Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Wednesday 15 October 2008

முடி ரொம்பத்தான் அழகு

''ஏண்டா போய் முடிவெட்டிட்டு வரதுதானே, இப்படி பரட்டையாட்டம் முடிக்கு எண்ணெய் தேய்க்காம சீவாம இப்படியா வெயிலுல அலைஞ்சிட்டுத் திரிவ'' அம்மா ஏகநாதனிடம் சத்தம் போட்டார்.

''எனக்கும் உன்னைப்போல முடியை வளர்க்கனும்னு ஆசைம்மா, பேசாம இரேன்''

''சொன்னா கேளுடா, போய் முடியை வெட்டிட்டு வா, முடி ரொம்ப இருந்தா ஜலதோசம் பிடிச்சிக்கப் போகுது''

''இத்தனை நாளு பிடிக்காத ஜலதோசம் இன்னைக்காப் பிடிக்கப் போகுது நீ வேலையப் பாரும்மா''

''உங்க அப்பா வரட்டும் அவரைக் கூட்டிட்டுப் போய் வெட்டிவிடச் சொல்ரேன்''

''அவரே முடியை ஒழுங்கா வெட்டுரதில்லை, இதுல எனக்குத் துணையா அனுப்புறியா, அவருக்கு முடியை வெட்டச் சொல்லிட்டு நான் வேடிக்கைப் பார்த்துட்டு இருப்பேன்''

''நீ முடியை வெட்டாம வீட்டுக்குள்ள வந்த உனக்கு சாப்பாடு இல்லை சொல்லிட்டேன்''

''சாப்பாடு நீ போடாட்டா எதிர்த்த வீட்டு பாட்டி வீட்டுல சாப்பிட்டு போறேன்''

''அம்மா கூட பேசாதடா, எதிர்த்த வீட்டுல போய் சாப்பிடுவானாம்''

''பேசாதேனு சொல்லாதம்மா, நாளைக்கு வெட்டிட்டு வரேன்''

ஏகநாதனுக்கு முடியை வெட்டுவது என்றால் கொஞ்சம் கூடப் பிடிப்பதில்லை. ஒவ்வொருமுறையும் நன்றாகவே வளரவிட்டு பின்னர் அம்மாவுடன் சண்டையிட்டு வெட்டிக்கொண்டு வருவது வழக்கம். இந்த முறையும் அவ்வாறே சண்டையிட்டுவிட்டு மனதில்லாமல் முடியை வெட்டச் சென்றான். முடியை வெட்டிக்கொண்டு ஆற்றினில் குளித்துவிட்டு தலையைத் துவட்டிக்கொண்டு இருக்கையில் ஒரு முனிவர் போல் தோற்றம் கொண்டவர் மரத்தில் கீழ் அமர்ந்திருப்பதைக் கண்டான். அவர் அருகில் சென்றான் ஏகநாதன்.

''உங்களை இதுக்கு முன்னமே இங்கே பார்த்ததில்லையே''

''எப்பவும் இங்கதான் நான் வந்து உட்கார்ந்திருப்பேன், நீ என்னைப் பார்த்திருக்க மாட்ட, என்ன விசயம் சொல்லு''

''நீங்க இவ்வளவு நீளமா முடியை வளர்த்து வைச்சிருக்கீங்க, தாடியும் பெரிய தாடியா இருக்கே, முடி வெட்டுறதில்லையா அதுவும் ஜடைவிழாமே நல்லா இருக்கே''

''நீட்டலும் மழித்தலும் வேண்டா, அது அதுபாட்ட வளர்ந்துட்டுப் போகுது, விழுந்துட்டுப் போகுது''

''எனக்கும் ஆசைதான், ஆனா முடியை வெட்டச் சொல்லி வற்புறுத்துராங்க''

''வெட்டமாட்டேனு வளர்த்துப் பாரு அப்புறம் வெட்டச் சொல்ல மாட்டாங்க, நான் சின்ன வயசில இருந்து இதுவரைக்கும் முடியை வெட்டினது இல்லை''

''நீங்க கொடுத்து வைச்சவருதான்''

''பேப்பர் எல்லாம் படிக்கிறது உண்டா?''

''இல்லையே''

''அறிவியலுல ஆர்வம் இருக்கா''

''அது எதுக்கு''

''ரத்தம் மூலம் உடலுல என்ன என்ன இருக்குனு அறிய முடியறதைவிட முடியை வைச்சி நம்ம உடலுல என்ன என்ன அப்படினு ஆதியில இருந்து சொல்லிரலாம் அதுக்கான ஆய்வு முறையை கண்டுபிடிச்சி இருக்காங்கலாம்''

''மரத்துக்கீழ உட்கார்ந்தா ஞானம் வரும்னு நினைக்கிறீங்களோ''

''இந்தா பேப்பரை படிச்சிப் பாரு, அறிவியல் விசயம் தெரியும். மூடவிசயம்னு சொல்லப்படற செய்வினை செய்றதுக்குக் கூட முடியை உபயோகிப்பாங்க தெரியுமா''

''அதுதான் இவ்வளவு நீளமா முடியை வளர்த்து வைச்சிருக்கிங்களா''

''நீளமான முடி நிறைய உயிரியல் விசயங்களை அடக்கி வைச்சிருக்குமாம், அதனால என்னோட சின்ன வயசு கால முதல் இன்னைக்கு வரைக்கும் என்ன இருந்ததுனு சொல்லிரலாம், எப்படி சாப்பிட்டாங்க, என்ன சாப்பிட்டாங்கனு கூட இந்த முடியில விசயம் மறைஞ்சிருக்குமாம்''

''அப்ப ஏன் மொட்டை போடுறாங்க''

''எல்லாம் தெரிஞ்சிருச்சினு வைச்சிக்கோ அகங்காரம் வந்துரும். முடிதான் ஒருத்தருக்கு அழகு. அப்படி அகங்காரத்தை தொலைக்கத்தான் மொட்டை போடச் சொல்றதா சொல்வாங்க, வளருர முடிதானே அதான் மொட்டை போடறதா சொல்வாங்க''

''இனி நான் முடியை வெட்டவே மாட்டேன், எனக்கும் உயிரியல் விசயங்களை இந்த முடி அடக்கி வைக்கட்டும்''

''தானா கொட்டிராம பார்த்துக்கோ''

''அட பாவிகளா'' ஏகநாதன் சொல்லிவிட்டு வேகமாய் ஓடினார் முடி திருத்தும் கடையில் தனது முடியைத் தேடி!

Friday 10 October 2008

அவசர அறிவிப்பு

விண்வெளி ஆராய்ச்சியாளர் முருகானந்தம் வீட்டிற்குள் சந்தோசம் கலந்த முகத்துடன் வேகவேகமாக நுழைந்ததைக் கண்டு அவரது மனைவி பிரியா புரியாது கேட்டார்.

'என்ன அவசரமாக வருகிறீர்கள். என்னாயிற்று?'

'மிக முக்கியமான விசயம், உடனடியாக செயல்படுத்த வேண்டும், இதற்கு எவ்வளவு செலவு ஆகும் எனத் தெரியவில்லை, எப்படி அனைத்து நாடுகளும் ஒப்புக்கொள்ளும் என்று தெரியவில்லை ஆனால் இதைக் கட்டாயமாக செயல்படுத்த வேண்டும்' என்று சொன்னவாரே தனது அறைக்குள் சென்று முருகானந்தம் தன்னுடன் கொண்டு வந்திருந்த அனைத்து விபரங்களையும் ஒழுங்குப்படுத்தினார்.

அவரைப் பின் தொடர்ந்து வந்த அவரது மனைவி பிரியா 'அப்படி என்ன முக்கியமான காரியம், நிதானமா யோசியுங்க' என்று சொன்னதும்தான் தாமதம்,

முருகானந்தம் வேகமாக திரும்பி 'இது அப்படி யோசிக்க வேண்டிய காரியமில்லை, இன்னைக்கு நானும் நண்பர் சிவானந்தமும் ஒரு முக்கியமான விசயத்தைக் கண்டுபிடிச்சிருக்கோம். இயந்திர தொலைநோக்கியின் மூலம் 5000 ஒளியாண்டுகளுக்கு அப்பால் உள்ள நமது பூமியைப் போன்ற ஒரு கிரகத்தை கண்டுபிடிச்சிருக்கோம். சாதாரணமான ஒளியானது பல்வேறு பகுதிகளில் சிதறுவதால் அது நமது பூமியை அடைவது இல்லை, ஆனா ஒரு நட்சத்திரமானது மற்றொரு நட்சத்திரத்திற்கு அருகில் போனால் அந்த நட்சத்திரத்தின் ஒளியானது வளையும் அதனால அந்த நட்சத்திரம் பிரகாசமா தெரியும். அப்படி நாங்க உருவாக்கின தொலைநோக்கியால பார்த்தப்ப நம்ம பூமி போல ஒரு கிரகம் பார்த்தோம், இதுவரைக்கும் யாரும் பார்த்தது இல்லை' என வெகுவேகமாக சொல்லிக்கொண்டே அனைத்து கோப்புகளையும் தயார்படுத்திக்கொண்டு அறையைவிட்டு வெளியேறினார் முருகானந்தம்.

'வாழ்த்துகள் உங்களுக்கு, ஆனா இப்ப அதுக்கு என்னங்க வந்துருச்சு, இவ்வள அவசரமா தலைபோற காரியம் மாதிரி செய்றீங்களே' என்றார் பிரியா.

'நம்மளைப் போல அறிவான உயிரினங்கள் அங்கு வாழக் கூடிய சாத்திய கூறுகள் இருக்கு, நாம இங்கிருந்து அங்க போக கிட்டத்தட்ட 6 பில்லியன் வருடங்கள் ஆகும், அதனால நாம அங்கு போக நமக்கு சாத்தியமில்லை. ஆனா அவங்க அங்கே இருந்து இங்கு வர சாத்தியம் இருக்கலாம்' என விண்வெளி ஆராய்ச்சியாளர், ஜோசியக்காரர் போல் இந்த விசயம் சொன்னதும்

பிரியா சிரித்துக் கொண்டே 'என்னங்க நாம போக முடியாதுனா, அங்க யாரும் இருந்தா இங்க வரமுடியாது தானே. இதுக்குப் போய் வந்ததும் வராததுமா ஒரு காப்பி கூட குடிக்காம என் முகத்தைப் பார்த்துக் கூட பேசாம பறக்கிறீங்களே' என்றார்.

'உனக்கு சிரிப்புதான் வரும், நம்ம பூமியின் நிலையைப் பார்த்தியா, குழந்தைகள் பசி பட்டினியால அவதிப்படறாங்க, ஒவ்வொருத்தரும் ஒரு நம்பிக்கையை கையில வைச்சிக்கிட்டு எதிர்மாறா நடக்கிறாங்க. எங்கப் பார்த்தாலும் அமைதியில்லாத சூழ்நிலை, சுற்றுப்புற சுகாதார பிரச்சினை, பணப் பிரச்சினை, உள்நாட்டு வெளிநாட்டு கலவரங்கள், நாட்டு உரிமை இப்படி ஏகப்பட்ட பிரச்சினைகள். இப்படி நாம துண்டாடிக் கிடக்கறதை அவங்க வரும்போது பார்த்துட்டா நம்மளைப் பத்தி என்ன நினைப்பாங்க அதான் இதைப்பத்தி நாட்டுத் தலைவர்கள்கிட்ட பேசி உடனே அனைத்தையும் சரி செய்யனும் அதான் நமது ஜனாதிபதியை சந்திக்க கிளம்பிட்டு இருக்கேன்' என்றார்.

'நல்ல விசயம்தான், ஆனா இதெல்லாம் கொஞ்சம் அதிகபிரசங்கித்தனமாத் தெரியலை உங்களுக்கு, போன வாரம் நம்ம சாலையில சாக்கடை செல்லும் குழாயில் அடைப்பு இருந்தது, அதை சரிசெய்ய உங்களை புகார் கொடுத்து வரச் சொன்னப்ப இந்த ஊர் கவுன்சிலருப் பார்த்துப்பாருனு சொன்னீங்க, நீங்க செய்யலைனு தெரிஞ்சதும் நான் போய் புகார் கொடுத்து இப்ப சரியாயிருச்சி, அப்ப நம்ம இடத்தைப் பார்த்து மற்றவங்க என்ன நினைப்பாங்கனு வராத அக்கறை இப்ப வந்துருக்கிறது கொஞ்சம் அதிகம்தான்' என பிரியா சொன்னதும்

முருகானந்தம் தன்னிடம் இருந்த கோப்புகளை எடுத்து மேசையில் வைத்தார். 'எல்லா நல்ல காரியங்களும் ஒரு தனி மனிதன்கிட்ட இருந்துதான் தொடங்கனும், ஆனா தனிமனிதனுக்கு ஆயிரம் சிந்தனைகள் இருக்கு. இப்படி இருக்கேனு நினைச்சி சொல்லிக்காட்டிட்டு போறவங்கதான் ரொம்ப பேரு, ஆனா இப்படி இருக்கேனு அதை சரி செய்யறவங்க கொஞ்ச பேருதான். இது அவசர உலகம் பாரு. நீ செஞ்ச நல்ல காரியத்துக்கு எனது வாழ்த்துகள், ஒரு பூமி போல ஒரு கிரகத்தை கண்டுபிடிச்சதும் எனக்கு கையும் ஓடல காலும் ஓடல. அவங்க வந்துட்டா நம்ம பூமியைப் பார்த்து ஏளனம் பண்ணுவாங்களேனு தோணிச்சி, இப்ப நம்ம நாடுக ஒருத்தரை ஒருத்தர் ஏளனம் பண்ணிக்கிட்டு இருக்கறது மறந்தே போச்சு'என அமைதியாய் இருக்கையில் அமர்ந்தார்.

பிரியா புன்னகைத்துக் கொண்டே தனது கணவனுக்காக காப்பி போடச் சென்றார்.

காபியை அருந்திவிட்டு மனைவிக்கு தனது அன்பு வார்த்தைகள் சொல்லிவிட்டு தான் அவசர அவசரமாக வரும்போது வீதி வழியில் தான் கண்ட குப்பையினை எடுத்துப் போடாமல் வந்தவர், இப்பொழுதும் எடுத்துப் போடாமல் இருப்பதை கண்டு நிதானமாக அப்புறப்படுத்தினார்.

'என்னது கிரகத்தைப் பார்த்துட்டு இருக்கற மனுசனுக்கு, கிரகம் பிடிச்சிருச்சி போல இப்படி ரோட்டுல கிடக்கற குப்பையை அள்ளிப் போட்டுட்டு கிடக்காரு' என அந்த வீதி வழியில் நடந்து சென்றவர்களின் பேச்சு முருகானந்தத்திற்கு சுர்ரெனப் பட்டது. எனக்கும் தான்.

முற்றும்.

என்னவாகி இருப்பீங்க?

அந்த அழகிய வீட்டின் முன்னால் திங்கட்கிழமையன்று அதிகாலையில் சேவல் 'கொக்கரக்கோ' என கூவியது. திங்கட்கிழமையாய் இருந்தால் என்ன, செவ்வாய்கிழமையாய் இருந்தால் என்ன, சேவல் என்ன குயிலா? 'கொக்கரக்கோ' என்றுதானே கூவும். அதே நேரத்தில் அந்த அழகிய வீட்டின் அருகில் இருந்த தொழுவத்தில் ஒரு பசுமாடு 'மா' என்று சத்தமிட்டது. பசுமாடு என்ன இன்றைய சூழலில் மாறிப்போன மனிதர்களின் வழியா? 'மா' என்றுதானே சத்தமிடும்.

சரியாக நேரம் காலை நான்கு மணி முப்பது நிமிடங்கள் ஆகியிருந்தது. தெய்வசிகாமணியின் பஞ்சாங்கப்படி இன்று சூரிய உதயம் ஆறு மணி இருபத்தி ஒன்பது நிமிடங்களுக்குத்தான். வழக்கம்போல காளியம்மாள் அதிகாலை எழுந்து 'சரக் சரக்' என வீட்டின் முன் வாசலைப் பெருக்க ஆரம்பித்து இருந்தார். மாலையும் பெருக்குவார். நாள்பொழுதெல்லாம் குப்பை விழத்தானே போகிறது என பெருக்காமல் விட்டுவிடமாட்டார். மாலையும் பெருக்குகிறாரே, எவ்வளவு குப்பைகள் வந்து விழுகிறது என கணக்கா எடுக்கிறார்? பெருக்கி இப்போது கூட்டி முடித்துவிட்டார். வீட்டு வாசல் மிக மிக மிக சுத்தமாக இருந்தது.

பசுமாட்டு சாணத்தை எடுத்து தண்ணீரில் கரைத்தார். வாசலில் முன்புறம் தெளித்தார். சாணம் கரைத்த தண்ணீரைத் தெளிக்காது, சாதாரணத் தண்ணீரை அவரைத் தெளிக்கச் சொல்வது சரியில்லைதான். வாசல் தெளித்தவர் கோலம் போட ஆரம்பித்துவிட்டார். குறுக்குவாட்டில் ஆறு புள்ளிகள் வைத்தார். அடுத்த வரிசையும் ஆறு புள்ளிகள் வைத்தார். இப்படியே புள்ளிகள் வைத்து அந்த புள்ளிகளை இணைத்தபோது அழகிய தாமரை உருவாகியிருந்தது. மலர் உருவாகும் இடத்தில் சாணத்தை உருண்டை செய்து வைத்தார், அதன்மேல் ஒரு சின்ன மலரையும் வைத்தார். பார்ப்பதற்கு மிகவும் நன்றாக இருந்தது. மணி ஐந்து ஆகியிருந்தது. இந்த அரைமணி நேர வேலையை இப்பொழுது பலர் செய்வதே இல்லை.

தனது ஒரே மகனான கோபாலுவினை காளியம்மாள் எழுப்பினார்.

'கோவாலு, கோவாலு மணி அஞ்சு ஆச்சுப்பா, எழுந்திருப்பா, இன்னைக்காவது ஒனக்கு நல்ல நேரம் பொறக்கட்டும்'

கோபால் அவசர அவசரமாக எழுந்தான். அருகில் படுத்து இருந்த தந்தையை எழுப்பிவிட்டான். அம்மா எழுப்பாமல் இருந்து இருந்தால் மனதில் சொல்லி வைத்தபடி சரியாக ஐந்து மணி ஐந்து நிமிடங்களுக்கு எழுந்து இருப்பான். தூங்கும்போது காலையில் இத்தனை மணிக்கு எழ வேண்டும் என நமக்குள் சொல்லி்வைத்துக் கொண்டால் நமது விழிகள் சரியாக அத்தனை மணிக்கு விழித்துக் கொள்ளும். இதனை ஆங்கிலத்தில் 'பயாலாஜிக்கல் கிளாக்' என சொல்வார்கள். தமிழில் 'உயிரியல் நேரம்' என சொல்லிக்கொள்வோம்.

குளித்த பின்னர் தனது வீட்டில் இருந்த பூஜை அறையில் சாமிக்கு விளக்கு ஏற்றி வழிபட்டான் கோபால். வழிபாட்டினை மனதுக்குள் சொல்லிக்கொள்ள வேண்டும் என சொல்வார்கள். ஆனால் கோபால் எப்போதும் வாய்விட்டு சொல்வதுதான் வழக்கம்.

'சாமி, இன்னைக்கு போற இண்டர்வியூல எப்படியாவது எனக்கு வேலை கிடைச்சிரனும், உன்கிட்ட நான் வேலை தேடிப் போறப்ப எல்லாம் சொல்லிட்டுதானே போறேன், இந்த தடவையும் என் தேவையை விட இன்னொருத்தர் தேவை அதிகம்னு நினைச்சிராதே எப்படியாவது எனக்கு இந்த வேலை கிடைச்சிர வழி செய்'

வேண்டுதல் முடித்து தாய் தந்தையரின் கால்களில் விழுந்து வணங்கினான். 'வேலை கிடைச்சிரும்' என இருவருமே வழக்கம்போல ஒருசேர சொன்னார்கள். அம்மா சுடச்சுட தயார் செய்த இட்லிகளை வைத்தார். கூடவே சட்னியும் சாம்பாரும். அமைதியாக ரசித்து சாப்பிட்டான் கோபால்.

நேர்முகத் தேர்வுக்கு பலர் வந்து இருந்தார்கள். 'நம்பிக்கை' எனும் வார இதழில் நிருபர் பணிக்கான வேலை அது. கோபால் அங்கிருந்தவர்களிடம் எல்லாம் சகஜமாக பேசினான். அனைவரும் வேலை கிடைக்க வேண்டுமே என்ற ஒரு நோக்கத்தில் சந்தோசத்தை சற்று ஒதுக்கி வைத்து இருந்தார்கள். அச்சம் அவர்களை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. நிலைமையை புரிந்து கொண்ட கோபால் தனது மனதில் பல கேள்விகளை கேட்டுக்கொண்டும் பதில் சொல்லிக்கொண்டும் ஓரிடத்தில் அமர்ந்துவிட்டான். நேர்முகத் தேர்வும் நடந்து முடிந்தது. ஒரு வாரத்தில் பதில் சொல்கிறோம் என சொல்லி அனுப்பிவிட்டார்கள். வீட்டிற்கு மாலை வந்து சேர்ந்தான். அம்மா வாசலை பெருக்கிக் கொண்டிருந்தார்கள். கோபாலைப் பார்த்ததும் அம்மா கேட்டார்.

''கோவாலு, எப்படிப்பா பண்ணினே, என்னப்பா சொன்னாக''

''நல்லா பண்ணியிருக்கேன்மா, ஒரு வாரத்தில சொல்றேனு சொல்லி இருக்காக''

''இதுதான்பா எனக்கு உன்கிட்ட பிடிச்சது, நாம பண்ற விசயத்தை நல்லா பண்ணியிருக்கோம்னு நமக்குத் தோணனும், மத்தவங்க ஒருநாளைக்கு இல்லாட்டி ஒருநாள் நல்லா இருக்குனு சொல்லியிருவாக, கை காலு அலம்பிட்டு வா காபி போட்டுத் தரேன்''

''ஏன்மா தோட்டத்துக்குப் போய்ட்டு வந்துட்டியா''

''வேலை சீக்கிரம் இன்னைக்கு முடிச்சிட்டோம்பா''

மறுநாள் காலையில் வழக்கம்போல அம்மாவுடனும் அப்பாவுடனும் தோட்ட வேலைக்குச் சென்றான் கோபால். அங்கிருந்தவர்கள் காளியம்மாளிடம் 'பையன் காலேசுல பெரிய படிப்பு படிக்குதுனு சொன்ன, இன்னுமா வேலை கிடைக்கல இரண்டு மாசம் ஆகப்போகுதுல்ல, ஆனாலும் உன் பையன் கெட்டிக்கார பையன் காளியம்மா, இம்புட்டு படிச்சிருக்கோம்னு நினைக்காம தோட்டத்துல உடம்பை வளைச்சி வேலை செய்யுது பாரு அதைப் பாராட்டனும்' என சொன்னபோது 'வேலை வேலைனு தேடுறான், படிச்ச படிப்புக்கான வேலை கிடைக்கவரைக்கும் தோட்டத்துல வேலை செய்றேனு சொல்றான், வேணாம்னு சொன்னாலும் கேட்கறதில்ல, சரி செய்யட்டும்னு விட்டுட்டேன். நாம வேலைக்கு ஆளு கூப்பிட்டு வேலை செய்றோம், இதோ நிற்கிறாளே செல்லாயி இவ அம்மாக்கு உடம்பு சரியில்லைனு இவ வந்துருக்கா, பாவம் என்கிட்ட வந்து எது களை, எது செடினு கேட்டா, சொன்னேன் எம்புட்டு வேகமாக வேலையை செஞ்சா அப்படி சொல்லிக்கொடுத்தா வேலையை செஞ்சிட்டு போறான், ம்ம் எந்த மவராசன் வேலை கொடுப்பானோ எம்புள்ளைக்கு' என்றார் காளியம்மாள்.

அதே சேவல். கொக்கரக்கோ. அதே பசுமாடு. மா. அதே சாணம். கோலம். ஒரு வாரம் ஓடியேப் போனது. தோட்ட வேலைகளை முடித்துவிட்டு வீடு வந்த கோபால் தபால் இருப்பதை எடுத்துப் பார்த்தான். அச்சத்துடன் தபாலினைப் பிரித்தான். உள்ளே இருந்த கடிதம்தனை கண்டதும் மகிழ்ச்சியில் துள்ளினான். 'அம்மா எனக்கு வேலை கிடைச்சிருச்சி, அப்பா எனக்கு வேலை கிடைச்சிருச்சி, சாமி எனக்கு வேலை கிடைச்சிருச்சி' என சத்தமிட்டான்.

''கோவாலு நீ செயிச்சிட்டிப்பா எப்போ வரச் சொல்லியிருக்காக''

''அடுத்த வாரம் வரச்சொல்லியிருக்காகம்மா, இன்னும் ஒரு வாரம் நம்ம தோட்டத்துல வேலை செய்யலாம்மா''

''ஒரு வாரம் வீட்டுல இருப்பா அதான் வேலை கிடைச்சிருச்சில்ல''

''இல்லம்மா, உங்களோட எல்லாம் வந்து வேலை செய்யிறது சந்தோசமா இருக்கும்மா ஆனா இந்த வேலைக்குப் போகனும்னுதானே படிச்சேன், இந்த வேலை மூலம் நம்ம வேலையோட முக்கியத்துவத்தை மக்கள் முன்னால கொண்டு போவேன்மா''

காளியம்மாளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. வேலை கிடைத்த விசயம் அறிந்தவர்கள் கோபாலினைப் பாராட்டினார்கள். முதல்நாள் வேலை அன்றே அந்த வார இதழ் ஆசிரியரிடம் தான் ஒரு கட்டுரை எழுத இருப்பதாக கூறினான் கோபால். கட்டுரையின் தலைப்பு என்னவாகி இருப்பீங்க? எனவும் எப்படி நடிகர், நடிகையரிடம் என்னவாகி இருப்பீங்க என கேட்கிறார்களோ அதைப்போல கிராமத்து மக்களிடம், சிறந்த மருத்துவர்களிடம், சிறந்த கட்டிடக்கலைஞரிடம் என பலரிடம் கேட்டு எழுத இருப்பதாக சொன்னதும் ஆசிரியர் கோபாலினை பாராட்டி உடனே சம்மதம் சொன்னார்.

முதன்முதலாக தனது ஊருக்கு வந்து தனது தாய் தந்தையரிடம் கேட்டான்.

''நீங்க இரண்டு பேரும் இப்போ விவசாயம் பார்க்காம இருந்தா என்னவாகி இருப்பீங்கனு சொல்ல முடியுமா?''

''நாங்க சொந்த விவசாயம் பார்க்காம இருக்கிற நிலை இருந்து இருந்தா கூலி விவசாயம் பார்த்து இருந்து இருப்போம், எங்களுக்குத் தெரிஞ்ச தொழிலு இதுதான்பா, படிக்கப் பிடிக்காம விவசாயம்னு வாழ்க்கை சந்தோசமா இருக்கு''

அதற்கடுத்தாக அந்த ஊரில் இருந்த செல்வந்தரை ஒருவரைப் பார்க்கச் சென்றான்.

''நீங்க இப்படி விவசாயம் பார்க்காம இருந்து இருந்தா என்னவாகி இருப்பீங்க?''

''தம்பி கோபாலு எப்படி இருக்க, வேலை கிடைச்சதும் அதுவுமா என்கிட்ட கேள்வி கேட்க வந்துட்ட. நான் படிச்சது எலக்ட்ரிகல் என்ஜினியரிங். ஒரு கம்பெனிக்கோ, பஸ் டிப்போக்கோ வேலைக்குப் போகாம நாம ஊர் தோட்டத்துக்கு எல்லாம் உதவியா இருக்கும்னு அப்படியே விவசாயம் செய்ய ஆரம்பிச்சிட்டேன். இந்த விவசாயம் இல்லாம இருந்து இருந்தா படிச்ச படிப்புக்கான வேலையைப் பார்த்து இருந்துருப்பேன்''

இவ்வாறு பலரிடம் பேசியபின்னர் கடைசியாக ஒரு சமூக நல சேவகரிடம் சென்றான் கோபால்.

''நீங்க சமூக நல சேவகராக இல்லாட்டி என்னவாகி இருப்பீங்க?''

''நான் சமூக நல சேவகராகவே இருந்து இருப்பேன்''

''ஓ உங்களுக்குனு வேறு வேலை, ஆசை இருந்தது இல்லையா?''

''தம்பி ஒவ்வொரு வேலையும், ஒவ்வொரு படிப்பும் சமூக நலனில் அக்கறை செலுத்தக்கூடியதாக இருக்கனும். இப்போ நீங்க செய்ற வேலை கூட சமூக நலன் கருதியதுதான். டாக்டரோட வேலை சமூகத்தில் எந்த ஒரு நோயும் இல்லாமல் பாதுகாக்க கூடிய வேலை. இப்படி ஒவ்வொருத்தரை எடுத்துக்கிட்டா அவங்களோட வேலை தங்களோட சுயமான முன்னேற்றத்துக்குனு இல்லாம தாங்க படிச்ச படிப்பு கெளரவத்துக்கு கிடைச்ச வேலைனு பார்க்காம சமூக நலனுக்காக உழைக்கிறோம்னு மனசில படனும். அரசியல்வாதிகளுக்கு மட்டும் தான் சமூக அக்கறை, சமூக நல அமைப்புகளுக்குத்தான் சமூக அக்கறைனு இருக்கக் கூடாது. வேலையில்லாம இருக்கற பட்டதாரிக்குக் கூட சமூக நலனில் அக்கறை இருக்கனும். அப்படி இருந்தாத்தான் ஒரு உயரிய உண்மையான சமுதாயம் உருவாகும். அதனால நான் எந்த வேலைக்குப் போய் இருந்தாலும் ஒரு சமூக நல சேவகராகவே இருந்து இருப்பேன்''

''என்னுடைய கட்டுரைக்கு அற்புதமான விசயத்தைச் சொல்லி இருக்கீங்க, நீங்க சொல்றதுபோல யாராவது என்னவாகி இருப்பீங்கனு கேட்டா சமூக நல சேவகராகவே இருக்கோம்னு ஒவ்வொருத்தரும் சொல்லனும், எல்லாரும் மாறனும்''

கோபால் நன்றி சொல்லிவிட்டு மிக அருமையான கட்டுரையை தயார் செய்து ஆசிரியரிடம் தந்தான். அதைப்படித்துவிட்டு கோபாலை வெகுவாகப் பாராட்டினார். அந்த கட்டுரை மிகவும் பரப்பரப்பாகப் பேசப்பட்டது. ஒவ்வொருத்தரும் மற்றவர்களை என்னவாகி இருப்பீங்கனு கேட்க ஆரம்பித்தார்கள்.

முற்றும்.