Thursday 22 May 2014

இந்த கதை தெரிகிறதா?

பத்தாம் நூற்றாண்டில் ஒரு மன்னன் வாழ்ந்து வந்தான். அவன் எப்போதும் காம களியாட்டங்களில் தனது மனைவியுடன் ஈடுபட்டு கொண்டிருந்தான். இதனால் நாட்டின் மீது அவனால் அக்கறை செலுத்த முடியவில்லை. இதைக் கண்ட அமைச்சர் மன்னன் மீது வெறுப்பு அடைந்தான்.

''மன்னா, உங்களது நடவடிக்கைகள் மிகவும் அச்சுறுத்தலை தருகிறது''.

''என்ன அமைச்சரே, திடீரென உயரிய சிந்தனை''.

''மன்னா, நீங்கள் எப்போதும் மகாராணியாருடன் மஞ்சத்தில் பள்ளி கொண்டு இருப்பதால் மக்கள் பஞ்சத்தில் தத்தளிக்கிறார்கள்''

''அமைச்சராகிய நீங்கள் என்ன கிழித்து கொண்டு இருக்கிறீர்கள்?''

''நான் என்னால் முடிந்த காரியங்களை செய்து வருகிறேன், மன்னன் சொல்லட்டும் சொல்லட்டும் என நண்டு சிண்டுகள் எல்லாம் என்னை ஏளனமிட்டு பேசி தொலைக்கின்றன''

''அமைச்சரே, மகாராணியார் கர்ப்பமாக இருக்கிறார், எனவே எனக்கு அவருடன் இருப்பதுதான் முக்கியம், நாடு அல்ல''

''மன்னா, இது மிகவும் தவறு. உங்களால் முடியாது எனில் நான் அதுவரை மன்னன் பொறுப்பில் இருந்துவிட்டு கவனித்து கொள்கிறேன், எப்போது நாட்டின் மீது அக்கறை கொள்ள முடியுமோ அப்போது வாருங்கள்''

''மன்னர் பதவி மீது ஆசை வந்துவிட்டதா அமைச்சரே''

''இல்லை மன்னா, மக்கள் நலம் தான் நமக்கு முக்கியம்''

''நாடு சுபிட்சமாகத்தானே இருக்கிறது, பஞ்சம் என நீங்கள் பஞ்சப்பாட்டு பாடுவது பதவிக்கு குறி வைப்பது போல் அல்லவா இருக்கிறது''

''எனது அமைச்சர் பதவியை துறந்து செல்வது தவிர வேறு இல்லை, நீங்கள் பள்ளியறை விட்டு வெளியே வருவதே இல்லை, எப்படி நாட்டின் நிலைமை புரியும். நீங்கள் எப்போது முடியுமோ அப்போது வாருங்கள், மன்னர் பதவியை நீங்கள் பெற்றுக் கொள்ளுங்கள்''

''அமைச்சரே, மன்னன் பதவியை எடுத்துக் கொள்ளும், நானே நாளை அறிவிக்கிறேன்''

''நல்லது மன்னா''

அமைச்சர் தன வீடு செல்கிறார். தனது மனைவியிடம் ஆலோசனை செய்கிறார்.

''நாதா, நான் சொல்வதை நீங்கள் கேளுங்கள்''

''நாட்டிற்கே ஆலோசனை சொல்லும் நான் உன் ஆலோசனை கேட்கும் நிலை வந்துவிட்டது, என்ன சொல்''

''அரசாட்சி ஏற்றதும் அந்த காமத்தில் மூழ்கி கிடக்கும் அந்த நயவஞ்சக அரசரை கொன்று விடுங்கள். வயிற்றில் பிள்ளை சுமக்கும் அந்த பாதகியை நாடு கடத்தி விடுங்கள்''

''உனக்கு எதற்கு இந்த வன்மம்''

''என்னிடம் அந்த மன்னர் பலமுறை தவறாக நடக்க முயன்றார், இதை உங்களிடம் எப்படி சொல்வது என நினைத்து இருந்தேன்''

''உன்னிடமே அப்படி நடந்து கொண்டானா?''

''ஆம்''

அமைச்சர் யோசித்தார், மன்னர் அப்படி நடந்து கொள்ள வாய்ப்பே இல்லை. தனது மனைவிக்கு எப்போதும் மகாராணியாக இருக்கும் ஆசை வந்துவிட்டது. எனவே அவள் சொல்படி செய்வோம் என நினைத்தான்.

அமைச்சர் அரசன் ஆனான். அரசரை கொன்றான். மகாராணி நாடு கடத்தப்பட்டார். மகாராணி ஒரு பையன் பெற்று எடுத்தார. அந்த பையனிடம் தனது கதைகள் சொல்லி வளர்த்தார்.

'அம்மா, எப்படியாவது அந்த அமைச்சரை பழி தீர்த்து நாட்டை கைப்பற்றுவேன்'

''ஆனால் உன் அப்பா போல் பெண்ணிடத்தில் மயங்கி இருக்காது இருந்தால் மட்டுமே சாத்தியம்'

''நான் அப்படி செல்ல மாட்டேன், அப்படி சென்றாலும் இந்த அமைச்சரை பழி வாங்காமல் விடமாட்டேன்''

பையன் பல கலைகள் கற்று வளர்ந்தான்.

''அம்மா, இந்த பெண் உனக்கு பிடித்து இருக்கிறதா'

''என்ன காரியம் செய்ய தொடங்கி இருக்கிறாய். உனது அப்பாவின் பாதையை நீயும் தேர்ந்து எடுக்கிறாயா'

'பதில் சொல்ல இயலாது, அந்த அமைச்சர் அழிவது உறுதி'

முதலில் ஒரு பெண், இரண்டாவது ஒரு பெண் என ஏழு பெண்களை அழைத்து வந்து அனைவரையும் மணம் முடித்தான்.

''நீ செய்வது மிகவும் மோசமான காரியம்''

''நான் பெண் பித்தன் இல்லை. எனக்கு இவர்கள் எல்லாம் ஒவ்வொரு வழியில் உதவியாக இருக்கிறார்கள், அவர்களுக்குள் எவ்வித மன வேறுபாடு இல்லை. எனவே நீங்கள் பயப்பட தேவை இல்லை''

''உனது செயல் அழிவுக்கு தான் மகனே''

''அம்மா, இந்த பெண்கள் எல்லாம் ஒவ்வொரு சிற்றரசர்களின் இளவரசிகள். அவர்களை தேர்ந்தெடுத்து நான் மணமுடித்தேன், இப்போது புரிகிறதா ராஜதந்திரம்''

''மகனே''

''நாளை போர் நடக்க இருக்கிறது, வாழ்த்தி அனுப்புங்கள்''

தனது தந்தையின் நாட்டின் மீது போர் தொடுத்து வெற்றி வாகை சூடுகிறான்.

''அமைச்சரே''

''நான் மன்னன்''

''என் தந்தைக்கு நீ தான் அமைச்சர்.என்னை எவர் என தெரிகிறதா''

''அன்றே உன்னை நான் கொன்று இருக்க வேண்டும்''

''அது உன் முட்டாள்தனம்''

''என் தந்தையை கொன்ற உன்னை கொல்வது எனக்கு உத்தமம்''

''என்னை ஒன்றும் செய்து விடாதே, நாங்கள் வேறு எங்கேனும் பிழைத்து போகிறோம்''

''நாளை முடிவு சொல்கிறேன்''

தனது குருவை சென்று பார்க்கிறான்

''குருவே வணக்கம்''

''போர் எடுத்து சென்றாயா''

''ஆம்''

''நீ இப்படி நடந்து கொள்வது முறையல்ல, நீ இறைவன் பணி ஆற்றி மகிழ்ந்து இருக்க வேண்டும்''

''அந்த அமைச்சரை பழி வாங்க வேண்டும்''

''கூடாது, நீ பல பெண்களை மணம் முடித்தது எல்லாம் இந்த இறைவன் அடி சேரத்தான், அதற்காகவே நான் எதுவும் உன்னை சொல்ல வில்லை. நீ அரசராக இருந்து கொள் ஆனால் கொலைப்பாதகம் செய்யாதே அன்பை, அமைதியை உலகில் நிலைநாட்டு''

''அப்படியெனில் நான் என்ன செய்ய வேண்டும்''

''ஒரு யோசனை சொல்கிறேன்,கேள்''

''சொல்லுங்கள் குருவே''

''அந்த அமைச்சரின் மகளை எட்டாவதாக மணம் முடித்துக் கொள்''

''சரி குருவே''

''அவர்கள் உனக்கு எதிரியாக இருக்கமாட்டார்கள். இப்போது எல்லா ராஜ்ஜியங்களிலும் நீயே அரசர், இளவரசர் எல்லாம். எனவே இறைப்பணி ஆற்று. உலகில் அமைதி ஒன்றே குறிக்கோள். அன்பை நிலைநாட்டிட போராடு''

''அப்படியே ஆகட்டும் குருவே''

அமைச்சரின் மகளை எட்டாவதாக மணம் முடிக்கிறான். ரத்தமும், போரும் என கண்ட பூமி அன்றிலிருந்து அமைதி உருவாய் தொடங்கியது.

இந்த கதைக் கருவை திருடிய இடம் நீங்கள் கண்டு பிடித்து விட்டால் கண்டுபிடிக்கப்பட்ட இடம் பொறுத்து ஒன்று நீங்கள் தமிழ்ப் புலமை உடையவர்கள் அல்லது சினிமாப் பைத்தியம்.

No comments: