Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Tuesday 23 June 2015

மனைவியின் வாரிசு ( சிறுகதை )


                                                     மனைவியின் வாரிசு ( சிறுகதை )

இதோ நச்சரிக்க ஆரம்பித்துவிட்டேன். எப்போது அடுத்த குழந்தைப் பெற்றுக்கொள்ளலாம் சொல் என கேட்கும்போதெல்லாம் இதுவரைப் பெற்றுக் கொண்டது போதாதா என்றே பதில் அளித்துக்  கொண்டு இருந்தாள்.

''நாலுதானே பெத்து இருக்கோம், இன்னும் ஒன்னே ஒன்னு பெத்துக்கிரலாம்''

''ரெண்டு பசங்க, ரெண்டு பொண்ணுக, போதாதா. ஊரு உலகத்தில் நம்மளைப் பத்தி என்ன பேசுறாங்க தெரியுமா?''

''எவன் என்ன பேசினா என்ன, அவனா வந்து நம்ம வீட்டில உலை வைக்கிறான்''

''நீங்க என்ன சொன்னாலும் சரி, என்னால இன்னொரு புள்ளைப்  பெத்துக்க முடியாது, இதுகளை சமாளிக்கவே எனக்கு சீவன் போதலை. இதுல இன்னொன்னு வேறயா''

''அந்த காலத்தில...''

''வாயை மூடுங்க, போதும் உங்க அந்த காலப் புராணம், ஆசை வார்த்தை சொல்லி சொல்லி அதை வாங்கித்தாரேன் இதை வாங்கித்தாரேன் சொல்லி புள்ளைக வாங்கித் தந்ததுதான் மிச்சம். மூத்தவனுக்கு இன்னும் ரண்டு வருஷம் போனா கல்யாணம், இந்த லட்சணத்தில இன்னொன்னு கேட்குதா''

''நீ என்ன வேணும்னா சொல்லு, எனக்கு அதைப்பத்தி எல்லாம் கவலை இல்லை. எனக்கு உடனே ஒரு புள்ளை  நீ பெத்து தரனும்''

''குடும்ப கட்டுபாடுனு  ஒன்னு இருக்கே அதை எல்லாம் பண்ணித் தொலைக்கக்கூடாதானு போகிற இடத்தில பேசுறாளுக, மானம் போகுது''

''நாம பேசாம ரஷ்யா போயிரலாம், அங்கன நிறைய புள்ளைக  பெத்தா வரிவிலக்கு எல்லாம் இருக்கும். வேற ஒன்னும் செய்வோமா நாம பேசாம மதம் மாறிட்டா என்ன''

''புள்ளை  பெக்கிரதுக்கு யாராச்சும் மதம் மாறுவாகளா''

''கல்யாணம் பண்ணுறதுக்கு மதம் மாறுற ஆளுகனு  ஊருல பேச்சு இருக்கு, அது எல்லாம் இப்ப எதுக்கு, எனக்கு இன்னொரு புள்ளை  வேணும்''

''நான் வீட்டுக்கு இனிமே தினமும் தூரம்''

''கிறுக்கச்சி  மாதிரி பேசித் தொலையாத அப்புறம் இன்னொரு புள்ளைப்  பெத்துக்க வேற ஒருத்தியைத்தான் நான் தேடணும்''

''ச்சீ என்னப்  பேச்சு பேசறீங்க, இதெல்லாம் மானங்கெட்ட பொழப்பு, பேசாம தள்ளிப்படுங்க, நாம பேசறது யாருக்காச்சும் கேட்கப்போகுது, ரெண்டாமவன் சொல்றான் இன்னொரு பிள்ளை பெத்துக்கம்மா இல்லைன்னா எனக்கு ஒரு நாய்க்குட்டி வாங்கிக்கொடுனு சொல்றான். குழந்தைக பொம்மைன்னு நினைச்சிட்டான்''

''அவன் கேட்டத நாம நிறைவேத்தி வைக்க வேணாமா சொன்னா கேளு. இதுதான் கடைசி''

''நீங்க மொத பிள்ளையில் இருந்த இப்ப நாலாம் பிள்ளை வரைக்கும் இதேதான் சொன்னீங்க. எதுக்கு இப்படி வம்பு பண்றீங்க''

''அப்ப நான் வேற ஒருத்தியைத் தேட வேண்டியதுதான்''

''இன்னொருதடவை அப்படி பேசினீங்க, அப்புறம் கொலை பண்ணக்கூட தயங்கமாட்டேன். சொல்லிட்டேன். பேசாம படுத்துத் தொலைங்க. எப்பப்பாரு பிள்ளை பிள்ளைனுட்டு''

வழக்கம் போல நன்றாகத் திட்டு வாங்கி உறங்கினேன். காலையில் எழுந்ததும் வீடு பரபரப்பாக இருந்தது. பெரியவன் முதற்கொண்டு சிறியவள் வரை பள்ளி கல்லூரி என இங்கும் அங்கும் அலைமோதிக் கொண்டு இருந்தார்கள். இவர்களை எல்லாம் ஒழுங்கு பண்ணி வியர்க்க விறுவிறுக்க  வேலை செய்து கொண்டு இருந்தாள்.

''மாமா, பெரியவனுக்கு ஒரு நூறு ரூபா கொடுங்க. சின்னவளுக்கு ஒரு ஐம்பது கொடுங்க, நேத்தே கேட்க மறந்துட்டேன்''

இப்படி இவள் ஆடி ஓடி உழைத்து எத்தனை வருடங்கள் கழிந்து விட்டன. இன்று விடுமுறை போட்டு இருந்தேன். எப்படியும் அடுத்த பிள்ளை தயாராக வழி செய்ய வேண்டும் என.

''இன்னைக்கு வேலைக்குப் போகலையாங்க''

''போகலை, அசதியா இருக்கு''

''அப்படினா ரண்டாமவனை ஸ்கூல்க்கு போய்  விட்டு வாங்க''

''நீ ரெடியா இரு''

''எங்கேயும் வெளியில கூப்பிட்டுப் போறீங்களா''

''இல்லை, அடுத்த பிள்ளைக்கு...''

''அப்பா, அம்மாவை எப்போதுமே தொந்தரவு பண்ணிட்டேதான் இருப்பிங்களா''

பெரியவள் வந்து சத்தம் போட்டுப் போனாள்.

''கேட்டுக்கோங்க, பிள்ளைக வளர்ந்துட்டாங்க''

ரண்டாமவனையும் சின்னவளையும் அழைத்துப் பள்ளியில் விட்டுவிட்டு வீட்டுக்கு வந்தேன். நானும் அவளும் அமர்ந்து சாப்பிடத் தொடங்கினோம். சப்பாத்திதான் செய்து இருந்தாள்.

அவளது சிறு வயது காலங்கள் எல்லாம் சொல்லிக்கொண்டு இருந்தாள் அதைக் கேட்டுக்கொண்டு இருந்த நான் என்னையும் அறியாமல் முகம் மலர்ந்தேன்.

கொலுசுகள் வாங்கிட்டு வரலாமா என்றவுடன் எதுவும் மறுப்பு சொல்லாமல் வா போகலாம் என கொலுசுகள் வாங்கி கொண்டு வந்து வீட்டில் அமர்ந்தோம். காலையிலேயே மதிய சாதம் சமைத்துவிட்டதால் அதிக வேலை இல்லை. ஒவ்வொரு அறையாக சென்று மகன்கள்  மகள்களின் அறைகளை சுத்தம் செய்தாள். எல்லா துணிகளை ஒழுங்கா மடித்து வைத்தாள்.

''பிள்ளை பெறலாம் வா''

''நீங்க வேலைக்குப் போங்க, நொய்  நொய்யுனுட்டு''

''நான் ஒரு கனவு நேத்து கண்டேன்''

''என்ன கனவு''

''அது வந்து ஒரு பொண்ணு இருவத்தி அஞ்சி வயசு இருக்கும், என்கிட்டே வந்து உங்களோட ஒரு புள்ளை பெத்துக்கிட்டா எனக்கு சாகா வரம் கிடைக்கும். அதோட மட்டுமில்லாம அந்த பையன் இந்த உலகத்தையே ஆளும் வல்லமை கொண்டு இருப்பான். உங்களுக்கும் சாகா வரம் கிடைக்கும்னு  சொல்ல, எனக்கு கல்யாணம் ஆகிருச்சி, குழந்தைக இருக்காங்கனு சொன்னேன். அதுக்கு அந்த பொண்ணு அது எல்லாம் தெரியும். அவங்களுக்கும் சாகா வரம் கிடைக்க ஏற்பாடு பண்றேன். எனக்கு உங்க குழந்தைதான் வேணும் அப்படின்னு அடம் பிடிச்சிச்சி. வேற யாருமே உலகத்தில வேணாம் அப்படின்னு சொல்ல எனக்கு என்ன ரோதனையாப் போச்சுனு  அதெல்லாம் முடியாது, என்னோட பொண்டாட்டிக்கு துரோகம் பண்ண மாட்டேன் அப்படின்னு சொன்னேன்''

''அப்புறம் என்ன ஆச்சுங்க''

''பாத்தியா நான் உனக்கு கனவுல கூட துரோகம் செய்யலை''

''மீதி கதை என்ன ஆச்சுன்னு சொல்லுங்க''

''பாவிபுள்ள நான் குழந்தை தரமுடியாதுன்னு சொன்னதும் செத்துப் போச்சு''

''ஹாஹாஹா ஹாஹாஹா நீங்க ரொம்ப குறும்புங்க''

'சரி வா நாம...''

''இப்படி எல்லாம் உங்களுக்கு ஒரு நினைப்பு உண்மையிலே இருந்து இருக்கு அதுதான கனவு வந்துருக்கு''

அந்த வார்த்தைகள் கேட்டு நான் சற்று மிரண்டேன்.

 ''இல்லை அந்த பொண்ணு உன்னோட வாரிசா வர நினைச்சி இருக்கும்''

''உங்களுக்கு மதியம் சோறு கிடையாது, பட்டினியா கிடங்க''

இப்போதெல்லாம் நான் கனவு கண்டதாக எந்த ஒரு கதையும் அவளிடம் சொல்வதே இல்லை.

(முற்றும்)

பின்குறிப்பு: சிறுகதை என குறிப்பிட்டு இருப்பதால் உங்க சொந்த அனுபவமோ என எவரேனும் என்னைப் பார்த்து கேட்டீங்க அப்புறம் உங்களுக்கு சோறு கிடையாது, தண்ணி கிடையாது.






Friday 15 May 2015

தமிழ் மின்னிதழ் - 2 ''அந்தரத்தில் இருக்கும் தனியன் நான்''

ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்கத் தொடங்கிவிட்டால் பசி, உறக்கம் எல்லாம் போய்விடும் என்று சொல்லக் கேள்விப்பட்டு இருக்கிறேன். அப்படி உறக்கம் பசி தொலைத்து எல்லாம் நான் பாடப்புத்தகங்களைக் கூடப் படித்தது இல்லை. எத்தனை சுவாரஷ்யமாக இருந்தாலும் முழுவதும் முடித்துவிட வேண்டும் என்கிற ஆவல் எல்லாம் எப்போதும் இருந்தது இல்லை. விருப்பப்பட்டு நேரம் இருப்பின் அதன் மூலம் செய்வதுதான் வழக்கம். ஒரு புத்தகம் தந்தால் அதை வாசிக்க பல மாதங்கள் ஆகி இருக்கிறது.

இந்த தமிழ் மின்னிதழ் -2 மிகவும் சிறப்பாகவே வந்து இருக்கிறது. இத்தனை சிரமம் எடுத்து ஒரு இதழை வெளிக்கொண்டு வரும் ஆசிரியர் மற்றும் குழுவினருக்கு எனது பாராட்டுகள். அடுத்தமுறை புதிதாக ஒரு படைப்பினை எழுதி அதை அனுப்பி எனது படைப்பின் திறனை பரிசோதித்துக் கொள்ளலாமா என்றே எண்ணி இருக்கிறேன். பல எழுத்துத் திறமை உள்ளவர்களைத் தாண்டிச் செல்வது சாத்தியமா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் எழுத்து எழுதப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இப்படித்தான் முதலில் புனைவு, கவிதை என வாசித்துவிட்டு வேறு பக்கம் திரும்பலாம் என எண்ணி எல்லா புனைவுகளும், கவிதைகளும் வாசித்து முடித்தேன். அதற்குப்பின்னர் இங்கொன்று அங்கொன்று என வாசித்து இந்து இந்துத்தவா என்றெல்லாம் படித்து திரு. யுவன் சந்திரசேகர் அவர்களின் நேர்காணல் வாசிக்க ஆரம்பித்தேன்.

தமிழ் எழுத்து உலகில் நான் இழந்து கொண்டு இருப்பது நிறையவே என மனதுக்குத் தெரிகிறது. எனக்கு இவரப் பற்றி அறிந்து கொண்டதே இல்லை. இவரது குரல் ஒன்றை ஆசிரியர் ட்விட்டரில் வெளியிட அதை திரு. வைரமுத்து, திரு சரவணகார்த்திகேயன் என குழம்பியது உண்டு. அத்தனை அற்புதமான குரல். அழுத்தம் திருத்தமாக இருந்தது. ஒற்றுப்பிழை பற்றிக் குறிப்பிட்டு இருந்தார். எனக்கு இந்த பிரச்சினை உண்டு. சரிசெய்ய நன்னூல் படிக்கச் சொல்லி இருக்கிறார்கள். எனக்குத்தான் வாசிப்பு என்றால் நிறைய தூரம் என ஆகிவிட்டது.

இணையப் பழங்குடிகள் என்ற ஆசிரியரின் பார்வை மிகவும் யோசிக்க வேண்டிய ஒன்று. கிட்டத்தட்ட ஆறு ஏழு ஆண்டுகள் முன்னரே நண்பர் சுதாகர் என்ன சார் ஒரு பொண்ணு தெருவில நடமாட முடியல. போட்டோ எடுத்து எல்லோருக்கும் அனுப்பி வைக்கிறாங்க என்று சொன்னபோது எனக்கு சற்று ஆச்சர்யமாக இருந்தது. விடுமுறைக்கு மட்டுமே சென்று வருவது என்பதால் எனக்கு இது அவ்வளவாக தெரியாது. அதே ஏழு எட்டு வருடங்கள் முன்னர் எனக்கு நகைச்சுவை எஸ்எம்எஸ் என எனது அண்ணன் மகன் அனுப்பிக்கொண்டு இருந்தான். எப்படி இப்படி எல்லாம் என்றேன், சித்தப்பா வேண்டுமெனில் பல படங்கள் கூட உண்டு என சிரித்தான். எதுவும் அனுப்பாதே என்றேன். நிறுத்திவிட்டான். இன்று எனது நண்பன் ஒருவன் என்னை வாட்சாப் குழுமத்தில் இணைத்து இருக்கிறான். நிறுத்தாமல் ஏதோ  ஏதோ  பகிர்ந்து கொள்கிறார்கள். அதை எல்லாம் படிக்க கேட்க எனக்கு நேரமே இருப்பது இல்லை. நண்பன் என்பதற்காக சகித்துக் கொண்டு அந்த குழுமத்தில் இருக்கிறேன். அவ்வளவே.

நான் தமிழகத்தில் இருந்தவரை இணையம் ஒன்றும் அத்தனை பிரபலமாக ஏன் கணினி கூட அத்தனை இல்லை. நான் லண்டன் வந்தபின்னர்தான் முதன் முதல் மொபைல் போன்  வாங்கினேன். ஆனால் இந்த நாட்டிற்கு வந்தபிறகுதான் இணைய உலகமே அறிமுகம். அது எத்தனை ஆபத்தானவை என்பது குறித்து ஆசிரியர் எழுதி இருக்கிறார். எங்கள் ஊரில் ஒருவரை வஞ்சம் தீர்க்க இவன் இவளோடு இருக்கிறாள் என்பது போல பெயர்கள் இணைத்து ஊர் பொதுச் சுவற்றில் எழுதி வைப்பார்கள். அது அந்த ஊர் வழி செல்பவர்க்கு மட்டுமே தெரியும். இன்றைய காலத்தில் எள்ளி நகையாடும், வஞ்சம் தீர்க்கும் உலகம் ஒருபடி மேலே சென்று விட்டது.

1. ''அந்தரத்தில் இருக்கும் தனியன் நான்'' - யுவன் சந்திரசேகர் (நேர்காணல்)

இந்த இதழின் ஆசிரியர் நேர்காணல் எடுக்கச் செல்லும் முன்னர் அனைத்து நூல்களை வாசித்துச் சென்றார் எனச் சொல்ல இயலாது. நூல்களை வாசித்த காரணமே இவரை சந்திக்கச் சென்று இருக்கிறார் என்றே புரிய முடிகிறது. எப்படி குரல் எனக்குள் ஒரு சலனம் உண்டாக்கியதோ அதைப்போல் இவரது நேர்காணல் என்னுள் சலனம் உண்டாக்கியது. எனக்கும் ஒரு தண்டபாணி இப்போது இல்லமால் போனது குறித்து யோசிக்கிறேன். எனது முதல் நாவலுக்கு திரு ரத்தினகிரி, திருமதி பத்மஜா இருந்தார்கள். எப்படி எழுத்துகள் மட்டுமே எனக்குப் போதும் இந்த அரசியல் சினிமா எல்லாம் அவசியம் இல்லை ஒதுங்கி ஒரு படைப்பாளர் இருக்க இயலும் என்பதை இவரது நேர்காணல் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. நிறைய வாசித்து இருக்கிறார், நிறைய எழுத்தாளர்கள் மூலம் இவருக்குப் பழக்கம் இருக்கிறது. நமது நூல் குறித்து நாம் பேசுவது கூட கூச்சம் தரும்.

ஒரு படைப்பை முடித்துவிட்டு அடுத்த அடுத்த படைப்பு என ஒரு எழுத்தாளர் பயணம் அமையும். அவரது அப்பா குறித்து படித்தபோது பிரமிப்பாக இருந்தது. பலகாலங்கள் அவரது தந்தை வாழ்ந்து இருக்கக்கூடாதா என்ற ஏக்கம் எழாமல் இல்லை. இவருடைய நாவல்கள், சிறுகதை தொகுதிகள், கவிதைகள் என படித்துவிடலாம் என்றே இருக்கிறேன். ஏனோ என்னை அறியாமல் என்னுள் வாசம் செய்கிறார். எந்த ஒரு எழுத்தளாரும் என்னைப் பாதித்தது இல்லை, எல்லாம் எழுத்துதானே என்று சர்வ சாதாரணமாக கடந்து சென்று இருக்கிறேன். ஒரு எழுத்தாளரோ அல்லது எவரோ அவர்தம் நடவடிக்கைகளே என்னைப் பாதிக்கின்றன. இவர் கவிதைகள் எழுதுவேன் என்றும் கவிஞர் யுவன் என அழைக்கப்படுவேன் என்றும் சொன்னபோது என்னை நான் பார்த்துக் கொண்டேன்.

முன்னர் குறிப்பிட்டு இருந்தேனே எத்தனை சுவாரஸ்யம் இருந்தாலும் தள்ளி வைத்துவிடுவேன் என, என்னால் அப்படி தள்ளி வைக்க இயலாத ஒரு வாசிப்பு என்று சொல்லலாம். இந்த இதழின் ஆசிரியரின் கேள்விகள் இவரது மனதில் ஒரு பெரும் நீரோட்டத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. சலனமின்றி எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லி பயணித்து இருக்கிறார். மொழிப்பெயர்ப்பு நாவல்கள் கூட இருக்கும் போல. ஒரு தமிழ் எழுத்து உலகத்தில் நிச்சயம் சர்ச்சைகளில்  சிக்காத எழுத்தாளர் என்றே நினைக்கிறேன். இல்லையெனில் எங்கோ இருக்கும் எனக்கு இவரது பெயர் இன்னும் அறிமுகம் ஆகாதது ஆச்சரியம்.

ஒவ்வொருவரும் இவரது நேர்காணலைப் படித்து விடமாட்டார்களா என்றே எனக்குள் தோன்றுகிறது. சின்ன சின்ன சிந்தனைகளே ஒரு நாவல் வடிவம் எடுக்கின்றன. எனக்கு திருமதி புஷ்பலதா அவர்கள் சொன்னது இன்னும் நினைவில் இருக்கிறது. ஒரு படைப்பை எழுதி வைத்துவிட்டு அதை மூன்று அல்லது ஆறு மாதங்கள் பின்னர் படிக்கும்போது எப்படி இருக்கிறது எனப்பார்க்க வேண்டும், அப்போது அதில் ஏற்படும் மாற்றங்களை பதிவு செய்யலாம் என்று சொன்னது உண்டு. அதைப்போலவே இவரது கருத்துகளில் அந்த எண்ணம் மிளிர்கிறது. இவரது படைப்புகள் குறித்தேப் பயணம் நமக்கு சலிப்பில்லாத ஒன்று. இவரது எழுதியதைப் பற்றி எழுத நினைத்தால் ஆனந்தமாகவே இருக்கும்.

அந்தரத்தில் இருக்கும் தனியன் நான் என சொல்லி இருக்கிறார். இல்லை ஐயா, உங்களை பல தண்டபாணிகள் தாங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஒரு புத்துணர்வு தரும் உங்கள் நேர்காணல் என்று சொல்லி நன்றி சொல்லிக்கொள்கிறேன்.

1. யாத்திரை - சௌம்யா (கவிதை)

இவரது எழுத்துகளில் உள்ள எளிமை எனக்குப் பிடித்த ஒன்று. என்னைப் பொருத்தவரை ஒரு படைப்பு என்பது எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் இருக்க வேண்டும். அப்படித்தான் இந்த கவிதை அமைந்து இருக்கிறது. ஒரு மரணம் அடைந்த பின்னர் அந்த உடலில் உலவும் ஆன்மாவின் கூற்றாக அமைகிறது கவிதை. உடலை விட்டுப் பிரிந்தபின்னர் என்னவெல்லாம் செய்யத் துடிப்போம் எனும் பார்வையில் அமைந்து பாவப்பட்ட உடல் எரிக்கப்பட்டதாக அமைகிறது. மிகவும் அருமையான கவிதை.

2. அமில மழை - சொரூபா (புனைவு)

இந்த சிறுகதையைப் படித்தபோது ஒரு ஆணின் மனநிலை, ஒரு பெண்ணின் மனநிலை நமது ஊரில் எப்படி இருக்கிறது என அறிந்து கொள்ளலாம். எல்லாவற்றையும் சகித்துக் கொள்ளும் பெண், ஆனால் சகித்துக் கொள்ள இயலாத ஆண். இந்த சிறுகதையில் 'ஒரு ஆணும் பெண்ணும் சிரிச்சி பேசிக்கிறதாலெல்லாம் ஹெச் ஐ வி வராதாம்'' என முடியும். ஹரிக்கு உரைத்து இருக்கும்.

ஒரு சிறுகதை நம்மில் தாக்கத்தை ஏற்படுத்தும். அப்படி ஏற்படுத்திய சிறுகதை இது. இந்த கதையில் வரும் போதைப்பழக்கம், ஊசி ஏற்றுவது போன்ற வரிகள் எனக்கு ஆச்சரியத்தை வரவழைத்தது. இதன் மூலம் கதை நாயகன் எப்படிபட்டவன் என்று ஓரளவுக்குத்  தெரிந்து கொள்ள இயலும் என்றாலும் கடைசி வரிதான் கதைக்கான களம். ஹெச்ஐவி குறித்த ஒரு சம்பவம் உண்மையில் கண்டு இருக்கிறேன். இதன்  முழு விபரம் எழுதாமல் தவிர்க்கிறேன். ஒருவருக்கு மதுரையில் ஊசி ஏற்றியதன் மூலம் ஹெச்ஐவி வந்தது உண்டு. மிகவும் ஒழுக்கமானவர். ஹோட்டலில் சென்று சாப்பிடுவது கூட சுத்தமில்லை என்று எண்ணியவருக்கு அப்படி வந்தது தான் இன்னும் ஆச்சரியம். எத்தனை அஜாக்கிரதையாக இருக்கிறார்கள். ஒரு உயிர் என்றோ போய்  இருக்கும், நல்லவேளை மருந்துக்கு கட்டுப்பட்டு இருக்கிறது. இந்த சிறுகதையில்  CD4 பற்றி எழுதியதோடு ஒரு பெண்ணின் மனநிலை எல்லாம் விளக்கப்பட்டு  இருக்கிறது.

கதை மாந்தர்களுடன் பேச்சு, பழக்கம் என முதலில் ஆரம்பித்தே அத்தனை இயல்பாக சொல்லப்பட்டு இருக்கிறது. அட்டகாசமான சிறுகதை.

3. பூமிகாவுக்கு உதவிய பூ - என் சொக்கன், என் நங்கை என் மங்கை (புனைவு)

மிகவும் வித்தியாசமாக இருந்தது. இதில் வரையப்பட்ட ஓவியங்கள் சிறுவயதில் இங்கு குழந்தைகள் படிக்கும் புத்தகத்தில் உள்ள கதையைப் போன்று ஒரு உணர்வு தந்தது. உண்மையில் பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

கதை மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. கதைகளில் சிறுவர்கள் லாஜிக் பார்ப்பார்கள் என்பதால் கதை முடியும்போதும் ஒரு லாஜிக்குடன் முடிந்து இருந்தது. குச்சிகளால் கட்டப்பட்ட தெப்பம் என வெகு சிறப்பு.

4. அன்று - நவினன் (புனைவு)

மிகவும் அருமையான சிறுகதை. ஒரு சிறுகதையை மிகவும் சுவாரஸ்யமாக கொண்டு சென்று இருக்கிறார். இந்த கதையில் கடைசியில் முடியும் வரிகள்தான் கதைக்கான ஆதாரம் சொல்லிச் செல்லும். கதைநாயகன் எப்படிப்பட்டவன் என்று மிகவும் அருமையாகச்  சொல்லப்பட்டு இருக்கிறது. எதற்கு ஜெயிலுக்குச் சென்றான் என்பதற்கான பதில் அங்கே உண்டு. ஒரு சிறுகதையில் என்ன புரிந்து கொள்கிறோம் என்பதைப் பொருத்தே அந்த சிறுகதையின் அர்த்தம் புரியும்.

5. மொழி - செல்வராஜ் ஜெகதீசன் (புனைவு)

இந்த சிறுகதையை வாசிக்கும்போது நானும் எனது குடும்பத்தாரும் லண்டன் சரவணபவனில் அமர்ந்து உணவு உண்டு கொண்டு இருப்பது போன்ற ஒரு உணர்வைத் தந்தது. இந்த சிறுகதையில் மொழி குறித்த அதனால் ஏற்படும் மன உளைச்சல்கள் என எனக்கு மிகவும் நெருங்கிய உணர்வினை அழகாக விவரித்துச் சென்ற அருமையான கதை.

இது போன்று பல சூழலை சந்தித்து இருக்கிறேன். ஒரு நாயின் மொழியோடு கதை முடிகிறது. பல மொழிகள் கற்றுக்கொள்வது அவசியம் தான் எனினும் அதற்கான ஈடுபாடு சிறுவர்களிடம் நம்மிடம் வரும்படியாக இருக்க வேண்டும். என்ன சொல்லித்தருகிறார்கள் என தமிழ் வெறுத்த குழந்தைகள் அதிகம். மொழி நேசிப்புக்குரியது.

6. அவரன்றி யாரறிவார்? - கர்ணா சக்தி ( அனுபவம்)

இசையை இசையை கற்றவர்தான் ஆராதிக்க முடியும் என்றில்லை. ஒரு இசை நம்மில் எத்தனை சுதந்திரமாக நம்மை வசியப்படுத்துகிறது என்றே அருமையாக அனுபவித்துச் சொல்லப்பட்டு இருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்த பாடல் அது. அதைப்போல பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க என்ற பாடலும்.

இசை நம்மை வசீகரிக்கக்கூடிய தன்மை கொண்டது. இசைஞானியின் இசை குறித்து நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். கலைநயம், அபிநயம் போல இசைநயம் இந்த அனுபவத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது. ஆம், இளையராஜாவன்றி யாரறிவார்?

அடுத்து...

ஒரு குழப்பத்தைப்  படித்தேன் என்றால் மிகையாகாது, ஆனால் பல விசயங்களை அறிந்து கொள்ள முடிந்தது. இறுதியில் தெளிந்து கொண்டேனா என்பதை எப்படியும் அது குறித்து எழுதும்போது மீண்டும் வாசிப்பேன் எனவே நிச்சயம் அறிந்து கொள்வேன். அப்படி என்னதான் அப்படியொரு விஷயத்தை தமிழ் மின்னிதழில் படித்தேன்?

(தொடரும்)

Thursday 22 May 2014

இந்த கதை தெரிகிறதா?

பத்தாம் நூற்றாண்டில் ஒரு மன்னன் வாழ்ந்து வந்தான். அவன் எப்போதும் காம களியாட்டங்களில் தனது மனைவியுடன் ஈடுபட்டு கொண்டிருந்தான். இதனால் நாட்டின் மீது அவனால் அக்கறை செலுத்த முடியவில்லை. இதைக் கண்ட அமைச்சர் மன்னன் மீது வெறுப்பு அடைந்தான்.

''மன்னா, உங்களது நடவடிக்கைகள் மிகவும் அச்சுறுத்தலை தருகிறது''.

''என்ன அமைச்சரே, திடீரென உயரிய சிந்தனை''.

''மன்னா, நீங்கள் எப்போதும் மகாராணியாருடன் மஞ்சத்தில் பள்ளி கொண்டு இருப்பதால் மக்கள் பஞ்சத்தில் தத்தளிக்கிறார்கள்''

''அமைச்சராகிய நீங்கள் என்ன கிழித்து கொண்டு இருக்கிறீர்கள்?''

''நான் என்னால் முடிந்த காரியங்களை செய்து வருகிறேன், மன்னன் சொல்லட்டும் சொல்லட்டும் என நண்டு சிண்டுகள் எல்லாம் என்னை ஏளனமிட்டு பேசி தொலைக்கின்றன''

''அமைச்சரே, மகாராணியார் கர்ப்பமாக இருக்கிறார், எனவே எனக்கு அவருடன் இருப்பதுதான் முக்கியம், நாடு அல்ல''

''மன்னா, இது மிகவும் தவறு. உங்களால் முடியாது எனில் நான் அதுவரை மன்னன் பொறுப்பில் இருந்துவிட்டு கவனித்து கொள்கிறேன், எப்போது நாட்டின் மீது அக்கறை கொள்ள முடியுமோ அப்போது வாருங்கள்''

''மன்னர் பதவி மீது ஆசை வந்துவிட்டதா அமைச்சரே''

''இல்லை மன்னா, மக்கள் நலம் தான் நமக்கு முக்கியம்''

''நாடு சுபிட்சமாகத்தானே இருக்கிறது, பஞ்சம் என நீங்கள் பஞ்சப்பாட்டு பாடுவது பதவிக்கு குறி வைப்பது போல் அல்லவா இருக்கிறது''

''எனது அமைச்சர் பதவியை துறந்து செல்வது தவிர வேறு இல்லை, நீங்கள் பள்ளியறை விட்டு வெளியே வருவதே இல்லை, எப்படி நாட்டின் நிலைமை புரியும். நீங்கள் எப்போது முடியுமோ அப்போது வாருங்கள், மன்னர் பதவியை நீங்கள் பெற்றுக் கொள்ளுங்கள்''

''அமைச்சரே, மன்னன் பதவியை எடுத்துக் கொள்ளும், நானே நாளை அறிவிக்கிறேன்''

''நல்லது மன்னா''

அமைச்சர் தன வீடு செல்கிறார். தனது மனைவியிடம் ஆலோசனை செய்கிறார்.

''நாதா, நான் சொல்வதை நீங்கள் கேளுங்கள்''

''நாட்டிற்கே ஆலோசனை சொல்லும் நான் உன் ஆலோசனை கேட்கும் நிலை வந்துவிட்டது, என்ன சொல்''

''அரசாட்சி ஏற்றதும் அந்த காமத்தில் மூழ்கி கிடக்கும் அந்த நயவஞ்சக அரசரை கொன்று விடுங்கள். வயிற்றில் பிள்ளை சுமக்கும் அந்த பாதகியை நாடு கடத்தி விடுங்கள்''

''உனக்கு எதற்கு இந்த வன்மம்''

''என்னிடம் அந்த மன்னர் பலமுறை தவறாக நடக்க முயன்றார், இதை உங்களிடம் எப்படி சொல்வது என நினைத்து இருந்தேன்''

''உன்னிடமே அப்படி நடந்து கொண்டானா?''

''ஆம்''

அமைச்சர் யோசித்தார், மன்னர் அப்படி நடந்து கொள்ள வாய்ப்பே இல்லை. தனது மனைவிக்கு எப்போதும் மகாராணியாக இருக்கும் ஆசை வந்துவிட்டது. எனவே அவள் சொல்படி செய்வோம் என நினைத்தான்.

அமைச்சர் அரசன் ஆனான். அரசரை கொன்றான். மகாராணி நாடு கடத்தப்பட்டார். மகாராணி ஒரு பையன் பெற்று எடுத்தார. அந்த பையனிடம் தனது கதைகள் சொல்லி வளர்த்தார்.

'அம்மா, எப்படியாவது அந்த அமைச்சரை பழி தீர்த்து நாட்டை கைப்பற்றுவேன்'

''ஆனால் உன் அப்பா போல் பெண்ணிடத்தில் மயங்கி இருக்காது இருந்தால் மட்டுமே சாத்தியம்'

''நான் அப்படி செல்ல மாட்டேன், அப்படி சென்றாலும் இந்த அமைச்சரை பழி வாங்காமல் விடமாட்டேன்''

பையன் பல கலைகள் கற்று வளர்ந்தான்.

''அம்மா, இந்த பெண் உனக்கு பிடித்து இருக்கிறதா'

''என்ன காரியம் செய்ய தொடங்கி இருக்கிறாய். உனது அப்பாவின் பாதையை நீயும் தேர்ந்து எடுக்கிறாயா'

'பதில் சொல்ல இயலாது, அந்த அமைச்சர் அழிவது உறுதி'

முதலில் ஒரு பெண், இரண்டாவது ஒரு பெண் என ஏழு பெண்களை அழைத்து வந்து அனைவரையும் மணம் முடித்தான்.

''நீ செய்வது மிகவும் மோசமான காரியம்''

''நான் பெண் பித்தன் இல்லை. எனக்கு இவர்கள் எல்லாம் ஒவ்வொரு வழியில் உதவியாக இருக்கிறார்கள், அவர்களுக்குள் எவ்வித மன வேறுபாடு இல்லை. எனவே நீங்கள் பயப்பட தேவை இல்லை''

''உனது செயல் அழிவுக்கு தான் மகனே''

''அம்மா, இந்த பெண்கள் எல்லாம் ஒவ்வொரு சிற்றரசர்களின் இளவரசிகள். அவர்களை தேர்ந்தெடுத்து நான் மணமுடித்தேன், இப்போது புரிகிறதா ராஜதந்திரம்''

''மகனே''

''நாளை போர் நடக்க இருக்கிறது, வாழ்த்தி அனுப்புங்கள்''

தனது தந்தையின் நாட்டின் மீது போர் தொடுத்து வெற்றி வாகை சூடுகிறான்.

''அமைச்சரே''

''நான் மன்னன்''

''என் தந்தைக்கு நீ தான் அமைச்சர்.என்னை எவர் என தெரிகிறதா''

''அன்றே உன்னை நான் கொன்று இருக்க வேண்டும்''

''அது உன் முட்டாள்தனம்''

''என் தந்தையை கொன்ற உன்னை கொல்வது எனக்கு உத்தமம்''

''என்னை ஒன்றும் செய்து விடாதே, நாங்கள் வேறு எங்கேனும் பிழைத்து போகிறோம்''

''நாளை முடிவு சொல்கிறேன்''

தனது குருவை சென்று பார்க்கிறான்

''குருவே வணக்கம்''

''போர் எடுத்து சென்றாயா''

''ஆம்''

''நீ இப்படி நடந்து கொள்வது முறையல்ல, நீ இறைவன் பணி ஆற்றி மகிழ்ந்து இருக்க வேண்டும்''

''அந்த அமைச்சரை பழி வாங்க வேண்டும்''

''கூடாது, நீ பல பெண்களை மணம் முடித்தது எல்லாம் இந்த இறைவன் அடி சேரத்தான், அதற்காகவே நான் எதுவும் உன்னை சொல்ல வில்லை. நீ அரசராக இருந்து கொள் ஆனால் கொலைப்பாதகம் செய்யாதே அன்பை, அமைதியை உலகில் நிலைநாட்டு''

''அப்படியெனில் நான் என்ன செய்ய வேண்டும்''

''ஒரு யோசனை சொல்கிறேன்,கேள்''

''சொல்லுங்கள் குருவே''

''அந்த அமைச்சரின் மகளை எட்டாவதாக மணம் முடித்துக் கொள்''

''சரி குருவே''

''அவர்கள் உனக்கு எதிரியாக இருக்கமாட்டார்கள். இப்போது எல்லா ராஜ்ஜியங்களிலும் நீயே அரசர், இளவரசர் எல்லாம். எனவே இறைப்பணி ஆற்று. உலகில் அமைதி ஒன்றே குறிக்கோள். அன்பை நிலைநாட்டிட போராடு''

''அப்படியே ஆகட்டும் குருவே''

அமைச்சரின் மகளை எட்டாவதாக மணம் முடிக்கிறான். ரத்தமும், போரும் என கண்ட பூமி அன்றிலிருந்து அமைதி உருவாய் தொடங்கியது.

இந்த கதைக் கருவை திருடிய இடம் நீங்கள் கண்டு பிடித்து விட்டால் கண்டுபிடிக்கப்பட்ட இடம் பொறுத்து ஒன்று நீங்கள் தமிழ்ப் புலமை உடையவர்கள் அல்லது சினிமாப் பைத்தியம்.

Monday 28 April 2014

அருள்வாக்கு - அசரீரி

சின்ன சின்ன மழைத் துளிகள் பட்டு மண் மணம் எழுப்பிக் கொண்டு இருந்தது. மண் மணத்தை நுகர்ந்தாவரே நடக்கலானான் குரூரம் எண்ணம் படைத்த கோபாலன். எவரையாவது கவிழ்த்து விடவேண்டும் என்பதே இவனது ஆவல். இருப்பத்தி இரண்டு வயது ஆகிவிட்டது. ஆனால் விளையாட்டுத்தனம் இன்னும் இவனை விட்டு போகவில்லை. நல்ல மாநிறம், நல்ல உயரம், குறுகிய விழிகள், குறுகிய உடல்.

இவனது குணங்களை கண்டு எவருமே இவனுக்கு பொண்ணு தர முன்வருவதே இல்லை. இவனுக்கு கூட ஒரு நண்பன் இருந்தான். அவன் பெயர் கேசவன். கேசவன் நல்ல உயரம், கருத்த நிறம். பெரிய விழிகள். சில வருடங்கள் முன்னர் சிரித்த முகத்துடன் வலம் வருவான். கேசவன், கோபாலனை விட மூன்று வயது அதிகம். கடந்த வருடம் திருமணம் ஆகி இருந்தது. நல்ல மனைவி. ஆனால் கேசவன் ஒரு பெண்ணை காதலித்து குடும்ப சூழலால் அந்த பெண்ணை மணம் முடிக்காது போய் அந்த பெண் விஷம் குடித்து இறந்து போனாள் என்றால் எவருமே நம்ப மாட்டார்கள். ஆனால் அப்படித்தான் நடந்தது.

கேசவனின் குடும்பத்தில் அம்மா, அப்பா, அவனுக்கு என ஒரு தங்கை. தங்கை மிக நல்ல நிறம். அழகானவர். நன்கு படித்து இருந்தார். திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்த்து கொண்டு இருந்தார்கள். அனேகமாக சில மாதங்களில் திருமணம் நடைபெறும் என்றே நம்பி இருந்தார்கள்.

கேசவனும், கோபாலனும் எப்படி நண்பர்கள் ஆனால் என்பதே ஒரு சுவாரஸ்யம். ஒருமுறை சிறுவயதில் ஆசிரியர் கேசவனை நன்றாக அடித்துவிட அழுதபடி நின்று இருந்தான் கேசவன். எதுக்கு அழற என விசயம் தெரிந்து அந்த ஆசிரியரை அவருக்கே தெரியாமல் கோபாலன் கல்லால் அடித்தது கேசவனுக்கு சந்தோசமாக இருந்தது. அப்படித்தான் முதல் பழக்கம். இப்படி ஏதேனும் பிரச்சினை வரும்போதெல்லாம் கோபாலன் கேசவனுக்கு உதவி செய்வதில் குறியாக இருந்தான். அதற்கு காரணம் கேசவனின் தங்கை அவனது வகுப்பில் படித்துக் கொண்டு இருந்தாள் என்பதை எல்லாமா எழுதி வைக்க வேண்டும்.

கோபாலனுக்கு கேசவனின் தங்கை வசந்தி மீது ஒருவித ஈர்ப்பு இருந்தது. அதை கேசவனின் மீது காட்டி கொண்டு இருந்தான். நண்பன் என கேசவனின் நட்பு வட்டத்தில் இணைந்து கொண்டான் கோபாலன். இப்படி முன் அறிவிப்பு எல்லாம் எழுதி எதை எதையோ நியாயப்படுத்த வேண்டி இருக்கிறது. சரி கதைக்கு வருவோம். என்னா கதை உலகம்.

''கேசவா, என்ன ஒரு மாதிரியாக இருக்க''

''ஒன்னுமில்லைடா''

''உன்னோட ஒய்ப் உன்னை அடிச்சிட்டாங்களா''

''அது எல்லாம் ஒண்ணுமில்லை''

''உன்னோட தங்கச்சிக்கு நல்ல வரன் அமையலையா''

''தங்கச்சிதான் பிரச்சினை''

''என்ன பிரச்சினை?''

''தங்கச்சிக்கு பிறக்க போற பொண்ணுதான் என்னை கொல்லுமாம்''

''எந்த படுபாவி அப்படி சொன்னது?''

''பனைமரத்து ஜோசியர் அருள்வாக்கு அய்யாவு தான் சொன்னார்''

''அவரை எதுக்கு பாக்க போன''

''நல்ல அருள்வாக்கு சொல்றாருறு சொன்னாங்கனு நான் பார்க்க போனேன், ஆனா இப்படி தலையில இடி விழறமாதிரி பண்ணிட்டார்''

''எத்தனாவது குழந்தை, எப்படி கொல்லும், எதுக்கு கொல்லும், எத்தனை வயசில கொல்லும் இதெல்லாம் விளக்கமா சொன்னாரா?''

''அதெல்லாம் சொல்லலை, ஆனா முத பொண்ணு குழந்தை ஐஞ்சு வயசு ஆனப்பறம் கொல்லுமுனு சொன்னார்''

''பஞ்ச பரதேசி, தன்னோட பொழைப்புக்காக எப்படி எல்லாம் கதைவிட்டு திரியறான் அந்த ஆளு, அவரைப் போய் நீ நம்புறியே''

''இல்லை, அவர் ரொம்ப பேருக்கு எல்லாம் சொல்றதில்லை, குறிப்பிட்ட பேருக்கு சொல்றார் எல்லாம் அப்படியே நடக்குது''

''இப்ப என்ன பண்ணலாம்''

''எங்காவது தனியா போயிரலாம்னு இருக்கேன்''

''நீ எதுக்கு போற, உன் தங்கச்சிய கொன்னு போட்டுருவோமா''

''என்ன சொல்ற?''

''பிரச்சினை, உன்னோட தங்கச்சி பொண்ணு தானே, உன் தங்கச்சிய கொன்னு போட்டா பிரச்சினை முடிஞ்சது''

''ஆனா, எப்படியாவது இது நடந்தே தீரும்னு சொல்லி இருக்கார்''

''அவர் கிடக்கார், ஒன்னு கொன்னு போடுவோம், இல்லை நான் கட்டிக்கிறேன், குழந்தையே பிறக்காம நான் பாத்துகிறேன்''

''உன் புத்திய காட்டுற பாத்தியா. அவளை கொன்னா காலகாலத்திற்கும் என்னால எப்படி நிம்மதியா இருக்க முடியும்''

''இங்க பாரு, உன்னை காப்பாத்திக்க இரண்டே வழிதான், என்ன சொல்ற''

''உன்னை நம்பலாமா? ஆனா உனக்கு வீட்டுல பொண்ணு தரமாட்டாங்களே''

''நா குடும்ப கட்டுப்பாடு பண்ணிக்கிறவா?''

''பேசாம என் தங்கையை குடும்ப கட்டுப்பாடு பண்ண வைச்சிட்டா ஈசியா போயிரும்''

''அவளை கொல்றது ஈசி, ஆனா அவளை குடும்ப கட்டுப்பாடு பண்ண சொல்றது எல்லாம் கஷ்டம்''

''அவகிட்ட இந்த விசயத்தை சொல்லி என்னை காப்பாதிக்கிரலாமா''

''நாசமா போச்சு, இதெல்லாம் நடக்காது''

''அப்ப என்னதான் பண்றது''

''குழந்தை பிறந்தப்பறம் எங்கனயாவது விட்டுரலாம், இது மூணாவது வழி, அல்லது குழந்தைய கொன்னுரலாம் இது நாலாவது வழி''

''இல்லை, அவ கல்யாணம் பண்ணவ கூடாது''

''சரி பார்ப்போம்''

கோபாலன் வசந்தியை கல்யாணம் பண்ணிக்கொள்வது என நினைத்து இருந்த திட்டம் பாழாகிப் போனது. கேசவன் நிச்சயம் இனி சம்மதிக்கமாட்டான். இந்த விபரத்தை வசந்தியிடம் சென்று சொல்லி வைத்தால் என்ன என யோசித்தான் கோபாலன்.

''வசந்தி, உன்னை உன் அண்ணன் கொல்லப் போறான், உன்னோட முத குழந்தை ஐஞ்சி வயசில உன் அண்ணனை கொல்லுமாம். அய்யாவு சொன்னாராம்''

''நிசமாவா சொல்ற, என் அண்ணன் அப்படி பண்ணாது, நீதான் என்னை மிரட்டுற''

''வேணும்னா அய்யாவு கிட்ட போயி கேளு''

வசந்தி அய்யாவுவிடம் கெஞ்சி கூத்தாடி அவர் சொன்ன விசயத்தை தெரிந்து கொண்டாள். வீட்டில் அனைவருக்கும் தெரிந்தது. கேசவனின் மனைவி யாசவி வசந்தியை கெஞ்சி கூத்தாடினாள். அது எல்லாம் புரட்டு என கேசவனின் பெற்றோர் சமாதானம் செய்து பார்த்தார்கள். வசந்தி கடைசியாக திருமணம் பண்ண மாட்டேன், குழந்தை பெற்று கொள்ள மாட்டேன் என உறுதி கொடுத்தாள்.

ஏழரை வருடங்கள் கழிந்தது. வசந்தியின் தோழி மாதவி தனது கணவன் வசந்தராஜ், தன ஐந்து வயது பெண் குழந்தை சுபி உடன் வசந்தி வீட்டிற்கு  எப்போதாவது வருவது போல பிறந்தநாள் அழைப்புக்கு சொல்ல வந்து இருந்தார்கள். வசந்தி திருமணம் முடிக்காமலே இன்னும் இருந்தார்.

''சுபிக்கு ஐஞ்சு வயசு நேத்து முடிஞ்சிருச்சி, அடுத்த வாரம் சனிக்கிழமை பிறந்தநாள், வந்துருடி''

''எப்படி வளர்ந்துட்டா, வந்துருறேன்''

சுபியை கேசவன் தூக்கி வைத்து கொண்டு தனது அறைக்கு சென்று பொருட்கள் காமித்து கொண்டு இருந்தான். கேசவன் அம்மா எல்லோருக்கும் காபி போட்டு வந்து இருந்தார். கேசவனுக்கும் அவனது அறையில் வைத்து சென்று இருந்தார். கேசவன் சுபியை கீழே விட்டுவிட்டு தனது அறைக்கு சென்றான்.

மாதவி, சுபி, வசந்தராஜ் கிளம்பி சென்றார்கள்.

''ஐயோ'' என  மாதவி கத்தினாள்.

எல்லோரும் ஓடிப் போய் பார்த்தார்கள். கேசவன் மரணம் அடைந்து இருந்தான். மாத்திரை பாட்டில் ஒன்று மூடி கழன்று  மேசைக்கு அடியில் கீழே விழுந்து கிடந்தது.

அருள்வாக்கு அய்யாவு சொன்னது சரியாகவே பலித்தது. எல்லோரும் வசந்தியை பார்த்தார்கள். வசந்தி தலையை குனிந்தாள். 

சரி இந்த ஏழரை வருடங்கள் முன்னர் நடந்த கதை ஒன்று சொல்வோம்.

மாதவிக்கு திருமணம் ஆகி சில வருடங்கள் குழந்தை இல்லை. என்ன பிரச்சினை என அறிந்த போது மாதவியிடம் உருவாகும் கரு முட்டை மிகவும் பலவீனமாக இருந்தது. முதிர்ச்சி அடைய கரு முட்டை மறுத்தன. முதிர்ச்சி அடையாத கரு முட்டைகள் கருத்தரிப்பதில்லை. FSH (follicle stimulating hormone) சிகிச்சை எடுத்த பின்னரும் எதுவும் பலிக்கவில்லை. IVF (in vitro fertilisation) கூட செய்து பார்த்தார்கள். அப்போதுதான் வசந்தியை அணுகினாள் மாதவி.

''வசந்தி, எனக்கு ஒரு உதவி பண்ணுவியா?''

''என்ன மாதவி?''

''எனக்கு குழந்தை பாக்கியமே இல்லை, குழந்தை பெத்துக்க ஆசையா இருக்கு, ரொம்ப முயற்சி பண்ணினோம், ஆனா ஒன்னும் முடியலை. என்னை என் புருஷன் வெறுத்து ஒதுக்கிருவாரோனு பயமா இருக்கு. இன்னொரு முறை முயற்சி பண்ணுவோம், இல்லைன்னா வேறு வழி இல்லைன்னு டாக்டர் சொல்லிட்டார்''

''தத்து எடுத்துகிரலாமே''

''நான் பெறணும், அப்பதான் அவர் பாசமா இருப்பார்''

''என்னது இப்படி பேசற''

''என்னோட நிலைமை அப்படி இருக்கு''

மாதவியின் அழுகை வசந்தியை மிகவும் கவலைக்குள்ளாக்கியது.

''நான் என்ன பண்ணனும்''

''உன்னோட கரு முட்டைகள் தர முடியுமா?, டாக்டர்கிட்ட பேசி இதை வெளிய சொல்லாம பாத்துக்கிறேன்''

''இல்லை, அது வந்து''

''பிளீஸ், முடியாதுன்னு சொல்லாத, நான் செத்துருவேன்''

''கிறுக்கு மாதிரி பேசாத, எனக்கு பிறக்க போற முத பொண்ணு என் அண்ணணனை கொன்னுரும்னு சொல்லி தான் எனக்கு கல்யாணமே பண்ண வைக்க வேணாம்னு வீட்டுல சொல்றாங்க''

''உனக்கு எங்க பிறக்க போது, எனக்கு தானே பிறக்க போகுது, அது எல்லாம் அப்படி நடக்காது, எனக்கு இந்த உதவி செய்டி, உன்னோட உயிர்த்தோழி உயிரோட இருக்க வேணாமா சொல்லுடி''

மாதவியின் அழுகையும் அந்த பேச்சும் வசந்தியின் மதிதனை வேலை செய்யாமல் தடுத்தது. சரி என சம்மதம் தந்தாள்.

வசந்தியின் கரு முட்டை எடுக்கப்பட்டு, வசந்தராஜின் விந்துவுடன் இணைத்து குழந்தை கரு உருவானதும் மாதவியில் கருப்பையில் வைத்து பிறந்தவளே இந்த சுபி என்பது வசந்திக்கும், மாதவிக்கும் டாக்டருக்கு மட்டுமே தெரியும்.

இப்போது வருவோம். நிறைய மருந்து உட்கொண்டதால் கேசவன் உயிர் போனது என மருத்துவ அறிக்கை வந்தது. தற்கொலை என குறித்து வைத்தார்கள். சுபி விபரம் அறியாமல் அவளது வீட்டில் விளையாடி கொண்டு இருந்தாள்

வசந்திக்கு தன்  குழந்தைதான் தன் அண்ணனை கொன்றது என புரிந்து கொள்ள வெகு நேரம் பிடிக்கவில்லை.

(முற்றும்)

Wednesday 18 September 2013

காமக்கதைகளுக்கு எப்பவுமே மவுசு அதிகம்

செந்தில்குமார் மிகவும் அக்கறையுடன் படித்துக் கொண்டிருந்தான். ஊருக்குச் சென்றுவிட்டு இன்றுதான் வந்தான். வந்ததும் வராததுமாய் இப்படி புத்தகம் எடுத்துப் படித்ததை கண்டு எனக்கு மிகவும் ஆச்சர்யமாகப் போய்விட்டது. பரீட்சை எதுவுமில்லையே செந்தில்குமார் என சொன்னேன். உன்னை மாதிரி பரீட்சைக்குப் படிக்கிறவனு என்னை நினைச்சியா, என்னை தொந்தரவு பண்ணாதே, சாயந்திரம் நடக்கப் போவயில, இருட்டப் போகுது போ என சத்தம் போட்டு திட்டிவிட்டான்.

வீட்டின் வெளியில் இருந்த வயல்வெளியில் நடக்க ஆரம்பித்தேன். அப்பொழுதுதான் தண்ணீர் பாய்ச்சி முடித்து இருப்பார்கள் போல, எங்கும் ஈரம் அதிகமாகவே இருந்தது. வயல்வெளி தாண்டி மாந்தோப்பு பக்கமாக நடந்தேன். இருபத்தி ஐந்து வயது மதிக்கத்தக்க ஒரு பெண் அங்கே நின்று கொண்டிருந்தாள். இந்த வீட்டிற்கு வந்த நாளிலிருந்து தினமும் வயல்வெளி, மாந்தோப்பு என தனியே மாலையில் நடந்து இருக்கிறேன். இந்த வீட்டிற்கு வந்து கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஆகிறது. ஊருக்கு வெளியே கட்டப்பட்ட இரண்டு வீடுகளில் இதுவும் ஒன்று. மாலை வேளையில் ஊர் ஆட்கள் எவரும் அவ்வளவாக இந்தப் பக்கம் எல்லாம் வருவதில்லை. இவள் தனியாய் நின்று கொண்டிருந்தது மட்டுமின்றி இதுநாள் வரை அவளை நான் இங்கே கண்டது இல்லை. மனதில் இனம் புரியாத பயம் ஒன்று சேர்ந்தது. என்னைக் கண்டு அவள் புன்னகை புரிந்தாள்.

பேச்சுக் கொடுக்கலாமா, வேண்டாமா என்றே நினைத்துக் கொண்டிருக்கையில் எதுக்கு அங்கேயே நிக்கிற, வா என அழைத்தாள். அவளது உடையானது ஓரிடத்தில் நில்லாது அங்கும் இங்கும் அல்லாடிக்கொண்டு இருந்தது. என்னை எதற்கு இவள் அழைக்கிறாள் என இல்ல, நா வீட்டுக்குப் போகனும் என்றேன். இவ்வள தூரம் வந்துட்ட, பக்கத்தில வந்துட்டு போறது என்றாள். நீ எந்த ஊரு, உன்னை இதுவரைக்கும் பாத்தது இல்லையே, எதுக்கு இங்க நிக்கிற என்றேன்.

இந்த ஊருக்கு நேத்துதான் வந்தோம். காலாற நடக்கலாம்னு இங்குட்டு வந்தேன் என்றாள். சற்று தைரியத்துடன் அவள் அருகில் சென்றேன். மாந்தோப்புக்குள்ள போலாமா என்றாள். இல்ல வேணாம் என்றேன். வெட்கபடாத, முன் அனுபவம் இல்லேன்னா பரவாயில்ல, எனக்கு இருக்கு என்றாள். என்ன கண்றாவி இது, மாந்தோப்புக்குள் எத்தனை முறை எவ்வித பயம் இன்றி இருட்டிய பின்னர் கூட நடந்து சென்று இருக்கிறேன், இதற்கு எதற்கு முன் அனுபவம்!

யோசிக்காத, சட்டுபுட்டுனு முடிச்சிட்டு போயிருவோம் என்றாள். என்ன சொல்ல வர, மாந்தோப்புக்குள்ள நடக்கிறதுக்கு இப்படி வெளியவே நடக்கலாமே என்றேன். நீ விவரம் புரியாதவனா இருக்கியே. நானும் நீயா தனியா இருக்கிறது கூட உனக்கு புரியலையா. விளக்கமா சொன்னாத்தான் உனக்கு புரியுமா, நீ என்ன பால் குடிக்கிற பாப்பாவா என்றாள். அப்போதுதான் ஆபத்தினை உணர்ந்தேன். அவள் அடுத்த வார்த்தை பேசும் முன்னர் ஓட்டம் பிடித்தேன். நில்லுடா பெண்டுகா எனும் அவளது சப்தம் என்னை கடந்து சென்று கொண்டிருந்தது.

மூச்சிறைக்க வீடு வந்து சேர்ந்தேன். செந்தில்குமார் அப்போதுதான் புத்தகம்தனை படித்து முடித்து விட்டு எழுந்து இருந்தான். என்னடா இப்படி மூச்சிரைக்கிற என்றான். இன்னைக்கு கொஞ்சம் ஓடினேன், அதான் என சமாளித்துவிட்டு குளியலறை சென்று குளித்துவிட்டு வந்தேன். என்ன பாடம் படிச்ச என்றேன். லோகோமோடிவ் என்றான். லோகோமோடிவ், என்ன கதை விடறியா என்றேன். நான் எதைப் படிச்சா உனக்கு என்ன என மீண்டும் சத்தம் போட்டான்.

ஊருக்குள் சென்றுதான் ஹோட்டலில் சாப்பிட வேண்டும். செல்லும் வழியில் மாந்தோப்பில் நடந்த விச யத்தை சொல்லலாமா என யோசித்து வேண்டாம் என விட்டுவிட்டேன். இருவரும் சேர்ந்து ஹோட்டல் அடைந்தோம். அவன் பரோட்டா, ஆம்லெட் என ஆர்டர் செய்தான். நான் என் பங்குக்கு சிக்கன் 65, பரோட்டா ஆர்டர் செய்தேன். சாப்பிட்டு கொண்டிருக்கும் போது மாந்தோப்பில் கண்ட பெண் என் அருகில் வந்து அமர்ந்தாள். வீட்டுக்கு வரியா என முனுமுனுத்தவள் ஒரு தோசை ஆர்டர் செய்தாள்.

யாரு அது மச்சி, உன்னை உரசிக்கிட்டு வந்து உட்காருரா என்றான் செந்தில்குமார். எனக்கு தெரியலை என சொன்னேன். ஏன்மா, கொஞ்சம் தள்ளி உட்காரு, உரசிட்டு உட்காருர, இடமா இல்ல, விட்டா மடியில உட்காருவியோ என செந்தில்குமார் அவளை சத்தம் போட்டான். உன்னையவா உரசினேன், வாயை மூடிட்டு சாப்பிடு என்றாள் அவள். என்னக்கும் இல்லாமல் வேகமாக சாப்பிட்டேன். மெதுவா சாப்பிடுடா என்றான் செந்தில்குமார். அவளோட சண்டை போடாத, வா போகலாம் என சாப்பிட்டுவிட்டு கிளம்பினோம். நாளைக்கு அங்க வா, நான் நிப்பேன் என்றாள்.

சிகரெட் வாங்கி பத்த வைத்தான் செந்தில்குமார். இந்தா இழு என்றான். இன்னைக்கு வேணாம் என்றேன் . என்ன மச்சி பாதி, பாதி மறந்துட்டியா, எதுக்கு அந்த பிள்ளை உன்னை உரசினதுல இருந்து ஒரு மாதிரியா இருக்க, எந்த ஊருக்காரி, என்ன உனக்கு ரூட்டு போடுறாளா, கிடைச்சா அமுக்கிடனும் மச்சி என்றான். சே அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை என்றேன்.

எதற்கு அவள் அப்படி நடந்து கொண்டாள் எனும் சிந்தனை என்னை அலைக்கழித்தது. வீடு வந்து சேர்ந்தோம். செந்தில்குமார் ரம் எடுத்துக் கொண்டு மாடிக்கு சென்றான். கம்பெனி கொடுக்கப் போறியா இல்லையா என்றான். கொஞ்ச நேரம் கழிச்சி வரேன் என்றேன். புத்தகம் எடுத்து படிக்கலாம் என ஒரு புத்தகம் எடுத்தபோது அங்கிருந்து ஆடைகள் இல்லாத பெண்கள் படம் போட்ட புத்தகம் விழுந்தது. திடுக்கிட்டேன். இதைத்தான் செந்தில்குமார் படித்தானா என எண்ணிக்கொண்டு அந்த புத்தகம் எடுத்து மாடிக்கு சென்றேன்.

என்னடா இது, எப்ப இருந்துடா இப்படி ஒரு பழக்கம், எதை எதை படிக்கிறதுன்னு ஒரு அறிவு இல்லையா என கத்தினேன்! மச்சி இந்தா வா குடி. அதுல சூப்பர் சூப்பரான கதை எல்லாம் இருக்கு. படிக்க படிக்க அப்படியே கனவுலகத்தில மிதக்கலாம். அதுல ஒரு கதை இருக்கு பாரு, அட்டகாசமான கதைடா என்றான். இது எல்லாம் தப்புடா என்றேன். ஆமா சிகரெட்டு, குடி எல்லாம் தப்புதான், அதை எல்லாம் நீ செய்யல, கதைய கேளுடா என எனக்கு ஊற்றி கொடுத்தான்.

ரெண்டு பிரண்டுஸ். அதுல ஒருத்தன் ரொம்ப யோக்கியம், அடுத்தவன் அப்படி இப்படி. யோக்கியமானவன் ஒரு பொன்னை சந்திக்கிறான். அந்த பொண்ணு அவனை அடைய ஆசைப்படறா. ஆனா அவன் அது தப்பு அப்படின்னு அவகிட்ட சொல்லி அவளை வேணாம்னு தவிர்க்கிறான். இப்படி நடந்த விசயத்தை பிரண்டுகிட்ட சொல்றான். பிரண்டு அடுத்த முறை அவள்கிட்ட பேசி அவளை அடையறான். சும்மா செமையா இருந்தது மச்சி. எப்படி அங்கம் அங்கமா அந்த பெண்ணை எழுதி இருக்கு. படிச்சி பாரு என்றான்.

என்ன செய்வது என  புரியாமல் மாந்தோப்பில் நடந்த விசயத்தை செந்தில்குமாரிடம் சொன்னேன். அடுத்த நாள் மாலையில் எனது கையில் புத்தகம், அவன் மாந்தோப்பு நோக்கி நடந்து கொண்டிருந்தான்.




Friday 13 January 2012

நேசம் போட்டிகள் எப்போது களைகட்டும்?



நேசம் + யுடான்ஸ் இணைந்து வழங்கும் புற்றுநோய் விழிப்புணர்வு கதை, கட்டுரை, குறும்பட போட்டி்கள்


இதுவரை இந்த போட்டிகளுக்கு என எழுதியவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கிறது என்பதை நினைக்கும்போது பதிவர்கள் நிறையவே யோசித்து கொண்டிருக்கிறார்கள் என தெரிகிறது. நான் ஒரு சிறுகதை, கட்டுரை தயார் செய்து கொண்டிருக்கிறேன். பொங்கலுக்கு பின்னர் வெளியிடலாம் என இருக்கிறேன். 

அதற்கு முன்னர் என்றோ எழுதிய புற்று நோய் எனும் கதையை இங்கே மீண்டும் பதிவு செய்கிறேன். இந்த போட்டி குறித்த விபரங்களை அறிந்து கொள்ள இங்கே அழுத்துக

புற்று நோய் - சிறுகதை (இது இந்த போட்டிக்காக அல்ல, போட்டிக்காக வேறு ஒரு கதை எழுதி கொண்டிருக்கிறேன்) 

//புதனவெள்ளி மருத்துவமனை வளாகத்தில் ஆறு மருத்துவர்கள் மிகவும் யோசனையுடன் அமர்ந்து இருந்தார்கள். மிகவும் நிசப்தமான அமைதி நிலவியது. ஒருவரையொருவர் பார்த்த வண்ணம் யாராவது பேச்சைத் தொடங்கமாட்டார்களா என எதிர்பார்ப்புடன் இருப்பது அவர்களின் முகத்தில் அப்படியே தெரிந்தது. அமைதியை கலைத்து தலைமை மருத்துவர் ஜெயபால் பேசினார்.

''இன்னைக்கு வந்திருக்க பேஷண்ட் ரொம்பவும் கிரிட்டிக்கல் கண்டிசன்ல இருக்கார், அவருக்கு அறுவை சிகிச்சை செஞ்சாகனும் ஆனா அதற்கான செலவை ஏத்துக்குற வசதி அவங்களுக்கு இல்லை. யாரோ சொல்லி இங்க கொண்டு வந்திருக்காங்க, இந்த கேன்சரை வெட்டினாலும் திரும்ப வந்துரும், இப்போ போராடுற உயிருக்கு என்ன செய்யலாம் சொல்லுங்க''

''அறுவை சிகிச்சை செஞ்சிரலாம், இதுக்கு யோசனைப் பண்ண வேண்டியதில்லை'' என்றார் துணை மருத்துவர் கோபால்.

''மருத்துவ செலவு யார் கட்டுவாங்க'' என்றார் ஜெயபால்

''நாம் எப்பவும் ஆராய்ச்சிக்குனு வாங்குற ஃபண்ட்ல இருந்து உபயோகிப்போம், இப்படி உயிருக்குப் போராடுறவங்களை காப்பாத்துறது நம்மளோட தர்மம்'' என்றார் அறுவை சிகிச்சை மருத்துவர் ஜெயக்கொடி.

ஜெயக்கொடி அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகளையெல்லாம் செய்துவிட்டு அந்த நோயாளியின் உறவினர்களிடம் புற்றுநோய் பற்றி சின்ன விளக்கம் கொடுத்தார்.

'புற்றுநோய் எப்படி உருவாகிறது? எதனால் உருவாகிறது? ஒரு முறை வரும் இந்த நோய் உயிர் கொல்லாமல் போகாது. ஒவ்வொரு அங்க அமைப்பையும் கூறு பார்க்கும் இந்த நோய்க்கு உலகமே மருந்து கண்டுபிடிக்க போராடிக் கொண்டு இருக்கிறது. லேசர், எக்ஸ்ரே என ஒளியின் உதவி கொண்டு இந்த நோய் தடுக்கும் முறையை கண்டுபிடித்து ஓரளவே வெற்றி கண்டு இருக்கிறார்கள்.

பொதுவாக செல்கள் இரண்டாக ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பிரியும், அதிலிருந்து இரண்டு இரண்டாக செல்கள் பிரிந்து கொண்டே ஒரு சீரமைப்புடன் வரும். அப்படி இல்லாமல் தான் தோன்றித்தனமாக ஒரு செல் பல செல்களாக மாற்றம் கொள்ளும்போது போதிய சக்தியைப் பெறமுடியாமல் மற்ற செல்களின் உணவையும் தானே தின்று அந்த நல்ல செல்களையும் அழிக்கத் தொடங்கிவிடுகிறது இந்த மாறுபாடு அடைந்த செல்கள். இப்படி மூர்க்கத்தனமான செல்களை அழிக்கப் பயன்படும் மருந்துகள் நல்ல செல்களையும் ஒரு கை பார்த்துவிடுகிறது. இதனால் நல்ல செல்கள் பாதிக்கப்பட்டுவிடுகின்றன.

வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் என மரபணுக்களில் கையை வைத்தால் வேறு விளைவுகளையும் கொண்டு வந்து விடுகிறது. எனவே இந்த செல்களை அழிப்பதன் மூலம் ஓரளவுக்கு நிலைமையை சீராக்க முடியும் ஆனால் மீண்டும் இந்த செல்கள் தங்களது மாற்றத்தை வெளிப்படுத்த தொடங்கிவிடும். இந்த நோயில் இரண்டு வகை உண்டு. ஒன்று உடலில் எல்லா இடங்களிலும் பரவி விடுவது, மற்றொன்று ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் நிலை கொள்வது. எப்படியும் அவரை உயிருடன் பிழைக்க வைத்துவிடுவோம் 'ஜெயக்கொடி பேசியது வந்திருந்தவர்களுக்கு புரிந்ததா எனத் தெரியவில்லை.

கடும் போராட்டத்துக்குப் பின் அறுவை சிகிச்சை முடிந்தது. மருத்தவமனையிலே அவர் தங்க வைக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை முறைத் தொடர்ந்து நடந்து வந்தது. சற்று தேறி வருவதாகவே சொன்னார்கள். உறவினர்கள் பணத்தை புரட்டினார்கள். எப்படியாவது இவர் பிழைக்க வேண்டும் என வேண்டிக் கொண்டார்கள். செல்கள் மருந்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்து கொண்டிருப்பதாக மருத்துவர்கள் சொன்னார்கள். ஆனால் ஓரிரு வாரங்களில் செல்கள் தனது வேலையை காட்டத் தொடங்கியது. இந்த முறை அதிவேகமாக தனது பணியைச் செய்தது. மருத்துவர்கள் மேற்கொண்டு எந்த முயற்சியும் செய்ய இயலாது என சொல்லிவிட்டனர். அந்த நோயாளி அகால மரணம் அடைந்தார்.

''இந்த கேன்சருக்கு ஒரு முடிவுகாலமே வராதா?' என சோகத்துடன் சொன்னார் ஜெயக்கொடி. ஜெயபால் இதற்காக செலவிடப்படும் நேரத்தையும், பணத்தையும் நினைத்து மனம் வருந்தினார். பல காலமாக நடந்து வரும் ஆராய்ச்சியில் ஒரு முடிவும் இல்லாமல் இருப்பது வருத்தம் அளிப்பதாக சொன்னார்.

அப்பொழுது ஒருவர் வெட்டப்பட்ட நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டார். அவருக்கு உரிய சிகிச்சை வெகுவேகமாக அளிக்கப்பட்டது. உயிருக்குப் போராடிய நிலையில் வந்த அவரை மருத்துவர்கள் காப்பாற்றிவிட்டனர். என்ன ஏது என விசாரிக்காமல் அனைத்து சிகிச்சையும் முடிந்திருந்தது. எப்படி இந்த நிலைமை வந்தது என பின்னர் கேள்விபட்டபோது மருத்துவர் ஜெயக்கொடி மனமுடைந்தார்.

ஒரு அரசியல் தலைவரை கேவலமாக பேசியதற்காக இவரை அந்த அரசியல் கட்சியைச் சார்ந்தவர் ஒருவர் வெட்டிவிட்டார் எனவும், இதே போன்று பலமுறை அவர் பலரை வெட்டி இருப்பதாகவும் சில காலங்கள் சிறைக்குச் செல்வதாகவும், பின்னர் சிறையிலிருந்து வெளிவந்தால் இதேபோன்று நடந்து கொள்வதாகவும் கூறினார்கள்.

ஒரு சமுதாயத்தை இதுபோன்ற மனிதர்கள் அழித்துவிடுவது குறித்து மிகவும் வேதனையுற்றார் ஜெயக்கொடி. இப்படி தான் தோன்றித்தனமாக திரிபவர்களை ஒரு கட்டுப்பாட்டில் கொண்டுவர இயலாத வாழ்க்கை முறையை நினைத்துப் பார்க்கையில் புற்றுநோய் நிலைமையை விட இந்த புற்றுநோய் நிலைமை ஜெயக்கொடியை மிகவும் சோகத்திற்குள்ளாக்கியது.

ஏதாவது ஒரு பெயரில் இதுபோன்ற மனிதர்களின் நடமாட்டத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வர ஆராய்ச்சி ஒன்றை ஒருவர் துவங்கினார். இந்த ஆராய்ச்சியும் புற்றுநோய்க்கான மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியைப் போலவே நீண்டுவிடாமல் நல்ல முடிவு கிடைக்க வேண்டும் என உலக சமயத்தை வேண்டிக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்றே ஜெயக்கொடிக்குப் பட்டது.

முற்றும்.//



Friday 23 July 2010

உன்னதமான நட்பு

எரிச்சலூட்டம் நகரம், ஆனாலும் விலகிப் போய்விடமுடியாதபடி வாழ்க்கை. அந்த வாழ்க்கையில்தான் இருந்தான் அஸ்வின். அஸ்வின் ஒரு துடிதுடிப்பான இளைஞன் ஆனால் மனதில் நிறைய வலிகளை சுமந்து கொண்டு கணினித் துறையில் வேலைபார்ப்பவ‌ன். ஒவ்வொரு முறையும் தனக்கென ஒதுக்கப்பட்ட வேலையை செம்மையாக செய்தபோதும் அதற்கேற்ற அங்கீகாரமும், உதவித் தொகையும் கிடைக்காமல் போவது கண்டு மனம் வெந்து மனதில் உள்ள இந்த துன்பச் சூழலை ஒதுக்கிட பேருந்தில் ஏறி கடற்கரை பக்கம் அவன் செல்வதுண்டு. அந்த கடற்கரையில் இருந்து வேறொரு பேருந்தில் ஏறினால் அவனது வீடு பத்து நிமிடங்களில் வந்துவிடும். போகும்போதும் வரும்போதும் அந்த கடலைப் பார்க்கும்போது தன்னையும் உள்ளிழுத்துக் கொள்ளாதோ இந்த கடல் எனும் எண்ணம் வந்து கொல்வதுண்டு.


இன்று அதே கடற்கரை. ஒவ்வொரு முறை வரும்போதெல்லாம் கடலின் அலைகளைப் பார்த்ததோடு சரி. மனதில் ஏற்படும் அலைகள் வேலை பற்றிய ஒன்றாகவே இருக்கும், அதுவும் பிரச்சினைகள் பற்றியதே. இப்படிப்பட்ட வேலையை விட்டுவிட்டு கிராமத்திற்குச் செல்லும் எண்ணம் அவனுள் ஓட ஆரம்பித்தது. சுற்றுமுற்றம் பார்த்தான்.


தனது பள்ளிக்கால நினைவுகளும் அவனுடன் பழகிய நண்பர்கள் அவனது மனதில் வட்டமிடுகிறார்கள். பெயரை மணலில் எழுதுகிறான். அசோக். அழிக்கிறான். மற்றொரு பெயரை எழுதுகிறான். சுதாகர், அழிக்கிறான். மீண்டும் ஒரு பெயரை எழுதுகிறான் முகமது, பின்னர் அதையும் அழிக்கிறான். தனது பெயரையும் எழுதி அதை அழிக்கிறான். கண்களில் நீர் கோர்த்துக் கொள்கிறது.


அப்போது அங்கே விளையாடிக்கொண்டிருந்த நான்கைந்து சிறுவர்கள் அஸ்வின் நோக்கி ஓடிவருகிறார்கள். அஸ்வினின் கவனம் சிதறுகிறது. கத்தலுடனும், கும்மாளத்துடனும் அவர்கள் அவனைத் தாண்டிச் செல்கிறார்கள். அஸ்வின் மீண்டும் தனது பள்ளிக்கால நினைவுகளில் மூழ்குகிறான். அதே நான்கு பெயர்களை மணலில் மீண்டும் ஒன்றன்பின் ஒன்றாக அழிக்காமல் எழுதுகிறான். இது அழியாமல் காக்கப்பட வேண்டும் என அவன் நினைத்துக் கொண்டிருக்கையில் மழை தூறல் போடத் தொடங்குகிறது. மழை கொஞ்சம் வேகமாகவே கொட்டுகிறது. அந்த பெயர்கள் மெதுவாக அழியத் தொடங்குகிறது. ஆனால் அவனுள் அவனது நண்பர்கள் பற்றிய எண்ணம் நிலைகொள்ளத் தொடங்குகிறது.

அசோக்? சுதாகர்? முகமது? காலத்தின் வேகத்தில் வெவ்வேறு திசையில் சென்றுவிட்ட அந்த நண்பர்களை நினைக்கும்போதே மனதில் ஒரு அழுத்தம் வந்து சேர்கிறது. மழையில் தொப்பலாய் நனைந்து கொண்டே பேருந்துக்காக பேருந்து நிறுத்தத்தில், நிழற்கூடை அது இப்போது மழைகூடை, ஒதுங்குகிறான். அங்கிருப்பவர்களில் ஒருவர் 'நனைஞ்சதுதான் நனைஞ்சிட்டே அப்படியே போக வேண்டியதுதானே' என சிரிக்கிறார். வாழ்க்கையும் அப்படித்தான், தொலைத்த நட்புகளை அப்படியே தொலைத்துவிட்டே வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. எத்தனை வருடங்கள்? எண்ணிப் பார்த்தால் கை விரல்களுக்குள் மட்டுமே அடக்கம்.

வெவ்வேறு திசையில் இருந்தே நால்வரும் பள்ளிக்கு வந்ததை நினைத்துப் பார்க்கும்போது அஸ்வின் மனதில் ஒரு சின்ன வலிதான். மழையின் வேகம் குறைகிறது. 'தடுமம் பிடிக்கப்போகுது, துவட்டிக்கோ ராசா' என அங்கிருந்தவர்களில் ஒருவர் தன்னிடமிருந்த துணியை எடுத்து அஸ்வினுக்குத் தருகிறார். 'இல்லை வேணாம்ங்க, மழை விட்டுரும், நான் வீட்டுக்குப் போயிக்கிறேன்' பேருந்து வருகிறது. அவனது நினைவுகள் கலைகிறது?!

Thursday 3 June 2010

நிலை கொள்ளாமல்

இறந்துவிடுவோம் என்ற எண்ணமும் அந்த இறப்பிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ளக் கூடிய வேட்கையும் தீபக்கின் மனதில் ஓடிக் கொண்டு இருந்தது. எங்கு பார்த்தாலும் தண்ணீர்.

தண்ணீரில் மூழ்கிக் கொண்டு இருந்த அந்த வானம் தொடும் கட்டிடத்தின் உச்சியில் தண்ணீர் முட்டிச் சென்று கொண்டு இருந்தது. கடலின் தண்ணீர் அளவானது இப்படி உயரும் என்று ஒருவரும் கனவில் கூட நினைத்துப் பார்த்து இருக்கமாட்டார்கள்.

'என்னடா இங்கேயெ உட்கார்ந்துட்டு இருக்க, கிளம்புடா' சக நண்பன் சதீஸ் தீபக்கை அவசரப்படுத்தினான். தீபக் வாய்மூடி எதுவும் சொல்ல முடியாதவனாய் இருந்தான். தண்ணீரில் மீன்களாக மனிதர்கள்.

எவரும் இந்த தண்ணீருக்கு தப்பி இருப்பார்களாக தெரியவில்லை.  நிலமாக இருந்த இந்த பூமி இப்போது ஒரே தண்ணீராய். எந்த கரையை எப்படி காண்பது? தண்ணீரில் நீந்த ஆரம்பித்தான் தீபக்.

எந்த திசை நோக்கிச் செல்வது? நீச்சல் தெரியாதவர்கள் நீச்சல் அடிக்காமலே மிதந்து கொண்டு இருந்தார்கள். எப்படி இவ்வளவு பெரிய நிலப்பரப்பினை தண்ணீர் தனக்குள் அடக்கிக் கொண்டது.

நீர்வாழ் உயிரினங்கள் என்ன நடந்தது என அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தன. தண்ணீரில் நாம் உபயோகித்த நச்சுப்பொருட்கள் கலந்ததால் மிச்ச மீதி எதுவும் இன்றி எல்லாம் தண்ணீருக்கு இரையாகி இருந்தன.

'கடவுளே எப்படியாவது காப்பாற்று, எங்காவது ஒரு நிலப்பரப்பினை கண்களுக்கு காட்டு' என வேண்டிக் கொண்டே தொடர்ந்து நீந்தினான். அனைவரும் அடங்கிப் போய்விட்டார்கள் என்று மட்டும் தெரிந்தது, எங்கே சதீஸ்? எங்கே தீபா? எங்கே சுற்றமும் குலமும்? சதீஸும் அடுத்த பத்து நிமிடத்தில் தண்ணீரினால் ஆட்கொள்ளப்பட்டான்.

எதிர்பட்ட உயிரற்ற சடப்பொருள்களை விளக்கிக் கொண்டு இலக்கின்றி நீந்தினான், எஞ்சிய உயிர் என்னது மட்டும்தானா? தீபக்கின் கைகள் கால்கள் அலுப்பைத் தந்தன. வயிர் பசிக்க ஆரம்பித்தது. இந்த தண்ணீரைக் குடிப்பதா?

கரைகள் இல்லா நீர்பரப்பு! இனி இங்கு வாழ முடியாது. பிற கிரகங்களில் வாயுக்கள் ஆக்கிரமித்து இருப்பதை போல் இங்கு தண்ணீர் ஆக்கிரமித்து விட்டது. இனி இந்த தண்ணீர் என்று வற்ற? மனித இனம் மட்டுமின்றி எல்லாம் முடிந்து போனதோ?

படித்தவைகள் மனதில் அழுத்தியது! வறண்ட பகுதிகள் என இருக்கையில், வறுமை கொடுமைப் பண்ணி கழிக்கையில் எல்லாம் எரித்து எரித்து வெப்பம் அதிகரிக்கிறது என சொல்லியும் கேட்காமல் பனி உருகுகிறது என புரியாமல் அடுத்த கிரகம் என நினைத்து இருக்கிறதை காக்காமல் கைவிட்டுப் போனதே என நினைத்துக் கொண்டபோது  தீபக் நீந்த முடியாமல் மிதக்கத் தொடங்கினான்.

Monday 4 January 2010

முயல் கறி


ஐந்தாம் வகுப்பு பள்ளித் தோழிகள் சந்தியா, விந்தியா.

சந்தியாவுக்கு ஏதாவது பிரச்சினை எனில் விந்தியா முதல் ஆளாய் நிற்பாள். சந்தியாவும் அவ்வாறே.

இருவரது ஊரும் பத்து நிமிடத்தில் நடந்து செல்லுமாறு அமைந்து இருந்தது. இரு ஊர்களுக்கும் இடையில் விவசாய நிலங்கள். அந்த விளை நிலங்கள் வீடாகிப் போனால் இரண்டு ஊர்களும் ஒரு ஊராகிப் போய்விடும். சந்தியாவின் சொந்த கிராமம் சற்று தொலைவில் இருந்தது, அங்கே அவரது பாட்டி தாத்தா வசித்து வந்தனர். முழு ஆண்டுத் தேர்வு விடுமுறைக்கு பாட்டியின் ஊருக்கு சந்தியாவின் முழுக் குடும்பமும் சென்று விடும். வேறொரு பள்ளியில் ஆசிரியர்களாகப் பணியாற்றும் அவளது பெற்றோருக்கு அதுவே செளகரியமாக இருந்தது.

யார் பள்ளித் தேர்வில், விளையாட்டுப் போட்டியில் முதல் வருவது எனும் போட்டி இருவருக்குமிடையில் மிகவும் அதிகமாகவே உண்டு. ஆனால் இவர்கள் இருவரையும் இதுவரை முதலில் வராத வண்ணம் தடுத்து வரும் கணேசனும் அந்த பள்ளியில் உண்டு.

ஐந்தாம் வகுப்பின் அரையாண்டுத் தேர்வு விடுமுறை கழிந்து பள்ளிக்குச் சென்றனர் இருவரும்.

பாட மதி்ப்பெண்கள் என அன்றே அனைத்துப் பாடங்களுக்கும் மதிப்பெண்கள் தரப்பட்டது. சந்தியா முதல் மாணவியாக முதன் முறையாக வந்தாள். விந்தியா மூன்றாம் நிலையில் இம்முறை இருந்தாள். கணேசன் தான் இரண்டாம் நிலை என அறிந்ததும் அழுதுவிட்டான்.

'இனிமே நீ அழப் பழகிக்கோடா' என சந்தியா சற்று கோபமாகவே கணேசனிடம் சொன்னாள்.

'நாங்க எத்தனை தடவை இரண்டாமிடம், மூணாமிடம்னு வந்துருக்கோம், நீ ஏண்டா அழறே' என தன் பங்குக்கு விந்தியாவும் சொல்லி வைத்தாள்.

'என்னை என் அப்பா அடிப்பாரு' என அழுதான் கணேசன்.

'என் புரோகிரஸ் ரிப்போர்ட் வந்ததும் அதை உன்கிட்ட தரவா, அதைப் பார்த்தாவது எத்தனை நான் அடி வாங்கியிருக்கனும்னு உங்க அப்பா நினைக்கட்டும்' என்றாள் சந்தியா.

'என்னதையும் சேர்த்து எடுத்துட்டுப் போ, இப்பவே புரோகிராஸ் ரிப்போர்ட் தந்து தலைவலி தராங்க' என்றாள் விந்தியா.

கணேசன் எதிர்பார்த்தது போல கணேசனின் தந்தை அவனை அடிக்கவில்லை, மாறாக நன்றாகப் படிக்குமாறு வலியுறுத்தினார்.

'சந்தியாவுக்கு என்ன வேணும்' என்று அவரது தந்தைச் செல்லமாகக் கேட்டார்.

'முயல் வேணும்' என்றாள் சந்தியா.

'முயலா? நீ சொன்னது போல முதல் ராங்க் வந்துட்ட, அதனால உனக்கு வாங்கித் தரேன்' என உறுதி தந்தார் சந்தியாவின் தந்தை சோனைமுத்து.

முயல் விற்கும் இடங்களுக்குத் தேடி அலைந்தனர். கண்கள் உருண்டையான முயல் வேண்டும் எனத் தேடினாள் சந்தியா. காதுகள் கொம்புகள் போல இருக்க வேண்டும் என அடம் பிடித்தாள். வேகமாக துள்ளிக் குதித்தோட வேண்டும் எனவும் வம்பு செய்தாள். அவள் கேட்டபடி வாங்கிட அழுத்துப் போனார் சோனைமுத்து.

கண்கள், காதுகள் சரி, ஓடும் முயல் என எப்படிக் கண்டுபிடிப்பது எனத் தவித்தவர் ஊரில் உள்ள ஒருவனிடம் சொன்னார். அவனும் சில தினங்களுக்குப் பின்னர் ஒரு முயல் ஒன்றைப் பிடித்து வந்து தந்தான். சந்தியாவுக்கு அந்த முயல் மிகவும் பிடித்துப் போனது.

தினமும் அதை தனது செல்லக் குழந்தையைப் போல பாவித்து வந்தாள். பழக்கப்பட்டு போன முயல் ஓட எத்தனிக்கவில்லை, சந்தியாவுடன் ஒட்டிக்கொண்டது. நாய் ஏதேனும் வந்தால் விரட்டி அடித்துவிடுவாள் சந்தியா. பள்ளிக்குச் செல்லும் போது அதனை பத்திரமாக ஒரு அறையில் பூட்டி வைத்துவிட்டுச் சென்றாள். மதிய உணவு, தண்ணீர் என அனைத்தும் தந்து விடுவாள்.

முயல் கொழுகொழுவென ஆகிப் போனது. ஓடும் வேலையில்லை, உணவு தேடும் தேவையில்லை. முயலுக்கு சோம்பல் அதிகமாகிப் போனது. இதைக் கவனித்த சந்தியா சனி, ஞாயிறு என மாடியில் ஓடச் சொல்லி முயலைத் தூண்டுவாள். முயலும் சொல்வதற்கிணங்க ஓடிக் காண்பிக்கும்.

முழு ஆண்டுத் தேர்வு வந்தது, விடுமுறையும் உடன் வந்தது. முயலை உடன் எடுத்துச் செல்லலாம் என சந்தியா விரும்பினாள். ஆனால் சந்தியாவின் தாய் சுகுமாரி மறுத்துவிட்டார். கிராமத்தில் கொண்டு சென்றால் பிரச்சினை எனச் சொல்லி விந்தியாவிடம் பாதுகாக்கத் தரலாம் என சொன்னாள். சந்தியாவும் விந்தியாவிடம் விபரம் சொல்லிக் கொடுத்தாள்.

விடுமுறைக்கு ஊருக்குச் சென்று ஒரு வாரம் ஆனது. நாளிதழ் ஒன்றைப் பார்த்த சந்தியாவின் முகம் வெடவெடத்தது, மனம் படபடத்தது.

'அம்மா, என் முயலுக்கு என்னாகி இருக்குமோ' என அலறினாள்.

'என்னாச்சு'

'இதோ நியூஸ் படிம்மா' எனக் காட்டினாள்.

'முயல் கறி தின்ற பள்ளித் தோழியின் குடும்பம்'

'முயலை என் தோழி வீட்டுலப் பாக்கச் சொல்லிப் போயிருந்தோம், அன்னைக்கி சாயந்திரம் வந்து பார்த்தா முயல் ஓடிப்போச்சுனு சொன்னாங்க, ஆனா முயல் கறி வாசம் அடிச்சது, நாங்க கேட்டப்ப முயல் கொழு கொழுனு இருந்திச்சி அதான் சாப்பிட்டோம்னு சொன்னாங்க' என வேதனையுடன் அந்த நாளிதழின் வரிகள் சொல்லிக் கொண்டிருந்தன.

விந்தியாவின் வீட்டுக்குப் போன் செய்தாள் சந்தியா.

'பேப்பர் நியூஸ் பார்த்து பயந்திட்டியா' எனச் சிரித்தாள் விந்தியா.

'ம்ம்' என்றாள் சந்தியா.

'உனக்கு ஒண்ணுன்னா நான் சும்மா இருப்பேனா, முயல் எப்பவும் பத்திரமாத்தான் இருக்கும், நீ சந்தோசமா பாட்டி வீட்டுல இரு, கவலைப்படாதே' என நம்பிக்கை சொன்னாள்.

இதைக் கேட்ட சந்தியாவின் அன்னை மனதில் நினைத்தாள்.

புரிந்துணர்வும், ஒருமித்த எண்ணமும் உள்ளவரை எல்லாப் பொருள்களும் இவ்வுலகில் பாதுகாப்பாகவே இருக்கும். நமது முன்னோர்கள் நம்மிடம் தந்த பூமியினை பாதுகாப்பாக வைத்திருக்கிறோமோ முயல் கறி செய்துவிட்டோமா என எண்ணுகையில் கண்களில் கண்ணீர் கோர்த்துக் கொண்டது.

(முற்றும்)

Saturday 12 September 2009

எங்க ஊரு ஆலமரம்.

''என்னடா ஆலமரத்தையேப் பார்த்துட்டு நிற்கிறே, போய் மாட்டுக்கு புல்லும், ஆட்டுக்கும் இலையும் பிடுங்கிட்டு வா''

''இருங்க முதலாளி, இப்போ போறேன்''

''ஏண்டா சொல்லிட்டே இருக்கேன், பதிலாப் பேசற''

தரையில் கிடந்த குச்சியை எடுத்து ஓங்கி கருத்தபாண்டியின் முதுகில் அடித்தார் பண்ணையார் குருபாண்டி. வலி தாங்கமுடியாமல் வார்த்தைகளை முனங்கியபடி ஓடினான் கருத்தபாண்டி.

மாட்டுக்கு புல்லும் ஆட்டுக்கு இலையும் பறித்துப் போட்டுவிட்டு மீண்டும் ஆலமரத்திற்கு கீழே போய் நின்றுகொண்டான். அவனுக்கு நேற்றிலிருந்து ஆலமரத்தின் மேல் ஒருவித ஈர்ப்பு வந்துவிட்டது. தாய் தந்தையை சிறுவயதிலே இழந்து தனது குழந்தை பருவம் முதற்கொண்டு பண்ணையார் வீட்டிலேயே வேலை செய்து காலம்தனை கடந்தான். பத்து வயதுதான் ஆனால் வேலைக்கு இது பத்தாது என பண்ணையாரா சொல்லப் போகிறார்.

''டேய் பாண்டி உன்னை பண்ணணயாரு வீட்டுக்கு வரச் சொல்லுறாருடா''

குரல் கேட்டதும் ஆலமரத்தின் மேல் வைத்த கண்ணை எடுத்துத் திரும்பி ஓட்டம் ஓட்டமாய் பண்ணையார் வீட்டை அடைந்தான்.

''ஏண்டா உன்னை ஒரு வேலை சொன்னா அதை மட்டும்தான் செய்வியா, ஏண்டா நேத்திலிருந்து ஆலமரத்துக்கு கீழேயே நிற்கிற''

கருத்தபாண்டி எதுவும் பேசாமல் நின்றுகொண்டிருக்க பண்ணையார் எழுந்து அவனை ஓங்கி ஒரு அறை விட்டார். கருத்தபாண்டி ஓ என அழுதுவிட்டான். அழுததை பொருட்படுத்தாமல் மேலும் சில அடிகள் கொடுத்தார்.

''ஏன் பச்சைப் புள்ளைய போட்டு இந்த அடி அடிக்கிறீங்க''

பண்ணையாரின் மனைவி கருத்தபாண்டியை அழைத்து சாதம் போட்டார். விக்கிக் கொண்டே சாதம்தனை விழுங்கினான்.

''அவர் எப்பதான் உன்னை அடிக்கிறதை நிறுத்தப் போறாரோ, ஏன் இப்படி இவர்கிட்டயே கிடந்து அடிவாங்கி சாகுற எங்காவது ஓடிப்போய் வாழ வேண்டியதுதான''

சாப்பிட்டுவிட்டு பதில் எதுவும் பேசாமல் திண்னையில் வந்து ஒரு ஓரத்தில் படுத்துக்கொண்டான். பண்ணையார் குருபாண்டி அவனருகில் வந்தார். கருத்தபாண்டி நடுங்கியவாறே எழுந்தான்.

''படுடா படு, நீ அந்த ஆலமரத்துக்கிட்ட நிற்கிறது எனக்குப் பிடிக்கலடா இனிமே உன்னை அங்க கண்டேன் கொன்னு போட்டுருவேன்''

ஆனால் அதிகாலை எழுந்து ஆலமரத்துக்குத்தான் போனான் கருத்தபாண்டி. அங்கேயே நின்று கொண்டிருந்தவன் நேரம் போவதை கவனிக்கத் தவறினான். பண்ணையார் நேராக அங்கே வந்தார்.

''பாண்டி பண்ணையார் வராருடா''

கருத்தபாண்டி திரும்பி பார்த்தவன் ஓட்டமாக ஓடினான். மாடுகளை அவிழ்த்துக்கொண்டு காட்டுப் பக்கம் போனான். பண்ணையார் மாடுகளை ஓட்டிச் செல்வதைப் பார்த்து பேசாமல் வீட்டிற்குச் சென்று விட்டார். மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தவன் எங்காவது ஆலமரம் தென்படுகிறதா எனப் பார்த்தான். ஆனால் காட்டில் ஆலமரங்களே தென்படவில்லை. நன்றாக வெயில் அடித்ததும் மாடுகளை ஓட்டிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தான்.

''ஏண்டா நேத்து என்ன சொன்னேன், நீ என்ன செஞ்ச அந்த ஆலமரத்துக்குக் கீழ போய் நிற்காதடா''

''அந்த ஆலமரத்துக்கு எத்தனை பறவை வருது ஐயா, மரம் விரட்ட மாட்டேங்குதே, வேலை வாங்க மாட்டுதே ஐயா''

சொல்லிவிட்டு ஓடிப்போனான் கருத்தபாண்டி. மிகவும் யோசித்தார் குருபாண்டி. அடுத்த தினமே தனது மனைவியை அழைத்துக்கொண்டு அந்த ஊரு பள்ளி தலைமை ஆசிரியரை சந்திக்கச் சென்றார் பண்ணையார் குருபாண்டி.

முற்றும்.

Friday 14 August 2009

அறுபதாம் கல்யாணம்

'அப்பா உங்களுக்கு அறுபதாம் கல்யாணம் செய்து பார்க்கனும்' ஆவலுடன் நம்பெருமாள் வந்து சொன்னான்.

அப்பா, பார்த்தசாரதி, அவனை மேலும் கீழும் ஏறிட்டுப் பார்த்தார். 'அதெல்லாம் ஒண்ணும் வேணாம்பா, எதுக்கு வீண் செலவு ஆர்ப்பாட்டம் எல்லாம்' என மனதில் வேறொன்றை நினைத்தவராய்
அதைச் சொல்லாமல் தன் மகனிடம் தனது விருப்பமின்மையைச் சொன்னார்.

நம்பெருமாள் அம்மாவிடம் சென்று 'அம்மா உங்களுக்கு அறுபதாம் கல்யாணம் செய்யலாம்னா அப்பா வேணாம்னு சொல்றாரும்மா, நீதான் சொல்லி சம்மதம் வாங்கித் தரனும்மா' என்றான்.

அம்மா 'அதெல்லாம் எங்களுக்கு வேணாம்பா' என மறுத்தார். நம்பெருமாள் தன் மனைவியிடம் சென்று விசயத்தைச் சொன்னான். 'என்னங்க பண்றது' எனப் புரியாமல் விழித்தாள்.

வீட்டுக்கு மூத்தவனான நம்பெருமாள் தனது இரண்டு சகோதரர்களிடமும், இரண்டு சகோதரிகளிடமும் சென்று தனது விருப்பத்தையும் தாய் தந்தையர் சம்மதம் தரவில்லையென்றும் கூறினான்.

ஒருவேளை பிரபுவுக்கு கல்யாணம் ஆகட்டும்னு நினனக்கிறாங்களோ என நம்பெருமாள் தமக்கை மீனாட்சிதான் சொன்னாள்.

கடைசிப்பையன் பிரவுக்கு மட்டும்தான் திருமணம் செய்ய வேண்டிய பாக்கி. அனைவர்களுக்கும் திருமணம் பண்ணியாகிவிட்டது.

வீட்டுக்கு மூத்தவன் நம்பெருமாள் பெற்றோர்களுடனே துணையாய் வாழ்ந்து வந்தான்.

'அப்படின்னா பிரபுவுக்கு கல்யாண ஏற்பாடெல்லாம் பண்ணலாம்' என பிரபு காதல் புரிந்து கொண்டு இருந்த பொண்ணையே சம்மதம் பேசி மூன்றே மாதத்தில் திருமண வைபவம் நடந்தேறியது.

இம்முறை அனைவரும் சென்று பெற்றோரிடம் கேட்டனர். முடியவே முடியாது என இப்போதும் மறுத்துவிட்டனர். நம்பெருமாளுக்கோ மனது மிகவும் சங்கடமாகிப் போனது. அறுபதாம் கல்யாணம் நடக்கவே இல்லை.

வருடங்கள் உருண்டோடின. பார்த்தசாரதி இயற்கை எய்திய தினத்தன்றே அவரது மனைவி பாரிஜாதமும் இயற்கை எய்தினார்.

புருசோத்தமன் நம்பெருமாளின் நண்பன். புருசோத்தமன் தனது 7 ஆண்டுகால திருமணத்தை கேள்விக்குறியாக்கும் வண்ணம் சிற்சில காரணங்களைக் காட்டி அவனது மனைவியிடம் விவாகரத்து வாங்கப் போவதாக நம்பெருமாளிடம் வந்து சொன்னான். நம்பெருமாள் புருசோத்தமனை தனது வீட்டிற்கு அழைத்து வந்தான்.

அறுபதாம் கல்யாணம் கூட ஒருவிதத்தில் இரண்டாவது கல்யாணம் என்று செய்ய மறுத்த தனது தந்தை பார்த்தசாரதியின் படத்தின் முன்னால் அவனை நிறுத்தி தனது தந்தையின் வாழ்க்கையைச் சொல்லி 'வாழ்க்கைன்னா என்னனு புரிஞ்சிக்கோ' என்றான். புருச இலட்சணம் உணர்ந்தவனாய் புருசோத்தமன் வணங்கி நின்றான்.

முற்றும்

Tuesday 11 August 2009

பாறையில பேரு எழுதலாம்

மதுரை தெற்குத் தெருவில் இருக்கும் மொகலாயன் மார்பிள்ஸ் அண்ட் கிரானைட்ஸ் கடைக்குச் சென்றார் 40 வயதான போஸ். கடைக்குள் சென்றதும் 45 வயது மதிக்கத்தக்க வீரபாகுவிடம் கற்களைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினார்.

‘’இந்த மார்பிள் எவ்வளவு விலை?’’

‘’இது 240 ரூபாய்’’

‘’குறைஞ்ச விலையில எதுவும் இல்லையா?’’

‘’30 ரூபாயில கூட இருக்குங்க’’

‘’சரி சரி, இந்த கிரானைட் எவ்வளவு விலைனு சொல்ல முடியுமா?’’

‘’இது 440 ரூபாய்’’

‘’இந்த கல்லு ரொம்ப நல்லாருக்கு, எந்த ஊரு’’

‘’இது ராஜஸ்தான் மார்பிளு’’

‘’அதோ அது என்ன விலை’’

‘’அது இத்தாலியன் மார்பிளு 500 ரூபாய்’’

‘’அவ்வளவு விலையா?’’

‘’நீங்க கல்லு வாங்க வந்தீங்களா, விலை கேட்க வந்தீங்களா?’’

‘’நாலு கல்லோட விலை தெரிஞ்சாத்தானே எதுனு வாங்க முடியும்’’

‘’இந்தா போகுதே விஎன்பி பஸ்ஸு, இந்த முதலாளி கூட கிரானைட் நிலத்தை வாங்கினதால, கிரானைட் எல்லாம் எடுத்து வெளிநாட்டுக்கு அனுப்பி பெரிய ஆளாயிட்டார் இப்போ, அதுமாதிரி வெளிநாட்டு கல்லு நாம இறக்குமதி செஞ்சா விலை அதிகமாத்தானே இருக்கும். கல் இரண்டும் என்னவோ ஒண்ணுதான். நீங்களே சொல்லுங்க’’

‘’40 ரூபாய் மார்பிளு காட்டு, அதுல இருந்து எடுத்துக்கிறேன்’’

‘’விலை குறைஞ்சதா எடுத்தா தரமில்லைனு நினைக்காதீங்க, அந்த மார்பிளு ரொம்ப நல்லா இருக்கும்’’

‘’விலையுயர்ந்த கல்லை விற்காம இப்படி விலை குறைஞ்சதை என்கிட்ட விற்கிறியே’’

‘’வாங்குறவங்களோட தரத்தைப் பொருத்துதானே விற்கறதோட தரமும் போகும், நான் சொல்றது சரிதானேங்க’’

‘’பொருளோட தரத்துக்கும் மனுசனோட தரத்துக்கும் என்ன சம்பந்தம், நீ கஸ்டமருக்கிட்ட இப்படித்தான் பேசுவியா’’

‘’இப்போ பாருங்க, நான் எவ்வளவு மரியாதையா உங்ககிட்ட வாங்க போங்கனு பேசறேன், ஆனா நீங்க நான் இங்கே வேலை பாக்குறேனு ஒரே காரணத்துக்காக நீ வா போ னு பேசறீங்க இதுல இருந்து தெரியலையா உங்களோட தரம்? வாங்க வாங்க அந்த மார்பிளை எடுத்துத் தரேன்’’

போஸ் மார்பிளை வாங்குவதற்கான முன்பணத்தைக் கொடுத்துவிட்டு வீரபாகுவிடம் வந்தார்.

‘’நீங்க எவ்வளவு வருசமா வேலை பாக்குறீங்க’’

‘’20 வயசில இருந்து இங்கேதான் வேலை பாக்குறேன்ங்க’’

‘’உங்ககிட்ட வர கஸ்டமர் மரியாதை இல்லாம பேசுறப்போ எப்படி இருக்கும்’’
‘’ஏண்டா இப்படிப்பட்ட இடத்தில வேலை பாக்குறோம்னு இருக்கும்’’

‘’வேலை பார்க்குற இடத்தை தரக்குறைவா நினைக்குறது தப்புனு தோணலையா உங்களுக்கு’’

‘’யாரும் மதிக்கமாட்டாறாங்களே’’

‘’அடுத்தவங்க மதிக்கறமாதிரிதான் வேலை செய்யனும்னு இல்லைங்க, நாம செய்யற வேலைய மதிச்சி நடந்துக்கிறனும், முதல்ல அதைப் புரிஞ்சிக்கோங்க. இப்போ நான் நீங்கனு மரியாதையா பேசிட்டேன், உங்களுக்கு வேலை மேல மரியாதை வருமா?’’

‘’நான் சொன்னதால பேசினீங்க, இந்த வேலைய மதிக்கிறதுனாலதான் நான் இத்தனை வருசமா இங்கே இருக்கேன்’’

‘’இனிமே மரியாதையா பேசறேன்ங்க’’

போஸ் வீட்டிற்குச் சென்று மார்பிள் வாங்கிய கதையை தனது மனைவியிடம் சொன்னார். அப்பொழுது தொலைகாட்சியில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டு இருந்தது. அப்படியே அமர்ந்தவர் கவனத்துடன் கேட்க ஆரம்பித்தார்.

‘இந்த மார்பிள் கிரானைட் எல்லாம் எப்படி உருவாகிறது தெரியுமா? இது ஒன்றும் உடனடியாக நடக்கக்கூடியதில்லை. மலையில் இருக்கும் பாறையானது இயல்பு நிலை அழுத்தத்தாலும், வேதியியல் மாற்றத்தாலும், விலங்கு மற்றும் தாவரங்களினால் ஏற்படும் உராய்வுகளாலும் உடைந்து சிறு துகள்களாக மாறுகின்றன. அவ்வாறு மாறும் அந்த துகள்கள் மழை நீரினாலோ, ஆற்றினாலோ அடித்துச் செல்லப்பட்டு ஓரிடத்தில் படிமமாக படிகின்றன. அவ்வாறு படிந்த இந்த துகள்களானது பல வருடங்கள் அழுத்தத்தாலும் வெப்பத்தாலும் பூமிக்குள் புதைந்து பாறையாக மாறுகின்றன. இந்த முதல் நிலை கற்களே கட்டிடங்கள் கட்ட உபயோகமாகின்றன. இதன் வேதியியல் தன்மை கால்சியம் கார்பனேட் எனப்படுகிறது.

அவ்வாறு உருவான பாறையானது பூமியின் மேல்நோக்கு அழுத்தத்தால் வெளியே தள்ளப்படும், அல்லது இதே பாறையானது மேலும் மேலும் கீழே அமிழ்ந்து மார்பிள் போன்ற பாறையாக உருவமெடுக்கின்றன. அழுத்தத்தையும் வெப்பத்தையும் தாங்கிக்கொண்ட காரணத்தால் தன்னை மெருகுபடுத்திக் கொள்கின்றன இந்த பாறைகள். மேல்நோக்கு அழுத்தத்தை தாங்காதபோது இந்த பாறைகள் வெளியேறக்கூடும், அப்படியில்லாத பட்சத்தில் மேலும் வெப்பத்திற்கும் அழுத்தத்திற்கும் உட்பட்டு கிரானைட்டாக மாறுகின்றன இந்த பாறைகள்.

வெப்பக்குழம்புகளிலிருந்தும் கிரானைட் நேரடியாக உருவாகின்றன. உடனடியாக குளிராமல் மெதுவாக உள்ளுக்குள்ளே குளிர்வதால் பெரிய படிகங்களாக மாறி கிரானைட் உருவாகிறது. திடீரென ஏற்படும் எரிமலையால் இந்த வெப்ப குழம்புகள் வேகமாக குளிர்ந்து பாஸல்ட் எனப்படும் பாறையாக மாறுகிறது.

கிரானைட், மார்பிள் பாஸல்ட் போன்றவைகள் பெரும் அழுத்தத்தையும் வெப்பத்தையும் தாக்குதல் பிடித்து உருவானவைகள். அவை பெரும் விலையைப் பெற்று இருக்கின்றன’

போஸ் நிகழ்ச்சியைக் கேட்டுவிட்டு மனைவி போட்டுக்கொடுத்த காபியை வாங்கிக்கொண்டு வீட்டின் தாவாரத்திற்கு வந்தார். பிரச்சினைனு எதையும் நினைக்காம போராடினாத்தான் ஜெயிக்கலாம்னு வாழ்க்கையில எத்தனையோ பேரு சொல்லி வைச்சிருக்காங்க. இப்படி போராடி வர பாறைக்கு தரத்தை வைச்ச மனுசன் வாழ்க்கையில போராடுற மனுசனை மட்டும் ஏன் தள்ளி வைச்சான் என நினைத்துக்கொண்டு இருக்கும்போதே வீரபாகுவின் மேல் தனக்கு உண்மையிலே மரியாதை வந்தது.

முற்றும்.

Monday 10 August 2009

கை ரேகை

விக்னேஷ் பையோ இன்பார்மடிக்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறான். தேர்வு முடிந்து கோடை விடுமுறைக்கு தனது கிராமத்திற்கு உற்சாகமாகத்தான் கிளம்பினான் விக்னேஷ். ஆனால் கல்லூரியைவிட்டு கிளம்பும் முன்னர் அவனது நண்பன் ஜவகர் அவன் காதலிக்கும் ஜவகர்மதியை தான் திருமணம் செய்து கொள்ள முடியுமா என கை ரேகை பார்க்கும் நிபுணரிடம் செல்ல இருந்தவன் விக்னேஷைத் துணைக்கு அழைத்தான். விக்னேஷ் மறுப்பு சொல்லமுடியாமல் ஜவகருடன் சென்றான்.

கை ரேகை நிபுணர் ஜவகரின் கையைப் பார்த்து நல்ல யோகக்காரன் என கூறினார். நினைச்சது எல்லாம் நடக்கும் என சொன்னார். ஜவகர் தனது மனதில் இருக்கும் கேள்விக்கு பதில் சொல்லமாட்டாரா என அவர் சொன்ன பல விசயங்கள் பற்றி சற்று கூட கவலைப்படாதவனாக ம்ம் என சொல்லிக் கொண்டே இருந்தான். விக்னேஷ் ஆச்சரியத்துடன் அவர் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்தான். பொறுமை இழக்கும் தருவாய்க்குப் போனான் ஜவகர். கை ரேகை நிபுணர் ஜவகரை பார்த்து உனக்கு காதல் திருமணம் தான். நீ யாரை காதலிக்கிறியோ அந்த பொண்ணு தான் உன்னோட மனைவி. இனிமே நல்லா படிச்சி முன்னுக்கு வா. காதலியை பத்தி நீ கவலைப்பட வேணாம் என்றார். ஜவகர் சந்தோசத்தில் துள்ளி குதித்தான்.

''டேய் விக்னேஷ் நீயும் பாருடா''

''வேணாம்டா''

''இவனுக்கும் பாத்து சொல்லுங்க''

''கொடுப்பா கையை பாக்கலாம்''

''இல்லை வேண்டாம்ங்க''

''நான் நம்பிக்கை இல்லாதவங்களுக்கு பாக்கிறது இல்லை. எதிலயும் ஒரு நம்பிக்கை வேணும். அந்த நம்பிக்கைக்கு ஏத்தவாரு உழைக்கனும். இப்போ என்னை நம்பி நீங்க வரப்ப, உங்க நம்பிக்கையை நான் தப்பா உபயோகிச்சா அது என்னோட தொழிலுக்கு நான் செய்ற அவமரியாதை, அவருக்கு நம்பிக்கை வரட்டும் நான் சொல்ரேன்''

''எனக்கு நம்பிக்கை இருக்குங்க ஆனா இப்ப வேணாம்''

ஜவகரும் விக்னேஷும் கிளம்பி சென்றனர். ஜவகர் ஜவகர்மதியை காணும் ஆவலுடன் சென்றான். ஜவகர்மதியும் ஜவகருக்கு காத்து இருந்தாள். விக்னேஷ் இருவரிடமும் விடைபெற்றுக் கொண்டு வீடு வந்து சேர்கையில் மாலையாகி போனது. கை ரேகை நிபுணர் ஆயுள் ரேகை பற்றி சொன்னது மனதில் குடைந்து கொண்டிருந்தது. கிளம்பிய உற்சாகம் வடிந்து போனது. தனது வலது கையையே பார்த்துக் கொண்டிருந்தான். காலை எழுந்ததும் அப்படியேதான் செய்தான்.

''என்னடா நேத்து வந்ததிலிருந்து வெறும் கையை அப்படி முறைச்சி பாத்துட்டே இருக்கேடா''

''ஆயுள் ரேகை ஒட்டாம பாதியிலே நிக்குதேம்மா, குறை மாசத்துல என்னை பெத்துட்டியோ''

''எல்லாரையும் போல பத்து மாசம்னு சொல்லமாட்டேன்டா, ஒன்பது மாசம் தான் உன்னை சுமந்தேன்டா, அதுக்கு மேல சுமக்கவும் முடியாதுடா, இதை குறை மாசம்னு சொல்லுவியாடா''

''இதோ பாரும்மா ஆயுள் ரேகை ஒட்டாம பாதியில நிக்குது''

''கொடுடா பாப்போம்''

''ஜோசியக்காரனை பாத்தியாடா''

''ஜவகர் பாத்தான்மா அப்போ கேட்டுட்டே இருந்தேன் ஆயுள் ரேகை நல்லா இருக்கு. வெட்டு பட்டு பிரிஞ்சி இருந்தாத்தான் பிரச்சினைனு சொன்னாரும்மா''

''சரிடா இதுக்கு எல்லாம் கவலைப் படாதேடா அம்மா நான் இருக்கேன்டா என் உயிரை கொடுத்து உன்னை காப்பாத்துவேன்டா''

''என்னம்மா நீ வசனம் எல்லாம் பேசற, நானே வருத்தத்தில இருக்கேன்''

''பட்டுக்கோட்டை பாட்டு எல்லாம் கேட்கறதில்லையாடா நீ, இப்போ அந்த பாட்டெல்லாம் கேட்க உனக்கு எங்க நேரம் இருக்குடா''

''அம்மா எனக்கும் வசனம் தெரியும் உழைக்கும் கரத்தில் ரேகை இருப்பதில்லை அழிந்துவிடும்னு''

''அப்புறம் என்னடா படுவா லீவுக்கு வந்துட்டு இப்படி உம்னு இருக்கேடா, யாரையாச்சும் லவ் பண்றியேடா''

''அதுக்குத்தான் ரொம்ப குறைச்சல் இங்கே, நான் அவரைப் போய் பாத்துட்டு வந்துரட்டா''

''இருடா நானும் வரேன், உங்க அப்பா வராரானு ஒரு வார்த்தை கேட்டுட்டு போவோம்டா''

மூவரும் கிளம்பினார்கள். கை ரேகை நிபுணரிடம் வரிசையில் ஆட்கள் காத்து இருந்தார்கள். விக்னேஷ் வரிசையில் அமர்ந்து இருந்தான். விக்னேஷ் முறை வந்தது. விக்னேஷை அடையாளம் தெரியவில்லை அவருக்கு. விக்னேஷ் அறிமுகப்படுத்திக் கொண்டான். எத்தனையோ பேர் வராங்க ஞாபகம் வைச்சிக்கிற முடியறதுல என விக்னேஷ் கையை பாத்தார். கண்கள் கலங்கியது அவருக்கு. வெளிக் காட்டிக் கொள்ளாமல் படிப்பு பணம் என எல்லா பலன்கள் சொன்னார்.

விக்னேஷ் ஆயுள் ரேகை பற்றி கேட்டான். சரியாக்கிருவோம் பரிகாரம் இருக்கு அதை உங்க அம்மா அப்பாகிட்ட சொல்றேன் என கூறினார். விக்னேஷ் வெளியில் சென்றதும் அவனது பெற்றோரிடம் பையனை மருத்துவமனைக்கு கூப்பிட்டு ஒரு செக் அப் பண்ணிருங்களேன் என்றார். அந்த கருமாரியம்மா துணை இருப்பா.

விக்னேஷை அழைத்து ரத்த பரிசோதனை செய்தார்கள். ரத்தத்தில் லுகூமியா இருக்கிறது எனவும் அது அபாயகரமானது எனவும் கூறினார்கள். இதற்கு மருந்து எலும்பு மஞ்ஞை மாற்று சிகிச்சை என சொன்னார்கள். உடனே விக்னேஷ் தாயின் ரத்தம் பரிசோதிக்கப்பட்டது. இருவரின் திசு அமைப்பு சரியாய் இருக்கவே சிகிச்சை முறைக்கு உட்படுத்தபட்டான் விக்னேஷ். பணம் அதிகம் செலவானது. சிகிச்சைக்கு சில மாதங்கள் ஆனது. கல்லூரிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மாற்று சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது. ஆறு மாதங்கள் பின்னர் விக்னேஷ் பழைய நிலைக்கு திரும்பினான்.

கல்லூரி முதல்வர் நன்றாக படிக்கும் விக்னேஷை மீதி மாதங்களில் இருந்து தொடர்ந்து படிக்க அனுமதி கொடுத்தார். அம்மா மீண்டும் தனக்கு வாழ்வு தந்தது குறித்து பூரித்துப் போனான் விக்னேஷ். சில வருடங்கள் ஓடியது. கல்லூரி படிப்பு முடிந்தது. தேர்வில் வெற்றி பெற்றான் விக்னேஷ். ஜவகரும் நல்ல மதிப்பெண்கள் எடுத்து இருந்தான். நல்ல வேலையும் கிடைத்தது. ஜவகர் வீட்டில் திருமணத்திற்கு சம்மதம் சொன்னார்கள். ஜவகர்மதிக்கும் நல்ல வேலை கிடைத்து இருந்தது.

ஜவகரும் விக்னேஷும் கை ரேகை நிபுணரை பார்க்க சென்றார்கள். ஜவகர் உற்சாகத்துடன் எல்லாம் கூறினான். கை ரேகை நிபுணர் சிரித்தார். நீ ஃபெயில் ஆயிருந்தா இந்நேரம் என்ன ஆகி இருக்கும்னு யோசிச்சியா, அந்த பொண்ணு ஃபெயில் ஆயிருந்தா என்ன ஆயிருந்திருக்கும்! அதை அதை சரியா செஞ்சா அது அது நல்லா நடக்கும், நல்லாத்தான் நடக்கனும் ரொம்ப சந்தோசம் என்றார்.

விக்னேஷ் சிரித்துக் கொண்டே ஆயுள் ரேகை வளர்ந்துருச்சு இப்போ, என கை ரேகை காட்டினான். நிபுணர், எல்லாம் கரு மாரியம்மா துணை இருப்பா என்றார்.

விக்னேஷ் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் தனது முதல் சம்பளத்தில் நிறைய பொருட்கள் வாங்கி சென்றான். தான் நினைத்த ஒரு நல அமைப்புக்கு சிறு தொகை எழுதினான். வீடு வந்து சேர்ந்ததும் அம்மா அவனை அன்புடன் பார்த்தார்.

''என்னடா ரேகை எல்லாம் கையில காணோம்டா''

தனது கையில் நிரம்பியிருந்த பொருட்களை கீழே போட்டுவிட்டு அம்மாவை கட்டிபிடித்துக் கொண்டான் விக்னேஷ்.

முற்றும்

பின்குறிப்பு:
ஜோசியமும் கை ரேகையும் சொன்னது நடந்துவிட்டால் நிஜமாக இருக்க வாய்ப்புண்டு என கருத இடம் அளிக்கிறது. இது ஒரு அற்புதமான கலை. கற்றுத் தெரிந்தவர்களிடம் செல்பவர்கள் வளம் பெறுகிறார்கள், கற்றறியாதவர்களிடம் செல்பவர்கள் ஏமாறுகிறார்கள்.

இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை என நினைத்தால், ம்ம் இருக்கட்டும். என்னைப் பொருத்தவரை இது ஒரு அழகிய விளையாட்டு, மனதுடன் விளையாடும் ஒரு உன்னத விளையாட்டு. இதனால் பாதிப்பு அடைந்தவர்களுக்கு எனது அனுதாபங்கள், இதனால் முன்னேற்றம் அடைந்தவர்களுக்கு எனது வாழ்த்துகள்.

'வாழ்க்கையே நம்பிக்கைதானே' என சொல்பவர்கள் இனிமேல் அப்படி சொல்லாமல் இருக்கத் தலைப்படுவார்களேயானால் இந்த கை ரேகையை அழித்துவிடுவோம். மிக்க நன்றி.

Friday 31 July 2009

மறதி ஒரு வியாதி

நான் காசிநாதன் வந்து இருக்கேன், என்னை தெரியுதா உன் பால்ய தோழன் கல்யாணம் ஆகி போனவன் தான் அதற்கப்புறம் இந்த ஊருக்கு வரவே இல்லை என்னை தெரியுதா என்னை பாரு' 70 வயது காசிநாதன் தனது நண்பர் பூமிநாதனிடம் 45 வருடங்கள் கழித்து தன்னை ஞாபகம் இருக்கிறதா என்று கேட்டார்.

பூமிநாதன் 'எதையெல்லாம் எடுத்துட்டு போறாங்க, எதையெல்லாம் சொல்லிட்டு போறாங்க' என்றார்.

காசிநாதனை தனியாய் பூமிநாதன் மகன் சின்னச்சாமி அழைத்துச் சென்றார்.

'அப்பாக்கு நினைவு போய் மூணு வருசம் ஆச்சி பசிச்சா சாப்பிடவும், வெளியில வந்தா போகவுமா இருக்கார், யாரையும் அடையாளம் தெரியல வர்வங்களை போறவங்களை பார்க்கிறார், இப்போ பேசறதையே பேசறார். இவர் தான்னு அறிமுகப்படுத்தினா தலையை ஆட்டுறார் அப்புறமா வந்தவங்க திரும்பி வந்தாக் கூட யாருன்னு தெரிய மாட்டேங்குது சுத்தமா நினைவு இல்லை'

காசிநாதன் யோசித்தார்.

'டாக்டர்கிட்ட காமிச்சீங்களா என்ன சொன்னாங்க எப்ப இருந்து இப்படி ஆச்சு'

'அம்மா இறந்த மறு நிமிடமே தன்னோட நினைவை இழந்துட்டார், டாக்டர்ங்க அல்சைமெர் நோய்னு சொல்றாங்க வயசானவங்களுக்கு அதிகம் வர வாய்ப்பு இருக்காம் இதை எப்படி தீர்க்கிறதுன்னு தெரியலை அம்மாதான் நினைவுன்னு வாழ்ந்தவர்' என மனம் கரைந்தான் சின்னசாமி.

காசிநாதன் தனது இளம் வயது கதையை சொன்னார்.

'உங்க அப்பா மட்டும் இல்லைன்னா நான் இன்னைக்கு இந்த அளவுக்கு நல்லா வந்து இருக்க மாட்டேன், நான் நல்லா படிக்கிறேன்னுட்டு தான் படிக்காம அவர் வீட்டுல இருந்து பணம் வாங்கி என்னை படிக்க வைச்சார், கல்யாணத்தைக் கூட அவர்தான் என் வீட்டிலயும் பொண்ணு வீட்டிலயும் பேசி சம்மதம் வாங்கி முடிச்சி வைச்சார், நான் வேலை நிமித்தமா வெளியூர் போய் அப்புறம் அங்கேயே செட்டில் ஆகி இந்த மண் பக்கம் வரலை, யார் இவரை பாத்துகிறது இப்போ'

'நானும் என் பொண்ஜாதியும் தான். ஒ அவரா நீங்க நினைவு இருக்கறப்ப, அப்பா உங்களைப் பத்தி விசாரிப்பார் எங்கயும் யாருக்கும் தெரியல, எப்படி இருக்கானோனு சொல்லிக்கிட்டே இருப்பார், நீங்க எப்படி இத்தனை வருசம் கழிச்சி பார்க்க வந்து இருக்கீங்க' என்றான் சின்னசாமி.

சின்னசாமி கேட்ட கேள்வியில் தனக்கும் இந்த நோய் நோயாய் இத்தனை நாளாய் இல்லையெனினும் இருந்து இருக்கிறது என்று எண்ணி 'பூமி' என ஓடிச்சென்று காசிநாதன் பூமிநாதனைக் கட்டிக்கொண்டு கதறினார், காலம் கடந்து நன்றி நினைத்து...

நன்றி மறப்பவரை விடவா இந்த அல்சைமெர் நோய் கொடியது?

இந்த அல்சைமெர் நோயானது நமது மூளையில் ஏபி - 42 என்னும் புரோட்டினானது ஒழுங்காக மடிய முடியாமல் அரைகுறையாய் மடிந்து பீட்டா சீட்டுகளைப் போன்று படிந்து பின்னர் பைபர்களாக மாறி படிமமாய் படிவதால் நினைவானது இழக்கப்படுகிறது. இதற்கு அலுமினியம், இரும்பு போன்ற 3 சார்ஜ்கள் கொண்டவைகளால் இருக்கலாம் என மருத்துவம் தெரிவிக்கிறது ஆனால் உறுதிபடுத்த முடியவில்லை.

ஏ பி - 42 புரோட்டினை தனியாய் நரம்பு செல்களுடன் சேர்த்து செய்த ஆராய்ச்சியில் அந்த நரம்புகள் செல்கள் மடிந்தன, ஆதலினால் இந்த புரோட்டின் இவ்வாறு ஆகாமல் எப்படி காக்கலாம் எப்படி திருப்பலாம் என மருத்துவம் முயல்கிறது.

ஒருவேளை ஆராய்ச்சி வெற்றி பெற்றால் பூமிநாதன் நினைவு திரும்பி காசிநாதனை இனம் கண்டு காசிநாதனின் புகழ்மிக்க வாழ்க்கையினை கண்டு பெருமிதம் அடையலாம். பலன் எதிர்பாராமல் செய்த உதவியல்லவா!

----முற்றும்----

Thursday 30 July 2009

இனிய உறவுகள்

'அம்மா ! அம்மா...........'
அழுகையுடன் ஓடி வந்தான் பத்து வயது சிறுவன் அன்பு.

அழுகையை கண்ட அம்மா
'என்ன......... என்ன ஆச்சு '
என அடுப்பங்களையில் இருந்து ஓடி வந்தாள்.

'என்னோட காரை எடுத்துட்டு சீராம் தர மாட்றான்மா'

'ஓ.......
உனக்கும் அவனுக்கும் மூணு நாளா இதே வேளையாப் போச்சு.
இதுக்கா அழுவாங்க
இரு வாங்கி தரேன்'

'காரை தாப்பா'
அம்மா எட்டு வயது சீராமிடம் கேட்க
தர மனம் இல்லாவிட்டாலும்
புரிந்து கொண்டு அவனும் தந்துவிட்டான்.

காரை பெற்றுக் கொண்ட சந்தோசத்தில் அன்புவின் அழுகை மறந்தே போனது.

சீராம் வெகு நேரமாக ஏக்கத்தோடு அன்புவின் காரை பார்த்துக் கொண்டே இருந்தான்.

ஆனாலும் இந்த முறை சிறீராமுக்கு அன்புவின் காரை பறிக்கத் தோணவில்லை.

மாறாக இம்முறை அன்புவிடம் சிறீராம்
'நான் கொஞ்சம் விளையாடிட்டு தரட்டா'
என்று கேட்டான்.

'இந்தா
அஞ்சு நிமிசத்தில தந்துரனும்'

சரியென வாங்கி விளையாடிய அன்பு
ஐந்து நிமிடம் முன்னராகவே சிறீராமின் காரை திருப்பிக் கொடுத்து விட்டு
வீட்டுக்கு போவதாக கூறி வந்துவிட்டான்.

'அம்மா எதுக்குமா சீராம் என் காரையே பறிக்கிறான்?'

அன்புவின் மனதுக்குள் எழுந்த வினாவுக்கு
அவன் அம்மாவிடம் விடை தேடினான்.

'அவனுக்கு அவங்க வீட்டுல கார் வாங்கி தர காசு இல்லப்பா'

அன்பு மெளனமாக திரும்பி சிறீராம் சென்ற திசையை நோக்கி பார்வையை செலுத்தினான்.

அவன் பார்வையில் சிறீராம் தென்படவில்லை.

மனதுக்குள் எதையோ நினைத்தவனாய்
அவன் அறைக்குள் நுழைந்தான்.

தனது வீட்டில் இருந்த தேவைக்கு அதிகமான நல்ல கார்கள் எல்லாம் அவன் கண்ணில் பட்டது.

தனது தேவைக்கு அதிகமான கார்களையும் , கூடவே தான் படித்த மூன்றாம் வகுப்பு புத்தகங்களையும் கையிலெடுத்துக் கொண்டு வெளியேறினான்.

'எங்க கடையில போடப் போறியா'

'இல்லம்மா சீராமுக்கு தரப் போறேன்'
என்றவாறு சிறீராமின் குடிசையை நோக்கி நடந்தான்.

அன்புவின் அம்மாவின் மனது
பேருக்கேத்த புள்ள என்று பெருமைப்பட்டது.

அவளும் அவனோடு சேர்ந்தே நடந்தாள்.
அன்பு அம்மாவோடு சிறீராமை தேடிச் செல்லும் போது
சீராம் தன் குடிசை வீட்டின் முற்றத்தில் அம்மாவுடன் சேர்ந்து முற்றத்து மணலில் வீடு கட்டி விளையாடிக் கொண்டு இருந்தான்.

அன்பு
அம்மாவின் உதவியுடன் புத்தகங்கள் கார்கள் எல்லாம் கொண்டு வந்து சீராமிடம் தந்தான்.

அவற்றில் புத்தகங்களை மட்டும் எடுத்துக் கொண்டான் சீராம்.

'கார் வேணாம்?'

ஊகும்!
வேண்டாம் என்று தலையாட்டினான்.

வீட்டில் இருந்த மோர் கொண்டு வந்து அவர்களுக்கு தந்தார் சீராம் அம்மா.

அம்மாவுடன் திரும்பும் போது தான் கொண்டு சென்ற கார்களுடனே திரும்பினான் அன்பு.

மறுநாள் இருவரும் சேர்ந்தே விளையாடினார்கள்.

இம்முறை சீராமுக்கும் சேர்த்து கார் எடுத்துச் சென்றான் அன்பு.

முற்றும்

Tuesday 21 July 2009

நீல நிறம்

தனலட்சுமி தான் பள்ளியில் படித்தபோது அவளுக்குள் எழுந்த ஆச்சரியமான ஒரு கேள்வியை சக தோழிகளிடம் கேட்டு வைத்தாள்.

‘’ வானமும் கடலும் ஏன் நீலநிறமா இருக்கு’’

பதில் தெரியாத தோழிகள் பல்லைக் காட்டிச் சிரித்துவிட்டுப் போனார்கள். கிருஷ்ண பக்தையான தனலட்சுமி அந்தக் கேள்விக்கான பதில் தேடும் தேடல் பகவான் கிருஷ்ணனை மீண்டும் உன்னிப்பாக பார்த்தபோது மீண்டும் எழுந்தது. அம்மாவிடம் ஓடிச் சென்று கேட்டாள்.

‘’ஏம்மா கிருஷ்ணர் நீலநிறத்தில் இருக்காரு’’

‘’அவர் தெய்வம், அதான் அந்த நிறத்தில இருக்காரு’’ அம்மா சொன்ன பதிலில் தனலட்சுமிக்கு உடன்பாடில்லை. மத்த தெய்வம் எல்லாம் ஏன் நீலநிறத்தில் இல்லை என்கிற கேள்வியும் உடன் எழுந்து உட்கார்ந்து கொண்டது. தனது பாட்டியிடம் சென்று கேட்டாள். பாட்டி ஆலகால விஷம் உண்ட சிவனைப் பற்றிச் சொன்னார்.

‘’சிவபெருமான், குடிச்ச விஷம் தொண்டை வரைக்கும் போய் நின்னுக்கிச்சி, அதான் நீலகண்டன் அப்படினு அவருக்கு ஒரு பேரு இருக்கு’’ என பாட்டி சொன்னதும் கொஞ்சம் பயந்துதான் போனாள் தனலட்சுமி. விஷம் என்ன திடப்பொருளா, உள்ளிறங்காமல் சிக்கிக்கொண்டு நிற்பதற்கு? என ஒரு கேள்வியும் அவளுக்குள் உடன் எழுந்தது.

இராமாயணம், மகாபாரதம் எல்லாம் தொலைகாட்சியில் பார்த்தபோது நீல நிறத்தில் அரிதாரம் பூசித் தோன்றி தேவர்களாக நடித்தவர்களைப் பார்த்து ஆச்சரியத்துடன் நீல நிறம் மிகவும் பிரபலம் போல என நினைத்துக் கொண்டாள்.

பருவங்கள் தாண்டியதும் ‘நீலப்படம்’ பற்றி கேள்விப்பட்டு முகம் சுழித்தாள். ‘இப்படியுமா இழவு நடத்துவாங்க, எதுக்கு இதுக்குப் போய் நீலத்தைத் தொடர்பு படுத்துறாங்க’ என சக தோழிகளிடம் பேசிக்கொண்டாள். அப்பொழுதுதான் ஊரில் நடந்த முறைகேடான உறவு முறைகள் எல்லாம் அவளுக்குத் தெரிய வந்தது. ஒருவரையொருவர் ஏமாற்றி வாழும் வாழ்க்கையினைக் கண்டு மிகவும் மிரண்டு போனாள். ஆண்கள் என்றாலே ஒருவித வெறுப்பு மெதுவாக ஏற்படத் தொடங்கியிருந்தது.

கல்லூரிப் பருவத்தில் வந்தபோது நீலநிறம் பற்றிய அறிவியல் விசயங்களைத் தெரிந்து கொண்டாள் தனலட்சுமி. புற ஊதாக் கதிர்கள், அக ஊதாக் கதிர்கள் என படித்து அதனை வானத்துடனும், கடலுடனும் சேர்த்தபோது ‘சாமிதான் ரிஃபலக்ட் கொடுக்காருனு இருந்துட்டேன்’ என நினைத்துச் சிரித்துக் கொண்டாள்.

கல்லூரியில் படித்தபோது நீலகேசவனுடன் பழக்கம் ஆரம்பித்தது. ‘நீலப்படம்’ முதற்கொண்டு எல்லா விபரங்களையும் அவனிடமே தைரியமாக பேசினாள், நீலகேசவனும் சங்கோஜப்படாமல் அனைத்தையும் தனக்குத் தெரிந்தவரை அறிவியல் பூர்வமாக விளக்கம் சொல்லிக்கொண்டிருந்தான். கிருஷ்ணர், சிவபெருமான் பற்றி கேட்டபோது அறிவியல் விளக்கம் கிடைக்காமல் அல்லாடிக் கொண்டிருந்தான்.

இதன் காரணமாக, தெய்வம்னு என்னதான் இருந்தாலும் நீலநிறக் கண்ணன் எப்படி சாத்தியம் என்றே யோசிக்க ஆரம்பித்துவிட்டாள் தனலட்சுமி. ஊரில் ஒருநாள் ‘டேய் பாலகிருஷ்ணனை பாம்பு கடிச்சி அவன் உடம்பெல்லாம் நீலம் பாஞ்சிருச்சிடா, ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டுப் போயிருக்காங்க, உயிர் பிழைப்பானோத் தெரியலைடா’ என வீட்டு வாசலோரம் கத்திக்கொண்டு சென்ற குரலைக் கேட்டுத் திடுக்கிட்டாள் தனலட்சுமி. பாம்பு கடிச்சா நீலநிறம், விஷம் ஏறினா நீலநிறம்? யோசித்தாள்.

சிவப்பு இரத்தம் ஏன் எனும் அறிவியல் அறிந்தவள் இந்த விசயம் குறித்துத் தேட ஆரம்பித்தாள். கல்லூரி படிப்பு, வேலை ஆவலில் நீலநிறம் சற்று பின் தங்கிப் போயிருந்தது.

நீலகேசவனைத் திருமணம் புரிந்தாள் தனலட்சுமி. சில வருடங்கள் ஆகியும் குழந்தைப் பிறக்கவில்லை. ஒரு வருடம் கழித்து கருவுற்றாள். கருவுற்ற சந்தோசத்தை நினைத்து, இந்த நிலைக்காக தான் எத்தனை அவமானங்களைச் சந்திக்க வேண்டியிருந்தது என நினைத்து மனம் கலங்கினாள். கண்ணன் நீலநிறமாகவே இருந்துவிட்டுப் போகட்டும் என நினைத்துக் கொள்ள நீலநிறம் பற்றிய தேடல் ஆரம்பித்துவிட்டது மீண்டும்.

நீலகேசவனிடம் கேட்டு வைக்க நீலகேசவன் ‘அந்த காலத்தில அப்படி இருந்து இருப்பாங்க, நாம என்ன பார்க்கவா செஞ்சோம்’ என கேள்விக்குப் பதிலாகச் சொல்லி வைத்தான்.

வாந்தி தனலட்சுமியை வதட்டிக்கொண்டிருந்தது. தாயாகி விட வேண்டும் எனும் ஆவலில் அனைத்தையும் பொறுத்துக் கொண்டாள். நீலகேசவன் துணையாய் நின்றான். ஸ்கேன் எடுத்துப் பார்த்து படம் வாங்கிய போது கலர்ப்படம் தரமாட்டாங்களா என தனலட்சுமி அப்பாவியாகக் கேட்டு வைத்தாள். ‘’கவலைப்படாதே புள்ளை உன்னைப் போல சிவப்பாத்தான் பொறக்கும்’’ என நீலகேசவன் சொல்லி வைத்தான்.

கல்யாணத்துக்கு வராமல் சண்டை போட்டவர்கள் எல்லாம் வளைகாப்புக்கு வந்து சேர்ந்து இருந்தார்கள். குழந்தைப் பிறக்கப்போகும் தேதியும் குறித்தார்கள். இடுப்பு வலி என ஆஸ்பத்திரியில் தனலட்சுமியைச் சேர்த்தார்கள். பல மணிநேர போராட்டத்திற்குப் பின்னர் தனலட்சுமி சுகப்பிரசவமாக ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தாள். குழந்தையைப் பார்த்த மருத்துவர்கள் அலறினார்கள்.

‘’குழந்தைக்கு உடலுல நீலம் பாய்ஞ்சிருக்கே’’ என இங்கும் அங்கும் ஓடினார்கள். இதைக்கேட்ட தனலட்சுமி மயங்கினாள். குழந்தைக்கு இரத்தப் பரிசோதனை செய்துப் பார்த்துவிட்டு எல்லாம் நார்மலாகத்தான் இருக்கிறது என விட்டுவிட்டார்கள், அதற்குள் ஊரில் எல்லாம் கிருஷ்ணர் பிறந்துட்டார் என சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

நான் வேண்டின கிருஷ்ணனே எனக்கு மகனாகப் பிறந்துட்டார் என தனலட்சுமி பூரிப்பு அடைந்தாள். சில மாதங்கள் ஓடியது. குழந்தையை அதிசயமாக அனைவரும் பார்க்க வந்தார்கள். எங்க வீட்டுல வந்து ‘வெண்ணை’ திருட வாடா என அவனை அழைத்தார்கள். ‘’இன்னொரு போர் நடத்தி வைப்பியாடா’’ எனக் கேட்டும் சென்றார்கள்.

நீலகேசவன் பரபரப்புடன் வீட்டுக்குள் நுழைந்தான். தனலட்சுமி இந்தா நீ கேட்ட கேள்விக்குப் பதில் என ஒரு ஆங்கில நாளிதழைக் காமித்தான்.

‘’நீல நிற உடல் கொண்ட மனிதர்கள் 1950 வரை அமெரிக்காவில் உள்ள நீல நகரத்தில் வசித்து வந்திருக்கிறார்கள். இதற்கு காரணம் ஹீமோகுளோபினில் ஏற்பட்ட மாற்றம் மற்றும் ஒரு மரபணுவில் ஏற்பட்ட மாற்றம் ஆகும். இவர்கள் இவர்களுக்குள்ளேயே திருமணம் நடந்து முடித்துக்கொண்டதால் நீலநிறக் குழந்தைகள் பெற்று அத்தகைய சமூகமாகவே வாழ்ந்து வந்திருக்கிறார்கள்’’

இதைப்படித்ததும் தனலட்சுமி நீலநிறத்துக்கான காரணம் அறிந்து கொண்டாள், ‘’நம்ம பிள்ளையையும் செக்கப் செய்யனும், ஆனா நமக்கு எப்படி’’ என்றாள். ‘’எங்க தாத்தாவுக்கு தாத்தா ஒருத்தர் நீலநிறமாத்தான் இருந்தாராம், அதனாலதான் எனக்கு கூட நீலகேசவனு பேரு’’ என்றான் நீலகேசவன்.

முற்றும்.

Saturday 27 June 2009

இதுவா அங்காடித் தெரு?

பேகன் நடைபாதை வழியாக பல வருடங்கள் கழித்து அன்று செல்ல வேண்டியிருந்தது. நடைபாதையில் நடப்பதற்கு இடமில்லாமல் இருபுறங்களிலும் கடைகள் வைத்து பொருட்களை விற்றுக் கொண்டு இருந்தார்கள். பேகனின் கண்கள் நேராக பார்த்துக் கொண்டு சென்று கொண்டிருந்தது. கடைகளில் என்ன வைத்து இருக்கிறார்கள் என்று கூட அவருக்கு பார்க்கத் தோணவில்லை.

கடையில் பொருட்களை கூவி விற்றுக் கொண்டிருந்தார்கள்.

'சார் சார் இந்தாங்க சார் வாங்கிக்கோ சார்'

பேகனின் முகத்தின் முன்னால் ஒரு பொம்மையை காட்டினார் ஒரு கடைக்காரர். அந்த கடைக்காரரை சட்டை செய்யாமல் பேகன் நடந்து கொண்டிருந்தார்.

''ஆப்பிள் ஆப்பிள், ஆரஞ்சு நாலு ஐம்பது பைசா ம்மா '

''பெல்ட்டு இது சாதா பெல்ட்டு இல்ல, லெதர் பெல்ட்டு இரண்டு ரூபாதான் சார்''

பலருடைய பேச்சுக்கள் மொத்தமாக கேட்டதால் ஒன்றும் உருப்படியாக பேகனுக்கு கேட்கவில்லை. கேட்காதது போல் தலையசைக்காமல் நடந்து சென்றார் பேகன். ஒவ்வொரு கடையிலும் குழுமியிருந்த மக்களை வேறு விலகிச் செல்ல வேண்டியிருந்தது. இந்த பாதையை கடந்து செல்லும் முன்னர் நா வறண்டு, கால்கள் பின்னிக்கொள்ளும் போலும் என நினைத்துக் கொண்டு முகத்தில் புள்ளியிடத் தொடங்கிய வியர்வைத் துளிகளை கைக்குட்டையால் துடைத்துக் கொண்டு நடந்தார்.

''கர்சீப் நாலு ஒரு ரூபா சார், புதுசா வாங்கிக்கோ சார் இதுல மல்லிகை வாசனை வரும்''

என்றபடியே கட்டாக இருந்த கைக்குட்டைகளை பேகனிடம் காட்டினார் மற்றொரு கடைக்காரர். பதில் எதுவும் அளிக்காமல் பாதையில் நடப்பதையே குறிக்கோளாக வைத்துக் கொண்டார் பேகன். அடிக்கின்ற வெயிலைப் பொருட்படுத்தாது வியாபாரம் பண்ணிக் கொண்டு இருந்தவர்களின் நிலையை பற்றி சிந்தனை ஏதும் இல்லாமல் சென்று கொண்டிருந்தார் அவர்.

''சார் நீங்க கட்டியிருக்க வாட்ச் பழசு, அதைத் தூக்கிப் போட்டுட்டு இது ரோலக்ஸ் வாட்ச்சு நூறு ரூபாதான், எடுத்துக்கோங்க சார்'

பேகனுக்கு முதன்முதலாக கோபம் முணுக்கென்று எட்டிப் பார்த்தது. கோபத்தை சட்டை செய்யாமல் பதில் அளிக்காமல் ஒருவழியாய் அந்த நடைபாதையை கடந்தார். அந்த நடைபாதை கடைசியில் ஒரு குளிர்பானக் கடை இருந்தது. தாகமாக இருந்தது அவருக்கு. ஒரு நல்ல கடை கண்ணுக்கு எட்டும் தொலைவில் கூட இல்லை. அப்பொழுது அந்த குளிர்பான கடைக்காரர் பேகனைப் பார்த்து சொன்னார்.

''இதமா ஒரு இளநீர் குடிச்சிட்டுப் போங்க சார்''

பேகன் நின்றுவிட்டார்.

''இனாமாத் தருவியா?''

''இல்லை சார், இரண்டு ரூபாதான்''

''இனாமாத் தருவியா, மாட்டியா''

''தரமாட்டேன் சார்''

பேகன் கடைக்காரரிடம் எதுவும் பேசாமல் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தார்.

''பாக்கறதுக்கு பெரிய இடத்து ஆளு மாதிரி இருக்கு, ஒரு இரண்டு ரூபா கொடுத்து இளனி வாங்கிக் குடிக்க வக்கில்ல''

கடைக்காரர் முணுமுணுத்தார். பேகன் எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் வீடு போய் சேர்ந்தார்.

''அப்பப்பா, நடக்கிற பாதையில கடையை வச்சிக்கிட்டு பொருள் விற்கிறாங்க, யாருதான் அதை வாங்குவாங்க''

பேகன் சலித்துக் கொண்டார். பேகனின் தந்தை கடிந்து கொண்டார்.

''பேசுவடா, வசதி வாய்ப்புனு வந்துட்டா ரோட்டில விற்கிற பொருள் எல்லாம் சீயினுதான் இருக்கும், ஒரு காலத்தில ரோட்டில விற்கிற பொருளை வாங்கித்தான் குடும்பம் நடத்துனேன் அதை மறந்துராத, ரோட்டுல விற்கிற பொருளை நம்பி வாழுற குடும்பங்கள் இன்னும் எத்தனையோ நம்ம நாட்டுல இருக்கு''

உழைக்கும் வர்க்கத்தினை நினைக்கையில் பேகனுக்கு சுர்ரென்றது.

முற்றும்

குறிஞ்சிப் பூ

குறிஞ்சிப் பூ

இளந்தென்றல் வீசும் மலையோரத்தில் ஓலைக் குடிசையில் மதி எழுதிக் கொண்டிருந்தான்.

''பெண்ணினமே!
வீறு கொண்டு உன் தன்
பேதைமையை அகற்று

விழியற்றுக் கிடக்கும் கண்ணை
ஓங்கி ஒலித்தும் கேளா செவியை
மாற்றிட புறப்படு

அதோ பழித்துக் கொண்டிருக்கும்
பகல் வேசக்காரர்களை
உலகு காண
பறைசாற்றிட கிளம்பு

நீ எழும் வேகத்தில்தான்
உன் எதிர்ப்பு அடங்கும்
எழு! போராடு!

உன்னைக் காக்க
உன் இனத்தை
தூசு தட்டிக் கொள்
அப்பொழுதுதான் தூய்மைப் பிறக்கும்''

கவிதையை அருவிபோல் கொட்டினான், அதனை வார இதழுக்கு அனுப்ப எழுந்து சென்றான் மதி.

இந்தியாவின் சிறந்த தொழிலும் மூத்த தொழிலுமான விவசாயம்தனை அவனது தாய் தந்தையர் செய்து வந்தனர். மதி நகரின் வாசலை அடைந்தான். அவனது விழிகள் ஒரு மதியை நோக்கியது. அது வானத்து மதியல்ல, மண்ணகத்து மதி.

இவனைக் கண்டு அவள் புன்னகைத்தாள். மறுபதிலாய் இவனும் புன்னகைத்தான். அறிமுகம் புன்னகையில் ஆரம்பமானது. இவனது எழுத்துக்கள் பல அவளை கவர்ந்திருக்கின்றன. அந்த எழுத்துக்கள் போல் இவனும் அவளுக்குப் பிடித்திருந்தது ஒன்றும் ஆச்சரியமல்ல.

ஆனால் அவள் செல்வந்தருக்கு செல்லச் சிட்டு, காதலை எப்படி அனுமதிப்பார் மனம் விட்டு. அவள் ஆதரவற்ற பூவையருக்கும் வழி தெரியா பெண்களுக்கும் நல்வாழ்வு மையம் நடத்தி வந்தாள். தந்தையின் பேருதவியால் தரணி போற்றுமளவு செயல்பட்டு வந்தாள்.

மதியின் கால்கள் நகரத்து வாசலை பலமுறை நாடின. நங்கையும் இவனை நாடினாள். புன்னகை சந்திப்பானது.

முதல் வார்த்தை ''நீங்க எழுதற கவிதைகளை நான் நிறைய இரசிப்பேன்'' என்றாள் ரதி.

''உங்க நல்ல செயலை கேட்டு மகிழ்ந்திருக்கிறேன்'' என்றான் மதி.

காலம் கடந்தது, காதலும் வளர்ந்தது. காதலைச் சொன்னான் மதி. மறுப்பேதும் சொல்லவில்லை தந்தை. மதியை முழுதாய் தெரிந்தவர் அவர். ஆனால் ரதியின் தந்தையோ தடையாய் நின்றார்.

காதலை தடுக்க களவு முறைகள் கையாளப்பட்டும் வானைப் போல் உயர்ந்து வளர்ந்தது. ரதியின் தந்தை இறுதியாய் ஓர் அஸ்திரத்தை ஏவினார்.

''இங்க பாரும்மா, நான் சொல்றதை நீ கேட்கலைன்னா நல்வாழ்வு மையம் நாளைக்கே மூடியிருக்கும், யோசனை செஞ்சுக்கோ'' என்றார்.

அவள் துடியாய் துடித்தாள், மறுமலர்ச்சி ஏற்பட மறுக்கும் பூமியில் புதியதாய் தோன்றும் மறுமலர்ச்சி மசிவதா? கண்ணீர் அருவியானது.

''உனக்கு ஒரு வாரம் அவகாசம் தாரேன்'' என்று காலக்கெடு விதித்தார் தந்தை ரதியை நோக்கி.

விதியை நோவதா, வளர்ந்த இடத்தை நோவதா மதியை நேசித்ததை நோவதா ஒன்றும் அவளுக்குப் புரியவில்லை. ஆத்தங்கரை மேட்டில் அந்தி சாயும் வேளையில் மதியை காண ரதி விரைந்தாள். மதி ஏற்கனவே காத்திருந்தான். விசயத்தைக் கூறினாள் விம்மலுடன். என்ன செய்வது எனக் கேட்டாள். அவனோ பதிலேதும் கூற முடியாது வானம் நோக்கினான்.

''காரணம் சொல்லுங்கள், நம் காதலை விட நான் செய்யும் காரியம் உயர்ந்ததா இல்லையா'' என்றாள் ரதி.

''என்ன சொல்வது, எனக்கே விளங்கவில்லை'' என்றான் மதி.

''முடிவைச் சொல்லுங்கள், மூன்று முடிச்சு முக்கியமா? முப்பத்து முப்பது பெண்களின் நல்ல நிலை முக்கியமா? விம்மலுடன் வந்த வார்த்தைகள் காற்றில் கரைந்தது.

''என்னை மறந்து விடு'' உள்ளத்தில் இடியாய் இறங்கியது அவனது வார்த்தை.

''காதலையா மறக்கச் சொல்கிறீர்கள், நினைவுகளையா இழக்கச் சொல்கிறீர்கள். முடியாது, என்னால் முடியாது'' அவளது வார்த்தையின் உள்ளன்பு இமயத்தின் உயரத்தைத் தொட்டு விம்மியது.

''பின் அவர்கள் வாழ்வு'' தன்னை தன் காதலை இழக்க தைரியம் அற்றவனாய் விக்கித்து கேட்டான், ஆனாலும் உறுதியாய் இருந்தான்.

''அர்த்தமற்றதாய் போகட்டும், நம் காதல் அர்த்தமாக வேண்டும்'' என்றாள் அர்த்தமே புரியாதவளாய்.

''நம் காதல் அர்த்தமுடையதாக வேண்டுமெனில் நீ நல வாழ்வு மையத்தை தவிர்த்தலாகாது செல்'' என்றான் உறுதி கொண்டவனாய். அவள் ஒன்றும் பேச முடியாதவளாய் அமைதியானாள். சில விநாடிகள் அடுத்து ''நம் காதல்'' என்றாள் தனக்கு இவன் இதயம் இல்லாது போகுமோ? என்ற அச்சத்துடன்.

''காதல் தெய்வீகமானது'' என்று ஆறுதல் அளித்தான். அது அவளுக்கு உறுதியாக தெரிந்து இருக்க வேண்டும், நல வாழ்வு மையத்தின் நலன் உறுதியாக புரிந்து இருக்க வேண்டும்.

நடந்தாள், நம்பிக்கையுடன் நடந்தாள் ரதி. இருள் சூழ இருந்த நலவாழ்வு மையத்தினை காத்திட்ட மகிழ்ச்சியில் தனக்கு அவள் இல்லாது போன கவலையினையும் மறந்து? நடந்து கொண்டு இருந்தான் மதி.

முற்றும்

Friday 26 June 2009

அறிவுரைக்கு

''இந்த உலகத்துல எல்லாரும் எப்படி இருக்கனும், எப்படி இருக்கக்கூடாதுனு வரையறை இருக்கானு பார்த்தா இருக்கு, ஆனா இல்ல. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு நினைப்பு வைச்சிட்டு வாழ்ந்துட்டு வராங்க, ஆனா எல்லாரும் ஒரே நினைப்பா இருக்காங்களானு பார்த்தா இருக்கு, ஆனா இல்ல. இப்ப நான் கூட இந்த உலகத்திலே இருக்கேனானு கேட்டா, இருக்கேன் ஆனா இல்ல. ம்ம் என் பேச்சை யாரு கேட்கப் போறா, நானும் இப்படி திண்ணையில உட்கார்ந்துட்டு தினமும் என்பாட்டுக்கு பேசிட்டே இருக்கேன் வர்ரவன் போறவன் எல்லாம் இந்த கிழம் எப்போ போய்ச் சேருமோனு மனசு கூசாம, வாய் கோணாம பேசிட்டே போறான். ம்ம் எப்பத்தான் விடிவு காலம் பொறக்குமோ?''

''தாத்தா பொலம்ப ஆரம்பிச்சாச்சா? இந்தா இந்த கஞ்சியை குடிச்சிட்டு படு''

''எனக்கு எதுவும் வேணாம்டா, பச்சை தண்ணிகூட குடிக்காம பட்டினியா கிடந்தாச்சும் இந்த உசிரை எமன் எடுத்துட்டுப் போவட்டும்''

''தாத்தா சாகறதைப் பத்தியே நினைச்சிட்டு இருக்கியே, வாழனும்னு ஆசை இல்லையா''

''ஏண்டா உன் வயசுல வாழ ஆசை இருக்கும், என் வயசுல சாக ஆசை இருக்கும், கஞ்சியை வச்சிட்டுப் போடா''

''குடிச்சிட்டுப் படு தாத்தா''

''பதினைஞ்சி வயசு ஆகுது, படிக்கிறானாம் படிப்பு. வீட்டுக்கு காவலுக்கு இருக்கிற மாதிரி வெளியே படுக்கையை போட்டுக்கொடுத்துட்டான் இவன் அப்பன், இவ அம்மா கஞ்சி வந்து கொடுத்தா அவ ஆயுசை நா எடுத்துருவேனேன்னு பயம், இந்த கஞ்சியை நா குடிச்சி போற உசிரை பிடிச்சி வைக்கவா''

''கஞ்சி எல்லாம் பலமா இருக்கு?''

''யாரு இது? ரோசாப்பூவா, இந்தாடா எடுத்துக் குடிச்சிட்டுப் போ, பலமா இருக்குனு எதுக்கு பீடிகை போடுற. எப்போ கஞ்சி வைப்பானு பார்த்து அதுல பங்கு போட வந்துருவியே, குடி குடி மிச்சம் வைக்க மனசு இருந்தா வையி, இல்லைன்னா முழுசும் துடைச்சிட்டுப் போ''

''என்னதான் இருந்தாலும் உனக்கு மிச்சம் வைக்காம குடிப்பேனா, ஊறுகாய் வைக்கலையா பொடிப்பைய, ஒரு அப்பளம் வைக்கக்கூடாது''

''ஊறுகாயாவது உன் வீட்டுல இருந்து எடுத்துட்டு வரவேண்டியதுதானே, வக்கனையாப் பேசற''

''நீயே கஞ்சிய குடி, இன்னைக்கு இது வேணாம். என் வீட்டை எதுக்கு ஞாபகப்படுத்துற நீ உசிரோட இருந்தா எனக்கு ஒரு வாய் கிடைக்கும்''

''நீ குடிச்சிட்டுப் போ, இல்லைன்னா உன்னைப் பத்தியே கவலையா இருக்கும்''

''பாவம் இவனுக்கும் தான் நாலைஞ்சு புள்ளைக, இங்க வந்து ஒட்டிட்டுப் போறான், இவனுக்காகத்தான் நா சாகாம இருக்கேனோ என்னவோ''

''என்ன தாத்தா குடிச்சிட்டியா, ரோசாப்பூ தாத்தா குடிச்சாரா''

''ஏண்டா உன் அம்மாவுக்கு தெரியாம எங்க ரெண்டு பேருக்கு ஊத்திட்டு வருவியா''

''அம்மாதான் ஊத்திக்கொடுக்கும், உள்ள வந்து படுத்துக்கோ தாத்தா''

''திண்ணைதாண்டா எனக்கு லாயக்கு ஓயாம இப்படி சொல்லாதே''

''உன்னை ஒதுக்கி வைச்சிருக்கோம்னு ஓயாம நினைக்காதே தாத்தா''

''இந்த இருட்டு மட்டும் இல்லாமலிருந்தா இன்னும் என்ன என்னமோ பேசிட்டே இருக்கலாம், இனி எவனும் இந்த பாதை பக்கம் நடக்கமாட்டான். இனி நான் பேசறதை நானே தான் கேட்டுக்கனும் வயசாயிட்டா வாழ்க்கையே இல்லைனு ஆகுறமாதிரில நினைக்கிறானுக. நானும் பாரு காலையில தோட்டத்துப்பக்கம் வரவங்க போறவங்ககிட்ட நக்கலு, மதியானம் ஒரு தூக்கம், அப்புறம் சாயந்திரம் புது புது பேச்சுனு சொகுசாத்தானே இருக்கேன். இப்படி வயசு இருக்கறப்ப இருந்து இருந்தா பேரு புகழு இதைப் பத்தியெல்லாம் கவலை வந்துருக்குமா, அது வேணும் இது வேணும் அந்த வீடு வேணும் இந்த வீடு வேணும், அவனை விட நான் முன்னுக்கு வரனும்னு ஓயாம ஓடி இப்போ உட்கார்ந்து பேசறச்சே ஒரு ஜீவன் கஞ்சி குடிச்சிட்டுப் போகுது மத்ததெல்லாம் எப்போ போகும்னு கேட்டுட்டுப் போகுது''

''தாத்தா நா படிக்கனும் நீ பேசறது என் காதை அடைக்குது தூங்கு''

''போடா போ, படி, படி உலகத்துல நீ மட்டும் தான படிக்கிற! படி நாலு விசயம் புலம்பறதுக்காச்சும் படி''

தாத்தா உறங்கினார். திடீரென கொட்டுச் சத்தம் கேட்டது. விழித்தார்.

''தூங்கின எனக்குத்தான் கொட்டு அடிக்கிறானுகளா''

''அப்பா, உங்க நண்பர் ரோசாப்பூ செத்துட்டார்''

''டேய் டேய் என்னடா சொல்ற, ரோசாப்பூ போய்ட்டானா, டேய் எனக்கொரு உதவி செய்டா இன்னும் கொஞ்ச நேரத்தில நானும் செத்துருவேன் என் பொணத்தை தூக்கிப் போடற செலவுல பாதி செலவு செஞ்சி அவ பொணத்தை தூக்கிப் போட்டுருடா இனி இந்த உசிரு தங்காதுடா''

''அப்பா, என்னப்பா பேசறீங்க''

''அதோடமட்டுமில்லைடா, கதை எழுதுறேனு ஒருத்தன் வந்து என் கதையை கேட்டு அதை அப்படியே எழுதியும் வைப்பாண்டா, என்னமோ உலகத்துல இல்லாததை இவன் பாத்துட்டானு, அவன்கிட்ட என் கதையும் சொல்லி அதுல பாதிய ரோசாப்பூ பத்தியும் எழுதச் சொல்லுடா''

''அப்பா.....''

அழுகை விண்ணை முட்டியது. கொட்டு சத்தம் பாதி பாதியாய் பிரிந்து கேட்டது.

முற்றும்.

Thursday 16 October 2008

புற்றுநோய்

புதனவெள்ளி மருத்துவமனை வளாகத்தில் ஆறு மருத்துவர்கள் மிகவும் யோசனையுடன் அமர்ந்து இருந்தார்கள். மிகவும் நிசப்தமான அமைதி நிலவியது. ஒருவரையொருவர் பார்த்த வண்ணம் யாராவது பேச்சைத் தொடங்கமாட்டார்களா என எதிர்பார்ப்புடன் இருப்பது அவர்களின் முகத்தில் அப்படியே தெரிந்தது. அமைதியை கலைத்து தலைமை மருத்துவர் ஜெயபால் பேசினார்.

''இன்னைக்கு வந்திருக்க பேஷண்ட் ரொம்பவும் கிரிட்டிக்கல் கண்டிசன்ல இருக்கார், அவருக்கு அறுவை சிகிச்சை செஞ்சாகனும் ஆனா அதற்கான செலவை ஏத்துக்குற வசதி அவங்களுக்கு இல்லை. யாரோ சொல்லி இங்க கொண்டு வந்திருக்காங்க, இந்த கேன்சரை வெட்டினாலும் திரும்ப வந்துரும், இப்போ போராடுற உயிருக்கு என்ன செய்யலாம் சொல்லுங்க''

''அறுவை சிகிச்சை செஞ்சிரலாம், இதுக்கு யோசனைப் பண்ண வேண்டியதில்லை'' என்றார் துணை மருத்துவர் கோபால்.

''மருத்துவ செலவு யார் கட்டுவாங்க'' என்றார் ஜெயபால்

''நாம் எப்பவும் ஆராய்ச்சிக்குனு வாங்குற ஃபண்ட்ல இருந்து உபயோகிப்போம், இப்படி உயிருக்குப் போராடுறவங்களை காப்பாத்துறது நம்மளோட தர்மம்'' என்றார் அறுவை சிகிச்சை மருத்துவர் ஜெயக்கொடி.

ஜெயக்கொடி அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகளையெல்லாம் செய்துவிட்டு அந்த நோயாளியின் உறவினர்களிடம் புற்றுநோய் பற்றி சின்ன விளக்கம் கொடுத்தார்.

'புற்றுநோய் எப்படி உருவாகிறது? எதனால் உருவாகிறது? ஒரு முறை வரும் இந்த நோய் உயிர் கொல்லாமல் போகாது. ஒவ்வொரு அங்க அமைப்பையும் கூறு பார்க்கும் இந்த நோய்க்கு உலகமே மருந்து கண்டுபிடிக்க போராடிக் கொண்டு இருக்கிறது. லேசர், எக்ஸ்ரே என ஒளியின் உதவி கொண்டு இந்த நோய் தடுக்கும் முறையை கண்டுபிடித்து ஓரளவே வெற்றி கண்டு இருக்கிறார்கள்.

பொதுவாக செல்கள் இரண்டாக ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பிரியும், அதிலிருந்து இரண்டு இரண்டாக செல்கள் பிரிந்து கொண்டே ஒரு சீரமைப்புடன் வரும். அப்படி இல்லாமல் தான் தோன்றித்தனமாக ஒரு செல் பல செல்களாக மாற்றம் கொள்ளும்போது போதிய சக்தியைப் பெறமுடியாமல் மற்ற செல்களின் உணவையும் தானே தின்று அந்த நல்ல செல்களையும் அழிக்கத் தொடங்கிவிடுகிறது இந்த மாறுபாடு அடைந்த செல்கள். இப்படி மூர்க்கத்தனமான செல்களை அழிக்கப் பயன்படும் மருந்துகள் நல்ல செல்களையும் ஒரு கை பார்த்துவிடுகிறது. இதனால் நல்ல செல்கள் பாதிக்கப்பட்டுவிடுகின்றன.

வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் என மரபணுக்களில் கையை வைத்தால் வேறு விளைவுகளையும் கொண்டு வந்து விடுகிறது. எனவே இந்த செல்களை அழிப்பதன் மூலம் ஓரளவுக்கு நிலைமையை சீராக்க முடியும் ஆனால் மீண்டும் இந்த செல்கள் தங்களது மாற்றத்தை வெளிப்படுத்த தொடங்கிவிடும். இந்த நோயில் இரண்டு வகை உண்டு. ஒன்று உடலில் எல்லா இடங்களிலும் பரவி விடுவது, மற்றொன்று ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் நிலை கொள்வது. எப்படியும் அவரை உயிருடன் பிழைக்க வைத்துவிடுவோம் 'ஜெயக்கொடி பேசியது வந்திருந்தவர்களுக்கு புரிந்ததா எனத் தெரியவில்லை.

கடும் போராட்டத்துக்குப் பின் அறுவை சிகிச்சை முடிந்தது. மருத்தவமனையிலே அவர் தங்க வைக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை முறைத் தொடர்ந்து நடந்து வந்தது. சற்று தேறி வருவதாகவே சொன்னார்கள். உறவினர்கள் பணத்தை புரட்டினார்கள். எப்படியாவது இவர் பிழைக்க வேண்டும் என வேண்டிக் கொண்டார்கள். செல்கள் மருந்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்து கொண்டிருப்பதாக மருத்துவர்கள் சொன்னார்கள். ஆனால் ஓரிரு வாரங்களில் செல்கள் தனது வேலையை காட்டத் தொடங்கியது. இந்த முறை அதிவேகமாக தனது பணியைச் செய்தது. மருத்துவர்கள் மேற்கொண்டு எந்த முயற்சியும் செய்ய இயலாது என சொல்லிவிட்டனர். அந்த நோயாளி அகால மரணம் அடைந்தார்.

''இந்த கேன்சருக்கு ஒரு முடிவுகாலமே வராதா?' என சோகத்துடன் சொன்னார் ஜெயக்கொடி. ஜெயபால் இதற்காக செலவிடப்படும் நேரத்தையும், பணத்தையும் நினைத்து மனம் வருந்தினார். பல காலமாக நடந்து வரும் ஆராய்ச்சியில் ஒரு முடிவும் இல்லாமல் இருப்பது வருத்தம் அளிப்பதாக சொன்னார்.

அப்பொழுது ஒருவர் வெட்டப்பட்ட நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டார். அவருக்கு உரிய சிகிச்சை வெகுவேகமாக அளிக்கப்பட்டது. உயிருக்குப் போராடிய நிலையில் வந்த அவரை மருத்துவர்கள் காப்பாற்றிவிட்டனர். என்ன ஏது என விசாரிக்காமல் அனைத்து சிகிச்சையும் முடிந்திருந்தது. எப்படி இந்த நிலைமை வந்தது என பின்னர் கேள்விபட்டபோது மருத்துவர் ஜெயக்கொடி மனமுடைந்தார்.

ஒரு அரசியல் தலைவரை கேவலமாக பேசியதற்காக இவரை அந்த அரசியல் கட்சியைச் சார்ந்தவர் ஒருவர் வெட்டிவிட்டார் எனவும், இதே போன்று பலமுறை அவர் பலரை வெட்டி இருப்பதாகவும் சில காலங்கள் சிறைக்குச் செல்வதாகவும், பின்னர் சிறையிலிருந்து வெளிவந்தால் இதேபோன்று நடந்து கொள்வதாகவும் கூறினார்கள்.

ஒரு சமுதாயத்தை இதுபோன்ற மனிதர்கள் அழித்துவிடுவது குறித்து மிகவும் வேதனையுற்றார் ஜெயக்கொடி. இப்படி தான் தோன்றித்தனமாக திரிபவர்களை ஒரு கட்டுப்பாட்டில் கொண்டுவர இயலாத வாழ்க்கை முறையை நினைத்துப் பார்க்கையில் புற்றுநோய் நிலைமையை விட இந்த புற்றுநோய் நிலைமை ஜெயக்கொடியை மிகவும் சோகத்திற்குள்ளாக்கியது.

ஏதாவது ஒரு பெயரில் இதுபோன்ற மனிதர்களின் நடமாட்டத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வர ஆராய்ச்சி ஒன்றை ஒருவர் துவங்கினார். இந்த ஆராய்ச்சியும் புற்றுநோய்க்கான மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியைப் போலவே நீண்டுவிடாமல் நல்ல முடிவு கிடைக்க வேண்டும் என உலக சமயத்தை வேண்டிக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்றே ஜெயக்கொடிக்குப் பட்டது.

முற்றும்.