித்தவராக தெரிந்தார். மொத்த வகுப்பும் நீ உட்கார் என அவனை நோக்கி சத்தம் போட்டது.

''என்னைப் பார்த்தா உனக்கு எப்படி இருக்கு, நான் எது சொன்னாலும் உனக்கு நக்கலா இருக்கு, உனக்கு விருப்பம் இல்லைன்னா நீ வகுப்பு விட்டு வெளியே போ, புரியலைனா என்னனு மரியாதையா கேளு இப்படி அநாகரிமாக நடந்துகிறது நல்லதில்லை''

ஆசிரியர் பேசியது எனக்கு சரியாகவே பட்டது. சாரி கேட்டு உட்காருடா என அவனை இழுத்தேன்.

''I tried to see how you react to me Sir, when I said mind your language, you shouted at me and asked me to get out of the class and talked about discipline. That was an external stimulation which angered you. You talked about discipline. I said 'Teacher should have more discipline than others'. After you taught for a while, I have criticised your way of teaching that I did not understand, you reacted very differently now and you have shown some degree of dignity. How could an external stimulation have such an impact immediately, you should have some internal vibrations all the time on all matters, is that right?''

அவன் பேசி முடித்து அமர்ந்தபோது மொத்த வகுப்பும் கைதட்டி ஆரவாரம் செய்தது. ஆசிரியர் கைத்தட்டல்கள் சத்தம் ஓயும் வரை காத்து இருந்தார். 

''Does child have internal vibrations on all matters which is not exposed to or do you have internal vibrations which you are not exposed to or you haven't paid any attention to it?'' 

ஆசிரியரின் அந்த கேள்வி என்னை நிஜமாகவே உலுக்கியது. பக்கத்தில் இருந்தவன் எழுந்து சில  வார்த்தைகள்  சொல்லிவிட்டு அமர்ந்தான். 

''Worth looking at it''

''என்னடா சொல்ற'' என மெல்ல கேட்டேன். 

''நிறைய யோசிக்க வைச்சிட்டான்டா வாத்தி''

ஒரு விசயம் பிடிக்கும், பிடிக்காது காரணம் சொல்லலாம். காதலுக்கு என்ன காரணம் இருக்க முடியும்? என மனம் நினைத்தது. இந்த மனம்... கர்ம வினையா? மர்மம் தீர வேண்டினேன். 

(தொடரும்)


Monday 15 July 2013

உடலில் புகுதல்

அஷ்டமாசித்திகளும் அகிலாண்டீஸ்வரியும் - 6 

எல்லாவற்றிக்கும் ஒரு பிராப்தம் இருக்கனும். இந்த பிராப்தம் இல்லாத பட்சத்தில் எதுவுமே சாத்தியம் இல்லை என்பதுதான் மனிதர்கள் சொன்ன தத்துவம். 

'விதிப்படியே எல்லாம் நடக்கும்' என்பதுதான் இந்த உலகம்  கண்டு கொண்ட விசயம். விதி-மதி என்றெல்லாம் பிரித்து சொல்வார்கள். ஆனால் மதி கூட விதிக்கு உட்பட்டதுதான். 

'எல்லாம் தீர்மானத்தின் பேரில் தான் நடக்கிறது' என்று 1991ம் வருடம் எழுதியபோது நாம் தான் இதனை எழுதினோம் என்கிற இறுமாப்பு இருந்தது, ஆனால் இதனை ஐன்ஸ்டீனும் சொன்னார் என கேள்விப்பட்டபோது ஏராளமான மனிதர்கள் இதே கருத்தை ஒருவேளை கொண்டிருக்க கூடும் என்றே எண்ணத் தோன்றுகிறது. 

'கவலையை விடு, நடக்கிறதுதான் நடக்கும்' என சொல்லும் போதே கவலைப்படுதல் கூட ஒருவகை விதிப்பயன் என்றே நினைக்க வேண்டி வருகிறது. 

'ஆண்டவனின் பெயரால் இதனை செய்கிறோம் என்பதுவும், சாத்தானின் பெயரால் இதனை செய்கிறோம் என்பதுவும் ஒன்றும் பெரிய வித்தியாசம் இல்லை. எல்லாம் விதியின் வினைச்செயல். 

அஷ்டமாசித்திகளில் இந்த பிராப்தி எனப்படும் சித்தியின் மூலம் எல்லாவற்றையும் அடையலாம், அதாவது விரும்பியவை எல்லாம் கைகூடும் என்கிறார்கள். தகிதகித்துக் கொண்டிருக்கும் வெப்பத்தில் கூட எவ்வித பாதிப்பும் இல்லாமல் நமது உடலை அடையச் செய்ய விரும்பினால் சாத்தியம் என்கிறது இந்த சித்தி. எதிர்காலம் அறிந்து கொள்வது, பிறர் உடலில் புகுந்து கொள்வது, அமானுஷ்ய செயல்பாடுகள் எல்லாமே சாத்தியம் என்கிறது இந்த சித்தி. அதெப்படி சாத்தியம் என்றால் அதற்கு பிராப்தம் வேணும். அந்த பிராப்தம் தான் இந்த பிராப்தி சித்தி. இது சரியான அபத்தம் என்றே எனக்குத் தோன்றுகிறது. 

திருமூலர் கதையை பலரும் அறிந்து கொண்டிருப்பார்கள். திருமூலரின் கதையை திரித்து கூறுவதில் பலரும் கில்லாடிகளாக இருந்து இருக்கிறார்கள். கதைச் சுருக்கம் இதுதான். மாடு மேய்க்கும் மூலன் மரணம் அடைகிறான். மாடுகள் அவனது இறந்த உடலை சுற்றி அழுகின்றன. இதை தனது பிராப்தி சத்தியால் அறிகிறார் சித்தர். மாடுகளின் அன்பைக் கண்டு தனது உடலை ஓரிடத்தில் மறைத்துவிட்டு மூலனின் உடலில் புகுகிறார் சித்தர். இது பிராப்தி எனும் சித்தியால் வந்தது. அவர் இனி திருமூலர். நதிமூலம், ரிசிமூலம் பார்க்காதே என்பார்கள். 

இந்த கதையில் எண்ணற்ற கேள்விகள் எனக்குள் இருந்தாலும் அது எல்லாம் அவசியமற்ற ஒன்று என புறந்தள்ளி விடுவது சிறந்தது என்றே கருதி, இதே திருமூலர் கதையை இப்படித்தான் எழுத தோன்றுகிறது. 

''மூலன் என்பவன் மாடு மேய்க்கும் ஒரு சாதாரண மனிதன். அப்பொழுது சுந்தரர் எனும் சிந்தனையாளர், தெய்வபக்தியாளர் கயிலாயத்தில் இருந்து கிளம்பிய பயணத்தின் போது இவனை சந்திக்கும் வாய்ப்பை பெறுகிறார். அப்பொழது சுந்தரர், மூலனிடம் சிவன் பற்றி 'அன்பே சிவம்' போன்ற விசயங்கள் சொல்கிறார். மாடு மேய்த்தாலும் சரி, களை எடுத்தாலும் சரி மனதில் எழும் சிந்தனைகள் பாடல்களாக மாறுவது உண்டு. எத்தனையோ பேர்களிடம் சுந்தரர் விசயம் சொல்லி இருந்தாலும், இந்த மூலன் மிகவும் உன்னிப்பாக எல்லாவற்றையும் கேட்கிறான். 

மூலன், சுந்தரரின் சொற்பொழிவில் மயங்குகிறான், அவனது மனம் எல்லாம் சிவன் பற்றிய சிந்தனையிலும், மனிதர்களின் நலம் பற்றிய சிந்தனையிலும் புரள்கிறது. இப்பொழுது மூலன், சுந்தரரின் எண்ணத்திற்கு மாற்றப்படுகிறான்.
மூலன், தன்னுள் தான் ஒரு சாதாரண மனிதன் இல்லை, இவ்வுலகிற்கு சொல்ல நிறைய இருக்கிறது என உணர்கிறான். 

தனது மனைவியிடம் சென்று தான் சாதாரண மனிதன் இல்லை என்கிற விசயம் சொல்லி அதற்கு பின்னர் திருமந்திரம் போன்ற அருந்தகு விசயங்கள் பாடத் தொடங்குகிறான். மூலன், திருமூலர் ஆன வரலாறு இதுதான். மூலனுக்கு பிராப்தம் இருந்து இருக்கிறது. 

சுந்தரர், மூலனின் உடலில் எல்லாம் புகவில்லை. கறந்த பால் மடி புகா என்பதெல்லாம் அறிந்த விசயம், சிவவாக்கியர் குறிப்பிடுவது போல 'இறப்பன பிறப்பது இல்லை'. சுந்தரர், தனது எண்ணங்களை மூலனுக்குள் விதைத்தார். இப்படி எண்ணங்களின் ஆட்கொள்ளும் தன்மையது ஆண்டாளிடமும் இருந்தது. ஆண்டாள், ரங்கநாதனின் எண்ணங்களை தன்னுள் உருவாக்கிக் கொண்டாள். 

நமக்குள் நாம் உயரிய எண்ணங்களை உருவாக்கிட சொல்வதுதான் பிராப்தம். ஆமாம், எல்லாருக்கும் ஏனிந்த வாய்ப்பு இல்லை. அதுதான் விதிப்பயன். 

அஷ்டமாசித்திகள் எல்லாமே எண்ணங்களால் வயப்பட்டது. 'நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்' என்பதெல்லாம் மிகவும் சாதாரணமாக சொல்லப்பட்ட வாக்கியம் இல்லை. நம்மில் பலர் பிறரின் சிந்தனைகளுக்கு உட்பட்டே இருக்கிறோம். 

ஹிப்னாடிசம், மூளை சலவை என்பதெல்லாம் இந்த பிராப்தி தான். தான் விரும்பியவற்றை அடைதல். அந்த விரும்பியவற்றை அடைய எந்த வழியும் சரிதான் என்கிற நிலைப்பாடு பேராபத்தில் முடிய வாய்ப்பு உண்டு. அதையெல்லாம் விதிப்பயன் என்றே சொல்லி செல்கிறார்கள். 

'சிந்தனைகள் பிராப்தி' 

சூரியனை தொட இயலுமா?

சுட்டெரித்துவிடும் 

அதே வெப்பத்தை தாங்கிக்கொள்ளும் உபகரணம் இருப்பின் சூரியனைத் தொடுவது எளிதுதான். அதுவே பிராப்தி. 

ஒன்றை பெற விரும்பினால், அதை அடைய அதற்குரிய தகுந்த முயற்சிகள் செய்திட காரியம் சித்தி கூடும் என்பார்கள். அந்த அஷ்த்மாசித்திகளில் ஒன்றுதான் இந்த பிராப்தி. விரும்பியவற்றை அடைதல். 

நல்லதை விரும்புவோம், நாடும், உலகுமும் செழிப்புற வாழ்வோம். 

Tuesday 9 July 2013

காதலும் பின்விளைவுகளும்

''முளச்சு  மூணு இலை விடலை அதுக்குள்ளே என்ன காதல் வேண்டி கிடக்கு''. சத்தம் போட்டார் அப்பா. 

''அந்த புள்ளையோட என்ன எழவுக்குடா சுத்துற''. கத்தினார் அம்மா. 

வைக்கோல் படைப்புக்கு பின்னால், மாந்தோப்புக்குள் என மறைந்து மறைந்து காதல் செய்தாலும் எப்படியாவது வத்தி வைத்து விடுகிறார்கள். ஊர்காரர்களின் கண்கள் எல்லாம் யார் யார் தப்பு செய்கிறார்கள் என விளக்கெண்ணையை கண்ணில் விட்டு தேடிக்கொள்வார்கள் போல. காதல் ஒரு தப்பான செயல் என்றே சொல்லிக் கொண்டுத்  திரிகிறார்கள். 

''எனக்கு அந்த புள்ளையைப் பிடிச்சிருக்கு''. தலைகுனிந்தே சொன்னேன். 

''செருப்பு பிஞ்சிரும். அந்த விளக்கமாத்தை எடு''. அப்பா மிரட்டினார். 

''இவன் நம்ம மானத்தை வாங்கவே வந்து பிறந்து இருக்கான், இவனை தலமுழுகினாத்தான் சரி வரும்''. அம்மா அலட்டாமல் சொன்னார். 

''வீட்டைப் பக்கம் வராதே, வெளியே போ நாயே''. அப்பாவின் வார்த்தைகள் நாகரிகம் அற்று தெரித்தது.

எனது அக்காவும், தங்கையும் என்னை பாவமாக பார்ப்பது போல் எனக்குத் தெரிந்தது. 

''இங்க பாருவே, இனி அந்த புள்ளையோட சுத்தின உன்னை கண்டதுண்டமா வெட்டி போட்டுடுவேன்'' அப்பாவின் தீவிர குரல் என்னை எதுவும் செய்யவில்லை. தலைகுனிந்தே நின்று இருந்தேன். 

''பேசுறானா பாரு, ரண்டு பொட்ட புள்ளைக வீட்டுல இருக்கு மறந்துட்டியாவே'' அம்மா ஆயாசபட்டார். 

''சத்தியம் பண்ணுவே, இல்லைன்னா இப்பவே நாங்க செத்துப் போயிருவோம் அதோ அவள்களையும் சேர்த்துட்டு'' அம்மாவும் அப்பாவும் ஒரு சேர சொன்னார்கள். 

''இனி மேல் அந்த புள்ளையோட நான் சுத்தமாட்டேன்'' சத்தியம் பண்ணிக் கொடுத்தேன். 

இந்த பூலோக சரித்திரம், காதலுக்கு தரித்திரம். இந்த காதல் முன்னால் எதுவும் எம்மாத்திரம்? காதல் பற்றி நிறைய நிறைய படித்தேன். காவியங்கள், கதைகள், கவிதைகள் காதலைப் போற்றி சிறப்பித்துக் கொண்டிருந்தன. சகட்டு மேனிக்கு வராத இந்த காதல் ஒரு சரித்திரமாகவே தெரிந்தது. இந்த காதலுக்கு முன்னால் எதுவும் எனது கண்களுக்குத் தெரியாத போது, நீ இல்லாவிட்டால் நான் செத்துவிடுவேன், நான் இல்லாவிட்டால் நீ செத்துவிடுவாய் என்றெல்லாம் படித்து முடித்து இருந்தேன். பல விசயங்கள் படிக்க படிக்க மனம் பக்குவம் கொண்டது. 

காதலர்கள் எல்லாம் அவசர குடுக்கைகளாக இருந்து இருக்கிறார்கள் என புரிந்து போனது. காதலில் விவேகம் மிகவும் அவசியம் என்பதை ஒரு காவியம் சொல்லிய விதம்தனை படித்து மிகவும் நெகிழ்ந்து போனேன். 

சத்தியத்தை மீற வேண்டிய சூழலை உருவாக்கிட நினைத்தேன். இந்த காதலுக்கு முன்னால் அந்த சத்தியம் எல்லாம் எங்க ஊரு முனியாண்டி சாமிக்கு இடப்பட்ட சர்க்கரைப் பொங்கல் என கருதினேன். 

ஒரு நாள் இரவு அதுவும் அமாவசை இருட்டு. அந்த புள்ளையை சந்தித்தேன். 

''என் வீட்டுல சத்தியம் வாங்கிட்டாங்கடீ'' என்றேன். 

''என் வீட்டுலயும் அதே பிரச்சினைதான்'' என தேம்பி தேம்பி அழுதாள். 

''நான் ஒரு திட்டம் வைச்சிருக்கேன், அதுபடி நடப்போம்'' என்றேன். 

''என்ன திட்டம், ஓடிப்போறதா?'' என அழுகையின் ஊடே கேட்டாள். 

நான் படித்த காவியத்தை அவளிடம் மிகவும் ரகசியமாக ஆந்தைக்கு கூட கேட்டு விடாமல் சொல்லிவிட்டு கிளம்பினேன். அவளும் சம்மதம் சொன்னாள். 

இரு வீட்டார் சம்மதம் சொல்லி காதலுக்கு மரியாதை செய்வது, கல்யாணம் பண்ணிக்கொண்டு குழந்தையுடன் வந்து நின்றவுடன் ஏற்றுக்கொள்வது என்றெல்லாம் இவ்வுலகில் நடந்து கொண்டே இருக்கத்தான் செய்யும். இன்னும் என்ன என்ன காரணங்கள் காட்டியோ  காதல் எதிர்ப்புகளை நிறைய சம்பாதிக்கும். நொண்டி சாக்குக்கு எல்லாம் காதல் கண்ணீர் விட்டு கொண்டு இருக்கும். நாங்கள் இது போன்ற அந்த பிரமையில் இருந்து வெளியே வந்து இருந்தோம். 

எனது யோசனைப்படியே அவளும் நடந்து கொண்டாள். இப்போதெல்லாம் ஊர்க்காரர்கள் எங்களைப் பற்றி பேசுவதை நிறுத்தி இருந்தார்கள். நாங்கள் நேரில் பார்த்தாலும், பார்க்காதது போன்றே சென்றோம். எதுவும் பேசிக் கொள்வது இல்லை. 

காதலுக்கு மொழி அவசியமா என்றெல்லாம் ஆராய்ச்சி செய்வார்கள். காதலர்கள் ஒருவரை ஒருவர் பார்க்காமல் இருப்பது மிகவும் கடினம் என்றெல்லாம் சொல்லித் திரிவார்கள். ஆனால் பேசாமல், பார்க்காமல் காதலை எங்களுள் வளர்த்துக் கொண்டிருந்தோம். பேசாவிட்டால் ஓடிவிடக் கூடியதா காதல்? பார்க்காவிட்டால் பறந்து விடக்கூடியதா காதல்? 

பாசமாக வளர்த்த என்னை அந்த புள்ளையை காதலித்தேன் என்ற ஒரே ஒரு காரணம் காட்டி தங்களை மாய்த்து கொள்வது என முடிவு செய்த அம்மாவும், அப்பாவும். காதலித்தேன் என ஒரு ஒரே காரணம் காட்டி என்னை மகன் இல்லை என்று முடிவு செய்த அவர்களின் செயல்பாடுகள் விசித்திரமானவை தான்.  

ஊர்ப்பழி வந்து சேருமே எனும் ஒரு அச்சுறுத்தலும், மகள்களை எப்படி கரை சேர்ப்பது என்கிற கண்றாவி கவலையும் இந்த காதல் எல்லாம் அருவெருப்பான விசயமாகவே இன்னமும் அவர்களுக்கு தெரிகிறது. இதில் கள்ளக்காதல், நொள்ளைக் காதல் வேறு. இன்னும் சில காலங்களில் நான் சொன்ன ரகசியத்தின் படி  நானும் அந்த புள்ளையும் நடந்து கொண்டு இருப்பதால் எனது பெற்றோர்கள், அவளது பெற்றோர்கள், ஏன் எங்கள் ஊரே மாறிவிடும். 

ரகசியம் சொன்ன காவியத்தின் சிறுபகுதி  இதுதான். 

என் பெயர் ராம். அவள் பெயர் சீதா. என் குலமும் அவளது குலமும் ஒன்று. என் பணமும் அவளது பணமும் ஒன்று. என் உறவினரும், அவளது உறவினரும் ஒன்று. தராசில் நிற்க வைக்க நானும் அவளும் எல்லா விதத்திலும் சமம். இனி எங்களுள் காதல் வரின் அதற்கு எதிர்ப்பு இல்லை. 

ஒரு பெண்ணை காதலிக்கத் தொடங்கிய மறுகணம் அவளை மட்டுமே காதலிப்பது என்பது கூடாது. அவளை சுற்றியிருக்கும் எல்லாவற்றையும் காதலிக்க கற்றுக் கொள்ள வேண்டும். அதைப் போன்றே அந்த பெண்ணும் காதலிக்க கற்றுக் கொள்ள வேண்டும். காதல் ஒருங்கிணைக்கும், உருக்குலைக்காது. 

காதலித்து திருமணம் புரிந்த பின்னரும் வரும் கருத்து வேறுபாடுகள், வெறுப்புகள் எல்லாம் காதலை மிகவும் கொச்சைப்படுத்துகின்றன. இவர்கள் காதலித்துதானே கல்யாணம் பண்ணினார்கள் என்றே கேள்வி எழுப்பபடுகின்றன. காலத்திற்கேற்ப நமது ஆசைகள் நிராசைகள் காதலை கொச்சைப்படுத்த தயங்குவதே இல்லை.  காதல் எப்படி வரும் என்றே எவருக்கும் தெரிவதில்லை. காதல் எப்படி போகும் என்றே எவருக்கும் புரிவது இல்லை. 

ஆனால்...

காதல் புரிந்து கொள்ளும். காதல், புரியாவிட்டால் மட்டுமே கொல்லும் .

Sunday 7 July 2013

பரிணாமத்தில் ராமர் போட்ட கோடு

எனது மனநிலையும், எனது செயல்பாடுகளும் என்னை மிகவும் வாட்டி எடுத்துக் கொண்டு இருக்கின்றன. எதற்காக நான் இப்படி இருக்கிறேன், எதற்காக இப்படி செயல்படுகிறேன் என்ற எண்ணம் என்னை சுற்றிக் கொண்டே வருகின்றன. என்னை எவரேனும் கட்டுப்பாட்டில் வைத்து இப்படித்தான் நான் வாழ வேண்டும் என தீர்மானித்து கிறுக்குத்தனம் பண்ணிக் கொண்டு இருக்கிறார்களா என்றெல்லாம் என்னுள் தீவிர யோசனை சில நாட்களாய் வந்து கொண்டே இருக்கிறது. நானா இப்படி நடந்து கொள்வது என்கிற எண்ணம் என்னை உருக்குலைய செய்து கொண்டிருந்தது.

அப்போது 'பக்தா' எனும் அழைப்பு என்னை உலுக்கி விட்டது. என்னைத் தேடி எதற்கு இந்த சாமியார் வந்து தொலைய வேண்டும் என்ற எண்ணத்துடன் 'என்ன' என மட்டு மரியாதை இல்லாமல் கேட்டு வைத்தேன். 'நீ ஏதோ சஞ்சலத்தில் அல்லாடிக் கொண்டிருப்பது போன்று தெரிகிறதே' என்றார். 'யார் இந்த சாமியார், நான் சஞ்சலத்தில் உட்பட்டால் இவருக்கு என்ன' என எண்ணிக்கொண்டு 'உன்கிட்ட வந்து நான் ஏதாவது சொன்னேனா, பெரிசா கேட்க வந்துட்ட' என கோபத்துடன் அவரை நோக்கி சொன்னேன். 'நீ சொன்னால்தான் நான் வர வேண்டும் என்பது என்றில்லை, உனக்கு ஏதாவது நேரும் எனில் நான் அங்கே இருப்பது எனக்கு சௌகரியமான ஒன்று' என்றார் மேலும்.

'நா உன்கிட்ட பேச எதுவும் இல்லை, நீ பேசாம போயிரு' என கத்தினேன். சாமியார் புன்னகையுடன் நின்று கொண்டிருந்தார். 'போனு சொல்றேனில்ல' என மறுபடியும் உறுமினேன். சாமியார் வீட்டு வாசற்கதவை திறந்து கொண்டு வெளியில் சென்றார். 'போய் தொலையட்டும்' என்றே கோபம் தணிந்தேன்.

சிறிது நாழிகைக்குப் பின்னர் 'பக்தா' என்றே ஒரு அழைப்பு வந்து சேர்ந்தது. இம்முறை சாமியார் எதுவும் பேசாமல் நின்றார். 'என்ன வேண்டும் சொல்லுங்கள்' என்றேன். 'நீ சஞ்சலத்தில் உட்பட்டு இருப்பது எனக்கு சௌகரியமாக இல்லை, அதனால் ராமருக்கு அணில் செய்த சிறு உதவி போல் உனக்கு செய்யலாம் என்றே வந்தேன்' என்றார்.

'ராமர், அணில்' எனக்கு சாமியாரிடம் இதுகுறித்து கேட்க வேண்டும் என தோன்றியது. 'அணில் அப்படி என்ன ராமருக்கு உதவி செய்தது?' என்றேன். 'லங்கேஷ்வரம் செல்ல ராமர் பாலம் கட்டியபோது, அணில் ஒரு புறம் மண்ணில் புரண்டு, உடம்பில் ஒட்டிய மண்ணை அடுத்த பக்கத்தில் சென்று கொட்டி விட்டு மீண்டும் மறுபுறம் வந்து மண்ணை உடலில் ஒட்டிக்கொண்டு அடுத்த பக்கம் சென்று கொட்டியது. அணிலின் இந்த செய்கையை கண்டு ராமர் மனம் நெகிழ்ந்து அந்த அணிலின் முதுகில்  மூன்று விரல்களால் தடவி கொடுத்தபோது விழுந்த கோடுகள் தான் அந்த வெள்ளைக் கோடுகள்' என்றார் சாமியார்.

அணில் கதை கேட்டு நான் நெகிழ்ந்து போனேன். ஒரு சின்ன அணிலுக்கு எப்படி அப்படி ஒரு எண்ணம் தோன்றியது என்றே எனது மனம் நினைத்தது. 'என்ன யோசனை' என்றார் சாமியார். 'தன்னால் இயன்ற உதவியை அணில் நம்மால் என்ன ஆகும் என எண்ணாமல் செய்தது கண்டு மனம் பரவசமானது' என்றேன். 'எவருக்கேனும் துன்பம் நேர்கையில் அவருக்கு முடிந்த அளவு சிறு உதவி செய்தல் நலம்' என்றார் சாமியார். 'மனதில் எந்த சஞ்சலமும் இனி வேண்டாம்' என்றார்.

'ஆமாம் சாமி, இவ்வுலகில் எல்லா அணிலுக்குமா மூன்று கோடுகள் இருக்கின்றன' என்றேன். இந்த அணில் வம்சம் நாற்பது மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றியது. வெவ்வேறு வகையான அணில்கள் இவ்வுலகில் உண்டு. ஆனால் மூன்று கோடுகள் கொண்ட அணில்கள் இந்தியாவிலும், இலங்கையிலும் மட்டுமே உண்டு. வட இந்தியாவில் ஐந்து கோடுகள் கொண்ட அணில்கள் வகையும் உண்டு. சில பறக்கும் அணில்கள் கூட இந்த புவியில் உண்டு; என்றார் சாமியார்.

'ஆமாம் சாமி, இந்த ராமாயணம் நடந்த கால கட்டத்திற்கு முன்னர் இந்த மூன்று கோடுகள் கொண்ட அணில்கள்  இந்தியாவில், இலங்கையில் இல்லையா?' என்றேன். 'மனம் சஞ்சலம் ஆகாது, வெள்ளை அணில்களும் தற்போதைய காலத்திலும் உண்டு' என்றார் சாமியார். பட்டென விழித்துக் கொண்டேன்.

இனிமேல் இப்படித்தான் இருக்க வேண்டும், என்னைப் பற்றி எனக்குள் உயர்வான எண்ணம் வேண்டும் என்றே உறுதி கொண்டேன். அணில் ராமருக்கு செய்தது சிறு உதவிதான், எனக்கு செய்தது பெரும் உதவி. கோடுகள் போட அணில்கள் தேடுகின்றேன்.






Thursday 20 June 2013

அஷ்டமாசித்திகளும் அகிலாண்டீஸ்வரியும் - 5

இலகிமா, இதை காற்றை போல் மென்மையாதல் என்றே குறிப்பிடுகிறார்கள். வானத்தில் பறக்கும் சக்தியை இது கொடுக்கும் என்றும், நீரில் மீது நடக்கும் சக்தியை தரும் என்றே கருதப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை அருகில் ஒரு சித்தர் இப்படி வானில் பறந்ததாக சமீபத்தில் ஒரு கதை படித்தேன்.

ஒல்லியான உருவம் கொண்டவரை 'காற்று அடித்தால் உன்னை தூக்கிக் கொண்டு போய்விடும்' எனும் ஒரு நகைச்சுவை சொல்வழக்கு உண்டு. பறப்பவை எல்லாம் பறவைகள் என்றுதான் குறிப்பிடப்பட்டு வருகின்றன, ஆனால் மனிதன் பறக்கும் தன்மையை பெற்று இருக்கவில்லை. ஆனால் ஹனுமார் பறந்து சென்றே சஞ்சீவி மலையை பெயர்த்து எடுத்து வந்ததாக புராணங்கள் குறித்து வைக்கிறது.

இவை எல்லாம் அமானுஷ்ய தன்மைகள் என்றும் சொல்லப்பட்டு வருகின்றன. உண்மையிலேயே எங்கே ஈர்ப்பு சக்தி குறைவாக இருக்கிறதோ அங்கே பறக்கும் தன்மையை மனிதன் பெற இயலும். உதாரணத்திற்கு நிலவை குறிப்பிடலாம். ஒரு பொருளின் நிறை எந்த இடத்திற்கு சென்றாலும் மாறாது, ஆனால் ஒரு பொருளின் எடை மாறும்.

ஒரு பொருளின் எடையானது அந்த இடத்தின் ஈர்ப்பு விசையின் தன்மையை பொறுத்தே அமைகின்றன. பூமியின் ஈர்ப்பு விசை ஒரு கிலோவுக்கு பத்து நியூட்டன் என்றே கணக்கிட்டு வைத்து இருக்கிறார்கள். வியாழனில் இந்த ஈர்ப்பு விசை ஒரு கிலோவுக்கு இருப்பத்தி நான்கு நியூட்டன். இப்படி ஒவ்வொரு கோள்களிலும் ஈர்ப்பு விசை மாறுபாடு அடைகிறது. இந்த ஈர்ப்பு விசை ஒரு பொருளின் நிறையை பொருத்து அமைகிறது எனலாம். ஒன்றில் ஈர்ப்பு அதிகமாக அதிகமாக பிரச்சினைகள் அதிகமாகும்.

ஒரு விசயத்தில் பற்று கொண்டு அதனிலே உழன்று மன நோயிற்கு உட்பட்டு பாதிப்புக்கு உள்ளாவோர் நிறையவே உண்டு. அங்கே 'மனம் பாரமாக இருக்கிறது' என பொருள். இப்பொழுது அவர்கள் மிகவும் கனமாக உணர்வார்கள். அந்த நபர்களின் பிரச்சினையை தீர்க்கும் வண்ணம் எவரேனும் அவருக்கு வாய்த்தல் அவர்கள் மிகவும் இலகுவாக உணர்வார்கள். 'இப்போதான் மனசு ரொம்ப லேசா இருக்கு' இதுதான் இலகிமா.

மனசு லேசாக இருக்கும்போது காற்றில் பறப்பது போன்ற ஒரு உணர்வு வரும். மென்மையான தன்மை நம்மில் உருவாகும். இப்படி மென்மையான தன்மை வரும் பட்சத்தில் பிற உயிர்களுக்கு தீங்கிழைக்கும் எண்ணம் அடியோடு ஒழிந்து போகும். நல்லதையே நினைக்கும், நல்லதையே செய்ய துடிக்கும் எண்ணங்கள் மட்டுமே பீறிடும்.

இப்படிப்பட்ட உணர்வு இந்த உலகத்தில் அத்தனை எளிதாக நாம் அடைய இயலாது என்றாகி விட்டது. பிரச்சினைகளால் உந்தப்பட்டு எவரால் நமக்கு தொல்லை வருமோ, என்ன என்ன எழரைகள் வந்து சேருமோ எனும் அச்சத்தில் வாழ்க்கையை கழித்து கொண்டு இருக்கும் மானுடருக்கு இந்த மென்மையான தன்மை ஒரு அமானுஷ்ய தன்மையாக மாறிப்போனதில் ஆச்சரியமில்லை.

இப்படிப்பட்ட மன அழுத்தத்தில் சிக்கிக் கொண்டு இருப்போருக்கு ஆறுதல் தரவே அகிலாண்டீஸ்வரி வரம் புரிகிறார். கோவிலுக்கு செல்வோம், நூலகங்களுக்கு செல்வோம். இறைவனிடம் மனம் விட்டு பேசுவோம். அவர் எதிர்பேச்சு எதுவும் பேசமாட்டார். எவரிடமும் சென்று நமது குறைகள் பற்றி கேலி பண்ண மாட்டார். ஆனால் ஒன்றே ஒன்று, இறைவனிடம் சொல்லிவிட்டோம், நமது குறைகள் தீர்ந்துவிட்டது என நாம் நம்பிக்கை கொள்வோம். மனம் லேசாகிவிடும். அப்படியே வாழப் பழகுவோம் .

பிரச்சினைகளில் மூழ்கி தவிப்போருக்கு வெளிவரவே இறைவன் எனும் பாடம் நமக்கு சொல்லப்பட்டது. ஆனால் இந்த இறைவனையும் பிரச்சினைக்கு உட்படுத்தி அசிங்கபடுத்தி பார்ப்பதில் நமக்கு நிகர் எவருமில்லை.

''ஏன்  ஒருமாதிரியா இருக்கே, என்னப்பா பிரச்சினை?''

''ஒண்ணுமில்லை''

''இதுதான் பிரச்சினையா?''

''இல்லை, அது வந்து...''

பிரச்சினைகளில் இருந்து வெளிவர வேண்டுமெனில் மனதை லேசாக மாற்ற முயற்சிப்போம். இலகிமா, சித்தர்களுக்கு மட்டுமல்ல, நமக்கும் அவசியம்.





Wednesday 19 June 2013

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 14

காயத்ரி கர்மவினை என சொன்னதும் நான் பேசாமல் எழுந்து சென்று விட்டேன். எனக்கு இந்த கர்மவினை எல்லாம் சுத்த பொய் என்றே தோன்றியது. ஒரு செல் உயிரினத்தில் இருந்து பல செல்கள் கொண்ட உயிரினம் தோன்றிட என்ன அவசியம் வந்து சேர்ந்தது என்றே எண்ணினேன்.

மறுநாள் நானும் காயத்ரியும் கல்லூரிக்கு சென்ற வழியில் நான் எதுவும் பேசாமல் நடந்தேன். காயத்ரியும் எதுவும் பேசாமல் நடந்து வந்தாள். ஆனால் என்னால் பேசாமல் இருக்க இயலவில்லை.

''என்ன எதுவும் பேசாமல் வர''

''என்ன பேசனும்''

சில நேரங்களில் நமது மனம் நடந்து கொள்ளும் விதத்தை நினைத்தால் மிகவும் விந்தையாக இருக்கிறது. நூல் பல கற்பினும் உண்மை அறிவே மிகும் என்பது எனக்கு மிகவும் அதிசயம் தந்த வரிகள்.  படித்த முட்டாள்கள் எனும் அடைமொழி எனக்கு மிகவும் நேசிப்புக்குரியவை. இதையே ஒரு பொருளாக பேச நினைத்தேன்.

''நூல் பல கற்பினும் உண்மை அறிவே மிகும் தெரியுமா காயூ?''

''என்ன சொல்ல வர?''

''அந்த வரிக்கு அர்த்தம் தெரியுமானு கேட்டேன்''

''தெரியும், அதுக்கு இன்ன இப்போ?''

அவளது பிடி கொடுக்காத பேச்சில் எனக்கு பிடித்தம் இல்லை. படித்த முட்டாள்கள் என்றே சொல்லி வைத்தேன். அவளுக்கு கோபம் வந்து இருக்க வேண்டும்.

''என் அக்காவை பத்தி எதுவும் பேசனும்னா நேரடியா பேசு''

''காயூ, நான் எப்போ என்ன சொன்னேன்''

''படித்த முட்டாள்கள் சொன்ன''

''கர்ம வினையை கை காட்டுபவர்கள் படித்த முட்டாள்கள் என்றேன்''

''என்னையவா முட்டாள்னு சொல்ற''

வினையே வேண்டாம் என்று பேசாமல் இருந்திட நினைத்தேன். ஆனால் அவளோ மிகவும் கோபம் கொண்டாள்.

''எதுக்கு எடுத்தாலும் கர்ம வினை கர்ம வினைன்னு சொல்றியே, அதுக்கு என்ன அர்த்தம்?''

''அதுக்கு அது அது அப்படித்தான் நடக்கும்னு அர்த்தம், நீ சொன்னியே பல நூல் கற்பினும் உண்மை அறிவே மிகும் அப்படின்னு, அது கூட கர்மவினையின் செயல்பாடு. இப்படி இப்படி வாழனும்னு ஒரு வழிமுறை இருக்கறப்போ எதுக்கு மனுசங்க எல்லாம் தடுமாறனும், சொல்லு பார்க்கலாம்''

காயத்ரியின் மனதில் அவளது தந்தையின் செயல்பாடு பெரும் பாதிப்புதனை ஏற்படுத்தி இருந்ததை உறுதி படுத்தி கொள்ள முடிந்தது.

''அது வந்து....''

''முருகேசா, எப்படிடா இருக்க?'' வழியில் நான் கேட்ட சுபத்ராவின் வார்த்தைகள் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தின. சுபத்ரா பத்தாம் வகுப்பு வரை என்னோடு படித்தவள். மெல்லிய உருவம். எப்போதும் கலகலப்பான பேச்சு. தினமும் தவறாமல் எனக்கும் சேர்த்து அவள் வீட்டில் இருந்து மதிய உணவு கொண்டு வருவாள். என்னை விட மிகவும் நன்றாகவே படிப்பாள்.

அவளது தந்தையின் வேலை மாற்றம் காரணமாக பத்தாம் வகுப்பு முடித்த கையோடு வேறு ஊரு சென்றுவிட்டார்கள். இரண்டு வருடங்கள் பின்னர் இன்றுதான் அவளை முதன் முதலில் பார்க்கிறேன். சுபத்ராவை பார்த்த மாத்திரத்தில் காயத்ரியை பார்த்தேன்.

(தொடரும்) 

Sunday 9 June 2013

கணினி தெரிந்த அர்ச்சகர் தேவை

லண்டன் ஸ்ரீமஹாலக்ஷ்மி (http://www.srimahalakshmitemple.net) ஆலயத்தில் கணினி (கம்ப்யூட்டர்) தெரிந்த அர்ச்சகருக்கு வேலை வாய்ப்பு.

இறைவனுக்குத் தொண்டு செய்ய விருப்பமுள்ள அர்ச்சகருக்கு (சிவாச்சாரியார் அல்லவது வைணவம்) கணினியில் போதிய அளவு அடிப்படை திறமை இருத்தல் வேண்டும் (word, excel, powerpoint, access). கோவிலில் பெறப்படும் நன்கொடைகள், பூஜை மற்றும் அர்ச்சனை போன்ற கணக்கு வழக்குகளை சரிப்பார்த்தல் அவசியம்.

பக்தர்களின் குறிப்புகளை கணினியில் சேமித்தல், கோவிலின் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் கணக்குளை ஒழுங்கு மற்றும் மேம்படுத்துதல் போன்ற அர்ச்சகர் பணியுடன் கூடிய இந்த கணினி சம்பந்தமான பணியில் விருப்பமுள்ளவர்கள் ஆலய நிர்வாகிகளை இந்த இ-மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும். info@srimahalakshmitemple.net

உங்கள் விண்ணப்பங்களை ஜூன் மாதம் 25ம் தேதிக்குள் அனுப்பவும்.

மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம், அதில் தங்கும் வசதி, உணவு வசதி, வரி கட்டுதல், இன்சூரன்ஸ்  பிடித்தம் போக முப்பத்து ஆறாயிரம் ரூபாய் சம்பளமாக உங்கள் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.


Tuesday 26 March 2013

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள்-13

காயத்ரியும் நானும் என்ன சொல்வது என தெரியாமல் ரங்கநாதன் வீட்டில் இருந்து கிளம்பினோம். சில விசயங்கள் மிகவும் விசித்திரமாகவே காட்சி அளிக்கிறது. கர்மவினை என்னை துரத்தியது.

''உங்க அக்கா பண்ணின காரியத்தை நீ பார்த்தியா''

''ம்ம்''

''இதெல்லாம் கர்ம வினையா?''

''ஆமா''

''இல்லை. இது தன்வினை. தன்வினை தன்னைச் சுடும். உங்க அக்கா எதுக்கு ரங்கநாதனை காதலிக்கனும், அப்புறம் வேணாம்னு சொல்லி நடிக்கனும். இதெல்லாம் ஒரு நல்ல பொண்ணு செய்ற காரியமா? அதுவும் நம்மகிட்ட எதுவும் சொல்லாம!''

''நீ கேட்டு இருக்கனும், நான் அவகிட்ட எதுவும் விவரமா கேட்டது இல்ல, அவளும் என்கிட்டே சொன்னது இல்ல''

''ஓஹோ அதுதான் கர்ம வினையா?''

''ஆமா''

எனக்கு காயத்ரி மீது இனம் புரியாத கவலை வந்து சேர்ந்தது. கர்ம வினை என்பதில் கருத்தாக இருக்கிறாளே என அச்சம் வந்து சேர்ந்தது. ஒருவேளை எங்களது காதல் கை கூடாமல் போனால் கர்ம வினை என சொல்லிவிடுவாளோ என அச்சம் வந்து சேர்ந்தது. வீட்டை வந்து சேர்ந்தபோது இருட்டி இருந்தது. காயத்ரியின் அக்காவிடம் நேராக சென்றேன்.

''என்ன சொன்னாங்க''

''அந்த பையனுக்கு வேற பொண்ணு பார்த்துட்டாங்களாம்''

காயத்ரியின் அக்காவின் முகம் ஏமாற்றத்தில் உறைந்து போனது போல இருந்தது.

''இல்ல அக்கா, நீயும் அவரும் காதலிக்கிறதா சொன்னாங்க. உன்னைத் தவிர வேற பொண்ணை அவர் கல்யாணம் பண்ண மாட்டாராம், பார்த்தா ரொம்ப நல்லவரா இருக்காருக்கா''

''காயூ நீ வேற வீட்டுக்குப் போனியா''

''சும்மா இரு முருகேசு, அக்கா வா தனியா பேசனும்''

அக்காவும் தங்கையுமாய் மாடிக்கு சென்றார்கள். நான் எனது அம்மாவிடம் சென்றேன். அப்பாவும் அமர்ந்து இருந்தார்.

''போன காரியம் என்ன ஆச்சு''

''அது எல்லாம் ஒன்னும் இல்லம்மா, எந்த பிரச்சினையும் இல்ல. கல்யாண செலவு வந்து இருக்கு''

''என்ன சொல்ற முருகேசு''

ரங்கநாதன் வீட்டில் நடந்த விசயத்தை விரிவாக சொன்னேன்.

''ரொம்ப சந்தோசமான விசயம் தானே''

''ஆமாம்மா, ஆனா காயத்ரி அக்கா தான்''

''தன்னோட குடும்ப நிலையை நினைச்சி அப்படி ஒரு முடிவுக்கு அவ வந்து இருப்பா''

அப்பாவின் ஆருடம் சரியாகவே எனக்குப் பட்டது. எனது தலையில் சுற்றிக் கொண்டு இருந்த கர்ம வினை என் முன்னாள் வந்து விழுந்தது. அப்பாவிடமும் அம்மாவிடமும் கர்ம வினை பற்றி சொன்னேன். அப்பா சிரித்துக் கொண்டே எழுந்தார். அம்மா முகத்தை சுளித்தார்.

''உங்க அம்மாவை கட்டிக்கிட்டது என் கர்ம வினை''

''ஆமா ஆமா, உங்களை கட்டிக்கிட்டது என் கர்மவினை''

''அம்மா, அப்பா. அப்படின்னா நான் உங்களுக்கு பிறந்தது கர்மவினையா''

வேகமாக சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியில் வந்தேன். பறந்து விரிந்த வானம். அதில் நட்சத்திரங்கள். ஒரு சின்ன நிலா. இவை எல்லாம் எந்த கர்ம வினையால் உருவானவை. இது ஒரு நிகழ்தகவா.

'Species are adopted to environmental conditions and these environmental conditions must favour to support life forms. Unless the environmental conditions support the life, there is little chance for anything to develop in that particular environment'

கர்ம வினையை தாண்டி கல்லூரியில் ஆசிரியர் சொன்ன வாசகம் தலையில் வந்து உட்கார்ந்தது.

''முருகேசு, சாப்பிட வாப்பா''

அம்மாவின் அழைப்பு சத்தம் கேட்டு உள்ளே சென்றேன். காயத்ரி, அவளது அக்கா, என் அப்பா சாப்பிட அமர்ந்து இருந்தார்கள். அப்பாதான் முதலில் ஆரம்பித்தார்.

''உங்க அப்பா பத்தி எல்லாம் கவலைப் படாதம்மா, நான் எல்லாம் அந்த பையன் கிட்ட சொல்லி புரிய வைக்கிறேன். இந்த வாரம் அவங்க உன்னை பொண்ணு பார்க்க வரட்டும். அந்த பையன் கிட்ட நானே சொல்றேன்''

அப்பாவின் பேச்சு முடிந்ததும் நான் சொன்னேன்.

''எதுக்கு எப்ப பார்த்தாலும் பொண்ணு பார்க்க வரனும், மாப்பிள்ளை பார்க்க போனா என்ன, அதனால இந்த வாரம் நாம போகலாம், காயூ என்ன சொல்ற''

''ம்ம், அக்காவுக்கு முழு சம்மதம்''

வரும் ஞாயிறு அன்று ரங்கநாதன் வீடு செல்வதாக முடிவு செய்தோம். நானும் காயத்ரியும் மாடிக்கு சென்றோம்.

''உன் அக்கா கிட்ட என்ன பேசின''

''கர்ம வினை''

(தொடரும்)

Friday 15 March 2013

அஷ்டமாசித்திகளும் அகிலாண்டீஸ்வரியும் - 4

அடுத்தது கரிமா. இதை விண்டன்மை என்றும் உடலை மிகவும் பருமனாக்குதல் என்றும் குறிப்பிடுகிறார்கள். எந்த ஒரு விசயத்தாலும் நமது உடலை அகற்ற இயலாதபடி தடிமனாக்குதல். இதெல்லாம் ஒரு விளையாட்டுத் தனமாகவே இருக்கிறது. மலைகளை, பாறைகளை எல்லாம் சுக்கு நூறாக்கிவிடும் தொழில்நுட்ப கால கட்டத்தில் உடலை தடிமனாக்கி எதன் மூலமும் அசைக்க இயலாத தன்மை என்பதெல்லாம் சற்று கடினமான விசயம் தான்.

பொதுவாகவே உறுதி என்றால் மலைகளை குறிப்பிடுவார்கள். அப்படிப்பட்ட உறுதியுடன் கூடிய உடல் பெறுவது என்பது மிகவும் அவசியமான ஒன்றாகவே இருக்கிறது. நமது உடலில் மிகவும் முக்கியமாக கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன், நைட்ரஜன் போன்ற தனிமங்கள் கூட்டு தன்மையுடன் பல மூலக்கூறுகளை உருவாக்கி இருக்கிறது. இப்படிப்பட்ட தனிமங்கள், மூலக்கூறுகள் எல்லாம் நாம் உண்ணும் உணவின் மூலம் பெற்றுக் கொள்கிறோம். திடகாத்திரமான உடல் என்பதெல்லாம் தவத்தால் வருவதில்லை. நாம் உண்ணும் உணவின் மூலமும், நாம் கடைபிடிக்கும் உடற்பயிற்சி மூலமும் வருகிறது.

வல்லவனுக்கு வல்லவன் இவ்வையகத்தில் உண்டு என்பது போல உடலின் வலு வெவ்வேறாக பார்க்கப்படுகிறது. தசைகள், நரம்புகள், எலும்புகள் என ஆன உடம்பு காற்று அடித்தால் பறந்து விடும் என இருந்தால் அதன் மூலம் பயன் என்ன? அதே வேளையில் உடலானது வெறும் தசைகளால் பருத்து இருப்பது கரிமா எனப்பட மாட்டாது. இப்படிப்பட்ட கரிமா தனை பரிசீலனை செய்ய மல்யுத்தம் போன்ற வித்தைகள் எல்லாம் வந்து சேர்ந்தன எனலாம்.

உடலில் உள்ள உறுப்பு தானங்கள் எல்லாம் இப்போது பெருகி விட்ட கால சூழலில் உடலை பேணி காப்பது மிகவும் அத்தியாவசியமாகிறது. எதற்கும் அசைந்து கொடுக்க கூடாது என்றே குறிப்பிடப்படுகிறது. அதாவது மனம் இங்கே பெருமளவில் பேசப்படுகிறது. எந்த ஒரு தீய சக்திக்கும் அசைந்து கொடுக்காத மனது தான் கரிமா. மனது திடத்தன்மையுடன் இருக்கும் பட்சத்தில் மட்டுமே உடலின் திடத்தன்மை வந்து சேரும். எண்ணங்களை திடப்படுத்துதல். உறுதியான எண்ணங்கள். சஞ்சலமற்ற செயல்திறன் கொண்ட எண்ணங்கள்.

மன உறுதி இல்லாத பட்சத்தில் உடல் பலம் ஒரு பலனும் அளிப்பது இல்லை என உணர்த்த வந்ததே இந்த கரிமா. இப்படிபட்ட சித்தியை அனைவரும் பெற்றுக் கொள்வதில் எந்த தடையும் இல்லை. ஆனால் இன்றைய கால கட்டத்தில் மனது பலவித விசயங்களால் பாதிப்புக்கு உள்ளாகி உடல் உபாதைகள் அதிகம் ஆகிக் கொண்டே வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில் உடல் எப்படி வளர்ப்பது?

உடலில் உள்ள செல்கள் தம்மை தாமே பெருக்கி கொண்டும், தங்களை தாங்களே புதுப்பித்துக் கொண்டும் வருகின்றன. ஒரு மனித வாழ்வில் இந்த செல்களில்  ஏற்படும் மாற்றமே இளமை முதுமை என்றெல்லாம் சொல்லப்பட்டு வருகிறது. மார்கண்டேயன் பற்றி அறியாதவர் இல்லை. இளமையுடன், வளமையுடன், உறுதியுடன் வாழ்வது என்பது நாம் நமது எண்ணங்களை உறுதிபடுத்துவதில் தான் இருக்கிறது.

இப்படிப்பட்ட கரிமா சக்தி பெற்றுவிட்டால் நம்மை எவரும்அசைக்க இயலாது என்பதுதான் உண்மை. உடல் உறுதிக்கு மன உறுதி அவசியம். மன உறுதி கரிமா. அணிமா, மகிமா, கரிமா! எண்ணங்களினால் ஆனது அஷ்டமாசித்திகள்.

(தொடரும்) 

Wednesday 6 March 2013

நீ பேசுவதில் இருக்கிறது

கல்யாணத்திற்கு முன்னர்
நீ பேசமாட்டாயா
என்றே இருந்தது
கல்யாணத்திற்கு பின்னர்
நீ எதற்கு பேசுகிறாய்
என்றே இருக்கிறது
எவரோ எழுதிய வரிகள்
அவை இனி நம் வாழ்வில்
வருமா புரியவில்லை 

என்னோடு பேச
வருபவர்களைவிட
உன்னோடு
பேசிக்கொண்டிருப்பது மட்டுமே
எனக்குப் பிடிக்கும்.

உன்னை என் அம்மாவிடம்
அழைத்து சென்று
அம்மாவிடம்
உன்னைப்போல் ஒரு பெண்
என்றே உன்னை
காட்டிடத் தோணும்

அம்மாவும் தனது பாரம்
குறைந்ததாய் கண்கள்
நனைத்து கொள்வார்
என்னை காத்திட
நீ கிடைத்தாய் என்றே
பூரித்து கொள்வார்

மௌனமாய் நீ அமர்ந்து
இருந்தால்
மரணத்தை தழுவுவது
போன்றே நெஞ்சில் ஊர்கிறது

மௌனத்தை கலைத்திட
வார்த்தை ஒன்றை
தேர்ந்தெடுத்திட தேடுகையில்
ஏதேதோ பேசி முடித்துவிட்டாய்

நீ பேசிய வார்த்தைகள்
எதுவுமே நினைவில் இல்லை
மௌனத்தில் நீ அமர்ந்து
கொள்வது
மரணத்தை நான்
தழுவுவது போன்றது

இனிமேல் நீ பேசுவதில் தான்
இருக்கிறது
நமது காதலும்
காதல் வாழ்வும். 

Thursday 14 February 2013

அஷ்டமாசித்திகளும் அகிலாண்டீஸ்வரியும் - 3

பகுதி  2 

மகிமா என்பது மலை போன்று பெரிதாவது என்றே குறிப்பிடபடுகிறது. விஸ்வரூபம் என்பது கூட ஒருவகையான சித்தி என்றே கணக்கில் எடுத்து கொள்ளப்படுகிறது. ஒரு சிறு விதை விருட்சமாவது என்பதை எவரும் மறுக்க இயலாது. ஆனால் விருட்சமான மரமானது மேலும் அதுவும் கணநொடியில் மேலும் விருட்சம் என்பது அபூர்வமான ஒன்றாகவும், நம்ப முடியாத விசயமாகவே நமது எண்ணத்திற்கு தோற்றம் அளிக்க கூடியவனாக இருக்கின்றன. 

ஆனால் இப்படிப்பட்ட மகிமா சக்தியை சித்தர்கள் பெற்று இருந்தார்கள் என்றே இன்னமும் சொல்லப்பட்டு வருகிறது. மகாபாரதத்தில் வரும் விஷ்ணுவின் அவதாரம், கிருஷ்ணரின் விஸ்வரூபம் கூட இந்த கணக்கில் தான் எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஆனால் இதுவரை எவரும் மனித உருவினை விஸ்வரூபம் எடுத்து பெரிதாக காட்டியதாக வரலாறு குறிக்கவே இல்லை. அப்படியெனில் இந்த மகிமா சாத்தியமா? சாத்தியம் அற்றதா? ஒன்று நம்மால் முடியாதவரை அது சாத்தியம் அற்றது என்றே கருதப்பட்டு வருகிறது. ஆனால் அதற்கான முயற்சியும் திறனும் நம்மிடம் நாம் வளர்த்து கொள்ள வேண்டும். 

இப்படிப்பட்ட முயற்சி பற்றி எண்ணிடும்போது சூரிய சித்தாந்தம் பற்றி நினைவுக்கு வந்தது. இந்த சூரிய சித்தாந்தம்தனை எழுதியவர் எவர் என்று குறிப்பில் இல்லை. இந்த சூரிய சித்தாந்தம் சூரிய கடவுள் மாயன் எனும் அசுரனுக்கு தரப்பட்டது என்று ஒரு ஐதீகம் உண்டு. தேவர்கள், அசுரர்கள் என அக்காலத்தில் இருந்து குறிப்பில் வைக்கப்பட்டு இருக்கின்றன. அசுரர்கள் அழிக்கும் கூட்டம் எனவும், தேவர்கள் காக்கும் கூட்டம் எனவும் வழக்கத்தில் இருந்து இருக்கிறது. இந்த சூரிய சித்தாந்தத்தில் மிகவும் பிரமிக்கத்தக்க வகையில் பல குறிப்புகள் சூரியன் பற்றியும், அதன் கோள்கள் பற்றியும் இருக்கின்றன. கால சூழல் வேறுபாட்டால் பல ஸ்லோகங்கள் தொலைந்து போனதாக வரலாறு குறிப்பிடுகிறது. ஒரு கோளின் அளவினை எல்லாம் இந்த சூரிய சித்தாந்தம் குறிப்பிட்டு இருப்பது, இன்றைய அளவுக்கு மிகவும் சரியாகவே இருப்பது, சைன், டேன், காஸ் டீட்டாகளை எல்லாம் கணக்கில்  வைத்தது பிரமிக்கவைக்கும் செயல் அன்றி வேறு என்னவாக இருக்க இயலும்.

பஞ்சாங்கம் என்பது இந்த சூரிய சித்தாந்தத்தின் அடிப்படையில் உருவானதுதான். எந்த எந்த நேரத்தில் எந்த கோள்கள் எங்கிருக்கும் என்றெல்லாம் கணக்கீடு செய்து வைத்து இருக்கிறார்கள். அதன் காரணமாகவே சூரிய கிரகணம், சந்திர கிரகணம் எல்லாம் தெரிந்து இருக்கிறது. இப்படிப்பட்ட பிரமிப்பில் ஒரு மலையை சூரியனும், கோள்களும் சுற்றிக்கொண்டு இருக்கின்றன என சொன்னால் எப்படி இருக்கும்?

இந்த மலைகள் எப்படி உருவானது என்பதற்கு பூமித்தட்டுகள் முட்டிக்கொண்டு மேல் எழுந்ததுதான் என்கிறார்கள் இன்றைய அறிவியல் வல்லுனர்கள். இந்த பூமியானது பல தட்டுகளால் உருவானது என்றும் ஒவ்வொரு தட்டுகளும் நகர்ந்து கொண்டே இருக்கின்றன, அப்படி நகர்தலின் காரணமாக நிலநடுக்கம், மலைகள் உருவாதல் எல்லாம் நடைபெறுகிறது என்றே சொல்கிறார்கள். தரைமட்டமாக இருந்த நிலபரப்பு திடீரென மலையாய் மாறுதல். மகிமா!

 
இது இமயமலைத் தொடர். இதற்கு பெரிய கதையே உண்டு. இப்போதைக்கு அகிலாண்டீஸ்வரியையும், சிவபெருமானையும் விட்டுவிடுவோம். நமது இந்திய நிலபரப்பு பல்வேறு வருடங்களில் நகர்ந்து வந்து மோதியதால் உருவானது இந்த இமயமலை என்பது ஒரு கணக்கீடு. நன்றி: விக்கிபீடியா 



ஆங்காங்கே இந்திய நிலபரப்பு மட்டுமல்லாது, உலகெங்கும் உள்ள மலைகள் இப்படித்தான் உருவாகி இருக்கும் என்பது ஒரு கணக்கீடு. 


இது ஆல்ப்ஸ் மலைத்தொடர். மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் என உலகில் ஆயிரக்கணக்கான மலைகள் இருப்பதாகவும் கிட்டத்தட்ட இருபத்தி ஐந்து சதவிகிதம் பூமி மலைகளால் ஆனது என்றே குறிப்பிடுகிறார்கள். 

ஆனால் மேரு மலை என்று ஒன்று குறிப்பில் உள்ளது. இந்த மேரு மலையில் தான் பிரம்மா மற்றும் அனைத்து கடவுளர்களும் குடியிருப்பதாக ஒரு ஐதீகம். இதுவரை இந்த மேரு மலையை எவருமே கண்டதில்லை. இது எங்கு இருக்கிறது என்பதற்கான ஒவ்வொருவரின் எண்ணமும் வெவ்வேறு விதமாகவே இருக்கிறது. இந்த மலையின் உயரம் கிட்டத்தட்ட பத்து லட்சம் கிலோமீட்டர் உயரம் என்றும், இதனின் குறுக்களவு பூமியைவிட எண்பத்து ஐந்து மடங்கு பெரிதாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. உயரத்தை குறிப்பிட யோஜனா என்றும் ஒரு யோஜனா பதினோரு கிலோமீட்டர் என்றும் கணக்கு சொல்கிறார்கள். 

முன்னர் குறிப்பிட்டது போல இந்த மலையை சூரியன் முதற்கொண்டு பிற கோள்கள் சுற்றி வருவதாக ஒரு ஐதீகம். இந்த மேரு மலையை சூரிய சித்தாந்தம் மத்திய பூமியில் இருப்பதாக கணக்கீடு காட்டுகிறது. ஒருவேளை பூமி  வெடித்து சிதறி அதிலிருந்து வேறு பல கோள்கள் உருவாகும் முன்னர் இந்த மலை ஒன்று பூமியில் இருந்து இருக்கலாம் என சூரிய கடவுள் மாயனுக்கு சொல்லி இருக்கலாம். பூமியை சூரியன் சுற்றிய காலமும், சூரியனுக்குள் இருந்த பூமி வெளியே எறியப்பட்ட காலமும் இருந்திருக்கலாம். எவர் கண்டது? ஆனால் இப்படி சூரிய சித்தாந்தத்தில் சொல்லப்பட்ட மேரு மலை இல்லாதது கண்டு பின் வந்தவர்கள் மேரு மலை ஒன்று முன்னர் இருந்தது ஆனால் தற்போது பூமியில் இல்லை என்றே குறிப்பிட்டு இருக்கிறார்கள். 

இந்த மேரு மலை ஒருமுறை கர்வம் கொண்டதாகவும், அந்த மேரு மலையின் கர்வத்தை போக்கிட நாரதர் வாயு பகவானின் உதவியுடன் மேரு மலையை சிதறடித்ததாகவும் அதிலிருந்துதான் இலங்கை எல்லாம் உருவானது என  ஒரு கதை எல்லாம் உண்டு. அதுவும் லெமூரியா கண்டம் பற்றி எல்லாம் பரபரப்பாக நாம் பேசித் திரிந்த காலம் கூட இங்கே குறிப்பிட வேண்டியதுதான். 

மகிமா என்று சொல்லிவிட்டு மலைகள் பற்றி சொல்லிட வேண்டிய அவசியம் என்ன? பகவான் விஷ்ணு சொல்கிறார் மலைகளில் நான் மேரு. ஒரு மனிதன் தனது எண்ணத்தால், செயலால் உயரும்போது மலையை உதாரணமாக சொல்கிறார்கள். 

உருவத்தில் மனிதன் உயர்வதல்ல மகிமா. மனிதன் தனது உள்ளத்தில், எண்ணத்தில், உணர்வில், செய்கையில் உயர்வது மகிமா. இந்த மகிமா எனும் அஷ்டசித்திகளில் ஒன்றான இதை நாம் பற்றி கொண்டால் உலகம் சுபிட்சமாகவே இருக்கும். 

(தொடரும்)

Tuesday 12 February 2013

மூர்க்க ஜந்துகள்

அரிவாளுடன் என் முன்னே
அவர் அப்படி வந்து நிற்பார்
என்று ஒருபோதும்
 நான் கனவில்
நினைத்ததும் இல்லை.

அவரது பெண்ணை
நான் இழுத்து சென்று
திருமணம் செய்வேன் என்று
அவர் ஒருபோதும் கனவில்
நினைத்து இருந்திருக்க
மாட்டார் என்றே
எண்ணிட பயமாயிருக்கிறது.

நான் மார்க்கமானவன்
எனக்கு
நான் மூர்க்கமானவன்
அவருக்கு

இப்படியாய் பல விசயங்களில்
மூர்க்கத்தனம்
இரண்டு 'கறை'களாய்
வாழ்க்கையை
அலங்கரிக்கிறது. 

Friday 8 February 2013

எந்திரனை வீழ்த்திய விஸ்வரூபம்

ரஜினி-கமல் படங்களுக்கு நேரடி போட்டி வெகுவாகவே குறைந்து போய்விட்டது. ரஜினி ரசிகர்கள், கமல் ரசிகர்கள் ஒரே நேரத்தில் விவாதிக்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுவிட்டார்கள். கமலின் திரைப்படங்களைவிட விஜய் திரைப்படங்கள் வசூலில் ரஜினிக்கு அடுத்த நிலை என்றெல்லாம் உருவாகிவிட்ட காலம். தமிழ் திரையுலகினை புதிய பரிமாணத்திற்கு எடுத்து செல்ல பல இயக்குனர்கள் உருவாகிவிட்டார்கள். ஆனால் இவர்களையும் தாண்டி கமல் தனது இயக்கத்தின் மூலம் வித்தியாசமான இயக்குனர் என்பதை நிரூபித்து கொண்டு வருகிறார். 

சமீபத்திய விஸ்வரூபம் சாதாரண கதைதான் எனினும் கமல் கையாண்ட தொழில்நுட்பம் படம் பார்த்த அனைவரையும் பாராட்டத்தான் செய்யும், ஒரு சிலரைத் தவிர. எந்திரனை விட மிக சிறப்பான படம் என்று விஸ்வரூபம் பெயர் எடுத்து இருக்கிறது என்பதை ரஜினி ரசிகர்கள் கூட ஏற்றுக்கொள்ள கூடிய சூழல் தான் இப்போது அமைந்து இருக்கிறது. சர்ச்சைகள் இல்லாமல் விஸ்வரூபம் வெளியாகி இருந்தால் இத்தனை அளவுக்கு பேசப்படுமா என்றால் எந்திரன் கூட அளவுக்கு அதிகமான விளம்பரத்தில் தான் வெளிவந்தது. ரஜினி தன்னை ஒரு சூழ்நிலை கைதி என அறிவிக்கவே செய்தது எந்திரன் திரைப்படம். 

ஒரு படத்தில் என்ன இருக்கிறது எனும் எதிர்பார்ப்பை தூண்டிவிடுவதே ஒரு படத்தின் வெற்றியாகும். ரஜினி நடித்தால் அந்த படமே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி விடும் சூழல் தான் தமிழகத்தில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் கமலுக்கு அப்படியல்ல. மன்மதன் அம்பு என்றொரு படம் வந்த சுவடே தெரியாமல் ஒளிந்து கொண்டது. ரஜினி கௌரவ வேடத்தில் வந்தாலும் கூட  குசேலன் ரஜினிக்கு ஒரு தோல்விப்படம் என்றே பேசப்பட்டது. 

அத்தகைய சூழலில் இப்போது விஸ்வரூபத்தின் வசூல் எந்திரனை மிஞ்சிவிட்டது எனும் செய்தி வெளியாகிவருகிறது. எந்திரன் தமிழக திரைப்பட வரலாற்றில் ஒரு மைல்கல் என்பதால் எந்த ஒரு படம் வெளியானாலும் எந்திரன் வசூலுக்கு இணையாக வைத்து பார்க்கப்படுகிறது. பல நாட்கள் ஓடிய அல்லது ஓட்டப்பட்ட சந்திரமுகியை பலரும் மறந்து போனார்கள். 

தமிழகத்தில் இந்த வசூல் கணக்கெல்லாம் ஒழுங்காகவே இருக்காது என்பது காலம் கண்டு கொண்ட செய்தியாகும். இல்லையெனில் ஒன்றரை கோடி நஷ்டம் என ஒரு கோஷ்டி எந்திரன் படத்திற்கு கணக்கு காண்பித்து இருக்காது. விஸ்வரூபம் முதல் நாளே தமிழில் பத்து கோடி சம்பாதித்து விட்டது எனும் வசூல் கணக்கு கூட அதிகாரப்பூர்வமானது அல்ல என்றே சொல்கிறார்கள். ஒரு வேளை அதற்கு அதிகமாகவும் இருக்கலாம், குறைவாகவும் இருக்கலாம். 

ஐம்பது நாள், நூறு நாட்கள், வெள்ளிவிழா என்றெல்லாம் முன்பு போல் படங்கள் இப்போது கொண்டாடுவது இல்லை. ஒரு வாரம் ஓடினாலே பெரிய விசயம் என்று ஆகிவிட்டது. கடல், டேவிட் எனும் சமீபத்திய திரைப்படங்கள் பெரும் சரிவினை அடைந்து இருக்கின்றன. 

முன்பு ரஜினி, கமல் படங்கள் எத்தனை நாட்கள் ஓடும் என்பதில் போட்டி இருக்கும். காரணம் குறிப்பிட்ட தியேட்டர்களில் மட்டுமே படம் வெளியாகும். இப்போதெல்லாம் அறுநூறு, ஆயிரம் என்று சொல்கிறார்கள். ''ஒரே காலகட்டத்தில் ரஜினி கமல் படம் வெளியாகி அப்போது வசூல் விபரங்கள் வெளிவந்தால் அப்போது யார் வசூல் சக்ரவர்த்தி என்பது தெளிவாகும். அதுவரை எந்திரன் ஒவ்வொருமுறை ஒவ்வொரு படத்தினால் வீழ்த்தப்பட்ட கதை சொல்லப்பட்டு கொண்டே இருக்கும்'' என்கிறார் ஒரு ரஜினி ரசிகர். ஆனால் என்னைப் பொருத்தவரை விஸ்வரூபம் எந்திரனை வீழ்த்திவிட்டது படம் அமைப்பில் மட்டுமல்ல, வசூலிலும் என்றுதான் மதிப்பீடு செய்ய முடிகிறது. 


Thursday 7 February 2013

உணர்வுகளின் பரிணாமம்

இறைவனும் இறை உணர்வும் - 4

முக்காலமும் உணர்ந்த முனிவர்களா நாம் - 6

நரம்பியல் பற்றி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய கால சூழல் அமைய வேண்டும் என்றே எண்ணுவது உண்டு. அப்படிப்பட்ட நரம்பியல் பற்றி தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறோம் எனும் கேள்வி எழுப்பும்போதே நரம்பியிலின் நுண்ணியதன்மை வெளிப்பட்டுவிடுகிறது.

ஐந்து வகையான உணர்வுகள், தொடுதல், சுவாசித்தல் , பார்த்தல், கேட்டல், சுவைத்தல்,  பற்றி பாடப்புத்தகத்தில் படித்த காலங்கள் உண்டு. பார்வைக்கு கண் என்றும், தொடுதலுக்கு தோல் என்றும், சுவாசித்தலுக்கு (வாசனைக்கு) நாசி என்றும், கேட்டலுக்கு காது என்றும் வகைப்படுத்தப்பட்டது.

ஒளி இருப்பின் பார்வையும், ஒலி இருப்பின் கேட்டலும் என்றே ஆனது. ஆனால் நமது பார்வையும் சரி, கேட்டலும் சரி ஒரு குறிப்பிட்ட அளவுக்குள் மட்டுமே இருந்து வருகிறது என்பதை நாம் அறிவோம்.

ஆனால் இந்த உணர்வுகளைத் தாண்டி மேலும் பல உணர்வுகள் இருப்பதாகவே அறிவியல் நமக்கு அறிவுறுத்துகிறது. தொடுதலில் மென்மை, வலி, காமம் என எவ்வாறு நாம் வேறுபடுத்தி கொள்கிறோம் என்பதும்  அதைப்போல நாம் பார்க்கும் பொருளின் தன்மையை வேறு வேறு விதமாக நாம் எவ்வாறு உருவகித்து கொள்கிறோம் என்பதும்  சற்றே வித்தியாசமான ஒன்றுதான். நமது எண்ணமே இந்த உணர்வுகளைத் தூண்டுகிறதா? அல்லது உணர்வுகளால் நமது எண்ணங்கள் தூண்டப்படுகிறதா? என்பது சற்றே சிந்திக்கக் கூடிய விசயம்.

ஆறாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கதா உபதேசத்தில் ஒரு தேரானது உடம்பாகவும், அந்த தேரினை இழுத்து செல்லும் ஐந்து உணர்வுகள் ஐந்து குதிரைகளாகவும், தேரோட்டியை மனமாகவும் சித்தரித்து உள்ளதாக குறிப்பு உள்ளது.

தாயைத் தொடும்போது உள்ள தொடுதல் உணர்வுக்கும், தாரத்தைத் தொடும்போது உள்ள தொடுதல் உணர்வுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது என்பது மனம் சம்பந்தம் கொண்டதா, அல்லது உணர்வு சம்பந்தம் கொண்டதா? இந்த விசயத்தில்தான் பகுத்தறிவு என ஆறாம் உணர்வினை சொன்னார்கள். நமது மனதின் எண்ணவோட்டத்தின் பொருட்டே உணர்வுகளின் நிலை வேறுபடுகிறது என்றுதான் தொன்று தொட்ட காலம் முதல் சொல்லப்பட்டு வருகிறது.




உணர்வு நரம்பு, கடத்தும் நரம்பு, வெளிபடுத்தும் நரம்பு என மூன்று வகையாக நரம்பினைப் பிரிக்கலாம். பார்வை, கேட்டல், தொடுதல் என உணர்வு நரம்பு மூலம் கடத்தும் நரம்புக்கு சென்று பின்னர் மூளையின் செயல்பாடு, அல்லது செயல்பாடற்ற தன்மைக்கு பின்னர் வெளிப்படுத்தும் நரம்பு மூலம் ஒன்றை உணர முடிகிறது.

உதாரணமாக, ஒரு மிகவும் சூடான பாத்திரத்தை கையால் தூக்கும்போது சூடு தாங்க முடியாமல் கீழே போட்டுவிடுகிறோம். அப்படி கீழே போட வேண்டும் என மூளையின் கட்டுபாடுகளுக்கு நாம் காத்து இருப்பது இல்லை. அதே வேளையில் சூடாக இருந்தாலும் அதில் இருக்கும் பொருளின் மதிப்பை கண்டு நாம் கீழே போடாமல் இருக்க நாம் நமது மூளைக்கு கட்டுபடுகிறோம. இப்படியான ஒரு செயலை தனிச்சை செயல் என்றும் அனிச்சை செயல் என்றும் பிரிக்கலாம்.

ஏதாவது ஒன்று நம்மிடம் சொல்லும்போது சற்று கூட யோசனை செய்யாமல் பேசிவிடுவது கூட மூளைக்கு சம்பந்தம் உள்ளதா? இல்லையா என்பது குறித்து சர்ச்சைகள் உண்டு.

நன்றி: கூகிள்

இப்படி ஒவ்வொரு உணர்வும் எப்படி வேறுபாடு அடைகின்றன என சிந்திக்கும் வேளையில் இந்த ஐந்து உணர்வுகளில் எந்த உணர்வு முதலில் தோன்றி இருக்க கூடும்?

தொடுதல் என்கிறார்கள் சிலர். கேட்டல் என்கிறார்கள் சிலர். வாசம் என்கிறார்கள் சிலர். பார்த்தலும், சுவைத்தலும் இறுதியாக வந்து இருக்கலாம் என்றே சொல்கிறார்கள். இன்னும் எத்தனையோ உணர்வுகள் இருப்பதாகவும் சிலர் சொல்கிறார்கள். இது குறித்து பின்னர் பார்ப்போம். அதில் ஒன்றுதான் இறை உணர்வு, முக்காலமும் உணரும் தன்மையான உணர்வு.

(தொடரும்)

Wednesday 6 February 2013

அவள் இறங்கிவிட்டாள்

எட்டிப் பிடித்த பேருந்து ஒன்றில்
முட்டி மோதி இடம் பிடிக்கையில்
பட்டுபோன்ற கன்னம் கொண்டவள்
சிட்டாக அமர்ந்து இருந்தாள்
எதிர் இருக்கையில்

இதயத்தில் மொட்டு ஒன்று
உதயம் ஆனது போன்று
புன்னகை பூக்கள்
மென்னகையாய் விழுந்தது
எதிர் இருக்கையில்

அவள் செல்லுமிடத்து
நானும் சென்றிடவே
எண்ணம் கொண்ட வேளையில்
நடந்துவந்த நடத்துனரிடம்
நளினமாக பேசிய அவள்
கண்ணிமைக்கும் நேரத்தில்
இறங்கியே போனாள்
எவரேனும் இனி அமரக்கூடும்
எதிர் இருக்கையில். 

Monday 4 February 2013

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 12

முன் பகுதி 

கோபத்துடன் என்னை முறைத்துப் பார்த்த காயத்ரியின் கண்களை நான் உற்று நோக்கினேன்.  அம்மாவும், காயத்ரியின் அக்காவும் வேறு வேலைகள் செய்ய சென்றார்கள். காயத்ரி என்னை நோக்கி கேட்டாள்.

''என்ன அப்படி பார்க்கிற''

''நீதான என்னை முறைச்சிப் பார்க்கிற''

 ''உனக்கு பெண்கள் மேல மட்டு மரியாதையே இல்லையா?''

அவள் அப்படி கேட்பாள் என்று ஒருபோதும் நான் நினைத்துப் பார்க்கவில்லை. இருந்தாலும் சுதாரித்து கொண்டேன்.

''நீ அப்படி என்னத்தை கண்ட?''

''தூசி துகள் ஈர் பேன் பெருமாள் அப்படின்னு சொல்ற''

''உள்ளதைத்தான் சொன்னேன், இந்த பேரண்டம் தோன்றியதற்கு காரணமே தூசிதானே''

எனது பதில் அவளிடம் மேலும் கோபத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும். அவளது முகத்தில் சிறு மாற்றம் கண்டேன். சட்டென முகத்தைத் திருப்பி கொண்டாள்.

''பாரு காயூ, இந்த பேரண்டம் தூசியினால் மட்டுமே உருவாக்கப்பட்டது, அப்படி இந்த பேரண்டம் உருவாக உதவியாக இருந்த தூசினை மாசு படுத்திவிட்டார்கள். தூசு என்றால் மாசு என்றே பொருள் ஆனது. அதனால் தான் எதையாவது குறைத்து மதிப்பிட வேண்டுமெனில் என் கால் தூசிக்கு சமம் என பேசுவார்கள். புரிந்து கொள்''

நான் காயூ என காயத்ரியை முதன் முதலில் அப்போதுதான் அவ்வாறு அழைத்தேன். காயூ என்பது கூட நன்றகாத்தான் இருக்கிறது என நினைத்துக் கொண்டேன்.

''என்னை எப்படி கூப்பிட்ட?''

''காயூ''

அவளிடம் இருந்த கோபம் சட்டென மறைந்தது. புன்னகை பூத்தாள்.

''ம்ம் ரொம்ப நல்லாருக்கு''

''எது தூசு பத்திய விசயமா?''

''காயூனு என்னை கூப்பிடுறது''

''தூசு பத்தி என்ன நினைக்கிற?''

''நீ ஒரு லூசுனு நினைக்கிறேன்''

''எப்பவும் அப்படித்தானே என்னை நினைக்கிற, எதுவும் புதுசா சொல்லு''

''நான் பெருமாளை நம்புறவ, நீ தூசியை நம்புறவன், இருந்தாலும் உன்னை நானும், என்னை நீயும் நேசிக்கிறது அபூர்வம் தான்''

அவள் அப்படி சொன்னபோது எனக்குள் ஒருவித சலனம் உருவானது. இவள் இறைபக்தி உடையவளாக இருக்கலாம், இருந்துவிட்டு போகலாம். அதற்காக என்னை இறைபக்தி இல்லாதவன் என்று எப்படி முடிவுக்கு வந்தாள். ஒரே மாதிரி உணர்வு உள்ளவர்கள் மட்டுமே காதலித்தல் சாத்தியமா? கர்மவினை என்றாள், இப்போது அபூர்வ விசயம் என்கிறாள், என்னதான் இவளின் மனதில் எண்ணம் ஓடிக்கொண்டு இருக்கிறது என்றே எண்ணத் தொடங்கினேன்.

''காயூ, நீ என்னதான் சொல்ல வர, நாம நேசிக்கிறது எல்லாம் கர்மவினைனு சொல்றியா?''

''அப்படித்தான் வச்சிக்கோயேன்''

''அப்படித்தான் வச்சிக்கிறதுனா, என்ன அர்த்தம்?''

''நாம பார்த்தது, பழகினது, என் அம்மா இறந்தது, எங்க அப்பா எங்களை விட்டு போனது அப்புறம் இப்படி உங்க வீட்டுல நாங்க இருக்கிறது, எல்லாமே''

காயத்ரி இப்படி பேசுவாள் என்று நான் சற்று கூட  எதிர்பார்க்கவே இல்லை. அவள் பேசியதில் உறுதி தெரிந்தது. தாயின் மரணம், தந்தையின் செயல்பாடுகள் அவளுக்குள் வாழ்வினைப் பற்றிய விரக்தியை ஏற்படுத்தி இருக்க வேண்டும், அவளது தந்தையின் மீதான ஏமாற்றம் என் மீதும் வந்து தொலைந்து இருக்க வேண்டும் என்றே என் மனம் நினைத்தது. காயத்ரியின் கைகளைப் பிடித்தேன். தொடுதல் உணர்வில் எனது எண்ணம் அவளுக்குள் சென்று தொலைய வேண்டும் என்கிற ஒரு நட்பாசை.

''காயூ, இந்த பூமியில் வாழுற வரைக்கும் உன்னைத் தவிர வேறு எந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்க்கமாட்டேன். நீ உன் அப்பா மேல இருக்கிற கோவத்தை என் மேல காட்டாதே, கர்மவினை எல்லாம் ஒன்னும் இல்ல, இதை மனசுல பதிய வைச்சிக்கோ''

''அதெல்லாம் இல்ல முருகேசு, கர்மவினை தான்''

''எல்லாம் என் கர்மவினை''

''என்ன சொன்ன, என்ன சொன்ன''

''வாய் தவறி வந்து விழுந்த வார்த்தை அது''

எனது கைகளை அவளது கன்னங்களில் ஒட்டிக்கொண்டவள் கலகலவென சிரித்தாள். முருகேசு முருகேசு என சிரித்தாள். அவளது சிரிப்பிற்கான காரணங்கள் என்னவென முழித்தேன்.

''தானா தவறியதா?''

அவளது அந்த கேள்வியில் நிலைகுலைந்து போனேன். அப்போது என்னை காப்பது போல காயத்ரியின் அக்கா எங்களை நோக்கி வந்தார். எனது கைகள் விடுபட்டு இருந்தது.

''நீங்க எப்ப அவரைப் பார்க்கப் போறீங்க''

''இன்னும் அரைமணி நேரத்தில போலாம்னு இருக்கேன்''

''அவர்கிட்ட தகராறு பண்ண வேண்டாம். எனக்கு மனசுக்குப் பிடிக்கலை. மனசு தாங்காம அம்மாகிட்ட சொல்லிட்டேன்''

''ம்ம்''

நான் எதற்கு தகராறு பண்ண போகிறேன். ஒவ்வொருவரிடம் வம்பு பண்ணிக்கொண்டு இருப்பதுதான் என்னோட வேலையா? அந்த அவர் குறித்து காயத்ரியின் அக்காவிடம் எப்படி பழக்கம், எத்தனை நாள் பழக்கம் என்றெல்லாம் நான் விசாரிக்கவில்லை. விசாரிக்கவும் தோணவில்லை. காயத்ரி அக்கா கொடுத்த முகவரியை சரிபார்த்து கொண்டேன்.

நான் கிளம்பியபோது காயத்ரி என்னுடன் வருவதாக சொன்னாள். நான் வேண்டாமே என்றே மறுத்தேன். ஆனால் அவள் செவிகொடுக்கும் நிலையில் இல்லை. நாங்கள் இருவருமாக சேர்ந்து அந்த அவரின்  முகவரியை அடைந்தோம். அந்த அவரின் பெயர் ரங்கநாதன்.

வீட்டினைப் பார்த்தபோது பிரமிப்பாக இருந்தது. சுற்று சுவர்கள் கட்டப்பட்டு, கம்பிக் கதவு எல்லாம் போடப்பட்டு இருந்தது. மலர்களின் வாசனை ரம்மியமாக இருந்தது. கதவினை திறந்து கொண்டு நடக்கும்போது மல்லிகையும், கனகாம்பரமும் வாசம் அதிகமாக தந்து கொண்டு இருந்தது. வாயிற்கதவு மணியை அழுத்தினேன். வாசலில் ஒரு பெண்மணி வந்து நின்றார். ரங்கநாதனின் அம்மாவாக இருக்க கூடும். எங்கள் இருவரையும் ஏற இறங்க பார்த்தார்.

''யார் வேணும்?''

''ரங்கநாதன் சாரைப் பார்க்கனும்''

''உள்ளே வாங்க''

நாங்கள் இருவரும் ஓரிடத்தில் அமரவைக்கப்பட்டோம். உள்ளே சென்றவர் எங்களுக்காக பலகாரங்கள், பழச்சாறு எல்லாம் எடுத்து வந்தார். உலகில் சக மனிதர்களின் மீதான நம்பிக்கை உடையவர்கள் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கிறார்கள் என்றே எண்ணத் தோன்றியது. இந்த நம்பிக்கையினை பயன்படுத்தி மோசம் செய்பவர்களும் இருக்கிறார்களே என கூடவே மனம் நினைத்தது.

சில நிமிடங்களில் ஒரு அறையினில் இருந்து எனது வயது மதிக்கத்தக்க என்னை விட சற்று உயரமான உருவத்தில் வந்தது ரங்கநாதன் என்றே யூகித்து கொண்டேன்.

''உன்னைத்தான் பார்க்க வந்திருக்காங்க''

எங்களை நோக்கி வந்தவர் ஹலோ என கைகள் குலுக்கினார். காயத்ரியின் அக்காவின் பெயரை சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டோம். அவரது அம்மா அருகினில் இருக்கும்போதே நேரடியாகவே கேட்டேன்.

''சார், காயத்ரியின் அக்கா பயப்படுறாங்க, நீங்க அவங்களைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு இன்னிக்கு தகராறு பண்ணினது ஏன் ?''

''என்னப்பா சொல்ற, என் பையன் தகராறு பண்ணினானா?

''உங்க பையன் கிட்ட கேளுங்கம்மா''

அடுத்து சில நிமிடங்கள் நடந்த உரையாடலில் நான் உறைந்து போனேன். காயத்ரியை போலவா, காயத்ரியின் அக்காவிற்கும் தன காதலன் மீது வெறுப்பு வந்து சேர வேண்டும். எல்லாம் கர்மவினை என தலையில் அடித்துக் கொள்ளலாம் போலிருந்தது.

(தொடரும்)

Saturday 2 February 2013

விஸ்வரூபம்

கிட்டத்தட்ட இரண்டே முக்கால் மணிநேரம் படத்தை பார்த்துவிட்டு இறுதி காட்சி முடிந்த பின்னர் ப்பூ என்றும், படம் மண்ணு போல இருக்கிறது என்றும் வாய் முணுமுணுத்தது. இருப்பினும் இது தமிழ் பட  உலகின் ஒரு புதிய அவதாரம். ஆப்கானிஸ்தானின் வறண்ட பிரதேச மலைகள் கூட கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது. தமிழ் பட உலகை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திட இயக்குனர் மிகவும் மெனக்கெட்டு இருக்கிறார். மிகவும் சிரமமான இடங்களில் எல்லாம், அதுவும் போர் காட்சிகள் எல்லாம் தத்ரூபமாக செதுக்கி இருக்கிறார்.

மிகவும் சிரமமான கதைக்கருவை மிகவும் நேர்த்தியாக கையாளத் தவறிவிட்டார் என்றே சொல்லலாம். முஸ்லீம்கள் பெருமைப்படுவார்கள் என்று வாய்க்கு வாய் வெளியில் சொல்லியவர் அப்படி ஒன்றும் பிரமாதமாக எதுவும் செய்துவிடவில்லை. ஒரு இந்து, அதுவும் ஆராய்ச்சியாளர், புற்று நோய் எனும் கொடிய நோயிற்கு கதிரியக்கம் மூலம் தீர்வு காண முயல்பவர்,  முஸ்லீம் தீவிரவாதத்திற்கு உதவியாக இருக்கிறார் என்பதில் இருந்து முஸ்லீம்கள் மட்டுமே தீவிரவாதிகள் அல்ல என்பது தெள்ளத் தெளிவு. மேலும் உலகில் நடைபெறும் தீவிரவாதம் அனைத்திற்கும் முஸ்லீம்கள் பொறுப்பல்ல என்பது மிகவும் கண்கூடு. எதற்கும் உதாரணத்திற்கு அமெரிக்க தீவிரவாதம் படித்து பாருங்கள்.

வானம் என்ற ஒரு திரைப்படம். அதில் முஸ்லீம்கள் பெருமைப்படும் அளவிற்கு காட்சி அமைப்புகள் இருந்தது. ஒரு முஸ்லீம் சமூகம் எப்படி தீவிரவாத சமூகமாக பார்க்கப்படுகிறது என்றும் அதே வேளையில் ஒரு முஸ்லீம் எப்படி உதவுகிறார் என்றும் காட்சி அமைப்புகள் இருக்கும். ஆனால் அந்த திரைப்படம் இந்த அளவிற்கு காசில்லாத விளம்பரம் தேடிக்கொள்ளவில்லை. எவரும் அந்த படத்தில் காட்டப்படும் தீவிரவாதம் குறித்து அதிக அளவில் கேள்வி எழுப்பவில்லை.

இந்த திரைப்படத்தில் பல காட்சிகள் மனதில் ஒட்டவே இல்லை. சிறு வயதில் தீபாவளி சமயத்தில் துப்பாக்கி வெடி வெடித்த நியாபகம் வந்து தொலைந்தது. திருடன் போலிஸ் விளையாட்டு எல்லாம் நினைவில் வந்து போனது. எப்போதுமே ஒரு சமூகம் அமைதியில் மட்டுமே திளைத்திருக்க விரும்பும். இயக்குனரின் இறைமறுப்பு எண்ணம் ஆங்காங்கே தென்படுகிறது. இந்து மதத்தையும் விட்டுவைக்கவில்லை. விநாயகரை கடலில் கரைப்பது போன்ற விசயங்கள் சிரிப்பலைகள் எழுப்பின எனலாம். இந்துக்கள் சிரித்துக்கொண்டு போய்விடுவார்கள், ஏனெனில் இந்து சமயம் ஒரு அழுத்தத்தில் இருந்து புறப்படவில்லை. அது மனதில் இருந்து கிளம்பிய ஒன்று. பகவத் கீதை எல்லாம் இந்துக்களின் புனித நூல் அல்ல.

அப்படியெனில் முஸ்லீம் சமூகம்! முகம்மது நபிகளின் வரலாறுதனை புரட்டிப் பார்த்தால் முஸ்லீம் சமூகத்தின் வளர்ச்சி எத்தகைய போராட்டத்தில் இருந்து தொடங்கியது என்பதை கண்கூடாக காணலாம். ஒரு குரான் மட்டும் இல்லையெனில் இந்த முஸ்லீம் எனும் மதம் இல்லாது ஒழிந்து போயிருக்கும் நிலைதான் அன்று இருந்தது. எப்படியெல்லாம் குரான் ஒரு சமூகத்தில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது என்பதை மற்றொரு நேரத்தில் பகிர்ந்து கொள்ளலாம். இந்த இயக்குனரின் இறைமறுப்பு கொள்கைக்கு மதிப்பு தரும் வகையில் டாகின்ஸ் எனப்படும் இறைமறுப்பாளர் பெயரை ஒரு கதாபாத்திரத்திற்கு சூட்டி பெருமைப்பட்டு கொள்கிறார். நான் சிறுமைப்பட்டு கொண்டேன்.

'டர்டி பாம்' எனப்படும் கதிரியக்க ஐசோடோப்களின் மூலம் உருவாக்கப்படும் குண்டுகளினால் பெரும் சேதம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்றும் இது அறிவியல் தொழில்நுட்பத்தின் உச்சகட்டம் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் இது குறித்து அதிகமான அதிகாரபூர்வ செய்திகள் எதுவும் இல்லை. மேலும் இது போன்ற விசயங்களால் நேரடி பாதிப்பு குறைவுதான், ஆனால் மக்களில் ஏற்படும் பய உணர்வு மிகவும் அபாயகரமானது. மனதளவில் பெரும் பாதிப்பினை இதுபோன்ற கதிரியக்க குண்டுகள் ஏற்படுத்திவிடும் என்றே கருதப்படுகிறது. பெரும்பாலும் சீசியம் எனும் உலோகத்தின் ஐசோடோப்கள் பயன்படுத்தபடுகிறது. இந்த சீசியம் பற்றியும் கதிரியக்க விளைவுகள் பற்றியும் மற்றொரு முறை பார்க்கலாம். செர்னபில் அணு உலை வெடிப்பின் போது இந்த சீசியமே அதிக அளவில் வெளிப்பட்டதாக தகவல் இருக்கிறது.

அப்படிப்பட்ட கதிரியக்க விளைவைத்தான் இந்த திரைப்படம் ஏற்படுத்திவிடுமோ எனும் அச்சம் இஸ்லாமிய அமைப்புகளின் மனதில் குறிப்பாக தமிழகத்தில் வந்து சேர்ந்து இருக்கிறது என்றே எண்ணத் தோன்றுகிறது.

தலிபான் இயக்கத்தின் தலைவர் முல்லா முகம்மது ஓமர் பற்றி பெயர் குறிப்பிட்டதோடு பல காட்சிகள் அதீத கற்பனைகளுக்கு உட்பட்டவைதான். அவருடைய அமெரிக்க வெறுப்பு ஏற்பட்டதற்கு பல காரணங்கள் உண்டு. ஆப்கானிஸ்தான் ஒரு போர் நிலமாகவே திகழ்ந்து வந்து இருக்கிறது. இதையெல்லாம் படத்தில் ஒரு சில வரிகளில் ஒரு மூதாட்டியின் சொல்லில் இருந்து முடித்து கொள்கிறார்கள். தலிபான் இயக்கத்தின் கட்டுபாட்டில் இருந்தவரை தான் பெண்கள் ஒடுக்குமுறை எல்லாம் இருந்தது எனலாம். தலிபான் இயக்கம், ஷ்ரியா விதிகள் எல்லாம் ஒரு சமூகம் தனக்கு விதித்து கொள்ளும் கட்டுபாடுகள். இதைத்தான் குரானும் செய்கிறது. தனது சமூகத்தை தன்னுள் ஒரு கட்டுப்பாட்டினை கொண்டு வரச் செய்ய அது மேற்கொண்ட முயற்சியில் வெற்றி பெற்றே இருக்கிறது. இல்லையெனில் க்வரைசி எனும் குழுக்களில் இருந்து முஸ்லீம் முன்னேறி இருக்குமா என்பது கேள்விக்குறியே!

வாமன அவதாரம் மகாபலிக்காக! கிருஷ்ண அவதாரம் கம்சனுக்காக பின்னர் பாண்டவருக்கு உதவிட. இதில் விஷ்ணு விஸ்வரூபம் எடுத்து இருப்பார் அதிலும் குறிப்பாக கிருஷ்ண அவதாரத்தில். சகோதர போராட்டத்தில் எடுக்கப்பட்ட விஸ்வரூபம் அது. விஸ்வரூபம் எல்லாம் ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை. போர் நடந்தே ஆனது.

ஆனால் இந்த நிழல் விஸ்வரூபம், குரானை மீண்டும் விஸ்வரூபம் எடுக்க வைத்து இருக்கிறது, தமிழகத்தில் மட்டும்! 

Friday 1 February 2013

லைப் ஆஃப் பை - வாழ்வியல் விசித்திரம்

கிறிஸ்துமஸ் கால விடுமுறையில் எங்குமே செல்ல இயலாத சூழல். லண்டன் நகரிலேயே பொழுது கழிந்தது. பனி விழும் என எதிர்பார்த்து பனி விழவே இல்லை. அதற்கு பின்னர் இந்த ஜனவரி மாதம் பனி விழுந்தது வேறு கதை.

கிறிஸ்துமஸ் முன்னர் ஒரு படம் பார்க்கலாம் என சென்றோம். படத்தின் பெயர் லைப் ஆப் பை என முடிவு எடுத்தோம். படம் பற்றிய கதை என எதுவும் அறிந்திருக்கவில்லை. சில பாகங்கள் பாண்டிச்சேரியில் எடுத்து இருக்கிறார்கள் என கேள்விபட்டதுடன் சரி. முப்பரிமாணத்தில் பார்க்கலாம் என முடிவு எடுத்து சென்றது நன்றாகவே இருந்தது.

முதலில் படம் ஆரம்பித்த போது ஒரு பாடல். அதுவும் தமிழில். கண்ணே கண்மணியே! நான் பொதுவாக படங்களில் பாடலை கொஞ்சம் கூட விரும்புவதில்லை. கதையின் போக்கினை பாடல்கள் சிதைக்கின்றன என்றே கருதுவேன். ஆனால் முதன் முதலில் தொடங்கிய பாடல், அதை காட்சி அமைத்த விதம் என ஒரு அந்த பாடல் முடியும் வரை பிரமிப்பாக இருந்தது. இத்தனை தத்ரூபமாக காட்சி எவரேனும் அமைத்து இருப்பார்களா என அந்த பாடல் முடியும் வரை நினைத்து கொண்டே இருக்க செய்தது. தமிழ் கண்டு மனம் மிகவும் பூரிப்பு அடைந்தது.

இந்த படத்தின் கதை என பாண்டிச்சேரியில் தொடங்கி அதற்கடுத்து கடலிலேயே பல காட்சிகள் நகர்ந்து கொண்டிருந்தது. சில நேரங்களில் அயர்ச்சி ஏற்பட்டது உண்டு. கதை வேகமாக நகராதா என எண்ணம் வந்து சென்றது.

அதுவும் படத்தில் ஒரு இயற்கை காட்சி, அதுவும் இரவில் ஒளிரும் தாவரங்கள் என காட்டிய இடம் பிரமிக்க வைத்தது. இந்த இடம் உண்மையிலேயே இருக்கிறதா என ஏக்கம் கொள்ள வைத்துவிட்டது. அத்தனையும் தாண்டி படத்தின் இறுதி காட்சி வாழ்க்கையின் பெரிய அனுபவத்தைச் சொல்லி சென்றது. படம் முடிந்து வெளிவருகையில் உணர்வுப்பூர்வமான படம் என்று சிலர் கண்களை கசக்கி கொண்டிருந்தார்கள். சிலர் இருக்கையை விட்டு எழுந்திருக்க மனமில்லாமல் அமர்ந்து கொண்டிருந்தார்கள். மிகவும் உணர்வுப்பூர்வமான படம் என்று வயதான இருவர் பேசிக்கொண்டு இருந்தார்கள். நானும் அந்த படத்தின் கடைசி காட்சியில் பிரமித்து போனேன். என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இனம் புரியாத ஒரு இறுக்கம் மனதில் எட்டிப் பார்த்தது.

பன்னிரண்டு சிறுவனுடனும், பத்து வயது சிறுமியுடன் படம் பார்த்தோம்.  படம் எப்படி என்று அவர்களிடம் கேட்டேன். இட்ஸ் ஓகே என்றார்கள். படத்தின் அர்த்தம் புரிகிறதா என்றேன். புரியவில்லை என்றார்கள் வாழ்வியல் தத்துவம் சொன்ன திரைப்படம் இது என புலி பற்றிய கதாநாயகனின் எண்ணவோட்டத்தை விளக்கினேன். விளங்கியது போன்றே தலையாட்டினார்கள். கடைசியில் கதாநாயகன் சொன்ன விசயம் வாழ்வியலில் விசித்திரம்.

எனது வாழ்வில் எத்தனையோ திரைப்படங்களை பார்த்தது உண்டு. ஆனால் எப்படி இந்த படத்தில்  முதல் பாட்டு ஒரு பெரிய பிரமிப்பை உருவாக்கியதோ அதைப்போல இறுதி காட்சியும்  பிரமிப்பை உருவாக்கியது.

இந்த படம் ஒரு புத்தகத்தின் தழுவல் என தெரிந்து அந்த புத்தகம் பற்றி தெரிந்து கொண்டபோது கிட்டத்தட்ட ஐந்து புத்தக நிறுவனங்கள் அந்த புத்தகத்தை வெளியிட மறுத்துவிட்டன. அதன் பின்னர் அந்த புத்தகம் வெளிவந்து சிறந்த பரிசும் பெற்றுவிட்டது. எனது அக்கா மகன் இந்த புத்தகத்தை முன்னரே படித்து இருந்ததாக சொன்னான். நீ எல்லாம் நாவல் ஆசிரியர், முதலில் இது போன்ற புத்தகங்கள் வாசிக்க வேண்டும் என அறிவுறுத்தவும் பட்டேன். வாசிப்பு அனுபவம் மிக மிக குறைவுதான்.

இது போன்ற கதைகள் நான் இந்தியாவில் இருந்தபோது நிறையவே கேள்விபட்டது உண்டு. அத்தனை நம்பிக்கைக்கு உரிய கதைகள் அவை. இந்த படத்தில் கேட்கப்படும், இது எதற்காக நடந்தது, எனக்கு மட்டும் எப்படி நடந்தது போன்றே பல விசயங்கள் பகிரப்படுபவை.

சிறு வயதில் கேட்ட ஒரு கதை என்னை இன்னமும் பிரமிப்பில் வைக்கும்.

சந்தோசமாக இருந்த போது
நான்கு கால் தடங்கள் இருந்தது
இரண்டு உன்னுடையது
மற்ற இரண்டு இறைவனோடது

துன்பமாக இருந்தபோது
இரண்டு கால் தடங்களே இருந்தன.
இரண்டு இறைவனோடது

அப்படியெனில் நான் எங்கே?
உன்னை இறைவன் தூக்கி கொண்டு நடந்தான்!

இதுதான் அந்த கதை. இறைவனின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் அப்படித்தான் வாழ்க்கையை நடத்தி கொண்டு வருகிறர்கள. எனக்கு இது மிக மிக பிடித்து போனது.

ஒரு நிகழ்வு - அதில் இரண்டு கதைகள்.

இந்த உலகம் உருவானது குறித்து கூட உண்டு.

இறைவன் உருவாக்கிய உலகம். இதில் நம்புமாறு எந்த ஒரு விளக்கங்களும் இல்லை. ஆனால் சுவராஸ்யமாக இருக்கும். இருப்பினும் பைபிள், குரான், பகவத் கீதை என எல்லாம் தோற்று போவது போலவே தோற்றம் அளிக்கின்றன.

பெருவெடிப்பில் உருவாக்கிய உலகம். இதில் காஸ்மிக் கதிர்கள், ரெட் ஷிப்ட் என பல விசயங்கள் உண்டு.

இந்த இரண்டில் எது உண்மை என கேட்டால் ஏழு பில்லியன் மக்களில் பலரும் இன்னமும் இன்ஷா அல்லா என்றும், இயேசுவே பரம பிதாவே என்றும், நமோ நாராயணா என்றும் ஓம் நமசிவாயா என்றும் இறைவன் உருவாக்கிய உலகம் என்றே சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

லைப் ஆப் பை - இறைவன் பெருமை சொல்லும் மாபெரும் காவியம்.

இப்படி ஒரு நல்ல படத்தை பார்த்த கண்கள் மற்றொரு படம் பற்றியும் நாளை எழுதும். அந்த படம் ஏற்படுத்திய தாக்கம் என்ன!

Thursday 31 January 2013

தமிழக முதல்வர் மிகவும் பயப்படுகிறார்

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு விடும் என தமிழக முதல்வர் மிகவும் பயப்படுகிறார். தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டே  ஒரு திரைப்படத்தை தடை செய்ய முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என அவர் அறிவித்ததை கண்டு பெரும்பாலான அமைப்புகள் மகிழ்ச்சியில் துள்ளிக்கொண்டு இருக்கின்றன.

இனிமேல் சட்ட ஒழுங்குதனை  சீர்குலைய செய்வோம் என ஒவ்வொருவரும் அவரவருக்கு வேண்டியதை நிறைவேற்ற அரசுவிடம் மனு கொடுக்க ஆயத்தமாகிறார்கள் என அதிகாரபூர்வமான செய்திகள் வெளிவந்து கொண்டு இருக்கிறது.

திருடர்கள் அமைப்பு:  
உறுப்பினர்கள்: நான்கு கோடி 

எங்களை எந்த தொந்தரவும் செய்யாமல் திருட வழி வகுக்க வேண்டும். அப்படி செய்யாவிட்டால்  தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு போய்விடும் அபாயம் இருக்கிறது.

சாதி கட்சி:
உறுப்பினர்கள்: ஏழரை கோடி 

தமிழகத்தில் உள்ள அனைத்து சாதியினர்களும் இனிமேல் வன்னியர்கள் என்று அறிவிக்க வேண்டும். அப்படி அறிவிக்காத பட்சத்தில் எங்கள் உறுப்பினர் கணக்கு பொய்யாகும் சாத்தியம் உள்ளது, அதோடு மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள அனைத்து மரங்களும் வெட்டப்பட்டு சாலைகளில் குவிக்கப்படும்.

அரசியல் கட்சி: 
உறுப்பினர்கள்: கணக்கு காட்டப்படவில்லை 

இன்னும் இருபத்தி நான்கு மணி நேரத்தில் அரசு கவிழ வேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில் தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் திமுக ஆளும் கட்சி என போஸ்டர்கள் ஒட்டப்படுவதுடன் தனித்திராவிட நாடு அமைக்கப்படும்.

மொடாக்குடியர்கள் அமைப்பு:
உறுப்பினர்கள்: ரேஷன் கார்டு இல்லை. 

வீட்டுக்குழாயில் தண்ணீர் பதிலாக மதுபானம் வரவேண்டும்.

இன்னும் இன்னும் தொடரும்...

'அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்'


Wednesday 30 January 2013

இதுவே தருணம் - ரஜினி, கமல் இணைந்து புதிய கட்சி


''குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று 
உண்டாகச் செய்வான் வினை'' 

தன் கைத்து உண்டாக ஒன்று செய்வான் வினை – தன் கையதாகிய பொருளுண்டாக ஒரு வினையை எடுத்துக் கொண்டான் அதனைச் செய்தல்; குன்று ஏறி யானைப்போர் கண்டற்று – ஒருவன் மலைமேல் ஏறிநின்று யானைப்போரைக் கண்டால் ஒக்கும். (‘கைத்து உண்டாக ஒன்று செய்வான்  எனக் கூட்டுக. ‘ஒன்று’என்பது வினையாதல் ‘செய்வான்’ என்றதனாற் பெற்றாம்.

குன்றேறியான் அச்சமும் வருத்தமும் இன்றி நிலத்திடை யானையும் யானையும் பொருபோரைத் தான் இனிதிருந்து காணுமதுபோலக் கைத்து உண்டாக வினையை மேற்கொண்டானும் அச்சமும் வருத்தமும் இன்றி வல்லாரை ஏவித் தான் இனிதிருந்து முடிக்கும்என்பதாம். - பரிமேலழகர் 

பொருள் வல்லமையுடன், அதிகார பிரயோகம், துஸ்பிரயோகம்  கொண்டு தான் செய்ய நினைக்கும் நல்ல செயல்கள் முதற்கொண்டு தரித்திர செயல்கள் வரை செய்து முடிக்கும் தமிழக அரசின் பல செயல்பாடுகள் விமர்சனத்திற்கு உரியவைகளே. இது திருவாளர் கருணாநிதி ஆட்சியிலும் சரி, திருவளர்ச் செல்வி ஜெயலலிதா ஆட்சியிலும் சரி நடந்தேறும் அவலங்களே. 

சமீபத்தில் தனது பிறந்தநாள் விழாவில் திரு. ரஜினி பேசும்போது அரசினை குற்றம் சொல்லாதீர்கள், அதிகாரிகளை குற்றம் சொல்லுங்கள் என்று பேசி இருந்தார். அரசு என்றால் என்ன?, அதிகாரிகள் என்றால் என்ன? அதிகாரிகள் தங்களது பணிகளை சரியாக செய்தால் அரசு சரியாக நடக்கும். ஆனால் அரசின் கைப்பாவைகள், அல்லக்கைகள் தான் அதிகாரிகள் என்பது நாடறிந்த உண்மை. 

நீதித்துறை கூட அரசின் கையில், பொருள் நிறைந்தோர் வளைக்கும் வளைப்பில் தான் உள்ளது என்பதை எவர் சொல்லித் தெரிய வேண்டும்? ஒரு ரூபாய் சம்பாதித்தவர் எல்லாம் கோடி சொத்துகளுடன், சகல சௌகரியங்களுடன் எப்படி வசிக்க முடிந்தது, முடிகிறது? மற்ற பணம் எல்லாம் பிறர் போட்ட பிச்சை என்றா எடுத்துக் கொள்வது? 

திரு ரஜினி சில மாற்றங்களுக்காக காத்து கொண்டிருக்கிறார் என்கிறார். மாற்றங்களை நாம் தான் உருவாக்க வேண்டும். அதற்கு தமிழகத்தில் பணபலம் மட்டும் போதாது, அரசியல் பலமும் மிகவும் அவசியம். 

ஒரு திரைப்படத்தின் மூலம், ஒரு படைப்பின் மூலம்  என்ன சாதித்துவிட முடியும்? ஒரு படைப்பாளி தனது பையினை நிரப்புவதுடன், அல்லது பையினை காலியாக்குவதுடன்  அவனது பணி முடிந்துவிடுகிறது. சமூக அக்கறை எல்லாம் இரண்டாம் பட்சம்தான். வெற்று அறிக்கைகள், வெறும் போராட்டங்கள் நடத்தி காண்பித்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என எவர் இவர்களுக்கு சொல்லித் தந்தது? 

திரு. ரஜினி, கட்சி ஆரம்பிக்க வேண்டிய நிர்பந்தம் வந்துவிட்டது, அல்லது உண்மையிலேயே மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் எனும் நோக்கம் உடைய ஒருவர் தைரியமாக கட்சி ஒன்றைத்  தொடங்க வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. 

அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற 
இடுக்கண் இடுக்கட் படும் 

அடுக்கி வரினும் – இடைவிடாது மேன்மேல் வந்தனவாயினும்; அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கண்படும் – தன்னுள்ளக் கோட்பாடு விடாதான் உற்ற இடுக்கண்தாம் இடுக்கணிலே பட்டுப்போம். (ஒன்றே பலகால் வருதலும், வேறுபட்டன விராய் வருதலும் அடங்க ‘அடுக்கி வரினும்’ என்றார். ‘அழிவு’ என்னும் காரணப்பெயர் காரியத்தின்மேல் நின்றது. இவை மூன்று பாட்டானும் தெய்வத்தான் ஆயதற்கு அழியாமை கூறப்பட்டது.)

எத்தனைத் தடைகள் வந்தாலும் அதை தகர்த்தெறிய முயற்சித்தால் அந்த துன்பமே துன்படும். 

திரு. கமல் தயாரித்து, இயக்கி, நடித்து தமிழகத்தில் வெளிவரத் துடிக்கும் ஒரு விஸ்வரூபம் திரைப்படம், சமூகப் பிரச்சினையில் இருந்து  அரசியல் பிரச்சினையாகிக் கொண்டு வருகிறது. சக மனிதர்களை மதிக்காதவர்கள் மனிதர்கள் அல்ல. ஒரு படைப்பாளி, அந்த அந்த சமூகத்தின் நிலையை அப்படியே படம் பிடித்து காட்டுபவன். சில நேரங்களில் ஓர வஞ்சகமாகவும் படைப்பாளி நடந்து கொள்வது உண்டு. ஒரு படைப்பு விமர்சனத்திற்கு உள்ளாகலாம், ஆனால் தடை எல்லாம் அவசியம் இல்லை. எந்த ஒரு படைப்பையும் பார்க்கும் உரிமையோ, அல்லது புறக்கணிக்கும் உரிமையோ படைப்பை பார்ப்பவர்களுக்கு உண்டு. அப்படியிருக்க சிறுபான்மையினர் என கூறிக்கொண்ட  அரசின் செயல்பாடுகள் மிகவும் கண்டிக்கத்தக்கவை. ஒரு சமூகத்தின் உணர்வுகள் குறித்தான அக்கறை அரசுக்கு இதுவரை இருந்ததாக தெரியவில்லை. இப்படியெல்லாம் நடந்து கொண்ட ஒரு அரசு குறித்து மக்களுக்கு சற்று வெறுப்பு ஏற்பட்டு இருக்கிறது. பெரும்பான்மையினரின் வெறுப்பு அரசுக்கு இனிமேல் தான் புரிய வரும். 

இந்த ஒரு பிரச்சினைக்காக திரு. கமல் நாடு விட்டு நாடு எல்லாம் போக வேண்டியது இல்லை. ரசிகர் மன்றங்கள் எல்லாம் நற்பணி மன்றங்கள் என மாற்றிய பெருமை திரு. கமலுக்கு உண்டு. தனக்கு அரசியல் தெரியாது என்றும்  சினிமா உலகம் மட்டுமே தெரியும் என்பவர். சமூக பிரச்சினைகளுக்கு அவ்வப்போது குரல் கொடுப்பவர்.

இவருக்கு அரசியல் தெரியாது என்பதால், இவர்களது நற்பணி மன்றத்து உறுப்பினர்கள் ரஜினியின் புதிய கட்சிக்கு முழு ஆதரவு கொடுக்க இவர் சம்மதிக்க வேண்டும். தமிழகத்தில் ஒரு மிக சிறந்த ஆட்சி அமைய, மக்கள் யாவரும் நலம் பெற இந்த மாற்றத்தை இப்போதே உருவாக்க வேண்டும். இதுவே தருணம். 

வாழ்க தமிழ். வாழ்க தமிழகம். 

----

இப்படியாக எழுதி வைத்துவிட்டு, ஒரு தேநீர் கோப்பையுடன் தோட்டத்து பகுதியில் நடந்து கொண்டிருந்தேன். 

தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தவரிடம், விவசாயம் எல்லாம் எப்படி போகுது என்றே வினவினேன். 

என்னய்யா பண்ண சொல்றீங்க, நீங்க படிச்சி மேல்நாட்டுக்குப் போயீட்டீங்க, எப்போவாச்சும் வரீங்க இங்க மழை தண்ணீ இல்லாம, கரண்ட் இல்லாம நாங்க அன்றாடம் கஷ்ட ஜீவனம் நடத்துறோம் என்றார். 

இதற்கு எல்லாம் அரசு தானே காரணம் என்றேன். 

அட நக்கல் பண்ணாதீங்கயா, எல்லாமே நாம தான் காரணம். நாயை குளிப்பாட்டி நடு வீட்டுல வைச்சது யாரு? வெளில போற ஓணானை வேட்டிக்குள்ள விட்டது யாரு? 

ஒரு படைப்பாளியான எனக்கு அவரின் கேள்விகள் புதிய அர்த்தங்கள் தந்து கொண்டிருந்தன.

அதுதான் மாற்றங்கள் நாம ஏற்படுத்தலாமே என்றேன். 

தெரியாத பேயை விட, தெரிஞ்ச பேயே மேல் தானே என்றார். 

சரியென தலையாட்டிவிட்டு மிகவும் யோசனையுடன் வீட்டுக்குள் நுழைந்தேன். குன்றேறி யானைப்போர்... மேசையில் எழுதி வைக்கப்பட்டு இருந்த கட்டுரை தற்போது குப்பைத் தொட்டியை அலங்கரித்து கொண்டு இருந்தது.  மக்கள் எப்போது மாற்றம் கொள்வார்கள் என்றே நான் யோசிக்கத் தொடங்கினேன். 



Tuesday 29 January 2013

பேய்கள் அரசாண்டால்

நான் தூங்கும்போது காலை மணி மூன்று இருக்கும். வெட்டியாக பொழுதைப் போக்கி கொண்டிருந்தேன். பின்னர் உறங்கினேன். 'பேய்கள் அரசாண்டால், பிணம் தின்னும் சாத்திரங்கள்' என பட்டென்று ஒருவர் எனது காதில் சொல்லிக்கொண்டு இருந்தார். நான் திடுக்கிட்டுப்  பார்த்தேன். சாமியார் நின்று கொண்டிருந்தார். என்ன சொல்வது என்றே புரியவில்லை.

மீண்டும் அதே வரியைச் சொன்னார். பேய்கள் அரசாண்டால், பிணம் தின்னும் சாத்திரங்கள். எனக்கு மிகவும் குழப்பமாகிப் போனது. அதெப்படி பேய்கள் அரசாள  முடியும்? சாத்திரங்கள் பிணம் தின்ன முடியும்? என்றே சாமியாரை நோக்கினேன். எனக்கு இவரிடம் பேசுவது அவ்வளவாக பிடிக்காது. அதன் காரணமாகவே அவர் பேசுவதை தடை செய்ய வழக்கு தொடரலாமா என எனது வக்கீலிடம்  மிகவும் விரிவாக பேசி அப்போதே நினைத்தேன்.

நீங்கள் இனிமேல் என்னிடம் பேசக் கூடாது என்று வழக்கு தொடர இருக்கிறேன் என்றேன். சாமியார் திகைக்காமல் சிரித்தார். இவ்வளவுதானா? தாராளமாக வெட்டியாய் இருக்கும் உனது வக்கீலுக்கு ஒரு வெட்டி வேலை ஒன்று கொடு என்றார். எனக்கு தூக்கி வாரிப் போட்டது. இவர் மீது வழக்கு போடுவேன் என்கிறேன், அது வெட்டி வேலை என்கிறாரே என நினைத்தேன்.

பக்தா, எனது பேச்சு உரிமையை நீ தடை செய்ய நினைத்தால் நான் எங்கேனும் பேசிக் கொண்டிருப்பது உனது காதில் விழும் வாய்ப்பு நேரடியாக இல்லாது போனாலும் மறைமுகமாக அமைந்துவிடும் என்றார். சரியென இவரின் மீதான தனிப்பட்ட வெறுப்புக்கு நமது மதிப்பை குறைத்து கொள்வானேன் என நினைத்து கொண்டு பேய்கள் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள் பற்றி கேட்டேன்.

உனது மனதினை எப்போதும் நல்ல சிந்தனைகளுடன் வைத்து இரு. தனிப்பட்ட நபர்கள் மீது காழ்ப்புணர்ச்சி எதுவும் கொள்ளாதே. நல்ல சிந்தனைகளை தெய்வீக சிந்தனைகள் என்றும் கெட்ட சிந்தனைகளை பேய் சிந்தனைகள் என்றும் மனதில் ஓடும் எண்ணங்களை சொல்லலாம். பேய் சிந்தனைகள்  உன்னிடத்து அரசாட்சி செய்தால், அல்லது நாட்டியம் செய்தால் நீ கற்று கொண்ட வித்தைகள், நல்ல சாத்திரங்கள் எல்லாம் செத்தவைகளுக்கு சமானம், அவைகளால் ஒன்றும் உனக்கு உதவி செய்ய இயலாது. பல நூல் கற்றும் நீ களிமண் என்றார்.

அப்படி என்றால் இதில் இருந்து விடுதலை கிடையாதா? என்றேன். சாமியார் சிரித்தார். தெய்வீக சிந்தனைகளை நீ மெதுவாக மனதில் அழுத்தமாக பிடித்து கொள்ள இந்த பேய் சிந்தனைகள் விலகும். தவறு என தெரிந்தால் அவற்றை எல்லாம் புறந்தள்ள வேண்டும். தவறு என தெரிந்தும் அதையே பிடித்து கொண்டிருப்பதால் மேலும் மேலும் உனது மரியாதைகள் குறைந்து கொண்டே போகும். நீதி நியாயத்திற்கு உட்பட்டு வாழ்வதே மனித வாழ்வில் பெரும் சௌகரியமான செயல் எனவே தெய்வீக சிந்தனைகளை கைபற்று பேய் சிந்தனைகளிடம் இருந்து விடுதலை கிடைக்கும் என்றார் சாமியார்.

பேய்கள் அரசாண்டால், பிணம் தின்னும் சாத்திரங்கள் நானும் சொல்லிப் பார்த்து கொண்டேன். எனக்கு சாமியார் அறிவியல் பற்றி பேசமாட்டாரா எனும் ஏக்கம் வந்து தொலைந்தது. தாங்கள் இந்த பூமி பற்றி எனக்குசொல்லித் தாருங்கள் என அவரது பேச்சை தடை செய்ய நினைத்த நான் வினவினேன். சாமியார் சிரித்தார்.

எனக்கு சங்கடமாகவே இருந்தது. எதற்கு எடுத்தாலும் சாமியார் சிரிப்பது எனக்கு புரியாமலே இருந்தது. நிச்சயம் அடுத்த முறை சொல்கிறேன் என எழுந்து சென்றார். என்னுள் இருந்த பேய் சிந்தனைகள் என்னை அழுத்திக் கொண்டிருந்தன. எனது சோம்பேறித்தனம் என்னை பார்த்து ஏளனமாக பார்த்தது. விழித்துக் கொண்டேன்.

மணி எட்டாகுது, வேலைக்குப் போகலையா என்றார் அம்மா. எட்டு மணி ஆகுதல, எழுப்பி இருக்கலாம்ல என அம்மாவை சத்தம் போட்டேன். பிணம் தின்னும் சாத்திரங்கள். வேகவேகமாக கிளம்பினாலும் மணி ஒன்பது தொட்டு இருந்தது. வேலை இடத்தை அடைந்தேன். தாமதமாக வந்ததற்காக என்னை எனது அதிகாரி ஏகத்திற்கும் என்னை சத்தம் போட்டார். பேய்களின் அரசாட்சி.

மாலை வந்தது, விஸ்வரூபம் எனும் திரைப்படம் பார்க்கலாம் என சென்றேன். நான் சென்றபோது அந்த திரையரங்கில் வேறு படம் போட்டு கொண்டிருந்தார்கள், அங்கே இருந்தவரிடம் என்னவென வினவினேன். இந்த படம் திரையிடக் கூடாது என்பது தெரியாதா, இந்த படத்திற்கு தடை விதித்து இருக்கிறார்கள் என்றார். என்ன காரணம் என்றேன். இது கூட தெரியாமல் எதற்கு உயிர் வாழுற என்றார். எனக்கு என்ன சொல்வது என புரியவில்லை. ஒரு திரைப்படம் பற்றி நான் அறிந்து கொள்ளாமல் இருப்பது சமூக குற்றமா?

நான் ஏமாற்றத்துடன் திரும்பினேன்.  அப்போது இருவர் பேசிக்கொண்டு இருந்தார்கள். பேய்கள் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்றார் ஒருவர். மற்றொருவர் விளக்கம் கேட்டார். அதற்கு அவர் அரசு பற்றி ஏதோ பேய் அரசு என திட்டி விளக்கம் கொடுத்து கொண்டு இருந்தார். நான் மனதிற்குள் சிரித்து கொண்டேன். அரசு, மக்கள், மதம், சாமியார் எல்லாம் மனிதர்கள் தானே! ஆனால் சாமியார் எனது கண்களுக்கு மிகவும் பிரமாண்டமாக தெரிந்தார்.

அம்மாவிடம் பேய்கள் அரசாண்டால், பிணம் தின்னும் சாத்திரங்கள் என்றேன். பிணத்தை தின்னா தின்னுட்டு போகுது. பேய்கள் அரசாண்டா ஆண்டுட்டு போகுது. நீ ஒழுங்கா இரு, அது போதும் என்றார். எனக்கு அம்மா, சாமியாரை விட மிகவும் பிரமாண்டமாகத் தெரிந்தார். 

Thursday 24 January 2013

இவனுங்க தீவிரவாதிங்கதான்

விஸ்வரூபம் படத்திற்கு தடை விதிக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என அறிவித்த  சில அமைப்புகள் முதலில் இதை, இஸ்லாமிய தீவிரவாதம்  தடை விதிக்க ஆர்ப்பாட்டம் நடத்தட்டும்.

விஸ்வரூபம் எனும் பெயரை அரபியே மொழி வடிவத்தில் அமைத்து இருக்கிறார் கமல். கமல் தெரிந்தே தான் எல்லாம் செய்து இருக்கிறார். கமல் குறி வைத்து இருப்பது ஒசாமா போன்ற வகையறாக்களை, சாதாரண முகம்மதுகளை அல்ல.

கமல்... எதற்கு அந்த அமைப்புகளுக்கு எல்லாம் படம் போட்டு காட்டுறீங்க? அவர்கள் என்ன தணிக்கை குழுவில் உறுப்பினர்களா? 

தமிழக அரசு தனது கோமாளித்தனத்தினை மீண்டும் மீண்டும் நிரூபித்து கொண்டு இருக்கிறது.படம் பார்த்து கலவரம் பண்ணும் அளவுக்கு மதி கெட்டு போனதா தமிழகம்? கலவரம் பண்ணுவதற்கு என அறிக்கை வேந்தர்கள் இருக்கிறார்களே! அவர்களை அல்லவா முடக்க வேண்டும்! இதெல்லாம் இருக்கட்டும், மக்களின் அடிப்படை பிரச்சினைகளில் கவனம் செலுத்து தமிழக அரசே! 

ஒரு சில முஸ்லீம்களின் நடவடிக்கையினால் மொத்த முஸ்லீம்களுக்கும் கெட்ட பெயர் என்பதை சராசரி முஸ்லீம்கள் புரிந்து கொள்வார்கள். ஆனால் முஸ்லீம்கள் அல்லாதவர்களிடம் இது குறித்து கேட்டால் முஸ்லீம்கள் பற்றிய கண்ணோட்டம் வேறு மாதிரிதான் இருக்கிறது. 

சமீபத்தில் லண்டனில் உள்ள ஒரு இடத்தில் சில முஸ்லீம்கள் 'இது எங்க ஏரியா, இப்படி உடை உடுத்தாதே, இங்கே குடிக்காதே என போவோர் வருவோர்களிடம் வம்பு செய்து இருக்கின்றனர்'. இப்படி இவர்கள் நடந்து கொள்வதன் மூலம் ஒட்டு மொத்த முஸ்லீம்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தி வருகிறார்கள். இதுதான் கமல் சொன்ன கலாச்சார தீவிரவாதம். நிறைய நபர்கள் இங்கிலாந்து அரசின் உதவித் தொகையின் மூலம் பிழைப்பு நடத்தி வருபவர்கள். 'உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்யும் கோமாளிகள்' இருக்கும் வரை ஏதாவது பிரச்சினை வந்து கொண்டே இருக்கும். 

சல்மான் ருஷ்டியை மிரட்டிய அதே கும்பல்களின் வழித் தோன்றல்கள் தான் இவர்கள் எல்லாம். படைப்பாளியை மதம் என்கிற எந்தவொரு மதம் பிடித்த பெயரில் மிரட்டும் எவரும் தீவிரவாதிதான். 

'நான் எழுதியதை நீங்கள்  தடை செய்ய துடித்தால் நீங்கள் மதிக்கும் மத நூல்களை எல்லாம் தடை செய்ய நான் எதற்கு துடிக்க கூடாது என ஒவ்வொரு படைப்பாளியும் உள்ள குமுறல்களுடன் தான் இருப்பான்' 

இப்பொழுதெல்லாம் எதற்கு எடுத்தாலும் கைது என முண்டாசு கட்ட ஆரம்பித்து விட்டார்கள். கருத்து சுதந்திரம் என்பதன் சுதந்திர அளவு எதுவென புரியவில்லை.

கமல், தான் ஒரு கை தேர்ந்த அரசியல்வாதி மற்றும் ஒரு வியாபாரி என்பதை நிரூபித்து கொண்டு இருக்கிறார். பீத்தினா ஊத்திக்கும் என்பது அவருக்கு தெரியாமலில்லை. ஆனால் திறமை இருக்குமிடத்தில் கர்வம் இருக்கத்தான் செய்யும். கர்வம்தனை வெளிக்காட்டாமல் பணிவுடன் பாசாங்கு போடுபவரைத்தான் எல்லோருக்கும் பிடித்து இருக்கிறது. தீவிரவாதிகளை விட மிதவாதிகளாக வேசம் போடுபவர்களைத்தான் உலகம் கொண்டாடி வருகிறது. 

வாளால் வெட்டுபவனை விட 
வார்த்தைகளால் வெட்டுபவன் 
மிக மிக கொடியவன்!

உலகம் இப்போது பழைய புதினத்தின் அடிப்படையில் புதிதாக வரலாறு எழுதிக் கொண்டு இருக்கிறது. 

விஸ்வரூபம் - திரைப்படம் வெளியாகும் முன்னரே ஒரு வெற்றி சித்திரம் தான். சிலருக்கு கண்களில் எரிச்சல் தந்து இருக்கிறது, சிலருக்கு கண்களில் குளிர்ச்சி தந்து இருக்கிறது. 

படத்தின் கதை இந்த வரிகளில் ஒளிந்து இருக்கிறது. கணவனின் பழைய வாழ்க்கையில் ஒளிந்திருக்கும் மர்மங்கள்!

எவர் என்று  நினைத்தாய்
எதைக் கண்டு சிரித்தாய் 
விதை ஒன்று முளைக்கையில் 
வெளிப்படும் முழுரூபம் 

எவர் என்று  நினைத்தாய்
எதைக் கண்டு சிரித்தாய் 
விதை ஒன்று முளைக்கையில் 
வெளிப்படும் புதுரூபம் 

எவர் என்று  நினைத்தாய்
எதைக் கண்டு சிரித்தாய் 
விதை ஒன்று முளைக்கையில் 
வெளிப்படும் சுயரூபம் 

யார் என்று புரிகிறதா
இவன் தீ என்று தெரிகிறதா!


விஸ்வரூபம் 

அடுத்து எவராவது 'ஔரங்கசீப்' என்ற படம் எடுக்கட்டும்! 

Thursday 17 January 2013

இன்று எனக்கு பிறந்த நாள்

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் மற்றும் தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்த்துகள்.

-----

எனது ஜனன குறிப்பில் இப்படித்தான் எழுதப்பட்டு இருப்பதாக ஞாபகம். 1975ம் வருடம் தை மாதம் நான்காம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 12.10 மணிக்கு ஜனனம். பூரட்டாதி நான்காம் பாதம், மீன ராசி, துலாம் லக்னம் என்றெல்லாம் குறிப்பினை படித்த அனுபவம் உண்டு. இன்று எனக்கு முப்பத்து எட்டு வயது. இத்தனை வயதாகி விட்டதா என்ற எண்ணம் எழாமல் இல்லை.

அதிகாலையில் பிறந்தநாள் வாழ்த்துகள் என்று சொன்ன எனது மனைவிக்கும், எனது பையனுக்கும் ஒரு புன்னகை சிரிப்புடன் நன்றி சொல்லிவிட்டு இத்தனை வருடங்களை ஒரு சின்ன அசைவு போட்டபோது அம்மாவும், அப்பாவும் மட்டுமே முதலில் கண்களில் தெரிந்தார்கள். சிறிது நேரம் பின்னர் மீண்டும் பிறந்த நாள் வாழ்த்து சொன்ன மனைவியிடம்

அன்னையை இழந்து தவித்து நின்றபோது
அன்னையாய் வந்தவள் நீ

என்று ஒரு கவிதை என அவரிடம் சொல்ல, எனது அழகு பற்றி வர்ணனை கவிதை சொல் என கேட்டார். இப்படி கடந்த பதினான்கு  வருடங்களாக என்னிடம் கேட்டாலும்

நீ ஒரு காதல் கவிதை
உனக்கு எதற்கு ஒரு பொய் கவிதை

என்றே இன்னமும் சமாளித்துக் கொண்டிருக்கிறேன். 

இம்முறை பிறந்தநாள் கொண்டாட்டம் எல்லாம் கிடையாது. ஆனால் திடீரென எனது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் உறவினர்களுடன் சேர்ந்து இந்த லண்டன் வந்த பதினான்கு வருட காலங்களில் அத்திப்பூத்தாற்போல் நடந்தது உண்டு. இந்தியாவில் இருந்தவரை பிறந்தநாள் கொண்டாடியதாக நினைவில் இல்லை, ஒரே ஒருமுறை கல்கத்தாவில் படித்து கொண்டிருந்தபோது நண்பர்களுக்கு இனிப்பு வாங்கி தந்ததாக நினைவு.

இந்த இனிய நன்னாளில், எந்நாளும் போல இவ்வுலகம் செழிப்புற்று இருக்க எல்லாம்வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.