Tuesday 26 March 2013

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள்-13

காயத்ரியும் நானும் என்ன சொல்வது என தெரியாமல் ரங்கநாதன் வீட்டில் இருந்து கிளம்பினோம். சில விசயங்கள் மிகவும் விசித்திரமாகவே காட்சி அளிக்கிறது. கர்மவினை என்னை துரத்தியது.

''உங்க அக்கா பண்ணின காரியத்தை நீ பார்த்தியா''

''ம்ம்''

''இதெல்லாம் கர்ம வினையா?''

''ஆமா''

''இல்லை. இது தன்வினை. தன்வினை தன்னைச் சுடும். உங்க அக்கா எதுக்கு ரங்கநாதனை காதலிக்கனும், அப்புறம் வேணாம்னு சொல்லி நடிக்கனும். இதெல்லாம் ஒரு நல்ல பொண்ணு செய்ற காரியமா? அதுவும் நம்மகிட்ட எதுவும் சொல்லாம!''

''நீ கேட்டு இருக்கனும், நான் அவகிட்ட எதுவும் விவரமா கேட்டது இல்ல, அவளும் என்கிட்டே சொன்னது இல்ல''

''ஓஹோ அதுதான் கர்ம வினையா?''

''ஆமா''

எனக்கு காயத்ரி மீது இனம் புரியாத கவலை வந்து சேர்ந்தது. கர்ம வினை என்பதில் கருத்தாக இருக்கிறாளே என அச்சம் வந்து சேர்ந்தது. ஒருவேளை எங்களது காதல் கை கூடாமல் போனால் கர்ம வினை என சொல்லிவிடுவாளோ என அச்சம் வந்து சேர்ந்தது. வீட்டை வந்து சேர்ந்தபோது இருட்டி இருந்தது. காயத்ரியின் அக்காவிடம் நேராக சென்றேன்.

''என்ன சொன்னாங்க''

''அந்த பையனுக்கு வேற பொண்ணு பார்த்துட்டாங்களாம்''

காயத்ரியின் அக்காவின் முகம் ஏமாற்றத்தில் உறைந்து போனது போல இருந்தது.

''இல்ல அக்கா, நீயும் அவரும் காதலிக்கிறதா சொன்னாங்க. உன்னைத் தவிர வேற பொண்ணை அவர் கல்யாணம் பண்ண மாட்டாராம், பார்த்தா ரொம்ப நல்லவரா இருக்காருக்கா''

''காயூ நீ வேற வீட்டுக்குப் போனியா''

''சும்மா இரு முருகேசு, அக்கா வா தனியா பேசனும்''

அக்காவும் தங்கையுமாய் மாடிக்கு சென்றார்கள். நான் எனது அம்மாவிடம் சென்றேன். அப்பாவும் அமர்ந்து இருந்தார்.

''போன காரியம் என்ன ஆச்சு''

''அது எல்லாம் ஒன்னும் இல்லம்மா, எந்த பிரச்சினையும் இல்ல. கல்யாண செலவு வந்து இருக்கு''

''என்ன சொல்ற முருகேசு''

ரங்கநாதன் வீட்டில் நடந்த விசயத்தை விரிவாக சொன்னேன்.

''ரொம்ப சந்தோசமான விசயம் தானே''

''ஆமாம்மா, ஆனா காயத்ரி அக்கா தான்''

''தன்னோட குடும்ப நிலையை நினைச்சி அப்படி ஒரு முடிவுக்கு அவ வந்து இருப்பா''

அப்பாவின் ஆருடம் சரியாகவே எனக்குப் பட்டது. எனது தலையில் சுற்றிக் கொண்டு இருந்த கர்ம வினை என் முன்னாள் வந்து விழுந்தது. அப்பாவிடமும் அம்மாவிடமும் கர்ம வினை பற்றி சொன்னேன். அப்பா சிரித்துக் கொண்டே எழுந்தார். அம்மா முகத்தை சுளித்தார்.

''உங்க அம்மாவை கட்டிக்கிட்டது என் கர்ம வினை''

''ஆமா ஆமா, உங்களை கட்டிக்கிட்டது என் கர்மவினை''

''அம்மா, அப்பா. அப்படின்னா நான் உங்களுக்கு பிறந்தது கர்மவினையா''

வேகமாக சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியில் வந்தேன். பறந்து விரிந்த வானம். அதில் நட்சத்திரங்கள். ஒரு சின்ன நிலா. இவை எல்லாம் எந்த கர்ம வினையால் உருவானவை. இது ஒரு நிகழ்தகவா.

'Species are adopted to environmental conditions and these environmental conditions must favour to support life forms. Unless the environmental conditions support the life, there is little chance for anything to develop in that particular environment'

கர்ம வினையை தாண்டி கல்லூரியில் ஆசிரியர் சொன்ன வாசகம் தலையில் வந்து உட்கார்ந்தது.

''முருகேசு, சாப்பிட வாப்பா''

அம்மாவின் அழைப்பு சத்தம் கேட்டு உள்ளே சென்றேன். காயத்ரி, அவளது அக்கா, என் அப்பா சாப்பிட அமர்ந்து இருந்தார்கள். அப்பாதான் முதலில் ஆரம்பித்தார்.

''உங்க அப்பா பத்தி எல்லாம் கவலைப் படாதம்மா, நான் எல்லாம் அந்த பையன் கிட்ட சொல்லி புரிய வைக்கிறேன். இந்த வாரம் அவங்க உன்னை பொண்ணு பார்க்க வரட்டும். அந்த பையன் கிட்ட நானே சொல்றேன்''

அப்பாவின் பேச்சு முடிந்ததும் நான் சொன்னேன்.

''எதுக்கு எப்ப பார்த்தாலும் பொண்ணு பார்க்க வரனும், மாப்பிள்ளை பார்க்க போனா என்ன, அதனால இந்த வாரம் நாம போகலாம், காயூ என்ன சொல்ற''

''ம்ம், அக்காவுக்கு முழு சம்மதம்''

வரும் ஞாயிறு அன்று ரங்கநாதன் வீடு செல்வதாக முடிவு செய்தோம். நானும் காயத்ரியும் மாடிக்கு சென்றோம்.

''உன் அக்கா கிட்ட என்ன பேசின''

''கர்ம வினை''

(தொடரும்)

1 comment:

Jobs said...

நண்பரே அருமையான பதிவு, மேலும் ஒரு தகவல் . கூகுளே அட்சென்ஸ் போல. http://www.taxads.in/ தமிழ் தளங்களுக்கு விளம்பரம் தருகிறார்கள். உங்கள் தளத்தையும் பதிவு செய்து பயன் பெறுங்கள். http://www.taxads.in/