Tuesday 26 October 2010

தேடிக்கொண்ட விசயங்கள் - 3

3. உலக உயிரினங்கள் ஒரு பார்வை

'உலகில் தோன்றும் உயிரினங்கள், இயற்கையின் சூழலுக்கேற்ப, செயற்கைத்தனமான வாழ்வியலுக்கேற்ப, தம்மில் மாற்றம் கொள்வதோடு, தம்மை மாற்றியமைத்துக் கொண்டு வாழும் பழக்கத்தை எடுத்துக்கொள்வது மட்டுமில்லாது, அந்த வெற்றிகரமான காரணிகளை அடுத்த சந்ததிகளுக்கு கொண்டு செல்வதன் மூலம் தம்மை உலகில் நிலைநிறுத்திக் கொள்கின்றன'

உயிரினங்கள் எப்படி தோன்றியது? உயிரினங்கள் எவரால் படைக்கப்பட்டது? 'படைப்பு கொள்கை' 'சுயம்பு கொள்கை' என இரண்டு வகைகள் இருக்கின்றன என வைத்து கொண்டாலும், படைக்கப்பட்டதோ, தோன்றியதோ அது எப்போது எனும் வினாவிற்கான விடைகள் தெளிவாக இல்லை என்பதுதான் உண்மை.

உலகம் தோன்றியது எப்போது? வேதம் சொல்லும் கணக்கை எடுத்துக் கொள்வதா? அறிவியல் சொல்லும் கணக்கை எடுத்துக் கொள்வதா? அல்லது நானாக ஒரு புதுக் கணக்கு எழுதுவதா? என யோசித்துக் கொண்டிருக்குபோது எல்லாமே ஒருவிதத்தில் பொய் கணக்கு என்றுதான் தோன்றுகிறது.

உலகில் தற்போதுள்ள ஜீவராசி வகைகள் பதினேழு லட்சங்கள் என அறிவியல் அறிஞர்கள் அறிவித்து இருக்கிறார்கள். அதில்

முதுகெலும்புள்ள விலங்கினங்கள் வகை  62,305,
முதுகெலும்பற்ற விலங்கினங்கள் வகை 1, 305, 250.
தாவர இன வகைகள் 321,212
 காளான் வகை, பாசி வகை என 51,563.

பூச்சிகள் மட்டும் ஒரு லட்சம் முதுகெலும்பற்ற விலங்கினங்கள் வகையில் அடக்கமாம். பாலூட்டி வகைகள் வெறும் 5490 மட்டுமே.

இந்த கணக்கெடுப்பில் ஆடுகள், ஒட்டகங்கள், பாக்டீரியாக்கள் போன்றவை கணக்கில் எடுத்து கொள்ளப்படவில்லை என அந்த அறிவிப்பில் உள்ளது. தற்போது பூமியில் இல்லாது போன மறைந்த ஜீவராசி வகைகள் 300, ௦௦௦ என அறியப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் எல்லா ஜீவராசி வகைகள் சேர்த்தால் 3,000,000 லிருந்து 10,000,000 அல்லது 50,000,000 இருக்கலாம் என கருதப்படுகிறது.

மறைந்து போன ஜீவராசிகள் எத்தனை என்பதை அறுதியிட்டு கூற இயலாத நிலையும், திடீர் திடீரென புது வகையான ஜீவராசிகள் உருவாவதும் என இந்த பூமியில் வாழும் உயிரினங்கள் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன.

நமது சூரியக் குடும்பம் தோன்றிய வருடங்களில் முதல் ஒன்றரை பில்லியன் வருடங்கள் மட்டுமே பூமியில் உயிரினங்கள் இல்லை எனவும் அதற்கு பின்னர் பாக்டீரியா தோன்றிவிட்டது என வெளியிடப்படும் அறிவியல் கணக்கெடுப்புகள் ஆச்சர்யம் அளிக்கின்றன. மூன்றரை பில்லியன் வருடங்களாக பாக்டீரியாக்கள் நமது பூமியில் நிலை கொண்டுவிட்டது. நமது மனித இனத்துடன் ஒட்டிய இனம் தோன்றி தற்போது ஏழு மில்லியன் வருடங்கள் (7,000,000) என்பது கணிப்பு.

இதில் எத்தனைவிதமான மாற்றங்கள்? பூமியில் ஏற்பட்ட வேறுபாடுகள்தான் எத்தனை? இருப்பினும் ஜீவராசிகள் பூமியில் தம்மை நிலைநிறுத்திக் கொள்ள போராடி கொண்டே இருக்கின்றன. ஒரு ஜீவராசி வகை அழிந்தாலும், வேறொரு வகையில் ஜீவராசி தோன்றுவதும், நிலை நிறுத்திக் கொள்ள முயற்சிப்பதும் 'படைப்பு கொள்கையை' காற்றில் பஞ்சாக பறந்துவிட செய்கிறது.

அதே வேளையில் ஒரு செல் உயிரினம் பூமியில் மட்டும் தோன்ற வேண்டியதன் அவசியம் என்ன? ஒரு செல் உயிரினத்தில் இருந்து பல செல் உயிரினங்கள் தோன்றியதன் மர்மம் யாது? அறிவியல் இதனை இயற்கை தேர்வு விதி என்கிறது. பூமியில் மட்டுமே உயிரினம் தோன்ற இந்த சூழல் எனில் பிற கிரகங்களில் அந்த சூழல்தனை பயன்படுத்தி இயற்கை எதற்கு உயிரினத்தை உருவாக்கி கொள்ளவில்லை எனும் கேள்விக்கான பதில் இயற்கை தேர்வு விதியில் ஒரு விதிவிலக்காகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை.

ஒரு சந்ததியை உருவாக்கிட பாலூட்டி வகைகள் எடுத்து கொள்ளும் கால கட்டங்கள்  அதிகம். அதிலும் குறிப்பாக யானைகள் 660 நாட்களும், மனிதர்கள் சுமார் 270 நாட்களும் எடுத்துக் கொள்கின்றன. பூனைகளும் நாய்களும் முறையே 62 நாட்கள், 65 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. பன்றிகள் 115 நாட்கள், ஆடுகள் 145 நாட்கள், பசுக்கள் 283 நாட்கள், குதிரைகள் 336 நாட்கள், சிங்கங்கள் 108 நாட்கள், முயல்கள் 33 நாட்கள் என பல வேறுபாடுகள் இருப்பதை காணலாம்.

இப்படிப்பட்ட பல வித்தியாசங்கள் உள்ளடக்கிய உயிரினங்களில் உள்ள ஜீன்கள் எனப்படும் மரபணுக்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையனவாக இருப்பதுதான் இந்த உலகில் உள்ள எல்லா உயிரினங்களுக்கும் ஒரு பொது மூலம் ஒன்று உண்டு என்பது அறிவியலின் தீர்மானம். உதாரணத்திற்கு சிம்பன்சி எனப்படும் குரங்கின வகையும், மனித வகையும் ஒரு பொது உயிரினத்தில் இருந்து உருவாகி இருக்கலாம் என்றுதான் தற்போது கருதப்படுகிறது. குரங்கிலிருந்து மனிதன் வரவில்லை என்பது அறிவியலின் தீர்க்கமான ஒரு முடிவு.

இத்தகைய எண்ணங்கள் தோன்றிட உதவிய  மரபணுக்கள் பற்றி அடுத்த தேடலை தொடர்வோம், அதோடு இன்னும் உயிரினங்களில் அதிக பார்வையை செலுத்துவோம்.

(தொடரும்)


.

நுனிப்புல் பாகம் 2 (20)

திருமால் திரும்பினார் 

விஷ்ணுப்பிரியன் கலக்கத்துடன் திருமாலையும் வாசனையும் மாற்றி மாற்றிப் பார்த்தார். சிரிப்பொலி சட்டென நின்றது. விஷ்ணுப்பிரியன் அங்கிருந்து கோவில் உள்ளே செல்லாமல் வீடு நோக்கி நடக்கத் தொடங்கினார். திருமால் விஷ்ணுப்பிரியனை அழைத்தார். ஆனால் விஷ்ணுப்பிரியன் காதில் வாங்கிக் கொள்ளாது நடந்தார். வாசன் விஷ்ணுப்பிரியனை பின் தொடர்ந்து சென்று அவரது கையைப் பிடித்து அழைத்து வந்தான். விஷ்ணுப்பிரியனின் கையைப் பிடித்தபோது அவரது நடுக்கத்தை இவன் உணர்ந்தான். கோவிலுக்குள் செல்லாமல் கோவிலின் பக்கவாட்டிற்கு திருமால் அவர்களை அழைத்துச் சென்றார். 

திருமால் விஷ்ணுப்பிரியனின் சுருக்கமாக பெருமாள் தாத்தா சொன்ன விசயங்களைச் சொன்னார். அதைக் கேட்ட விஷ்ணுப்பிரியன் மிகவும் மனம் கலங்கினார். அந்த வேளைப் பார்த்து பார்த்தசாரதியும் அங்கே வந்து சேர்ந்தார். விஷ்ணுப்பிரியன் தான் கொடுத்த வாக்கினை நிறைவேற்றவே தனது மனைவியை முதலில் இதற்கு சம்மதம் தெரிவித்ததாகவும், பார்த்தசாரதியின் வேண்டுகோளுக்கிணங்க தனது முடிவை மாற்றிக்கொண்டதாகவும் தெரிவித்தார். ஆனால் தான் அவசரப்பட்டு செல்களை அழித்துவிட்டதாகவும் இதனால் ஏற்படக்கூடிய பின்விளைவுகள் என்னவாக இருக்கும் என யோசிக்கையில் தான் மிகவும் வேதனையும் கலக்கமும் அடைவதாக கூறினார். 

திருமால் தனக்கு இடப்பட்ட கட்டளையை நிறைவேற்றவே தான் வந்ததாகவும், அப்படி ஒருவேளை விஷ்ணுப்பிரியன் தவறியிருந்தால் அதை ஞாபகப்படுத்திச் செல்லவும், நேரடியாக பார்த்துச் செல்லவும் வந்ததாக கூறினார். இதைக்கேட்ட விஷ்ணுப்பிரியன் சற்று மனம் நிம்மதி அடைந்தவராக தென்பட்டார். பார்த்தசாரதி எல்லாம் அவன் கருணை என வேண்டிக்கொண்டார். வாசன் மட்டும் மிகுந்த யோசனையில் இருந்தான். 

இதை இப்படித் திட்டமிட்டு செய்ய வேண்டிய காரியமும், எவர்க்கும் தெரியாமல் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது குறித்துக் கூறினார். பார்த்தசாரதி விஷ்ணுப்பிரியனை ஆரத் தழுவினார். ஆனால் விஷ்ணுப்பிரியன் இந்த விசயத்தை கடைசிவரை பாதுகாப்பது என்றே தான் இருப்பதாகவும், சுபா மருத்துவ குறிப்புகளைப் பார்த்துத் தெரிந்து கொண்டாள் என அறிந்ததும், அவளிடம் மறைக்கமுடியாமல் தான் தவித்ததும் குறித்து சில நாட்கள் பல மாதங்கள் போல் நகர்கிறது என்று சொன்னார். திருமால் விஷ்ணுப்பிரியனிடம் தனது முகவரியை தந்தார். வாசன் இவர்கள் பேசுவதை கவனமாகக் கேட்டுக்கொண்டவன், மெளனமாகவே நின்று கொண்டிருந்தான். 

திருமால் மற்றும் அனைவரும் ஆலய தரிசனம் செய்துவிட்டு பார்த்தசாரதி வீட்டிற்குச் சென்றார்கள். பார்த்தசாரதி வீட்டில் உணவருந்தினார்கள். திருமால் உடனடியாக தான் கிளம்ப வேண்டும் என அன்று இரவே கிளம்பினார். மற்றவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். திருமால் தன்னை திருவில்லிபுத்தூரில் கொண்டு விடுமாறு விஷ்ணுப்பிரியனை கேட்டுக்கொண்டார். வாசன் உடன் சென்றான். 

வாசனிடம் செடி விசயம் வெற்றிகரமாக முடிந்ததும் தன்னை வந்து சந்திக்குமாறு கூறினார் திருமால். வாசன், பேசுவதை இன்று தங்கியே பேசிச் செல்லலாம் என சொன்னான். ஆனால் திருமால் வாசன் கட்டாயம் சென்னை வர வேண்டும் என கேட்டுக்கொண்டார். வாசன் தனது ஆஸ்ரம விசயம் குறித்துச் சொன்னான். திருமால் சிரித்தார். இது அவருக்கு மனதில் கடைசியில் தோன்றிய ஆசையாக இருக்கக்கூடும் என்றார் திருமால். 

திருவில்லிபுத்தூரிலிருந்து ஒன்பது மணியளவில் சென்னைக்குக் கிளம்பினார் திருமால். அவர் செல்வதையேப் பார்த்துக்கொண்டிருந்தான் வாசன். விஷ்ணுப்பிரியன் வாசனிடம் தான் திருமால் குறித்து பயந்து போனதாக சொன்னார். வாசன் திரும்பியவன் பூங்கோதைக்கு திருமணம் நடைபெறாமல் போய் இருந்தால் என்ன பண்ணி இருப்பீர்கள் எனக் கேட்டான். இந்த விசயத்தில் விஷ்ணுப்பிரியன் நடந்து கொண்ட முறை சற்றும் முறையில்லை என்று சொன்னான். விஷ்ணுப்பிரியன் தன்னை மன்னிக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் வாசன் அவரை அத்தனை எளிதாக விடுவதாக இல்லை. இந்த சூழலால் ஏதாவது பூங்கோதைக்கு பிரச்சினை வரும் எனில் தன்னால் அதை அத்தனை எளிதாக ஏற்றுக்கொள்ள இயலாது எனச் சொன்னான். விஷ்ணுப்பிரியன் வாசனிடம் தைரியம் சொன்னார். 

அன்றைய இரவு பொழுது வேகமாக கழிந்தது. காலை எழுந்ததும் பெரியவரும் வாசனும் திருவில்லிபுத்தூர் மலைக்குச் செல்ல வேண்டும் என கிளம்பினார்கள். பூங்கோதை கல்லூரிக்குச் செல்ல தயாரானாள். கேசவன் பார்த்தசாரதியுடன் கட்டிட வேலை ஒன்றுக்கு கிளம்பினான். மூன்று மாதங்கள் செல்ல வேண்டுமே என வேண்டிக்கொண்டான் கேசவன். 

வாசனிடம் பூங்கோதை திருமால் குறித்துக் கேட்டாள். வாசன் உண்மை சொல்வதா? வேண்டாமா? என தவித்தான். பொய் சொல்ல விருப்பம் இல்லாதவனாய் மாலை வந்து அனைத்தும் விபரமாக சொல்வதாக சொன்னான். பூங்கோதை சந்தோசமாகச் சென்றாள். 

மலையடிவாரத்தை அடைந்ததும் வாசன் நோட்டினைத் திறந்தான். பெரியவர் சிரித்தார். என்னவெனப் பார்த்தான் வாசன். சிரமப்படாம எல்லாம் சாதிக்கனும்னு நினைக்கிறியா தம்பி என்றார். வாசன் புரியவில்லை என்றான். ஒரு விதை அத்தனை சாதாரணமா மண்ணில உருவாகிறது இல்லை. இந்த விதையின் மூல ஆதாரம் என்னனு உனக்குத் தெரியுமா? இந்த பிரபஞ்சத்துக்குச் சொந்தக்காரன்தான் விதைக்கு மூல ஆதாரம்னு நான் சொன்னா நீ சிரிப்பே. ஆனால் மூல ஆதாரம் என்னனு சொல்ல முடியுமா? என பெரியவர் வாசனிடம் கேட்டார். வாசன் நோட்டினை மூடினான். சூரியனே ஆதாரம் என்றான். பூமியைத் தவிர வேறு கிரகங்கள் தெரியுமா தம்பி? என்றார். வாசன் பெரியவரை உற்று நோக்கினான். சற்றே தடுமாறினான். புதன் என பெயரிடப்பட்ட கிரகங்களிலிருந்து புளூட்டோ எனப் பெயரிடப்பட்ட கிரகம் வரைக்கும் தெரியும் என்றான். புத்தகத்தில் படிச்சியா தம்பி என்றார் பெரியவர். வாசன் விதையின் மூல ஆதாரம் தனக்குத் தெரியாது என்றான். பெரியவர் கலகலவெனச் சிரித்தார். சூரியன் சட்டென மறைந்து மின்னல் வெட்டியது. மழை மிக வேகமாக கொட்டியது. ஒதுங்க இடம் இன்றி இருவரும் முழுவதும் நனைந்துவிட்டனர். வாசன் எழுதிய நோட்டுப்புத்தகம் முழுதும் மழையில் நனைந்து இருந்தது. பெரியவரை அர்த்தம் புரியாமல் பார்த்தான் வாசன். அன்றைய தேடல் அப்பொழுதே முடிவுக்கு வந்தது. 

(
தொடரும்)

Thursday 21 October 2010

வெளிநாடு செல்பவர்கள் வெளிநாட்டிலேயே இருப்பதேன் 2

ஆசை யாருக்குத்தான் இல்லை. என்னுடைய ஆசையெல்லாம் இப்படித்தான் இருந்தது என எவராலும் முழுமையாக சொல்ல இயலுமா? எவரும் அவர் அவர் ஆசைகளை அப்படியே வெளி சொல்ல இயலாது. பல விசயங்கள் மனதோடு புதைக்கப்பட்டு இருக்கும். பக்கம் பக்கமாக எழுதினாலும் சில ஆசைகள் மட்டும் மனதில் ஒளிந்து கொண்டிருக்கும். இப்படித்தான் ஒருமுறை நண்பர்கள் ஆசைகளை பட்டியலிட சொன்னபோது இவ்வாறு எழுதி இருந்தேன். அதில் எங்கேயும் வெளிநாடு செல்ல வேண்டும் என ஆசை இருந்ததாக குறிப்பிடவே இல்லை.

ஆசைப்பட்டேன் - முன்னுரை 

ஆசைப்பட்டேன் - 1 

ஆசைப்பட்டேன் - 2

ஆசைப்பட்டேன் - 3

ஆசைப்பட்டேன் -4 

ஆசைப்பட்டேன் - 5

கடவுள் ஆசைப்படுவாரா? 

இப்பொழுதும் நினைத்து பார்க்கிறேன். என் தாய்! நினைக்கும் போதெல்லாம் கண்கள் கலங்கி விடுகிறது. எனக்கு எந்த ஒரு வலியும் ஏற்பட்டு விடக்கூடாதென எனது வாழ்க்கையை முடிவு செய்த தாய். ஒரு மனைவி வந்தால் அவளால் நான் பாதுகாக்கப்படுவேன் என எப்படியம்மா உங்களால் எனது வாழ்க்கையை நிர்ணயிக்க முடிந்தது? இதுவே தவறாகி போயிருந்தால் உங்கள் மீது ஒருபோதும் பழி சுமத்தி இருக்க மாட்டேன் அம்மா. நான் எத்தனையோ விசயங்கள் உங்களிடம் பகிர்ந்து கொண்ட போதும், ''நீ சின்ன பையன்டா'' என உங்கள் உத்தரவுக்கு என்னை அன்பினால் கட்டி போட்ட உண்மை எத்தனை பேருக்கு தெரியும்?

ஆம், என் தாய் மட்டும் எனது திருமணத்திற்கான முன்னேற்பாடுகளை பண்ணியிருக்காவிட்டால் நான் இலண்டன் வந்திருக்கும் வாய்ப்பின் கதவு அடைபட்டு போயிருக்கும். நான் இளநிலை பட்டம் படித்து கொண்டிருக்கும்போதே பெண் பார்க்கும் நிகழ்வு நடந்தது. எனது மனைவி மூன்று வயதில் இருந்தே வளர்ந்தது எல்லாம் இலண்டனில்தான். எனது அன்னையின் மரணம் நிகழ்ந்த ஆண்டுதனில் ஆறுமாதம் பின்னர் எங்கள் திருமணம் நடந்தது . திருமணம் நடந்து முடிந்த இரண்டு மாதத்தில் லண்டன் வந்து சேர்ந்தேன். எனது அன்னையின் ஆசையுடன் எனது ஆசையும் ஒட்டிக் கொண்டது.

ஒரு நாட்டுக்கு செல்ல விசா பலவகைகளில் வழங்கபடுகிறது. வேலை பார்க்க அனுமதி விசா. வியாபார விசா. மாணவர் விசா. சுற்றிப் பார்க்க செல்ல விசா என பல வகை விசா உண்டு. அதோடு மட்டுமா குடியுரிமை விசா என்றொன்று உண்டு. நான் லண்டன் வந்தது குடியுரிமை விசா என்பதில் தான். நான் மிகவும் சராசரி மாணவன். என்னை பெரும் அறிவுடையவனாக மாற்றி கொள்ள வேண்டும் எனும் யோசனையும், முயற்சியும், ஒருபோதும் என்னுள் வந்ததில்லை, இனி எப்போதும் வரப் போவதுமில்லை. எனது அறிவின் மூலமாகவோ, எனது படிப்பின் மூலமாகவோ நான் லண்டன் வரவில்லை என்பதை இங்கே பதிவு செய்துவிடுகிறேன். நான் வெளிநாடு சென்றதற்கான அடிப்படை காரணம் திருமணம். நான் பணம் சம்பாதிக்கவோ, பெயரும், புகழும் பெறவோ லண்டன் நோக்கி பயணம் செய்ய வில்லை. எனது வாழ்க்கையினை வாழ லண்டன் பயணித்தேன். அப்பொழுதெல்லாம் லண்டன் வருவது இப்போது போல அத்தனை எளிதாக இல்லை என்பதை குறித்து வைத்து கொள்வது நல்லது.

விசா வழங்குமிடத்தில் நடத்தப்பட்ட நேர்முக வினாக்கள் இன்னும் மனதில் ஆடுகிறது அதிலும் குறிப்பாக

1 மாப்பிள்ளை வீட்டுக்குத்தானே பெண் வருவார், எதற்கு பெண் வீட்டிற்கு மாப்பிள்ளையாகிய நீ செல்ல வேண்டும்?

2 1996ல் பாஸ்போர்ட் எல்லாம் எடுத்து வைத்திருக்கிறாய்? கல்யாணம் பண்ணி லண்டன் போகத்தானே?

3 நீ எல்லாம் படித்தவனா?

எனது பதில்கள் மிகவும் கலங்கிய வண்ணம் இருந்தன. அதிலும் இப்படி எல்லாம் சொன்னேன். 'இதற்கு முன்னர் எங்கள் ஊரை விட லண்டன் ஒன்றும் பெரிதில்லை. ஆனால் எனது மனைவியின் பொருட்டே நான் லண்டன் செல்ல வேண்டி இருப்பதால்  லண்டன் பெரிதாகிப் போனது'. இந்த பதிலை சொல்லும்போது எனக்குள் நடுக்கம் நிலவத்தான் செய்தது. எனது நேர்முக வினா பதில்களை இப்பொழுதும் எனக்கு அவர்கள் போட்டு காட்டினால் பெரு மகிழ்ச்சி அடைவேன். எத்தனை பயம்? எத்தனை கலக்கம்? தவறு செய்கிறோமோ என்கிற பய உணர்வு. வெளிநாடு செல்வது என்பது அத்தனை சுலபமா அப்போது. நான் சில மாதங்கள் சிரமப்பட்டேன். எனது மனைவி, எனது மனைவியின் அண்ணன் மற்றும் லண்டன் ஸ்ரீ மகாலட்சுமி கோவில் நிறுவனர் உதவிகள் செய்யாது போயிருந்தால் நானாவது இலண்டனாவது.

ஆனால் மாணவர்கள் விசாவில், இங்கே கல்லூரி இல்லாமலே, இங்கே வந்தவர்களை பார்த்து இருக்கிறேன், தங்கி விடுவதையும் பார்த்து இருக்கிறேன். வேலை அனுமதி விசாவில் வந்து இங்கேயே இருப்பவர்களையும் பார்த்து இருக்கிறேன். ஆலய நிர்வாகத்தில் பணி செய்தபோது பலரை அழைத்து இருக்கிறோம், அவர்களில் பலர் இங்கேதான் இருக்கிறார்கள். பெரும்பாலும் அனைவருமே தங்கிவிட்டார்கள். மனைவி, குடும்பம் என ஆகிவிட்டது. ஒரு பகுதி என்ன, பல பகுதிகள் இங்கிலாந்தில் ஆசியர்களும், ஆப்பிரிக்கர்களும் ஆக்கிரமித்து விட்டார்கள். நான்கு வருடங்கள் தொடர்ந்து ஒரு இடத்தில் வேலை பார்த்தால் போதும், இந்த நாட்டில் எல்லா நாட்களும் இருக்குமாறு குடியுரிமை பெற்றுவிடலாம். இப்பொழுது சில மாற்றங்கள் செய்து இருக்கிறார்கள்.

ஆனால் வேலைக்கு என வந்தவர்கள், படிப்பதற்கு என வந்தவர்கள்  எவரையும் கட்டாயமாக குறிப்பிட்ட வருடத்திற்குள் சென்று விட வேண்டும் என்றோ, அந்த குறிப்பிட்ட வருடங்கள் மேல் அந்த நாட்டில் வேலை செய்ய எப்போதுமே அனுமதி இல்லை என்றோ, வேறொரு வெளிநாட்டில் வேலை பார்த்தால், இன்னொரு வெளிநாட்டில் வேலை பார்க்க கூடாது என்றோ எந்த ஒரு நாடும் சட்டம் வைத்திருப்பதாக தெரியவில்லை. அப்படி இவர்கள் சட்டம் வைத்து இருந்தால் எவருமே குடியுரிமை வைத்து இருந்திருக்க இயலாது.

இப்பொழுது சொல்லுங்கள்? இத்தகைய வாய்ப்புகள் இருக்கும்போது அதனை பயன்படுத்தாமல் இருக்க வேண்டுமென்பது வெளிநாடு சென்றவர்கள் தவறா? வெளிநாட்டின் சட்ட திட்டங்கள் தவறா?

இலண்டன். ஒரு ரொட்டி கடையில் வேலை பார்ப்பவர் அதிக நேரம் வேலை பார்த்து வரும் பணமும் சரி, ஒரு நல்ல  வேலை பார்த்து வரும் பணமும் சரி பெரிய வித்தியாசம் இருக்கப் போவதில்லை. முன்னவர் சேமிப்பார், பின்னவர் செலவழிப்பார். ;)

இங்கே வாங்கும் பணத்தின் மதிப்பு ஊரில் சுமாராக எழுபது மடங்கு அதிகம். சம்பாதித்தல் இங்கே. செலவழித்தலும் சுகபோக வாழ்க்கையும் இந்தியாவில் என இருப்போர்கள் அதிகம். ஊரில் இருக்கும் சொத்துக்கள் எல்லாம் சொந்த பணத்தில் வாங்கியது. இங்கே வாங்கி இருக்கும் சொத்துகள் எல்லாம் கடன் பணத்தில் வாங்கியது. இங்கிலாந்தில் கடன்காரன், இந்தியாவில் பணக்காரன். ;)

இலண்டன். மின்சார வெட்டு இல்லை. தண்ணீர் பிரச்சினை இல்லை. போக்குவரத்து சச்சரவு இல்லை. (சுரங்க பாதை ரயில் பணியாளர்கள் வேலை நிறுத்தம் ஆடிக்கு ஒரு தரம் மட்டுமே தலைகாட்டும், ஆனாலும் வேலைக்கு போய்விடலாம்). நமது ஊரில் இருப்பதை போல சாதிகள் இல்லை, சண்டைகள் இல்லை. அரசியல் கூட்டங்கள் இல்லை, அனாவசிய பேச்சுகள் இல்லை. ஊழல் இல்லை. ஒருவருக்கும் ஜால்ரா போட தேவையில்லை. வேலை, வேலை, வேலை. சம்பாதிக்கிறாயா, எல்லா வரிகளுக்கும் பணத்தை கட்டுகிறாயா, சந்தோசமான வாழ்க்கைதான்.

லண்டன். படித்தவர்களா,  இந்த வேலையைத்தான் பார்க்க வேண்டும் என வரையறை வைத்து கொள்ளாத வெட்கப்படாத பூமி இது. துபாயில் சென்று ஒட்டகம் மேய்த்தான் என நக்கல் பண்ணாத பூமி இது. அபுதாபியில் கழிவறையை சுத்தம் செய்கிறான் என கௌரவம் பேசாத சுத்தமான பூமி. உயர்ந்தவன், தாழ்ந்தவன் என பிரித்து பேசாத பூமி.

நான் முதலில் நூலகத்தில் புத்தகங்களை எனது ஆராய்ச்சி படிப்பு முடியும் வரை, மூன்று வருடம்,  மாலை ஆறு மணியிலிருந்து இரவு ஒன்பது மணி வரை வாரம் இரு தினங்கள் எடுத்து வைப்பேன். கிறிஸ்துமஸ் சமயங்களில் தபால் நிலையத்தில் சென்று மாலையில்  வேலை பார்த்து இருக்கிறேன். ரொட்டி தயாரிக்கும் நிறுவனத்தில் கூட வேலை செய்ய செல்ல நான் தயக்கம் காட்டியது இல்லை. ஆனால் வீட்டில் மறுத்துவிட்டார்கள்.  கடைகளில் மெய்க்காவலன் வேலை செய்ய கூட தயாராக இருந்தேன். எதற்கும் துணிந்து இருந்தேன். உழைப்புதனை நம்புவன் ஒருபோதும் ஒடிந்து போவதில்லை என்பதுதான் நான் கண்ட வாழ்க்கை அனுபவம். எனது மாமனார் பெரிய பட்ட படிப்பு படிக்கவில்லை, எனது மாமியார் பள்ளிக்கூடம் செல்லும் வாய்ப்பே இல்லை. அவர்கள் உழைத்த உழைப்பு அடுத்த தலைமுறையும் லண்டனில் இருக்கிறது.

இந்த உழைப்புக்கு ஏற்ற ஊதியம், உழைப்பை மதிக்கும் மாண்பு இந்தியாவில் இருக்கிறதா?

வசதிகளும் வாய்ப்புகளும் நிறைய பெருக்கி கொள்ள ஒரு தளம் இருக்கும்போது எவரேனும் அந்த தளத்தை விட்டுவிட முயற்சிப்பார்களா?

சும்மா வீட்டில் அமர்ந்து இருக்க பணம் தரும் பூமி இது.

இலண்டன் வந்து பிடிக்காமல் திரும்பி போனவர்கள் மிகவும் குறைவு.

அவ்வப்போது அலுவலகம் மூலமாக வேலை மட்டும் வந்து பார்த்துவிட்டு செல்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இந்தியா. எங்கு பார்த்தாலும் பிரச்சினைகள். ஒரு சின்ன விசயத்தை செய்ய எத்தனை பேரிடம் மல்லுக்கு நிற்க வேண்டி இருக்கிறது. ஒரு ஒழுங்கு முறை இருக்கிறதா? ஒருவர் நிலம் வாங்குவாராம், ஆனால் வேறு ஒருவர் தனது என்று அந்த நிலத்தில் உட்கார்ந்து கொள்வாராம்.  ஒருவர் கஷ்டப்பட்டு உழைத்த பணம் வைத்திருப்பாராம், முதலாளிகளை அடித்து நொறுக்கு என வெட்டியாக திரிபவர்கள் கோஷம் போடுவார்களாம். எதற்கெடுத்தாலும் வீட்டுக்கு ஆட்டோ வரும் எனும் கூப்பாடு வேறு. தைரியமாக எதையும் சொல்ல இயலவில்லை. பொய் வழக்கு போடுகிறார்கள் புரட்சிகர இந்தியர்கள். பயப்படுகிறோம், இந்தியா வருவதற்கே அச்சப்படுகிறோம் என்கிறார்கள் பலர். இந்தியாவில் முதலீடு செய்ய எத்தனை சிரமம் என்பதை முதலீட்டாளர்களைத்தான் கேட்க வேண்டும். எனக்கு அதில் பரிச்சயம் இல்லை.

என்னிடம் இந்தியா பற்றி பிறர் குறைபடும்போதேல்லாம்,  இந்தியா, அப்படித்தான் இருக்கும், முடிந்தால் அங்கே சென்று வாழ்ந்து பாருங்கள் என்றுதான் என்னால் சொல்ல இயலும். அந்த இந்தியாவை பொன்னான இந்தியாவாக மாற்ற என்னால் முடியாது போனது போல பலராலும் முடியாது போய்விட்டிருக்க கூடும்.

இந்தியா எனது தாய் நாடு. தமிழ் எனது உயிர் என்று எழுதுவதற்கு சந்தோசமாகத்தான் இருக்கும், ஆனால் எனது இந்திய தேசம் எனக்கு ஒரு விடுமுறை தேசமாகிப் போனதுதான் உண்மை.

அதே பாபு சொன்னார். அமெரிக்காவில் சென்று வாழ்பவர்கள் இந்தியா வர வேண்டுமென நினைக்கிறார்கள். ஆனால் லண்டன் சென்றவர்கள் எவருக்குமே அந்த நினைப்பு இல்லை என்றார். அது ஒரு விதத்தில் உண்மைதான். இந்தியா செல்ல வேண்டுமென எவருமே இங்கே தங்கி விட்டவர்கள் விரும்புவதே இல்லை. அப்படி செல்ல வேண்டும் என அவர்கள் சொன்னாலும் உள்ளத்தின் ஓரத்தில் அட இந்தியாவா என்றுதான் இருக்கும்.

நான் இன்னும் பல விசயங்களை சொல்லாமல் விட்டுவிட்டேன்.  எழுதுங்கள் அமெரிக்க வாழ் இந்தியர்களே, அமீரக வாழ் இந்தியர்களே. இந்திய வாழ் இந்தியர்களே.